ICC U-19 மகளிர் கிரிக்கெட்: இந்தியா உலக சேம்பியன்

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ICC) முதல் U-19 பெண்களுக்கான உலகக்கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றுவிட்டார்கள். நேற்று (29-1-2023) தென்னாப்பிரிக்காவின் பாட்ஷெஃப்ஸ்ட்ரூமில் (Potschefstroom) நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் அனாயாசமாக வீழ்த்திவிட்டது இந்தியா. சர்வதேச வெளியில், பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் முதல் உலகக்கோப்பை. மாபெரும் கௌரவம்.

19-வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியை 17-வயது ஷெஃபாலி வர்மா (Shefali Verma) அபாரமாகத் தலைமை தாங்கி நடத்திச்சென்றார். (இவர் தன் 15 வயதிலேயே இந்திய சீனியர் மகளிர் அணிக்குத் தேர்வான அதிரடி பேட்டர் (batter). ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் விக்கெட் வீழ்த்தும் ஆஃப் ஸ்பின்னரும் கூட. இவருடன் இந்தியாவுக்கு உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துக்கொடுத்த இன்னுமொரு பேட்டர் ஷ்வேதா செஹ்ராவத் (Shweta Sehrawat). நேற்றைய ஃபைனலில் இவர்களின் விக்கெட்டுகளை இங்கிலாந்து சீக்கிரமே வீழ்த்திவிட்ட நிலையில், இந்தியாவுக்குத் தக்க சமயத்தில் கைகொடுத்துக் கரேயேற்றிவிட்டவர்கள் சௌம்யா திவாரி (Sowmya Tiwari), ஜி. த்ரிஷா எனும் இருவர். Cool and composed. செம ஜோடி!

டாஸ் வென்ற இந்தியா, இங்கிலாந்தை முதலில் பேட் சொன்னபோது, கம்பீரமாக பிட்ச்சில் வந்து நின்றது அவர்களின் துவக்க ஜோடி: கேப்டன் க்ரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (Grace Scrivens) மற்றும் லிபர்ட்டி ஹீப். இந்தியா வேகப்பந்துவீச்சாளர் டிட்டஸ் சாதுவை  (Titus Sadhu) ஒரு பக்கமும், மறுமுனையில் ஸ்பின்னர் அர்ச்சனா தேவியையும் இறக்கித் தாக்கியது. முதல் ஓவரிலேயே சாது, இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் ஹீப்பை காட்-அண்ட்- போல்ட் செய்துவிட்டார். அடுத்த முனையில் எளிதாகத் தெரிந்த அர்ச்சனாவின் சுழல் வீச்சைத் தூக்கி அடித்து ரன் சேர்க்கப் பார்த்தது இங்கிலாந்து. ஆனால் சுழலை சமாளிப்பதில் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் மட்டுமே அது வெளிப்படுத்தியது. இந்தியப் பெண்களின் ஷார்ப் ஃபீல்டிங்கும் சேர்ந்துகொள்ள,  இங்கிலாந்தின் ஸ்கோர் முன்னேறமாட்டேன் என்று அடம்பிடித்தது.

Archana Devi takes a stunning one-handed catch

ஏழு ஓவர்களுக்குள், 22 ரன்களிலேயே இங்கிலாந்தின் முக்கிய நான்கு வீராங்கனைகளை ஆளுக்கு இரண்டாக வெளியேற்றிவிட்டார்கள் பௌலர்கள் சாதுவும், அர்ச்சனாவும். கேப்டன் ஷெஃபாலி சாதுர்யமாக இரு முனைகளிலும் மேலும் ஸ்பின்னை நுழைத்தார். பர்ஷவி சோப்ராவும் (Parshavi Chopra), மன்னத் கஷ்யப்பும் (Mannat Kashyap) நெருக்கோ நெருக்கென்று நெருக்க, தடுத்தாடவும் தெரியாமல், அடித்தாடவும் முடியாமல் தடுமாறித் தத்தளித்த இங்கிலாந்தின் இன்னிங்ஸ், 68 என்கிற சொற்ப எண்ணிக்கையில் உயிரை விட்டது. அவர்களது கோச்கள், நிர்வாகிகள் பேயறைந்ததுபோல் மைதானத்தில் உட்கார்ந்திருந்ததை காமிரா படம்பிடித்துக் காண்பித்தது. செமிஃபைனலில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்தா இது? நம்பமுடியவில்லை.. இல்லை… இல்லை..!

Indian U 19 Women’s Cricket team lofts the World Cup !

கோப்பையைக் கைப்பற்ற இந்தியாவின் முன் 69 என்கிற இலக்கு. ஆனால் எளிதாக நினைத்துவிடக்கூடாது. இது உலகக் கோப்பை  ஃபைனல். விட்டுவிடாதே… ஜாக்ரதை! – என்று எச்சரிக்கை மணி ஒவ்வொரு இந்திய வீராங்கனையின் மனதிலும் அடித்திருக்கும். அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன ஷ்வேதாவும், ஷெஃபாலியும் இந்திய பதில் ஆட்டத்தைத் துவக்கினார்கள். ஷெஃபாலி ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி. 15 ரன்னில் காலியானார். ஷ்வேதா 5 ரன்னில் அவுட் ஆகி வெளியேற, இங்கிலாந்துக்கு ஏகப்பட்ட குஷி. ஸ்பின் போட்டு இந்தியாவை வீழ்த்திவிடலாம் என பொறி வைத்தது. அடுத்ததாக ஆடவந்த பத்தாம் வகுப்புப் பையனைப்போல் காட்சி தந்த சௌம்யாவும்,  எட்டாவது வகுப்பு மாணவி ஒருத்தி கையில் பேட்டுடன் நிற்பது போன்ற தோற்றத்தில் தென்பட்ட த்ரிஷாவும், கஷுக் மொஷுக்கென்றிருந்த  இங்கிலாந்துப் பெண்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்கவேண்டும். இவர்களாவது உலகக்கோப்பையை வெல்வதாவது.. என்கிற சிந்தனை அவர்களுக்குள் தலையெடுத்திருக்கலாம். ஆனால் நிலமையின் தீவிரத்தை உணர்ந்திருந்த இந்தியப் பிஞ்சுகள் அயரவில்லை. தளரவில்லை. அதிஜாக்ரதையாக இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். ஸ்கோர் மெல்ல சீராக உயர்ந்தது. 48 ரன் பார்ட்னர்ஷிப். வெற்றி சில ரன்களில் நிகழ்ந்துவிடும் என்கிற நிலையில் 24 ரன்னில் அவுட் ஆனார் அழகாக பேட்டிங் செய்துகொண்டிருந்த த்ரிஷா. அதே ஸ்கோரில் திறனோடு ஆடிக்கொண்டிருந்த சௌம்யா வெற்றி ரன்னை ஆஃப் சைடில் லேசாகத் தட்டிவிட்டு குதித்துக்கொண்டு மறுமுனைக்கு ஓட.. ஹேய் ! இந்திய கோச்சுகளும், அணிவீரர்களும் மைதானத்துக்குள் பாய்ந்தோடிவந்து சூழ்ந்து கொண்டனர். சில வீரர்கள் சந்தோஷச் சத்தம்போட, சிலரின் கண்களில் உணர்ச்சிப் பிரவாகம் நீராக வழிந்ததைக் காணமுடிந்தது. .

அபூர்வமான இந்த உலகக்கோப்பை ஃபைனலைப் பார்க்க இந்திய வம்சாவளியினர், இந்திய ரசிகர்கள் குழு ஒன்று ஆர்வமாக வந்திருந்தது. ஆட்ட ஆரம்பத்திலிருந்தே வேகவேகமாகக் கொடிகளை அசைத்துக்கொண்டிருந்தது. ஐ லவ் யூ இந்தியா ! – என்றெல்லாம் பேனர்கள். பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளோடு, சில கருப்பினத் தென்னாப்பிரிக்கர்களையும்  அடக்கிய கதம்பக் கூட்டம் அது. இப்போது இந்தியா! இந்தியா ! – என்று சந்தோஷமாக, சத்தமாக ஆர்ப்பரித்தார்கள் அவர்கள். இந்தியாவின் ஜாவலின் த்ரோ ஒலிம்பிக் சேம்பியன் நீரஜ் சோப்ராவும் உட்கார்ந்து மேட்ச் பார்த்து கைதட்டி, இந்திய அணியை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். மற்றபடி இங்கிலாந்தின் ரசிகர்களே ரொம்பி வழிந்தார்கள் அந்த தென்னாப்பிரிக்க மைதானத்தில்.

England Captain Grace Scrivens congratulates Indian Skipper Shefali Verma

சர்வதேசத் திறனோடு, போராட்ட, அர்ப்பணிப்பு குணங்கள் நிறைந்த பெண்களினாலும் இந்தியாவுக்கு கிரிக்கெட் உலகக்கோப்பை கிட்டிவிட்டது. இந்திய கேப்டன் ஷெஃபாலி வர்மாவின் கையில் வெற்றிக்கோப்பை வந்ததும் அந்த வீராங்கனைகளின் குதூகலம், ஆர்ப்பரிப்பு காணக்கிடைக்காதது. சேம்பியன்ஷிப்பை வென்ற இந்திய அணியில் ஒவ்வொரு வீராங்கனைக்கும் பதக்கம் ஐசிசியால் வழங்கப்பட்டது. உலகின் நம்பர் 2-ஆக முடிவான இங்கிலாந்து அணி ஏமாற்றத்துடன் தங்களுக்கான மெடல்களைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆட்ட முடிவை நம்பமுடியாதவர்கள் போன்று குழப்பமாக ஓரத்தில் போய் நின்றது!

அதிக ரன்களும், விக்கெட்களும் எடுத்த இங்கிலாந்தின் திறன்மிகு கேப்டன் க்ரேஸ் ஸ்க்ரிவன்ஸுக்கு உலக்கோப்பைத் தொடர் ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் டிட்டஸ் சாதுவுக்கு ஃபைனலில் ஆட்டநாயகி விருது.

India’s terrific coach (and former India fast bowler) Nooshin Al Khadeer

இந்த உலகக்கோப்பை வெற்றியில் இந்திய மகளிர் கிரிக்கெட் கோச்சும், முன்னாள் வீராங்கனையுமான நூஷின் அல் காதிரின் (Nooshin Al Khadeer) பங்களிப்பு மிகவும் முக்கியமானது. போற்றத்தகுந்தது என்கிறார் முன்னாள் மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ். கிரிக்கெட் போர்டு, இந்திய ஆண்கள் அணி வீரர்கள், மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி போன்ற முன்னாள் மகளிர் லெஜண்ட்கள் ஆகியோரிடமிருந்து பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணி இப்போது. வென்ற அணிக்கும், கோச் போன்ற பயிற்சியாளர் குழுவுக்குமாக சேர்ந்து ரூ.5 கோடியை நேற்று இரவே பரிசாக அறிவித்துவிட்டது கிரிக்கெட் போர்டு. உலகக்கோப்பையை வென்ற அணியை, புதன்கிழமை அஹமதாபாதில் நடக்கவிருக்கும், இந்தியா – நியூஸிலாந்து மூன்றாவது டி-20 போட்டியை நேரில் பார்க்கவருமாறும் அழைத்திருக்கிறது. அங்கு நிரம்பி வழியப்போகும் நரேந்திர மோதி மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் உலக சேம்பியன்களான நமது இளசுகளை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பு!

உலகிலேயே முதன் முதலாக பெண்களுக்கான டி 20 ப்ரிமியர் லீக் இந்த மார்ச்சில் இந்தியாவில்  துவங்கவிருக்கிறது. இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வருடத்தில் உலகக்கோப்பையுடன் சிலிர்க்கிறார்கள் நமது இளம் பெண்கள்.. ஆஹா!

Brief scores :

England Women Under 19s: 68 all out (17.1 overs)

India Women Under19s: 69 for 3 (14 overs)

**

கிரிக்கெட்: Back in form கோஹ்லியும் வேறு சிலரும்..

பொங்கலன்று ஸ்ரீலங்காவுக்கெதிரான கடைசி ஒரு-நாள் கிரிக்கெட் போட்டியில்  முன்னால் கேப்டன் விராட் கோஹ்லி ஆடிய விதம் (13 பவுண்டரி, 8 சிக்ஸர்), அவர் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறது. நாளை (18-1-23) ஹைதராபாதில் துவங்கவிருக்கிற நியூஸிலாந்துக்கெதிரான ஒரு-நாள் தொடர் அதை மேலெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த டிசம்பரில் பங்களாதேஷுக்கு எதிரான தொடர், இந்த மாதம் முடிந்த ஸ்ரீலங்கா தொடர், வரவிருக்கும் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு-நாள் தொடர்கள் – ஏன் இப்படி ஒவ்வொரு அயல்நாட்டு அணியும் வேகவேகமாக இந்தியாவில் வந்து ஆடுகின்றன? வரவிருக்கும் அக்டோபர் –நவம்பரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் ஒரு-நாள் உலகக் கோப்பையே காரணம். இந்திய பிட்ச்சுகளில் ஆடிய அனுபவம் உலகக்கோப்பையில் அவர்களுக்குக் கைகொடுக்கும் அல்லவா?

நியூஸிலாந்து தொடரில் ஆடுவதிலிருந்து கே.எல். ராஹுல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் கிரிக்கெட் போர்டினால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் – அவர்களது பர்ஸனல் கோரிக்கைகளின்படி. இந்த இடத்தில் ஆடப் பொருத்தமானவர்கள்: சமீபத்தில் அதிவேக 200 அடித்த இஷான் கிஷனும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும். டி-20 சூப்பர்ஸ்டார் சூர்யகுமாருக்கும் உள்ளே வந்து கலக்க வாய்ப்பு கிட்டவேண்டும். ரோஹித்தையும், கோஹ்லியையும் வெகுநாட்கள் நம்பிக்கொண்டிருக்கமுடியாது. வளர்ந்துவரும் வீரர்களுள் ஒருவரான ஷுப்மன் கில் (Shubman Gill) ஓப்பனராகத் தொடரலாம். அல்லது கிஷன் முன்னேறி அந்த இடத்தைக் கைப்பற்றலாம். ஷ்ரேயஸ் ஐயரும் இடையில். மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் சஞ்சு சாம்ஸன், இடது கை சுழல் யுஸி சாஹல் – தற்போது காயப் பட்டியலில்!

வேகப்பந்துவீச்சில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான தொடரில் உத்வேகம் காட்டிய முகமது சிராஜ் முன் வரிசையில் நிற்கிறார். உலகக்கோப்பைக்காகத் தன்னை அவர் கடுமையாகத் தயார்செய்துகொண்டிருப்பது, ஸ்ரீலங்காவுக்கெதிரான கடைசி மேட்ச்சில் அவர் போட்ட பௌலிங் (4 விக்கெட்டுகள்) காண்பித்தது. பும்ரா இன்னும் உடற்தகுதி பெற்று ரெடியாகாத நிலையில், சிராஜ் இந்தியாவின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர். ஜம்மு எக்ஸ்ப்ரெஸ் உம்ரான் மாலிக் தன் கரியர் க்ராஃபில் வெகுவான முன்னேற்றம் காண்பித்துவருவதும் மகிழ்ச்சி தருகிறது . ஸ்பின் பிரிவில், குல்தீப் யாதவ் எதிரிகளைத் தொடர்ந்து சிக்கலில் மாட்டிவருகிறார். வாஷிங்டன், அக்ஷர் ஆகியோர் அவர்கூட உலகக்கோப்பை பவனி வரலாம். இருவரும் பேட்டிங்கில் அடித்து விளாசும் திறனுடையவர்கள் என்பதும் போனஸ்.

தொடர், தொடராக பார்க்கவேண்டியிருக்கிறது – இவர்கள் யாவரும் எப்படி ஆடுகிறார்கள் என்பதை. வரவிருக்கும் போட்டிகளில் இவர்களின் பங்களிப்பைப் பொறுத்தே உலகக்கோப்பைக்கான இந்திய அணி முழு உருவெடுக்கும்.

**

Pics from Google: Washington Sundar & Ishan Kishan

ஜொலித்த சூர்யா. விக்கித்துப்போன லங்கா !

ஸ்ரீலங்காவுக்கு எதிரான டி-20 தொடரை முடிவு செய்யும் 3-ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது, அதுவும் ரொம்பச் சரியாகச் செய்தது திருப்திகரமாய் அமைந்தது. இஷான் கிஷன் எளிதாக விழுந்தாலும், தன் இரண்டாவது மேட்ச்சை ஆடிய ராஹுல் த்ரிப்பாட்டி (Rahul Tripathi) லங்கா கேம்ப்பின் மீதான தாக்குதலை ஆரம்பித்துவைத்தார். 16-இல் 35 விளாசி வெளியேறிய த்ரிப்பாட்டிக்குப் பின்  உள்ளே நுழைந்தார் ஸ்கை (SKY). அடுத்த முனையில் ஷுப்மன் கில் (Shubman Gill) நிதானம்.

A hint of Surya’s fireworks !

சில பந்துகளை கவனித்துவிட்டு கில், சூர்யா சில பௌண்டரிகளை அடிக்க, பதற்றத்தில் வேகவேகமாக பௌலிங்கை மாற்றினார் லங்கா கேப்டன் ஷனகா. சூர்யாவுக்கு ஆவேசம் வந்துவிட்டால், எதிரி பௌலர்கள் மைதானத்தை விட்டு ஓடிவிடுவதே நல்லது! ஆனால் அவர்கள்,  ஸ்பின், ஸ்லோ டெலிவரி, wide outside the off-stump என்றெல்லாம் வெரய்ட்டி காண்பிக்க முயல, வந்ததே கோபம் சூர்யாவுக்கு. சுற்ற ஆரம்பித்துவிட்டார் பேட்டை. ஸ்கோர் திடீரென எகிற, ஸ்ரீலங்கா பௌலர்கள், ஃபீல்டர்கள் அடிக்கடி ஆகாசம் பார்க்கவேண்டியதாயிற்று. குறிப்பாக, மதுஷன்காவையும் கருணரத்னேயையும் ஒரு பிடி பிடித்தார் அவர். உட்கார்ந்தவாறும், தரையில் படுத்து உருண்டும் பறக்கவிடப்பட்ட சிக்ஸர்கள், குஜராத் ரசிகர்களை போதையில் கிறுகிறுக்கவைத்தன. மொத்தம் 7 பௌண்டரிகள், 9 சிக்ஸர்கள். வெறும் 45 பந்துகளில் பிடி, சதம் என்றார் சூர்யா. கிடுகிடுத்துப்போனது லங்கா. ஒரு பக்கம் கில் (46), ஹூடா (4), பாண்ட்யா (4) என வெளியேற, அக்‌ஷர் பட்டேலின் (21, 9 பந்துகள்) துணையோடு இறுதிவரை அவுட் ஆகாமல் விளாசிய சூர்யா 112 நாட் அவுட் (51 பந்துகள்)..

ஸ்ரீலங்காவுக்கு இலக்கு 229 ! நாங்களும் காண்பிப்போம் அதிரடி என்பதாக ஆரம்பித்தது லங்கா. கொஞ்சம் ரன் ஏற, விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிய ஆரம்பித்தன. இந்த மேட்ச்சிலும் ஆடவைக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் பௌலிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் காண்பித்ததாகத் தோன்றியது. 5 நோபால்களுக்கு பதில் 4 வைட் ! அவ்வப்போது பாண்ட்யா எச்சரிப்பது தெரிந்தது. எனினும் 2.4 ஓவர்தான் அவருக்கு வந்தது அதில் 3 விக்கெட்! ஆச்சர்யம். பாண்ட்யா, சாஹல், மாலிக் ஆளுக்கு 2 எடுக்க, ஸ்ரீலங்கா நிலைகுலைந்தது. 17-ஆவது ஓவரில் 137 ரன்களில் அதன் ஸ்கோர் மடிந்தது.

ஒரு கட்டத்தில் இது Surya Vs Sri Lanka என்று ஆகிவிட்டிருந்தது என்றார் கேப்டன் பாண்ட்யா. கோச் ராஹுல் ட்ராவிட் புகழ்ந்தார் சூர்யாவை இப்படி: ”சிறுவயதில், இளம் கிரிக்கெட் வீரனாக வளர்ந்துகொண்டிருக்கையில், நல்லவேளையாக நான் ஆடியதை நீ பார்த்திருக்கமாட்டாய் என நினைக்கிறேன். நிச்சயம் என் ஆட்டத்தைப் பார்த்திருக்கமாட்டாய்! “

இந்தியாவுக்கு தொடர் வெற்றி. இதுவரை உள்நாட்டு டி-20 தொடரை ஸ்ரீலங்காவிடம் தோற்றதில்லை இந்தியா.

ஆட்டநாயகன் விருதை எதிர்பார்த்தாற்போல் சூர்யா சுருட்ட, தொடர்நாயகன் விருதை வென்றார் அக்‌ஷர் பட்டேல். Consistent performance.

ஒருநாள் தொடர் ஜனவரி 10-ல் அஸாம் தலைநகர் குவஹாட்டியில் ஆரம்பம். இரவு-பகல் கூத்து!

**

கிரிக்கெட்: நோ-பால் ஸ்பெஷலிஸ்ட்?

16 ரன்னில்  இரண்டாவது மேட்ச்சைத் தோற்றதில், இந்தியாவின் பரிதாப டி-20 கதையின் திரை விலகுகிறது. ஆரம்ப ஆட்டக்காரர்கள் சொதப்ப, மிடில் ஆர்டர், லோயர் ஆர்டர் என இந்தியாவைத் தாங்குதாங்கெனத் தாங்கிற்று. முதல் போட்டியில் தீபக் ஹூடா–அக்‌ஷர் பட்டேல் ஜோடி. இரண்டாவதில் சூர்யகுமார் யாதவ்-அக்‌ஷர் பட்டேல் இணை. அக்‌ஷரின் ஆக்ரோஷ பேட்டிங் லங்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இன்னுமொரு போட்டியை குறுகிய மார்ஜினில் தோற்கப்போகிறோமோ எனப் பதற்றம்கொள்ளவைத்தது. கடைசி ஓவரில் அக்‌ஷர் அவுட் ஆகிவிட, லங்கா சமாளித்து வென்றுவிட்டது.

ஆனால் பேச வந்தது அக்‌ஷரின் அபார ஆட்டம்பற்றியல்ல. இந்தியாவின் ஆபாச வேகப்பந்துவீச்சுபற்றி. முதல் ஓவரில் ஹாட்ரிக் நோ-பால். 16 ரன்கள் எதிரிக்குத் தானம். 19-ஆவது ஓவரை இவரை நம்பி கேப்டன் கொடுக்க, இன்னும் ரெண்டு நோபால் எடுத்துக்கோ. 18 ரன்னும் ஒனக்குத்தான் என கேவலப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங். இந்த மாதிரி பௌலர்களை வைத்துக்கொண்டு, என்னதான் மாத்தி யோசிக்கும் கேப்டனாக இருந்தாலும் எப்படி ஜெயித்துக்கொடுக்கமுடியும்? போதாக்குறைக்கு ஷிவம் மாவியின் மோசமான கடைசி ஓவரில் 20 ரன்கள் லங்காவுக்கு அன்பளிப்பு. இப்படித்தான் இந்தியா உதவியது லங்காவுக்கு ஸ்கோர் 200-ஐத் தாண்ட!

Pathetic bowling

அர்ஷ்தீப் சிங்கிற்கு பாண்ட்யா தந்தது இரண்டே ஓவர்தான். அதில் 37 ரன். முதல் ஓவரில் வரிசையாக 3 நோபால்கள். டெத் ஓவரில் 2 நோபால்கள். நோ-பால் என்றால் அதற்கு அடுத்து பேட்ஸ்மனுக்கு கிடைக்கும் ஃப்ரீ ஹிட்டும் நினைவில் வரவேண்டும். அர்ஷ்தீப்பின் இந்த வீரதீர சாதனைபற்றி எதிர்பார்த்ததுபோல் கடும் விமர்சனம். காயத்திலிருந்து மீண்டு வந்ததால் இப்படித்தான் இருக்கும், அவரை விமரிசிப்பதற்கு பதிலாக தட்டிக்கொடுக்கவேண்டும் கேப்டன் –  என சப்பைக்கட்டு கட்ட சில வர்ணனையாளர்கள்.. தூக்கு இந்தமாதிரி ஆட்களை அணியைவிட்டு! – எனப் பாயும் கவாஸ்கர், கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள்/வர்ணனையாளர்கள். பௌலர் என்பவர் மோசமான பந்துகளை சில சமயங்களில் வீசக்கூடும். அதனால் பேட்ஸ்மனால் விளாசப்படக்கூடும். இதெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் நடப்பதுதான். ஆனால் பௌலிங் க்ரீஸே கண்ணுக்குத் தெரியாதவன் எல்லாம் பௌலிங் போட, நேஷனல் டீமுக்கு ஏன் வரணும்? நோ-பால் போட்டால் என்ன? என் ரெப்யுடேஷன் தெரியும்ல? – என்பதுபோன்ற attitude. கேப்டன் பாண்ட்யா முகத்தைக் கைகளால் மூடிக்கொண்ட காட்சி! இந்த சமயத்தில் தேவை – அனில் கும்ப்ளே போன்ற ஒருவர் கோச்சாக.

Pandya’s plight !

இதே அணியில்தான் வலிமையான வெஸ்ட் இண்டீஸுக்கெதிராக அகமதாபாத் டெஸ்ட் ஒன்றில் விக்கெட் மேல் விக்கெட் சாய்த்த பின்னும்  குதித்துக் கொண்டாடாமல், ஒரு சிரிப்பைக் கூட உதிர்க்காமல்,  கடமையே என அடுத்த பந்தை ஓடிவந்து வீசிய கபில்தேவ் என்றொருவனும் இருந்தான் ஒருகாலத்தில். முதல் இன்னிங்ஸில் மீடியம் பேஸ் வீசி, அடுத்த இன்னிங்ஸில் ஸ்பின் பந்துபோட்டு க்ரெக் சாப்பலை அனாயசமாகத் தூக்கி வீசிவிட்டு, ஏதும் நடக்காததுபோல் ஃபீல்டிங் செய்யப்போன கர்ஸன் காவ்ரி (Karsan Ghavri) என்றொரு ஆல்ரவுண்டரும் இதே அணிக்காக ஆடியவன் தான். தன்னுடைய ஃபார்வர்ட் ஷார்ட்லெக் ஃபீல்டிங் திறமையை மட்டுமே பிரதான ஆயுதமாகக் கொண்டு, எதிரணியைப் பதற்றத்திலே வைத்த ஏக்நாத் சோல்கர் என்பவனும் அப்போது இந்தியாவுக்காக ஆடிக்கொண்டிருந்தான். இவர்களெல்லாம்  சொற்ப சம்பளத்திலும்,  நாட்டுக்காக நாலு மேட்ச் ஆடினாலும் போதும் என்ற பெருமையோடு ஆடியவர்கள். இன்றும் மனதில் நிறுத்தி ரசிகர்களால் கொண்டாடப்படும் தீர்க்கமான வீரர்கள். இப்போதெல்லாம் சிலருக்கு,  முயற்சி அதிகம் இல்லாமலேயே, கோடிக்கணக்கில் வந்து அதுமாட்டுக்கு கொட்டினால் இப்படி அதுகள் அணிக்குள் வந்து நாசம்பண்ணிவிடும் வாய்ப்பும் நிகழ்ந்துவிடுகிறது. காலத்தின் கோலம்..

இன்றைய மேட்ச்சில் அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் உட்காரவைக்கவேண்டும்.  அவரிடத்தில் மீண்டும் ஹர்ஷல் பட்டேல் (முந்தைய மேட்ச்சில் ரன் அதிகம் கொடுத்திருந்தாலும் 2 விக்கெட் வீழ்த்தியவர், பேட்டிங் செய்யவும் தெரியும்) வரவேண்டும். இல்லையெனில் ஆஃப் ஸ்பின் போடுவதோடு, லோயர் ஆர்டரில் ரன் சேர்க்கும் திறமைகொண்ட வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் கொண்டுவரப்படவேண்டும் – (சுந்தரை எதற்காக பெஞ்சில் உட்காரவைத்து வேடிக்கைபார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை) மூணாவது மேட்ச்சிலாவது தேறவேண்டும், தொடரைக் கைப்பற்றவேண்டும் என கோச் நினைத்தால். பார்ப்போம், ராஜ்கோட்டில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று.

**

SL-IND டி-20: மும்பை த்ரில், Pandya’s gamble!

கடைசி ஓவர் களேபரம் நேற்று (03-01-23)வங்கெடேயில். 13 எடுக்கவேண்டும் ஸ்ரீலங்கா வெற்றிக்கு. தான் போட்டிருக்கவேண்டிய ஓவரை அக்‌ஷர் பட்டேலிடம் கொடுத்தார் கேப்டன் ஹார்திக் பாண்ட்யா. ஸ்ரீலங்காவிற்கு ஆச்சர்யம். களத்தில் விளாசும் ஆல்ரவுண்டர் கருணரத்னே, டெய்ல்-எண்டர் ராஜிதா. இன்னும் 2 விக்கெட்வேறு கையில். நாம் ஜெயிச்சிட்டோம் என்று SL dugout ரிலாக்ஸ் ஆகி, கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு மும்பையின் இரவில் அமர்ந்திருந்தது!

அக்‌ஷரின் முதல் பந்து வைட். 2-ஆவதில் ராஜிதா ஒரு ரன். 3-ஆவதை வைட் என நினைத்து கருணா சும்மா இருக்க, அது வைட் இல்ல தம்பி..dot ball! 4-ஆவதை (legal 3rd) தூக்கி விளாச, சிக்ஸர்! ஸ்ரீலங்கா பக்கம் சட்டெனத் திரும்பிய முள்! 3-பந்தில் 5 ரன்தான் தேவை. மேட்ச் போச்சு இந்தியாவுக்கு –ரசிகர்கள் பதற்றம். அப்படியே பட்டேலும், கிஷனும் டென்ஷன் முகத்தோடு கேப்டனுடன் வாக்குவாதம். ஏன் எங்கிட்ட கொடுத்தே .. நீயே போட்டிருக்கலாம்ல என்று பட்டேல் கேப்டனைக் கேட்டது போல, நீ போட்றபடி போடு.. தோத்தா அதுக்கு நான்தான் பொறுப்பு.. போ.. போய்ப் போடு என்று பாண்ட்யா சொல்வதுபோல் உடல்மொழிகள் துல்லியமாக ஸ்க்ரீனில்.  அடுத்த பந்து அக்‌ஷரின் dot ball ! 2-ல் 5 தேவை. யார்க்கர்போல 5-ஆவதை அக்‌ஷர் வீச, 2 ரன் எடுக்க ஆசைப்பட்டு ராஜிதா ரன் அவுட். ஹூடா த்ரோவில் அக்‌ஷர் காரியம். கடைசிப்பந்தில் 4 தேவை ஸ்ரீலங்காவிற்கு. 109 கி.மீ.யில் வேகத்தோடு போட, மிட்-ஆனில் ஃபீல்ட் ஆனது. அதே ஹூடா. இப்போது த்ரோ விக்கெட்கீப்பருக்கு. ஒரு ஃப்ளாஷில் காரியத்தை முடித்த கீப்பர் கிஷன். மதுஷன்கா ரன் அவுட். லங்கா ஆல் அவுட்160. 2 ரன்னில் த்ரில் வெற்றி இந்தியாவுக்கு என்றது ஸ்கோர்போர்டு!

ஆட்டத்திற்குப் பிறகான நேர்காணலில் பாண்ட்யா : ’வேண்டுமென்றேதான் கடைசி ஓவரை அக்‌ஷரிடம் கொடுத்தேன். அவர்கள் 13 ரன் அடிக்கலாம். நாம் தோற்கலாம். இருந்தாலும் நெருக்கடி  சிச்சுவேஷனை உண்டாக்கி சோதித்துப் பார்க்க எண்ணம். அக்‌ஷர் கடைசி ஓவர் ப்ரெஷரை சாமர்த்தியமாகக் கையாண்டார்.’ என்றார். 4 விக்கெட் எடுத்த புது வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவிக்கும் பாராட்டு .

முதல் ஓவரில் கிஷன் அடித்த 16 ரன்கள், ஏதோ ஸ்கோர் 180-190 வரை போகப்போகிறது என்கிற கற்பனையை ரசிகர்களிடம் ஓஹோவென வளர்த்துவைத்தது. அடுத்தடுத்து ஹுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்ஸன் என ஒற்றை இலக்க சரிவுகள் இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா பௌலர்கள் கொடுத்த செட்பேக்ஸ். கிஷனும், பாண்ட்யாவும் மிடில் ஓவர்களைத் தாக்குப்பிடித்து வண்டி ஓட்ட, இறுதி ஜோடியான தீபக் ஹூடாவும், அக்‌ஷர் பட்டேலும்தான் நெருக்கடியை சமாளித்து, இந்தியாவை 150-ஐக் கடக்கவைத்தார்கள். 23 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 43 நாட் அவுட் என மிரட்டிய ஹூடா ப்ளேயர் ஆஃப் தி மேட்ச். அக்‌ஷர் 31 நாட் அவுட், , கிஷன் 37, பாண்ட்யா 29. தன் முதல் டி-20 மேட்ச்சை ஆடிய Gill, ஏழேடுத்து ஏமாற்றம். சூர்யா, சாம்ஸன் சல்லீஸாக வீழ்ந்ததில் லங்காவுக்கு ஆனந்தம்.

எதிரியின் ரன்-அவுட்டில் ஆனந்தப்படும் பாண்ட்யா, பட்டேல்! (மேலே)

இலக்கைத் துரத்திய ஸ்ரீலங்காவும் ஆரம்பத்தில் சரிந்தது ஷிவம் மாவியிடம். ஆனால் இந்திய ஸ்பின்னர்களை வெளுத்தது. பாண்ட்யா, ஷிவம், மாலிக் ஆகியோரிடம் லங்கா பேட்ஸ்மன்கள் பயந்து பின்வாங்கினார்கள் என்பதும் தெரிந்தது. 144, 145 என வீசிக்கொண்டிருந்த உம்ரான்  மாலிக், திடீரென 155 கி.மீ. (record ball) ஒன்றை ஏவி, வேக ரன்னெடுத்த ஸ்ரீலங்கா கேப்டன்  ஷனகாவை (45) சாஹலிடம் கேட்ச் கொடுக்கவைத்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். ஹஸரங்கா, கருணரத்னா க்லெவர் பேட்டிங்.  இந்திய அணியில், சாஹல், சாம்ஸன், ஹூடா ஆகியோர் அபார ஃபீல்டிங். Super keeping by Ishan Kishan. Lot of saves behind the wicket in a low-scoring match.

Scores (20 overs): India 162/5.  SL 160 all out.Player of the match: Deepak Hooda

**

கர்னாடகத் தலைநகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா

ஆங்காங்கே பார்க்க நேர்ந்த செய்தித் துணுக்குகள் தந்த உந்துதலில், சரி போய் பார்த்துவிடுவோம் என வந்தேன் பெங்களூரின் அல்சூரு (ஹலசூரு) ஏரிப்பக்கம் அன்று. அங்கேதான் பல வருடங்களாக இயங்கி வருகிறது, ஒரு புராணா கட்டிடத்தில் பெங்களூர் தமிழ்ச் சங்கம். அதிலே ஒரு வள்ளுவர் அரங்கம். தங்கமுலாம் பூசிய சிலையாக வீற்றிருந்த வள்ளுவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார்.  டிசம்பர் 25-ல் ஆரம்பித்து ஜனவரி 1, 2023 வரை இந்த இடத்தில்தான் நடந்தது, அதிசயமாக,  கன்னடவெளியில் ஒரு தமிழ்ப் புத்தகத் திருவிழா.  தமிழ்ச்சங்கம், பெங்களூரிலுள்ள தமிழ் ஆசிரியர் கழகம், தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கம் ஆகியவை முதன்முதலாக இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தகக் கண்காட்சி. தாய்மொழிப் பிரியரான இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மெனக்கெட்டு வந்து விழாவைத் துவக்கிவைத்திருக்கிறார் என்பதும் தமிழார்வலர்களுக்கு ஊக்கமளிப்பதே. பெங்களூரின் உயர்நிலைப்பள்ளி/கல்லூரி தமிழ் மாணாக்கர்களுக்கு புத்தகத்திருவிழாவில் நல்ல புத்தகங்கள் வாங்க என,  ரூ.100-க்கு ஒரு கூப்பன் என ரூ.2 லட்சத்துக்கு கூப்பன்கள் கொடுக்கப்பட்டன. மயில்சாமி அண்ணாதுரை, டில்லிபாபு போன்ற இஸ்ரோ, பாதுகாப்பு அமைச்சக விஞ்ஞானிகளும், கர்னாடக அரசில் பணிபுரியும் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் சேர்ந்து வழங்கிய அன்பளிப்பு இது எனக் கேள்வி.

அல்சூரு ஏரியை வட்டமடித்து, சங்கத்தைக் கண்டுபிடித்ததும் எதிரேயே சங்கத்தின் பிரத்தியேக கார் பார்க்கிங்கும் கிடைத்தது. மகிழ்ந்தேன். உள்ளே நுழையுமுன் சங்கத்தின் இட, வலத்தில் விரியும் ஏனைய கட்டிடங்களை ஒரு க்விக் சர்ச் செய்தேன் ஒரு சின்ன ரெஸ்ட்டாரண்ட் இருந்தால் ஒரு ஃபில்ட்டர் காபிக்குப் பின் உள்ளே செல்லலாமே என்கிற எண்ணத்தில். ம்ஹூம். உள்ளே அதனை எதிர்பார்ப்பதில் தர்மம் இல்லை! சரி, புத்தகம் பார்க்க வந்தோமா, காபி ருசிக்காக வந்தோமா..

25-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குகொள்கின்றன என்று எங்கோ படித்திருந்தாலும், கண்டது என்னவோ 14-15 –ஐத் தான். விழா ஏற்பாட்டாளர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன். ’இந்த வருசந்தான் ஆரம்பிச்சிருக்கோம்.. அடுத்த வருசம் நிறைய பதிப்பகங்கள் வரும் சார்’ என்றார் நம்பிக்கை தெறிக்கும் த்வனியில்.

அரங்கில் நுழைந்தவுடன் எதிரே பிரதானமாக தரிசனம் தந்த வள்ளுவருக்கு ஒரு பௌவ்ய வணக்கம்போட்டுவிட்டு, கண் இடதுபக்கம் நோட்டம்விட ஆரம்பிக்க, முதலில் தென்பட்டது விகடன் பிரசுரம். அவர்களது டாப் செல்லர்ஸ் – பளபள பைண்டிங்கில். பொன்னியின் செல்வன் பிரதானம். மற்றும் பாபாயணம், மஹாபெரியவா, சத்குரு, சுகபோதானந்தா, நம்மாழ்வார், இந்திரா சௌந்திரராஜன், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் … பாப்புலர் டைட்டில்ஸ்/ பிரபல கதாசிரியர்கள் உங்களை வரவேற்பதுபோல் முகப்பு டேபிளில். ஸ்டாலின்  பின் வரிசையில் சில புத்தகங்கள் கவர்ந்தன. நா.முத்துக்குமார், வாலி, சுஜாதாவின் சில கட்டுரைத்தொகுப்புகள். கேட்டிராத புது எழுத்தாளர்கள், கவிஞர்கள். மேலும் ஃபிட்னெஸ், பிஸினெஸ், கணினி, மருத்துவம், விவசாயம், சுயமுன்னேற்றம் என வெவ்வேறு வகைமைகளில் நூல்கள்.  ஒரு பக்கத்தில் சிறிய அடுக்கலாகத் தென்பட்டது 2022 விகடன் தீபாவளி மலர். காம்பேக்ட்டாக அழகாக அச்சிடப்பட்டிருந்த மலரை லேசாகப் புரட்டியதில் பட்டுக்கோட்டை பிரபாகர், சு.வேணுகோபால் சிறுகதைகள், போகன் சங்கர், நந்தலாலா கவிதைகள், வண்ணதாசன் கட்டுரை, ஓவியர் புதுக்கோட்டை ராஜாபற்றிய (சாமி படங்கள் வரைபவர்) கட்டுரை, கிரிக்கெட் வீரர் நடராஜனின் பேட்டி.. இப்படி சில எட்டிப்பார்த்தன, ஆன்மீக, சினிமா சங்கதிகளோடு போட்டிபோட்டுத் தோற்றவாறு. ஒருவர் கவுண்ட்டரை நெருங்கி ‘டிஸ்கவுண்ட் உண்டுல்ல?’ என்று சந்தேக நிவர்த்தி செய்துகொண்டு, ஏதும் வாங்காமல் நகர்ந்தார். சில இளைஞர்கள் வாங்கினர். நானும் இரண்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.

தினமலர் ஸ்டாலும் வைத்திருந்தார்கள். அன்றைய நாளிதழ், தினமலர் கேலண்டர் எனப் புரட்டினேன். ’பேப்பர் இலவசம். ஆனா கேலண்டருக்கு 20ரூ. தரணும்!’ என்றார் அவர். ’நான் எப்ப ஒங்ககிட்டே ஃப்ரீயா கேட்டேன்!’ – என்றவாறு கேலண்டருக்கு பணம் கொடுக்கப்போகையில், தினமலர் பதிப்பக நூல்கள் பின்னே அடுக்கியிருப்பதைக் கண்டு அங்கே போய் பார்த்தேன். ஒரு புத்தகமும் எடுத்துக்கொண்டேன். பணம் கொடுத்துவிட்டு வெளிவந்தேன். கொஞ்சம் மேல்தளத்திலிருந்த சூர்யன் பதிப்பகத்தில் அடுத்ததாக நுழைந்து பார்க்க ஆரம்பித்தபோது, ஒருவர் காதருகில் நெருங்கி ‘நம்ம தினகரன் பதிப்பகம் சார்!’ என்றது ஆச்சர்யம் தந்தது. தெரியும் என்பதாகத் தலையாட்டிவிட்டு மேலும் பார்வையிட்டேன். அசோகமித்திரனின் அந்தக்கால மெட்ராஸ்பற்றிய தொடர் ஒன்று குங்குமத்தில் வெளியாகி, பின்னர் அது சூரியனால் பதிப்பித்து வெளியிடப்பட்டது நினைவுக்கு வர, தேடினேன். தென்படவில்லை. அசோகமித்திரனின் எந்த நூலும் அங்கில்லை என்பது தெரியவர, சோர்வானேன். ஒரு ஸ்டாலில் ஜெயகாந்தன், அகிலன், நா.பா. பார்த்ததாக நினைவு. கு.ப.ரா., தி.ஜா, எம்.வி.வி., தஞ்சை ப்ரகாஷ், ஆத்மாநாம் கிடைத்தால் வாங்கலாம் என நினைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் அல்சூரு வர வழி தெரியவில்லைபோலும்.

’முற்போக்கு’ பதிப்பகம் ஒன்றில் அதற்கான இடதுசாரி கொள்கைசார் புத்தகங்கள். பஷாரத் எனும் பதிப்பகம் இஸ்லாமியக் கருத்துகள், சிந்தனை சார்ந்த நூல்களை வரிசையாக வைத்திருந்தது.

கேள்விப்பட்டிராத சில பதிப்பகங்களின் ஸ்டால்களுக்குள்ளும் போனேன். வெளியே வந்தேன். குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை.

ஒவ்வொரு பாப்புலர் பதிப்பகத்திலும் கல்கி பிரதானமாக ஒளிர்ந்தார். மணிரத்னத்தின் PS-1  எஃபெக்ட்டோ? சுஜாதாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டாரே மனுஷன்! அங்கே என்ன, குண்டுகுண்டாக.. பொன்னியின் செல்வன் ஆங்கில மொழியாக்கம் (மொழியாக்கம் டாக்டர்…… எம்.ஏ) என்றிருந்தது. படித்துப்பார்க்கச் சொன்னாள் கூட வந்திருந்த மகள். ஆங்கில வர்ஷனையாவது வாசிப்போம் என ஆர்வம்போலும். ஒரு பக்கத்தை திறந்து உருட்டினேன் கண்களை. ம்ஹூம்… ஹைஸ்கூல் இங்கிலீஷ். ஒரு சரித்திர நாவலை உணர்வு தாக்காது படிப்பதில் அர்த்தமில்லை. சரிவராது என்றேன் அவளிடம். மேலும் பார்த்ததில், பொன்னியின் செல்வனின் இன்னொரு ஆங்கில புத்தக வரிசை கண்ணில்பட்டது. மொழியாக்கம் வரலொட்டி ரெங்கசாமி. அட.. ஒரு வால்யூமை எடுத்து புரட்டினேன். Pleasant surprise! மொழியாக்கம் நன்றாக வந்திருப்பதாய்த் தோன்றியது. (வரலொட்டி சில ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருப்பது தெரிந்தது). ஒரு வால்யூம் வாங்கிப் படிக்க மகள் ஆசைப்பட, விற்பவரிடம் ’எவ்வளவு தரணும் இந்த வால்யூமுக்கு? என்று வினவினேன். ‘அஞ்சு உள்ள செட் சார்!’ என்றார். ’அதுசரி, ஒன்னு மட்டும் எடுத்துக்கறேன்’ என்றேன். ‘அஞ்சஞ்சா, செட்டாத்தான் விக்கிறோம். எல்லாம் சேத்துப் படிச்சாதான் சார் கதயே புரியும்!’  விளக்குகிற மூடில் அவர். வாங்குகிற மூட் போய்விட்டது. நகர்ந்தோம்.

அடுத்த ஸ்டாலொன்றில் நிற்கையில், ஆ.. யவனராணி என்றார் குதூகலத்தில் ஒருவர். கடல்புறா கவர்ந்தது அவர்கூடச் சென்றவரை. சாண்டில்ய பக்தர்கள்! மன்னன் மகள், மலைவாசல், ராஜபேரிகை, ஜலதீபம் என அவரது நாவல்கள் நல்ல பேப்பர்/பைண்டிங்கில், பளபளப்பாக ஒரு ஸ்டாலில் முன்னே வைக்கப்பட்டிருந்தன. வேறு தலைப்புகள் பல பின் வரிசைகளில் ஒழுங்காக அமர்ந்திருந்தன.

‘டிஸ்கவுண்ட் கொடுப்பீங்கல்ல!’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன். ஆரம்பத்தில் பார்த்த அதே ஆசாமி கௌண்ட்டரில், வெறுங்கையுடன். சிலருக்கு இப்படியெல்லாம்தான் பொழுது போகிறது போலிருக்கிறது.  இதற்கு மாற்றாக, இரண்டு முதிய பெண்கள், மிகுந்த ஆர்வத்தோடு ஒவ்வொரு ஸ்டாலாக நகர்ந்து புத்தகங்களைப் பார்வையிட்டார்கள். வாங்கினார்கள்.  இளைஞர்கள் சிலரும் தேர்ந்தெடுத்து சில புத்தகங்களை வாங்கிக்கொண்ட மகிழ்ச்சியில் பேசிக்கொண்டே சென்றதைக் கவனித்தேன்.

அங்கே.. கூடவந்திருந்த என் மகள் எதையோ அந்த ஸ்டாலில் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாளே.. தமிழ் படிக்கத் தெரியாதே அவளுக்கு என்கிற சிந்தனையில் அங்கு சென்று பார்த்தால்.. அட, இந்தியா டுடேயா இங்கே! அகதா க்றிஸ்ட்டீ, ஓ.ஹென்றி, ஜார்ஜ் ஆர்வெல், மரியோ பூஸோ, ஹெர்மன் ஹெஸ், ஜோனதன் ஸ்விஃப்ட், ஜோஸப் ஹெல்லர், பாலோ கொயெல்ஹோ போன்ற அயல்நாட்டு எழுத்தாளர்களோடு நம்ம நாட்டு கமலாதாஸ், ஆர்.கே.நாராயண், வாஸந்தி, அமர்த்யா சென், ஓஷோ, அமிஷ் போன்றோரின் புத்தகங்களும். என்னது,  வாஸந்தி ஆங்கிலத்திலுமா எழுதியிருக்கிறார்? ஆமா! புத்தகத் தலைப்பு: Karunanidhi. தமிழ்நிலம் தாண்டிய ஏனைய இந்தியவெளி மக்களுக்கும் சில விஷயங்களைச் சொல்லவேண்டுமே. வழக்கமான சில பிரபல தலைப்புகளைத் தாண்டி இப்படியும் சில:  Rebel Sultans, The Seven Husbands, A Thousand Splendid Suns, The First Muslim, Nothing More To Tell, Hating Game, The Love Hypothesis, Badass Habits, The Ikigai Journey..

அவ்வளவுதான். முடிந்தது. வந்திருந்தோர் சிலர்தான் நான் போயிருந்த சமயத்தில் –காலை 11:20 – 13:00.  மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நிறையப்பேர் வருகை தந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அல்சூர் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி அளவில் சிறியதுதான். எனினும், பெங்களூர் தமிழர்களின் பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி. இனி வரும் வருடங்களில் விமரிசையாக நடக்கட்டும்.

வெளியே வருகையில் இரண்டு மாமாக்கள், தாங்கள் வாங்கிய சில புத்தகங்கள் அடங்கிய சிறு பைகளுடன் பக்கத்துப் பொட்டிக்கடையில் காபி வாங்கிக்கொண்டு சாலையைக் கடந்தார்கள். ஏரிக்கரையை ஒட்டிய பாதையில் ஏரியைப் பார்த்துக்கொண்டு , ஏகாந்தமாய் உணர்ந்தவாறு காபியை ரசிப்பதாய்த் தோன்றியது. என் காரைக் கூப்பிட்டேன் ப்ரூக்ஃபீல்ட் திரும்ப. காரில் ஏறுகையில் நினைவில் தட்டியது: ஸ்டாலொன்றில் வரிசையின் இடையிலே எட்டிப் பார்த்த ஒரு புத்தகம். தலைப்பில் ’சுதந்திரம் என்பது சுக்கா, மிளகா’ என்று காரமாகக் கேட்டது. தெரியலியே… உப்பா, புளியா என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் ஒருவேளை அங்கேயே பதில் சொல்லியிருக்கலாம்…

சரி.. வீடுபோய் சாவகாசமாக வாசிப்போம் வாங்கிய புத்தகங்களை: நினைவு நாடாக்கள் -வாலி, அணிலாடும் முன்றில்-நா.முத்துக்குமார், பரிபூர்ண அருளாளன் -ஆர்.வெங்கடேஷ்.

**

சும்மா..  ஒரு சிந்தனை

போன வருடத்தின் நள்ளிரவில் ஆரம்பித்து இந்த ஆண்டின் அதிகாலையிலும் வேகமெடுத்துக்கொண்டிருந்த வாழ்த்துக்களுக்கு ஒருவழியாக பதிலளித்துவிட்டு, காலைக் காப்பியை அருந்திக்கொண்டே டேபிளில் கிடந்த புதிதாக வாங்கிய புத்தகத்தைப் புரட்டுகையில் பட்டது கண்ணில், பொட்டிலே அடித்ததுபோல் ஒரு கவிதை. பட்டுக்கோட்டையின் அந்தக்கால அங்கலாய்ப்பு:

தேனாறு பாயுது

செங்கதிரும் சாயுது

ஆனாலும் ஏழை வயிறு

காயுது

காலங்காலமாக இது தொடரத்தான் செய்யுமோ என்கிற பதற்றம் பாழும் மனதில் பொங்குகிறது. ஏழையில்லா நாடு எங்கிருக்கிறது இந்த அவனியில்? பிச்சைக்காரன், பஞ்சை, பராரி என்றெல்லாம் வேண்டுமானால் அவன் அழைக்கப்படாது போகலாம்; ஹோம்லெஸ், ஜாப்லெஸ் என்று வேறுவேறாக, சில சமூகங்களில் கொஞ்சம் அட்ராக்ட்டிவாக வர்ணிக்கப்படலாம். ஆனால் இன்னும் அவன் இருக்கிறான்தானே.. வறுமையிலேயே பழசாகிக் கந்தலாகிப்போன அவனுக்கு புத்தாண்டாவது, பழைய ஆண்டாவது? எந்த ஆண்டு வந்தாலென்ன, எப்படித்தான் போனாலென்ன? மாறிவிடுமா அவனுலகம்? தேறிவிடுமா அவனது வாழ்க்கை?

தர்மசிந்தனையை விடுங்கள், சுயசிந்தனையே வற்றிப்போன காலகட்டத்தில் வாழ்கிறோம்போலிருக்கிறதே. எல்லாவற்றையும் எந்த உணர்வுமின்றி ஃபார்வர்டு பண்ணிப்பண்ணிப் பழகிப்போய், நாமும் இப்படியே ஒருநாள் ‘ஃபார்வர்டு’ செய்யப்பட்டுவிடுவோம் என்பது புரியாமல் நடக்கிறானே மனிதன்?  

யோசித்துக்கொண்டே நடந்தவன் சாலையோரச் சிறுகடையில் காப்பி வாங்கிக்கொண்டு, முன்னே இருந்த மரத்தடியில் – சுற்றிக்கட்டியிருந்தார்கள் ஒரு வட்ட மேடை – உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் அவள் வந்தாள் அங்கே, கையில் பிடிக்கப்பட்டிருந்த காளைமாட்டுடன். பூம்பூம்பூம் மாட்டுக்காரி. பதின்மவயதுப் பெண். கடையில் ஏதேதோ வாங்கிக்கொண்டிருந்தவர்களை வேடிக்கைப்பார்த்தவாறு நின்றிருந்தாள். இவளுக்கு ஒரு டீ வாங்கிக்கொடுப்போமா என எண்ணம் எழுந்தவேளையில், ஒரு யமஹா அங்கே திரும்பி நின்றது. யுவதியுடன் இறங்கிய யுவன். கடைக்குள் சென்றான். யமஹா அழகி – கன்னடத்துக்கிளியென்றோ, தெலுங்குத் தேவதையென்றோ கற்பனையில் வைப்போம் –  அந்த ’மாட்டு’ பெண்ணைப் பார்த்தாள். அவள் கோலத்தை இவள் கண்கள் வேகமாக ஆய்ந்தன.  திரும்பிய வாலிபன் யமஹாவின் கையில் ஒரு பெப்ஸியைத் திணித்துவிட்டு மீண்டும் கௌண்டருக்கு சென்றான். இவள் உடனே அதை பூம்பூம்பின் கையில் கொடுத்துவிட,  சற்றும் இதை எதிர்பார்த்திராத அவள் திகைத்தாள். குடி என்பதாக இவள் சைகை செய்துவிட்டு, ‘ஏய்.. get me one more..!’ என்று அவனுக்கு உத்தரவிட்டுவிட்டு தலையைக் கோதியவாறு நின்றுகொண்டிருந்தாள்.  

ஆச்சர்யமான சந்தோஷத்தில் நான்.  இத்தகைய இளைய தலைமுறையிடம்தானே இந்த உலகம் செல்கிறது? எந்த ஆபத்தும் இல்லை இதற்கு என்றது மனது.

**