கிரிக்கெட் : வாய்ப்பாட்டு – கோஹ்லி, தபலா-வில் சாஸ்திரி

 

வருஷத்துக்கு 10 கோடி என அடித்த கிரிக்கெட் போர்டு லாட்டரி, இதுவரை விராட் கோஹ்லிக்கு ’ஜிங்-சக்’ போட்டுக்கொண்டிருந்த  ரவி சாஸ்திரியை, ’தபலா’ ப்ளேயராக உயர்த்தியிருக்கிறது. சமீபத்தில் அவர் வாயினாலேயே வந்து விழுந்தது இது: இந்தியாவின் இளம் மிடில்-ஆர்டர் அதிரடி ரிஷப் பந்த் பற்றி – ‘சரியாக ஆடாவிட்டால், மணிக்கட்டில் ஒன்னு போடுவேன்..’ என்று பத்திரிக்கையாளர்முன் கெத்து காட்டுவதாக நினைத்து முதலில் உளறல். மேற்கொண்டு அவர்களின் கேள்விக்கு நம்ப கோச் தெள்ளுமணி அளித்த பதில்தான் இது: ’பின்னே என்ன, தபலா வாசிக்கவா நா கோச்சா வந்திருக்கேன்!’ அப்பிடிப் போடு.. நீயல்லவா கோச்சு !

ஜிங்-சக்-ஆ, தபலா-வா, அதாவது கர்னாடிக் மியூஸிக்கா அல்லது ஹிந்துஸ்தானியா -எதைப்போட்டு, கேப்டன் கோஹ்லியைக் கவர்வது என்பதில்தான் இந்தியக் கிரிக்கெட் பயிற்சியாளரின் முழு கவனம். கிரிக்கெட் ‘கோச்’ எனும் பதவியை, பொறுப்பை, உலகில் வேறெந்த அணியின் பயிற்சியாளனும் இந்த உயரத்துக்குக் கொண்டுசென்றதில்லை.  ஒரு இந்திய ‘ரெகார்ட்’! புதிதாக அணியில் வந்திருக்கும், அல்லது ’ரஞ்சி’யில் கஷ்டப்பட்டு விளையாடி ரன்னெடுத்து, தேசிய அணிக்குத் திரும்பியிருக்கும் வீரர்கள், தேசிய அணியில் சரியாக ஆடினால் என்ன, ஆடாவிட்டால் என்ன, டீம் ஜெயித்தால் என்ன, நாசமாய்ப் போனால்தான் என்ன, ’கேப்டன் கோஹ்லி என்ன சொல்றாரு, எதுக்கு சிரிக்கிறாரு, அதுக்கு ஏத்தபடி ஜிங்-சக்.. ஜிங்-சக்.. அல்லது தபலா தட்டல் .. சரியாப்போட்டு கச்சேரியை முடிக்கிறதுதான் கோச் ரவி சாஸ்திரியின் சித்தாந்தம். இந்த லட்சணத்துல இந்த  ’மூஞ்சி’யை ‘செலெக்ட்’ செய்ய மூன்றுபேர் கொண்ட கமிட்டியாம், அதுதான் தேர்ந்தெடுத்ததாம். ஏற்கனவே கடுப்பிலிருக்கும் ரசிகர்களுக்கு காதுகுத்திப் பார்க்கும் கிரிக்கெட் போர்டு.

தபலாவைத் தாண்டி, ரவி சாஸ்திரி பாங்கரா-வும் சேர்ந்து (Bangra – Punjabi dance form) கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் அவருடைய திட்டங்களுக்குத் தோதாக இருக்கும். ஏனென்றால் விராட் கோஹ்லி ஒரு பஞ்சாபி. அவரது தர்மபத்தினி அனுஷ்காவும் அப்படியே. கிரிக்கெட் டூர்களின்போது கோஹ்லியை உற்சாகப்படுத்த அனுஷ்கா அந்தந்த ஊர்களுக்கு விசிட் செய்கிறார். அசட்டு ஜோக்கடித்து, சிரிக்கவைத்து, பக்கத்தில் நின்று பல்லைக்காட்டி செல்ஃபீ எடுத்து – இப்படி ஏதாவது செய்து அவரையும் இம்ப்ரெஸ் பண்ணுவதும் சாஸ்திரிக்கு நல்லது. எதுக்கும் ஒரு சேஃப்ட்டிக்குத்தான். அடுத்த கோச் காண்ட்ராக்ட் நிச்சயமாகிவிடும். மேலும் ஒரு பத்து கோடி. கவாஸ்கர் பள்ளியில் அந்தக்காலத்திலேயே ’தேறின’ மனுஷனாச்சே. எழுபதுகளின் இறுதியில், பாம்பேயின் பத்மாகர் ஷிவால்கர் போன்ற எவ்வளவோ  ஸ்பின்னர்கள் இந்திய அணிக்குள் வரத் தகுதியோடு துடித்துக்கொண்டிருக்க,  கொல்லைவழியாக ரவி சாஸ்திரி ‘நுழைந்ததே’, அப்போதைய இந்திய/பாம்பே கேப்டன் கவாஸ்கருக்கு ‘சேவை’ செஞ்சதனால்தானே.. அந்த வெற்றி ஃபார்முலா வாழ்நாளெல்லாம் இப்படிக் கைகொடுக்கிறதே, சித்தி வினாயகா!

கடந்த இரு வருடங்களாக இந்த கோஹ்லி-சாஸ்திரி ஜோடியின் கேலிக் கூத்துகளால் ஆங்காங்கே அடி வாங்கி வீங்கிக்கிடக்கிறது இந்திய கிரிக்கெட். உலகக்கோப்பைக்கு முன்பிருந்தே, அதற்கான தயார்நிலை போட்டிகளில் நான்காம் நிலை ஆட்டக்காரர் தேர்வு என்று சொல்லிக்கொண்டு எத்தனை வீரர்களின் கேரியருடன் விபரீத விளையாட்டு. சுரேஷ் ரெய்னாவிலிருந்து தொடங்கி, மனிஷ் பாண்டே-யை ‘சோதித்து’, பின்னர் அம்பத்தி ராயுடு. ராயுடுதான் எங்கள் நம்பர் 4 பேட்ஸ்மன் என்று வெளிப்படையாகவே சொல்லிவந்தார் கோஹ்லி. திடீரென அவரை அலட்சியப்படுத்தி நீக்கினார்கள். பின்னர் விஜய் ஷங்கர். ‘த்ரீ-டைமன்ஷனல் ப்ளேயர்’ என தேர்வுக்குழுவின் விளக்கம் வேற. அவரை சேர்த்து இரண்டொரு போட்டிகளில் போட்டு, ட்ரிங்க்ஸ் தூக்கவைத்து, உட்காரவைத்து, காயம் என்று விரட்டி.. என ஒரு பக்கக் காட்சி. இடையில், பெஞ்சிலேயே உட்கார்ந்துகொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கின் ஞாபகம் செமி-ஃபைனலின்போது கோஹ்லி-சாஸ்திரிக்கு வர, அவர் அந்த போட்டியில் தடுமாறி பலி. இந்தியாவும் காலி! அதே மேட்ச்சில், தோனியை ஏழாம் நம்பரில் அனுப்பி அணிக்கு ஏற்பட்ட அவமானம். கடைசியில் இந்த முட்டாள்தனத்திற்காக பலி கொடுக்கப்பட்டது பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் (Sanjay Bangar). இந்தியா வெளியேறிய அந்த செமிஃபைனலில், தோனி அவுட்டாகி, திரும்பிவந்து பெவிலியன் படிகளில் ஏறும்போது, அவசரமாக அவர்முன்னே ஓடிவந்து சமாளிக்க முயன்ற ரவி சாஸ்திரியின் முகத்தைக் கூடப் பார்க்காமல், ட்ரெஸ்ஸிங்க் ரூமுக்குள் பறந்த தோனி.. எல்லாவற்றையும் ரசிகர் பார்த்தார்கள். பார்த்துவருகிறார்கள்.

உலகக்கோப்பை அவமானத்துக்குப் பின், சாஸ்திரியை தூக்கி எறிய அருமையான சான்ஸ் கிடைத்தது போர்டிற்கு. ஆனால், போர்டு என்ன செய்தது? கபில் தேவ், அன்ஷுமன் கேய்க்வாட், ஷாந்தா ரெங்கஸ்வாமி (முன்னாள் பெண்கள் அணி கேப்டன்) என மதிக்கத்தகுந்த பேர்களைக் கொண்ட கமிட்டியை உருவாக்கி, இந்த அணி அடுத்த ‘கோச்’-ஐத் தேர்வு செய்யும் என்று தப்பிக்க வழிபார்த்தது. அந்தக் கமிட்டியிடம் கோச் பதவிக்காக, ரவி சாஸ்திரியோடு, மைக் ஹெஸ்ஸன் போன்ற வேறு தகுதியான விண்ணப்பங்களும் வந்து சேர்ந்தன. இடையில்  மெத்த புத்திசாலியான கேப்டன் கோஹ்லி என்ன செய்தார்? ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார்: ’ரவி சாஸ்திரி தேர்வானால் நன்றாக இருக்கும்!’ க்ளீயர் சிக்னல். ’கமிட்டி’ கேப்டனின் விருப்பத்தை நிறைவேற்றி ஒதுங்கிக்கொண்டது. அனில் கும்ப்ளேயை, கோஹ்லியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போர்டு முட்டாள்தனமாக கோச் பதவியிலிருந்து நீக்கியபோது, முன்னாள் வீரர் மதன் லால் சொன்னது ரசிகர்களின் நினைவில் இன்னும் இருக்கும்: ’கோஹ்லியின் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கவேண்டுமா! பின்னே, இந்தியாவுக்கு கோச் எதற்கு? கேப்டனே எல்லாவற்றையும் பார்த்துக்கட்டுமே!’

இதோ, தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து,  விளையாடிக்கொண்டிருக்கிறது. டி-20 தொடரை சமன் செய்துவிட்டது.  இரண்டாவது போட்டியில் இந்தியாவைப் பதற அடித்தனர். அக்டோபர் 2-ல் டெஸ்ட் ஆரம்பம். ஏற்கனவே, புத்திமதிகளால் குழம்பி நிற்கும் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் பற்றி விமரிசிக்காதவர், யாருமில்லை! (He is fearless, but careless!) கேப்டனும், கோச் சாஸ்திரியும்வேறு சேர்ந்துகொண்டு அவரைத் திட்டி, துவட்டிக் காயப்போட்டுப் பார்க்கிறார்கள்! போதாக்குறைக்கு  இரண்டு நாட்கள் முன்பு, அஷ்வின் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையிடம் ரவிசாஸ்திரியின் உளறல்:  “அஷ்வின் ஒரு உலகத்தரமான ஸ்பின்னர். ரவி ஜடேஜாவும் அப்படியே. குல்தீப் யாதவும் உலகத் தரத்துக்கு வந்துகொண்டிருக்கிறார். மேலும் ஸ்பின்னர்கள் உலகத் தரத்துக்கு வருவார்கள் ! அதனால், அஷ்வின் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் என்று சொல்லமுடியாது! “  அடடா! என்ன ஒரு தெளிவு..  தீர்க்கதரிசனம்…டெஸ்ட்டில் நம்பர் ஒன் வி ‘க்கெட் கீப்பரான வ்ருத்திமான் சாஹா பாவம். என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார் ஒரு மூலையில். பார்க்கப்போனால் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான இரண்டு டெஸ்ட்டுகளிலும் சாஹாதான் விக்கெட்-கீப் செய்யவேண்டும். என்ன நடக்குமோ..  ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேரியரையும் காவு வாங்கிவிடுவார்களோ என்கிற அச்சமும் ரசிகர்களின் மனதில் ஏற்பட்டிருக்கும். இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறதோ, கோஹ்லி-சாஸ்திரி  கூட்டணி ஆட்சியில் ! எல்லாம் நம் தலைவிதி…

**

ரூமி : கவிதைவழி வெளிப்பாடுகள்

 

சில சமயம் எதிர் இருப்பவரைப் பார்த்தும், சில சமயம் தன்னையே நோக்கியும், பிறிதொரு சமயம் காதல் என்றோ இறை என்றோ மனதில் எட்டிப்பார்த்ததையெல்லாம் எழுதி இருப்பதாக இவரது கவிதைகள் தோற்றம் தருகின்றன. எப்படியிருப்பினும், படிப்போரைப் பிடித்திழுக்கின்றன, ஒரு விளையாட்டுப்பிள்ளைபோல். சரி, மேலே ரூமி :

 

உன்னை நோக்கிவரும் அந்தக் குரல்
வார்த்தைகள் இல்லாதது
கவனி ..

**


மௌனமாக இரு
மௌனத்தின் உலகம்
பிரும்மாண்டமானது
முழுமையானது.

**


உன் பாதை அது
உனக்கானது மட்டுமே
உன்னோடு சிலர் பயணிக்கலாம்
ஆனால் அவர்களால்
உனக்காகப் பயணிக்கமுடியாது..

**
வாசிப்பதன் மூலம் கற்றுக்கொள்வாய்
ஆனால்
அன்பின் மூலமே புரிந்துகொள்வாய்

**
மகாசமுத்திரத்தின்
ஒரு துளியல்ல நீ
முழு சமுத்திரமே நீதான் -
ஒரு துளியாக.

**
ஒரு மரத்தைப்போல் இரு
பட்டுப்போனவற்றை
விட்டுவிடேன்.

**
வேரில் மட்டுமே கிடைக்கும் ஒன்றினை
ஒருவேளை
கிளைகளில் தேடிக்கொண்டிருக்கிறாயோ நீ?

**
தாளவொண்ணாத் துன்பத்தில்
தள்ளுகிறதே உன்னை - அதுவேதான்
உன்னை ஆசீர்வதிப்பதும்
இருள்தான்
உன் ஒளிவிளக்கு

**
இந்த மதங்கள் அனைத்தின்
துதிப்பாடல்கள் எல்லாம்
ஒரே பாடலாக..
உன்னில் அமைதி நிலவட்டும்

**

உளமிறங்கி நீ செய்த
உதவிகளெல்லாம்
அந்த மாபெரும் கருணையின்
அதிசயவண்ண இறக்கைகள்
நீ சென்றுவிட்ட பின்னும்
நீங்காது சிறகடிக்கும்
ஏனையோரையும்
ஏற்றிப் பிடிக்கும்

**
அலையடிக்கும் நீர்
அமைதி பெறட்டும்
நிலவும் நட்சத்திரங்களும்
உன் அகக்கண்ணாடியில்
ஜொலிப்பதைக் காண்பாய்
**

இறையைத் தேடுகிறாய்
அங்கேதான் பிரச்னையே
உன்னிலிருக்கும் அதுவோ
உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது..

**
உனக்குள்ளேயே செல்வதான
அந்த நெடிய பயணத்தை
என்றுதான் தொடங்கப்போகிறாயோ?

**
பயணத்தைத் தொடங்குமுன்
வீட்டைவிட்டு வெளியில்
காலையே வைத்திராதவர்களின்
புத்திமதியைக் கேட்டுவிடாதே
**

தட்டு
அது திறக்கும்
மறைந்துபோய்விடு
ஆதவனென உன்னை ஒளிரவைக்கும்
வீழ்ந்துவிடு
சொர்க்கத்திற்கே கொண்டுபோய்விடும்
நான் என்பது ஒன்றுமேயில்லை என்றாகிவிடு
எல்லாமே நீதான் என ஆக்கிவிடும்

**

பின்வருவனவற்றில், தன்னைப்பற்றிய சிந்தனைகள் மேலிடுகின்றனவே ரூமிக்கு :

நேற்றுவரை
சாமர்த்தியசாலியாக இருந்தேன்
உலகை மாற்றிவிட விரும்பினேன்
இன்றோ
அறிவாளியாகிவிட்டேன்
என்னை மாற்றிக்கொள்கிறேன்
**

தேடுபவனாக இருந்தேன்
இன்னமும் அவ்வாறே ..
இப்போது
புத்தகம் என்ன சொல்கிறது
கோள்கள் என்ன சொல்கின்றன
என்பதையெல்லாம் விட்டுவிட்டு
என் ஆன்மா பேசுவதைக்
கேட்க ஆரம்பித்திருக்கிறேன்
**
பறவைகளைப்போலப் பாட விரும்புகிறேன்
யாரெல்லாம் கேட்பார்களோ
என்னவெல்லாம் நினைப்பார்களோ
என்கிற கவலை ஏதுமின்றி
**
என் ஆன்மா
எங்கிருந்தோ வந்திருக்கிறது..
அங்கே போய்ச்சேரவே
விருப்பம்.
**

இறையை, ஆதிமுதலை, அன்பே என்கிறார், நண்பா என்கிறார் இப்படி தோன்றியபடியெல்லாம். தன் மனதின் அல்லாடலை அவதானிக்கிறாரோ இங்கே:

நம்பிக்கையை இழந்துவிடாதே மனமே
கண்ணுக்குப் புலப்படாத அவனில்தான்
அதிசயங்கள் உலவுகின்றன
உலகே உனை எதிர்த்தாலும்
உன் கண்களை அந்த நண்பனின்
மேலேயே வைத்திரு
**
மனக்காயத்தின் வழிதான்
மங்காத அந்த ஒளி
பிரவேசிக்கிறது உனக்குள்..
**

பறவைகளின் பாடல்
மனதின் ஏக்கத்திற்கு
ஒரு வடிகால் போன்றது
அவைகளைப்போல்தான்
குதூகலமாயிருக்கிறேன் நானும்
ஆனால்
சொல்வதற்கு ஏதுமில்லை என்னிடம்
பிரபஞ்ச ஆத்மாவே..
எனக்குள் வந்து
என் மூலமாக ஏதாவது
பாட முயற்சியேன்..

**
என்னாலான படகினில்
தாமதமாகத்தான் ஏறியிருக்கிறேன்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
வெளிச்சம் இல்லை
நிலமேதும் தென்படவில்லை
இருண்ட மேகங்களின் கீழே
நீருக்கு மேலிருக்க முயல்கிறேன்
எனினும் ஏற்கனவே கீழேபோய்
கடலோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

**

பெண், காதலி, காதலர்நிலை என்றெல்லாமும் சிந்தனை அவ்வப்போது .. :

பெண் என்பவள் 
அந்தப் பேராற்றலின் 
மெல்லொளி
**

உன்னை யார் கூப்பிட்டது இங்கே
கோபமே ரூபமாய் அவள் ..
உன் ஆன்மாதான் என்றேன்
மெதுவாக
**

ஒளியும் நிழலும்
அன்பின் நாட்டியமே
அன்பிற்குக் காரணம்?
ஏதுமில்லை
அது கடவுளின் ரகசியம்
அன்பு செலுத்துபவனும்
அன்புக்குரியவளும்
பிரிக்கமுடியாதவர்கள்
காலங்கடந்தவர்கள்
**
ரணகளமான இவ்வுலகிலும்
ரகசிய இடமொன்றைக் கண்டுபிடிக்கிறார்கள்
காதல்வயப்பட்டவர்கள்
அழகினை ஆரவாரமின்றிப்
பரிமாறிக்கொள்ள
**

இந்த இடத்தில் காதலியிடம் சொல்கிறாரா இல்லை, 
காலங்கடந்தவனிடம் பேசுகிறாரா, ஜலாலுத்தீன் ரூமி  :

நானொரு சிற்பி
உருவங்களை வடிவமைப்பவன்
ஒவ்வொரு கணத்திலும்
ஒரு தேவதையை வடிக்கிறேன்
இருந்தும், உன்னைப் பார்த்தவுடனே
அவற்றையெல்லாம் உருக்கிவிடுகிறேன்
ஆயிரம் உருவங்கள் செய்து
அவற்றில் ஆன்மாவைச் செலுத்திட முடியும்
ஆனால், உன் முகத்தைப் பார்க்கையிலோ
அவற்றைத் தீக்குள் எறிந்துவிடவே விருப்பம்
உன் சுகந்தத்தை அறிந்த என் ஆன்மா
உன்னில் கசிகிறது கலக்கிறது
அதிலாழ்ந்து மகிழ்கிறேன் நான்
நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும்
இந்த பூமியிடம் சொல்கிறது
காதலில் ஆழ்ந்திருக்கையில்
அன்போடு ஒன்றாகியிருக்கிறேன் என.
மண்ணும் நீருமான இந்த வீட்டில்
என் இதயம் நொறுங்கிக் கிடக்கிறது
ஒன்று, இந்த வீட்டினுள் நுழைந்துவிடு
இல்லை, என்னைப் போகவிடு
**

கீழ்வரும் கவிதையில் முதலில், மேற்கோளுக்குள் வருவது, ரூமியிடம் ஒரு பொழுதில், உயிர்நண்பன் ஷாம்ஸ் சொன்னதாக இருக்குமோ…

'உன் அன்பிருக்கும்
வீடு மட்டுமே நான்.
அன்பே அல்ல.
நிஜமான ஏக்கமென்பது
கண்டறிய முடியா அந்தப் புதையலை
நோக்கி இருக்கவேண்டும்
புதையலை வைத்திருக்கும்
பெட்டியை நோக்கி அல்ல'

அன்பெனும் உண்மை
தனித்துவமானது
உன்னுடைய ஆரம்பமும்
முடிவும் அதுவே
அதைக் கண்டபின்னே
உனக்கு வேறெதுவும் தேவைப்படாது
மாயமும் அதுவே
இறுதியில் சிக்குவதும் அதுவே
யாரையும் சார்ந்திராதது
உணர்வுநிலைகளின் தேவதை.
மாதமென வருடமென
காலத்தின் வடிவங்களெல்லாம்
நிலவின் அடிமைகள்
நிலவோ அது சொற்படிக் கேட்பது
அது விரும்புகையிலேதான்
உடம்பு ஆன்மாவாகிறது..

**

உன் ஒளி என்மீது விழ
அன்புமயமாகிறேன்
உன் பேரழகை உணர்கையில்
கவிதை வருகிறது
யாரும் பார்க்கமுடியாதபடி
என் நெஞ்சில் ஆடுகிறாய்
சிலசமயங்களில்
பார்த்தும்விடுகிறேன்
என்மேல்பட்ட அந்த ஒளிதான்
இந்தக் கலையாக
மாறியிருக்கிறது

**

காலமெனும் வாள் அதன்
உறையினின்று வெளியே
நெருங்கி நெருங்கி வரும்
உடலின் ஆசை..
கலந்துவிட ஆசைப்படாதே
அதைவிட நெருக்கமானது ஒன்றுண்டு
கடவுளுக்கு இன்னொரு கடவுள்
ஏன் வேண்டும்?
எல்லா சம்பந்தங்களிலிருந்தும்
அது உன்னை விடுவிக்குமாறு
அன்பு செலுத்து
ஆத்மாவின் ஒளி அன்பு
காலைப்பொழுதின் ருசி
’நான்’ இல்லை, ’நாம்’ இல்லை
’இருத்தல்’ என்பதாக ஏதுமில்லை
தன் குறைகளை அழிக்க
நெருப்பு தன்னை எரித்துக்கொள்கையில்
எழும் புகையே இந்த வார்த்தைகள்
அமைதியில், அழுகையில்
கண்களின் அல்லது முகத்தின் நிலைபோன்று.
அன்பை வார்த்தைகளில்
கொண்டுவரமுடியாது

**





ரூமி – கொஞ்சமாக . .

 

பிரதானமாக இப்போதிருக்கும் ஈரான், ஆஃப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிக்கிஸ்தான் மற்றும் சுற்றுப்பகுதிகள்  நிரவிய பெரும் நிலப்பகுதியே அந்தக் காலத்திய பர்ஷியா. பர்ஷியாவின் தலைசிறந்த கவிஞர், ஞானி என அறியப்பட்டு, இன்றளவும் கொண்டாடப்படுபவர் 13-ஆம் நூற்றாண்டின் ரூமி. ஜலாலுத்தீன் ரூமி (Jalaluddin Rumi).  1207-ல் இவர் பிறந்த இடம் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் உள்ள பால்க் (Balkh) எனும் ஊர்.  ரூமி சிறுவனாக இருக்கும்போது பர்ஷியாவின் மீது மங்கோலியர்கள் அடிக்கடிப் படையெடுத்துத் தாக்கினார்கள். ரூமியின் குடும்பம் நிலைகுலைந்தது. நிலம்பெயரும்படி ஆனது.  பாக்தாத், மெக்கா, டமாஸ்கஸ் என எங்கெங்கோ அலைந்து திரிந்து,  ஒருவழியாக துருக்கியில் தஞ்சம் புகுந்தது.  அங்குள்ள கொன்யா (Konya) என்ற ஊரில்தான், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாழ நேர்ந்தது ரூமிக்கு.

ரூமியின் தந்தை,  அவருடைய காலத்தில் ஒரு சூஃபி அறிஞர் என அறியப்பட்டவர். சூஃபி என்பது இஸ்லாமின் தனித்துவமான ஒரு பிரிவு. பொதுவான சமயச்சடங்குகள், வழிமுறைகளைத் தாண்டி,  இறைஞானத்தின் உயர்நிலையை நோக்கிப் பயணிக்கும், தேடுதலின் உச்சநிலை என சான்றோரால் அறியப்படுவது. தன் தந்தையிடமிருந்து நிறையக் கற்ற ரூமிக்கு, இளம் வயதிலேயே ஞானவழியின் ஆரம்பங்கள் தூரத்துக் காட்சிகளாக தெரியவந்திருக்கலாம்.

சிந்தனையில் ரூமி
பின்னணியில்…

அவருடைய தந்தை மறைந்தபோது வாலிபனாக இருந்த ரூமி ஒரு செல்வந்தர். மதவியலும் சட்டமும் முறையாகப் படித்து சமூகத்தில் மதிக்கத்தக்கப் பெரியவராக இருந்தவர். புனித சமய நூல்களில் ஆழ்ந்திருப்பதும், மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்துவதுமாகத்  தன் பொழுதினைக் கழித்துக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவரது வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அவரது மத்திம வயதினில் வந்து சேர்ந்தார் அந்த ஊருக்கு ஒருவர். வயது சரியாக மதிக்கமுடியாத கந்தல் கிழிசல் தோற்றம். ஒரு நிலையற்ற நிலையில், ஏகாந்தமாக ஒரு மனிதன். சமூக, சமயத் தடைகளைக் கண்டுகொள்ளாத, வினோதமான, சிலசமயங்களில் ஏடாகூடமாகக்கூட என்றும் சராசரி மனிதர்களால் பார்க்கப்படும் சிந்தனைகள், செயல்பாடுகள் அவருடையது. தான் ஒரு பைத்தியக்காரனாக, வேண்டத்தகாதவனாக மற்றவர்களால் பார்க்கப்படுவதைப்பற்றிய கவலை எள்ளளவும் இல்லை. அவரைப் பார்த்தவுடனேயே ரூமிக்கு என்னமோ  தெரியவில்லை,  பிடித்துப்போய்விட்டது. அவர்தான் ஷாம்ஸ் என ரூமியின் நண்பராகக் குறிப்பிடப்படுபவர். அவரோடு சேர்ந்து ரூமி பழகியிருந்தது, நெருங்கி அளவளாவியது என்னவோ இரண்டே வருடங்கள்தான். ஆனால், அந்தக் குறுகிய காலத்திலேயே ரூமியின் வாழ்வைத் தலைகீழாகப் பிரித்துப்போட்டார் ஷாம்ஸ். ரூமியின் சிந்தனைத்தளம் மிரண்டது. உருமாறியது. ரூமி புரிந்துகொண்டார். தானொரு வசதியான குடும்பத்தில் வந்த எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு பிரமுகர். தன் நண்பனோ ஒரு நாடோடி. பித்தன். ஒன்றும் இல்லாதவன். ஒன்றுமில்லை எனும் பிரக்ஞையும்கூட இல்லாதவன். மனம் போனபடி இயங்குபவன். சமூகத்தின் எந்த இறுக்கங்களும், சட்டங்களும் அவனை ஒன்றும் பாதிக்கவில்லை. அவனை எதுவும் தீண்டுவதாகவே தெரியவில்லை. வேறு ஏதோ ஒரு உலகத்தைச் சேர்ந்தவன்போலும். ஆ.. இவனே எனக்கானவன். என் உயிர்.. என் ஆசான். யாருக்கு, யார் மூலமாய் கண் திறக்கும் என்பதை மேலே உள்ளவனல்லவோ சொல்கிறான் என மயங்கினார் ரூமி. மதித்தார். ஷாம்ஸைத் தவிர அவர் மனதை வேறெதுவும் ஆட்கொள்ளவில்லை அதற்குப்பின் அவரது வாழ்நாளில்.

ஷாம்ஸைப்பற்றி ஊர்க்காரர்கள் இப்படிப் பேசிக்கொண்டார்கள். ஒரு நாடோடி.  அகங்காரன், கிறுக்கன். சமூக விரோதி. அவன் ஒரு பறவை.. இதில் சில சரியாக இருக்கலாம். பறவை? ஷாம்ஸினால் ஒரு இடத்தில் வெகுநாள் இருக்கமுடியாது என்பதைப் புரிந்துகொண்டிருந்தார்கள் அவர்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஷாம்ஸ், ஒன்றிலிருந்து ஒன்று தொலைவில் இருந்த இரண்டு ஊர்களில் காணப்பட்டதாகக் கிசுகிசுத்து மிரண்டார்கள். எங்கெங்கோ நொடியில் போய் காணாமற்போய்விடும் பறவைக் குணம். அல்லது விசித்திர சக்தி ?

ரூமியின் இருபதுகளிலேயே ஒரு முறை அந்த ஊருக்கு வந்த ஷாம்ஸ் ரூமியைக் கவனித்திருந்தார். ஆனால் காலம் இன்னும் கனியவில்லை என்று தோன்றியிருக்கிறது. தனக்காக ஒரு மேதை-சிஷ்யனை (சீடன் – அறியாதவன்; ஆனால் உள்ளுக்குள்ளே, மேதையாக உருவாகுமாறு படைக்கப்பட்டவன்), தன் காலம் தாண்டியும் உலகினால் மதிக்கப்படும், பேசப்படும் ஒரு ஆன்மாவைத் தேடிக்கொண்டிருந்தார் ஷாம்ஸ். தன் இரண்டாவது வருகையில் ரூமியை அந்த ஊரின் சந்தையில் காணநேர்ந்தவருக்குப் புரிந்தது.  சந்தித்துப் பேச ஆரம்பித்தார். இருவரும் பழகினர். ஒரு மனதாக நெருங்கினர். விளைவு? ஆன்மீகத் தாக்கத்தின் உச்சம். ரூமி ஒரு சுதந்திர ஆத்மாவாகத் தன்னை உணரத் தொடங்கினார். உண்மை அவருக்குள் ஊர்ந்தது, ஆழம் பார்த்தது. மாறுதல்களை தடாலடியாக அறிமுகம் செய்தது. அதற்கப்புறம், எதையும் தன்னிலையிலேயே சுயமாக அணுக ஆரம்பித்தார். ஆராய்ந்தார். காலாவதியாகிவிட்ட, ஊசிப்போன சமூக நம்பிக்கைகள், மதச் சடங்குகளைக் கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்திருந்தார் ரூமி. தனிமனிதனை, சமூகத்தைத் தன் செயற்கைக் கெடுபிடிகளால், சட்டங்களால் பயமுறுத்தும் மதம் எதுவாயினும் அது விஷத்துக்கு சமம் என்றார் வெளிப்படையாக.  இறையை அறிதல் என்பது அவ்வகை பாதக நடவடிக்கைகளை முழுதுமாகப் புறந்தள்ளி, முன்னேறும் பயணம். பயம், அவமானம், குற்ற உணர்வு போன்றவைகளைத் தாண்டியது தூய அன்பு. அதனைச் சார்ந்தே, அதில் ஊறியே வாழ்வில் ஒருவன் பயணிக்கவேண்டும் என்பதில் வந்தது தெளிவு.

வெவ்வேறு வகைமை சார்ந்தது எனத் தோன்றும், ஆனால் இறுதி உண்மையை நோக்கியே விடாது பயணிக்கும் ரூமியின் கவிதைகள் (70000-க்கும் மேல்) இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், மேலும், மேலும் உலகெங்கும் ஆர்வமாக வாசிக்கப்பட்டன. ரூமி என்கிற ஞானி, கவிஞரின் நூதன வாழ்க்கையைப்பற்றி, அது முக்கியம் ஆதலால் – அதன் மறைக்கப்பட்ட பகுதிகளையும் கருத்தில்கொண்டு – Rumi’s Untold Story-From 30-year Research என்கிற ஒரு புத்தகம் (Amazon) எழுதியிருக்கிறார் விருதுபெற்ற அறிஞரும், ரூமி கவிதைகளின் புகழ்பெற்ற மொழியாக்கம் தந்தவருமான ஷாஹ்ராம் ஷிவா. அதில்,  ரூமி பெரிதும் போற்றும், தன்னை ஆற்றுப்படுத்தியவராகக் கருதும் ஷாம்ஸ், ரூமி வசித்த ஊரிலேயே ரூமியின் இளைய மகனால் கொல்லப்பட்டதாக வருகிறது. கட்டுப்பெட்டி சமூகம், மதக்கோட்பாடுகள் விதித்த சட்டதிட்டங்களை மதிக்காதுபோனதோடு, சமூகத்தைக் கெடுப்பதாக(?), வேற்று சிந்தனைகளை விரித்த ஷாம்ஸ் காணப்பட்டிருக்கவேண்டும்; அதற்குத் தண்டனையாக கௌரவக் கொலை செய்ப்பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார் நூலாசிரியர். தன் உயிரின் உயிராய், குருவாய் ஷாம்ஸை மதித்த ரூமியை, இந்தக் கொடும் நிகழ்வு அதிரவைத்தது. ஒரேயடியாகத் துவளவைத்தது. முடங்கிக் கிடந்தார் சில நாட்கள். ஆழ்ந்த துக்கம் தந்த மயான அமைதி, அதன் வெடிப்பாக, வெளிப்பாடாக, ஆன்மீக, தத்துவச் சிதறல்களாக, கவிதை, கவிதையாக  எழுதிக் குவித்தார் தன் கடைசிக் காலத்தில். சோகத்தின் உச்சத்தில், தன்னைக் கலாபூர்வமாகத் தேற்றிக்கொள்ள முயன்றிருக்கிறார் ரூமி. தனக்குப்பின், எங்கே இந்த உலகம் ஷாம்ஸ் எனும் மகாமனிதனை, தன் ஆத்மநண்பனை மறந்துவிடுமோ என்கிற அச்சத்தில், தான் எழுதிய பல கவிதைகளின் கீழே ஷாம்ஸ் என்றே குறிப்பிட்டிருக்கிறாராம் ரூமி. தன் சிந்தனாமாற்றத்தின், ஆக்கங்களின் ஊற்று தன் நண்பனே என்கிற புரிதலையும், அதற்கான ஆத்மார்த்த நன்றியறிதலையும் ரூமி இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கவேண்டும். மங்காத ஜீவன் அவருடைய கவிதை வரிகளில் உலவுவதாலேயே, இன்றும் சற்றும் குறையாத ஆவலோடு வாசிக்கப்படுகிறார் ரூமி. வாசகர்களும், ஆய்வாளர்களும் அவரது வாழ்வை, கருத்துக்களை மேன்மேலும் தெரிந்துகொண்டு சிலிர்க்கின்றனர்.

இன்றைய ஈரான், துருக்கி மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் ஜலாலுத்தீன் ரூமியைத் தங்களின் தேசியக் கவிஞராகக் குறிப்பிட்டுக் கொண்டாடுகின்றன. உரிமை கொள்கின்றன. ஆனால் ரூமியின் காலத்தில் இந்த மூன்று நாடுகளும் தனி நாடுகளாய் இருந்ததில்லை. பர்ஷியா எனும் பேரரசின் பகுதிகளாகவே அமைந்திருந்தன.  தாடியும், தலைப்பாகையுமாக சுற்றிய ரூமி, தன்னை எந்த ஒரு சமயம் சார்ந்தவராகவும், நாட்டினராகவும் பார்க்கவில்லை. அதனை வெள்ளையாக, ஒரு கவிதையில் குறிப்பிட்டும் இருக்கிறார். ரூமியின் மேதாவிலாசத்தை, அவருக்கு வாய்த்த ஞானத்தின் சக்தியை, வசீகரத்தை அவரது கவிதைகள் சிலவற்றின், எளிய மொழியாக்கமாக அடுத்த பதிவில் .

(இன்னும் வரும்)

**

நல்ல மனுஷன்

 

 

 

மறந்துவிட்ட சாமான் திடீரென

மனதிடுக்கிலே கிடுகிடுக்க

பழக்கமில்லாப் புதுக்கடையின்

வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா

சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு

பெரிய நோட்டைக் கொடுக்கப் பயந்தார்

சிடுசிடுக்காமல் வாங்கிக்கொண்டு

சின்னச்சின்ன நோட்டாக கடைக்காரன்

பாக்கியைக் கொடுத்துவிட்டானே

வாங்கி பர்ஸில் வைத்துக்கொண்டு

வழியெல்லாம் நினைத்துவந்தார்..

வில்லனாய் ஒவ்வொரு பயலும் இருக்க

நல்லவிதமா இருக்கானே மனுஷன்

இங்கதான் வாங்கணும் சாமான்.. இனிமே

வீட்டில் பர்ஸைக் குடைந்த

சுட்டிப்பேரன் சிடுசிடுத்தான்

கண்ணாடி போட்டுண்டு வெளியே போன்னு

எத்தன தடவதான் சொல்றது

கொடுத்திருக்கான் பாரு ஒனக்குன்னு!

அவன் தூக்கிக்காட்டிய விரலிடுக்கில்

அம்பது ரூபாக் கிழிசல் ஒன்று

அலட்சியமாய்ச் சிரித்துவைத்தது

 

-ஏகாந்தன்

**

மாண்புமிகு நண்பனே, சென்றுவா !

 

’ஒரு துறவியைப்போல அது தன் இறுதிமூச்சை விட்டிருக்கிறது..’ என்றார், இந்தியாவின் வடகிழக்கில் பணிபுரியும் அந்த ராணுவ அதிகாரி. வழக்கம்போல் அன்றும், தன் அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு உறங்கப்போயிருக்கிறது. அடுத்தநாள்..  எழுந்திருக்கவில்லை.

இந்தியாவின் பிரச்னைமிகு வடகிழக்குப் பகுதியில், இந்திய ராணுவத்தின் கிழக்குத் தலைமைப் பிரிவில் (Eastern Command),  9 ஆண்டுகாலம் தீவிர தேசசேவை செய்திருக்கிறது இந்த ராணுவ மோப்பநாய். முறையாகப் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு மோப்பநாயாக,  தனக்கு இடப்பட்ட பணிகளை செவ்வனே செய்துவிட்டு, இந்த உலகவாழ்வை நீத்தது டட்ச்.. இந்திய ராணுவம், தன் புகழ்பெற்ற மோப்பநாய்க்கு வைத்த செல்லப்பெயர்தான் Dutch.

இந்திய ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளில்,  Labrador, German Shepherd, Belgian Malinois – வகை நாய்கள், மோப்பநாய்களாகப் பயிற்சிபெற்றுப் பணியாற்றுகின்றன. இரண்டு வருடங்கள் முன்பாக, முதன்முறையாக, நாட்டுநாய் வகையான முதோல் (Mudhol) ராணுவ மோப்பநாய் அணிக்காக இந்திய ராணுவப் பயிற்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ’முதோல்’ வடக்கு கர்னாடகா பகுதியைச் சார்ந்த நாட்டுநாய் வகையாகும். நீண்ட கால்கள், கூரிய கண்பார்வை, வேகமாக ஓடும் திறன், அதிக நோய்எதிர்ப்பு சக்தி ஆகிய சிறப்புகள் கொண்ட முதோல், சில வெளிநாட்டுவகை நாய்களைக் காட்டிலும் திறன்மிக்கது என்கின்றனர் சில விலங்கு மருத்துவ நிபுணர்கள்..

ஒன்பது வருட இந்திய ராணுவப்பணியில், டட்ச்,  பல விருதுகள், உயர்வுகள் பெற்றதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். என்ன, நாய்களுக்கும் விருதா, உயர்வா..? ஆம். இத்தகைய விசேஷவகை மோப்பநாய்கள் பல கடினமான பயிற்சிகளுக்குப்பின், ஒரு படைவீரனுடன் (மோப்பநாய்ப் பயிற்சியாளர், snifferdog handler) இணைந்து தன் பணிக்காலம் முழுதும் விதவிதமான கடும் பணிகளைச் செய்பவை.  தேசப்பாதுகாப்புப் பணியில் ராணுவத்துக்கு உறுதுணையாக இருப்பவை. ஒரு திறன்மிகு படைவீரனைப்போல், பல கட்டங்களைத் தாண்டி, பணிநிலை உயர்வுபெற்று, ராணுவ மோப்பநாய்களின் அணியில் ஒரு சீனியர்/அதிகாரி எனும் அளவிற்கு தகுதி பெற்றிருந்தது இந்த நாய் என்கின்றனர் சம்பந்தப்பட்ட  இந்திய ராணுவத்தினர்.  ராணுவத்தின் வெடிகுண்டு கண்டுபிடிப்புப் பிரிவில் ஒரு சீனியர் மோப்பநாயாக (ED Dog), தன் பணிவருடங்களின் இறுதிப்பகுதியில் செயலாற்றிவந்தது டட்ச். எளிதில் எட்டமுடியாத சிக்கலான பகுதிகளில், தரைக்கடியில் (டைல்ஸ்களுக்கு அடியிலும்) எனப் பலவேறாகத் தீவிரவாதிகளால் மறைத்துவைக்கப்பட்ட வெடிகுண்டுகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள்,  போதைப் பொருட்கள் ஆகியவற்றை முன்கூட்டியே மோப்பம்பிடித்து, தன் எஜமானர்களுக்குக் காட்டி அரும் சேவைசெய்த நாய். 2014-ஆம் வருடம் நவம்பர் மாதம், இந்தியப் பிரதமர் அஸாமின் குவஹாட்டி நகருக்குச் சென்றிருந்தபோது, அங்கே ராணுவப்பணியில் இருந்திருக்கிறது டட்ச். காமாக்யா (Kamakhya) எக்ஸ்ப்ரஸில், 7 கிலோ எடையில் நாட்டு வெடிகுண்டு   (IED) மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மோப்பமிட்டு தன் ராணுவ எஜமானருக்கு சரியான நேரத்தில் காட்டியது. பெரும் விபத்து, கோரம், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அடுத்தமாதமே, அஸாமில், கோல்பாரா (Goalpara) நகர பஸ் ஒன்றில் 6 கிலோ எடைகொண்ட நாட்டுவெடிகுண்டைக் கண்டுபிடித்து, பல அப்பாவி உயிர்களைக் காப்பாற்றியது டட்ச்.  இப்படி தன் பணிக்காலத்தில் பலதடவை, ராணுவ வீரர்களையும், பொதுமக்களையும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய பெருமை இந்த நாய்க்கு உண்டு.

பிரிந்துவிட்ட நண்பனுக்கு
இறுதி மரியாதை

டட்ச்,  சில மாதங்களில் அரசுப்பணியிலிருந்து முறையாக ’பணி ஓய்வு’ பெறுவதாக இருந்ததாம். அதன்பின் ராணுவ வழக்கப்படி,  உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள வயதான ராணுவ நாய்களுக்கான நலன், மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து தன் கடைசிக் காலத்தில் அது வாழநேர்ந்திருக்கும். இறைவனோ அதனை சற்றுமுன்பே, அது பணிக்காலத்தில் இருக்கும்போதே, ’போதும்.. வாப்பா!’ – என்று அழைத்துக்கொண்டுவிட்டான்போலும். சில நாட்களுக்கு முன் (11/9/19), டட்ச் திடீரென இயற்கை மரணம் எய்தியபோது, இந்திய ராணுவத்தின் கிழக்குத் தலைமை,  இந்த சிறப்புமிகு நாய்வீரனுக்கு முறையாக,  இறுதிமரியாதை செலுத்தியது.  ராணுவ வளாகத்திலேயே அதனை நல்லடக்கமும் செய்தது. ட்விட்டர் இரங்கல்செய்தி ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டு தன் விஸ்வாசமிக்க மோப்பநாயின் பெருமையைச் சொல்லியது:

“Army Eastern Command condoles the death of ‘Dutch’, a 9-yr old ED dog who died on 11 Sept. He was a decorated dog of Eastern Command who was instrumental in identifying IEDs in various CI/CT Operations. A real hero in service to the nation.”

நாமும் சொல்வோம்: விஸ்வாசமிக்க வீரனே .. போய் வா!

**

சந்திரயான் 2 : ஒரு அபூர்வ விண்சாதனை

 

இந்தியப் பொதுமக்கள் சரியாகத் தூங்காத செப்டம்பரின் அந்த இரவு! இந்தியாவின் சந்திரயான் – 2 விண்பயணத்தின் தொடர்ச்சியாக, அதன் லேண்டரான(Lander) விக்ரம், நிலவின் இருண்ட பரப்பில் தரையிறங்கப்போகிறது, அதன் பின்னே, உள்ளே அமர்ந்திருக்கும் ரோவரான(Rover) ’ப்ரக்யான்’(Pragyan) மெல்ல வெளியில் வந்து சந்திரத் தரையில் ஓட ஆரம்பிக்கும் என்பதான  பெரும் விஞ்ஞான எதிர்பார்ப்பு. முடிவில், சரியாக இன்னும் தெரியவராத தொழில்நுட்பப்பிரச்னையினால், விக்ரம் தன் தகவல் தொடர்பை இழந்து,  திட்டமிட்டபடி நிலவுப்பரப்பில் இறங்காமுடியாதுபோன  ஏமாற்றம் தந்த அதிர்ச்சி, சோர்வு, விண்வெளி விஞ்ஞானிகளின் உலகையும் தாண்டி, இந்திய மக்கள்தொகையையே ஒட்டு மொத்தமாக கலங்கவைத்துவிட்டது. குறிப்பாக இந்தியப் பள்ளிமாணவர்களின் ஏமாற்றம் சொல்லி முடியாது. இந்தியா என்கிற நாடு எப்படி ஒன்றுபட்டிருக்கிறது என்பதை சந்திரயானின் அந்த இரவு தெளிவாகக் காட்டியது என்றார் பிரதமர் மோதி.

சராசரி இந்தியன் – அடடா, தரையிறங்குவதற்கு முன்னான கடைசி நிமிடங்களில் இப்படி ஒரு சோதனையா.. விக்ரமுக்கு என்ன ஆச்சோ.. எங்கேபோய் விழுந்திருக்கோ தெரியலையே.. என்றெல்லாம் கவலைதோய்ந்த மனத்தோடு அரற்றிக்கொண்டிருக்கிறான். விஞ்ஞானிகள் அணியும் அதிர்ச்சியைக் கடந்து அரக்கப்பரக்க வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள் விக்ரம்பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று. இதுவரை கிடைத்திருக்கும் விஞ்ஞானத் தகவல்களை, இரவும் பகலுமாக ஆய்ந்துகொண்டிருக்கிறார்கள்.  தகவல் தொடர்பிலிருந்து திடீரென விட்டுவிலகிப்போய்விட்ட ‘விக்ரம்’ விழுந்து நொறுங்கியிருக்கும் எனப் பெரிதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில்,  36 மணி நேர மிகக் குறைந்த அவகாசத்தில், ஆர்பிட்டர் எனும்  100×100 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் சந்திரனை வெற்றிகரமாக சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் -2 தாய்க்கலம், ஒரு நல்லகாரியம் செய்தது. தன் சுற்றுப்பாதையில் தான் எடுத்த ஒரு   thermal image மூலம், விக்ரம் சந்திரனின் தரையில் உடையாமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டுபிடித்துக் காட்டியது. இடிந்துபோயிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் மனதில் ஒரு சந்தோஷக்கீற்று. முந்தைய ஏற்பாட்டின்படி,  மெதுவாக தரை இறங்கி (7-9-2019), ஸ்திரமாக உட்கார்ந்து விஞ்ஞான சோதனைகளை ஆரம்பிப்பதற்குப் பதிலாக, கொஞ்சம் சாய்வாக தன் இஷ்டத்துக்கு அமர்ந்து, சந்திரப் பரப்பை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது விக்ரம்! கரடுமுரடான, பள்ளத்தாக்குகள் நிறைந்த சந்திரத் தரையில் விழுந்து, உடைந்தோ, நொறுங்கியோ போய்விடாமல், திட்டமிட்ட இடத்திலிருந்து சற்றுத் தள்ளிப்போய் ’இறங்கி’, முழுசாக உட்கார்ந்திருக்கிறதே… அட! இதுவும் ஒரு சாதனையில்லாமல் வேறென்ன! டாக்டர் கைலாசவடிவு சிவன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகளே.. உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம். நீங்கள் கில்லாடிகள்தான், சந்தேகம் ஏதுமில்லை எங்களுக்கு.

டாக்டர் கே. சிவனைப் பாராட்டும் பிரதமர் நரேந்திர மோதி

விக்ரமோடு தகவல்தொடர்பை மீட்க, கடும் முயற்சிகளைத் தனது அணி மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார், இஸ்ரோவின் ’சந்திரயான் -2 திட்டத் தலைவ’ரான டாக்டர் கே. சிவன். பத்திரிக்கையாளர்களிடம் மேற்கொண்டு பேசுகையில், ’தாய்க்கலம் பொதுவாக ஒரு வருட காலம் சந்திரனைச் சுற்றிவந்து ஆய்வுகள் நடத்துமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் 2 விண்கலம் சந்திரனை நோக்கிய தன் பயணத்தில் எடுத்துக்கொண்ட சுருக்குப்பாதையின் காரணமாக, ஏகப்பட்ட எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் சந்திரயான் 2 தாய்க்கலம் (orbiter) இன்னும் 7 ஆண்டுகள் சந்திரனைச் சுற்றிவர வாய்ப்புள்ளது’ என்று அறிவித்து இந்தியமக்களோடு, அமெரிக்க நாஸா மற்றும் ரஷ்ய, சீன, ஃப்ரெஞ்ச் மற்றும் இஸ்ரேலிய விண்வெளி  விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

ஒரு வேளை, இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் மீண்டும் செயல்படுத்தப்பட முடியாதுபோனால் (அதற்கான வாய்ப்புதான் அதிகம் எனத் தோன்றுகிறது) –  இஸ்ரோவுக்குக் கொஞ்சம் நஷ்டம் உண்டுதான். லேண்டர் ‘விக்ரம்’ மற்றும் ரோவர் ‘ப்ரக்யான்’ மூலம் சந்திரனின் பரப்பில் ஐந்து விஞ்ஞான சோதனைகள் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அவை நடக்காது போகலாம். மலைகள், பள்ளத்தாக்குகளால் நிரம்பிய, பனிக்கட்டிகளாய் உறைந்துகிடக்கும் சந்திரனின் நிலப்பரப்பு, அதன் விசித்திர மேலான வாயுமண்டலம், ஆகியவற்றோடு குறிப்பாக சந்திரனின் தென் துருவத்தில் பல்லாண்டுகளாக பனிப்பாறைகளாக உறைந்துகிடக்கும் தண்ணீரின் குணம், அளவு ஆகியவற்றையும் ஆய்வு நடத்த 8 அதிமுக்கியமான விஞ்ஞான சோதனைகள், தற்போது சிறப்பாக இயங்கிவரும் சந்திரயான் 2 தாய்க்கலத்தினால் (orbiter) நிகழ்த்தப்படவிருக்கின்றன. சந்திரயான் 2, இத்தகைய வரலாற்று சிறப்புமிகு சோதனைகளை மேற்கொண்டு, விஞ்ஞானத் தகவல்களை, thermal image-களை இஸ்ரோவுக்கு தொடர்ந்து அனுப்பிவரும். இந்தியா நடத்தப்போகும் இத்தகைய சோதனைகள், அதன் ஆச்சரியம்தரக்கூடிய முடிவுகளுக்காக உலகின் விண்வெளிநாடுகள் ஆவலோடு காத்திருக்கின்றன. இஸ்ரோவின் அருமையான முயற்சியை அமெரிக்காவின் நாஸா ஏற்கனவே பாராட்டியிருப்பதோடு, சூரியமண்டலத்தை ஆராயும் எதிர்கால விண்வெளிமுயற்சிகளில் நாங்களும் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றும் சொன்னது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் சந்திரனில் தங்கள் விண்கலங்களை வெற்றிகரமாக இறக்கியிருக்கின்றன – நிலவின் இறங்க எளிதான மத்தியரேகைக்கு அருகிலான  பிரதேசத்தில். மேலும்,  எந்த ஒரு நாடும் நிலவின் தரையிறங்கலில் தன் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றதில்லை.  சில தோல்விகளைக் கடந்துதான் இது சாத்தியமானது அவர்களுக்கு. கடந்த ஆண்டில், இஸ்ரேலின்  முதல் முயற்சி தோல்விகண்டது. அவர்களது லேண்டர் நிலவில் மோதி நொறுங்கியது.

இந்தியா அனுப்பிய சந்திரயான் -2 விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில், இதுவரை எந்த நாடும் முயற்சித்திராத,  நிலவின் பனிப்பாறைகள் உறைந்திருக்கும், கணிக்கமுடியாத குளிர்ப் பிரதேசமான தென் துருவத்தை நோக்கிக் குறிவைத்ததாகும். அத்தகைய மோசமான பகுதியில்தான் இஸ்ரோ  விக்ரமை இறக்க முயற்சித்து, தகவல் தொடர்பை இழந்தும்,  கிட்டத்தட்ட அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்க முயற்சிப்பது ’ஏறக்குறைய நிகழ்த்தமுடியாத ஒரு சந்திரவெளி ஆய்வுமுயற்சி’ (’almost impossible lunar mission’) ஆக முடியும் என அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் விண்வெளி விஞ்ஞானிகளால் கருதப்பட்டு கைவிடப்பட்டிருக்கிறது. முடியாது என உலகினால் முடிக்கப்பட்டதை, முடியும் என முடிக்கப் பார்த்தார்கள் நம் விஞ்ஞானிகள். அதுவும் நிலவில் தரையிறங்குவதற்கான இந்தியாவின் முதல் முயற்சியிலேயே இப்படியோரு கடினமான இலக்கை நோக்கிப் பயணித்தார்கள். இந்த சவாலான, நுட்பமான பின்னணியில்தான், டாக்டர் சிவன் மற்றும் அவரது திறன்மிகு விஞ்ஞானிகளின் அணியின் செயல்பாட்டை நாம் பார்த்துப் பெருமைகொள்ளவேண்டும்.  எத்தனைக் கடுமையாக, ராப்பகல் பார்க்காது அவர்கள் பணியாற்றியிருக்கின்றனர் என்பது அப்போதுதான் கொஞ்சமாவது உணரப்படும். இதுபோன்ற அர்ப்பணிப்பு, நாட்டிற்கான தன்னலம் கருதா உழைப்பு போன்ற சிறப்பியல்புகளை, இஸ்ரோவின் விஞ்ஞானிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தீரமிக்க இந்திய ராணுவம் போன்றோரிடம் மட்டும்தான் நாம் காணமுடியும்; நம்பிக்கையுடன் மக்கள் நல்லதை எதிர்பார்க்கமுடியும். அத்தகைய உன்னத எதிர்பார்ப்பில்தான் இந்தியாவே விழித்திருந்தது அன்று.

**

வனம் படைத்தவன்

 

இந்தியாவின் வடகிழக்கின் ‘ஏழு சகோதரிகள்’ என அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர். அதன் தலைநகரான இம்பாலுக்கு வடக்கே இம்பால் பள்ளத்தாக்கைத் தாண்டிப் படர்கிறது லாங்கோல் மலைத்தொடர். இதனைச் சுற்றிலும் இருந்த அடர்ந்த காடுகளில் புலிகள், சிறுத்தைகள், ஓநாய்கள், மலைப்பாம்புகள் மற்றும்  அபூர்வமான வனவிலங்குகளும் கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது. காலப்போக்கில், விலங்குத் தோலிற்கென வேட்டையாடுபவர்களும், மரங்களை வெட்டிக் கடத்துபவர்களுமெனக் கூட்டாக இத்தகைய அரும் காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவந்தார்கள். அதட்டிக் கேட்பாரில்லை. இம்பால் நகரமும் தன்னைப் பெருக்கிக்கொள்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, இயற்கைப் பொலிவை இழந்து ஏனைய நவீன நகரங்களின் பாணியில் பயணித்தது. சுற்றியிருந்த பள்ளத்தாக்கு நகரமயமாதலின் கடும் தாக்கத்தில் ஒரு பகுதி குப்பைக்கிடங்குகள்,  மறு பகுதி கொஞ்சம் விளை நிலமாகவும் உருமாறியிருந்தது. இருந்தும், இம்பால் பள்ளத்தாக்கருகில் இருந்த கிராமங்களைச் சுற்றி சிறு சிறு வனங்கள் ஓரளவுக்கு இருந்தன.

மோய்ராங்க்தம் லோயா (Moirangthem Loiya), இம்பால் நகருக்கு வடக்கே லாங்கோல் மலைத்தொடர் சூழ்ந்து நிற்கும் கிராமம் ஒன்றில் மரங்களும் செடிகொடிகளுமாய், இயற்கையின் அணைப்பில் இளம்பிராயத்தில் வாழ்ந்தவர். சின்னப்பிள்ளையாக சுற்றிவந்த காலத்திலேயே, மரங்கள் என்றால் அவருக்கு உயிர்.  கல்லூரிப் படிப்பிற்காக இம்பாலுக்கு சென்ற லோயா, பட்டப்படிப்பை முடித்தார். வேலை ஒன்றும் அவருக்கு நகரிலே கிடைத்து, வேலை பார்க்க ஆரம்பித்திருந்தார்.  தன் கிராமத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என ஒரு முறை சொந்த கிராமம் வந்தார் லோயா. அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிரவைத்தது. சிறுகிராமங்களைச் சுற்றி மண்டியிருந்த அழகழகான மரங்கள் எல்லாம் எங்கே போயின? எத்தனை விதமான, எத்தனைப் பழைய மரங்கள்.. மரங்கள் செழித்திருந்த பகுதியெல்லாம் மறைந்துபோய், அந்த இடங்களில் சிறு சிறு புதர்கள்தாம் ’நானும்  பச்சையாத்தான் இருக்கேன் பாரு’ என்று சீண்டுவது போல் திட்டுத் திட்டாக அங்குமிங்குமாக  நின்றன. என்னப்பா ஆச்சு.. எங்கே போச்சு மரமெல்லாம் என்றால் கிராமத்தில் ஒருத்தனை ஒருத்தனைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். பெரும்பாலும் ஏழை மக்கள். என்ன நடந்திருக்கும் எனப் பெரிதாக யூகிக்கவேண்டியதில்லை. வயிற்றுப்பிழைப்பிற்காக ஊர் ஜனங்களே விறகுவெட்டி விற்றுப் பிழைக்கிறேன் என,  காட்டுப்பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் காவுவாங்கிவிட்டார்கள்.என்ன செய்வது? நாலு வருஷத்தில் நாசமாய்ப்போன  வனம், லோயாவின் மனதில் பெரும் இழப்புணர்வை எழுப்பியது. தாங்கமுடியாத துக்கம். தான் படித்துப் பட்டம் வாங்கிய சந்தோஷமெல்லாம் கணத்தில் காணாமல் போனது.

மணிப்பூர் காட்டினுள் லோயா

ஏற்கனவே மணிப்பூரின் பெருவனங்கள் அழிந்துவிட்டன. இப்படி நமது மண்ணைக் காயப்போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. சுற்றுச்சூழலைப்பற்றிக் கவலைப்பட, பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள இங்கே ஆள் இல்லை என்று தெரிகிறது. வேலை தேடி வெளியூர் சென்றுவிட்டால், நம்ப ஊர் நாசமாகப் போகும். சொந்த பூமியை அழியவிட்டுவிட்டு, வெளியூரில் போய் நாம் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால்தான் என்ன என்று அரற்றியது அவர் மனம்.  தன்னை வளர்த்து உயர்த்திய பூமியை அனாதையாக விட்டுவிட்டு அயல் பிரதேசத்தில் போய் நிம்மதியாக வாழமுடியாது. ஏதாவது செய்தே ஆகவேண்டும் எனும் சிந்தனை மனதில் உருவாகி, மேலும் வளர்ந்தது. மீண்டும் பச்சையும் செழிப்புமாய் மாறவேண்டும் இந்த பூமி..   அழிந்துவிட்ட காட்டை நினைத்துப் புலம்பித் திரியாமல், செயலில் உடனே இறங்கினார் இளைஞனான லோயா.

இம்பால் நகரத்தில் தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு தன் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்.  தன் கையே தனக்குதவி என்று துவங்கி, இருக்கிற கொஞ்சநஞ்ச பணத்தை வைத்து நல்லவகை மரக்கன்றுகளாக வாங்கிவந்து  நட்டுவைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஒத்தாசைக்கு கிராமத்து ஆட்கள் சிலரைக் கூப்பிட்டார். அவர்கள் உதவத் தயங்கினார்கள். ’என்ன சொல்றான் இவன்?  படித்தபிள்ளை செய்யற வேலையா இது’ என ஊரில் சில அசடுகள் சிரித்தன. கவலைப்படவில்லை லோயா. ஊர்ப்பெரியோர்களிடம் அவ்வப்போது பேசினார். தன்னால் அழிந்த காட்டைத் திருப்ப முடியும். தனக்கு ஊர்க்காரர்களின் துணை வேண்டும் என்றார். ஒத்துழைக்க இணங்காத சிலர், ’போப்பா! டவுனுக்குப்போ.  ஏதாவது வேலயில சேர்ந்து பொழக்கிற வழியப் பாத்துக்க!’ என்று புத்திமதிவேறு சொல்லி விலகினார்கள். விடவில்லை லோயா. ஊரில் வெறுமனே உலவிக்கொண்டிருந்த இளைஞர்களை அழைத்துப் பேசினார். காணாமல் போய்விட்ட வனத்தை மீண்டும் உருவாக்கினால்தான் நமக்கெல்லாம் நல்லது என விளக்கினார். ஊர் வாலிபர்கள்  நெருங்கிவந்தனர். ஊருக்கு நல்லது செய்யப் பார்க்கும் படித்த மனிதனான லோயாவின் முனைப்பைக் கண்டு வியந்தனர். லோயாவுக்கு நண்பர்களாயினர். தங்களையும் இந்த நற்பணியில்  ஈடுபடுத்திக்கொண்டனர். புதிதாக நட்ட கன்றுகள் பட்டுவிடாமல் தினம் தினம் நீர் ஊற்றி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி அடையும்வரை அவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவைத்தார். கூடவே வெளியாட்கள் – மரம் கடத்துபவர்கள், வேட்டைக்காரர்கள் நுழைந்து, இருக்கிற பச்சையையும் நாசம் செய்துவிடாமல், ஊர்க்காரர்கள் கட்டுக்கோப்பாக இருந்து பார்த்துக்கொள்ளுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  மரங்களையே சதாகாலமும் மனதில் நிறுத்தி, தன் வாழ்நிலத்தைத் தன் நண்பர்களுடன் சுற்றிச் சுற்றி வந்தார் லோயா. இம்பால் வனத்துறை அதிகாரிகளின் நட்பும் கிடைத்தது. லோயாவின் நற்சிந்தனையையும், வனத்தை மீட்டெடுக்கக் காட்டும் தீவிரமுனைப்பையும் அறிந்துகொண்ட  வனத்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள். கூடவே, மிகவும் அபூர்வமான மரவகைகளை அவருக்குக் கொடுத்து ஊக்குவித்தனர். ஆசையோடு எடுத்துப்போய், தக்க இடம் பார்த்து, தகுந்த இடைவெளிவிட்டு ஊன்றிவைத்தார். எடுத்த காரியத்திலேயே கண்ணும் கருத்தும் அவருக்கு இருந்தது. வருடங்கள் நகர்ந்தன. அவர் வைத்த மரக்கன்றுகள் மெல்ல, மெல்ல உயர்ந்து சிறு மரங்களாகின. காற்றிலாடி அசைந்து அழகு காட்டின. லோயாவின் மனச்சோர்வு அகல ஆரம்பித்தது. கூடி உழைத்த இளைஞரும் உற்சாகம் பெற்றனர். நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை வலுப்பெற்றது. கிராம மக்களிடமிருந்து மேலும் மேலும் ஆதரவு பெருகியது.

இப்படியாக, மொத்தம் 18 ஆண்டுகள் ஆயிற்று லோயோவுக்கு, கிராம மக்களை ஒன்றிணைத்து உழைத்து, ஒரு  வனத்தை உருவாக்க. இந்த 18 ஆண்டுகளில் லோயா தன் கிராமத்தை, அதன் சுற்றுவெளியைவிட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. பக்கத்தில் ஏதேதோ சிறுசிறு வேலைகளை வயிற்றுப்பிழைப்புக்காக பார்த்துக்கொண்டு காடு வளர்த்து உருவாக்கிவிட்டார் மனுஷன்! மாநில வனத்துறையே  அசந்துபோனது. கிராமத்து மனிதன் என்பவன் இப்படியல்லவா இருக்கவேண்டும் என சிலாகித்துப்பேசினர்.

லாங்கோல் மலைத்தொடரின் கீழ்ப்பகுதியில் ராப்பகலாகப் பாடுபட்டு லோயா  எழுப்பிய காடு, ’ புன்ஷிலோக் (Punshilok) இயற்கை வனப்பகுதி’ என இப்போது அழைக்கப்படுகிறது . மலைத்தொடரின் பின்னணியில்  300 ஏக்கர் பரப்பு,  பச்சைப்பசேல் எனக் காண்போரை மயக்கிக் காட்சி தருகிறது. காட்டில் நாட்டு மரங்களோடு,  250 அபூர்வவகை மரங்களும் உயர்ந்து படர்ந்து நிற்கின்றன. அவற்றில் மூங்கில் மட்டும் 25 வகைகள்! சிறிதும் பெரிதுமாக வண்ணப் பறவைகளின் கூட்டம் பக்கத்துப் பிரதேசங்களிலிருந்து பறந்துவந்து இந்த வனத்தைக்கண்டு சுகிக்கின்றன. தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன, குரங்கு,  நரி, முயல், கீரி, தேவாங்கு, ஓணான், உடும்பு,  பாம்பு  போன்ற சிறு விலங்குகளுக்கும் வாழ்வாதாரமாக இந்த வனம் மாறிவிட்டது.  தான் பிறந்துவளர்ந்த மண்ணிற்காக, 18 வருட தவ வாழ்க்கையல்லவா வாழ்ந்திருக்கிறார் லோயா.

ஏதோ பாடுபட்டு, ஒரு காட்டை உருவாக்கிவிட்டோம் எனத் திருப்திப்பட்டு ஒதுங்கிவிடவில்லை; தன் வேலையை நிறுத்திவிடவில்லை அவர். இளைஞர்கள், நண்பர்களைக் கொண்டு தன்னார்வக் குழு அமைத்து மணிப்பூரின் மற்ற பகுதிகளிலும் இழந்த வனங்களை மீட்க, சிறுகாடுகளைப் பெருக்க முயற்சித்து  அலைகிறார் லோயா. மணிப்பூருக்குக் கிடைத்த மாமனிதன் அல்லவா?

**