கடைசி ஓவர் களேபரம் நேற்று (03-01-23)வங்கெடேயில். 13 எடுக்கவேண்டும் ஸ்ரீலங்கா வெற்றிக்கு. தான் போட்டிருக்கவேண்டிய ஓவரை அக்ஷர் பட்டேலிடம் கொடுத்தார் கேப்டன் ஹார்திக் பாண்ட்யா. ஸ்ரீலங்காவிற்கு ஆச்சர்யம். களத்தில் விளாசும் ஆல்ரவுண்டர் கருணரத்னே, டெய்ல்-எண்டர் ராஜிதா. இன்னும் 2 விக்கெட்வேறு கையில். நாம் ஜெயிச்சிட்டோம் என்று SL dugout ரிலாக்ஸ் ஆகி, கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு மும்பையின் இரவில் அமர்ந்திருந்தது!
அக்ஷரின் முதல் பந்து வைட். 2-ஆவதில் ராஜிதா ஒரு ரன். 3-ஆவதை வைட் என நினைத்து கருணா சும்மா இருக்க, அது வைட் இல்ல தம்பி..dot ball! 4-ஆவதை (legal 3rd) தூக்கி விளாச, சிக்ஸர்! ஸ்ரீலங்கா பக்கம் சட்டெனத் திரும்பிய முள்! 3-பந்தில் 5 ரன்தான் தேவை. மேட்ச் போச்சு இந்தியாவுக்கு –ரசிகர்கள் பதற்றம். அப்படியே பட்டேலும், கிஷனும் டென்ஷன் முகத்தோடு கேப்டனுடன் வாக்குவாதம். ஏன் எங்கிட்ட கொடுத்தே .. நீயே போட்டிருக்கலாம்ல என்று பட்டேல் கேப்டனைக் கேட்டது போல, நீ போட்றபடி போடு.. தோத்தா அதுக்கு நான்தான் பொறுப்பு.. போ.. போய்ப் போடு என்று பாண்ட்யா சொல்வதுபோல் உடல்மொழிகள் துல்லியமாக ஸ்க்ரீனில். அடுத்த பந்து அக்ஷரின் dot ball ! 2-ல் 5 தேவை. யார்க்கர்போல 5-ஆவதை அக்ஷர் வீச, 2 ரன் எடுக்க ஆசைப்பட்டு ராஜிதா ரன் அவுட். ஹூடா த்ரோவில் அக்ஷர் காரியம். கடைசிப்பந்தில் 4 தேவை ஸ்ரீலங்காவிற்கு. 109 கி.மீ.யில் வேகத்தோடு போட, மிட்-ஆனில் ஃபீல்ட் ஆனது. அதே ஹூடா. இப்போது த்ரோ விக்கெட்கீப்பருக்கு. ஒரு ஃப்ளாஷில் காரியத்தை முடித்த கீப்பர் கிஷன். மதுஷன்கா ரன் அவுட். லங்கா ஆல் அவுட்160. 2 ரன்னில் த்ரில் வெற்றி இந்தியாவுக்கு என்றது ஸ்கோர்போர்டு!

ஆட்டத்திற்குப் பிறகான நேர்காணலில் பாண்ட்யா : ’வேண்டுமென்றேதான் கடைசி ஓவரை அக்ஷரிடம் கொடுத்தேன். அவர்கள் 13 ரன் அடிக்கலாம். நாம் தோற்கலாம். இருந்தாலும் நெருக்கடி சிச்சுவேஷனை உண்டாக்கி சோதித்துப் பார்க்க எண்ணம். அக்ஷர் கடைசி ஓவர் ப்ரெஷரை சாமர்த்தியமாகக் கையாண்டார்.’ என்றார். 4 விக்கெட் எடுத்த புது வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவிக்கும் பாராட்டு .
முதல் ஓவரில் கிஷன் அடித்த 16 ரன்கள், ஏதோ ஸ்கோர் 180-190 வரை போகப்போகிறது என்கிற கற்பனையை ரசிகர்களிடம் ஓஹோவென வளர்த்துவைத்தது. அடுத்தடுத்து ஹுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்ஸன் என ஒற்றை இலக்க சரிவுகள் இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா பௌலர்கள் கொடுத்த செட்பேக்ஸ். கிஷனும், பாண்ட்யாவும் மிடில் ஓவர்களைத் தாக்குப்பிடித்து வண்டி ஓட்ட, இறுதி ஜோடியான தீபக் ஹூடாவும், அக்ஷர் பட்டேலும்தான் நெருக்கடியை சமாளித்து, இந்தியாவை 150-ஐக் கடக்கவைத்தார்கள். 23 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 43 நாட் அவுட் என மிரட்டிய ஹூடா ப்ளேயர் ஆஃப் தி மேட்ச். அக்ஷர் 31 நாட் அவுட், , கிஷன் 37, பாண்ட்யா 29. தன் முதல் டி-20 மேட்ச்சை ஆடிய Gill, ஏழேடுத்து ஏமாற்றம். சூர்யா, சாம்ஸன் சல்லீஸாக வீழ்ந்ததில் லங்காவுக்கு ஆனந்தம்.

எதிரியின் ரன்-அவுட்டில் ஆனந்தப்படும் பாண்ட்யா, பட்டேல்! (மேலே)
இலக்கைத் துரத்திய ஸ்ரீலங்காவும் ஆரம்பத்தில் சரிந்தது ஷிவம் மாவியிடம். ஆனால் இந்திய ஸ்பின்னர்களை வெளுத்தது. பாண்ட்யா, ஷிவம், மாலிக் ஆகியோரிடம் லங்கா பேட்ஸ்மன்கள் பயந்து பின்வாங்கினார்கள் என்பதும் தெரிந்தது. 144, 145 என வீசிக்கொண்டிருந்த உம்ரான் மாலிக், திடீரென 155 கி.மீ. (record ball) ஒன்றை ஏவி, வேக ரன்னெடுத்த ஸ்ரீலங்கா கேப்டன் ஷனகாவை (45) சாஹலிடம் கேட்ச் கொடுக்கவைத்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். ஹஸரங்கா, கருணரத்னா க்லெவர் பேட்டிங். இந்திய அணியில், சாஹல், சாம்ஸன், ஹூடா ஆகியோர் அபார ஃபீல்டிங். Super keeping by Ishan Kishan. Lot of saves behind the wicket in a low-scoring match.
Scores (20 overs): India 162/5. SL 160 all out.Player of the match: Deepak Hooda
**