பிரதமர் மோதியின் வெற்றி : சிதறும் எதிர்க்கட்சிகள்

 

தேர்தலுக்கு முந்தைய சில மாதங்களாக எங்குபோனாலும் இருபத்தி இரண்டு, இருபத்தி இரண்டாக காட்டிக்கொண்டு திரிந்தார்கள். அது என்ன இருபத்தி இரண்டு? லக்கி நம்பரா? இல்லை. இந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் எனத் தங்களை பாவித்துக்கொண்ட, தங்களை ஒரு குழுவாக மக்களிடம் காண்பிக்கத் துப்பில்லாமல், ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு, காட்டிக்கொண்டு திரிந்த பெரிய(!), சிறிய கட்சிகளின் அமைப்பு. அந்த மூட்டைக்குள் காணப்பட்ட  நெல்லிக்காய்களின் எண்ணிக்கைதான் அந்த இருபத்தி இரண்டு.

தேர்தல் முடிந்தது. இந்தியா முழுதுமாக, பெரும்பாலான வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு தலைவனின் கட்சி, அது ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லியின் அரியணைக்குத் திரும்பிவிட்டது. பொதுவாகச் சொல்லப்படும் anti-incumbency ஓட்டுக்கள், இந்த முறை ஆளும் கட்சிக்கான pro-incumbency ஓட்டுகளாக மாறிவிட்டன! அதிசயம்,  ஆனால் உண்மை.

மேலே குறிப்பிட்ட அந்த ‘எதிர்க்கட்சிகள்’ எனும் மூட்டைக்கு, இப்போது என்ன ஆயிற்று? ’எக்ஸிட் போல்’ வந்த நாளிலிருந்தே மூட்டையின் முடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வந்தவுடன், முழுதாக அவிழ்ந்து விழுந்துவிட்டது. நெல்லிக்காய்கள் சிதறி மூலைக்கொன்றாக ஓடிவிட்டன. பரிதாபம்.

உருவான வாரிசு !

மேற்சொன்ன   22 நெல்லிக்காய்களில் சாம்பிளுக்குக் கொஞ்சம் பார்த்துவிடுவோமா? பொதுத் தேர்தல் சமயத்தில் மட்டும் ஒற்றுமை காண்பித்து மேடையேறி, மக்களைக் கேலி செய்வதுபோல் கையசைக்கும் இந்த எதிர்க்கட்சித் தலைகள் யார்? இதில் முன்னால் நிற்பது ஒரு காலத்தில் இந்திய தேசீய காங்கிரஸ் -ஆக மதிப்புடன், செல்வாக்குடன் இருந்து, பின்னர் காங்கிரஸ் (இந்திரா), காங்கிரஸ் (ஆர் (ராம்-ஜெகஜீவன் ராம்) எனப் பிளவுபட்டு, மீண்டும் இந்திய தேசீய காங்கிரஸ் என தேர்தல் ஆணையப் பதிவுகளில் காணப்பட்டாலும், பொதுவாக இந்திரா காங்கிரஸ் எனவே அறியப்பட்டு, இப்போது சோனியா-ராகுல் காங்கிரஸாக சிறுத்துக்கிடக்கும் ஒரு கட்சி. இதன் ’நேத்தா’ அதாவது தலைவர்தான் ராகுல் காந்தி. யார் இவர்? என்ன அடையாளம்? நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராகாந்தியின் பேரன், தென்னாட்டு வழக்கப்படி ‘அம்மை சோனியா’வின் மகன் இப்படித்தான் செல்கிறது அவரது அரசியல் அடையாளங்கள். கிட்டத்தட்ட 15  வருடங்களாக, அவரை காங்கிரஸின் தலைவராக, ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போது, பிரதம(ர்) வேட்பாளராக ‘ஆக்க’, நிறுவ, அவரது அம்மா சோனியா காந்தி செய்து வரும் முயற்சிகள், சாகஸங்கள்.. சொல்லி மாளாது. ஆனாலும் உருப்படியாக ஏதும் நிகழவில்லை. எழுதிக்கொடுத்ததைத் தூங்கமூஞ்சித்தனமாக படிப்பதும், அல்லது ‘கிராமத்து சாமியாடி’யைப்போல் ஆவேசத்துடன் மேடையில் கூச்சலிடுவதும்தான் இந்த 15 ஆண்டுகளில் அவர் ‘கற்று’க்கொண்டது. சொல்லிக்கொடுத்த சொல்லும், கட்டிக்கொடுத்த சோறும் – எத்தனை நாளைக்கு  வரும்? சோனியா காந்திக்குப் புரிந்திருக்க ஞாயமில்லை. ஏனெனில், அவர் தமிழரல்லவே!

நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் பிரச்சாரங்களின்போது, ராகுல் காந்தி, ஒரு தேசிய கட்சியின் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக என்னென்ன பேசினார், எப்படியெல்லாம் சத்தம் போட்டார்! நாட்டின் பிரதமருக்கெதிராக, எந்தவித மரியாதையோ, கவனமோ இன்றி,  அவர் பேசிய பேச்சுக்கள், வெறும் ஏச்சுக்கள். நரேந்திர மோதியின் முதல்  வெற்றியை (2014) ஜீரணிக்கமுடியாத காங்கிரஸ், அவரது ஏழ்மையான பின்புலத்தை ஆரம்பத்திலிருந்தே (2014) ஏளனம் செய்து வந்தது. அதன் விளைவாக வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, பிரதமரை ‘சாய்வாலா’ (Chaiwala) என்று கிண்டலடித்தார்கள் காங்கிரஸ்காரர்கள். மற்ற ஜால்ரா கட்சிகளும் சேர்ந்துகொண்டன எனத் தனியாக சொல்லத் தேவையில்லை. இந்த வார்த்தையின் த்வனியை,  ‘tone’-ஐ, அது பிரதமரை நோக்கி சொல்லப்பட்ட விதத்தை – தமிழர்போன்ற ஹிந்தி-பேசா மாநிலத்தவர் சரியாக உணரமாட்டார்கள். ’பிரதமரா இவன்?  ’டீ வித்த பய!’.   என்பதுதான் அது.

பிரதமர் மோதி தன்னுடைய 5 வருட ஆட்சியை நன்றாகவே செய்து முடித்துவிட்டார். 2019 பொதுத்தேர்தலில் நிற்கிறார். எதிர்ப்பது அதே ராகுல் காந்தியும் மற்ற பழைய ‘கதாபாத்திரங்களும்’. இப்போதும் மோதியை பிரதமர் எனக் குறிப்பிடவே மனமில்லை காங்கிரஸுக்கு. ராகுல் சொல்கிறார்: ’அவர் சும்மா ஒரு ’சௌக்கிதார்’தான்!’ chowkidar-காவலாளி என்கிற ‘அகராதி’ மொழிபெயர்ப்பு அல்ல இங்கே கவனிக்கப்படவேண்டியது. அதாவது, மோதியை பிரதமர் என்றெல்லாம் அழைக்கவேண்டியதில்லை. ’வெறும் காவலாளி, கேட்கீப்பர் மாதிரிதான்யா அவரு!’ என்ற பொருள்பட ஒரு கிண்டல், கீழ்த்தரமாகப் பார்த்தல்தான், அந்த வார்த்தையை ராகுல்காந்தி சொன்ன விதத்தில் காணப்பட்ட அம்சம். ஆனால் மோதி, அந்த ஏளன வார்த்தைப் பிரயோகத்தை சாமர்த்தியமாகத் தன் போக்குக்குத் திருப்பிவிட்டுவிட்டாரே.. ’அவர்கள் சொல்வது சரிதான். இவ்வளவு பெரிய தேசத்தைப் பாதுகாக்க, அதற்கு காவலிருக்க ஒருத்தன் வேண்டாமா? அது நான்தான். ஆகவே ’ சௌக்கிதார் ’ என்று என்னைக் கூப்பிடுவதும்  சரிதான்’ என்றார் மோதி!

ராகுல் காந்தி & கோ.விற்கு ஏகப்பட்ட கடுப்பு.  இந்த ஆளை என்னதான் செய்வது? இன்னும் எப்படி அவமானப்படுத்துவது? இப்போது வேறுவிதமாக ஆரம்பித்தார் ராகுல் காந்தி. மேலும் ஆத்திரத்தோடு மோதியைக் குறிப்பிட்டு, ’சௌக்கிதார் (ச்)சோர் (Chor)  ஹை!’ என்றார். அதாவது ‘காவல்காரன் ஒரு திருடன்’! – இப்படிப் பிரதம மந்திரியைப் பார்த்து ஏதோ ஆத்திர, அவசரத்தில் ஒரு மேடையில், ஒருமுறை சொன்னதோடு  நிறுத்திக்கொண்டாரா ? இல்லை. ஒவ்வொரு மீட்டிங்கிலும் கத்திக்கொண்டே போனார் ராகுல் காந்தி. மக்களுக்கு அதில் வெறுப்பேறும் வரை கத்தினார். பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில்,  அவரது ஒவ்வொரு மீட்டிங்கிலும் ஒரு பகுதியினர் திருப்பி ‘மோதி! மோதி!’ எனக் குரல் எழுப்பி, ராகுலை பயமுறுத்தும்வரை  அது போயிற்று!  என்ன செய்வார், அவரும்? பேசுவதற்கு அவரிடம் வேறு சரக்கில்லை. ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே போனால் மோதியின் பிரச்சாரமும் இந்த நிலைக்குக் கீழே போய்விடுமே. பதில் சொல்லாமல் விட்டுவிட்டாலோ, ஒத்துக்கொண்டதுபோல், பம்முவதுபோல் பொதுமக்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு. ஆகவே, மோதி ஒரு காரியம் செய்தார். தன்னுடைய நெருக்கடியான தேர்தல் மீட்டிங்குகளுக்கிடையில், ‘Mein bhi Chowkidar!’ ‘நானும் ஒரு காவல்காரன் தான்!’ எனும் நிகழ்ச்சி/மீட்டிங் ஒன்றை டெல்லியில் ஏற்பாடு செய்தார். (இந்த சமயத்தில் பல மோதி ஆதரவாளர்கள், ரசிகர்கள், ட்விட்டர் அக்கௌண்ட்டுகளில், தங்களின் பெயருக்கு முன்னால் ‘Chowkidar’ எனச் சேர்த்துக்கொள்ள, அதுவே ட்ரெண்டாகிப்போனது!). ’மே(ன்) பி சௌக்கிதார்’ நிகழ்ச்சியில் 5000-த்துக்கும் மேற்பட்ட அசல் சௌக்கிதார்கள் கலந்துகொண்டார்கள். வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நாட்டின் வெவ்வேறு மூலையிலிருந்து ‘சௌக்கிதார்’ வேலைபார்ப்பவர்கள் பிரதமரோடு கலந்துரையாடினார்கள். அதில் ஒரு உரையாடலை ‘டைம்ஸ் நௌ’ சேனலில் கேட்க நேர்ந்தது. அதன் தமிழ் ஆக்கத்தைக் கீழே தருகிறேன்:

பிரதமர் மோதிக்கு, அன்றைய நிகழ்ச்சியின்போது,  நாட்டின் ஏதோ ஒரு டவுனிலிருந்து ஃபோன் வருகிறது. சௌக்கிதாராக (காவலாளி) ஏதோ கம்பெனியிலோ, ஆஃபீஸிலோ வேலைபார்க்கும் ஒரு தொழிலாளி பேசுகிறார்:

சௌக்கிதார் : ‘ப்ரதான் மந்த்ரி சாஹிப்! (பிரதம மந்திரி அவர்களே!) நான் சௌக்கிதார் தேவேந்திர சிங் பேசுகிறேன்.  நமஷ்கார்!’

நரேந்திர மோதி: நமஷ்கார்! மேற்கொண்டு சொல்லுங்கள் ..

சௌக்கிதார்: நான் ஒரு சாதாரண சௌக்கிதார். இங்கே ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறேன். ஆப்.. தேஷ் கே ப்ரதான் மந்த்ரி! (நீங்களோ நாட்டின் பிரதம மந்திரி!).  உங்களையும் ’சௌக்கிதார்’ என்கிறார்கள்! இது எப்படி இருக்கிறது?

மோதி: (சிரிக்கும் சத்தம் கேட்கிறது). Achchaa hi lag rahaa hai ! – நன்றாகத்தான் இருக்கிறது!

சௌக்கிதார்: ஆனால் உங்களைப்போய் ‘(ச்)சோர் (Chor-திருடன்) என்று சொல்கிறார்களே.. இது சரியில்லை, சாஹிப் !

மோதி: நீங்கள் சாதாரண இந்தியக் குடிமகன். உங்களுக்கு சரியில்லை என்று தோன்றுகிறது. நல்லது. ஆனால் அவர்கள் ’சௌக்கிதார் (ச்)சோர் ஹை!’ என்றுதான் ஒவ்வொரு இடத்திலும் என்னைப்பற்றி ஏளனமாகப் பேசி வருகிறார்கள். என்னை மட்டுமல்ல, சௌக்கிதார் பணியிலிருக்கும் உங்களைப்போன்ற நேர்மையான தொழிலாளர்களை, ஏழைகளை எல்லாம் அவமதிக்கிறார்கள். இத்தகையோர்தான் தாங்களே திருடிவிட்டு, போலீஸ் வரும்போது ’சௌக்கிதார் மீதுதான் சந்தேகம். கைதுசெய்யுங்கள்’ என்று உங்கள் பக்கம் கைகாட்டும் முதலாளிகள். இவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

சௌக்கிதார்: சாஹிப்! எங்களுக்கு இவர்களை நன்றாகத் தெரியும். நாங்கள் அநியாயமாக அடிபட்டுவருபவர்கள். இருந்தும் பிழைப்புக்காக தினம் தினம் அதே வேலையை எங்களால் முடிந்தவரை, நேர்மையாக செய்துகொண்டிருப்பவர்கள்.

மோதி: உங்களைப்போன்ற சாதாரணர்களின் நேர்மையில்தான் இந்தியா என்கிற மகான் தேசம் நிற்கிறது. வாழ்கிறது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

சௌக்கிதார்: ஆப் சிந்தா மத் கரோ சாஹிப்! (நீங்கள் கவலைப்படாதீர்கள் ஐயா!) நாங்கள் உங்கள் பக்கம் தான் இருக்கிறோம். எங்களைப்போல நாடெங்கும்  தொழிலாளர்கள், சாதாரண மக்கள் (Aam Janta) எப்போதும் உங்கள் பக்கம்தான்.

மோதி: தன்யவாத்!(நன்றி)  நமஷ்கார்!

– இப்படிச் சென்றது ஒரு இந்தியக் குடிமகனுடனான, பிரதமர் மோதியின் கலந்துரையாடல் அன்று (மார்ச் 31, தல்கத்தோரா ஸ்டேடியம், டெல்லி).

காங்கிரஸின் ராகுல் காந்தியும், ஏனைய எதிர்க்கட்சித்தலைவர்களும் மோதிக்கு எதிராக, அவரை அவமானப்படுத்தி அழிப்பதாக நினைத்துக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக செய்த ஆவேச, அபத்தப் பிரச்சாரம் அவர்களுக்கே வினையாக முடிந்தது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேலும் கீழே சென்றார். ஃபானி புயலின்போது பிரதமரின் ஃபோன் காலை மம்தா ஏற்கவில்லை. ஃபோனையே எடுக்கவில்லை. பதிலை அடுத்தநாள் இப்படிச் சொன்னார்: ‘நீங்கள் ஒரு எக்ஸ்பைரி பிரதமர் (Expiry PM). நான் ஃபோன் எடுக்கவேண்டிய அவசியமில்லை!’ பதவியில் இன்னும் இருக்கும் ஒரு பிரதம மந்திரியைப் பார்த்து, ஒரு முதலமைச்சரின் எவ்வளவு முறையற்ற, கீழ்த்தரமான கமெண்ட் இது என கவனியுங்கள். அரசியலின் மிகமோசமான, கீழ்த்தர நகர்வுகளில் இதுவும் ஒன்று.  மேலே குறிப்பிட்ட இந்த 22 எதிர்க்கட்சி உதிரிகள், இப்படித்தான் ஆளாளுக்கு, இந்தியப் பிரதமர் மீது எந்த ஒரு மரியாதையோ, முறையோ இன்றி, அவரை நரேந்திர மோதி எனும் தனி நபராகவே கருதி, தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் கீழ்நிலையை அடைய, அடைய ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று. ஒரு எதிர்க்கட்சித்தலைவரின் லட்சணமா இது? இத்தகைய கடுமையான துர்பிரச்சாரத்தின் விளைவாக, அதற்கு நேர் எதிர்விகிதத்தில் நரேந்திர மோதியின் புகழ் மக்களிடையே வளர்ந்துவந்ததை அறியவில்லை இந்த அசடுகள். அரசியல் வியூகம் தெரியா எதிர்க்கட்சிகளின் அடிமுட்டாள்தனம் இது.

நமது அரசியல்வாதிகளின் தொலைநோக்கு !

தேர்தல் முடிவுகள் வந்து, நரேந்திர மோதியின் பாரதீய ஜனதா பெரும்பான்மை பெற்றதை அறிந்தவுடன், இந்த 22-ல் பலர் காணாமற்போய்விட்டார்கள். டெலிவிஷன் சேனல் பக்கம் வந்து ஏதாவது சொல்லக்கூட ஒருவருக்கும் தைரியமில்லை. இவர்கள்தான் மோதிக்கு பதிலாக நாட்டை ஆளத் துடித்த தலைவர்கள்! ராகுல்காந்தி மட்டும் அன்று மாலை (மே 23), ஏதோ தயார்செய்துகொண்டுவந்தபடி, பத்திரிக்கையாளர் முன் நாலுவார்த்தை சொல்லிவிட்டு ஓடிவிட்டார். ’ராஜினாமா ! ராஜினாமா!’ என்று ராகுல் குதிக்க, காங்கிரஸ் தலைவர்கள் எனும் சம்ச்சாக்கள் ‘ஐயோ! ராஜினாமா செய்யாதீர்கள். கட்சி என்னாகும்? உங்களை விட்டால் எங்களுக்கு ஏது விமோசனம்!’ என்று அவரது காலடியில் விழுந்து கெஞ்சாத குறையாக,  நாடகம் ஆட ஆரம்பித்துவிட்டார்கள் காங்கிரஸ் கட்சியில். எதிர்பார்க்கப்பட்ட ‘ட்ராமா’ அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு இது போகும். பிறகு ’பழைய குருடி, கதவைத் திறடி!’ -கதைதான்..

மேற்கு வங்கத்தின் அடிபட்ட புலியான  மம்தா பானர்ஜி, தான் இன்னும் விழுந்துவிடவில்லை எனக் காண்பிப்பதற்காக அவ்வப்போது ஏதேனும் சொல்லிவருவார். தன்னை எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகராக காட்டி இந்தியா பூராவும், வலம்வந்துகொண்டிருந்த ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவிற்கு நித்திய வயிற்றுவலியாக ஜெகன் மோகன் ரெட்டி அமைந்துவிட்டார். அவரது  கட்சி ஆந்திராவில் வலுவான மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்துவிட்டது. மஹா கட்பந்தன் (Maha Gat bandhan-மகா கூட்டணி) எனக் கூவிக்கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தின் மாயாவதி, அகிலேஷ் யாதவ் என்போரின் விலாசம் தற்போதைக்குத் தெரியவில்லை! டெல்லியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் கேஜ்ரிவால் ஏழுக்கு ஏழையும் பாரதீய ஜனதாவிடம் இழந்துவிட்டு, விழிபிதுங்கிக் கிடக்கிறார். ஓரிரு மாநிலங்கள் தவிர, எதிர்க்கட்சிகளின் நிலைமை இந்தியாவெங்கும் மோசம்.

இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயகத்துக்கு, வலிமையான, பொறுப்பான எதிர்க்கட்சி அமைந்திருத்தல் மிக அவசியம். அப்போதுதான் ஆளும் கட்சியின் திட்டங்களை, செயல்பாடுகளை தேசீய உணர்வோடு, ஆக்கபூர்வமாக விமரிசிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு அப்படி அமையவில்லையே இப்போது, என் செய்வது?

**

கார்ட்டூன்களுக்கு நன்றி: இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், கூகிள்.

**

இந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் !

நடந்துமுடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில்,  நரேந்திர மோதியே பிரதமராகத் தொடர்வதற்கு, மக்கள்  வாக்களித்துவிட்டார்கள். Clear and  solid mandate for the PM, no doubt. தெளிவான, அழுத்தமானவகையில், வலிமையான நிலையில்,  பாரதீய ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சி செய்ய அனுப்பியிருக்கிறார்கள். ஆளும் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றதோடு,  இதுவரை இல்லாத அளவுக்கு பார்லிமெண்ட்டில் 303 சீட்டுகளைப் பெற்று (மொத்தம் 542), தன் பலத்தை சந்தேகமற நிரூபித்திருக்கிறது.

Women celebrating BJP’s splendid victory

எந்த ஒரு துக்கடாக் கட்சியின் ஆதரவை நம்பியும் ஆட்சியமைத்து, பின் ஒவ்வொரு சிக்கலின்போதும்  ஆட்டம்போடும் நிலை இல்லாமல், தடையின்றி நிலையான ஆட்சி செய்யும் வகையில் பாரதீய ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்தது இந்த தேர்தலின் நிறைவான ஒரு விஷயம். வலிமையான, ஸ்திரமான மத்திய அரசிற்குத்தான் உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச வெளியிலும் மதிப்பும், மரியாதையும் தொடர்ந்து கிடைக்கும். அதுதான், இந்தியா போன்ற ஒரு மாபெரும் ஜனநாயக தேசத்தின்  பொதுவான நன்மைக்கும், வளர்ச்சிக்கும், கௌரவத்துக்கும் வழிவகுக்கும்.

மாறாக, எந்த ஒரு தேசிய கட்சிக்கும்  தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காமல், தேர்தல் முடிவுகள் கட்சிகளிடையே சிதறிப்போய், அதன் விளைவாக, மத்தியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையுமாறு ஒரு நிலை ஏற்பட்டிருந்தால்? அரசியல் கூட்டணி என்கிற பெயரில் கோமாளிகள், கொள்ளைக்காரர்களின் குழுவொன்று டெல்லியில் அமர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பாரதத்தை ‘ஆள’ ஆரம்பித்தால், நாட்டின் நிலை என்னவாகும்? ஆணவமும், அடாவடித்தனமும் கொண்ட, நிர்வாகத் திறமையற்ற  – ஒரு மம்தா பானர்ஜி, மாயாவதி, கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், ஏன் அரசியல்வாதிகளில் அதிமேதாவி என நிரூபிக்கப்பட்டுவிட்ட காங்கிரஸின் ராகுல் காந்தி –  இப்படி ஒரு நமூனாவை, சாம்பிளை டெல்லியின் சிம்மாசனத்தில் அமரவைத்து கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய ஒரு பலவீனமான தலைமையின்கீழ், நாட்டில் எத்தகைய காரியங்கள் நடைபெறும்? பொதுநலத் திட்டங்கள் என்கிற பெயரில், விவசாயிகளுக்கான, ஏழைகளுக்கான இலவசங்கள் என்கிற பெயரில் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கும்? பொதுமக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் நாலாபுறமும் விசிறி அடிக்கப்படும், அது எங்கெங்கெல்லாம் போய்ச்சேரும்? திட்டங்களை அமுல்படுத்துகிறோம் என்கிற சாக்கில், இன்னும் எத்தனை எத்தனை ஊழல் கதைகள், ஒவ்வொரு துறையிலிருந்தும் வெடிக்கும்? நாட்டின் கஜானா எவ்வளவு சீக்கிரம் காலியாகும்? அவற்றைப்பற்றி வாய்திறப்பவர்கள், வெளிக்கொணர்பவர்கள் எப்படியெல்லாம் தாக்கப்பட்டு, அழிக்கப்படுவார்கள்? பொது நிறுவனங்கள், அரசு இயந்திரங்கள் எப்படியெல்லாம் ஊழல் மயமாகி, செயலிழந்துபோகும்? இத்தகைய கெட்டகாலத்தில் இந்தியா என்கிற மகாதேசத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு என்ன ஆகும்? நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தீராத துன்பங்கள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கத்திலிருந்து, சர்வதேச வெளியில் இந்தியா என்கிற தேசத்தின் இமேஜ், கௌரவம், ஆளுமை எப்படியெல்லாம் கேலிக்குரியதாகிவிடும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பயங்கரக் காட்சிகள் விரியும். மேலும் விஷயம் புரியும்.

இப்படியெல்லாம் அபத்தங்கள் நிகழ வாய்ப்பில்லாதவாறு, பெரும்பாலான இந்திய மக்கள் சரியான முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் வாக்களித்திருப்பது இந்திய அரசியல்வெளியில் அமைதியை உண்டுபண்ணியிருக்கிறது. எந்த ஒரு பிரதமர் கடந்த ஐந்தாண்டுகளாக, தேச மக்களின் நலம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என சிந்தித்து செயல்பட்டாரோ, எவருடைய தலைமையின் கீழ் இந்தியா வலிமையான உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்ததோ, எவருடைய திறன்மிகு ஆளுமையினால் இந்திய நாட்டின் பாதுகாப்பு ஸ்திரப்பட்டதோ, அவரையே மீண்டும் ஆட்சி செய்ய அழைத்திருக்கிறார்கள்.

நரேந்திர மோதியே, நல்ல தலைவனே, நடத்திச்செல் நாட்டை.. March on !

**

பிற்சேர்க்கை :

1. ” Mr. Narendra Modi is an exceptional politician; in 2014, he came to power riding the hopes of millions. He has introduced more people-friendly schemes than all PMs since Independence. If even 60 per cent of these are implemented in full, India will be transformed beyond recognition. Voters have given him a second chance; he must finish the unfinished business of nation-building.”   – Political comment in ‘Deccan Chronicle’ dt. 24/5/2019.
2.  The US President Mr. Donald Trump:  “Just spoke to Prime Minister Narendra Modi . I congratulated him on his big political victory. He is a great man and leader for the people of India . They are lucky to have him!”.
**

இந்தியத் தேர்தல் : PM, CM, EVM … !

இந்திய மகா தேசத்தில் 1952-ஆம் ஆண்டுதான் நாட்டின் பார்லிமெண்ட்டிற்கான (லோக் சபா) முதல் பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது 489 பார்லிமெண்ட் தொகுதிகளே இருந்தன.(அதில் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களுக்கானவை). மொத்தம் சுமார் 17 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சுதந்திரத்திற்குப்பின் வந்த முதல் பொதுத்தேர்தல் ஆனதால் காங்கிரஸ் கட்சியை அடித்துக்கொள்ள ஆளில்லை! காங்கிரஸும், நேருவும் ஏதோ தேவலோகத்தில் இருந்து இந்தியாவுக்குள் குதித்துவிட்ட சங்கதிகளாகப் பார்க்கப்பட்ட அப்பாவிகளின் பொற்காலம்!

முதல் தேர்தலில் மொத்தம் 487 தொகுதிகளில், இந்திய தேசீய  காங்கிரஸ் (INC) 364-ஐ வென்று தனிப்பெரும் கட்சியாய் ஜொலித்தது. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகள் சுயேச்சை வேட்பாளர்களுக்குத்தான் கிடைத்தது. இப்போதிருப்பது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி என்றில்லை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என ஒன்றே இருந்தது. உலகில் கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபடாத (அதாவது சீனா வந்து குழப்பாத) காலம். அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 இடங்கள் கிடைத்தன. கட்சி ரீதியாக அதுவே காங்கிரஸுக்குப்பின் அடுத்த பெருங்கட்சி! சோஷலிஸ்ட் கட்சி 12 எடுத்து மூன்றாவது இடத்தில்  மார்தட்டிக்கொண்டது. பின்னாளில் அது சம்யுக்த சோஷலிஸ்ட், ப்ரஜா சோஷலிஸ்ட் என்று பரிணாம வளர்ச்சியடைந்து, பின்னொரு நாளில் காணாமலேயே போய்விட்டது. கயா காம் ஸே..! அடல் பிஹாரி வாஜ்பாயீ, பல்ராஜ் மதோக் ஆகிய புகழ்பெற்ற இளம் பார்லிமெண்ட்டேரியன்களை பிற்காலத்தில் கொண்டிருந்த பாரதீய ஜனசங்கம் (தற்போதைய பாரதீய ஜனதா கட்சி(BJP)யின் ஆரம்பப் புள்ளி), முதல் தேர்தலில் 3 தொகுதிகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பிராந்தியக் கட்சிகள் என அழைக்கப்பட்ட மாநிலக்கட்சிகள் இல்லையா? இருந்தன. ஷிரோமணி அகாலி தளம் (பஞ்சாப்), ஜார்க்கண்ட் கட்சி, உத்திரப் பிரதேச பிரஜா கட்சி, ஜமீந்தார்கள் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர்கள் கட்சி, மதராஸ் ஸ்டேட் முஸ்லிம் லீக் போன்றவைகளோடு ‘திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி’ என்று ஒன்றும் காணப்பட்டது! சரி விடுங்கள், பழைய கதை..

நடந்துமுடிந்த, நாளைக்கு (23-5-19) முடிவுகள் வரப்போகும் பொதுத்தேர்தல் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி தொடர்வாரா என்பதைப் பிரதானமாகக் கொண்டது. கூடவே நடத்தப்பட்ட ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் மற்றும் தமிழ்நாடு  ஆகிய அசெம்பிளி தேர்தல்களும், உட்கார்ந்திருக்கும் முதல் மந்திரிகள் இருப்பார்களா அல்லது ஓடிவிடுவார்களா என மக்களுக்குச் சொல்வதற்காகத்தான். நாளை மாலைவாக்கில்,  பூனைக்குட்டி வெளியே வந்துவிடும்!

EVM Units

இந்தியாவில் வாக்களித்தல் (voting) என்பது கட்சிகளின் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டு (ballot paper) மூலமாகவே வெகுகாலம் நடைபெற்றுவந்தது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னமென இருக்க, அவற்றை அச்சடித்திருக்கும் எலெக்‌ஷன் கமிஷனின் வாக்குச்சீட்டு, அனுமார் வால் மாதிரி நீண்டு தொங்கி அப்பாவி வாக்காளர்களை மிரட்டிவந்தது! தங்களுக்குப் பிடித்தமான கட்சியின் சின்னத்தைத் தேடி அதில் முத்திரை குத்தி பெட்டியில் போட்டுவிட்டு வெளியே வரும்வரை, அவர்களுக்கு மூச்சுபோய் மூச்சு வந்தது. இந்தியா முழுதுமான லட்சக்கணக்கான ஓட்டுச்சாவடிகளிலிருந்து வாக்குச்சீட்டுகளை பாதுகாப்பாக சேகரித்து, வாக்கெண்ணும் நாளில் அவற்றை கட்சிவாரியாக வகைப்படுத்தி கணக்கிடுவதில், சரிபார்ப்பதில் காலதாமதமும், தவறுகள் ஏற்பட வாய்ப்புகளும் மலிந்திருந்தன.

வாக்களிப்பு முறையை தொழில்நுட்ப ரீதியாக  நவீனப்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) தன்னுடைய தொழில்நுட்ப குழுவினால் (Technical Experts Committee (TEC)) பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்னணு இயந்திரத்தை, சர்வதேசத் தர அரசு நிறுவனங்களான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL, Bangalore) மற்றும் Electronics Corporation of India (ECIL, Hyderabad) ஆகியவற்றின் ஒத்துழைப்பில்  தயாரிக்க ஆரம்பித்தது. இதுதான் இந்திய எலெக்‌ஷன் கமிஷனின் EVM (Electronic Voting Machine) எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம். EVM-இன் முதல் எடிஷன், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு,  கேரளாவில் நடந்த ஒரு இடைத்தேர்தலில் 1982-லேயே  புழக்கத்துக்கு வந்தது. படிப்படியாக இதன் பயன்பாடு வளர்ந்தது. 2001-லிருந்து இதன் பயன்பாடு தேர்தலுக்குத் தேர்தல் என சீரானது. தொடர்ந்த காலகட்டத்தில் இவிஎம்,  BEL, ECIL-ஆகியவற்றினால், பலவிதமான தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உட்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தப் பொதுத்தேர்தலில் இந்தியா பயன்படுத்தியிருப்பது, பலவிதமான சோதனைகளில் தேர்வாகி வந்திருக்கும் அதிநவீன இயந்திரம். வாக்களர் நீலநிற பட்டனை அழுத்தி வாக்களிக்கும்  பகுதி (Balloting Unit), வாக்கு அளிக்கப்பட்டுவிட்டதா என தேர்தல் அதிகாரி சரிபார்க்கும் பகுதி (Control unit) என இரு பகுதிகளைக்கொண்டு, உள்ளமைக்கப்பட்ட பேட்டரி பேக்-உடன் வருகிறது, tamper proof, weather proof-ஆன இந்த மின்னணு இயந்திரம். கூடவே, VVPAT (Voter Verifiable Paper Audit Trail) unit ஒன்றும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்காளர் வாக்களித்தபின், தான் சரியாக வாக்களித்திருக்கிறோமா என்பதை ஒரு சிறிய திரையில் பார்க்கமுடியும். அதில் கட்சியின் சின்னம், சீரியல் நம்பர் ஆகியவை 7 வினாடிகளுக்குத் தெரியும். பின்னர் இந்த தகவல் பேப்பர் ரோலில் பாதுகாப்பு drop box-ல் சென்று மறைந்துவிடும். (இவிஎம்-ல் ஓட்டுக்களை எண்ணுகையில், VVPAT மூலமாகவும் எண்ணிக்கையை சரிபார்க்க முடியும்)

இந்திய தேர்தல் ஆணைய வழிமுறைகளின்படி, வாக்கெடுப்புக்கு முன்பு, தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு கட்சியின் ஏஜண்ட்டிற்கும், இவிஎம் ’எப்படி வேலை செய்கிறது’ என நிரூபித்துக் காட்டுகிறார்கள். குறைந்தபட்சம் 20 ‘மாதிரி ஓட்டுக்கள்’ கட்சி பிரதிநிதிகளால் போடப்பட்டு, இவிஎம் அதனை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்பது காட்டப்படுகிறது. ஒவ்வொரு சமயத்திலும் ஒரு மெஷின்மூலம் அதிகபட்சம் 2000 ஓட்டுகள் வரைப் போடமுடியும். ‘NOTA’ உட்பட, 64 கட்சி சின்னங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு புதிய சீரீஸ் இவிஎம்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்சி ஏஜண்ட்டுகள்/ பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே இத்தகைய விபரங்கள் தேர்தல் அதிகாரிகளால் அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே, பொதுமக்களின் நிஜமான வாக்களிப்பு வாக்குச் சாவடியில் ஆரம்பிக்கிறது.

இதைப்போலவே, வாக்கெடுப்பு  முடிந்தபின், கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்பு இந்த இவிஎம் இயந்திரங்கள் ’மூட’ப்படுகின்றன. (விழுந்திருக்கும் ஓட்டுக்கள் கணக்கில் வந்தபின், சரிபார்த்தபின்,  தேர்தல் அதிகாரி ‘Close’பட்டனை அழுத்திவிட்டால், அந்த இயந்திரம் பூட்டப்பட்டுவிடும். அதில் மேற்கொண்டு ஓட்டுக்கள் போடமுடியாது. இப்படி ஒரு safety feature-உடன் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த இயந்திரம்). இவிஎம்-கள், வாக்கெடுக்குப்பின் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக ‘மூட’ப்பட்டு, அதற்குரிய பெட்டிகளில் வைக்கப்பட்டு இரண்டுமுறை ‘சீல்’ செய்யப்படுகின்றன. ‘சீல்’ செய்யப்பட்ட இவிஎம்-கள், சீரியல் நம்பர்கள் சரிபார்க்கப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ‘பாதுகாப்பு அறை’ (strong rooms)களில் வரிசைக்கிரமமாக  (தேர்தல் அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகள் முன்பு) வைக்கப்பட்டு, அறையின் கதவு மூடப்பட்டு சீல் வைக்கப்படுகின்றது. அனைத்து செயல்பாடுகளும் முறையாக வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மத்திய ஆயுதப்போலீஸ் படையின் காவலில் அத்தனையும் இருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று (‘India’s Electronic Voting Machines (EVMs): Social construction of a “frugal innovation’ authored by Maximilian Herstatt and Cornelius Herstat),  இந்திய ‘மின்னணு வாக்களிப்பு இயந்திரம்’ பற்றி இவ்வாறு சொல்கிறது: “EVMs in India are unique and quite different from EVMs employed in other nations like the US. Rather than large, expensive, complex and computer like systems, the Indian machine is praised for its simplicity, inexpensiveness, and efficiency…’’

**

இந்தியத் தேர்தல்கள் 2019 : EXIT POLL EXCITEMENTS !

’இந்தியப் பொதுத்தேர்தல்கள்-2019’-இன் இறுதிக்கட்ட வாக்களிப்பு ஒருவழியாக நேற்று (19/5/19) நிறைவுபெற்றது. இந்திய தேர்தல் ஆணைய (Election Commission of India) வழிமுறைகளின்படி கடைசி நாள் வாக்கெடுப்பு முடிந்து அரைமணி நேரம் கழிந்தபின்னரே தேர்தலுக்குப் பின்னான ’எக்ஸிட் போல்’களை (வெற்றிக் கணிப்புகள்) எந்த நிறுவனமும் வெளியிடமுடியும். அதன்படி நேற்று மாலை எக்ஸிட் போல்கள் இந்திய டிவி சேனல்களால் வெளியிடப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலமொன்றில் வாக்களிக்க வரிசைகாட்டும் பெண்கள்

அரசியல் போதையில் கிறுகிறுக்கும் சராசரி இந்திய வாக்காளன், அரசியல்-ரசிகன்,  தீராத தேர்தல் கணக்குகளில் நேற்றைய தூக்கத்தை இழந்திருப்பான்! என்ன செய்வது, அவனது தேசமாயிற்றே, ஆளப்போவது யாரென்று கணிக்காமல், கவலைப்படாமல் இருக்கமுடியுமா?

பெரும்பாலான கணிப்புகள் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதீய ஜனதா கட்சி  (BJP)  தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)-ஐ இந்திய மக்கள் மீண்டும் ஆட்சிக்கு அழைத்திருக்கிறார்கள் எனவே காட்டுகின்றன. எனினும் இன்னும் மூன்று நாட்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டுதான் அரசியல் கட்சிகள் உட்கார்ந்திருக்கும். நாயுடுகாரு, டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் அடிக்கடி பறந்து ’மோதி-இல்லா’ சர்க்கார் ஒன்று அமைக்க மஹாவியூகம் அமைத்தது ஒரு பக்கம் இருக்கட்டும். (இப்படி குறுக்கும் நெடுக்குமாக அலைகிறாரே இந்த நாயுடு..ஏன்? எல்லாம் மே 23 அன்று சரியாகிவிடும்! – என்கிறது பாரதீய ஜனதா கட்சியின் கூட்டுக்கட்சியான சிவசேனா!) டெல்லியின் 41 டிகிரி வெயிலைத் தவிர்க்க, அங்குள்ள ஆந்திரபவன் ஏசி -ரூமில் இப்போது நாயுடு கொஞ்சம் அமர்ந்து, யோசிக்கட்டும்; ஆசுவாசப்படுத்திக்கொள்ளட்டும். யாராவது ஒரு கிளாஸ் கேரட்-புதினா ஜூஸ் போட்டு,  ஐஸ் க்யூப்ஸ் மேலே மிதக்கவிட்டு அவருக்குக் கொடுங்கப்பா.. பாவம், ரொம்பத்தான் தூக்கமின்றித் தவித்திருக்கிறார் மனுஷன். மம்தா பானர்ஜியும் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து ரஸகுல்லா சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று? பளபளவென்று குஷனோடு ஒரு நாற்காலி மாயாவதியின் கனவில் வந்ததாகக் கேள்விப்பட்டோமே?  யாரோ காக்கிசட்டை, துப்பாக்கி சகிதம் துரத்துவதாக டெல்லியின் கேஜ்ரிவாலுக்கு தினமும் வருகிறதாமே, துர்சொப்பனம்? என்னப்பா, யாராவது கவலைப்படுகிறீர்களா! தேசத்துக்காக இதுகள் எத்தனைதான் கஷ்டப்படுவது, தியாகம் செய்வது,  ஒரு கணக்கு வேண்டாம்..

சிஎன்என்-நியூஸ் 18, இந்தியா டுடே ( India Today),  ரிபப்ளிக் (Republic TV), டைம்ஸ் நௌ,  நியூஸ் 24 போன்ற முக்கிய தேசிய டிவி சேனல்கள் இந்தக் களேபரத்தில் முக்கிய பங்கு வகித்தன. கீழே ஒரு வேகநோட்டம் !

2019 India  Parliament (Lok Sabha) Elections (Total 542 seats)  – Exit Polls:

Channel Predictions BJP/NDA Congress/UPA  Others
CNN News 18 336 82 24
India Today 339-365 77-108 69-95
Republic 305 124 113
Times Now 306 132 104
News X

News 24

 

 

242

350

 

 

 

 

164

95

 

 

 

136

97

 

மேலே உள்ள அட்டவணையில், News X, News 24 சேனல்களின் கணிப்புகளில் பெரும் வித்தியாசம் இருப்பதைக் கவனித்தீர்களா? இந்த நிறுவனங்கள் எத்தகைய வழிமுறைகளை, வாக்காளர் பகுதிகளைக் (நகர்ப்புற, கிராமப்புற என) கையாண்டு, இப்படி முடிவுக்கு வந்தன? சொல்ல மாட்டார்கள். ட்ரேட் ஸீக்ரெட்.

பொதுவாக, இவ்வகை எக்ஸிட் போல்-கள், வரப்போகும் உண்மையான முடிவுகளை  நெருங்குவதில்லை என்கிற விமரிசனங்கள் உண்டு. சமீபத்தில் இதுபற்றி இரு கருத்துக்கள் பத்திரிக்கைகளில் காணப்பட்டன. இந்திய துணை ஜனாதிபதி ஆந்திராவில் நேற்று பேசுகையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், சரியான முடிவுகளாக அமையவேண்டியதில்லை என்றார். காங்கிரஸின்  ஷஷி தரூர் சொன்னது: துல்லியமாக சர்வே, கணக்கீடுகள் செய்ய வாய்ப்புள்ள, வளர்ந்துவிட்ட ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்கூட, பெரும்பாலான எக்ஸிட் போல்கள், கணிக்கும் முயற்சியில் தோல்வியுற்றிருக்கின்றன.

இருக்கலாம். நமது நாட்டின் தேர்தல் முறைகள், நகர வாக்காளர்களைத் தாண்டி, கிராமப்புற வாக்காளர் மனநிலையைக் கணிப்பதில், உண்மையான வாக்களிப்பு விகிதங்களை அளவிடுவதில் காணும் நடைமுறை சிரமங்கள் மிக அதிகம். தங்களிடம் கேள்விகேட்கும் தேர்தல் சர்வே/டிவி நிறுவன ஊழியர்களிடம் வாக்காளர்களில் பலர் மனம் திறந்து உண்மையைச் சொல்லமாட்டார்கள்தான்.

இருந்தும், கடந்த 2014 பொதுத் தேர்தலில் பங்கேற்ற பல டிவி சேனல்கள்/நிறுவனங்களின் எக்ஸிட் போல்-களில், நேஷனல் சேனல்களில் ஒன்றான  ’நியூஸ் 24’ சேனலின் கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தின. கீழே அட்டவணையைக் கொஞ்சம் பாருங்கள்:

2014 Elections

 

News24 (2014 Predicted)

Actual Results 2014

BJP (NDA)

 

340

336

 

Cong.(UPA)

 

70

60

 

Others

133

147

இந்தமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் கணிப்புகளில் ஏதாவது, உண்மையை, இறுதி முடிவுகளை நெருங்கக்கூடுமா? மே 23-தான் பதில் சொல்லவேண்டும்!

தமிழ்நாட்டு லோக்சபா தொகுதிகளின் தேர்தலுக்கான எக்ஸிட் போல்(கணிப்புகள்)-களை சில முக்கிய சேனல்கள் வழங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில், ஜெயலலிதா இல்லாத அதிமுக சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல்.  என்ன சொல்ல இருக்கிறது? போறாக்குறைக்கு ‘பரிசுப்பெட்டி’ சின்னம்வேறு (டிடிவி தினகரன் அணி), அதிமுக வாக்குகளை நிச்சயம் உடைத்துவிட்டிருப்பதால், டிவி சேனல்களின் கணிப்புப்படி திமுக-வின் காட்டில்தான் மழை பெய்வதாகத் தெரிகிறது. எத்தனை வருடந்தான் ஸ்டாலினும் காத்திருப்பது!

தமிழ்நாடு(லோக்சபா தொகுதிகள் 39) எக்ஸிட் போல் கணிப்புகள் சில:

டைம்ஸ் நௌ:   திமுக+காங்கிரஸ்  29 , அதிமுக+பிஜேபி  9.

நியூஸ் 24 :   திமுக+காங்கிரஸ் 17, அதிமுக+பிஜேபி 12, மற்றவை 9.

இந்தியா டுடே:    திமுக+காங்கிரஸ் 34, அதிமுக+பிஜேபி  4.

இதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ’இந்தியா டுடே’ கணிப்பு சரியாக இருக்கலாம்போலிருக்கிறதே!

**

சுஜாதா காட்டிய ஆக்டன் நாஷ்

சுஜாதா ஒரு கவிதை  ப்ரியர். தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலக் கவிஞர்களையும் ஆசையாகப் படித்திருக்கிறார். அவர் யாரைத்தான், எதைத்தான் படிக்காமல் இருந்திருக்கிறார்? அல்லது  படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார்? சங்கக் கவிதையாக இருக்கட்டும்; சற்றுமுன் பிறந்து எழுத ஆரம்பித்துவிட்ட  கவிஞனாக இருக்கட்டும். தன்னிடம் வந்துசேர்ந்தால், அவர் அதை அக்கறையோடு படித்திருக்கிறார். தன் வாசகர்களுக்காக அதை எழுதி வைத்திருக்கிறார்.

அமெரிக்க சமகாலக் கவிஞரான ஆக்டன் நாஷ்-ஐ (Ogden Nash), ஐயா ரசித்திருக்கிறார் என அவரது கட்டுரை ஒன்றிலிருந்து தெரிகிறது. யாரிந்த நாஷ் எனத் தேடியபோது அவரைப்பற்றி இப்படி ஒரு கமெண்ட் கிடைத்தது: An Ogden Nash poem a day, keeps the sadness away ! அட, அமெரிக்க ஆப்பிளே! மரபிலிருந்து மாறுபட்டு, சுயமாக  வார்த்தைகளை சிருஷ்டித்தும்கூட எழுத்தில் சாகஸம் காட்டியவர் நாஷ். மென் கவிதைகள். எளிதாகத் தோன்றும் வரிகளில், ஹாஸ்யத்தோடு, தன்னை சுற்றி இருக்கும் சூழலின் ஆழ்ந்த அவதானிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் .

அவரது சிறு கவிதைகள் சிலவற்றை எடுத்து, இங்கே மொழியாக்கம் செய்திருக்கிறேன்:

 

நடுவில்

காலையை எப்படியெல்லாம் தொடர்ந்தது மாலை

கடந்துபோன அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்

எனக்குப் பிடித்தமான எவ்வளவோ விஷயங்கள்

இன்னும் இருக்கின்றன மறைந்துவிடவில்லை

இன்னமும் எனக்குப் பிடிக்கும் பல சங்கதிகள்

இன்னும்.. பிறக்கவே இல்லை

**

இந்தக் குயில்கள்

குயில்கள் மரபெதிர் வாழ்க்கையையே வாழ்கின்றன

கணவனாக மனைவியாக அவை தோற்றுப்போகின்றன

அதனால் மற்றவைகளின் மணவாழ்க்கையை

மறவாது தூற்றிப் போகின்றன..

**

அணில்

நான் கூச்ச சுபாவமுடையவன்

என் நண்பர்களனைவருக்கும் தெரியும்

என்னைவிட இரட்டிப்புக் கூச்சம்

அந்த அணிலுக்கு உண்டு

சின்னத்திரையின் ஒளிர்வரிகளைப்போல்

தீர்மானிக்கமுடியா மனதோடு

திகைப்போடு தாவும் இங்குமங்கும்

மேகத்தின் நிழலைப்போன்றது அல்லது

எமிலி டிக்கின்சனின்* சத்தமாக

வாசிக்கப்பட்ட கவிதை.

* Emily Dickinson: ‘The poet of paradox’ என அழைக்கப்பட்ட, 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கப் பெண் கவிஞர்.

மோசமான தாத்தா

 

அப்பறமா வாங்கித்தரேண்டா கண்ணு!

என்று தாத்தா சொன்னாரானால்

எப்போதுமே அது கிடைக்கப்போவதில்லை

எனப் புரிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு

பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை

*

விளம்பரப் பலகைகள்

 

மதர்ப்பாய் உயர்ந்து எங்கும் நிற்கின்றன

இந்த விளம்பரப் பலகைகள்

இதுகள் ஒழிந்தாலன்றி

மரங்களைப் பார்க்கும்

வாய்ப்பு வரப்போவதில்லை

**

அவன்

 

இந்தக் கல்லுக்குக் கீழேதான்

அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான்

விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டே வந்தவன்

வீதியைப் பார்க்க மறந்துவிட்டான் !

**

வள்ளுவர் பாணியில், கபீரின் சாயலில், க்ரிஸ்ப்பான   ஈரடிக் கவிதைகள் சில எழுதியிருக்கிறார் நாஷ். அதில் ஒன்றை அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன்.  மொழியாக்கம் செய்தால், முக அழகு  போய்விடும்!

God, in his wisdom,  made the fly

And then,  forgot to tell us why

**

கவிஞன் என்பவன் ஒரு கடவுள். அவனது எழுத்து அவனது சிருஷ்டி. அது எப்படியோ அது அப்படித்தான். இலக்கண சட்டகங்களை மற்றும் அற்பமான அளவுகோல்களைத் தாண்டியது அவனது கலை, என இங்கே புரிதல் வேண்டும். கீழ்வரும் கவிதையில், இலக்கணக்குற்றம் ’கண்டு’ முகம் சுழிக்கும் ’பண்டிதர்கள்’, இந்த இடத்தில் விலகிக் கொள்ளுங்கள். ஆசுவாசமடையுங்கள். ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக!

நாஷின் ஒரிஜினல், அப்படியே கீழே: ( மொழியை மாற்றுகிறேன் எனக் கையை வைத்தால் கழண்டுகொண்டுவிடும் எல்லாம் !)

Octopus

Tell me, O Octopus, I begs
Is those things arms, or is they legs ?
 
I marvel at thee, Octopus
 
If I were thou, I’d call me Us
 

(ரசித்த சுஜாதா, தன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட நாஷ் கவிதைகளில் இதுவும் ஒன்று!)

**

என் கனவு

 

இது என் கனவு

என் சொந்தக் கனவு

நான்தான் அதைக் கண்டேன்

என் தலைமயிர் ஒழுங்காக

வாரப்பட்டிருப்பதாக கனவு கண்டேன்

அப்புறம் இன்னொரு கனவும் கண்டேன்

என் உயிர்க்காதலி வந்து

அதைக் கலைத்துவிட்டதாக!

**

இன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை

 

இன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை

இறைவன் புரிந்துகொள்வார் நம்புகிறேன்

நீலமும் வெள்ளையுமாய் பொங்கும் கடல்

மணலில் சுற்றிச்சுற்றி மழலைகள் குழந்தைகள்

கோடைநாட்கள்* எவ்வளவு குறுகியவை

எனது காலமும்தான் எவ்வளவு குறைவானது

அவருக்குத் தெரியும் எல்லாம்

களித்து முடித்து அங்கு நான் வரும்போது

கடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்

**

* இது அமெரிக்கக் கோடை எனப் புரிந்துகொள்க !

 

 

 

 

ஞானத்தின் ஒரு பொட்டு விதை

19-20 -ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் மெய்யியல் ஞானி, கவிஞர், ஓவியர், சிற்பி என்றெல்லாம் எண்ணற்ற அபிமானிகள்,வாசகர்கள், ரசிகர்களின் வர்ணனைகள். மத்திய கிழக்கில், லெபனானில்  ஒரு மலைக் கிராமத்தில் (அந்தக்காலத்திய சிரியப் பகுதி) பிறந்து வளர்ந்து, அந்தப் பிரதேசத்தின் ஒரு மோசமான அன்னிய ஆதிக்கப் பின்புலத்தில், குடும்பத்துடனும் மற்றவர்களுடனும் லெபனானிலிருந்து புறப்பட்ட கப்பலொன்றில் ஏறி, அதுகொண்டுபோய்விட்ட தேசமான அமெரிக்காவில், புலம்பெயர்ந்து வாழ நேர்ந்தது அவருக்கு. நியூயார்க்கில் இளமைக் காலத்தைக் கழித்தவர். இளமைக்காலமா? உண்மையில், முதுமையின் பக்கமே அவர் வரவில்லை. 47-ஆவது வயதிலேயே ’போதும், வா!’ என்றுசொல்லிவிட்டதுபோலும், அந்த உலகம். அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியவர். ‘தி ப்ராஃபிட் (The Prophet) அவருடைய உலகப்புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு. வசன கவிதையாகப் பொழிந்திருக்கிறார் மனுஷன். ’முறிந்த சிறகுகள்’ (The Broken Wings) – அரேபிய மொழியில் அவரது முதல் நாவல் – பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பெரும்பாலான அவரது படைப்புகள் நண்பர்களுக்கு என எழுதப்பட்ட அரேபிய மற்றும் ஆங்கில மொழி கடிதங்களை ஆதாரமாகக்கொண்டவை.  சிறந்த ஓவியங்கள் பல வரைந்திருக்கிறார் எனினும் அவை லெபனானுக்கு அனுப்பப்பட்டதால், மேலைநாட்டு ரசிகர்கள், விமரிசகர்களின் பார்வையில் வரவில்லை. ஆகவே அதிகம் பேசப்படுவதில்லை.

ஒரு தேவதை போல,  காலமெனும் வெளியைக் கடந்த ஞானியாக, அவரை  மதித்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அதில் சிலர், அவரது வார்த்தைகள் யேசுவையும், பழைய ஏற்பாட்டின் கருத்துக்களையும் எதிரொலிப்பதாகக் கூறுகின்றனர். உலகின் மற்றுமொரு பகுதியில், அவரை ஆபத்தானவராக, இளைஞர்களுக்கு விஷம் ஊட்டும் பாவியாகப் பார்த்து வெறுத்தவர்களும்  இருந்திருக்கிறார்கள். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அவரது அரேபியப் படைப்பான ‘Spirits Rebellious’ (புரட்சி ஆன்மாக்கள்) கட்டுக்கட்டாக  வீதியில் போட்டுக் கொளுத்தப்பட்டது. அவருக்கெதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran).

’ஆன்மாவின் கண்ணாடிகள்’ எனும் அவரது புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கொஞ்சம் சிந்திக்கவைத்தது; கொஞ்சம் ஆழத்தில் அழுத்தி வேடிக்கை பார்த்தது.  லேசாக, பகிர்கிறேன்.

**

இந்த பூமி மூச்சுவிடுகிறது. நாம் வாழ்கிறோம். அது கொஞ்சம் நிறுத்திப்பார்க்கையில், நாம் இறந்துவிடுகிறோம்.

**

அழவைக்காத ஞானம், சிரிக்கவைக்காத தத்துவம், குழந்தைகளின் முன் பணியவைக்காத உயர்வு, புகழ் இவற்றிலிருந்து என்னைத் தள்ளி வை, இறைவா..

**

நம்மிடையே கொலைகாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கொலையையும் செய்ததில்லை. திருடர்கள் இருக்கிறார்கள். எதையும் அவர்கள் திருடியதில்லை. பொய்யர்கள் இருக்கிறார்கள். உண்மையைத் தவிர வேறெதையும் அவர்கள் பேசியதில்லை.

**

அடுத்தவீட்டுக்காரனிடம் உன்னைப் பாதிக்கும் பிரச்னைபற்றி நீ பிரஸ்தாபிக்கையில், உன் இதயத்தின் ஒரு பகுதியை  அவனுக்குக் காண்பிக்கிறாய். அவன் அருமையான ஆத்மாவானால், உனக்கு நன்றி சொல்கிறான். சிறுமனதுக்காரன் எனில், உன்னைக் குறைசொல்லி ஏளனம் செய்கிறான்.

**

எதையும் மறுப்பதென்பதும், எதிலும் வேறுபடுவது என்பதும், மனித அறிவின் (intelligence) கீழ்நிலையே.

**

எவ்வளவு உச்ச ஆனந்தம் அல்லது துக்கத்தில் நீ இருக்கிறாயோ, அதற்கு எதிர்விகிதமாக, உன் கண்களுக்கு இந்த உலகம்  சிறியதாகத் தோன்றும்.

**

வீரம் என்பது ஒரு எரிமலை. குழப்பத்தின் விதை அதற்குள்ளே முளைக்காது.

**

பிரபஞ்சத்தில் ஒளிந்துகொண்டிருக்கும், பிரபஞ்சத்திலேயே, பிரபஞ்சத்திற்காகவே  இருக்கும் ஓ! உயர் ஞான வடிவே! நான் சொல்வதைக் கேட்க உன்னால் முடியும் – ஏனெனில், எனக்குள்ளேயேதானே இருக்கிறாய் நீ. என்னை உன்னால் பார்க்கமுடியும் ; நீதான் அனைத்தையும் பார்ப்பவனாயிற்றே. உனது ஞானத்தின் ஒரு பொட்டு விதையை என் ஆன்மாவுக்குள் விதைத்துவிடு. உன் காட்டில் அது முளைத்து வளர்ந்து, உன் பழமொன்றைத்  தரட்டும்.

**

குறிப்பு: கொஞ்சம் இடைவெளிவிட்டு, ஜிப்ரான் பற்றி மேலும் எழுதுவேன் எனத் தோன்றுகிறது ..

எனக்காகப் பரிந்துகொண்டுவந்த அம்மா ..

 

ஒன்பது வயதுதானிருக்கும் எனக்கு அப்போது. அன்று அந்த பெரிய லைப்ரரியில் முன்பு எடுத்த புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தபின், வரிசை வரிசையாக நின்றிருந்திருந்த விதவிதமான புத்தகங்களை, ஆசை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா திரும்பி வந்து என்னை பிக்-அப் செய்யுமுன், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டும்.

அப்போதுதான் என் கண்ணில் பட்டது அந்தப் புத்தகம் . பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. குறிப்பாக  அட்டையில் வரையப்பட்டிருந்த அந்தப் படங்கள்..ஆஹா! என்ன அழகு.. உள்ளே கடலுக்கடியில் ஏதோ இருப்பதாக…ஒரு புது உலகத்தை அல்லவா அது காண்பித்தது. கடலுக்கடியில் வாழ்வது என்கிற ஐடியாவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு பெரிய புத்தகம் என்பதோ, அதன் எழுத்துக்கள் சிறியதாக, நெருக்கமாக அச்சடிக்கப்பட்டிருந்ததோ எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. நான் அதையெல்லாம் பார்க்கவேயில்லை. அதைத் தூக்கிக் கொண்டு லைப்ரரியன்  முன் வந்து நின்றேன்.

லைப்ரரியன் அந்தப் புத்தகத்தைப் பார்த்தார். ‘Twenty Thousand Leagues Under the Sea’  by Jules Verne. பிறகு குனிந்து என்னை ஆழமாகப் பார்த்தார். என்ன பார்க்கிறார்? நானும் குனிந்து என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். சட்டையை நான் சரியாகப் போட்டுக்கொண்டிருக்கவில்லை.. என் ஒரு காலின் ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டிருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். ’இந்தப் புத்தகம் உனக்குக் கடினமானது!’ அதைத் தூக்கித் தன் பின்னாலிருந்த ஒரு ஷெல்ஃபின் வரிசையில் போட்டார். அதற்கு ஒரு லாக்கரிலேயே அதை வைத்துப் பூட்டியிருக்கலாம் எனத் தோன்றியது எனக்கு. ஏமாற்றத்துடன், தலை குனிந்தவாறு திரும்பினேன். மேற்கொண்டு குழந்தைகளுக்கான புத்தகப் பகுதிக்கு வந்தேன். குரங்குப் படம் போட்ட ஒரு படக்கதைப் புத்தகம். எடுத்துக்கொண்டு லைப்ரரியனிடம் வந்தேன். அவர் அதை உடனே ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்துவிட்டார்.

சிறிது நேரத்தில் என் அம்மா. லைப்ரரி முன் எங்கள் கார் மெல்ல வந்து நின்றது. நான் லைப்ரரி வாசல் கதவைத் திறந்துகொண்டு இறங்கினேன். காரில் ஏறி அம்மாவுடன், முன் சீட்டில் உட்கார்ந்துகொண்டேன். மடியில் அந்த குரங்குப் புத்தகம்.  அம்மா இக்னிஷனை ஸ்டார்ட் செய்தாள். கார் நகர்ந்தது. மெல்ல என் புத்தகத்தை நோட்டம் விட்டாள்.

‘நீ இந்தப் புத்தகத்தை முன்பே படித்திருக்கவில்லை?’  கேட்டாள் அம்மா.

’ம்..!’ என்றேன் எங்கோ பார்த்துக்கொண்டு.

’பின் ஏன் வேறொரு புத்தகம் எடுக்கவில்லை?’ மீண்டும் விடாது அம்மா.

”அது எனக்குக் கடினமானதாம். அவர் சொன்னார்..’ என்றேன்.

’யார் அந்த அவர்? என்ன கடினமானது உனக்கு?’

’அந்த லைப்ரரியன் லேடிதான் அப்படிச் சொன்னது!’.

அம்மா வண்டியை உடனே திருப்பினாள். மீண்டும் லைப்ரரி முன்வந்து நின்றாள். என்னை அழைத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். கதவைத் திறந்துகொண்டு லைப்ரரிக்குள் சென்றோம். லைப்ரரியன் முன் நாங்கள் இருவரும் இப்போது.  என்ன? – என்பதுபோல் எங்கள் இருவரையும் பார்த்தார் அந்த லைப்ரரியன்.

’ஏதோ கடினமானது இவனுக்கு என்று சொன்னீர்களாமே!’ – அம்மா ஆரம்பித்தாள். குரலில் சற்றுக் கோபம்.

லைப்ரரியனின் முகம் இறுகியதைப் பார்த்தேன். பின் பக்கம் திரும்பி ஷெல்ஃபிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தார். மேஜையின் மேல் வைத்தார்:

‘ஜூல்ஸ் வர்ன்’-இன்,  ’ட்வெண்ட்டி தௌஸண்ட் லீக்ஸ் அண்டர் த ஸீ ! ’ என்றார் புத்தகத்தைக் காண்பித்து. இப்போ புரியுதா இது இவனுக்கு சரியா வராதுன்னு என்பதுபோலிருந்தது லைப்ரரியனின் பார்வை.

என் அம்மா புத்தகத்தை சரியாகப் பார்க்கக்கூட இல்லை. ’இதை இஷ்யூ பண்ணுங்கள் முதலில்!’ என்றார் குரலை உயர்த்தி, அழுத்தமாக. வயது முதிர்ந்தவர்களிடம் இப்படியெல்லாம் பேசுபவளில்லை,  என் அம்மா . நான் பயந்துபோனேன்.

லைப்ரரியன் வேறு வழியின்றி அதனை ஸ்டாம்ப் செய்ததுதான் தாமதம்.

’இனிமேல் இவனுக்கு எதுவும் கடினமானது என்று சொல்லாதீர்கள்!’ அம்மா அதனை உடனே எடுத்து என் கையில் திணித்தாள்.

‘வா!’ என்று என்னிடம் சொல்லிவிட்டு வேகமாகக் கதவை நோக்கி நடந்தாள். அம்மாவின் பின்னே புத்தகத்துடன் ஓடினேன். கதவைத் திறந்து காரில் ஏறினாள். நான் அம்மாவுக்கருகில் உடனே தவ்வி உட்கார்ந்துகொள்ள, காரை ஸ்டார்ட் செய்து வேகமெடுத்தாள். நாங்கள் இருவரும் ஏதோ ஒரு வங்கியைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பி ஓடுவதுபோன்ற குற்ற உணர்ச்சி பரவியிருந்தது என் மனதில். கூடவே, போலீஸ் நம்மைத் துரத்திக்கொண்டுவருவார்கள்.. நாம் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதுபோன்ற கடும் அச்சம். பதற்றத்துடன் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். சலனமில்லை. நிதானமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்..

*

நாம் மிகவும்  நேசிக்கும் ஒரு நபருடன் கழிக்க, மீண்டும் ஒரு நாள் கிடைத்தால், அந்தப் பொழுதை எப்படி செலவழிப்போம்  என்கிற ஏக்கமான சிந்தனை எழுப்பும் நெருக்கமான உணர்வினைப்பற்றிச் சொல்கிறது, அமெரிக்க எழுத்தாளரான மிட்ச் ஆல்பம் எழுதிய ’இன்னுமொரு நாளுக்காக’ (‘For one more day’ by Mitch Albom) என்கிற தத்துவார்த்தமான நாவல்.

மேலே நான் எழுதியிருப்பது, ‘For One More Day’-ல், தன் அம்மா சம்பந்தப்பட்ட சிறுவயது நிகழ்வொன்றை, பிற்காலத்தில் ஹீரோ அசைபோடும் அத்தியாயம் ஒன்றிலிருந்து.

மேலும் –

Mitch Albom, American Writer

எழுத்தாளர்களின் பாடு பெரும்பாடுதான்போலிருக்கிறது எங்கும். இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டு படைப்பு/பதிப்புச் சூழல் மிகவும் அபத்தமானது. வெளிநாடுகளில் இவ்வளவு மோசமில்லை. பிரசுரித்து வெளியிட்டுவிடலாம், ஓரளவு முயற்சியும், வசதியும், சரியான தொடர்பும் இருந்தால். ஆனாலும்  எழுத்தாளன் என்றாலே, ஒரு எகத்தாளம்தான், கிண்டல்தான், கேலிதான் அங்கும்.  ஒரு பிரபல அமெரிக்க பிரசுரிப்பாளர், எழுத்தாளர் மிட்ச் ஆல்பமிடம் சொன்னது: ‘உங்களால், கடந்தகால நினைவுகளின் தொகுதி (Memoirs) ஒன்றை எழுதவேமுடியாது !’ பப்ளிஷிங் ஹவுஸ் நடத்துபவர்கள், பணம்படைத்தவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் உலகெங்கும். இதையெல்லாம் தாண்டித்தான், எழுத்தாளர்கள் முளைவிட்டு வளரவேண்டியிருக்கிறது..

**