டி-20 ஆசியகோப்பை: பாகிஸ்தானைக் கசக்கிப் பிழிந்த இந்தியா

பங்களாதேஷின் மீர்பூரில் நேற்று (27-2-2016) நடந்த ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. `இந்தியா-பாகிஸ்தான் க்ளாசிக்` என இரண்டு நாடுகளின் மீடியாவினால் வெகுவாக பில்டப் கொடுக்கப்பட்ட மேட்ச். உண்மையும் அதுதான். இந்த இரண்டு நாடுகளும், சர்வதேச போட்டிகளில் எப்போதாவதுதான் மோதுகின்றன. ஆதலால் இருதரப்பு கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சம். இவர்கள் மோதினால் களத்தில் அனல் பறக்கும். பறந்தது நேற்றும்.

Hottest match of the Asia Cup. மேட்ச் ஆரம்பிக்குமுன்பே இருதரப்பிலும் வீரவசனங்கள் வீசப்பட்டன. இந்திய பேட்டிங்கை திணறவைப்பதற்கென பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டினால் வடிவமைக்கப்பட்டது மீர்பூரின் க்ரீன்பிட்ச். ஆசியகோப்பையின் முதல் மேட்ச்சில் இந்தப் பிட்ச்சிலேயே, ரோஹித், பாண்ட்யாவின் அதிரடியால் இந்தியா 166 ரன்கள் விளாசியது. தாக்குப்பிடிக்க முடியாமல், தான் விரித்தவலையில் தானே சிக்கி உயிரைவிட்டது பங்களாதேஷ். அதே க்ரீன் பிட்ச் இன்றும் மிரட்டியது. பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சுக்குப் புகழ்பெற்ற டீம் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. வகாப் ரியாஸ், முகமது சமி, முகமது இர்ஃபான். கூடவே, சூதாட்டத்தில் சிக்கி, சில ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த முகமது ஆமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில். அவரது அதிவேகப்பந்துவீச்சு, கூர்மையானது, சவாலானது என்பதை இந்தியர்கள் அறிந்தே இருந்தார்கள். இந்தியாவை க்ரீன் பிட்ச்சில், வேகத்தினால் நொறுக்கத் திட்டமிட்டிருந்தது பாகிஸ்தான்.

டாஸை வென்ற தோனி, பாகிஸ்தானை முதல் பேட்டிங்குக்கு அனுப்பினார். பாகிஸ்தான் அசால்ட்டாக இறங்கியது. இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்படி? 35 வயதான ஆஷிஷ் நேஹ்ரா. கர்வம் மிகுந்த பாகிஸ்தானிகளுக்கு, அனுபவமில்லாத புதுக் கன்னுக்குட்டிகளாகத் தோன்றிய பும்ரா, பாண்ட்யா. பூ! இவ்வளவுதானா? இன்னிக்கு இந்தியாவை நொறுக்கிருவோம் என்கிற மிதப்பில் இருந்தனர் பாகிஸ்தானிகள். அவர்கள் ஆட்டத்தை துவக்கிய விதம் அதனைச் சொல்லிற்று. நேஹ்ரா முதல் விக்கெட்டை எளிதாக தூக்கியும், பாகிஸ்தான் ஸ்கோர் வேகமாக 20-ஐத் தாண்டியது. அந்த சமயத்தில், பாகிஸ்தான் அறிந்திராத ஜஸ்ப்ரித் பும்ராவின்(Jasprit Bumrah) பந்துவீச்சின் துல்லியம் பாகிஸ்தானின் மனதில் திகிலைக் கிளப்பியது. அவருடைய குழப்பும் ஆக்‌ஷன், வேகம், யார்க்கர் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தானின் வயிற்றைப் பிசைந்தது. 22-வது ரன்னில் இரண்டாவது பாகிஸ்தான் விக்கெட்டை பிடுங்கினார் பும்ரா. அவருடைய 3 ஓவர்களில், 2 ஓவர்களைப் பாகிஸ்தானிகளால் தொடக்கூட முடியவில்லை. மெய்டன் ஓவர்கள். சுழலுக்கு மீர்பூர் மைதானம் துணைபோகாது. எனினும் ஜடேஜா, யுவராஜ் சிங், அஷ்வின் இறக்கப்பட்டனர். ஜடேஜா ரன் கொடுப்பதில் கஞ்சன் ஆனார். 2 விக்கெட்டுகளையும் கைபற்றினார், பாகிஸ்தானின் நிலைமை மோசமாகியது. ஜடேஜா, கோஹ்லி இவர்களின் ஃபீல்டிங் மைதானத்தில் தூள் கிளப்பியது. குர்ரம் மன்சூரும், டி-20 ஸ்பெஷலிஸ்ட்டான பாக். கேப்டன் ஷஹீத் அஃப்ரிதியும்(Shahid Afridi) வேகமாக ரன்–அவுட்செய்யப்பட்டனர். மத்திய, கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யாவின்(Hardik Pandya) பந்துவீச்சு அபாரம். 3 விக்கெட்டுகளை சுருட்டி எறிந்தார். பாக். விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அகமது மட்டுமே சிறப்பாக ஆடி 25 ரன் சேர்த்தார். தட்டுத்தடுமாறி 83 ரன்னெடுத்து சுருண்டது; இந்தியாவை நினைத்து மருண்டது பாகிஸ்தான்.

84 என்கிற எளிதான இலக்குடன் ஆட வந்த இந்தியாவுக்கு அதிர்ச்சி, ஆமீரின் வடிவில் காத்திருந்தது. 147 கி.மீ வேகம், யார்க்கர், இன்-ஸ்விங்கர் என அனல் கக்கினார் ஆமீர். துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே இருவரையும் ரன் ஏதும் எடுக்கவிடாமல், முதல் ஓவரிலேயே வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன், ரெய்னா ஒரு முட்டாள்தனமான ஷாட்டை உயர அடித்து கேட்ச் கொடுத்து இந்தியாவின் தலைவலியை அதிகப்படுத்திவைத்தார். விராட் கோஹ்லியோடு சேரவந்தார் யுவராஜ் சிங். முகமது இர்ஃபான், முகமது ஆமீர் ஜோடியின் பிரமாத பந்துவீச்சு இருவரையும் தடுமாறவைத்தது. பாகிஸ்தானின் ஃபீல்டிங்கும் நன்றாக அமைந்துவிட, ரன்கள் வர சண்டித்தனம் செய்தது. பௌண்டரி, சிக்ஸர் எல்லாம் அடிக்கமுடியும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. ஆமீரின் துல்லியவேகம், ஷார்ட்-பிட்ச் பௌலிங்கினால் யுவராஜுக்கு மூச்சு போய் வந்தது. அவர் நின்று விளையாடினார் என்பதைவிட, நாட்டியமாடினார் என்று சொல்லலாம். ஆமீர், இர்ஃபான், ரியாஸ் இவர்களின் ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு குனிவதும், வளைவதும், நெளிவதுமாக பொழுதைப்போக்கினார் யுவராஜ். அடுத்த முனையில் வாய்ப்புக்காகக் காத்திருந்த கோஹ்லி, ஆமீரின் கடைசி ஓவர், ரியாஸின் ஆரம்ப ஓவர்களில் திடீரெனப் பட்டாசாய் வெடித்தார். பௌண்டரிகள் பறந்தன. அவருடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தும் க்ளாசிக் க்ரௌண்ட் ஷாட்டுகளால், சரிந்திருந்த இந்திய ரசிகர்கள் எழுந்து உட்கார்ந்தனர். மூவர்ணக்கொடிகள் மீண்டும் உயர்ந்தன; அசைந்தன.

49 ரன்களில் கோஹ்லி அவுட்டாகையில் வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டது.ஹர்தீக் பாண்ட்யா பூஜ்யத்தில் காலியாக, தோனி வந்தார். அடித்தார் பௌண்டரி. வெற்றி மேடையில் இந்தியா ஏறி நின்றது. விராட் கோஹ்லி ஆட்ட நாயகன்.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சில் தான் கில்லாடி என மீண்டும் நிரூபித்தது. எங்கள் பேட்டிங் இதற்கெல்லாம் சளைத்ததல்ல என்று நெஞ்சை நிமிர்த்தியது இந்தியா. விராட் கோஹ்லி குறிப்பிட்டதுபோல், உலகின் அருமையான வேகப்பந்துவீச்சாளர்களில் பாகிஸ்தானின் முகமது ஆமீர் ஒருவர் என்பதை நேற்றைய போட்டி காண்பித்தது. இந்திய புதுமுகங்களான பும்ராவும், பாண்ட்யாவும் ப்ரெஷர் மேட்ச்சுகளிலும் தங்களால் வெளுத்துவாங்கமுடியும் எனச் சாதித்துக் காட்டினர். இந்த டி-20 மேட்ச்சில் ஒரு விசித்திரம்: இரண்டு அணியிலிருந்தும் ஒரு சிக்ஸர்கூட வரவில்லை! இன்னுமொரு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் க்ளாசிக் பசித்திருந்த ரசிகர்களுக்கு அமோக விருந்தாக அமைந்து விட்டது.

**

டெல்லியின் குளிர்காலம்.. காய்கறி, பழங்களின் உத்சவம்

உலகமயமாதலின், பொருள்வயமாதலின் உன்னத விளைவினால், கடந்த 10-15 வருடங்களாக வேகமாக மாறிவருகிறது நகரின் வணிகத்தோற்றம். தலைநகர் டெல்லி காளான்களாய்ப் புறப்பட்டிருக்கும் ஷாப்பிங் மால்களால், அன்னிய ப்ராண்டுகளின் ஷோரூம்களால் மினுமினுக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் பேச வந்தது இதை அல்ல.

சராசரி ஜனங்கள் சாப்பிட்டு ஜீவிக்க அரிசி, கோதுமை, பருப்புவகைகளோடு காய்கறிகள், பழங்கள் வேண்டுமல்லவா? கோடைகாலத்தில் சிக்கல்கள் உண்டு. எனினும், குளிர்காலத்தில் நகரெங்கும் கிடைக்கின்றன செழுமையான, கண்ணைப்பறிக்கும் காய்கறிகள், பழங்கள். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும், சனி, செவ்வாய் அல்லது ஞாயிறு, புதன் என வாரத்தின் ஏதோ இரண்டு நாட்களில் போடப்படும் காய்கறிக்கடைகள் மத்தியதர வர்க்கத்தினருக்கு ஒரு வரப்பிரசாதம். போக்குவரத்து நெரிசல் அதிகமில்லாத ஆனால், பிரதான தெருவொன்றின் இருமருங்கிலும் பரப்பப்படுகின்றன மாலைநேரத்தில். காய்கறிகள், பழங்கள். தரையிலோ அல்லது தள்ளுவண்டியிலோ அவை காட்சியளிக்கும். பச்சைப்பசேல் என்று முட்டைக்கோசு, பாலக், பீன்ஸ், பாகற்காய், பச்சைப்பட்டாணி(காய்), சுரைக்காய், பறங்கி போன்றவை, வெள்ளை வெளேர் என்று உருண்டு திரண்டிருக்கும் காலிஃப்ளவர், முள்ளங்கி, செக்கச் செவேல் என்று நீள, நீளமாய்க் கேரட்டுகள். பளபளக்கும் மஞ்சளில் பெரிசுபெரிசாய் எலுமிச்சைப் பழங்கள். சாலையோரங்களில் வந்து இறங்கியிருக்கும் புத்தம்புது காய்கறிகளின் சிறு, சிறு குன்றுகள். மின்னும் வண்ணங்கள், சீன தேசத்து மலிவு எல்.இ.டி.(LED) விளக்குகளின் ஜொலிப்பில் மேலும் மெருகு பெறுகின்றன. ஒன்றும் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. சும்மாவாவது அந்தப் பக்கம் இரவில் ஒரு ரவுண்டு போய்வருவோம் என எண்ணத்தோன்றும். மாலை 6 மணிப்போல் ஆரம்பித்து, இரவு 11 மணி வரை செல்லும் இந்த வாராந்திர மார்க்கெட்டுகள். கூவிக்கூவி விற்கும் இளம் வியாபாரிகள்.

இப்போது தலைநகரில் ஜனங்கள், குறிப்பாக மத்தியவர்க்கத்தினர் ஒரேயடியாக diet-conscious-ஆக மாறிவிட்டார்கள். எதை சாப்பிடவேண்டும் என்பதைவிடவும், எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று ஓயாது உளறிக்கொட்டும் டிவி நிகழ்ச்சிகள்வேறு அவர்களின் மூளையை நன்றாக சலவை செய்துவைத்துள்ளன. கண்ணெதிரே மலிவு விளையில் காய்கறிகள். வாங்கத் தயங்கும், குழப்பங்கள் நிறைந்த மனம். இத்தகையோர் உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளிலிருந்து தூரச் செல்கிறார்கள். பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர், கீரை , காரட் போன்றவை இவர்கள் பயமின்றி வாங்க முனையும் காய்கறிகள்.

விலைவாசி எப்படி? ஒரு கிலோ ஃப்ரெஷ் பாலக் 10 ரூபாய். அதே விலையில் புத்தம்புது முட்டைக்கோசு. 15 ரூபாயில் செழிப்பாக மலர்ந்துள்ள காலிஃப்ளவர். பளிச்சென்று முள்ளங்கி (கிலோ 10 ரூ). 20 ரூபாய் கிலோ என பச்சைப்பட்டாணி மற்றும் சிவப்பு நிறக் கேரட். (தென்னிந்தியாவில் கிடைப்பது போன்ற மங்கிய ஆரஞ்சு நிறமல்ல. இங்கு கிடைப்பது ரத்தச்சிவப்பில் புத்தம்புதிய , ஜூஸியான கேரட். இந்தவகை கேரட் வடநாட்டில் குளிர்கால ஸ்பெஷல் வரவு. கேரட் அல்வாவுக்குப் பிரமாதமாக இருக்கும்). உருண்டை, உருண்டையாக அழகிய முட்டைக்கோசு, காலிஃப்ளவர், பாலக், முள்ளங்கி வகைகள் டெல்லியின் யமுனா நதிதீரப் பகுதியின் விளைச்சல்கள்.

இங்கு கிடைக்கும் காய்கறிகளில், அருமையான உருளைக்கிழங்கு வகைகளும் உண்டு. சிறிய, பெரிய சைஸ்களில் ஜாதி உருளைக்கிழங்குகள். உத்திரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத்-இல் விளைந்து டெல்லி மார்க்கெட்டுகளைத் தேடி மூட்டை, மூட்டையாய் வந்து இறங்குபவை. கண்ணெதிரே நல்லதொரு பொருள் இருந்தும், விழிபிதுங்கப் பார்த்துக்கொண்டு, தொப்பையைத் தடவிக்கொண்டு, வாங்க பயப்படும் மத்தியவர்க்கம். என்னத்துக்கு பயம்? வெயிட் போட்டுருவாங்களாம்! ஆதலால் அதன் விலை மேலும் கீழே இறங்கிவிட்டிருக்கிறது. 10 ரூபாய்க்கு 2 ½ கிலோ –கண்ணைத் தேய்த்துக்கொள்ளவேண்டாம்; சரியாகத்தான் படிக்கிறீர்கள்- 10 ரூபாய்க்கு 2 ½ கிலோ உருளைக்கிழங்கு டெல்லியில்! கூவிக்கூவி விற்றும் ஆசையாக வாங்குபவர் வெகு சிலரே!

புதினா, கொத்தமல்லிக் கட்டுகளும் மார்க்கெட்டுகளில் கொட்டிக் கிடக்கின்றன. கிளிப்பச்சையில், கொத்துக்கொத்தாக, குட்டையாக விளையும் `பாலக்` எனப்படும் கீரைவகைதான் இங்கு பிரபலம். வட இந்தியாவில் இதைத் தனியாகவோ, உருளையுடன் சேர்த்து ஆலு-பாலக் என்றோ, பன்னீருடன் சேர்த்து பாலக்-பன்னீர் என்றோ வடநாட்டு கரம் மசாலா(gharam masala) போட்டு அருமையாகச் சமைப்பார்கள். சுடச்சுட சப்பாத்தியுடன் உள்ளே தள்ள சுவாரஸ்யமாக இருக்கும். நம்மூர் முளைக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரை வகைகளை இங்கே வாழும் தமிழர்களே கிட்டத்தட்ட மறந்துபோய்விட்டார்கள். அப்படியே எப்போதாவது கிடைத்தாலும் கொஞ்சம் விலை அதிகம் என்பதால் வாங்குவதில்லை. தென்னிந்தியா பக்கமே போயிராத வடநாட்டுக்காரர்களுக்கு, இப்படியெல்லாம்கூட கீரை வகைகள் நாட்டில் உண்டு என்பதும் தெரிய வாய்ப்பில்லை. பெரிய சைஸில் எலுமிச்சை பழங்கள், நெல்லிக்காய்களும் இந்த மார்க்கெட்டுகளில் கிடைக்கும். விலை அதிகம்தான் எனிலும் காரசாரமான ஊறுகாய்களுக்குப் பிரமாதமாக ஒத்துப்போகும் வகைகள்.

பழங்களில், ஆப்பிள் (கிலோ ரூ.60- ரூ;130), திராட்சை(பெரும்பாலும் பச்சைவகை), மாதுளம்பழம் (கிலோ ரூ.50-60), ச்சீக்கு எனப்படும் சப்போட்டா பழம் (கிலோ ரூ.40-50), நல்ல இனிப்புவகை வாழைப்பழங்கள் குளிர்காலத்தில் நிறையக் கிடைக்கின்றன. வட இந்தியர்கள் பொதுவாக பழங்களை – அவை சற்றே விலை அதிகமாக இருப்பினும்- வெகுவாக விரும்பி வாங்குவார்கள். பன்னீரும் நிறைய உணவில் சேர்த்துக்கொள்ளுவார்கள். தென்னிந்தியர்களுக்கு இந்த மாதிரி நல்ல பழக்கமெல்லாம் இல்லை. அவர்கள் எதையும் மினிமம்-ஆக வாங்கிக்கொண்டு வேகமாக வீடு திரும்பிவிடுவார்கள். வீட்டில் புள்ளைக்கு ஹோம்-ஒர்க் செய்யணும், தமிழ் சேனல்ல சினிமா, சீரியல், எத்தனை காரியமிருக்கு!

இப்போது நகரங்களில் அலையும், டிவி சேனல்களில் வந்து புலம்பும் விதவிதமான ஸ்பெஷலிஸ்ட்டுகள்- குறிப்பாக டையட்டீஷியன்கள் (dietitians), நியூட்ரிஷனிஸ்ட்டுகள்(nutritionists) ஆகியோர், நமது அப்பாவி ஜனங்களை, சாப்பாட்டு விஷயத்தில், இப்படிப் பேயாக ஆட்டிவைக்காமல் இருப்பது நல்லது. நாட்டின் ஆரோக்கியத்துக்கே மிகவும் நல்லது. இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விளையும், விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் போன்றவை விஷங்களல்ல. சத்தில்லா சக்கைகள் அல்ல. மாறாக, நோய்தீர்க்கும் அல்லது தடுக்கும், உடலுக்கு வலிவு சேர்க்கும், ஆரோக்கியம் கூட்டும் நல்ல விவசாய விளைபொருட்கள் அவை. ஏனெனில் நமது பூமி பொன்விளையும் புண்ணிய பூமி. இத்தகையவற்றை நமது மண்ணில் விளைவித்து, உண்டு களித்து, சீராகக் குடும்பம் நடத்தி, வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் நமது முன்னோர்கள். அவர்களது சந்ததிகள்தான் நாம். அவர்களுக்கு ஒத்துப்போன, நன்மை செய்த காய்கறிகளும், பழங்களும் நமக்கும் நன்மையே செய்யும். நல்லாரோக்கியம் தரும். நிச்சயமாக இந்தவிஷயத்தில், வெளிநாட்டு அறிவு நமக்குத் தேவையில்லை.
**

தொலைந்துபோன கடிதம்

தினமணி 25 ஜனவரி, 2016-இதழில் வெளியான கவிதை:

தொலைந்துபோன கடிதம்

தொலைந்துபோன கடிதமாய் வாழ்க்கை
துவண்டுபோய் நிற்பவனின் தீராத வேட்கை
நினைவுக்கடலின் ஓயாத பெரும் ஓசைகள்
நித்யமாய் அலைபாயும் அடங்காத ஆசைகள்
கைவிட்டு நழுவிய கண நேர வாய்ப்புகள்
காலம் செய்த தாங்கவொண்ணா ஏய்ப்புகள்
கலைந்து போன கனவு இழந்துபோன தூக்கம்
எஞ்சி இருக்கும் வாழ்வின் மாளாத ஏக்கம்

-ஏகாந்தன்

**

டி-20 கிரிக்கெட் : இந்தியாவின் அசுர வெற்றி

விசாகப்பட்டினம், காதலர் தினம் 2016. டி-20 கிரிக்கெட் மேளாவில் இந்தியா, ஸ்ரீலங்காவை சிதைத்துக் கடாசியது. தொடரை அலட்சியமாக வென்று, இந்திய கிரிக்கெட் காதலர்களின் கையில் தந்தது பூங்கொத்து !

என்ன மாதிரியான விளையாட்டு இது! நினைத்தாலே இனிக்கும் இந்தியர்களுக்கு. விசாகப்பட்டினத்தில், ராஞ்சியைப்போலவே எந்த ஒரு அணியும் ரன் எளிதாகக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிட்ச் அப்படித்தான் என்பது வல்லுனர்களின் கணிப்பு. ஆனால் நடந்தது என்ன? என்ன?

டாஸ் வென்ற இந்தியா, ஸ்ரீலங்காவை முதல் பேட்டிங் செய்யச் சொன்னது. ஸ்ரீலங்கா ஆடியதா? இல்லை, ஆடிப்போனது ! எதிர்பார்த்ததைப்போல் புதிய பந்தின் முதல் ஓவர் – ஆட்டத்தின் முதல் ஓவரை அஷ்வினுக்குத் தந்தார் தோனி. என்ன செய்தார் ஸ்பின் சிங்கம்? நான்கு ஓவர்கள். எட்டே ரன்கள். 4 விக்கெட்டுகள். ஸ்ரீலங்காவின் பேட்டிங் அரண்கள் எனக் கருதப்படும் தில்ஷன், கேப்டன் சண்டிமால் ஆகியவர்களோடு குணரத்ன, டிக்வெல்லாவும்(Niroshan Dickwella) சூறாவளிச் சுழலில் தூக்கி எறியப்பட்டனர். அவர்களோடு ஸ்ரீலங்காவின் சோகக் கதையும் அங்கேயே முடிந்தது எனலாம். அஷ்வின் ஸ்ரீலங்காவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அல்லது ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்கு அவருடைய பெயரே வயிற்றில் புளியைக் கரைத்திருக்கவேண்டும். அவருடைய அசுரத்தனமான சுழல்வீச்சு நேற்று அதைத்தான் சொன்னது. ஸ்ரீலங்கர்களின் சித்தம் கலங்கிவிட்டது. மற்ற இந்திய பௌலர்களான ரெய்னா, ஜடேஜா, நேஹ்ரா, பும்ரா ஆகியோர் ஸ்ரீலங்கா நிமிரமுடியாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்ரீலங்காவின் முதல் 5 பேட்ஸ்மன்களின் ஸ்கோர் இவ்வாறு: 1, 1, 8, 4, 4. ஷனகா 19 ரன்கள் எடுத்தார். 18 ஓவர்களில் 82 ரன்களில் ஆல்-அவுட். டி-20 போட்டிகளில் ஸ்ரீலங்காவின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர்.

83 எடுத்தால் மேட்ச் மற்றும் தொடர் வெற்றி. சிக்ஸர், பௌண்டரி என ஆரம்பித்த ரோஹித் ஷர்மா 13 ரன்களில் விழுந்தார். ஷிகர் தவணும், அஜின்க்யா ரஹானேயும் தங்கள் பொறுப்பினை உணர்ந்தனர். நல்ல காலம், குறைந்த இலக்குதானே என்று அடாவடி ஷாட் அடித்து விக்கெட்டுகளை இழக்கவில்லை. தவண் 46, ரஹானே 22 என அவுட்டாகமல் இருந்தனர். 9 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்ரீலங்காவைத் துவைத்துத் தொங்கப்போட்டது இந்தியா. தொடர் கைக்கு வந்தது. கூடவே, ஐசிசி டி-20 தரவரிசையின் முதல் இடத்தையும் தக்கவைத்துக்கொண்டது.

கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தத் தொடரில் தன் பௌலர்களைச் சிறப்பாகக் கையாண்டார். அவரது விக்கெட்-கீப்பிங் நன்றாக இருந்தது. ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை அஷ்வின் வென்றார். இந்தத் தொடரின் ஒரே இந்திய ஹீரோ அவர்தான். சந்தேகமில்லை. ஷிகர் தவண் தன் பேட்டிங் திறமையில் தேர்ந்திருப்பது தெரியவந்தது. ரோஹித் ஷர்மாவிடம் எதிர்பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது.

இந்தத் தொடரில் யுவராஜ் சிங் என்று ஒருவர் இந்தியாவுக்காக ஆடியதாக ஸ்கோர்-போர்டு சொல்கிறது. அவர் மைதானத்தில் என்னதான் செய்தார்?

**

டி-20: ராஞ்சியில் இந்தியா வெற்றிமுகம்

ராஞ்சி (ஜார்கண்ட்)-யில் நேற்று(12-2-16) நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், தோனியின் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, ஸ்ரீலங்கா இந்தியாவிடம் நொறுங்கியது !

ஆக்ரோஷமே, உன் பெயர்தான் இந்தியாவா!

புனேயின் க்ரீன் டாப் பிட்ச்சிற்கு நேர் எதிரானது, பந்து அதிகம் குதிக்காத ராஞ்சியின் ஸ்லோ பிட்ச். டாஸ் வென்ற ஸ்ரீலங்கா, இந்தியாவை முதல் பேட்டிங்கிற்காக இறங்கச் சொன்னது. ஏற்கனவே தலையில் அழுந்தக் குட்டுப்பட்டிருந்த இந்திய வீரர்கள், இம்முறை தங்களின் சுயரூபத்தைக் காண்பிக்க வந்திருந்தனர் போலும். துவக்க வீரர் ஷிகர் தவணின் ஆவேசத் தாக்குதலில் அது தெளிவானது. பூனேயில் ஸ்ரீலங்க பௌலிங் ஹீரோவான கசுன் ரஜிதா (Kasun Rajitha) குறிவைத்து நையப் புடைக்கப்பட்டார். இந்திய துவக்க ஆட்டக்காரர்களின் கோபத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஸ்ரீலங்க பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 10, 11 ரன்களை தாரை வார்த்தனர். 25 பந்துகளில் 7 பௌண்டரி, 2 சிக்ஸர் என அரைசதம் விளாசி இந்தியாவுக்கு செம துவக்கத்தைத் தந்தார் தவண். அடுத்த பக்கத்தில் ரோஹித் ஷர்மா 36 பந்துகளில் 43 ரன் என புழுதிபறக்கவிட்டார். 11 ஓவர்களில் இந்திய ஸ்கோர் 100-ஐத் தாண்டியிருந்தது. ரோஹித், ரஹானேவுக்குப் பின் வந்த சுரேஷ் ரெய்னா-ஹர்தீக் பாண்ட்யா(Hardik Pandya) ஜோடி கியரை மாற்றியது. வேகம் மேலும் எகிற, ராஞ்சி ரசிகர்களுக்கு போதை தலைக்கேறியது. அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அனாயாசமாக விளாசி, 12 பந்துகளில் 27 ரன் எடுத்து ஸ்ரீலங்காவை கிடுகிடுக்கவைத்தார் பாண்ட்யா. ரெய்னா 19 பந்துகளில் 30 ரன் (5 பவுண்டரிகள்). வேகத்தைத் துரத்திய இருவரும் வீழ்ந்தனர் அடுத்தடுத்த பந்துகளில். அடுத்து வந்த, பழைய ரெப்யுடேஷனில் ஓடும் வண்டியான யுவராஜ் சிங், ஒரு பந்து கூடத் தாங்கவில்லை. திசரா பெரேராவின் அருமையான ஹேட்ரிக்(hat-trick). இருந்தும் அது இந்திய ஸ்கோரை பாதிக்கவில்லை. தோனியும், ஜடேஜாவும் மீதமுள்ள பந்துகளை இங்கும் அங்குமாக ஓட்டி, இந்தியாவின் ஸ்கோரை 196-க்கு எடுத்துச் சென்றார்கள்.

ஸ்பின் தாண்டவம்

190-ஐத் தாண்டிய டி-20 இலக்கு, எந்த ஒரு அணிக்கும் சிம்ம சொப்பனம்தான். கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 10 ரன் அடித்தாகவேண்டும் வெற்றிக்கு. இந்தியர்களை முதலில் பேட்டிங்கில் இறக்கி வாங்கிக் கட்டிக்கொண்ட ஸ்ரீலங்கா, இப்போது வெகுவாக அரண்டுபோயிருந்தது தெரிந்தது. அவர்களின் அணியில் அனுபவமிக்க திலகரத்னே தில்ஷன் (Tilakaratne Dilshan) சேர்க்கப்பட்டிருந்தும் ஒரு புண்ணியமும் இல்லை. தில்ஷன் ஸ்பின் பௌலிங்கை மிக நன்றாக ஆடக்கூடியவர்தான். இருந்தும் ரிஸ்க் எடுத்தார் மகேந்திர சிங் தோனி. ஸ்பின்னர் அஷ்வினுக்கு, புதிய பந்துடன் முதல் ஓவர் பௌலிங்கைக் கொடுத்தார். தன் மேல் கேப்டன் வைத்த நம்பிக்கைக்கு, அஷ்வின் இரண்டாவது பந்திலேயே பதில் சொன்னார். அஷ்வினின் சாதுர்யமான லெக்-ப்ரேக் வித்தியாசமாக வந்து தரை இறங்கியது. அஷ்வினை நொறுக்க தில்ஷன் கோட்டுக்கு வெளியே எகிற, பந்து அவரை டபாய்க்க, பெயில்களை மின்னலெனப் பறக்கவைத்தார் தோனி. அடுத்த இரண்டு விக்கெட்டுகள் நேஹ்ராவிடம் வேகமாக உயிரைவிட்டன. ரசிகர்கள் எழுந்து ஆட்டம்போட, 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என ஸ்ரீலங்கா பீதியில் உறைந்தது.

ராஞ்சியில் காட்டாதே மூஞ்சி!

கேப்டன் தினேஷ் சண்டிமாலும் கபுகதேராவும் ஜோடி சேர்ந்து திறமை காட்ட முயன்றனர். ஆனால் அப்போது, அஷ்வின், யுவராஜ், ரெய்னா, ஜடேஜா என இந்தியாவின் ஸ்பின் தாண்டவம் அரங்கேறியிருந்தது. புயலில் சிக்கிய தோணியானது ஸ்ரீலங்கா. சண்டிமால், கபுகதேரா இருவரும் ஜடேஜாவின் ஒரே ஓவரில் மைதானத்தை விட்டுவிட்டு ஓடினர். அஷ்வினின் ஒரு துல்லிய ஓவரில் ஷனகாவும், பெரேராவும் பரிதாபமாகப் பலியாயினர். அதற்கப்புறம் வந்தவர்களில் சிரிவர்தனா பரவாயில்லை. மற்றவர்கள் காலூன்ற இந்தியா விடவில்லை. 16-ஆவது ஓவர் வரை ஜஸ்ப்ரித் பும்ராவின் (Jasprit Bumrah) கைக்கு வரவில்லை பந்து. இறுதிச்சடங்கை விரைவில் முடிக்க எண்ணிய தோனி, பும்ராவிடம் பந்தை எறிந்தார். பும்ரா தன் இரண்டாவது ஓவரில் முடிச்சை ஒரேயடியாக இறுக்க, இரண்டு ஸ்ரீலங்க விக்கெட்டுகள் உயிரைவிட்டன. 127 ரன்களில் முடிவுக்கு வந்தது ஸ்ரீலங்காவின் கதை.

69 ரன் வித்தியாசத்தில் வென்று, தான் உலகின் நம்பர் 1 டீம் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்றது இந்திய அணி. இப்படிக் காண்பிப்பதற்கு, பூனேயில் அது தன் தலையில் வாங்கிக்கொண்ட குட்டு பயன்பட்டது! கிரிக்கெட் விசித்திரமான ஒரு ஸ்போர்ட். அதைவிடவும் வினோதமானது இந்திய அணி.

**

டி-20 : இந்தியாவின் அசட்டுத் தோல்வி

உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவில் விளையாடப்படும் டி-20 தொடர். ஸ்ரீலங்கா அணி அவ்வளவு ப்ரமாத அணி அல்ல. இரண்டு மாத முன்னர்தான் நியூஸிலாந்திடம் செம்மையாக உதைவாங்கித் திரும்பிய அணி. மாலிங்கா, மேத்யூஸ், தில்ஷன் போன்ற வீரர்கள் ஆடாத நிலையில், புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐயோ, பாவம் இந்த அணி. இப்படித்தான் நமது மீடியா எழுதி ஸ்ரீலங்காவைப் பரிதாபமாகப் பார்த்தது – நேற்று நடந்த போட்டிக்கு முதல் நாள் வரை. ஆனால் நடந்தது என்ன? நேற்றைய (9-2-16) போட்டியில், பூனேயின் க்ரீன் டாப் பிட்ச்சில் முதலில் பந்துவீசிய ஸ்ரீலங்காவின் அனுபவமற்ற இளம் வீரர்கள், இந்திய அணியைப் பந்தாடிவிட்டனர்.

ரோஹித் ஷர்மா ஒரு impetuous player. Tremendously talented but very impulsive. அவர் அடித்து நொறுக்குவதற்கும், ஓரிரண்டு பந்துகளில் விழுவதற்கும் சமவாய்ப்புகள் உண்டு. அவர் வீழ்நதால்தான் என்ன? தவன், ரஹானே, தோனி எல்லாம் உடனே ஊர்வலத்தில் சேர்ந்துகொள்ளவேண்டுமா? இதற்குப் பேர்தான் அனுபவமா? ஆரம்பத்தில் தடுமாற்றம் எனில், நிலைத்து ஆடுவதற்குத்தானே மிடில் ஆர்டர் என்று ஒன்று இருக்கிறது. இந்த மிடில் ஆர்டரில் வரும் இந்திய வீரர்கள் யார்? கர்ஜிக்கும் இந்திய சிங்கங்கள்! ரெய்னா, யுவராஜ் சிங், தோனி, ஜடேஜா ! இவர்கள் அடித்த ரன்கள்? 20, 10, 2, 6. ஸ்ரீலங்காவின் அனுபவமற்ற கத்துக்குட்டிகளிடம் சீறிய சிங்கங்கள் இவை! உலகக்கோப்பையில் என்ன நடக்குமோ! பௌலிங்கில் ஸ்ரீலங்காவின் ரஜிதா, ஷனகா ஆகியோர் ப்ரமாதமாகப் பந்துவீசி இந்தியர்களைச் சுருட்டினார்கள்.

58 ரன்களில் இந்தியாவின் 7 டாப் விக்கெட்டுகள் காலி. 9-ஆம் நம்பரில் ஆட வந்த அஷ்வின்தான் விவேகம், நிதானம் இவற்றின் துணையுடன் கிரிக்கெட் ஆடியவர். அவர் இதே ஸ்ரீலங்க பௌலர்களை அனாயாசமாக ஆடி 31- நாட் அவுட் ஆக இருந்தார். அந்தப் பக்கம் அவருக்குத் துணை நிற்க ஆளில்லை . இந்தியா 19 ஓவர்களிலேயே 101-க்கு ஆல்-அவுட். எப்படி இருக்கு உலகின் முதல் ரேங்க்கில் இருக்கும் அணியின் வீரசாகசக் கதை?
இந்தியத் தரப்பில் பௌலர்கள் நேஹ்ராவும், அஷ்வினும் சிறப்பான பங்களித்தனர். ஆனால் 102 என்கிற இலக்கு எந்த ஒரு அணிக்கும் ஒன்றுமேயில்லை. புதிய கேப்டன் சண்டிமால், கபுகேதரா ஆகியோர் நிதானமாக ஆடி, ஸ்ரீலங்காவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.

உலகக்கோப்பைக்கு முன் இந்தியாவுக்கு இந்த அடி தேவைதான். `நாம் ஆஸ்திரேலியாவையே டி-20-யில் கலக்கியிருக்கிறோம்` என்கிற இறுமாப்பு உலகிலிருந்து இந்திய வீரர்கள் உடனே மீள வேண்டும். இனிவரும் போட்டிகளில் அசடு வழியாமல், பொறுப்புணர்ச்சியுடன் பேட்டிங் செய்தால் உலகக்கோப்பையில் கொஞ்சம் தேறலாம்.

அணியில் ரஹானே 3-ஆம் நம்பரில் வருவது அவ்வளவு உசிதமாகப் படவில்லை. நல்ல ஃபார்மில் இருக்கும் மணீஷ் பாண்டே அந்த இடத்தில் ஆடியிருக்க வேண்டும். யுவராஜ் சிங், பழைய ரெப்யுடேஷனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இனி காலம் ஓட்ட முடியாது. ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்து கை, காலைத் தூக்குகிற காலம் மலையேறிவிட்டது என்பதை எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறாரோ அவ்வளவு அவருக்கும், இந்திய அணிக்கும் நல்லது.
**

டி-20: இந்தியாவின் த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் (Sydney), நேற்று (31-1-2016) நடந்த இறுதி டி-20 போட்டியில் இந்தியா வெற்றி வாகை சூடியது. கடைசி ஓவர் த்ரில்லரில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச தொடர் ஸ்கோரான 197-ஐ மிஞ்சியது. ஆட்டத்தின் இறுதி பந்தில் சுரேஷ் ரெய்னா விளாசிய அனாயச பௌண்டரியின்மூலம், இந்தியா 3-0 என ஆஸ்திரேலியாவை `ஒயிட்வாஷ்` (Whitewash) செய்தது. கூடவே, ஆஸ்திரேலியாவின் வேகக்கிரிக்கெட் நம்பகத்தன்மையையும் தகர்த்தெறிந்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு, அதன் புதிய கேப்டன் ஷேன் வாட்சன் அபாரமான பங்களிப்பு தந்தார். அவருடைய 71-பந்தில் எட்டப்பட்ட 124 (நாட்-அவுட்)-ல், 10 பவுண்டரிகள், 6 ப்ரமாத சிக்ஸர்கள். பும்ரா உட்பட இந்திய பௌலர்கள் எவரையும் அவர் விடவில்லை. வாட்சனின் இந்த ஆக்ரோஷ இன்னிங்ஸ், கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் எப்படி விளையாட வேண்டும் என்பதன் இலக்கணமாகும். எந்த வகையிலும் பெரிதும் புகழப்படவேண்டிய சாதனை. இந்தத் தொடரில் இருதரப்பிலிருந்தும் ஆடப்பட்ட ஒரே செஞ்சுரியும் அதுவே. எனினும் மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள் எடுபடவில்லை.

198 என்பது டி-20-யில் எதிரணியை பயமுறுத்தும் இலக்கு. ஆனால் இந்தியர்கள் இதற்கெல்லாம் மிரண்டதாகத் தெரியவில்லை. ஓப்பனர் ஷிகர் தவனின் 9-பந்தில் எட்டிய 26 ரன்கள் (4 பௌண்டரி, 1 சிக்ஸர்) என்கிற முதல் வெடி, ஆஸ்திரேலியர்களை ஆரம்பத்திலேயே எச்சரித்தது ! ரோஹித் ஷர்மாவும் (38 பந்துகளீல் 52 ரன்கள்), விராட் கோஹ்லியும்(36 பந்துகளீல் 50 ரன்கள்) சூரத்தனத்தில் சோடை போகவில்லை. இருப்பினும் ஒரு ஓவருக்கு 12 ரன்கள் என்கிற விகிதம் இந்தியாவுக்குத் தொல்லைகொடுத்தது. ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் மற்றும் லெக்-ஸ்பின்னர் கேமரூன் பாய்ஸ் (Cameron Boyce) ஆகியோரின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததால், மிடில் ஒவர்கள் கடினமாக இருந்தது. சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடியும், 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து தயங்கித் தடுமாறிக்கொண்டிருந்த யுவராஜ் சிங், இறுதி ஓவர்களில் இந்திய ஆட்டத்தைக் கெடுத்துவிடுவார் எனத் தோன்றியது.

கடைசி ஓவர் வீசப்படுகையில் இந்தியாவின் வெற்றிக்கு, 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை யுவராஜ் எதிர்கொண்டார். நல்லவேளை, இந்தியாவின் ஸ்டார் நேற்று பிரகாசமாகத்தான் இருந்தது! முதல் பந்தில் பௌண்டரி, இரண்டாவதில் சிக்ஸர், மூன்றாவதில் சிங்கிள் அடித்து அந்தப் பக்கம் சென்றார் யுவராஜ் சிங். ரெய்னாவுக்கு 3 பந்துகள்-அடிக்கவேண்டியது 6 ரன்கள். ரெய்னா தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளில் 2, 2 என ரன்னெடுத்தார். கடைசி பந்து. இந்தியாவுக்குத் தேவை 2 ரன்கள். ஸ்டேடியம் சீட் நுனிக்கு வந்தது. ரசிகர்களின் விழிகள் விரிந்தன. நிலைகுத்தின. பௌலர் ஆண்ட்ரூ ட்டை (Andrew Tye)-க்கு மூச்சு நின்று திரும்பியது! வேறு வழியில்லை. போட்டார் பந்தை. பாய்ண்ட் திசையில் ரெய்னா சாத்தினார் ஒரு பௌண்டரி. தொடரின் ஸ்கோர் முதன்முறையாக 200-ஐத் தொட்டது. இந்தியாவின் வெற்றி நாட்டியம் அரங்கேறியது!

1-4 என்று ஒரு-நாள் போட்டித் தொடரை தோற்றுவிட்ட நிலையில், 3-0 என்று டி-20 தொடரை ஆஸ்திரேலியாவில் வென்றது; இந்த வெற்றியினால், ஐ.சி.சி. இன் டி-20 தரவரிசையில் இந்தியா நம்பர் 1 இடத்தையும் பெற்றது. இது தோனியின் தலைமையிலான இந்திய அணியின் அபார சாதனை. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவின் முதல் மூன்று ஆட்டக்காரர்களான, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோஹ்லி- ஆகியோரின் தரமான, ஸ்திரமான பேட்டிங். சுரேஷ் ரெய்னாவின் இறுதி ஓவர் அதிரடியும் மெச்சத்தக்கது. இந்தத் தொடரில் இன்னொரு அம்சம்: இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு புது பௌலர்; ‘Find of the Tour’ என தோனியினால் புகழப்படும் 22-வயது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா.

இந்த மாதம் ஸ்ரீலங்கா தன் டி-20 படையுடன் இந்தியாவில் விளையாட வருகிறது. ஸ்ரீலங்காவுக்கெதிரான தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah), ஹர்தீக் பாண்ட்யா (Hardik Pandya) (தமிழ் பேப்பர்களில் குறிப்பிடப்படுவது போல் `பாண்டியா` அல்ல!), யுவராஜ் சிங் ஆகியோர் சேர்க்கப்படுவர். மார்ச்சில் இந்தியாவில் உலக டி-20 கோப்பை. இந்தியாவில் கோப்பையை வெல்வதற்காக ஒவ்வொரு சர்வதேச அணியும் 2-3 ஸ்பின்னர்களை தன் அணியில் சேர்த்து வருகிறது. நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நியூஸிலாந்து அணியில், ஸ்பின்னர்கள் – நேத்தன் மக்கல்லம்(Nathan McCullum), மிட்செல் சாண்ட்னர்(Mitchell Santner), இஷ் சோடி(Ish Sodhi) (இந்திய வம்சாவளி நியூஸிலாந்து வீரர்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய மைதானங்களின்மீது அவ்வளவு மரியாதை!

**