இந்தியாவின் கிரிக்கெட் வெற்றி – முனைப்பும் உழைப்பும்

இந்தியா, கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 24-8-15-ஆம் தேதியன்று, 278 ரன் வித்தியாசத்தில், ஸ்ரீலங்காவை வீழ்த்தித் தொடரை சமன் செய்தது. முதல் டெஸ்ட்டையும் இந்தியா வென்றிருக்கவேண்டும். ஆனால் முதல் மூன்று நாட்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, 4-ஆவது, 5-ஆவது நாட்களில் தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஸ்ரீலங்காவின் தினேஷ் சண்டிமாலின் (Dinesh Chandimal) புத்திசாலித்தனமான பேட்டிங், கடைசி நாள் விளையாட்டில் இந்திய பேட்ஸ்மன்களின் மோசமான ஆட்டம் – போன்றவை, இந்தியாவின் கைப்பிடியிலிருந்த மேட்ச்சை ஸ்ரீலங்காவிற்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது. அந்த அதிர்ச்சித் தோல்வியிலிருந்து விரைவிலேயே விடுபட்டு, இரண்டாவது டெஸ்ட்டை முனைப்போடு இந்திய அணி ஆடி வெற்றி கண்டதற்கு, கேப்டன் கோஹ்லியின் ஆக்ரோஷமான முன்னெடுப்பு நடவடிக்கைகள், வியூகங்களே முக்கியக் காரணம்.

`அதிகபட்ச ரன்கள், 20 விக்கெட்டுகள், வெற்றியை நோக்கிய அதிரடி முன்னேற்றம்` என்கிற விராட் கோஹ்லியின் எளிதான, ப்ராக்டிக்கலான கிரிக்கெட் சித்தாந்தத்தின் விளைவு இந்த வெற்றி. இத்தகைய கொள்கையை அவர் கொண்டிருப்பதோடு, தன் அணியினரையும் அதை நம்பவைத்து, அதற்காக அவர்களைக் கடுமையாக உழைக்கும்படிச் செய்வதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம்.

சர்வதேச அளவில் சிறப்புமிகு ஆட்டக்காரர்களில் ஒருவரும், ஸ்ரீலங்காவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மனும் ஆன குமார் சங்கக்காரா(37), இந்த டெஸ்ட் மேட்ச்சுடன் தன் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டார். அவருக்கான `வழியனுப்பு டெஸ்ட்`(Farewell Test)-ஐப் பார்க்க, விடைதந்து கௌரவிக்க, ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுடன, ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கொழும்பு பி.சரவணமுத்து ஸ்டேடியத்தில் இருந்தனர். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மேட்ச்சில், ஸ்ரீலங்கா இந்தியாவிடம் பரிதாபமாகத் தோற்றது ஸ்ரீலங்கர்களுக்குப் பெரும் அதிர்ச்சி தந்திருக்கும். என்ன செய்வது? கிரிக்கெட் எந்த ஒரு அணிக்கும், எந்த நேரத்திலும் திடீர் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டு என்பது தெரிந்ததுதானே !

இந்த வெற்றிக்கு இந்திய அணியின் கூட்டுமுயற்சி காரணம் எனினும் அஷ்வின், மிஷ்ரா ஆகிய ஸ்பின்னர்களின் பங்களிப்பு சிறப்பானது. இருவரும் 14 ஸ்ரீலங்கா விக்கெட்டுகளைக் கபளீகரம் செய்தார்கள். துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராஹுல், முரளி விஜய்யின் பங்களிப்பும் பாராட்டத் தகுந்தது. ராஹுல் முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக சதம்(108) அடிக்க, முரளி விஜய் இரண்டாவது இன்னிங்ஸில் 82 அருமையான ரன்களை எடுத்து நல்ல துவக்கம் தந்தார். அஜின்க்யா ரஹானே பொறுப்பாக ஆடி, தன் பங்குக்கு ஒரு சதம் சேர்த்துக்கொண்டார்(126). கோஹ்லி, ரோஹித் ஷர்மா, சாஹா ஆகியோரின் ஆட்டமும் இந்திய அணிக்கு `ப்ளஸ்`. இந்திய ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த முள்முனைப் போட்டியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்களுக்குத் துணையாக மறுமுனையில் நல்ல கட்டுப்பாட்டுடன் பந்து வீசினார்கள்.

வெற்றி அணியின் இரண்டு பேர், கடைசி போட்டியில் காயம் காரணமாக ஆடமாட்டார்கள். அவர்கள்: துவக்க வீரர் முரளி விஜய், விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹா. கர்னாடகாவின் கருண் நாயரும், மத்தியப்பிரதேசத்தின் நமன் ஓஜாவும் இவர்களுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கேப்டன் கோஹ்லி பேசியிருப்பதைக் கவனிக்கையில், செத்தேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) மூன்றாவது டெஸ்ட்டில், துவக்க ஆட்டக்காரராக இறங்கலாம் எனத் தெரிகிறது. சாஹாவுக்கு பதில், நமன் ஓஜா (Naman Oja) விக்கெட் கீப்பராகச் செயல்படுவார்.

கோஹ்லி & கம்பெனி அடுத்த மேட்சிலும், கிரிக்கெட் வியூகத்துடன், சிறந்த உழைப்பு, வெற்றிக்கான முனைப்பு காட்டினால், ஸ்ரீலங்காவை லங்க மண்ணிலேயே வீழ்த்தி, டெஸ்ட் தொடரை வெற்றிகொண்ட பெருமையைத் தட்டிச் செல்லலாம். கேப்டன் கோஹ்லிக்கு இருக்கிறதா அந்த யோகம்? இன்னும் இரண்டே நாட்கள்தான். புதிய காட்சிகளுக்குத் தயாராகுங்கள்!

**

தேன் கொடுத்த தேவா ! – 2

(தொடர்ச்சி)

நீண்டு வளைந்த காட்கோப்பர் சாலையில் நடந்தேன். தேடிவந்த கோவில், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைதியாய் நின்றிருந்தது. எதிர்பார்த்ததைவிடப் பெரிய கோவில். வாசலில் செக்யூரிட்டி. காலம் அப்படி! முகப்பில், வலது, இடது பக்கங்களில் முறையே, ஆஞ்சனேயர், வினாயகரின் சிறிய சன்னிதிகள். பிரதான கோவிலின் சன்னிதிகளுக்குப் படியேறி உயரச் செல்லவேண்டியிருக்கிறது. மூன்றாவது தளத்தில் முருகப் பெருமான். வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே இடதுபுறத்தில் அண்ணன் வினாயகர். எதிர் வலதுபுறத்தில் சாஸ்தாவின் சன்னிதி. என்னடா, எல்லாம் சிவமயமாக இருக்கிறதே என்று விஷ்ணு பக்தர்கள் கவலை கொள்ளவேண்டியதில்லை! முருகப்பெருமானுக்கு வலதுபுறமாக நின்று அருள்பாலிக்கிறார் அழகான குருவாயூரப்பன். முருகனின் சன்னிதியைச் சுற்றிவருகையில், கந்தனுக்கு இடதுபுறம் நின்றவாறு அருள்பாலிக்கும் அன்னை துர்கா தேவியின் சன்னிதி. முருகன் சன்னிதிக்குப் பின்புறம் நீண்ட ஹால் போன்ற வெளி இருக்கிறது. அங்கே கதா காலட்சேபம் போன்றவை நடக்கின்றன.

அழகாகக் கட்டப்பட்ட கோவில். சன்னிதிகளுக்குமேலே நல்ல உயரத்தில் தகரத் தகட்டினால் கூரை. நல்ல காற்றோட்டமாக உள்ளது. கூட்டமிருந்தாலும் வியர்வை, இறுக்கம் போன்ற அவஸ்தைகளுக்கு வாய்ப்பில்லாது யோசித்துக் கட்டியிருக்கிறார்கள். கோவில் அதிசுத்தம். அர்ச்சகர்களும் அவர்களின் உதவியாளர்களும் ஒரே சுறுசுறுப்பு.

முதல் நாள் சென்றிருந்தபோது, முதலில் முருகன் சன்னிதி முன் வந்து நின்றேன். திரை போட்டிருந்தார்கள். மற்ற சன்னிதிகளுக்குச் சென்று தெய்வங்களை வழிபட்டேன். துர்கா தேவியின் சன்னிதியில் அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது. பெண்களின் சிறிய கூட்டம் ஒன்று பக்திப் பரவசமாக துர்கை அம்மனைப் பார்த்தவாறு நின்றிருந்தது. ஒரு மத்திமவயதுப் பெண்மணி துர்கையின்மீது பாடலொன்றை அழகாக அனுபவித்துப் பாடினார். அடுத்து, அன்னைக்கு எதிரே உள்ள சன்னிதியில் பிள்ளையாருக்கு அர்ச்சனை, தீபாராதனை. திடீரென்று ஆண்கள் கூட்டம். எங்கிருந்து இவ்வளவு பேர் முளைத்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அர்ச்சனை முடிந்து முருகனின் முன் வந்து நின்றால், இன்னும் தொங்கிக்கொண்டிருந்தது திரை. கோவில் பூஜைகளுக்கு உதவியாக, திறமையாக ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு பெரியவரை (கோவில் நிர்வாக முக்கியப் புள்ளியோ?) நெருங்கினேன். தயக்கத்துடன் முருகனின் சன்னிதியைக் காண்பித்துக் கேட்டேன்: ”திரை விலக்க நேரமாகுமோ?” அவர் ”ஆமாம். கொஞ்ச நேரமாகும். நீங்க தேன் வாங்கிட்டீங்களா?” என்று என்னைக் கேட்டார். தேன்? நம் காதில் சரியாகத்தான் விழுந்ததா? குழப்பமான தயக்கத்துடன் “இல்லையே!’’ என்றேன். உடனே போய் ஒரு சிறு வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து வந்தார். முருகனின் சன்னிதி முன் பவ்யமாய் இடக்கைமேல் வலக்கை வைத்துக் குவித்து பிரசாதத்திற்காக நான் ஏந்தி நிற்க, ஒரு சிறு கரண்டியினால் உள்ளங்கைக் குழியில் தேன் விட்டார் அந்தப் பெரியவர். நான் அசந்துபோனேன். பெருமாள் சன்னிதியில் தீர்த்தம். மற்ற சன்னிதிகளில் குங்குமம், வீபூதி, பிரசாதம். முருகா! இங்கே உன் சன்னிதியிலோ தேன்! காத்திருக்கும் பக்தனுக்கு அமுதம்போல் தேன் தருகிறாய். தேன்கொடுத்த தேவனே! உன்மீது மேலும் பக்தியாகிக் கரைந்துபோவதைத் தவிர அடியேன் வேறு என்ன பெரிதாகச் செய்துவிடமுடியும்?

கொஞ்சநேரத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று மேலும் பக்தர்கள் வந்து சேர்ந்தார்கள். பெரும்பாலானோர் தமிழர்கள். ஆவலோடு முருகனின் சன்னிதியை நோக்கி நின்றார்கள். முருகக் கடவுளும் மனம் இளகினார். திரையை விலக்கி, திவ்யமாய் தன் இரு மனைவியருடன் காட்சி தந்தார். தீபாராதனையின் தங்கஒளியில் தெய்வமுகங்கள் ஜொலிக்க, பக்தர்கள் பிரகாசமானார்கள். கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். குருக்களின் கையிலிருந்த தீபத்தட்டில், பொன்னிற ஒளிச்சுடர் ஒயிலாக நடனமாடியது. பக்தர்கள் மெல்ல அதன் மேல் வருடி, கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். வீபூதியை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டார்கள். அருகில் நின்றுகொண்டிருந்த இளந்தமிழர் ஒருவர், முருகனின் மீது பக்திப்பாடல் ஒன்றை மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தார். எதிரே உள்ள ஐயப்பன் சன்னிதியில் பக்தர்கள், உடைத்த தேங்காய் மூடியில் நெய்யிட்டுத் திரிபோட்டு ஏற்றினார்கள். ஏந்திய தீபத்துடன் சாஸ்தாவின் சன்னிதியைச் சுற்றிவந்தார்கள்.

சன்னிதிகளைச் சுற்றிவந்து வணங்கிவிட்டுக் கீழிறங்கினேன். ஒவ்வொரு தளத்திலும் படிகள் அமைக்கப்பட்டவிதம் மனதை ஈர்த்தது. செங்குத்தாக இருந்து முழங்காலைச் சோதிக்காமல், படிகள் 45 டிகிரிக்கோணத்தில் அமைந்து, பக்தர்கள் சோராமல் ஏறிச்செல்லுமாறு அமைக்கப்பட்டிருந்தன. கோவில் கட்டடங்களை ஆழ்ந்து யோசித்துத் திட்டமிட்டவர்களும், நன்றாகப் பார்த்துப் பார்த்துக் கட்டியவர்களும், உழைப்பளித்தவர்களும் சிறப்பான இறைசேவை செய்திருக்கிறார்கள்.

இறங்கிவந்து நிதானமாக கீழ்தளத்தில் நின்று பார்க்கும்போதுதான், நடுவில் வீற்றிருந்து ஆசி வழங்கும் அகஸ்திய முனிவர் தெரிந்தார். முதலில் கோவிலுக்குள் போகும்போது, அவசரத்தில் அவரைப் பார்க்காது இடப்புறப் படிகளில் ஏறி மேலே போய்விட்டேன் என்பது புரிந்தது. முனிவர் பெருமானே, முன்பே வணங்காது முருகனிடம் ஓடிவிட்டேன். இப்போது வணங்குகிறேன்.

கீழ்தளத்து நோட்டீஸ் போர்டில் அடுத்த நாள் காலை 9 மணிக்கு முருகன் சன்னிதியில் ருத்ர மந்திரம், பூஜை என இருந்தது. காலையில் முன்னரே வந்து, முருகனுக்கான ருத்ர பூஜையில், காட்கோப்பர் பக்தர்களுடன் கலந்துகொண்டேன். பெரியவர்களுடன் சேர்ந்து இளைஞர்களில் சிலரும் தெளிவான உச்சரிப்பில் ருத்ரம் சொன்னது சந்தோஷமாக இருந்தது. IT, Communications-என்று தொழில்நுட்பம் கோலோச்சும், கால் தரையில் படாது பரபரக்கும் இந்தக் காலத்தில், இளைஞர்களில் சிலரேனும், இப்படி சிரத்தையாக ருத்ரம் போன்ற ஒப்பற்ற மந்திரங்களிலும் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. காலம் இன்னும் அப்படிக் கெட்டுப்போய்விடவில்லை என்ற ஆசுவாசத்தை அளிக்கிறது.

கார்த்திகேயனின் சன்னிதியில் ருத்ரபூஜைக்குப்பின், அனைவருக்கும் தேன் பிரசாதமாகக் கிடைத்தது. தேவாதிதேவனே ! உன்னருளால்தான் வாய்த்தது இந்தத் தேனான அனுபவம்.

**

தேன் கொடுத்த தேவா! -1

பாம்பேக்கு, அதாவது மும்பைக்குப் புதுசு. ஏற்கனவே பலமுறை அலுவலக நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்கையில், மும்பையை ’ட்ரான்சிட்’ செய்திருக்கிறேன். ஏர்ப்போர்ட்டோடு ஓடிவிடுவது வழக்கம். உள்ளே நுழைந்து பார்த்ததில்லை.

இப்போது வந்தது அந்த வாய்ப்பு. மும்பையின் upmarket locality-களில் ஒன்றான பவையில்(Powai) தங்கியிருக்க நேர்ந்தது. அருகில் ஏற்கனவே கேள்விப்பட்ட காட்கோப்பர்(Ghatkopar). கொஞ்சம் தமிழர்களும் அங்கே வசிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். போயிருந்தேன். என்ன வேலை? சுற்றுவதும், சுற்றுமுற்றும் பார்ப்பதும்தான் நமக்கு வேலை. மும்பையில் மழை பிரசித்தி பெற்றது போலிருக்கிறது. எப்போது வரும்? போகும்? தெரியாது. முன்னறிவிப்பு இல்லாமல் முன்னாலே வந்து பொழியும். முதுகுப் பக்கமிருந்தும் திடீரெனப் படபடக்கும்! (கண்ணதாசன் ஒரு பாடலில்: ”மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழைபோல், சொல்லாமல், கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே !”)

அக்கம்பக்கத்தில் ரவுண்டடித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தெருவில் ‘கிரி’ ஸ்டோர் தென்பட்டது. ஆன்மிகப் புத்தகங்கள், டிவிடி-க்கள், பூஜைப்பொருட்களுக்குப் பேர்போன தமிழ்க்கடை. நுழைந்து புத்தக வரிசைக்குச் சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். அருகில் வந்து ஒருவர், “என்ன சார் வேண்டும் ?” என்றார். “என்ன இருக்கிறது என்று கொஞ்சம் பார்க்கிறேன்; பிறகு சொல்கிறேன்” என்று அவரை அவசரமாகத் தவிர்த்தேன்.
வழக்கமாக அத்தகைய கடையில் எதிர்பார்க்கும் புத்தகங்கள். ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, திருவாசகம், ஹிந்துமத தெய்வங்களைப் பூஜிப்பதற்கான மந்திரங்கள், ஸ்லோகங்கள்-தமிழ் உரையுடன் புத்தகவடிவில் வரிசையாக நின்றன. இடையே இந்திரா சௌந்திரராஜன், பாலகுமாரன் எழுதிய புத்தகங்கள். டெல்லியில் உள்ள கிரி ஸ்டோரிலும் இவர்கள் காட்சி தந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அங்கே ஒரு மூலையில் பார்த்த சுஜாதாவின் சில குறுநாவல்கள். இவர் எங்கே இங்கே வந்தார்? அவற்றினிடையே, அவர் கல்கியில் ஆழ்வார்களைப்பற்றித் தொடராக எழுதி, பின் புத்தகமாக வெளிவந்த ‘வாரம் ஒரு பாசுரம்’ புத்தகமும் இருந்தது. சற்றே ஆர்வம் அதிகமாக, அலசினேன். ஆதிசங்கரரின் அபூர்வமான ஸ்லோகங்களில் சில, ஒரு சிறு புத்தகமாக வடிவமேற்று, மூலையில் உட்கார்ந்திருந்தது. சுஜாதாவையும், சங்கரரையும் தூக்கிக்கொண்டேன்.

கிரி ஸ்டோரில் பணிபுரிபவர்களில் ஒருவரிடம் கேட்டேன்: ”இங்கே பக்கத்தில தமிழ்க்கோவில் ஏதும் இருக்கா?” அவர் சொன்னார்: ”நேரே போங்க. ஒரு மேம்பாலம் வரும். அதனடியில் ’சப்வே’-யில போயி, எதிர்த்திசையில பத்து நிமிடம் நடந்தா, ஒரு முருகன் கோவில் வரும்!” அவருக்கு நன்றி கூறிவிட்டு நடந்தேன். அந்த மேம்பாலம் விரைவிலேயே கண்ணில் பட்டது. ஆனால், அதன்முன், மும்பை போலீஸ்காரர்கள் சிலர் வரிசையாக நின்றிருந்தனர். என்னடா இது.. சகுனம் சரியில்ல போலிருக்கே! ஏதாவது பிரச்னையா இங்கே? ஏன் நமக்கு வந்த இடத்தில் வம்பு? நான் வந்த சாலை நேராகச் சென்றாலும், இடதுபுறமும் கிளையாவேன் எனக் காட்டியது. போலீஸாரைத் தவிர்த்து, முகத்தில் சலனம் காட்டாது, இடது புறம் திரும்பினேன். எல்லாம் தெரிந்தவன்போலக் காட்டிக்கொண்டு, தெரியாத பிரதேசத்தில் எதிர்வரும் கட்டடங்களைப் பார்த்துக்கொண்டு நடந்தேன். கொஞ்சம் சுற்றி நடந்து, தங்குமிடம் வந்தேன். மூடு அவுட். சே! சாமி கும்பிடுவதும் அவ்வளவு எளிதல்ல போல, இந்த நாட்ல!

அடுத்த நாள். அந்தக் கோவில் ஞாபகம் வந்தது. என்ன இது? பக்கத்தில் கோவில் இருந்தும் போகாட்டி எப்படி? மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல் நடக்க ஆரம்பித்தேன். அந்தப் பாலத்தை நெருங்குகையில், தூரத்திலேயே தெரிந்தன காக்கிச்சட்டைகள்! இன்னிக்குமா? இந்த ஆளுங்களுக்கு இங்கயே நிரந்தர டூட்டி போட்டுட்டான்களா? எவனாவது வி.ஐ.பி. குடியிருக்கானா இந்தப்பக்கத்தில! இந்த முறை நான் திரும்புவதாக இல்லை. அந்த முருகன் நம்மப்பத்தி என்ன நெனச்சுக்குவான்? இந்தப் போலீசையே கேட்டுருவோம். கோவில் எங்க இருக்குன்னு!. துணிந்து அணுகினேன். எதிரில் சாலையை மறித்துக்கொண்டு நின்றிருந்த ஐந்தாறு போலீஸ்காரர்களில் ஒருவர் அதிகாரி போல் தோன்றியது. செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்தில் நின்றிருந்த மராட்டி கான்ஸ்டபிளிடம் மெல்ல ஹிந்தியில் கேட்டேன். ‘இந்தப்பக்கம் ஒரு மதராஸிக் கோவில் இருக்காமே? எங்கன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?’ அவர் என்னிடம் ‘கொஞ்சம் பொறுங்க.. (சீனியரை காண்பித்து) ‘அவரு ஃபோனில இருக்காரு! ‘ என்றார். அட, முருகா! ஒனக்குத் தெரியாதா? ஒங்க சீனியரத்தான் கேட்கணுமா! குழம்பியவாறு அவர் அருகில் நின்றேன். ஃபோன் கால் முடிந்தவுடன் கான்ஸ்டபிள் அவரிடம் கேட்க, சீனியர் போலீஸ் (டெல்லி போலீசைப்போல் சிடுசிடுக்காமல்), என்னிடம் நிதானமாகப் பேசினார். கோவிலுக்கு எப்படிப் போகவேண்டும் என வழியும் சரியாகச் சொன்னார். போவதற்கு வழியும் விட்டார். ஆஹா! இதுவல்லவா போலீஸ்! எல்லாம் அந்த முருகன் செயல்!
(தொடரும்)

சுதந்திரதினக் காலையில்..

சுதந்திர தினத்தன்றுதான் நமது நாட்டினருக்கு திடீர் தேசபக்தி தலைகாட்டும். நமது டிவி சேனல்களிலோ அது பத்திக்கும்.

முதல் முறையாக சுதந்திர தினத்தன்று டெல்லியிலோ, வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்தியர்களுடன் சேர்ந்து ஏற்றப்பட்ட தேசியக்கொடியை கண்ணுயர்த்திப் பார்த்து பெருமையோடு நில்லாமல், பம்பாயில் இருக்க நேர்ந்தது. எண்ணற்ற இந்தியர்களைப்போல இன்று காலையில், வீட்டின் வரவேற்பறையில் காஃபி குடித்துக்கொண்டு டி.வி.யில் பார்த்தேன் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை.

நமது டிவி-வாலாக்கள் திடீரென்று சுதந்திரதின அதிகாலையில், பழைய சிடிக்களை எடுத்துத் தூசிதட்டி, தேசபக்திப்பாடல்களை ரசிகர்களுக்குப் போட்டுக் காண்பித்துப் பரவசம் கொள்வார்கள். ஏதோ அவர்களால் முடிந்த நல்ல காரியம்! ஏதேதோ பழைய பாலிவுட், தமிழ் சினிமாக்களிலிருந்து இந்திய தேசத்தின் பெருமையை நினைவுக்குக்கொண்டுவர முயலும் பாடல்கள். சில பாடல்களைக் கேட்டாலோ, மனம் இன்றும் ஒரு சிலிர்ப்பு கொள்கிறது. அப்படி ஒரு மொழி, உணர்ச்சிப்பீறிடல், மனதை ஆடவைக்கும் இசை.

அந்தக்கால பாலிவுட் ஹீரோக்க்களில் ஒருவரான மனோஜ்குமார் படப்பாடல்கள் பொதுவாக தேசிய நாட்களில்(National Days) டிவி சேனல்களில் கேட்கும். அவர் என்னவோ, மற்ற படங்களையெல்லாம் விட்டுவிட்டு, தேசத்தைப் பேசும் படங்களில் நிறைய நடித்துள்ளார். அவருடைய படங்களில், அவர் பாடுவதாக வரும் ஒன்றிரண்டு பாடல்களாவது நாட்டின் பெருமை பேசும், நாட்டிற்காக உருகும். திலீப்குமார் போன்ற மற்ற நடிகர்களின் படங்களிலும் சிலசமயம் தேசபக்திப்பாடல்கள் வந்ததுண்டு.

அப்படி ஒரு பழைய படப்பாடலொன்றை ஹிந்தி சேனல் ஒன்றில் இன்று கேட்கையில் மனம் என்னவோ செய்தது. என்ன ஒரு மகா தேசம் இந்த தேசம். அதற்காகக் கடமையாற்றி வாழ்வை அர்ப்பணித்த எத்தனை, எத்தனை தியாகிகள், வீரர்கள், இன்னபிற துறைகளில் சிறப்புப் பணியாற்றிய தேசபக்தர்கள். யாரை நினைப்பது, என்ன சொல்வது?

தில் தியா ஹை
ஜான் பி தேங்கே
ஹே வத்தன்…
தேரேலியே…

என்று ஆரம்பித்து நம்மை தேசபக்தியில் கரைக்கிறது இந்தப் பாடல் (ஹிந்தி வார்த்தைகள் பழக்கமில்லாத தமிழ் நண்பர்கள்/நண்பிகளுக்கு சிறு உச்சரிப்பு உதவி: தில்: Dhil, தியா: Dhiyaa, பி :Bhi, தேங்கே: Dhenge, தேரேலியே: Thereliye. இதில் காணப்படும் ‘வத்தன்’(Wathan) என்கிற ஹிந்திச்சொல் ’நிலம்’, ’தாய்நாடு’ என்கிற பொருட்களில் வலம் வரும்.

இந்த அழகான, எளிதான, ஆனால் உணர்ச்சிமிகு பாடலின் ஆரம்ப வரிகளை, வார்த்தைக்கு வார்த்தைப் பொருள் சொல்கிறேன் என்று அதன் மொழிநயத்தைக் கொலைசெய்யாமல், கொஞ்சம் கவிநயத்தோடு (without losing the spirit of the song) மொழிபெயர்த்தால், நான் இப்படித் தருவேன்:

மனதை இழந்துவிட்டேன்
உயிரையும் உடனே
கொடுத்துவிடுவேன்
என் அருமைத் தாய்நாடே
உனக்காகவென்றே…

மேற்சொன்னவாறு ஆரம்பிக்கும் இந்தப் பாடல், பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலிப்குமார், நடிகை நூத்தன் ஆகியோருடன் ஸ்ரீதேவியும் இணைந்த 1986-ல் வெளியான ’கர்மா’ என்கிற ஹிந்திப்படத்தில் வந்தது. தமிழில் கண்ணதாசனைப்போல ஹிந்திப் படங்களுக்கென, காலந்தாண்டி மனதில் ரீங்காரமிடும் பிரமாதமான பாடல்களை எழுதிய கவிஞர் ஆனந்த் பக்ஷி (Anand Bakshi). அவர் எழுதி, கவிதா கிருஷ்ணமூர்த்தி, முகமது அஸீஸ்-உடன் இணைந்து பாடினார் இந்தப்பாடலை. கவிதா கிருஷ்ணமூர்த்தியின் இனிமையான குரலில்தான் இந்தப்பாடலின் ஆரம்பவரிகள் உருக்கமாய் வருகின்றன. இசை தந்தவர்கள் : லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் (இரட்டையர்). இந்தப் பாடல் பிரமாதமாக ஹிட்டாகி ஹிந்தித் திரையுலகை ஒரு கலக்குக் கலக்கியது. திரைப்பட தேசபக்திப்பாடல்களில் சிறந்த ஒன்றாக ரசிகர்களின் மனதை வென்று நிற்கிறது. ஆகஸ்டு 15, ஜனவரி 26-ஆம் தேதிகளில் நமது வீடுகளில் நுழைந்து, நம்மை எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு, கொஞ்ச நிமிஷங்களுக்காகவாது நாட்டைப்பற்றி எண்ணவைக்கிறது.

**

அதுவும் இதுவும்

ஆறா சோகம் அவஸ்தையெலாம்
ஆடும் மனதை அலைக்கழிக்கும்போதிலும்
ஆட்டோவும் ட்ரக்கும் இன்னபிறவும்
காதைக் கிழித்துக் கதறும் வேளையிலும்
கதவைச் சாத்திக்கொண்டு
கவிதை எழுதப் பார்ப்பதற்கு
கட்டாயம் ஒரு
’இது’ வேண்டும்

**