ஆசியகோப்பை கிரிக்கெட் ஃபைனலில் இப்படி ஒரு அணி துவம்சம் செய்யப்பட்டதில்லை. நல்லதானே போய்க்கொண்டிருந்தது நமக்கு, என்ன ஆச்சு இன்னிக்கு என்று அந்த அணியின் ரசிகர்கள் கதறும் அளவுக்கு, ஒரே போடாகப் போட்டு சாய்த்துவிட்டது இந்தியா. 50 ஓவர் மேட்ச். டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்து, 15 ஓவரிலேயே ஸ்ரீலங்கா மரண அடிவாங்கியது. 50 ரன் – ஆல் அவுட்!
இந்தியாவின் முகமது சிராஜ் போட்ட ஸ்விங் பௌலிங் பல நாட்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் உலகில் ஸ்லாகித்துப் பேசப்படும். 140 + கி.மீ. வேகப்பந்துகளில் சில உட்பக்கமாக ஸ்விங் ஆனதும், பல உள்ளே நுழைந்ததுபோல் திரும்பி, வெளியே போய்ப் போக்குக் காட்டியதும், ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களைத் திணறவைத்தது. இதுவரை அனுபவிக்காதது. பிட்ச்சில் இறங்கி இந்திய வேகப்பந்துவீச்சை சந்தித்த உடனேயே, எல்லாம் தலைகீழானது. தடவ ஆரம்பித்துவிட்டார்கள். பேட்டிங் செய்வதெப்படி என மறந்துபோய்விட்டதுபோல் தோன்றியது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் முதல் ஓவரில் மூன்றாவது பந்திலேயே பும்ரா, ஓப்பனர் குஸால் பெரெராவைத் தூக்கி வீசினார். சிராஜும் பயங்கரமாக மறுபக்கத்திலிருந்துப் போட்டுத் தாக்க, அவரின் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள்! கேட்கணுமா பின்னே? ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்குப் பித்துத்தான் பிடித்துவிட்டது என அவர்களது ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். நிலமை அப்படி.. ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா 12 க்கு 6 விக்கெட்டுகள்! சிராஜின் அனலிஸிஸ் 5 for 5 எனச் சீறி, ஸ்ரீலங்காவின் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சின்னாப்பின்னமாக்கியது. மனுஷனுக்கு ரோஹித் கொடுத்ததே 7 ஓவர்கள்தான். அதில் அவர் சாய்த்தது 6 விக்கெட்டுகள்.
முகமது சிராஜ் – பாராட்டு மழையில் !
பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க எண்ணிய ரோஹித், பாண்ட்யாவிடம் பந்தைக் கொடுத்தார். ஸ்ரீலங்காவுக்கு மூச்சு வருவதற்குள், பாண்ட்யாவின் பௌலிங் அவர்களை அந்தோ பரிதாபமாக்கிவிட்டது. 3 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகள். விழிபிதுங்கிய ஸ்ரீலங்க வீரர்கள் அத்தனை விக்கெட்டுகளயும் சொற்ப டோட்டலுக்குப் பறிகொடுத்து ஓடிப்போனார்கள்!
இந்தியா சேம்பியன்ஷிப் வெல்ல 51 ரன் இலக்கு என இறங்கியது. ஷுப்மன் கில்லுடன் (Shubman Gill) ஓப்பன் செய்ய இஷான் கிஷனை இறக்கிவிட்டார் ரோஹித் ஷர்மா. இவர்களும் ஸ்ரீலங்காவின் ஜூனிவர் மாலிங்காவான, பதிரானாவிடம் தடுமாறுவார்கள். 51 ரன் எடுப்பதற்குள் 2, 3 விக்கெட்டுகள் இந்தியாவுக்கும் சாயும் என்பது அப்போதைய பொதுவான கணிப்பு. ஆனால் நடந்ததே வேறே! இறங்கிய உடனேயே, பதிரானா, மதுஷன்கா என எவரையும் விடாது தாக்கினார்கள் கில்லும், கிஷனும். 6.1 ஓவர்களிலேயே ரோஹித்தின் கைக்கு வந்தது ஆசிய கோப்பை. 8-ஆவது முறை கோப்பையைக் கைப்பற்றி மகிழ்ந்தது இந்தியா.
பாகிஸ்தானிலும், ஸ்ரீலங்காவிலுமாக நடந்த இந்த ஆசிய கோப்பைத் தொடரின் மறக்க முடியாத இந்திய வீரர் முகமது சிராஜ். ப்ளேயர் ஆஃப் த மேட்ச் வாங்கியதும், தான் எப்படிப்பட்ட மனுஷன் என உடனே காண்பித்தார் . ஆசிய கோப்பை தொடர் முழுதும் இஷ்டத்துக்கும் இடைமறித்துத் தொல்லை தந்த மழை, எல்லோருக்கும் எரிச்சலூட்டியது. அப்போதெல்லாம் தங்களின் சிறப்பான பணி மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு வந்து பாராட்டுப் பெற்றார்கள் கொழும்பு ஆடுகளத்தின் மைதானப் பணியாளர்கள். அவர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை உணர்ந்த சிராஜ், அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தனக்குக் கிடைத்த 5000 டாலர் (ஸ்ரீலங்க ரூ.16 லட்சம்) விருதுத் தொகையை சொளையாகத் தூக்கி அப்போதே அவர்களிடம் கொடுத்துவிட்டார். எத்தனையோ பேர் என்னென்னவோ சம்பாதிக்கிறார்கள், கிரிக்கெட்டை வைத்துக்கொண்டு. எத்தனைப் பேரிடம் வெளிப்பட்டிருக்கிறது இத்தகைய மனம்?
சரி, தயாராகுங்கள் ரசிகர்களே… உலகக்கோப்பை 2023 கதவைத் தட்டப்போகிறது விரைவில். அதுவும் இந்தியாவில்.
**