யாம் பெற்ற இன்பம் !

பெருமாளுக்குக் கல்யாண உத்சவம்
செய்துவைக்க ஒரு ஆசை மனதில்
பக்திமட்டுந்தானா காரணம்
அவனும் பட்டுவிட்டுப் போகட்டுமே
நாம் படுகிற கஷ்டமெல்லாம்
என்கிற நல்லெண்ணமும்தான் !

**

சோலாப்பூர்

ஞாபகமிருக்கிறதா அப்பா!
வருஷா வருஷம் மார்கழிக் குளிரில்
செம்பாட்டூர் வந்து கடை போடுவார்களே
பந்தலில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் தொங்க
ஜனங்களின் கண்கள் ஆச்சரியப் பெரிசாக
கூவிக் கூவி ஏலம் போடுவார்களே
தரமான போர்வை சோலாப்பூர் போர்வை
போனா வராது பொழுதுபட்டாத் தங்காது
ஒருதரம் ரெண்டுதரம் மூணுதரம்
கொடுங்கய்யா கொடுங்க பணத்தை
பிடிங்கய்யா பிடிங்க சோலாப்பூர்
ஞாபகம் வருகிறதா அப்பா
அதே சோலாப்பூர் தான்
அதில்தான் நின்று இளைப்பாறிக் கிளம்புகிறது
நான் பயணிக்கும் ரயில் வண்டி

**

கோடைப்பாடல்

அடர்பச்சை மரத்தினில்
மஞ்சள்மூக்கு மைனாக்கள்
மனம்விட்டுப் பேசுகின்றன
மயங்கி விளையாடுகின்றன
அனல்பறக்கும் மதியவேளை
அவசரமாய் அணுகுமுன்
கீச்சுமூச்சுப் பாட்டுக்கச்சேரியை
வேகமாய் முடித்துக்கொள்கின்றன
மழை மேகம் கூடிவருமோ
மாதங்கள் பல கழியுமோ
வரப்போகும் துளிகள் விண்ணிலிருந்தோ
வதைபடும் உயிர்களின் கண்ணிலிருந்தோ

**

போகிறபோக்கில்..

ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது
நகர்ந்துகொண்டிருக்கிறது காலம்

ஆணென்றும் பெண்ணென்றும்
அதுவென்றும் இதுவென்றும்
வந்துகொண்டிருக்கின்றன
போய்க்கொண்டிருக்கின்றன
பல்வேறு வடிவங்களில் உயிர்கள்

ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது
நகர்ந்துகொண்டிருக்கிறது காலம்

**

மமதை ஏன் மனிதனே !

நீ மட்டுந்தானா உயர்வாய் சிந்திப்பவன்
நீலனை வானில் தேடிக் கைகூப்புகிறவன்
மரங்களும் செடிகொடிகளும்கூடத்தான்
தலை உயர்த்திப் பார்க்கின்றன
வானத்தை நோக்கியே காலமெலாம் வளர்கின்றன
பலவிதமான பூக்களை உயர உயரமாய் ஏந்தி
பரந்தாமன் ஏற்பான் எனப் பரவசமாய் நிற்கின்றன
பூஜிப்பவன் நீ மட்டும்தான் என நினைத்தாயா !

**

சிரிக்கலாம் காலம்

எப்போதும் குலைக்கும் தெருநாய்
எப்போது மூடும் உன் திருவாய்
சட்டெனக் கேட்டுவிட்டான் அவன்
துணுக்கென்றது இவனுக்கு
ஆசுவாசப்படுத்திக்கொண்டு
ஆழச் சிந்திக்கையில் அது புரிந்தது
உண்மைதான் அவன் சொன்னதும்
உறவென்றும் அன்பென்றும் பந்தபாசமென்றும்
உணர்த்துவதாய் எண்ணி இவன் பேசுகையில்
உளறுவதாய்த் தோன்றியிருக்கிறது அவனுக்கு
இவனின் புகட்டு மொழிக்கும்
அவனின் பகட்டு வழிக்கும் இடையில்
அன்பினாலும் நிரப்ப முடியாத
அகன்ற பள்ளத்தாக்கு
பாதகம் ஒன்றுமில்லை
பதட்டப்பட ஏதுமில்லை
காலம் ஒன்றும் அதிகமில்லை
கதை முடிந்துவிடும் ஒருநாள்
கிடத்தப்படுவான் இவன் ஒரு மூலையில்
உடனகற்றி அவர்கள் எரிப்பார்கள்
உள்ளுக்குள் கள்ளமாய்ச் சிரிப்பார்கள்

**

மண்ணில் மனிதர்கள்

சரித்திரம் ஆய்ந்தால்
சட்டெனப் புரிந்திடும்
மனிதர் வாழ்வின்
மகத்துவம் தெரிந்திடும்

பட்டத்து இளவரசன் எனக்
கொட்டம் அடித்தவர்
திக்குமுக்காடித்
திசையற்றுப் போயினர்

எனக்கு நிகர் நானே என
எகிறிக் குதித்தவர்
தடயம் ஏதுமின்றித்
தன்னாலே மறைந்தனர்

பகட்டும் செருக்கும்
பலநாள் வாழ்ந்ததில்லை
அகந்தையும் ஆணவமும்
அதிக நாள் நிலைத்ததில்லை

—————————
மேற்கண்ட கவிதை டோக்கியோ பொங்கல் மலரில் வெளிவந்தது

Russian Poetry : யேவ்துஷென்கோ

ரஷ்யாவின் புகழ்பெற்ற நவீனக்கவிஞர். ஜோசப் ஸ்டாலினின் கொடுங்கோலாட்சியின் கடுமையான சட்ட திட்டங்கள், கெடுபிடிகளுக்கு நடுவே ரஷ்யாவில் கவிஞனாகத் தன் இளமைக்காலத்தை வாழ முயற்சித்தவர். அதனால் பல இன்னல்களுக்குள்ளானவர். 1956-ல் தன் 23-ஆம் வயதில், ‘ஸீமா ஜங்க்ஷன்’ என்கிற புகழ் பெற்ற கவிதையை எழுதினார். உடனேயே இவரது பெயர் ரஷ்ய மக்களின் கவனம் பெற்றது. ஆனால், தனித்துவம், சுதந்திரத்தன்மை இவற்றைத் தன் கவிதைகளில் அதிகமாக வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாற்றப்பட்டு தான் படித்துவந்த ‘கார்கி இலக்கியக் கழக’த்திலிருந்து அடுத்த ஆண்டே, யேவ்துஷென்கோ (Yevgeny Yevtushenko)  வெளியேற்றப்பட்டார். ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவில் ஆட்சிக்கு வந்த குருக்ஷேவ்வின் காலத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோருக்கு ஓரளவுக்கு கருத்துச்சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற கவிதைகளை எழுதினார் யேவ்துஷென்கோ. 1961-ல் இவர் எழுதிய ‘பாபி யர்’ என்கிற கவிதை இவர் எழுதியவற்றிலேயே அதிகப் புகழடைந்தது. ரஷிய சிந்தனை, கலாச்சாரம், சமூக நிலை ஆகியவற்றை ஒருசேர, மேலைநாடுகளுக்குப் படம்பிடித்துக் காண்பித்தது. இரண்டாம் உலகப்போரின்போது யூதர்கள் ஜெர்மானியர்களால் கொல்லப்பட்டதைப்போலவே, ரஷ்ய அரசும் யூதர்களை வேரறுக்க முயன்றது, அதை ரஷ்யா தனது சரித்திரத்திலிருந்து நீக்கியிருந்தது. அது ஒரு சமூக, சரித்திரக் குற்றம் என விவரிக்கிறது இந்தச் சர்ச்சைக்குரிய கவிதை. இதனால் இன்னல்களுக்குள்ளானார் யேவ்துஷென்கோ. இந்தக் கவிதை ரஷ்யாவிலிருந்து கடத்தப்பட்டு மேலை நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டது. முறையாக இசை அமைக்கப்பட்டு யேவ்துஷென்கோவின் மற்ற கவிதைகளோடு மேலை நாட்டு அரங்கங்களில் பாடப்பட்டு புகழ் அடைந்தது.
இது ரஷிய அரசிற்கும் பெரும் சர்வதேச நெருக்கடியைப் பெற்றுத்தந்தது. 1984வரை இந்தக் கவிதை ரஷ்யாவில் அதிகாரபூர்வமாகப் பிரசுரிக்க அனுமதிக்கப்படவில்லை.

In ‘Time’ magazine’s cover

ஏகப்பட்ட சர்ச்சைகளின் ஊடே எழுதிக்கொண்டிருந்த யேவ்துஷென்கோ, போரிஸ் பாஸ்டர்னாக், ராபர்ட் ஃப்ராஸ்ட் போன்ற சமகால எழுத்தாளர்களால் பாராட்டப்பெற்றார். 2000-க்குப்பின்தான் இவருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் இவரது தாய்நாட்டிலேயே கிடைக்க ஆரம்பித்தது. 2000-ல் ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தினர் தாங்கள் கண்டுபிடித்த நட்சத்திரம் ஒன்றிற்கு இவரது பெயரை வைத்தனர். 2001-ல் ரஷ்ய அரசாங்கம் சைபீரியாவிலுள்ள இவரது பிறந்த நகரான ஸீமாவிலுள்ள இவரது பூர்வீக வீட்டைப் புனரமைப்பு செய்து, அதனை ஒரு கவிதை மியூசியமாக மாற்றிக் கௌரவித்துள்ளது.

யேவ்துஷென்கோ 1933-ல் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் ஸீமா என்னும் நகரத்தில் பிறந்தவர். இயற்பெயர்: யேவ்ஜெனி அலெக்சாண்ட்ரோவிச் காங்னஸ். விவாகரத்தின் காரணமாக தந்தையை சிறுவயதிலேயே பிரிய நேர்ந்தது. தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். தன் அம்மாவின் பெயரான யேவ்துஷென்கோ என்கி்ற பெயரையே தன் பெயராகக்கொண்டு கவிதைகள் எழுதினார். முதல் கவிதை அவரது 16 ஆவது வயதில் பிரசுரமானது.

யேவ்துஷென்கோவின் ‘பொய்கள்’ என்று தலைப்பிடப்பட்ட கவிதையைக் கீழே, மொழியாக்கம் செய்து தந்திருக்கிறேன்:

பொய்கள்

இளைஞர்களிடம் பொய் சொல்வதெல்லாம் தவறானது
அந்தப் பொய்களை உண்மைதான் என
அவர்களிடமே நிரூபிக்க முயல்வது
அதைவிடவும் தவறு
சொர்க்கத்தில் கடவுள் இருக்கிறார்
உலகத்தில் எல்லாம் சரியாகவே இருக்கின்றன
என்றெல்லாம் அவர்களிடம் சொல்லாதீர்கள்
அவர்களுக்கு எல்லாம் தெரியும்
அவர்களும் மனிதர்கள்தானே
மாறாக, வாழ்வில்
எண்ணற்ற துன்பங்கள் வரவிருப்பதைப்பற்றிக்
கூறுங்கள் அவர்களிடம்
எதிர்காலத்தில் எதைஎதையெல்லாம்
எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதோடு
நிகழ்காலத்தையும் அவர்கள்
நன்றாகப் புரிந்துகொள்ளட்டும்
வாழ்வில் பெருந்தடைகள் இருப்பது உண்மைதான்
அவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டும்
கஷ்டமும் சோகமும் கூடவே வரும்தான்
என்பதையெல்லாம் தெளிவாக
அவர்களிடம் சொல்லிவிடுங்கள்
இதில் என்ன வந்துவிடப்போகிறது
சந்தோஷத்திற்காகத் தரவேண்டிய விலை என்ன
என்பதை அறியாதவன் ஒருநாளும் வாழ்வில்
சந்தோஷமாக இருக்க மாட்டான்
அவர்களிடம் நீங்கள் காணும் தவறுகளை
ஒருபோதும் மன்னித்துவிடாதீர்கள்
பன்மடங்காக அவைகள் உருவெடுத்து
நம்மை நோக்கியே நிச்சயம் திரும்பி வரும்
அப்படி வந்த பிறகு
நாம் அவர்களை மன்னித்தது போல
நமது மாணாக்கர்கள், நமது பிள்ளைகள்
நம்மை மன்னிக்க மாட்டார்கள்

யேவ்துஷென்கோ

அந்தஸ்து

கூட்டம் கூட்டிக்
கேலி செய்கிறாய்
குற்றம் காண்கிறாய் எப்போதும்
முழுசாகவே என்னைப்
புதைத்துவிடத்தான் பார்க்கிறாய்
இருந்தும் உன்னை
எதிர்க்காது விடுகிறேன்
பொறுத்துப் போகிறேன்
தவிர்த்துவிடுகிறேன் மோதலை
தலைகுனிந்தவாறு
அங்கிருந்து அகன்றுவிடுகிறேன்
படிக்காமலேயே கிடைத்துவிடுகிறது
பலவீனன் என்கிற பட்டம்

**

பதறாதே மனமே

இனம் இனத்தோடுதான் சேரும்
சேர்ந்தபின்னே அந்த இனத்தின்
புகழையே ஓயாது பாடும்
அதன் பின்னே ஓடும் ஆடும்
உலக இயற்கைதான் இது
அறிவீர்! அறிந்தே
அடுத்த காரியத்தைக் கவனிப்பீர்!

***