ரஃபால் ஜெட்: இந்திய வான்படை நவீனமயமாக்கல்

இந்திய விமானப்படையை நவீனமயமாக்குவதற்காக செய்யப்பட்ட பலவருட முயற்சிக்குப் பின் ஒருவழியாக ஃப்ரான்ஸ் நாட்டின் அதிநவீன போர்விமானமான ரஃபால் (Rafale Fighter planes)  (ஆர்டர் செய்த 36-ல் முதல் 5) விமானங்கள் – இந்தியா வந்து சேர்ந்துவிட்டன. இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில், நேற்று மதியம் வந்திறங்கின. உலகளவில், பயங்கர தாக்குதல் சக்தியும், துல்லியமும் கொண்ட நவீனப் போர்விமானமாகப் பார்க்கப்படுகிறது ரஃபால். ‘தங்க அம்புகள்’ (Golden Arrows)  என அழைக்கப்படும் அம்பாலா விமான தளத்தின் போர்விமானப்பிரிவில் (squadron) இந்தப் புதுவருகை விரைவில் தேசப்பணிக்காக சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.  கொரோனா, கொரோனா எனப் புலம்பித் திரியும் நாட்களுக்கு மத்தியில், நாட்டின் ஒட்டு மொத்தப் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அதிரடி முடிவின் விளைவு. இந்திய வான்படையையும், மக்களையும் மகிழவைத்த நல்ல செய்தி.

இதற்கு முன் விமானப்படையை நவீனப்படுத்தவென சீரியஸான முயற்சி எடுக்கப்பட்டது 21 வருடங்கள் முன்பு.  ரஷ்யாவின் (அப்போதைய) நவீனப் போர்விமானமாகிய ’சுகோய்-30’-களை 1998-ல் இந்தியா வாங்கியது. அது ஐ.கே.குஜ்ரால் (ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு) இந்தியப் பிரதமராக  இருந்தபோது நடந்தது!

A Rafale Fighter Jet loaded with next-generation missiles..

என்ன சிறப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் இந்த  போர்விமானத்தில்? அதனுடைய மிகப்புதிய, நவீன ராடார் சிஸ்டங்களை (next gen avionics) த் தாண்டி,  ரஃபால் தன்னகத்தே கீழ்க்கண்ட அசுரத்தனமான ஆயுதங்களை இணைத்துக்கொண்டு, நிமிஷங்களில் எதிரி இலக்குகளைத் தாக்கவல்லது:

1)மீடியர் (Meteor) எனப்படும் நவீன ஏவுகணைகள். இவை வானிலிருந்து-வான் இலக்குகளை சுமார் 150 கி.மீ. தொலைவிலிருந்தே துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. நமது போர்விமானங்களை, தளங்களை எதிரி விமானங்கள் நெருங்கும் முன்பே  ரஃபால் ராடார் சிஸ்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, சில நிமிடங்களில் அவை துவம்சம் செய்யப்படும்! பிரிட்டன், ஸ்பெய்ன், இத்தாலி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளின் பாதுகாப்புக்குத் துணைபோவது இந்த வகை ஏவுகணைகள்.

2) SCALP Cruise Missile- நமது நாட்டின் எல்லைக்குள் இருந்தவாறே 300 கி.மீ. தூரம்வரை உள்ள தரை இலக்குகளை சில நிமிடங்களில் நொறுக்கிவிடும் அழிவு ஆயுதங்கள் இவை. குறிப்பாக சீனா எல்லைப்பகுதியில் ஓவராகத் துள்ளி, எல்லைச் சண்டை என்கிற நிலையிலிருந்து ‘போர்’ என்கிற நிலைக்குத்  தீவிரம் அடைந்தால், நமது எல்லை ஓரத்தில் பறந்துகொண்டிருக்கும் ரஃபால் விடுவிக்கும் ஏவுகணைகள் 7-8 நிமிடங்களில் 300 கி.மீ வரை பாய்ந்து சீனாவின் உட்பகுதி இலக்குகளை அழித்துவிடும் சக்தி வாய்ந்தவை.  பாகிஸ்தான்? இதற்கெல்லாம் ஒரு விளக்கம் தேவையா!

3) MICA ஏவுகணைகள்: வானிலிருந்து-வான் இலக்கிற்கு 100 கி.மீ. தொலைவில் தாக்கி அழிக்கும் நவீன ராடார் பொருத்தப்பட்ட அதிதுல்லிய ஏவுகணைகள்.

4) சமீபத்தில் சீனாவுடனான கசப்பான எல்லை அனுபவத்திற்குப் பின், இந்திய ராணுவம், குறிப்பாக வான்படை வெகுவாக முடுக்கிவிடப்பட்டு ஆயத்த நிலையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  இதற்கெல்லாம் மேலாக,  ’எமர்ஜென்சி பர்ச்சேஸ்’-ஆக, லேட்டஸ்ட் வர்ஷன் ‘ஹம்மர்’ (Hummer) ஏவுகணைகளை ஃப்ரான்ஸிடம் இந்தியா ஆர்டர் செய்திருக்கிறது. இவை ‘Highly agile Medium range air-to-ground missiles’ ஆகும். அதாவது அதிதுல்லியமாக சில நொடிகளில்,  தரை இலக்குகளைத் தாக்கக்கூடியவை. விரைவில் இந்தியா வந்து சேரும். இந்த ஏவுகணைகள் எளிதாக ரஃபால் விமானத்தில் பொருத்தப்பட்டு, விமானவழித் தாக்குதலின்போது சுமார் 70 கி.மீ. தொலைவிலுள்ள தரை இலக்குகளை நொடியில் தகர்த்துவிடும்! லடாக் பகுதியிலோ, வேறு எல்லைப் பகுதியிலோ, எல்லைக்கு அந்தப்பக்கம் இருக்கும் எதிரிப் படைகள், அவர்களின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகளைப் போட்டுத்தள்ள, மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது இந்திய விமானப்படையின் தீர்வு.

ரஃபால் ஜெட்களுக்கு சமமாக சீனாவிடம் அத்தனை நவீனப் போர்விமானங்கள் இப்போது இல்லை. அவர்களிடம் இருப்பதில் ரஃபாலின் திறனுக்கு சற்று அருகில் வரக்கூடியது சீனாவின் ’J-10’ Fighter planes தான். நவீன வான்படைத் தொழில்நுட்பரீதியாகப் பார்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்ட  ’J-7’ ஜெட்டுகளை,  தன் அடிமை பாகிஸ்தானுக்கு சீனா விற்றிருக்கிறது!

இந்து மகாசமுத்திரக் கடல்வெளியில், தென்சீனக் கடல்பகுதியில் என அங்குமிங்குமாகத் தன் வாலை விரித்து ஆட்டிக்கொண்டிருக்கும் சீனாவுக்கு, இந்தியா நட்பு நாடுகளுடன் சேர்ந்துகொண்டு, நாலாபுறமும் நின்று ‘பதிலடி’ கொடுக்க ஆயத்தமாகவேண்டிய காலமிது. இதற்கான ராஜீய, மூலோபாய முன்னெடுப்புகள் (diplomatic, strategic endeavours) நமது இந்திய அரசினால் எடுக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் நேரடி ஒத்துழைப்பு, அவசர செயல்பாடுகள் தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கடற்படைக்கான நவீனமயமாக்கலும் கூடவே விரைந்து நிகழவேண்டும். அதுதான் பாரதத்தை தெற்காசியப் பிரதேசத்தில்  வலுவான சக்தியாக, மேலும் பாதுகாப்பான தேசமாக ஆக்கும்.

**

சொல்வனத்தில் “.. என்றார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி”

கலை, இலக்கிய மின்னிதழான  ‘சொல்வன’த்தின் நடப்பு இதழில் (இதழ் 227) (solvanam.com), தத்துவஞானியும், சிந்தனையாளருமான ‘யூ.ஜி.‘பற்றி அடியேனுடைய கட்டுரை வெளியாகியிருக்கிறது.  வாசகர்கள் லிங்கில் சென்று படிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்:

…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி

மேலும், சொல்வனம் இதழில் நாஞ்சில் நாடனின் சொல்லாராய்ச்சிக் கட்டுரை ’வயாகரா’, பாவண்ணனின் சிறுகதை  ‘கனவு மலர்ந்தது’ மற்றும் அருமையான சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவை நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன. படித்து ஆனந்தியுங்கள்.

– ஏகாந்தன்

நடிக்கவிடமாட்டீங்க ? சரி..

சுதந்திரத்துக்கு முன்னான காலகட்டத்தில், நாட்டில் இருந்த பல திறன்வாய்ந்த நாடக நடிகர்களில் ஒருவர். அந்தக்காலத்தின் புகழ்பெற்ற Boys நாடகக் கம்பெனியில் சேர்ந்து, இளம் வயதிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து நாடக உலகையே, தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் திருப்பிப் போட்டவர்! அருமையான கலைஞர். இப்படிப்பட்ட திறமையை வைத்துக்கொண்டு சினிமா உலகிற்குள் நுழையாதிருக்கமுடியுமா? நுழைந்தார், அந்தக் காலத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்த ‘பேசும்படங்களிலும்’ (அதற்கு முன் ’வாய்பேசாத’ படங்கள்தான் ஒடிக்கொண்டிருந்தன எனத் தனியாகச் சொல்லவேண்டுமா!) பிரவேசித்து, திறமை காட்டிய தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க பங்களிப்பாளர்.

’அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1941) படத்தில் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனாக நடித்திருக்கிறார். 1952-ல் வெளியான புகழ்பெற்ற ‘பராசக்தி’ படத்தில் இளம் சிவாஜிகணேசன், கருணாநிதியின் வீரதீர, காரசார வசனத்தில் வெடித்துக்கொண்டிருக்க, நிமிர்ந்த நெஞ்சோடு  பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாக்யம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது! பலபடங்களில் வில்லன் வேலை. அதில் மெச்சப்பெற்ற சில பங்களிப்புகள் உண்டு.

அட, யாரப்பா அது? கே.பி.காமாட்சி ! முழுப்பெயர் கே.பி.காமாட்சி சுந்தரம். ஒரு கட்டத்தில் ’நீ நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்..’ எனச் சொல்லிவிட்டதோ தில்லுமுல்லுத் திரையுலகம்…  நடிக்க வாய்ப்புகள் மேலும் வரவில்லை. மூடிக்கொண்டு அழுபவரா காமாட்சி? வாடி விழுந்துவிடுவாரா? நடிக்கத்தானே வாய்ப்பில்லை? பாட்டு எழுதலாம்ல.. முன்னாடியே சில பாடல்களைத் சினிமாத்திரைக்காக எழுதியிருக்கிறோமே – எனத் தெளிந்து ஸ்டூடியோவைச் சுற்றிவந்திருக்கிறார் மனுஷன். மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் சிறந்தவர் காமாட்சி. அவ்வப்போது வாய்ப்பு கிடைக்க, மனதை மயக்கும் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் சினிமாவுக்குத் தந்த கவிஞராக உருமாற்றம் பெற்றார். அப்போது எழுத ஆரம்பித்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம், கே.பி.காமாட்சி சுந்தரத்தை ஆசானாகக் கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.

அந்தக்காலத்திலேயே ‘பழையபாட்டு’ எனக் கருதப்பட்ட சில ரம்யமான பாடல்களை ஆல் இந்தியா ரேடியோ, ரேடியோ சிலோனின் கைங்கர்யத்தில் அனுபவித்திருக்கிறோம் – இசைக்காக மட்டுமல்லாது அவற்றின் எழில்கொஞ்சும் வார்த்தைவடிவத்திற்காகவும். ஆனால் எழுதியவர் காமாட்சி சுந்தரம் எனத் தெரிந்திருக்கவில்லையே! கீழே கொஞ்சம் பாருங்கள்..

’வாழ்க்கை’ (1941) படத்தில் இந்தப் பாடல் : “உன் கண் உன்னை ஏமாற்றினால்.. என்மேல் கோபம் கொள்ளுவதேன்!”

‘பராசக்தி’(1952)-யில் வரும் :

“ஓ! ரசிக்கும் சீமானே !
வா, ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்..!
அதை நினைக்கும்பொழுது
மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் !”

‘எதிர்பாராதது’ (1954) படத்தில் வரும் ”சிற்பி செதுக்காத பொற்சிலையே..!”

’அமரதீபம்’(1956) படத்தில் ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் சேர்ந்து, புகழ்பெற்ற இசையமைப்பாளரான T. சலபதி ராவின் இசையில் உருகும் ”தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு..”
எனக் கொஞ்சிச் செல்லும் பாடல். கவிஞர் காமாட்சியின் மொழிவண்ணத்தை ரசிப்பதற்காக இந்தப் பாடலை முழுமையாக அனுபவிப்போம்:

தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..
பூங்கொடியே நீ சொல்லுவாய்

வீணை இன்ப நாதம்
எழுதிடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே ..
காற்றினிலே .. தென்றல் காற்றினிலே
சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ .. ஓ.. ஓ..
புதுமை இதில்தான் என்னவோ

மீன் உலவும் வானில்
வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும்
ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..
மென்காற்றே நீ சொல்லுவாய்

கான மயில் நின்று
வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலையிதுவே, வாழ்வின் கலையிதுவே
கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே .. ஓ.. ஓ..
காணாததும் ஏன் வாழ்விலே ..

கண்ணோடு கண்கள்
பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல்
வாழ்வதும் ஏனோ?
கலைமதியே நீ சொல்லுவாய் .. ஓ.. ஓ..
கலைமதியே நீ சொல்லுவாய்  !

**

அவருக்குமா கொரோனா ?

நேற்று வலையில் அலைந்தபோது  கண்ணில்பட்டு அதிர்ச்சி தந்தது இது: மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா. இலக்கியத்தின் பக்கமும் இப்போது கொரோனாவின் கவனம் திரும்பிவிட்டதா?  ஆனால் இந்த செய்தி பல ’பிரபல’ தமிழ் ஊடகங்களில் பத்திரிக்கைகளில் நேற்று காணப்படவில்லை!  ஐஷ்வர்யா ராய், அமிதாப் பச்சனைத் தாண்டினால்தானே அவர்களுக்கு மற்றவர்கள் தெரிவார்கள்?

சில நாட்களாகக் கவிஞருக்குக் காய்ச்சல் தொடர்ந்திருக்கிறது. என்ன பிரச்னை என திருச்சி மருத்துவமனை ஒன்றில் டெஸ்ட் செய்து பார்த்ததில், தம்பி கொரோனாவின் பிரவேசம் தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சைக்கும் உள்ளாகியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அதிலிருந்து குணமடைந்து வருகையில் இது. யாருக்கு என்ன வரும் என்று எப்படிச் சொல்வது? மருத்துவர்களே மண்டை காய்கிற காலமாயிற்றே.. மனித ஆரோக்யத்தைப்பற்றிப் பேசவே பயப்படவேண்டியிருக்கிறது. Disturbing, destabilizing times…

”இந்த நான்கு மாதத்தில் கரோனா தொற்று குறித்து எவ்வளவோ எழுதிவிட்டேன்.. ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன்.” என முகநூலில் வருத்தப்பட்டிருக்கிறார் கவிஞர். விரைவில் குணமாகி ஆபத்திலிருந்து மீண்டு வர அவருக்கு இறையருள் துணைபுரியட்டும்.

இவ்வாறே உலகெங்கும் அவதிப்படும் உயிர்களை ஆண்டவன் காத்தருளட்டும். ”கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என மந்திரிகளே முந்திக்கொண்டு விண்ணப்பிக்கும் காலத்தில் அல்லவா  வாழ்ந்துவருகிறோம்  நாம்?

**

வென்றது விண்டீஸ் !

சௌத்தாம்ப்ட்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் நேற்று (12/7/20) வென்றது. 200 என்கிற இலகுவான இலக்காகத் தோன்றினாலும், கடைசி நாளில் வெஸ்ட் இன்டீஸ் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கோடு,  ஸ்பின்னருக்கெதிராகவும் (Dom Bess) தாளம் போடலாம் என்று தோன்றியது. சில சமயம் இந்த மாதிரி சிறிய இலக்குகள், ‘சேஸ்’ செய்கிற அணியைக் காலைவாரி விட்டுவிடும். ஆனால் அப்படி ஏதும் நடக்காமல் நிதானமாக ஆடி, வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

Shane Dowrich (WI) tackling a bouncer from England- 1st Test (Pic courtesy: ESPN)

ஒரு கட்டத்தில் 27 ரன்களில் 3 விக்கெட்டை இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்திற்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருந்தது. குறிப்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) அருமையாக பந்துவீசிக்கொண்டிருந்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களான ரோஸ்டன் சேஸும், ஜெர்மேன் ப்ளாக்வுட்டும் (Roston Chase and Jermaine Blackwood) வெஸ்ட் இண்டீஸின் கொடியை உயரப் பிடித்தவாறு நிதானமாக ஆடியது, இங்கிலாந்தைத் திணற அடித்தது. 37-ல் சேஸ் விழுந்தாலும், அடக்கி வாசித்த ப்ளாக்வுட்டின்  திறனான ஆட்டம் வெஸ்ட் இண்டீஸுக்குப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. 95 ரன்களில் அவர் வெளியேறியபோது வெஸ்ட் இண்டீஸ் அணி அவரது பங்களிப்பிற்காகக் கைதட்டியது. சாதாரணமாக ஸ்டேடியத்தின் கூட்டம் ஆர்ப்பரித்திருக்கவேண்டும். கூட்டமாவது மண்ணாவது,  கொரோனா காலத்தில்! இறுதியில் 6 விக்கெட் மட்டுமே இழந்து,  வென்றுவிட்டார்கள்.

முதன்முதலாக இங்கிலாந்து கேப்டனான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அவர் சிறப்பாக பௌலிங் செய்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பாக ஆடினார். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் குறிப்பிடத்தக்க பேட்டிங் டாம் சிப்ளே (Dom Sibley)(50) மற்றும் ஜாக் க்ராலே (Zak Crawley) (76) ஆகியோரிடமிருந்து வந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel)  அபாரமாக வீசினார் (9 விக்கெட்டுகள் மேட்ச்சில்). வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இங்கிலாந்துக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகளில், நான்கை வென்றிருக்கிறார்! அடுத்த போட்டிகள் தூள்பறக்கலாம்.

ஸ்கோர்: இங்கிலாந்து 204 & 313. வெஸ்ட் இண்டீஸ் : 318 & 200/6.

**

கொரோனா கால கிரிக்கெட் !

கொரோனா காலத்தில் எதையும் நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கலாம். ஆனால் எதையும் ‘செய்துவிட’ முடியாது இஷ்டத்துக்கு! லாக்டவுன் கொல்கிறது ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு பிரிவினிரையும். ஆனால் இதைவிட்டால் உயிர்தப்பிக்க வேறு உபாயம் தெரியவில்லை என்கிற விசித்திர நிலையில் உலகம்.

தீநுண்மியின் தீவிர விளையாட்டைப் பார்த்து, அனுபவித்து வரும் பதற்ற நிலையில், மனிதர்களின் விளையாட்டை எப்படி ஆரம்பிப்பது? லாக்டவுன் தளர்த்தியாச்சு என்கிற தைரியத்தில் டென்னிஸ் ஆடுகிறேன் என்று ஆரம்பித்து  நோவாக் யொகோவிச் (Novak Jokovich) சமீபத்தில் வைரஸில் சிக்கி அவஸ்தைப்பட்டது ஞாபகமிருக்கிறதா? கூடவே அவரது மனைவியும்! இருவரும் ‘கோவிட்-பாஸிட்டிவ்’ ஆக இருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்பது அவர்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம்!

இத்தகு சூழலில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்திருக்கிறார்கள் இங்கிலாந்தில். பாராட்டுவதா, பயப்படுவதா – தெரியவில்லை. சுமார் 100 நாள் இடைவெளிக்குப்பின் உலகம் ’லைவ்’ கிரிக்கெட்டை டிவி-மூலமாகவாவது ‘பார்க்க’ ஒரு வாய்ப்பு. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் அழைப்பின் பேரில், வெஸ்ட் இண்டீஸ் டீம் இங்கிலாந்து சென்றிருக்கிறது. முதலில் 14 நாள் ‘ஹோம் க்வாரண்டைனில்’ இருந்துவிட்டு,  இப்போது முதல் டெஸ்ட் மேட்ச்சை ஆடிவருகிறது. மூன்று டெஸ்ட் மேட்ச்சுகள், பின்னர் ஒரு-நாள் போட்டிகள் என ஜூலை-ஆகஸ்டுக்கான ஏற்பாடு.

’சோனி-சிக்ஸ்’ சேனலில் கண்டு ‘களித்து’வருகிறேன். ஆளில்லா மைதானத்தில் ஒரு பாப்புலர் ஸ்போர்ட்! ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு சமூக வலைதளங்களில். அவர்களும் என்னதான் செய்வார்கள் ? டிவி-யில் மட்டுமாவது கிரிக்கெட் பார்க்க வாய்ப்பு கிடைத்ததே என்கிற பரிதாப நிலை!

Players taking a knee before the start of play
(Pic courtesy : ESPN)

இங்கிலாந்துக்கு புது கேப்டன் – பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). வெஸ்ட் இண்டீஸுக்கு ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) கேப்டன். முதல் போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் – ‘ரோஸ் பௌல்’ (Rose Bowl) மைதானத்தில் இரண்டு நாளாகப் போய்க்கொண்டிருக்கிறது. போட்டி ஆரம்பமாகுமுன் இருதரப்பு வீரர்களும், அம்பயர்களும் மைதானத்தில் ’ஒருகால் முட்டி போட்டு’, உலகின் ‘கறுப்பின’ மக்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். குறிப்பாக சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆவேச முஷ்டி உயர்த்தல் காணக்கிடைத்தது.  துவக்க நாளன்று, கையில் கறுப்பு பேண்ட் அணிந்து ஆடினார்கள் வீரர்கள்.  அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிரான போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து (குறிப்பாக ஜார்ஜ் ஃப்லாய்ட் (George Floyd) என்பவரின் போலீஸ் ‘கொலை’) சமீபகாலத்தில் நிறைய போராட்டங்கள் நடந்தன. வெளிநாடுகளிலும் எதிரொலித்தன. BLM (‘Black Lives Matter’) எனும் இயக்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவருகிறது.

இப்போது கிரிக்கெட்டுக்கு வருவோம். கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் ஆட்டத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய சில நடைமுறைகளை, ஐசிசி-யின் அனில் கும்ப்ளே தலைமையிலான டெக்னிகல் கமிட்டி அறிவித்தது. அதன்படி, வீரர்கள் விக்கெட் எடுக்கையில், கேட்ச் பிடிக்கையில் என குதூகலமாக ஒருவரையொருவர் கட்டிக்கொள்ளக்கூடாது! பந்துவீச்சாளர்கள் ‘வழக்கம்போல்’ கையில் எச்சில்துப்பி பந்தை பாலிஷ்  போடுகிற வேலையே கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள். டாஸ் வென்ற இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 204 ரன்னில் சுருண்டது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel), ஜேஸன் ஹோல்டர் (Jason Holder)ஆகியோரின் துல்லிய ‘வேக’த் தாக்குதலற்கு இங்கிலாந்து ஈடுகொடுக்கமுடியாமல் ஒடுங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வழக்கத்துக்கு மாறாக நேற்று மிகவும் பொறுப்புடன் விளையாடி முதல் இன்னிங்ஸில் 318 எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் க்ரெய்க் ப்ராத்வெய்ட் (Kraig Brathwaite) 65 ரன், ரோஸ்டன் சேஸ் (Roston Chase) 47, ஷேன் டௌரிச் (Shane Dowrich) 61 என முக்கிய பங்களிப்பு. போட்டி தொடர்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் ‘வைரஸில்’ சிக்கிவிடாமல் அமைதியாக ஆட்டமாட,  ஆண்டவன் அருள்புரிவானாக.

படம். நன்றி: இந்தியா டிவி நியூஸ்.

**