பஞ்சாபின் மொஹாலி நகரில் நேற்று இரவு (27-3-16) நடந்த கத்திமுனை கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியாவைத் தகர்த்தது. டி-20 உலகக்கோப்பை செமி-ஃபைனலில் நுழைந்தது. மீண்டும், விராட் கோஹ்லியின் இணையற்ற ஆட்டத்திறன், இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு வித்திட்டது.
ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் செய்யவந்து அதிரடியாக 51 ரன்களை 4 ஓவர்களிலேயே எடுத்துவிட்டது. ரவி அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சாதுர்யமான பௌலர்களை ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் குறிவைத்துத் தாக்கினர். அஷ்வினின் முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்களைப் பறக்க விட்டார் ஆரோன் ஃபின்ச்(Aaron Finch). 5-ஆவது ஓவரில். நேஹ்ராவிடம் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) அவுட்டானார். ஃபின்ச் தொடர்ந்து விளாச, திருப்பிக்கொண்டுவரப்பட்ட அஷ்வின், டேவிட் வார்னரை வெளியே இழுத்து தோனியிடம் ஸ்டம்ப்ட் ஆகவைத்தார். திடீரென யுவராஜ் சிங்கை பௌலிங்கில் நுழைத்தார் தோனி. பலன் கிடைத்தது. முதல் பந்திலேயே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை தோனியிடம் கேட்ச் கொடுக்கவைத்துக் காலி செய்தார் யுவராஜ். ஆனால், பொதுவாக ஸ்பின்னர்களைத் தாக்கி ரன்னெடுக்க வேண்டும் என்கிற ஆஸ்திரேலிய விளையாட்டு வியூகத்தை (gameplan) உணர்ந்தார் தோனி. அஷ்வினுக்கு 2 ஓவர்களுக்கு மேல் தரவில்லை. ஜடேஜா, யுவராஜுக்கும் தலா 3 ஓவர்களே தந்தார். ரெய்னாவிடம் பந்தைக் கொடுக்கவேயில்லை!
சாமர்த்தியமாக தன் வேகப்பந்துவீச்சாளர்களைச் சுழற்றினார் இந்தியக் கேப்டன். திரும்பி வந்த பும்ராவும், ஹர்தீக் பாண்ட்யாவும், தங்கள் சாகஸங்களினால் பௌண்டரிகள் பறக்காமல் பார்த்துக்கொண்டனர். பேட்ஸ்மன்கள் ஓடி, ஓடியே ரன் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஃபின்ச் 43 ரன்னில் விழுந்தவுடன் வந்த க்ளென் மேக்ஸ்வெல் (Glen Maxwell), நன்றாக ஆடினார். அவரைத் தன் மந்தவேகப் பந்தொன்றில் ஏமாற்றி, பெயில்களை முத்தமிட்டார் பும்ரா. மேக்ஸ்வெல்லின் வீழ்ச்சிக்குப்பின் பாண்ட்யா, நேஹ்ராவிடம் ரன் எடுக்க ஆஸ்திரேலியர்கள் சிரமப்பட்டனர். ஒரு சமயத்தில் ஆஸ்திரேலியா 180-க்குக் குறையாமல் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவின் கெடுபிடி பௌலிங்கிற்கு முன்னால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வியூகம் வீழ்ந்தது. 160 ரன்களில் ஆஸ்திரேலியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மொஹாலியில், பந்து அதிகம் எழாமல் கீழேயே தங்கி சிரமம் தரும் மந்தமான பிட்ச்சில், 161 என்பது சிக்கலான இலக்கு. ஆனால், குவார்ட்டர் ஃபைனல் எனக் கருதப்பட்ட இந்த முக்கியமான போட்டியில், இந்தியாவின் துவக்க ஆட்டம் அபத்தமாக இருந்தது. 49 ரன்களில் 3 விக்கெட்டுகள். வழக்கம்போல், ரோஹித், தவன், ரெய்னா மைதானத்தில் நின்று ஆடவில்லை. அருமையாக பந்து வீசிய ஷேன் வாட்சன் (Shane Watson) ரோஹித், ரெய்னாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இவர்களின் மோசமான ஆட்டத்தினால், விராட் கோஹ்லியின்மீது மனஅழுத்தம் மேலும் ஏறி உட்கார்ந்துகொண்டது. ஆஸ்திரேலிய பௌலிங் வெகுதுல்லியம். ஃபீல்டிங் அதிகூர்மையாக. யுவராஜ் கொஞ்ச நேரம் நின்றார். சிங்கிள்களில் ரன் எடுக்கமுயன்றார். கணுக்கால் பிரச்னையோ என்னவோ, கோஹ்லியோடு ஈடுகொடுத்து ஓடி ரன்னெடுக்க அவரால் இயலவில்லை. ஒரு சிக்ஸருக்குப்பின் அடுத்த பந்தை சோம்பேறித்தனமாக லெக்-சைடில் தூக்கப் பார்த்தார். வேகமாக நகர்ந்த வாட்சன், இறங்கிய பந்தை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். யுவராஜ் அவுட்டாகையில் இந்தியாவுக்கு 6 ஓவர்களில் 65 ரன்கள் தேவைப்பட்டது. மோசமான ஆட்டநிலை. பலருக்கு யுவராஜ் அவுட் ஆனது `அப்பாடா!` எனத் தோன்றியது.
பாண்ட்யாவை அனுப்புவதற்குப் பதிலாக மஹேந்திர சிங் தோனி தானே இறங்கினார். தோனியின் வருகை, ஏகப்பட்ட அழுத்தத்திலிருந்த கோஹ்லியின் உடம்புக்குள் மின்சாரம் பாய்ச்சியது. ஜோஷ் ஹேசல்வுட்டின் (Josh Hazlewood) ஓவரில், மின்னலாக இரண்டு, இரண்டு ரன்களாக நாலுமுறை பறந்தார்கள் தோனியும், கோஹ்லியும். பௌண்டரி ஒன்று சீறியது கோஹ்லியிடமிருந்து கடைசி பந்தில். இந்தியாவின் ஆட்டத்தில் உயிரோட்டம் தென்பட்டது.
ஜேம்ஸ் ஃபால்க்னர் (James Faulkner) ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த இறுதி-ஓவர் பௌலர்(death-over bowler). அவரை எந்தக் கொம்பனும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்கிறது அவரது ரெப்யுடேஷன். ஆனால் அந்த இரவில், கோஹ்லிக்குள் ஏதோ ஒரு பூதம் இறங்கியிருந்தது ஃபாக்னருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. முதல் 2 பந்துகளில் இடது, வலதாக பளார், பளார் எனப் பறந்தன பௌண்டரிகள். மொஹாலி அதிர ஆரம்பித்தது. ரசிகர்களின் மூவர்ண டர்பன்கள் மேலெழுந்தன. இளம் பஞ்சாபி யுவதிகளின் கீச்சுக்கீச்சுக் கூச்சல்கள் போதை ஏற்றியது. Surreal atmosphere! விளைவு? பதற்றம் கண்ட ஃபாக்னரின் அடுத்த பந்தின்மீது பாய்ந்தார் கோஹ்லி. லாங்-ஆன் திசையில் உயர்ந்து வானில் கோபம்காட்டிய பந்து, ரசிகர்களுக்கு மத்தியில் இறங்கியது. 19 ரன்கள் வந்தன ஃபால்க்னரின் ஓவரில்(18th over). வெற்றிப்பாதையில் தான் இருப்பதான கனவில் அதுவரை மிதந்திருந்த ஆஸ்திரேலியாவிற்குத் தரை தட்டுப்பட்டது; தடுமாறியது. 19-ஆவது ஓவரை வீசிய நேத்தன் கோல்ட்டர்-நைல் (Nathan Coulter-Nile)-ஐ கோஹ்லியும் தோனியும் தாவிக் கிழிக்க, 16 ரன்கள் இந்தியாவிடம் சேர்ந்தது. ஆஸ்திரேலிய வாபஸி பயணம் உறுதிசெய்யப்பட்டது!
மொஹாலி கொண்டாட ஆரம்பித்துவிட்டது. ஃபாக்னர் 20-ஆவது ஓவரின் முதல்பந்தை தோனியை நோக்கி வீசினார் என்று சொல்லிமுடிப்பதற்குள், பந்து லாங்-ஆன் பௌண்டரியைத் தாண்டிப் பாய்ந்தது. இந்தியா உலகக்கோப்பையின் செமிஃபைனலில் பிரவேசித்தது. விராட் கோலி தன் உணர்ச்சிகளுக்கு வடிகால் அமைக்க முற்பட்டார். கீழே மண்டியிட்டுக் குனிந்துகொண்டார். தோனி வந்து கொஞ்சநேரம் அப்படியே இருக்கவைத்துப் பின் தூக்கிக் கட்டிக்கொண்டார். 82 நாட்-அவுட். 9 பௌண்டரி, 2 சிக்ஸர். 39 பந்துகளில் அரைசதம், அடுத்த 12 பந்துகளில் 32 மின்னல் ரன்கள். விராட் கோஹ்லியிடமிருந்து வீறுகொண்ட இந்தியாவுக்காக.
தலைகொள்ளாப் பிரச்னைகளுக்கு நடுவிலும் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்துவதில்லை பிரதமர் நரேந்திர மோதி! மேட்ச் முடிந்த நொடிகளுக்குள் தான் அனுப்பிய ட்வீட்டில் கோஹ்லியின் அபார இன்னிங்ஸையும், தோனியின் பிரமாதமான தலைமையையும் புகழ்ந்திருக்கிறார். இந்தியாவின் அடுத்த மேட்ச்: 31 மார்ச். மும்பை. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் செமிஃபைனல். மேலும் பொங்கலாம் உணர்ச்சிகளின் பிரவாகம்.
**