இந்திய வனங்களில் விலங்குகள்

நமது நாட்டில், விலங்கினப் பாதுகாப்பு விழிப்புணர்வுபற்றி சிலர் பேசிவருகிறார்களே தவிர, அபூர்வ வனவிலங்குகளைத் தோலுக்காகவும், வெற்று டாம்பீகத்துக்காகவும் வேட்டையாடிக் கொல்வது இன்னும் நின்றபாடில்லை.  சில சமயங்களில் கிராமத்து மக்களே கொல்கிறார்கள். கேட்டால், ஒரு சிறுத்தைப்புலி ஊருக்குள்ளே வந்துருச்சு.. ஆட்டுக்குட்டியைத் தூக்கிட்டுப் போயிருச்சு. போனவாரம் ஒரு பிள்ளையைக் காணோம்.  அதனாலதான் இந்த தடவ மாட்டினப்போ, அடிச்சுக் கொன்னுட்டோம்னு பெருமைபடச் சொல்கிறார்கள். செத்த விலங்கோடு செல்ஃபீ எடுத்துக் கிளுகிளுக்கும் அறிவீனர்களை, கிராமப்புறங்களிலும்  சமீபகாலத்தில்  பார்க்கமுடிந்தது. காட்டு யானைகளும் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதாகவும் அவ்வப்போது நியூஸ். வனத்தை எல்லாம் அழித்துக்கொண்டே இருந்தால், யானைகளும், சிறுத்தைகளும், ஒநாய்களும் ஊருக்குள்ளேதான் வரும்? அதுகளின் வாழ்வாதாரத்தை, வசிக்குமிடத்தைத் திருடிக்கொண்ட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், சுகிக்கிறீர்கள் என நேரிடையாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள, அதுகளும் ஆசைப்படும்தானே!

ஒரு கட்டத்தில், இந்திய நாட்டில் சிங்கங்களே இல்லாமல் செய்துவிடுவார்களோ என்கிற மோசமான நிலை. இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது என்கிறது சர்வே ஒன்று. குஜராத்தின் ’கிர்’ காடுகளில் (Gir Forests, Gujarat) சட்டவிரோத வேட்டைக்காரர்களிடமிருந்து தப்பித்து  வசிக்கின்ற  மிச்சமிருக்கும் சிங்கராஜாக்கள், ராணிகளை,  சில வருடங்களாக  அரசாங்கம் சரிவரப் பாதுகாக்க ஆரம்பித்ததால், 2018-ல் சுமார் 600 சிங்கங்கள்  இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னதாக 523 என்கிறது புள்ளிவிபரம். யார் புண்ணியத்திலோ கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.

Royal Bengal Tiger

 ’ராயல் பெங்கால் டைகர்’ எனப் பெருமிதமாக அழைக்கப்படும் இந்தியப் புலிகளின் எண்ணிக்கை 2010-ல் மோசமாக இருந்தது. அரசாங்கத்துக்கு மனிதர்களைக் கவனிக்கவே நேரமில்லை, புலியாவது எலியாவது? 1706 புலிகளே மொத்தம் இருந்திருக்கின்றன. இந்தியா போன்ற, ஒருகாலத்தில் கொடும் வனவிலங்குகளுக்குப் பேர்போன நாட்டுக்கு இது மிகவும் சிறிய புலித்தொகை. கடந்த சில வருடங்களாக ’தேசிய புலி வளர்ப்பு ஆணையம்’ (National Tiger Conservation Authority, NTCA) தன் செயல்பாடுகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டிருப்பதால், விளைவு நல்லதாக மாற ஆரம்பித்திருக்கிறது.  இந்திய அரசினால் 2019 ஜூலையில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட ’2018 புலி சென்ஸஸ்’, புலிகளின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் இதுவரை 48 புலிகள் வனாலயங்கள் (Tiger Reserves) இருந்தன. இப்போது அஸ்ஸாமில் மேலும் ஒன்றும் (ஏற்கனவே ஒன்றிருக்கிறது), அருணாச்சலப்பிரதேசத்தில் ஒன்றுமாக சேர்க்கப்பட்டு மொத்தம் 50 புலிகள் வனாலயங்கள் உள்ளன. இதில் மிகப்பெரியது நாகார்ஜுன சாகர்-ஸ்ரீசைலம் வனம் ஆந்திராவில் உள்ளது. பரப்பு 3296 சதுர கி.மீ. நாட்டின் பல்வேறு வனப்பகுதிகளில் 2967 புலிகள் வசிப்பதாக சென்ஸஸ்  சொல்கிறது. இந்தியப் புலித்தொகை, உலகின் மொத்த எண்ணிக்கையில் 75 % என்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இந்தியா ஒன்றுதான் புலிகளைப் பாதுகாக்கவெனத் தனிப்படை அமைத்த நாடு! சிறப்பு புலிகள் பாதுகாப்புப் படை (Special Tiger Protection Force (STPF) எனப் பெயர். புலிகள் அதிகம் காணப்படும் மாநிலங்களில் – மத்தியப் பிரதேசமும் (526), கர்னாடகாவும்(524), உத்தராகண்டும்(442) முன்னணியில் இருக்கின்றன. மேலும் மஹாராஷ்ட்ரா (312), மற்றும், இது ஆச்சரியம் – தமிழ்நாட்டிலும் புலிகள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றன. தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, கலக்காடு-முண்டந்துறை வனப்பகுதிகள் புலிகள் வாழும் இடங்கள். 264 புலிகள் அங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஜாக்ரதை!

கொடும்விலங்குகளின் பட்டியலில் வரும் சிறுத்தைப்புலிகளும் (Leopards) இந்தியாவில் நிறைய உலவுகின்றன. இவை ‘Indian Leopard’ எனும் வகையில் வருபவை. சமீபத்திய விலங்கு சென்சஸ் இப்படிக் குறிக்கிறது: அஸ்ஸாமின் வனங்களில்தான் நிறைய சிறுத்தைப் புலிகள் – 2487. ஆனந்தமாக வசிக்கின்றன போலும். அடுத்தாற்போல் வருவது  மத்திய பிரதேசம் -1817. மேலும் குஜராத்தில் 1359, கர்னாடகாவில் 1129.  அந்தந்த மாநில அரசுகள் சிறுத்தைகளுக்கான வாழ்விடங்களான வனங்களின் பரப்பைப் பெரிதுபடுத்த முயற்சித்தால், இந்திய சிறுத்தைப்புலி  இனமும் வளரும், வாழும்.

ஜனரஞ்சகமான ’காட்டுவிலங்கு’ நம்ப யானை. ஊர்களிலும் சாதுவாக உலவும் வகை குறிப்பாக – விஷ்ணு கோவில்களில்! இதுகளின் தொகை நாட்டில் எப்படி? கர்னாடகாதான் யானை வளர்ப்பில் டாப் மாநிலம். 6049 யானைகள். அடுத்த இடம் அஸ்ஸாமிற்கு – 5719. மூன்றாவதாக வருவது சிறு மாநிலமான கேரளா – 5706. ஒருவழியாக, தமிழ்நாடும் இந்த லிஸ்ட்டில் வந்துவிட்டது எனத் தமிழன் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான் – 2761 யானைகள் வசிக்கின்றன.

Sloth Bear
சோம்பலே குணம்!

பள்ளிக்குழந்தைகளாக காட்டுவிலங்குகளைப்பற்றிப் படிக்கையில், பெரிதாக மனதில் கற்பனை செய்துகொண்டு, சிங்கம், புலி, கரடி என அடுக்குவதுண்டு. அந்தக் கரடி வகை நாட்டில் எப்படி இருக்கிறது? இந்தியத் துணைக்கண்டத்தை (Indian Sub-continet) சார்ந்த கரடிகள் பிரதானமாக ஐந்து வகைப்படும்: Sloth Bear (சோம்பல் கரடி), Sun Bear, Moon Bear, Asian Black Bear and Himalayan Brown Bear. பெயருக்கேற்றபடி இந்தியாவின் வடபகுதியில், மாபெரும் ஹிமாலயப் பள்ளத்தாக்குகளில் கறுப்பு, பழுப்பு நிற ஹிமாலயன் கரடிகள் பெருமளவில் காணப்படுகின்றன. Sloth Bear அல்லது சோம்பல் கரடி தேனுண்ணும் வகை. தேன்கூடுகளைத் தேடிக் குடித்துவிட்டு மரத்திலேறி மணிக்கணக்கில் தூங்கும். சோம்பல் கொஞ்சம் ஜாஸ்தி! கரடிகளின் எண்ணிக்கை பற்றி அதிகாரபூர்வ கணக்கெடுப்பு ஏதும் இல்லை எனினும், இந்தியாவின் வெவ்வேறு வனப்பகுதிகளில் மொத்தம் சுமார் 20,000 கரடிகள் இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. கரடி வகைகளும் இந்திய அரசின் பாதுகாக்கப்படும் விலங்கினங்களின் (Protected Species) பட்டியலில் வருபவை. Wildlife (Protection) Act, 1972-ன்படி, மற்ற அபூர்வ, கொடிய விலங்குகளைப்போலவே கரடிகளையும்,  வேட்டையாடுதல், பிடித்து சித்திரவதைப்படுத்தல், விற்பனை செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றம்.

இந்திய ஓநாய்
(குஜராத்)

காட்டு மிருகங்கள் என்றால் மேலும் மனதில் வருபவை, ஓநாய்கள், நரிகள்! சிறுவகை விலங்குகள், ஆடுகள் போன்றவையை உணவாகக் கொண்டவை இந்த ஓநாய்கள். மத்திய இந்தியாவில் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து, சிறுகுழந்தைகளைக் கவ்விக்கொண்டு ஓநாய்கள் ஓடிவிட்டதாகச் செய்திகள் வந்து பீதிகிளப்புவதுண்டு. இந்திய ஓநாய்கள் பெரிதும் காணப்படும் மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்னாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம். 2000-த்திலிருந்து 3000 வரை இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை இருக்கலாம் என்பது அனுமானம்.

Bengal Fox in Rajkot, Gujarat

 நாடுமுழுதும் உள்ள பெரும்பாலான வனங்களில் வசிக்கும் விலங்கு எனினும், கிழக்கு இந்தியாவின் காடுகளில் வசிக்கும் ’வங்காள நரி’ (Bengal Fox) என அழைக்கப்படும் நரி இனம், ஒரு பிரபல வகை. இவற்றைத் தாண்டி, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ராவில் அதிகம் தென்படுகின்றன நரிகள். கர்னாடகா, தமிழ்நாடு ஆகி மாநிலங்களில் காட்டுப்பகுதிகள் தொழிற்சாலைகள், புறநகர்ப்பகுதிகளாக வேகமாக மாற்றப்படுவதால், நரிகளின் வாழ்விடம் சிதைக்கப்பட்டு அவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது.

சிங்கம், புலி, கரடிகளோடு பல்வேறு அரிய விலங்கினங்களையும்  ஒழுங்காகப் பாதுகாத்து வளர்க்க, புதுப்புது வனப்பகுதிகளை உருவாக்கவும், ஏற்கனவே இருக்கும் காடுகள் காணாமல்போய்விடாமல் பாதுகாக்கவும், தேசிய/மாநில வனவிலங்குப் பாதுகாப்புத்துறைகளின் முனைப்பான நடவடிக்கைகள் அதி அவசியமாகிறது.

**

உனக்குப் பின்னே நான் !

காலைவணக்கம், Good morning, ஸுப்ரபாத் என்று விசிறிவிடும் விதவிதமான அச்சுபிச்சு  வாட்ஸப் மெஸேஜ்களுக்கிடையே, காலையில் ஒரு வித்தியாசமான மெசேஜ் வந்தது. ஒரு ’பெற்றவளின்’  விடிகாலை ஞானமோ அல்லது உள்முகிழ்த்த பெருமையோ, ஏதோ ஒன்று: ’ஒரு பிள்ளையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் பின், தீவிரமாக இயங்கும் அம்மா உண்டு’ என்று சொல்லி ஒரு அம்மா-பிள்ளை படத்தோடு சிரித்தது அந்த வாட்ஸப். கூடவே குட் மார்னிங் என்றுவேறு சொல்லிவைத்ததா எனப் பார்த்தேன். இல்லை. நல்லது. இத்தகைய மெசேஜ்களை பார்த்துப் பொதுவாக நகல்வதே வழக்கம். இங்கே அப்படிச் செய்யாமல், ஒரு சிறிய பதில் போட்டேன், எங்கள் குடியிருப்பு வளாகத்திலேயே வசிக்கும், சமீபத்தில்தான் அறிமுமாகியிருந்த அந்த இளம் தாய்க்கு. அவளும் பதிலுக்கு ‘புன்னகை எமோஜி’ ஒன்றை அனுப்பித் திருப்தியாகியிருந்தாள். என் பதிலில் கொஞ்சம் கோபப்படுவாளோ என்று சந்தேகித்திருந்தேன்!

தன் மகன் அல்லது மகளுக்காக, அவர்களின் படிப்பு, மேற்படிப்பு போன்றவைகளில் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக இந்திய அம்மா, அப்பாக்கள் ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். நிறையப் பேசுகிறார்கள். நிறைய செய்யப் பார்க்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் அப்படியான – பெற்றோரின் எதிர்பார்ப்புக்கேற்ற- முன்னேற்றத்தைக் காண்பிப்பதில்லை என்றபோதிலும். சிலசமயங்களில், அதிகம் அலட்டிக்கொள்ளாத சில பெற்றோர்களின் பிள்ளைகள் தடதடவென்று படிப்பிலும், விளையாட்டு, இசை போன்றவைகளிலும் மேலேறுவதைக் கவனிக்கமுடிகிறது. பெற்றோர்கள் பெரிதாக உந்திவிடவில்லை இங்கே. இருப்பினும், எவன் முன்னே வர வேண்டுமென இருக்கிறதோ, அவன் வந்துவிடுவான். எது நடக்கவேண்டுமோ, அது நடந்துவிடும். அதுதான் நடக்கும். இதையே, வடக்கத்திக்காரர்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள்: ஜோ ஹோனா ஹை, ஓ ஹோ ஜாயேகா!

சுற்றுமுற்றும் கவனிக்கையில் ஒன்று அடிக்கடி படுகிறது. சில, பல இளம் தாய்மார்களின் ஆர்வம் தோய்ந்த அதீத கவனம், தங்களின்  மகனின் பேரிலேதான் அதிகமாக இருக்கிறது. அதனால் பெண்குழந்தையின்மேல் அவர்களுக்குப் பாசமில்லை என அர்த்தமில்லை. ஆனால் அசையாத கவனமும், அடிக்கடி தலைகோதிவிடுதலும், தட்டிக்கொடுத்தலும், கன்னத்தை இழைப்பதும் இத்தியாதி சுகங்களெல்லாம் ஆண்பிள்ளைக்குத்தான். எங்கள் வளாகத்திலேயே இந்த தரிசனம், குழந்தைகள் காலையில் பள்ளிக்கூட பஸ்களுக்காக காத்திருக்கும் வேளையில் அடிக்கடி காணக் கிடைக்கிறது. அதனால் அந்தப் பையன் படு ஸ்மார்ட், வகுப்பில் இவன் தான் டாப் என்றெல்லாம் நினைக்கவேண்டியதில்லை. சராசரிக்குக் கொஞ்சம் மேலே இருப்பான். அவ்வளவுதான். அவனைத் தூக்கி மேல் நிறுத்த, உச்சியில் வைத்து அழகு பார்க்க,  அம்மாக்களின் அயராத முயற்சி. ஆனால், இதில் ஒரு பகுதியைக்கூட, அந்தப் பையனோடு பள்ளி செல்லும், அவன் சகோதரியிடம் காட்டுவதில்லை இந்தத் தாய். பெண் குழந்தையிடம் அத்தகைய ஆர்வமோ, கனிவோ காட்டப்படாமல் இருந்தாலும், அதுகள் தாங்களாகவே நன்றாகப் படிப்பதை, நன்னடத்தை, பொறுப்புணர்வு காட்டுவதை, தங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொண்டு முன்னேறுவதை ஆங்காங்கே காணமுடிகிறது. ஆனால், படிப்பில் பெண் குழந்தைகளின் பர்ஃபார்மன்ஸ், தங்களை சரியாக நடத்திக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் ஆகியவை இத்தகைய தாய்மார்களுக்கு ஏனோ, கிளுகிளுப்பூட்டுவதில்லை ! டெல்லியில் வசிக்கும்போதும் இதைக் கவனித்து, ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ஒரு வட இந்தியத் தாயிடம் இதுபற்றி லேசாக விஜாரித்தபோது(!), அவர் சொன்ன பதில் திடுக்கிடவைத்தது: ‘அரே! லட்கியோம் மே க்யூன் த்யான் தேனா ஹை!’ (அட, சிறுமிகள்மீது ஏன் அக்கறை காட்டவேண்டும்?); அவர்கள் இன்னொரு வீட்டுக்குப் போகப்போகிறவர்கள்தானே!’ அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச மனமில்லை. ஸ்டைலாகத் தலைவாரி, ஸ்கூல் யுனிஃபார்ம், சாக்ஸ், ஷு-வென மிடுக்காக பக்கத்தில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் அந்த அழகு சிறுமியைக் கவலையோடு பார்த்துவிட்டு நகர்ந்தேன்.

எனக்கு மெசேஜ் அனுப்பிய அந்தப் பெண், அப்படிப்பட்டவளல்ல. அவளுக்கு இரண்டும் பெண் குழந்தைகள் என்பதும் காரணமோ! இருக்காது. நன்கு படித்த, ஓரளவு மனப்பக்குவமும் தென்படும் பெண்தான் அவள். சரி, பிள்ளையின் அதீத முன்னேற்றத்தின் பின்னணியில், தீவிரமாக இயங்கும் தாயுண்டு என்றவளுக்கு என்ன பதில் சொன்னேன் வாட்ஸப்பில்? இப்படி: ’ஆனால், ஒன்றை நினைவில் கொள்க. உங்கள் குழந்தை என்பது நீங்களேயல்ல! அது, கடவுளால் அழகாகச் செதுக்கப்பட்டு உங்களிடம் விடப்பட்டிருக்கும் புத்தம்புது ஜீவன்!’ ஆங்கிலத்தில் அனுப்பினேன். பின்னே?  பெங்காலிப் பெண்ணுக்குத் தமிழில் சொல்லமுடியாதே?

**

ஏலம் ! ஐபிஎல் 2020

 

19 டிசம்பர் 2019-ல், கொல்கத்தாவில் கோலாகலமாக நடந்த ஐபிஎல் (IPL-Indian Premier League) ஏலத்தை ஸ்டார் நெட்வொர்க்கில் பார்த்துக் களித்தேன். 8 ஐபிஎல் அணிகளும் முக்கியமெனத் தாங்கள் கருதிய போனவருடத்திய வீரர்கள் 10-15 பேரைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை ஏலத்தில் தூக்குவதில் போட்டிபோட்டன. ஏலத்தில் இருந்த 338 கிரிக்கெட் வீரர்களில் இந்திய மற்றும் அந்நியநாட்டு வீரர்கள் பலர். அதிரடி பேட்ஸ்மன்கள், ஆக்ரோஷ பௌலர்கள், ஆல்ரவுண்டர்களோடு, விக்கெட்கீப்பர்கள் சிலர்  என சுவாரஸ்யக் கதம்பம். ஏலத்தில் எடுக்கப்படவேண்டியவர்கள்இந்த 338-லிருந்து, 73 பேர்கள்தான்.   சிறந்த வீரர்கள் அல்லது அணியின் தேவைக்கேற்றவர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்காக நான், நீ என போட்டாபோட்டி ஆரம்பமானது.

SRH -இன்
காவ்யா !

அந்தந்த அணியின் ஜெர்ஸி நிறத்திற்கேற்ப அணியின் உரிமையாளர்கள் அல்லது தேர்வாளர்கள், ஆலோசகர்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகள்-மேஜைகள் – ஒரே வண்ணமயம்தான். பளிச்சென்று தெரிந்தவை பஞ்சாபின் சிவப்பு மேஜை, சென்னை(CSK)யின் மஞ்சள், கொல்கத்தா(KKR)வின் பர்ப்பிள், மும்பை(MI)அணியின் நீலம். மும்பை அணிக்கென நீத்தா அம்பானி (Nita Ambani) பிரதானமாக பளபளவென அமர்ந்திருந்தார்! பஞ்சாபிற்காக ஒவ்வொரு வருட ஏலத்தின்போதும் வந்து, கூந்தலை இடது வலதாகக் கோதி அலையவிடும் , அணி உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்த்தா (Preity Zinta) வராதது ஏமாற்றம் வேடிக்கை பார்ப்பவருக்கு. கொல்கத்தா அணிக்கானவர்களில் முன்னாள் பாலிவுட் பிரபலம் ஜூஹி சாவ்லா வெள்ளையில் வந்து அமர்ந்திருந்தார். இருந்தும் டிவி பார்ப்போர் மற்றும் பார்வையாளர்களின் கண்கள் அடிக்கடி மேய்ந்தது ஹைதராபாத் அணியின் பக்கம்தான். என்ன விசேஷம்? அங்கே ஒரு மஞ்சள் முகம். துறுதுறு யுவதி! யாரது என்கிற க்யூரியாஸிட்டி இந்தியர்களின் மண்டையைப் பிளந்துவிடுமே! பின்னர் தெரிந்தது. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் சொந்தக்காரரான கலாநிதி மாறனின் மகள். காவ்யா. வெள்ளைப்பல்வரிசை மின்ன அடிக்கடி சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், ஏலத்தைத் தூக்கிவிட்டுக்கொண்டும் ஆனந்தமாக இருந்தார். கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ஆசை என்பதோடு, ‘ஸன் குழும’த்தில் மியூஸிக் இன்-சார்ஜாம் காவ்யா. உபரி தகவல்.   

மேடையில் ஏலம்கூவுபவர் (auctioneer) ஒவ்வொரு செட் செட்டாக அமைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களிலிருந்து ஒரு சீட்டை வாங்கி, குறிப்பிட்ட வீரரின் பெயரை, ஏற்கனவே அணிகளுக்குக் கொடுக்கப்பட்ட பட்டியல்படி வரிசைஎண்ணோடு  மைக்கில் அறிவிக்கிறார். சில சமயங்களில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என (அவருக்குப் பிடித்த?) நாட்டின் பெயரையும் சொல்வதுண்டு. மற்றபடி ஏலத்திற்கு விடப்படும் வீரர் ஒரு பௌலரா, பேட்ஸ்மனா என்று சொல்வதில்லை. புகழ்பெற்ற வீரர் பெயர் வரும்போது இது பிரச்னையில்லை. 22-23 வயதிற்குக்கீழ்ப்பட்டவர்கள், Under-19 அணிவீரர்கள் பெயர் தலைகாட்டும்போது, யாரப்பா இது, பேட்ஸ்மனா, பௌலரா எனக் குழப்பம் ஏற்படுகிறது. டிவியில் ஓரத்து விண்டோவில், இதுவரை அவர் ஆடிய ஆட்டம்பற்றி கொஞ்சம் புள்ளிவிபரம் தெரிகிறது! அணிக்காரர்கள், வீரரின் எண்ணை வைத்து, தங்கள் பட்டியலில் அவரின் விளையாட்டுக் கதையைப் பார்த்துக்கொள்கிறார்கள்.   உடனே ஒவ்வொரு மேஜையைச்சுற்றிலும் படபட ஆலோசனை, லேப்டாப்பில் அந்த வீரர் பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்தல், தலையைச் சொறிதல், பக்கத்திலிருப்பவர் காதில் ஓயாத கிசுகிசு, யார் முதலில் கையைத் தூக்குகிறார்கள் என நோட்டம்விடல், தானும் 10, 20 லட்சமெனத் தூக்கிவிட்டுப் பார்த்தல், நேரம் பார்த்து அமுங்கிவிடல் – என ஒரே அமர்க்களம். இந்த மாதிரிக் கூத்துகளிடையே இந்திய, அந்நிய வீரர்கள் விலைபோனார்கள்.

சின்னப்பையன் ஜெய்ஸ்வால் !

ஏலத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் க்றிஸ் லின் (Chris Lynn)-ஐ மும்பை இண்டியன்ஸ் ஆரம்பத்தொகையான (player’s base price) ரூ.2 கோடிக்கே வாங்கியது. நீத்தா அம்பானியின்  முகத்தில் மலர்ச்சி! கடந்த சீசனில் KKR-அணிக்கு விளையாடிய அதிரடி வீரர் இந்த லின். ராபின் உத்தப்பா, மற்றும் ஜெயதேவ் உனாட்கட்டை (Jayadev Unadkat) ராஜஸ்தான் ராயல்ஸ், தலா ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. Good buys. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) இங்கிலாந்து கேப்டன் அய்ன் மார்கனுக்கு(Eoin Morgan) ரூ.5.25 கோடி கொடுத்தது அதிகம்தான். பார்க்கலாம். ஆஸ்திரேலிய டி-20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்சை(Aaron Finch), விராட் கோஹ்லி தலைமை தாங்கும் பெங்களூரு அணி ரூ.4.4 கோடிக்கு வாங்கியது. அவரது திறமைக்கு அது சரியான விலை. இங்கிலாந்தின் ஜேஸன் ராய், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.1.5 கோடிக்கு மலிவாகத் தூக்கப்பட்டார். இந்திய டெஸ்ட் வீரர்களாக முத்திரை குத்தப்பட்ட புஜாரா, விஹாரி ஆகியோரை எந்த அணியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி ஆகியோரும் ஏலம் போகவில்லை. Sad.

இரண்டாவது ரவுண்டிலிருந்து, ஏலம் வெகுவாக சூடுபிடித்தது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) பெங்களூர், டெல்லி அணிகளுக்கிடையே புகையைக் கிளப்பினார். மாறி மாறி இரு அணிகளும் விலையை உயர்த்த, 14.75 கோடிவரை ஏற்றிவந்த டெல்லி, தடாலென்று விலகிக்கொண்டது! உள்ளே புகுந்தது கொல்கத்தா. பெங்களூரோடு கடும்போட்டி போட்டு, ரூ.15.5 கோடிக்கு கம்மின்ஸை வாங்கியது. இந்த அளவுக்கு இவருக்கு hype தேவைதானா? கம்மின்ஸ் தன் வேகத்தை ஆட்டத்தில் காண்பிப்பாரா? விக்கெட்டுகள் விழுமா,  இல்லை, KKR-ன் ஷாருக் கானுக்கு நாமம் தானா!

அதிக விலைக்குப்போன மேலும் சில வெளிநாட்டு வீரர்கள்: போனவருடம் ஐபிஎல் ஆடாத, ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்(Glenn Maxwell) ரூ. 10.75 கோடி (பஞ்சாப்), தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் க்றிஸ் மோரிஸ் (Chris Morris) ரூ. 10 கோடி (பெங்களூர்), முதன்முதலாக ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வெஸ்ட் இண்டீஸின் பௌலர், ‘சல்யூட்’ புகழ் ஷெல்டன் காட்ரெல் (Sheldon Cottrell) ரூ. 8.25 கோடி (பஞ்சாப்), ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நேத்தன் கூல்டர்-நைல் (Nathan Coulter-Nile) ரூ.8 கோடி(மும்பை), வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மன் ஹெட்மயர் (Shimron Hetmyer) ரூ. 7.75 கோடி (டெல்லி).

போனவருட வீரர்களை அதிகமாகக் கழட்டிவிடாமல் வைத்துக்கொண்டதால், கொஞ்ச இருப்புப் பணத்துடன் உட்கார்ந்து, மற்றவர்கள் பணத்தை விசிறி ஏலம் எடுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), திடீரென ஒரு சமயத்தில் உள்ளே புகுந்து, இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் சாம் கர்ரன் (Sam Curran)-ஐ ரூ.5.5 கோடிக்கு வாங்கியது. நல்ல பர்ச்சேஸ்தான். ஆனால் சென்னை, ஸ்பின்னர் பியுஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி கொடுத்தது அசட்டுத்தனம். சென்னையிடம் ஏற்கனவே ஜடேஜா, ஹர்பஜன், கரன் ஷர்மா ஆகிய ஸ்பின்னர்கள் உண்டு.  இறுதியில் பணம் கரைந்துவிட்ட நிலையில், முதல் ரவுண்டில் ஏலம்போகாத TNPL ஸ்டாரான ஸ்பின்னர் சாய் கிஷோரை, 20 லட்ச ரூபாய்க்கு மலிவாக வாங்கிப் போட்டது சென்னை.  தமிழ்நாட்டின் இன்னுமொரு TNPL ஸ்பின்னரான, வித்தியாச ஆக்‌ஷன் காட்டும் வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு, கொல்கத்தா அணியினால் வாங்கப்பட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ‘சாய்ஸ்’ ஆக இருந்திருக்கும்.

பெரிசு: ப்ரவீன் டாம்பே

 இந்தியாவின் 19-வயதிற்குக் கீழ்ப்பட்டோரின் கிரிக்கெட் அணியிலிருந்து சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டது நேற்றைய விசேஷம்.  இந்திய U-19 கிரிக்கெட் கேப்டன் 19-வயது ப்ரியம் கர்க் (Priyam Garg) மற்றும் 22-வயது அதிரடி ஜார்கண்ட் பேட்ஸ்மன் விராட் சிங் ஆகியோர் தலா ரூ. 1.90 கோடிக்கு ஹைதராபாத் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்கள். கோச் வி.வி.எஸ். லக்ஷ்மணுடன் பேசியபின், நம்ப காவ்யா செய்த வேலை! மேலும், லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் பஞ்சாப் அணியினால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ராஜஸ்தான் பார்த்துக்கொண்டிருக்குமா? இந்திய U-19-அணிக்காகத் தேர்வாகியிருக்கும் 17-வயது பேட்ஸ்மன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  (Yashaswi Jaiswal) -ஐ ரூ.2.40 கோடிக்கும், வேகப்பந்துவீச்சாளர் 19-வயது கார்த்திக் தியாகியை ரூ.1.30 கோடிக்கும் வாங்கியது. எதிர்காலத்தை மனதில் கொண்டு இரு இளைஞரையும் அணியில் இணைத்துக்கொண்டதாக ராஜஸ்தான் விளக்கியது. உத்திரப்பிரதேசத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, 15 வயதுவரை பானி-பூரி விற்றுவந்த சின்னப்பையன் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாமா?

இளசுகளா பார்த்து அணிக்குள் அள்ளிப்போட்டா எப்படி? பழுத்த பழத்தை யாராவது வாங்கவேண்டாமா? ப்ரவீன் டாம்பே (Pravin Tambe) என்கிற லெக்-ஸ்பின்னரை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி. டாம்பேக்கு வயசு? சும்மா 48-தான்!

**

விட்டு விளாசிய விண்டீஸ் !

 

நேற்று (15/12/19) சென்னையில், வெஸ்ட் இண்டீஸ் தன் பழைய ஸ்வரூபத்தைக் காண்பித்து இந்தியாவை மிரட்டியது. கரன் போலார்ட் (Kieron Pollard) தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி உயிரூட்டம் பெற்றுவருகிறது – குறிப்பாக short format -களில், என்பதில் சந்தேகம் தேவையில்லை.

வெகுநாட்களுக்குப் பின் சென்னைக்கு வந்தது சர்வதேச கிரிக்கெட். சில நாட்களாகவே மழையின் தாக்கத்திலிருந்தது சென்னை. சேப்பாக் மைதானத்திலும் ஒரே கொட்டாகக் கொட்டி, ரசிகர்களின் மானத்தை வாங்குமோ என அஞ்சியிருந்த நிலையில்,  வருண்தேவ் அப்படியெல்லாம் ஒன்றும் விஷமம் செய்யாமல் விலகியே இருந்தான்!  அவன் கருணையே கருணை.. ஒரு கடுமையான ஒரு-நாள் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க முடிந்தது. முடிவு இந்தியாவுக்கு எதிராகத் திரும்பிவிட்டபோதிலும்.

வெஸ்ட் இண்டீஸினால் முதல் பேட்டிங்கிற்கு அனுப்பப்பட்ட இந்தியா, சேப்பாக்கின் ஸ்லோ பிட்ச்சில், தன் இஷ்டத்துக்கு ஷாட் அடிக்கமுடியாமல் தடுமாறியது. முதலில் ராகுலையும், அடுத்து கேப்டன் கோஹ்லியையும் தூக்கிக் கடாசினார் வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் காட்ரெல்  (Sheldon Cottrell). அவுட் ஆக்கியபின் ஒரு சல்யூட் அடித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். அவரது கொண்டாட்ட ஸ்டைல்! நின்று ஆடமுயன்ற ரோஹித் ஷர்மா, 36 ரன்களே எடுத்து ஜோஸஃபின்  (Alzarri Joseph) துல்லிய வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்துத் திரும்பினார். ஃபார்மில் இல்லாததால், எல்லோருடைய வாயிலும் விழுந்து புறப்படும் இடதுகை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மன் ரிஷப் பந்த் இப்போது க்ரீஸில் ! கூடவே வலதுகை டாப்-ஆர்டர் பேட்ஸ்மன் ஷ்ரேயஸ் ஐயர். பெரிசுகள் வேகமாக விழுந்துவிட்ட இக்கட்டான சூழலில், இருவரும் ஒருவருக்கொருவர் கலந்துபேசி, எழும்பாத வேகப்பந்துகளுக்கெதிராக வியூகம் அமைத்து, நிதானமாக நின்று ரன் சேர்த்தது ரசிகர்களுக்குக் குஷியூட்டியது. நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தபின், முதலில் ஐயர் (70), பிறகு பந்த் (71) வெஸ்ட் இண்டீஸினால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர்.  தல தோனியின் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் பந்த்! பந்த்! எனக் கோஷமிட்டது ரிஷப் பந்திற்கு ஆச்சரிய அனுபவமாயிருந்திருக்கும்.

இந்த நிலையில்,  ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (Shivam Dube)-ஐ கோஹ்லி இறக்கியிருக்கலாம். ஆனால் அனுபவசாலியான கேதார் ஜாதவை அனுப்பினார். சரியான முடிவு. ஜாதவ், ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து ஒன்று, இரண்டு என விரட்டி ரன் சேர்த்ததால் ஸ்கோர் கௌரவமான நிலைக்கு வந்து சேர்ந்தது. கேதார் விழ, கூடவே ஜடேஜா ஒரு சர்ச்சையான ரன் -அவுட்!  முதலில் நாட் அவுட் என்ற தென்னாப்பிரிக்க அம்பயர்  ஷான் ஜார்ஜ், போலார்டின் அழுத்தத்தில் மூன்றாவது அம்பயரிடம் போக, கோஹ்லி கொதித்தார்! ஆனால் அவுட் அவுட்தானே.. ஒரு சமயத்தில் 240-ஐத் தாண்டாது என்றிருந்த நிலை. 287 / 8 என்பது, இந்தியா இந்த பிட்ச்சில் வெஸ்ட் இண்டீஸைக் காலிசெய்யப் போதுமானது என்பதே அனைவரின் யூகமும். ஆனால்..  நேற்று நடந்தது வேற !

Shimron Hetmyer

 வெஸ்ட் இண்டீஸ் மாலை-இரவுப் பகுதியில் ஆட ஆரம்பிக்கையில்,  நிலைமை மாற்றம் கண்டது. ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் வெஸ்ட் இண்டீஸின் அனுபவம் குறைந்த பேட்ஸ்மன்களை அடித்துத் தூக்கிவிடுவார்கள் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ற ஃபீல்டிங் வியூகங்களும் அமைக்கப்பட்டு ஆடினர்.  ஆரம்பத்தில் சுனில் ஆம்ப்ரிஸ் (Sunil Ambris) தீபக் சாஹரின் (Deepak Chahar) மந்தகதிப் பந்தில் காலியானாரே தவிர, அடுத்து நின்ற ஜோடி உஷாரானது.  வெஸ்ட் இண்டீஸ் நம்பர் 3-ஆன ஷிம்ரன் ஹெட்மயரும் (Shimron Hetmyer) , க்ரீஸில் இருந்த ஷாய் ஹோப் (Shai Hope) -உம் சேர்ந்து, இலக்கை நோக்கிய பாதையை சீர்செய்துகொண்டு ஆடினர். இருவரும் பேட்டிங்கில் நேர்-எதிர் அணுகுமுறை கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். ஹோப், வழக்கம்போல் sheet anchor ரோலில் , அவசரம் காட்டாது, பௌண்டரி தவிர்த்து,  ஓடி, ஓடி ரன் சேர்த்தார். ஆனால், ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ஹெட்மயர், விரைவிலேயே மூன்றாவது, நாலாவது கியருக்கு மாற்றினார் வண்டியை. ஒரு பக்கம் குல்தீப் யாதவ், மறுபக்கம் ஜடேஜா என ஸ்பின் போட்டு ரன் கொடுக்காமல் நெருக்கப் பார்த்தார் கோஹ்லி. ஹெட்மயரிடம் அவருடைய பருப்பு வேகவில்லை. ரன் கொடுக்க மறுத்து இறுக்க முயன்ற ஜடேஜாவின் ஒரு பந்தை, முன்னே பாய்ந்து நேராகத் தூக்கி சிக்ஸர் விளாசினார் ஹெட்மயர். அடுத்த பந்திலும் அசராமல் ஒரு மிட்-விக்கெட் ஸிக்ஸ்! கூட்டம் மிரண்டது. என்னடா ஆச்சு இன்னிக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு! கோஹ்லியின் நெற்றியில் கவலைக் கோடுகள். முகமது ஷமியையும், தீபக் சாஹரையும் மாற்றி மாற்றி நுழைத்து, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடிக்கொண்டிருந்த ஹோப்-ஹெட்மயர் ஜோடியைப் பிரிக்கக் கடும் முயற்சி செய்தார் இந்தியக் கேப்டன். வேகம் காட்டிய ஷமியையும் அனாயாசமாக பௌண்டரி விளாசி, தான் ஃபார்முக்குத் திரும்பிவிட்டதை உறுதி செய்தார் ஹெட்மயர். இந்திய அணிக்கு வயிறு கலங்கியது.  பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் போலார்ட் மற்றும் இதர வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குதூகலமாகினர். ரசிகர்கள், இந்திய பௌலர்கள் அடிவாங்கியதால் முதலில் அயர்ந்தாலும், பின் பகுதியில் இளம் ஹெட்மயரின் ஆக்ரோஷ பேட்டிங்கை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். அடுத்த பக்கம், பொறுமையே உருவாக ஷாய் ஹோப், பௌண்டரி, சிக்ஸர்களை மறந்தும்கூட அடித்து அவுட்டாகிவிடக்கூடாது என, ஒன்று, இரண்டு என்று சென்னையின் இறுக்கமான இரவில் ஓடி, ஓடி வியர்த்துக்கொண்டிருந்தார். ஆவேசமாக பேட்டை சுற்றிக்கொண்டிருந்த ஹெட்மயரின் ஜெர்ஸியும் தொப்பலாக வியர்வையில் நனைந்து பளபளத்தது. இடையே புது பேட் மாற்றிக்கொண்டு இந்திய பௌலிங் மீதான தன் தாக்குதலைத் தொடர்ந்தார் அவர்.

களத்துக்கேற்ற வியூகமும், அசாத்திய திறமையும் காண்பித்த பேட்டிங்கை, வெஸ்ட் இண்டீஸிடமிருந்து கேப்டன் கோஹ்லி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் அடிக்கடி விழித்துக்கொண்டிருந்ததில், முகவாயைத் தடவிக்கொண்டிருந்ததில் தெரிந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபேயை அவர் பௌலிங்கில் செலுத்தியபோதெல்லாம் வெஸ்ட் இண்டீஸிடமிருந்து பௌண்டரிகள், சிக்ஸர்கள் அலட்சியமாக எகிறின. போதாக்குறைக்கு ஜடேஜாவின் இன்னொரு ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள்.. யாரு? ஹெட்மயர்தான்! இந்த வேகத்தில் தொண்ணூறுகளுக்குள் வந்த ஹெட்மயர், தன் இயல்பான ஆவேசத்தைக் கொஞ்சம் அடக்கி சிங்கிள், சிங்கிளாகத் தட்டி நூறைக் கடந்து பேட்டை உயர்த்திக் காட்டினார் பெவிலியன் பக்கம். 106 பந்துகளில் 139 ரன். அவர் அவுட் ஆகையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கை வெகுவாக நெருங்கிவிட்டிருந்தது. அடுத்து வந்த பூரன் (Nicholas Pooran) சிங்கிள்களில் ஆரம்பித்து நிதானம் காட்டியது, வெஸ்ட் இண்டீஸின் அதிஜாக்ரதை அணுகுமுறையைக் காண்பித்தது. பரபரப்பு ஏதுமின்றி ஆடிய ஹோப், ஷிவம் துபேயின் ஒரு ஓவரில் வெடித்தார். சிக்ஸர், தொடர்ந்து பௌண்டரி. சதமும் கடந்து அசத்தினார். இறுதியில் பௌண்டரிகளில் இலக்கைக் கடந்தார் பூரன். வெஸ்ட் இண்டீஸ் 291 எடுத்தது, இரண்டே இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து.  போலார்ட் & கோ. ஆர்ப்பரித்து உள்ளே வர,  சோர்வோடு பெவிலியனுக்குத் திரும்பினர் இந்திய வீரர்கள். அவர்கள் எதிர்பாராத தோல்வி…

வெகுகாலத்திற்குப் பின் வெஸ்ட் இண்டீஸ், பழைய வெஸ்ட் இண்டீஸ் அணிபோல், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் கலந்து சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்தது. அடுத்த மேட்ச்சில் (விசாகப்பட்டினம், டிசம்பர் 18), கோஹ்லி பதிலடிகொடுக்கும் வேகத்தில் இறங்கி ஆடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்துவீச்சில் மாறுதல் இருக்கும். சுழலில், யஜுவேந்திர சாஹல் உள்ளே வருவார் எனத் தோன்றுகிறது.

**

டெல்லி சென்று மீண்டபோது ..

’அபாயகரம்’ என எச்சரிக்கப்படும் ’காற்றுமாசு அளவீடு’க்கும், அடாவடி கேஜ்ரிவாலுக்கும், மேலும் அரசியல்வாதிகள் பலரின் வாய்ச் சவடாலுக்குமாகப் பேர் ‘போன’ நகரம். நமது ராஜதானி – அதாவது நாட்டின் தலைநகரம். குளிர்காலத்தில் டெல்லியில் இருப்பதை பெரிதும் விரும்புபவன் நான். விண்டரில் டெல்லிக்கு என்றே ஒரு தனி அழகு. ஒரு புல்-ஓவரை அல்லது fleece-ஐ அணிந்துகொண்டு இஷ்டத்துக்கும் களைப்பில்லாமல் சுற்றலாம். சுற்றுகையில்  ப(Ba)ட்டூரே-(ச்)சோலே, குல்ச்சா என ஊருக்கேற்றபடி பஞ்சாபி ஐட்டம்களை சூடாக உள்ளே தள்ளும் வாய்ப்பும் வரும். சமீபத்தில் டெல்லி விசிட்டின்போது, சில நாட்களிலேயே போதும் போதும் என்றாகிவிட்டது. பேப்பரில், டிவி-யில் டெல்லியில் காற்று மாசு அபாயகரமான நிலையில் எனப்  படிப்பது, பார்ப்பது, கேட்பது வேறு. அங்கே போய்க் கொஞ்ச நாள் இருந்துவிட்டு, போன உடம்போடு திரும்பிவர முயற்சிப்பதென்பது, முற்றிலும் வேறு விஷயம். அவ்வளவு தூரத்துக்கு மோசமாகிவிட்டிருக்கிறது டெல்லியின் ’மாசு’ நிலை. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டெல்லி பகுதியில் பரவும் புகைக்கு, பஞ்சாபின் விவசாயிகளைக் குறைசொல்லிப் பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் முதல்வர் கேஜ்ரிவால் இன்றைய தலைவேதனை. இதற்கு முன்னான பின்னணி என்று பார்த்தால், ’தலைநகர்ப் பகுதி’யை (NCR-National Capital Region) வளர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு டெல்லியைச்சுற்றி நோய்டா, காஸியாபாத், ஃபரிதாபாத், குருகிராம் பகுதிகளில் பெரு, சிறு தொழிலதிபர்களிடம் துட்டு வாங்கிக்கொண்டு நித்திய புகைக்கு வழிசெய்த, பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளுக்கு வித்திட்ட எண்பதுகளின் காங்கிரஸ் அரசுகளின் ’மக்கள் சேவை’ இப்படியாக வந்து விடிந்திருக்கிறது, தலைநகரவாசிகளுக்கு.

நவம்பர் கடைசியின் ஒரு மதியத்தில் டெல்லியின் விமானநிலையத்தில் நானிருந்த ஸ்பைஸ் ஜெட்  தரையிறங்க முயற்சித்து, கீழே கீழே தாழ்ந்துகொண்டிருக்கையில், ‘most polluted Indian city-ஆயிற்றே என்கிற நினைவில், குழப்பத்தோடு கீழே பார்த்தேன். அவ்வாறே வேறு சிலரும். ஒரு கர்னாடகா குண்டு – அரசியல்வாதிபோல் தெரிந்தது- பதற்றத்தில், கண்ணாடியை சரிசெய்துகொண்டு, கண்ணை உருட்டி உருட்டிக் கீழே பார்த்துக்கொண்டிருந்தது. அந்தப் பட்டப்பகலிலும் இம்மாம்பெரிய நகரின் சுவடுகூடத் தெரியவில்லை. பார்க்கும் கண்கள் பிசுபிசுத்ததுபோல் தோன்றியது. ஒரே இளம்பழுப்புநிற தூசிப்படலம் விரவிப் படர்ந்திருக்க, இந்திராகாந்தி இண்டர்நேஷனல் விமானநிலையப் பகுதியைத் துருவிக்கொண்டே கீழிறங்க முயன்றது விமானம். தூசுப்படலத்தைத் தாண்டித்தான் கீழே இந்திரப்பிரஸ்தா நகரம் இருக்கவேண்டும்! இருக்கும், இருக்கும். எங்கே ஓடிவிடப் போகிறது. மிகத் தொன்மையானதும், பெரும் ஆக்கிரமிப்பு, தாக்குதல் சரித்திரங்களை அனாயாசமாகத் தூக்கிப்போட்டதுமான நகரமாயிற்றே. ஒருவழியாக விமானம் இறங்கிவிட, baggage-களை அள்ளிக்கொண்டு வெளியே வந்து பார்த்தால், மந்தமான அரைகுறை வெளிச்சத்தில் மருளவைத்தது நகரம். ’காற்றாவது, மாசாவது.. சும்மா எதுக்கெடுத்தாலும் பயந்து சாகாம, உள்ளே வாங்கப்பா..’ என விஷமச் சிரிப்புடன் வரவேற்றது டெல்லி.

அங்கு தங்கி இருந்தது ஒரு வாரம். முதல் இரண்டு நாட்களிலேயே உடம்பு முரண்டு பிடிக்கையில், change of weather between Bangalore and Delhi. அப்படித்தான் இருக்கும்; சரியாகிவிடும் என சமாதானம் சொல்லிக்கொண்டது மனது. மூன்றாவது நாளில் டெல்லியின் இரவுக் குளிரும், தீவிரக் காற்று மாசும் ஜோடிபோட்டுக்கொண்டு, விபரமாக விஜாரிக்கத் தொடங்கியிருந்தன என்பது தெரிந்தது! கண்களில் அவ்வப்போது எரிச்சல், தொண்டையில் இடையறாத கிச்..கிச்ச்.., மார்பில் இருக்கக்கூடாத சங்கதிகள் – எல்லாம் உள்ளே மண்டி, உடம்பை உண்டு, இல்லை எனச் செய்துவிட்டன சில நாட்களிலேயே. Severe air pollution, coupled with the onset of Delhi winter – ராஜதானியின் வரவேற்பு, சிறப்பு கவனிப்பு புரிந்தது.

குறிப்பாக குளிர்காலத்தில் டெல்லி வர நேர்ந்தால், அடுத்த நாளிலிருந்தே கனாட் ப்ளேஸ் என்றும், சௌத் எக்ஸ்டென்ஷனென்றும், ரெஸ்ட்டாரண்டுகள், புத்தகக் கடைகள், சாலையோரக் கடைகள், ஆர்.கே.புரம் கோவில் என, கொஞ்சம் சுற்றிவருவது உண்டு. இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போனதில்,  ஒரே இறுக்கமாக வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் கிடந்ததில்,  பெரிதும் அலுப்புத் தட்டியது. ஒரு செவ்வாய்க்கிழமை காய்கறிச் சந்தைக்கு -வீட்டின் அருகில்தான் -ஒரு இரவு நேரத்தில் போய் நோட்டம்விட்டது ஒன்றுதான் கொஞ்சம் மாறுதல். அதுவும் வழக்கம்போல் கலகலப்பான, கலர்ஃபுல்லான விண்டர்-மார்க்கெட்டாக இல்லை. வெங்காயம் இல்லாத காய்கறிச் சந்தை, ஒரு சந்தையா?  உருளைக்கிழங்கும், வெங்காயமும் இல்லாமல் சமைக்கவே தெரியாத வட இந்தியப் பெண்டுகள், இங்கு படும்பாடு இருக்கிறதே, சொல்லிமுடியாது! குளிர்காலத்தில் ரொட்டிக்கு வெங்காயமில்லாமல் ஒரு ஸப்ஜியா.. அட.. சே! குடிமக்களுக்கு அத்தியாவசியமான வெங்காயம் சப்ளை பண்ண முடியல.. ஃப்ரீ வைஃபையாம், இலவச பஸ் பயணமாம்.. என்னடா சர்க்கார் நடத்துறானுங்க இவனுங்க? சாமானிய டெல்லிவாசிகளின் தீரா முணுமுணுப்பு.

உடம்பு ஒத்துழைக்க மறுக்க, Paracetamol, cough syrup, ’அத்ரக் சாய்’ (இஞ்சி டீ) என மாற்றி மாற்றிப் பொழுதை ஓட்டி, வியாதிக்காரனுக்காகக் காத்திருக்கும்(!)  டாக்டர் கழுகிடம் சிக்கிவிடாமல் இருப்பதில் ப்ரயத்னம் எடுத்துக்கொண்டேன்.  டாக்டரிடம் போய்ப் புலம்பி, ஒரு ஏழெட்டு கம்பல்சரி டெஸ்ட்டுகள் செய்துகொண்டு, பத்துப்பனிரெண்டு கலர்க்கலர் மாத்திரைகளாக வாங்கி  விழுங்கிக்கொண்டு, அதன் பக்க அல்லது பின்-விளைவுகள் என்னவாக இருக்கும் என மண்டையைப் பிய்த்துக்கொள்வதை விட, ஒரேயடியாக அந்த ஸ்டெதஸ்கோப்-வாலாவை டபாய்த்து, ஏர்ப்போர்ட் பாய்ந்து, விஸ்தாரா பிடித்துப் பறந்துவிட்டேன், நம்ம பெங்களூருக்கு. பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரத்தின் ’காற்றுத்தர அளவீடு’ (Air Quality Index -AQI) பொதுவாக 50-லிருந்து 170 வரைதான் இருக்கிறது. அதாவது காற்றுமாசு – ’பாதுகாப்பான அளவிலிருந்து சற்றே மோசமான நிலை’ வரை! டெல்லியைப்போல் 400, 500 என கிரிக்கெட் ஸ்கோர் போல,  ‘அபாய’ நிலைக்குத் தாவிக் குதிப்பதில்லை என்பதில் ஒரு ஆசுவாசம்.

Bye, bye Delhi, for the time-being! அதற்குள் காற்று மாசு, சேற்றுமாசு என்று எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு, அப்பறமா நிதானமாக் கூப்பிடு. அவசியம் வர்றேன்..!

**

மேதமையின் பேதமை

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா? இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ராமானுஜம் அளவிற்கு ஒப்பிடமுடியாதெனினும், சுதந்திர இந்தியாவில் கணித மேதைகள் எனப் புகழ்பெற்றவர்கள் என இருவர்  குறிப்பிடப்படுவர். ஒருவர் புகழ்பெற்ற பெண் – சகுந்தலா தேவி. கணிதத்தோடு ஜோஸ்யத்திலும் கொஞ்சம் விளையாடியவர். இன்னொருவர் அவருக்கிருந்த மேதமைக்கேற்றவாறு கவனிக்கப்படாமல் குறிப்பாகக் கடைசி நாட்களில்,  குடத்திலிட்ட விளக்குபோல் கேட்பாரற்று  ஒரு மூலையில் வாழ்ந்த வசிஷ்ட நாராயண் சிங் எனும் கணித அறிஞர்.

யாரிந்த வசிஷ்ட நாராயண் சிங்? பீஹாரில் பசந்த்பூர் எனும் குக்கிராமத்தில், ஒரு ஏழைக் குடும்பத்தில் 1942-ல் பிறந்து, வறுமையின் காரணமாக இளம் பிராயத்தில் தடுமாறியவர். அவரது கணிதத்திறன் யாரும் அறியாத ஒன்றாக அவரிடமே பதுங்கிக் கிடந்தது. ஏழைக்கு என்ன சிறப்பு? சொன்னாலும் எவன் கேட்பான்? யாரும்  கேட்கமாட்டார்கள். நம்பமாட்டார்கள். அப்படிப்பட்ட அசட்டுச் சமூகத்தில் வளர்ந்துவந்தான் சிறுவன் நாராயண் சிங். எப்படியோ ஆரம்பப் பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்து, ராஞ்சியில் உள்ள அந்தக்காலத்தில் நல்லபேர் வாங்கியிருந்த ஒரு அரசுப்பள்ளியில் சேர்ந்துவிட்டான். கடுமையாகப் படித்திருக்கிறான் பையன்.  அங்கேதான் அவனுக்குள் பம்மியிருந்த சிறப்பு கணிதத்திறன் உற்சாகித்து, வெளியில் தலைகாட்டியது. மெட்ரிகுலேஷனிலும், இண்டர்மீடியட் வகுப்பிலும், முதலாவதாகத் தேறினான் நாராயண் சிங். ’கௌன் ஹை ஏ காவ்(ன்)வாலா!’ – யாரிந்த கிராமத்துப்பயல் ! – என்று உற்றுப்பார்த்தனர் மற்றவர்.  யார், யாரோ உதவிசெய்ய, பீஹார் தலைநகர் பாட்னாவில் ’பாட்னா சோஷியல் காலேஜ்’ என அழைக்கப்பட்ட, ஒரு நல்ல கலைக்கல்லூரியில் கணிதம் (ஹானர்ஸ்) பட்டவகுப்பில் சேர்ந்து படித்தான் நாராயண் சிங். அவனைப் பெற்ற,  படிப்பறிவில்லா கிராமம், பட்டணத்திலிருந்து அவனது கல்விபற்றி  வந்த செய்திகளை இப்போது கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பித்தது.

1961 -இல் பாட்னாவின் ’பீஹார் காலேஜ் ஆஃப் இஞ்ஜினீயரிங்’ (தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT, Patna)-இல் ஒரு கணித வல்லுநனர் கலந்தாய்வு, கூட்டம் நடந்தது. அதற்கு ஒரு உயர்கணிதம் பயிலும் மாணவன் என்கிற நிலையில் தன் கல்லூரியிலிருந்து ஒரு பார்வையாளராக அனுப்பப்பட்டான் மாணவன் நாராயண் சிங். பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்ட கற்றோரின் சிறப்பு அரங்கில் பிரபல அமெரிக்க கணித மேதையான பேராசிரியர் ஜான் கெல்லி-யுடன் ( Prof. John Kelly, University of California, Berkeley (UCB)), யாரோ ஒரு புண்ணியவான் நாராயண் சிங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறார். துறுதுறுவென்றிருந்த மாணவனைப் பார்த்த ஜான் கெல்லி, ஐந்து கடுமையான கணக்குகளை சிங்கிடம் கொடுத்து, ’போடு இதையெல்லாம், விடை எழுது பார்க்கலாம்’ என்றிருக்கிறார். விறுவிறுவென அந்த ஐந்து கணக்குகளையும் போட்டு விடை காண்பித்தான் நாராயண் சிங். அதோடு விட்டானா? இதை வேறு சில வழிகளில் போடலாம், இதே விடையைக் கொண்டுவரலாம் என்றிருக்கிறான். நொடிகளில் செய்தும் காட்டியிருக்கிறான். ஆ.. இப்படி ஒரு பயலா இந்த நாட்டில்..! அசந்துபோனார் அமெரிக்க ப்ரொஃபஸர்! அதோடு நிற்காமல், அமெரிக்கா திரும்பியதும், தான் பணியாற்றிய கலிஃபோர்னியா பல்கலையின் (UCB) ’Summa cum laude’ எனும் கணித PhD படிப்பில் தன் மேலான சிபாரிசுடன் நாராயண் சிங்கிற்கு இடம் வாங்கிக்கொடுத்துவிட்டார் ஜான் கெல்லி.

நாராயண் சிங்கிற்கு அவரது முழுத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதற்கான நேரம், வசதிகள். கடுமையாக உழைத்தார் சிங்.  1969-ஆம் வருடம், ‘Reproducing Kernels and Operators with a Cyclic Vector’ (Cycle Vector Space Theory) – எனும் உயர்கணிதப் பிரிவில், பி.ஹெச்.டி. பட்டத்தை வசிஷ்ட நாராயண் சிங்கிற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்தது. அதைத் தொடர்ந்து அவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார். தொடர்ச்சியாக. அமெரிக்க விண்வெளிக் கழகமான நாஸா, நாராயண் சிங்கை அழைத்து,  அவரை தன்னோடு ஒரு ஆய்வுத்திட்டத்தில் இணைத்துக்கொண்டது. சில வருடங்கள் நாஸாவில் பணிபுரிந்த நாராயண் சிங்கிற்கு, முழுநேர ஆய்வாளர் பொறுப்பை நாஸா வழங்க முயற்சித்ததாம். ஆனால் தான் இந்தியா திரும்ப விரும்புவதாக சொல்லி மறுத்த சிங், தாய்நாடு திரும்பிவிட்டார். முதலில் ஐஐடி, கான்பூர் (உ.பி)-யிலும், பின்னர் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் (Tata Institute of Fundamental Research, Bombay) மற்றும், இந்திய புள்ளியியல் கழகம், கல்கத்தா (Indian Statistical Institute, Calcutta) ஆகியவற்றிலும் சிறப்புப் பேராசிரியராக  பணியாற்றினார் வசிஷ்ட நாராயண் சிங்.

எழுபதுகளில், நாராயண் சிங்கின் அகவை முப்பதுகளில், அவரது மேதமை உச்சத்தில் இருந்தது. 1974-ல், நாராயண் சிங்கின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை ஒன்று ‘Quantum Mechanics and Optimisation Theory’-பற்றி, வெளியாகியிருந்தது. அப்போது உலகப்புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ’சார்புக்கொள்கை’ (Theory of Relativity)-யிலிருந்து வெகுவாக மாறுபட்டு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார் நாராயண் சிங். அந்தக் காலகட்டத்தில்தான் உள் மன ரீதியாக அவருள் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அவ்வப்போது சில விசித்திர உணர்வு வெளிப்பாடுகளும் அவரிடம் காணப்பட்டன; அல்லது அவ்வாறு மற்றவர்களால் பார்க்கப்பட்டன.

அவரினுள் இடையறாது பொங்கிக்கொண்டு, வெளிவரக் குறுகுறுத்துக்கொண்டிருந்த கணித மேதமை, ஒரு புறம். மனதின் வேறொரு ஆழடுக்கிலிருந்து அவ்வப்போது வெளிப்பட்ட, புரிந்துகொள்ளமுடியாத  நடத்தைகள், கோப வெளிப்பாடுகள் என எதிராக்கங்கள் தலைகாட்ட, கூட இருந்தவரையும் குழப்பின. இந்த நிலையில்  அவரது இளம் மனைவிவேறு, துக்கத்திலிருந்தார். என்ன பிரச்னை? நாராயண் சிங் அமெரிக்காவிலிருந்தபோது அவரைக் கல்யாணம் செய்துகொண்ட வசதியான வீட்டுப் பெண். கணவருக்கு அமெரிக்காவில் வேலை. அங்கேயே செட்டில் ஆகி சுகபோகமாய் வாழலாம் என வசந்தகாலக் கனவுகள். இந்த மனுஷன் என்னடா என்றால், அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டான். தாய்நாட்டில்தான் பணிசெய்வானாம். பைத்தியம்.. இவனைக் கட்டிக்கொண்டு நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு நகை, நட்டு உண்டா? சொத்து, சுகம் உண்டா? நாளெல்லாம் ஒக்காந்து கணக்குப் போட்றானாம்.. கணக்கு.. ம்ஹ்ம்… அவளது ஓயா எரிச்சல். வெறுப்பின் உச்சத்தில், அந்தப் பெண் ஒருநாள், இவரது கணித ஆய்வுக்கட்டுகளை எடுத்து வீட்டின் பின்புறம் வைத்தாள். கொளுத்தினாள். போய்விட்டாள். நாராயண் சிங்கிற்கு அடுத்த நாள் மனைவியைக் காணாத கடும் அதிர்ச்சி. அதற்குமேலும், தன் ஆய்வுக் கட்டுரைகள், கணித ஃபார்முலாக்கள். இங்கேதானே கிடந்தது..எங்கே போச்சு அந்த கட்டு ? மனம் பிறழாமல் என்ன செய்யும்  மனிதனுக்கு? சில வருடங்களில் அவரது தந்தையின் மறைவும் தொடர,  துக்கச் சுழல் அவரை அணைத்து, அணைத்து ஏதோ ஒரு ஆழத்திற்குள் உள்ளிழுத்தது. இந்தக் கட்டத்தில் சிங்கின் இயல்பு வாழ்வு பெரிதும் நிலைகுலைந்து கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக ஆகிவிட்டார்.

Schizophrenia எனச் சொன்னார்கள் மருத்துவ நிபுணர்கள். அடிக்கடி மருத்துவமனை, வீடு, மருத்துவமனை என அலைக்கழிக்கப்பட்டார் சிங். மேதை என்கிற உச்சத்திலிருந்து சீக்காளி என்கிற பரிதாபநிலை வாழ்வின் வேண்டாத எதிர் துருவமாய் அவரை மிரட்டியது. துவட்டிப்போட்டது. அவரை சார்ந்த வெகுசிலரையும் அதிரவைத்தது. தூரத்தே செல்லவைத்தது. ஒன்றும் செய்வதற்கில்லை. மனநிலை மருத்துவம் வருடக்கணக்கில் தொடர்ந்தது. சிலவருடங்களுக்குப்பின்  வீட்டுக்கு அனுப்பப்பட்டார். உடல் நலம் வெகுவாகக் குன்றிப்போய்விட்டிருந்தது. இடையிலே (1988) தன் தம்பியொடு ஒரு ரயில் பயணித்திலிருந்த நாராயண் சிங் எங்கோ இறங்கிச் சென்றவர்தான். காணாமற்போய்விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள். பின் பீஹாரின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் கிழிந்த சட்டையும், பரட்டைத் தலையுமாய் ஒரு பிரேதம்போல் அவர் உலவிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து (1992), வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். மீண்டும், மீண்டும் மனநல மருத்துவமனை. பேர்தெரியா மருந்துகள். நான்கு வருடங்கள் பெங்களூரிலுள்ள சிறப்புமிகு ஆய்வுகேந்திரமான NIMHANS-ல் அரசு உதவியுடன்

சிகிச்சையில் இருந்திருக்கிறார். குணம் தெரிந்திருக்கிறது. அவரது குடும்பத்தினால் தொடர்ந்து அவரை பெங்களூரில் வைத்துக்கொண்டிருக்கமுடியாது என, திருப்பி  அழைத்துச் சென்றுவிட்டார்களாம்.

பீஹாரில் அவரது கிராமத்தில் அம்மாவுடனும், தம்பி குடும்பத்தினருடனும் வசித்து வந்தார் சிங். சில சமயங்களில் இயல்பு நிலை. பேச்சு, தொடர்ந்த சிந்தனை, எழுத்து. வேறு சில சமயங்களில் சொல்லவொண்ணா மனத் தடுமாற்றம் என வருடங்கள் வலியோடு நகர்ந்தன. லோக்கல் அரசியல்வாதிகள் சிலர் அவ்வப்போது வந்து பார்த்து இதை, அதைச் செய்கிறேன் என்று சொல்லிச் சென்றார்கள். ஏமாற்றமே மிஞ்சியது. வாஜ்பாயி அரசின் முன்னாள்  அமைச்சர் ஷத்ருகன் சின்ஹா அந்தக் குக்கிராமத்துக்கு வந்து நாராயண் சிங்கை பார்த்ததில், நல்லது கொஞ்சம் நடந்தது. நாராயண் சிங்கின் சகோதரர் பையனுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தில் ஒரு வேலை தரப்பட்டது. அதன் காரணமாக,  குறைந்த பட்ச விலையில் நாராயண் சிங்கிற்கு மருந்துகள் வாங்க முடிந்திருக்கிறது. இருந்தும் மாதாமாதம் 1200 ரூபாய் மருந்துக்கே செலவாகிறது எனக் கஷ்டப்பட்டிருக்கிறது அந்த ஏழைக் குடும்பம். இவ்வளவு பெரிய கணித மேதைக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் என பீஹார் அரசு ஏதோ கொஞ்சம் வழங்கியிருக்கலாம். அப்படியெல்லாம் சிந்திப்போர் அரசாங்கத்தில் இல்லை. தனிப்பட்டோரிடமும் தாட்சண்யம் இல்லை.

அவருக்கும் தன் கிராமத்தில் என்னதான் இருந்ததோ, அதைவிட்டுப் பிரிய மனமில்லை. மேற்கொண்டு கவனிப்பாரின்றி மூலையில் கிடந்தார் நாராயண் சிங். வயதான மெலிந்த உடல், தலையில் குரங்குக் குல்லாய் என,  ஒரு சராசரி கிராமத்தானாக அங்குமிங்கும் உலவிக்கொண்டிருக்க, அவரது முதுமையும் அவரை ஆட்கொண்டிருந்தது. அவ்வப்போது ஏதேதோ சிந்தனையில், அவசரமாக வீடு திரும்பி காகிதத்தில் வேகவேகமாகக் கிறுக்கிவைப்பார். மூலையில் காகிதக் கட்டு.. முகவரியில்லா மேதமை.

எப்போதாவது யாராவது அவரைப்  பார்க்க வந்தால், பேச்சின் ஊடே கேட்பாராம். ’பேனா கொண்டு வந்திருக்கியா?’ (பீஹார் போன்ற ஒரு மாநிலத்தில், அதுவும் கிராமத்தில் பேனா, பேப்பர் என்பது பேரதிசயம் என அறிக). வந்தவர் தற்செயலாக பேனா வைத்திருந்து அதை அவரிடம் கொடுத்தால், வந்தவரின் உள்ளங்கையில் ஏதோ கணித ஃபார்முலா ஒன்றை எழுதிக் காட்டுவாராம் நாராயண் சிங். வந்தவருக்கு ஒன்றும் புரியாது. ஆனால் ஒரு  சந்தோஷம் – பெரிய கணித மேதை தன் கையில் ஏதோ எழுதியிருக்கிறார் என! பிறிதொரு சமயம் யாராவது வந்து பேச ஆரம்பித்தால், தன் தம்பியிடம் சொல்வாராம் நாராயண் சிங். ’போகச்சொல்லு இவனை. ஏதோ எண்டர்டெய்ன்மெண்ட்டுக்காக வந்திருக்கான்..’ அந்த அதிர்ச்சியில் சில நல்லவர்களும் படபடத்து வெளியேறியிருக்கிறார்கள். மனம் கேட்கமாட்டாமல், மீண்டும் சிலர் தயங்கியவாறு அவரது வீட்டுக்கு மரியாதை நிமித்தம் வந்தபோது, நாராயண் சிங் ஒன்றும் நடக்காததுபோல் பேசிக்கொண்டிருப்பாராம். பின்னர் வந்தவரிடம் கேட்பாராம்: ’கேமரா இருக்கா ஒங்கிட்ட! என் தம்பியோடு என்னை சேத்து ஒரு ஃபோட்டு எடுத்துக்கொடேன்..!’  தம்பியின் தோளில் கைபோட்டுக்கொண்டு போஸ் கொடுப்பாராம். அப்போது அவரைப் பார்த்தால் மனநிலை குலைந்தவர்போல் தோன்றியதில்லையாம். அவரது வயசான அம்மாவோடு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு நண்பர் நாராயண் சிங்கின் சமீபத்திய வாழ்க்கைபற்றி கேட்டபோது அவர் சொல்லியிருக்கிறார். ”அவன் இப்போ சாதாரணமாத்தான் இருக்கிறான். தினமும் காலையில் கீதை படிப்பான். மாலையில் கொஞ்சம் ராமாயணம். இடையிடையே மூலையில் உட்கார்ந்துகொண்டு,  பேப்பரில் எதைஎதையோ எழுதிக்கொண்டே இருக்கிறான். என்ன எழுத்தோ.. என்னமோ.. ஏதோ..?  யாருக்குப்  புரியுது இதெல்லாம்.” என்று அங்கலாய்த்திருக்கிறார் அந்த மூதாட்டி. இப்படி பலவேறாக மாறுபட்ட மேதமையின் மனநிலைகள். துணைக்கு என ஓயாத மருந்துகள், மாயங்கள். ஒரு சிந்தனையாளனின் கடைசிகாலம்.

சமீபத்தில் பாட்னா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில் வசிஷ்ட் நாராயண் சிங் காலமானார். அவரது குடும்பத்தினர் என்று சிலர் மருத்துவமனை வாசலில் அன்று, அவரது பூத உடலை வைத்துக்கொண்டு ஆம்புலன்சிற்காக இங்குமங்குமாக அல்லாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது திடீரென வீறிட்டது அரசு அறிவிப்பு. ‘பீஹாரின் மறைந்த கணித மேதை வசிஷ்ட் நாராயண் சிங், அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படுவார்!” இருக்கும்போது அவரைக் கொண்டாடாத, போற்றாத, உதவிகளை ஒழுங்குமுறையாகச் செய்யாத அரசாங்கம், அவருக்கான இறுதி வழியனுப்புதலை மாலை, மரியாதைகளுடன் நிறைவேற்றி தன் பாவமூட்டையிலிருந்து கொஞ்சம் குறைத்துக்கொண்டது. சமூகம் ?

**