மெல்பர்னில் நேற்று (27/2) மகளிர் டி-20 போட்டியில், இந்தியா நியூஸிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பையின் செமிஃபைனலில் பிரவேசித்திருக்கிறது.
முதலில் பேட் செய்த இந்தியா ஷெஃபாலியின் தாக்குதலினால், துவக்கத்தில் ரன்களை வேகமாகக் குவித்தது. ஆனால் ஷெஃபாலி 14-ஆவது ஓவர் வரை விளையாடியும் இந்திய ஸ்கோர் 140-ஐக்கூட எட்டமுடியவில்லை. காரணம் ஷெஃபாலி, தான்யா தவிர மற்ற வீராங்கனைகள், பிட்ச்சிற்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். இந்த மேட்ச்சில் ஸ்ம்ருதி மந்தனா ஆடியும் ஒரு புண்ணியமும் இல்லை. இப்படி ஆடினால் எப்படி 150-160 என்கிற அளவுக்கு ஸ்கோரை உயர்த்தமுடியும்? ஏனெனில் இனிவரும் போட்டிகளில் இப்படி வழிந்தால் ஒப்பேற்றமுடியாது.
நியூஸிலாந்து வீராங்கனைகளின் வெண்ணெய் விரல்களால் ஷெஃபாலிக்கு 3 ‘லைஃப்’ கிடைத்தது! அப்படியும் அவரால் அரைசதத்தை எட்டமுடியவில்லை. அவரது 46 தான் இந்திய அணியில் டாப் ஸ்கோர். அதில் 4 பௌண்டரிகளோடு வழக்கம்போல் 3 சிக்ஸர்கள்! அடுத்ததாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மனான தான்யாவின் 23. நன்றாக ஆடும் ஜெமிமாவும் 10 ரன்களில் காலி. தீப்தி, வேதாவினால் நின்று ஆடமுடியவில்லை. கேப்டன் கௌர் இந்தியா விளையாடியிருக்கும் 3 மேட்ச்களிலும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. செமிஃபைனலிலாவது ஏதாவது செய்வாரா நமது தலைவி? இந்தியக் கோச் டபிள்யூ.வி.ராமனின் முகத்தில் கவலைக்கோடுகளின் குடியேற்றம்..

134 என இந்தியா கொடுத்த டார்கெட், நியூஸிலாந்துக்கு அல்வா சாப்பிடுவதுபோல் இருந்திருக்கவேண்டும். ஆனால், விரைவிலேயே நியூஸிலாந்து 34க்கு 3 விக்கெட் என ஆனதால் தடுமாற்றம். க்ரீன் (24), மார்ட்டின்(25) நிலைமையை சரிசெய்ய முயன்றார்கள். இருந்தும் இந்திய ஸ்பின்னர்கள் -பூனம், ராதா, ராஜேஷ்வரி- விக்கெட்டுகளை அவ்வப்போது வீழ்த்தினர். 90க்கு 5 என சரிந்துவிட்ட ஸ்கோரை, ஆல்ரவுண்டர் அமேலியா கேர் (Amelia Kerr) தன் கையில் எடுத்துக்கொண்டார். இந்தியாவின் சிறந்த பௌலரான பூனம் வீசிய 18-ஆவது ஓவரிலேயே தன் வேலையைக் காண்பித்தார். 4 பௌண்டரிகள். பந்தை நன்றாக ஸ்பின் செய்யவிட்டுத் தள்ளி நின்றுகொண்டு ஃபைன் லெக் திசையில் தூக்கிவிட்டு அசத்தினார். நேற்று அமேலியாவின் பிறந்தநாளா! அவரே நியூஸிலாந்தை ஜெயிக்கவைத்துவிடுவார் போலிருந்தது. நியூஸி அணியே அவரிடமிருந்து இந்த ஆவேசத்தை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிந்தது.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை நியூஸிலாந்து வெற்றிக்கு. ஷிகா பாண்டே மிதவேகத்தில் வீசினார். முதல் பந்தே பவுண்டரி என அலறியது. அடுத்தடுத்து டைட் செய்தார் ஷிகா. 5-ஆவது பந்தில் கேர் ஒரு ஃபோர்! கடைசி பந்தில் 4 எடுக்கவேண்டும் என்கிற நியூஸி நெருக்கடியில், ஷிகா ஒரு யார்க்கரைப் போட்டு நியூஸி ஷோவை ஸ்விட்ச்-ஆஃப் செய்தார். ஜென்சன் ரன் அவுட்.இருந்தும் 1 லெக்-பை. அமேலியா கேர் 34 நாட்-அவுட் என நிற்க, இந்தியா 3 ரன்னில் தப்பிப் பிழைத்தது; நுழைந்தது செமிஃபைனலில்.
இப்போதிருக்கும் நிலைப்படி பார்த்தால், அடுத்த க்ரூப்பிலிருந்து இங்கிலாந்து செமிஃபைனலில் அனேகமாகப் புகுந்துவிடும். செமிஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அல்லது பாகிஸ்தானோடு மோத வாய்ப்பிருக்கிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தானை வீழ்த்திவிட்டது என்றபோதிலும். பார்ப்போம் பெண்களின் கதை எப்படி வளரப்போகிறது என.
**