ஐயா! மாட்டேன். என்னால் இது முடியாது.
கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon).
ஏன் முடியாது?
என் அப்பாவை எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில்லை…
ஒவ்வொரு மாணவனையும் தன் தந்தையைப்பற்றி கொஞ்சம் எழுதிக் காட்டச் சொல்லியிருந்தார் அன்று. அதற்குக் கிடைத்த ஒரு சிறுவனின் பதில் இது. திடுக்கிட்ட ஆசிரியர், மற்ற சிறுவர்கள் பதற்றத்தோடு திரும்பிப் பார்க்க, அவனை நெருங்கினார். மெல்ல அவன் தலையை வருடிக்கொடுத்தார். மிருதுவாக, அழுத்தமாகச் சொன்னார்: ‘இதைப்பற்றி அதிகம் மனதை வருத்திக்கொள்ளாதே. இது ஒரு தடையாக இருக்கக்கூடாது உன் வாழ்வில்..” என்றார் எச்சரிக்கும் தொனியில்.
தன் பள்ளி ஆசிரியரை பிற்காலத்தில் நினைவில் கொள்கிறான், இப்போது வளர்ந்துவிட்டிருக்கும் அந்த இளைஞன். ஆசிரியரை மட்டுமா? அவன் அம்மா? சாதாரண மனுஷியா அவள்? அவளன்றி இன்று, நின்று பேசுவானா அவன்?
அமெரிக்க வெளிக்குக் கீழே, கரீபியத் தீவுகளின் (Carribean Islands) சிறுநாடுகளில் ஒன்றான ஜமைக்கா. எங்கோ ஒரு கிராமத்தில் வர்ணத்தையே பார்த்திராத தகரம். அதை வளைத்தும், நிமிர்த்தும் ஓருவாறு ‘கட்டப்பட்ட’ வீடு. எத்தனை மழை இரவுகள். நாலாபுறமும் தண்ணீர் வழிய, அம்மாவின் படுக்கை நனைந்துவிடாது, அதை ’வீட்டின்’ நடுவில் இழுத்துப்போட்டுத் தூங்கவைத்திருக்கிறான். அவளும் எத்தனை மறுத்திருக்கிறாள். ’நாளைக்கு பள்ளி செல்லவேண்டும். நீ தூங்கு கொஞ்சமாவது’ என்று. அவளுக்கும் ஓய்வு வேண்டுமே. அடுத்த நாளும் வேலைக்குச் செல்லவேண்டாமா அவள்? பாத்திரம் தேய்க்கணும், துணி தோய்க்கணும், இன்னும் ஏகப்பட்ட எடுபிடி வேலைகளை மற்றவர்களுக்கு செய்தால்தானே இந்த வீட்டில் அடுப்பு சூடாகும்? தட்டில் ஏதாவது விழும்.. பசி கொஞ்சமாவது தணியும்? என் அம்மா முழித்துக்கொண்டிருக்க, நான் தூங்குவதா? எப்படியெல்லாமோ வாதாடி அவளைக் கண்ணயர வைத்துவிட்டு, நீண்ட இரவுகளில் கூரையின் சொட்டும் மழைநீரைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறான். மற்ற அம்மாக்களைப் போலல்லாது, இவ்வளவு கஷ்டப்படுகிறாளே இவள்.. என்று தீரும், விலகும் இந்தத் துன்பம். அம்மா.. நான் ஏதாவது செய்வேன் உனக்கு ஒரு நாள். நீ மேலும், மேலும் கஷ்டப்படாது பார்த்துக்கொள்வேன்…
அங்கே ஒரு தொலைக்காட்சி சேனல் தன்னை அணுகியபோது, அந்த அம்மா வேதனை நினைவுகளை வலியுடன் மீட்கிறாள். காதலியாக ஒருவனுக்கு இருந்தவள், ஒருநாள் கர்ப்பமானாள். அறிந்த அவன் அதிர்ந்தான். சொன்னான். ’நிறுத்து இதை உடனே. போய் அபார்ஷன் செய்துகொள்!’ திடுக்கிட்டது அவளது மென்மையான பெண்மை. ’முடியாது!’ என்றது தீர்க்கமாக. கோபத்தில் எரிந்து விழுந்தான். போனான். போயே விட்டான். ஏழை. தான் விரும்பியவனைத் தவிர வேறு உலகறியாத பெண். துணையேதுமின்றி அபலையானாள். வீடுகளில் வேலை செய்வது, வயிற்றைக் கழுவுவது இப்படிச் சென்றது கொடுங்காலம். இந்த ஒரு மாதம் போய் விடட்டும் எப்படியாவது.. இன்னும் ஒரு மாதம். இதோ இந்த மாதந்தான்… அப்பாடா, பெத்துட்டேன் என்று தனக்கென வந்து பிறந்த உயிரை ஆசையோடு பார்த்தாள். ஏதோ கொடுத்தாள், ஊட்டிவிட்டாள், வளர்த்தாள், அவளுக்குத் தெரிந்தபடி, வாய்த்தபடி..
அம்மா.. அம்மா என்றவாறு வளர்ந்து உருகும் தன் பையன் ஒரு நாள் கையில் ஏதோ பிடித்தபடி பள்ளியிலிருந்து வருவதைப் பார்த்தாள். கிரிக்கெட் பேட்! அம்மாவைப் பார்த்து மட்டையைத் தூக்கியவாறு சிறுவன் சொன்னான்: ”அம்மா உனக்கு நான் கிரிக்கெட் ஆடி சம்பாதித்துப் போடுவேன். ஒரு இடத்தில் அமைதியாக உன்னை உட்காரவைத்து சாப்பிட வைப்பேன்..” அந்தத் தாய் கண்கலங்க நினைவு கூர்கிறாள். ”எனக்குக் கோபம் வரவில்லை. நம்பிக்கை வந்தது. இவன் செய்வான்.. செய்யக்கூடியவன்தான் இந்தப் பிள்ளை! என் மகன்….”
ஜமைக்கா, ட்ரினிடாட், பார்படோஸ் போன்ற கரீபிய உலகின் பொருளாதார வளர்ச்சியில்லாத சிறுசிறு நாடுகளில், நம்நாட்டிலும், பிற வளர்ந்த நாடுகளிலும் காணப்படும் பெருவணிகம் என்று ஏதுமில்லை. சிறுதொழில்கள் உருப்படியாக நடத்தப்பட்டாலே பெரும் விஷயம் அங்கெல்லாம். மக்கள் நலம் சார்ந்த, ஏழைகளுக்கு உதவும் திட்டங்களெல்லாம் அரசாங்கங்களிடம் இல்லை அங்கே. சினிமா என்கிற தொழிலோ அதுசார்ந்த கொழுத்த பணக்காரர்களான ஸ்டார்களோ இல்லை. கொஞ்சம் வசதியானவர்கள், பணக்காரர்கள், புகழ்பெற்றவர்கள் என்றால், அவர்கள் அங்கே கிரிக்கெட் ஆட்டக்காரர்களாகத்தான் இருக்க முடியும் என்கிற விசித்திர நிலை, கிட்டத்தட்ட. அத்தகைய பின்புலத்தில், கரீபியச் சிறுவர்கள் ’நான் ஒருநாள் பெரிய கிரிக்கெட்டராக வருவேன், பெரும் பணம் சம்பாதிப்பேன், என்னைப்பற்றி மற்றவர்கள் பெருமையாகப் பேசுவார்கள்..’ என்றெல்லாம் கற்பனை செய்வது சகஜம்.
அன்று அந்தத் தாயின் முன் அப்படிக் கிரிக்கெட் மட்டையை உயர்த்திய அந்தச் சிறுவனின் வாழ்க்கை எளிதாக அமைந்துவிடவில்லை. பல சங்கடங்கள், போட்டிகள், தடைகள். சோதனைகள். ஒவ்வொரு முறை மனம் வெதும்பியபோதும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறான். ’நான் இதை எனக்காகப் பிரதானமாகச் செய்யவில்லை. அந்தப் பெண்ணிற்காக, என் தாய்க்காக செய்துகொண்டிருக்கிறேன். என் தங்கைக்குமாகவும்..’ சிபிஎல் என்கிற கரீபியன் ப்ரிமியர் லீக் டி-20 கிரிக்கெட்டில் விளையாடி கொஞ்சம் பெயரும் வாங்கிவிட்டான். வெஸ்ட் இண்டீஸுக்காகத் தேர்வாகி ஆடியுமிருக்கிறான் சில ஆட்டங்கள். ஐபிஎல்-இல் டெல்லி அணிக்காக நேற்று மட்டையைப் பிடித்தவன், தன் அம்மாவை நினைத்தானோ.. அப்பாவை நினைத்தானோ.. என்ன நடந்ததோ அவன் மனதில். கிரிக்கெட் மைதானத்தில் பொறி பறந்தது. எதிரணியை துவம்சம் செய்து சிக்ஸர்களாகப் பறக்கவிட்டான். அவுட் ஆகாது மும்பை மைதானத்தில் கம்பீரமாக நின்றான். கைதட்டல்களுக்கிடையே பெவிலியன் திரும்பினான் ரோவ்மன் பவல் (Rovman Powell).
எது எப்படி இருப்பினும், தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டான் பிள்ளை. தன் மகன் கட்டிய வசதியான வீட்டில் அம்மா உட்கார்ந்து, சற்றே நிம்மதியாகத் தன் கடைசிகாலத்தை அனுபவிக்குமாறு செய்துகொடுத்திருக்கிறான். அப்பாவைப்பற்றி அவன் எப்படி நினைக்கிறான் என்பது தனிமனிதனாக அவன் யாரென்று கொஞ்சம் சொல்கிறது: ” தேடுதலை நிறுத்திவிட்டேன். விந்தை விதைத்தவனுக்கும் நன்றி. அவனன்றி நான் இங்கே வந்திருக்கமுடியாதல்லவா…”
**