(தொடர்ச்சி:)
…… ஆபத்தான வேலையாக சில சமயங்களில் ஆகியுள்ளது என்றார். சமூக விரோதிகள், அரசியல் தொடர்புடைய தொழில் அதிபர்கள் எனப் பலரிடமிருந்தும் எதிர்ப்புகள், மிரட்டல்கள் வரும். எல்லாத் தடைகளையும், சத்திய சோதனைகளையும் தாண்டித்தான் அரசு அதிகாரி இயங்கவேண்டியிருக்கிறது என்றார். கையில் கறைபடாமாலும், முதுகில் அடிவிழாமலும் கடமையைச் செய்வது அவ்வளவு எளிதல்ல இந்த நாட்டில்.
நக்ஸலைட்டுகளின் ஏரியாவில் தான் சிலகாலம் பணிசெய்ய நேர்ந்ததைப்பற்றிக் கொஞ்சம் சொன்னார். அரிவாளையும் கம்புகளையும் தூக்கிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் அடிதடி என்று அலையும் இவர்களை எப்படி சமாளிக்கமுடிந்தது என்றேன். முயன்றதில், ஓரளவு முடிந்தது என்றார். அவர்கள் அடிப்படையில் ஏழைகள் அல்லவா? அவர்களின் அடிப்படைத் தேவைகளே சரியாக பூர்த்திசெய்யப்படுவதில்லை. காட்டுப்பகுதிகளில் அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும்போதெல்லாம் அவர்களை, அருகிலுள்ள கிராமத்துப் பெரியவர்களுடன் அழைத்துப் பேசுவேன். அவர்களது குடும்பம், அவர்களின் உடனடித் தேவை என்ன என விஜாரிப்பேன். முதலில் முறைப்பார்கள். முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். பிறகு தயக்கத்துடன் சொல்வார்கள். அவர்களது கோபம், அலட்சியம் குறையும். கொஞ்சம் அவகாசம் வாங்கிக்கொள்வேன். வனத்துறை மேலதிகாரிகளுக்கு எடுத்துச்சொல்லி, நலத்திட்டங்களைப் (Forest welfare schemes) பயன்படுத்தி, சமையல் அடுப்புகள், பிளாஸ்டிக் வாளிகள், சொம்புகள், குடங்கள், விரிப்புப்பாய்கள், மடிப்புக்கட்டில்கள், டார்ச் லைட்டுகள் போன்றவற்றை வாங்கி அவர்களது குடும்பங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். முதலில் வெறுப்புக் காட்டியவர்கள், பின் குணமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசி, ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி மரங்களை வெட்டுவது, கடத்த உதவுவது, காட்டுப்பகுதிகளை எரிப்பது போன்றவை சட்டத்துக்குப் புறம்பானது என்று ஓரளவு புரியவைத்தேன்; நடந்துவந்த குற்றங்களைக் குறைக்க முயன்றேன் என்றார். Officer! You are a Gentleman !
இந்திய அரசினால், வனத்துறைக்குழுவுடன் அமெரிக்காவுக்கு 1986-ல் தான் ஒருமுறை அனுப்பப்பட்டதாகக் கூறினார். அமெரிக்காவின் இயற்கைப்பாதுகாப்பு அமைப்புகள், வனங்கள், தேசிய பூங்காக்கள் போன்றவற்றைப் பார்வையிட இந்தக்குழு சென்றது. அப்போது ஒரு மாநிலத்தில் தேசியப்பூங்கா ஒன்றைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தது இந்தியக்குழு. இந்திய அதிகாரிகள் ஒரு பெரிய பட்டுப்போன மரம் ஒன்று பசுமையான பூங்காவின் நடுவில் காட்சியளித்ததைக்கண்டு ஆச்சரியப்பட்டனர். கூட இருந்த அமெரிக்க வனத்துறை அதிகாரி ஒருவரிடம் `இந்தப் பட்டுப்போன (உயிரற்ற) மரத்தை ஏன் அப்படியே விட்டுவைத்திருக்கிறீர்கள்? உயிரிழந்த மரத்தை அகற்றி, அந்த இடத்தில் வேறொரு மரத்தை நட்டு வளர்ப்பதுதானே முறை? உங்கள் நாட்டில் அப்படிச்செய்வதில்லையா` என்று கேட்டாராம் நம்ப ஆளு. அதற்கு அந்த அமெரிக்க அதிகாரி சொன்ன பதில் தன்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும், இயற்கை வளப்பாதுகாப்பில் தன்னை மேலும் உந்தியதாகவும் கூறினார். அந்த இளம் அமெரிக்கர் சொன்ன பதில்: `நாங்களும் இந்த உயிரற்ற மரத்தை அகற்றிவிடத்தான் முதலில் முடிவு செய்தோம். இருந்தும் வெட்டுமுன், இரவு பகலாக இந்த மரத்தில், சுற்றுப்புறத்தில் என்ன நிகழ்கிறது என்று ஆராய்ந்தோம். வயதான பெரிய அந்த மரத்தின் பெருங்கிளைகளில் சிறிசும், பெரிசுமாய்ப் பொந்துகள் இருந்தன. அதில் உயிரோட்டம் தெரிந்தது. அதாவது, உச்சியில் ஒரு பொந்தில், ஒரு காட்டு ஆந்தை குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது. மேலிருந்த சிறிய பொந்துகளில் அணில்கள் வாசம் புரிந்தன. பகலெல்லாம் ஓடியாடி விளையாடின. மரத்தின் பெரிய அடிப்பகுதியிலும் ஆழமான பொந்துகள் மறைவாகக் காணப்பட்டன. அதில் சுண்டெலிகள் குடும்பத்தோடு வாழ்வது தெரிந்தது. இதுவன்றி, எண்ணற்ற எறும்புகள், பூச்சிகள் மரத்தின் சிறுபொந்துகளிலும் மரப்பட்டைகளுக்கு அடியிலும் ஊர்ந்துகொண்டிருந்தன. உயிரற்ற நிலையிலும் இந்தப் பெரிய மரம் பலவிதமான உயிர்களுக்கு வாழ்வாதாரமாக, வாசஸ்தலமாக இருந்துவருவதை அறிந்தோம். இதனை வெட்டி அழிப்பது, அகற்றுவது இயற்கையின் விதிமுறைகளுக்கு, இயற்கைச் சமநிலைக்கு (natural balance) விரோதமான செயல் என்ற முடிவுக்கு வந்தோம். இந்தப்பட்ட மரம் அப்படியே நின்று மற்ற உயிர்களைப் பாதுகாக்கட்டும் என விட்டுவிட்டோம். பட்டமரமும் பார்க்க அழகாய்த்தானே இருக்கிறது!` என்றார் அந்த அமெரிக்க வனத்துறை அதிகாரி. அமெரிக்கர்கள் தங்கள் இயற்கை வளங்களை எப்படிப் பராமரித்துப் பாதுகாக்கிறார்கள் பார்த்தீர்களா?
மதிய உணவுக்கு முன்வரும் வெஜ் சூப் வந்தது. ராஜதானி எக்ஸ்பிரஸில் அன்று என்னவோ அந்த சூப் பிரமாதமாக இருந்தது ! பேச்சுவாக்கில், நாக்பூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் organic farming முறையைத் தீவிரமாய்ப் பின்பற்றி விவசாயம் செய்துவரும் ஷர்மாஜி என்கிற விவசாயியைப்பற்றிச் சொன்னார். அவர் தன் வயல்களில் செயற்கை உரம் உபயோகிப்பதில்லை. ரசாயன மருந்து/உரம் போன்றவை அவரது வயல்பக்கம் அண்டமுடியாது. பாரம்பரிய, இயற்கை முறை விவசாயம் மட்டுமே கடைப்பிடிக்கிறார். ஆரம்பத்தில் கேலி செய்தவர்கள் இப்போது அரண்டுபோய் நிற்கின்றனர். ஏன்? அவரது விவசாயம் லாபத்துக்கு மேல் லாபம் ஈட்டியதால். மேலும் அதிக பகுதிகளுக்கு விவசாயத்தை விஸ்தரித்துள்ளார். மொத்தம் 26 ஆட்கள், ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்து அவருக்கு இந்த வயல்களில் சேவகம் செய்கின்றனர். கடுமையான உழைப்பாளிகள். நேர்மையானவர்கள். வருட லாபம் 11-12 லட்ச ரூபாய் வருகிறது. 3 லட்ச ரூபாயை மட்டும் தன் குடும்பம், பிள்ளைகளின் படிப்பு என்று செலவுக்கு எடுத்துக்கொள்கிறார் ஷர்மாஜி. மிச்சமிருக்கும் 8-9 லட்ச ரூபாயை தன் 26 தொழிலாளர் குடும்பங்களுக்குச் செலவு செய்கிறார். அவர்களின் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவைக்கிறார். `பாரத் தர்ஷன்` (இந்தியதேசத்தைப் பார்த்தல்) என்று வருஷத்திற்கு ஒருமுறை தன் தொழிலாளர்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, இந்திய நாடு எப்பேர்ப்பட்ட பாரம்பர்யம் கொண்டது என்பதை அவர்களுக்குப் புரியுமாறு செய்கிறார். பத்து மாதம் அயராது உழைத்தவர்களுக்கு ஒருமாதம் ஆனந்தப் பயணம். இளைப்பாறல். எப்படி இருக்கு நம்ம ஷர்மாஜியின் சேவை? நாட்டையே சுருட்டிக் கூறுபோட்டுத் தன் பரம்பரைக்குச் சொத்து சேர்க்கும், போலி சமத்துவம் பேசி ஜனங்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், இந்த விவசாயியின் கால்தூசிக்குச் சமமாவார்களா?
சில சமயங்களில், நெடுஞ்சாலை போடுவது, பாலங்கள் கட்டுவது போன்ற …(தொடரும்)