சமீபத்தில் வீடு மாற நேர்ந்தது. அதே கட்டிட வளாகத்தில்தான் எனினும், பேக்கர்களைக் கூப்பிடவேண்டியதாயிற்று. அவர்கள் எல்லாவற்றையும் இறக்கி, இழுத்து, ஈவு இரக்கமின்றி கார்ட்டன்களுக்குள் வேகவேகமாகத் திணிக்கும் வைபவம் அரங்கேறியது. அவசர அவசரமாக, ஏகப்பட்ட சாமான்கள் கண்முன் மீண்டும் ப்ரத்யட்சம் ஆகி விலகின. அவற்றில் சில புத்தகங்களும் – பாப்லோ நெரூதா, ஆண்டன் செகாவ், சுஜாதா, கருட புராணம், ஜாதக அலங்காரம்.. இப்படி சில. முன்னரே வாங்கியிருந்தும் சரியாகப் படிக்கப்படாமல், அல்லது முடிக்கப்படாமல் அல்லது இன்னும் தொடவேபடாமல் மூலையில் கிடந்திருக்கவேண்டும் – அடிக்கடி என் கவனத்தில் வராத வீட்டின் மூலை. புது வீட்டின் பரபரப்பு அடங்கியதும், நேரம் கிடைத்தது. உட்கார்ந்து படிக்க ஒரு மூலையும். படிப்போம் என சாயந்திர வேலையில் காஃபியோடு உட்கார்ந்தேன்..
“எழுதுகிறவனுக்கு கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப் பார்த்தால், கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம். – நம் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப . எப்படி? சொல்கிறேன்.
சின்ன வயதில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் சங்கீதக் கச்சேரி. அய்யங்கார் ரொம்ப ரசித்து ‘தோடி’ பாடிக்கொண்டிருந்தார். மாமா என்னை ரகசியமாகக் கூப்பிட்டுட்டு ”டேய்.. அவர் என்னத்தயோ அப்பப்ப வாயில் போட்டுக்கிறாரே, அது என்னன்னு போய்ப் பார்த்துட்டு வா!” என்றார். மாமா கவனித்தது தோடியை அல்ல.
இரண்டாவது உதாரணம்: ‘இலக்கியச் சிந்தனை’யில், ’கதையின் கதை’ என்கிற தலைப்பில் தொல்காப்பியத்திலிருந்து துவங்கி, மேற்கோள்கள் காட்டி தீவிரமான ஆராய்ச்சிக் கட்டுரை போல, எனக்கே திருப்தி தரும்படியாகப் பேசினேன். பேச்சு முடிந்ததும் ஒரு எழுத்தாள அன்பர் என்னை அணுகி, ‘உங்க பேச்சைக் கேட்டேன். ஏன் அப்பப்ப மூச்சிரைக்கிறது? உங்களுக்கு ஏதாவது ஹெல்த் ப்ராப்ளமா?’ என்றார். அவர் கவனித்தது பேச்சை அல்ல. மூச்சிரைப்பை மட்டுமே.
மூன்றாவது: அமெரிக்காவில் ஒரு பரிசோதனை. ஒரு ஆளைக் கொலைபட்டினிபோட்டு, ஒரு அழகான சித்திரத்தை அவனிடம் காட்டினார்கள். அவனுக்கு சித்திரத்தில் ஒரு ஓரத்தில் வரையப்பட்டிருந்த திராட்சைப் பழம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்ததாம்.
எனவே, கவனிப்பது என்பது உடல் நிலையையும், மனநிலையையும் பொறுத்தது. காண்கின்ற எல்லாவற்றையும் கவனிக்க எனக்கு சில வருஷங்கள் ஆகின. கவனித்தது அத்தனையையும் எழுதவேண்டும் என்பதில்லை; எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் – முக்கியமாக மானுடம் வேண்டும்.
என் கண்ணெதிரில் நடந்த சாலை விபத்தில், முதலில் எனக்கு எழுத விஷயம் ஏதும் கிடைக்கவில்லை. எல்லா ஊர்களிலும்தான் போக்குவரத்து, எல்லா ஊர்களிலும்தான் கிழவர்கள், கிழட்டு சைக்கிள்களில் அடிபட்டுச் சாகிறார்கள்.. ஆனால், இறுதியில் விபத்து நடந்த இடத்தில் இறைந்திருந்த கால் கிலோ அரிசியை ஒரு சிறுவன், ரத்தம் படியாததாகப் பொறுக்கி டிராயர் பைக்குள் திணித்துக்கொண்டபோது, எனக்கு அங்கே கதை கிடைத்துவிட்டது.
அதேபோல், ஒரு பெண் கணவனைத் திட்டிக்கொண்டே நடந்து கூலிக்குச் செல்கிறாள் – கதையில்லை. எல்லா ஊர்களிலும், எல்லாக் கணவர்களும் திட்டப்படுகிறார்கள். சட்டென்று கூடவே ஓட்டமும் நடையுமாக வந்து, தன் ஆறு வயது பிள்ளையைப் பார்த்து “நீயாவது என்னைச் சரியா வெச்சுப்பியாடா?” என்று கேட்டபோது, அதை (கதையில்) சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது..”
-’ரயில் புன்னகை’ சிறுகதைத் தொகுப்பில் சுஜாதா.
அன்றாட காரியங்களினூடே, சிறு சிறு சுற்றல்கள், பயணங்களினூடே எங்காவது ஏதாவது கவனத்தை ஈர்க்கத்தான் செய்கிறது. பல சங்கதிகள், விஷயங்கள் நாம் கவனிக்கமாட்டோம் என்கிற தைரியத்தில் எதிரே ஒரு கணம் வந்து, இடது, வலதாகப் பாய்ந்து ஓடி மறைந்துவிடுகின்றன. இனி இப்படி விடக்கூடாது. சரியாக கவனித்து மேலே பயணிக்கவேண்டும். அதாவது, மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டால்…
**