சீறிப் பாயும் பெண்கள் கிரிக்கெட் – இந்தியாவின் WPL

முதன்முதலாக சர்வதேச அளவிலான பெண்களுக்கான முன்மாதிரி (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மார்ச் 2023-ல் ஆரம்பிக்கவிருக்கிறது.  WPL – Women’s Premier League – துவக்கப்படுவதற்கான இந்திய கிரிக்கெட் போர்டின் ஆரம்ப அறிவிப்புக்குப் பின்,  உலகெங்குமான  கிரிக்கெட் வீராங்கனைகள், அதனுள்ளே நுழைந்துவிடப் படபடக்கிறார்கள். இந்திய வீராங்கனைகளுடன், அயல்நாட்டு அதிரடி பெண் கிரிக்கெட்டர்களும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஆடப்போகும் மகளிர் கிரிக்கெட்டின் high profile T-20 போட்டிகள் இவை. மும்பையில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மொத்தம் 22 போட்டிகளின் இறுதியில், எந்த அணி தட்டிச்செல்லுமோ அலங்கார WPL கோப்பையை!

WPL-ன் அழைப்பின் பேரில் வீராங்கனைகள் ஏலத்திற்காக சுமார் 1500 பேர் பதிவு செய்திருந்தார்கள். தங்கள் நாட்டிற்காக ஆடிவருபவர்களும், U-19 வீராங்கனைகளும் கொண்ட நீண்ட பட்டியல். இந்திய வீராங்கனைகளையும் உள்ளடக்கிய இந்த பட்டியல், இந்திய கிரிக்கெட் போர்டினால் சுருக்கப்பட்டு 449 வீராங்கனைகள் மட்டும் ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த ப்ரிமியர் லீகில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் 5 பெண்கள் அணிகள் ஆடவிருக்கின்றன: குஜராத் ஜயண்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ், மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய மகளிர் கிரிக்கெட் அணிகள் நேற்று (13-2-23) மும்பையின் Jio Global Centre-ல் நடந்த கிரிக்கெட் வீராங்கனைகளின் ஏலத்தில் பங்கேற்றன. WPL ஏலத்தில், அதிகபட்ச அடிமட்ட விலை -Base Price – ஆக ஒரு முன்னணி வீராங்கனைக்கு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூ.40 லட்சம், ரூ. 30 லட்சம் என அடுத்தடுத்த பிரிவுகளும் இருந்தன. தன் நாட்டு அணிக்காக இதுவரை ஆடியிராத  வீராங்கனை ஒருவரின் அடிமட்ட விலை ரூ. 20 லட்சம், ரூ. 10 லட்சம் என்கிற பிரிவுகளில் இருந்தது. இதற்கு மேல், ஒரு வீராங்கனையின் ஆடும் திறன், சர்வதேச அனுபவம், அவர் ஒரு batter, bowler, allrounder- ஆகியவற்றைப்பொருத்து ஏலத்தில் அவர்களின் விலை ஏறியது அல்லது அடிமட்ட விலையைத் தாண்டாது, அதே விலையிலேயே சில கிரிக்கெட்டர்கள் விலைபோனார்கள்! WPL அணிகள் தங்களுக்கேற்ற வீராங்கனைகளைப்பற்றி நிபுணர் குழுவின் ஆலோசனைகளை, ஏலத் திட்டங்களை லேப்டாப்புகளில் நிரப்பி, எடுத்து வந்து அமர்ந்திருந்தன. உதாரணமாக குஜராத் ஜயண்ட்ஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் (மெண்ட்டர்), நூஷின்  அல் காதிர் (பௌலிங் கோச்), பெங்களூரு அணிக்கு டைரக்டர் மைக் ஹெஸ்ஸன், மும்பை அணிக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்/ கோச் ஜூலன் கோஸ்வாமி போன்றவர்கள் அணியின் உரிமையாளர்கள், பிரதிநிதிகளுடன் உட்கார்ந்திருந்து தங்களுக்கான வீராங்கனைகளை வாங்குவதில் முனைப்புக் காட்டினர்/ ஆலோசனை தந்தனர்.

WPL’s lady auctioneer Mallika Sagar

எல்லாம் பெண், எதிலும் பெண் என்கிற லட்சிய வேகத்தில் WPL இருக்கிறதோ ! ஐபிஎல் ஏலத்தில் வரும் உலகப்புகழ் ஆண் ஏலக்காரர் ஹக் எட்மெடீஸ் (Hugh Edmedeas), WPL ஏல நிகழ்ச்சிக்குத் தேர்வாகவில்லை. பெண் auctioneer மல்லிகா சாகர் என்பவர் வந்து, இந்திய / சர்வதேச வீராங்கனைகளை WPL-க்காக ஏலம்போட்டு கலக்கியதை உலகம் பார்த்து வியந்தது நேற்று! ஸ்போர்ட்ஸ் 18 சேனல் அழகாக எல்லாவற்றையும் லைவ் காண்பிக்க,  பார்த்து மகிழ நேர்ந்தது. தற்போது தென்ன்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை ஆடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கள் ரூமில் மெகாஸ்க்ரீன் போட்டு, தங்களில் சிலர் அதிகவிலைக்குத் தேர்வானதைப் பார்த்துக் குதித்துக்கொண்டிருந்ததையும் லைவ் ஆகக் காண்பித்தார்கள். கூடவே, தங்களின் செல்லப்பெண் உலகளாவியப் புகழ் பெற்றுவிட்டதையும், பெரும்பணத்தை அள்ளிவிட்டதையும் டிவியில், ஃபோனில் பார்த்து கைதட்டியும், கண்கசக்கியும் உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனைகள் சிலரின் பெற்றோரையும் லைவ் காட்சி க்ளிப்களில் மென்மையாகக் கொண்டு வந்திருந்தது Sports 18.

இந்திய வீராங்கனைகளில் அதிகபட்ச விலையை வென்றவர்கள்: ஸ்ம்ருதி மந்தனா ரூ 3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்). தீப்தி ஷர்மா ரூ. 2.6 கோடி (உ.பி. வாரியர்ஸ்). ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ.2.20 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). ஷெஃபாலி வர்மா ரூ. 2 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). பூஜா வஸ்த்ராகர் ரூ. 1.9 கோடி (மும்பை இண்டியன்ஸ்), ஹர்மன்ப்ரீத் கௌர் ரூ. 1.8 கோடி (மும்பை இண்டியன்ஸ்), ரிச்சா கோஷ் ரூ. 1.9 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), ரேணுகா சிங் டாக்குர் ரூ.1.5 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia)   ரூ. 1.5 கோடி (மும்பை இண்டியன்ஸ்), தேவிகா வைத்யா ரூ.1.4 கோடி (உ.பி. வாரியர்ஸ்), ஸ்னேஹ் ரானா ரூ.75 லட்சம் (குஜராத் ஜயண்ட்ஸ்).

மேலே : மும்பை இண்டியன்ஸின் நீதா அம்பானி ஏலம் எடுக்க முயற்சிக்கிறார்!

கீழே : RCB, MI ஏலத்தில் எடுத்த இந்திய முன்னணி வீராங்கனைகள் இருவர்

முதலில் ஏலத்தில் இடம்பெற்றவர் இந்திய துணைக் கேப்டனும், கிரிக்கெட் உலகில் பிரசித்திபெற்றவருமான ஸ்ம்ருதி மந்தனா. அவர்தான் WPL ஏலத்தின் டாப் வின்னர். மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எனக் கடுமையாகப் போட்டிபோட, இறுதியில் பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். அதைப்போல கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்காக டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ் போட்டிபோட்டன. இறுதியில் மும்பை வென்றது அவரை ! ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவுக்காக டெல்லி, உ.பி, மும்பை இன்டியன்ஸ் மோதிப்பார்த்தன. உ.பி. வென்று, அவரைத் தன் அணியில் சேர்த்துக்கொண்டது.

படம்: ஏலத்தைக் கூர்மையாக அவதானிக்கும் குஜராத் ஜயண்ட்ஸ் பிரதிநிதிகள். மத்தியில் மித்தாலி ராஜ்

ஐந்து அணிகளுமே முக்கிய அயல்நாட்டு வீராங்கனைகளை தங்கள் அணிக்கு வாங்கிப்போடுவதில் தீவிரம் காட்டின. எதிர்பார்த்ததைப்போலவே போட்டி பற்றிக்கொள்ள, சிலர் மிக அதிக விலைகொடுத்து ஏலமெடுக்கப்பட்டார்கள். ஆஷ்லே கார்ட்னர், ஆஸ்திரேலியா ரூ.3.2 கோடி (குஜராத் ஜயண்ட்ஸ்), நேட் ஸிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt) , இங்கிலாந்து ரூ.3.2 கோடி (மும்பை இன்டியன்ஸ்), பெத் மூனி (Beth Mooney) ஆஸ்திரேலியா ரூ.2 கோடி (குஜராத் ஜயண்ட்ஸ்), ஸோஃபீ எக்ள்ஸ்டன் (Sophie Ecclestone), இங்கிலாந்து ரூ.1.8 கோடி (உ.பி.வாரியர்ஸ்), எலிஸ் பெர்ரி (Elyse Perry), ஆஸ்திரேலியா ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), மரிஸான் கேப் (Marizanne Kapp) , தென்னாப்பிரிக்கா ரூ.1.5 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). தாஹ்லியா மெக்ரா (Tahlia McGrath) , ஆஸ்திரேலியா ரூ.1.4 கோடி (உ.பி. வாரியர்ஸ்). மெக் லானிங் (Meg Lanning), ஆஸ்திரேலியா ரூ. 1.1 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்),  ஷப்னம் இஸ்மாயில், தென்னாப்பிரிக்கா ரூ.1 கோடி (உ.பி. வாரியர்ஸ்). அமேலியா கெர் (Amelia Kerr) , நியூஸிலாந்து ரூ.1 கோடி (மும்பை இண்டியன்ஸ்). இந்த வெளிநாட்டு வீரர்களுக்கான அணிகளின் பரபரப்புக்கிடையே, ரூ.60 லட்சத்துக்கு இங்கிலாந்தின் ஸோபியா டன்க்ளியை (Sophia Dunkley) மலிவாக வாங்கிவிட்டது குஜராத் ஜயண்ட்ஸ். அதேபோல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிஸா ஹீலியை (Alyssa Healy) ரூ.70 லட்சத்துக்கு வாங்கிப்போட்டது உ.பி.வாரியர்ஸ். கிரிக்கெட் விளையாடும் ஏனைய நாடுகளிலிருந்தும் (excepting the top 10) குறைந்த பட்சம் 5 பேரையாவது ஏலத்தில் எடுக்க ஒரு திட்டமிருந்தது. தாய்லாந்து, சிங்கப்பூர், அமீரகம், நமீபியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ICC Associate Members ஆகும். இவற்றிலிருந்து ஒரே ஒரு வீராங்கனை – தாரா நாரிஸ் (Tara Norris, USA) மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டார். டெல்லி கேபிட்டல்ஸ் ரூ.10 லட்சத்திற்கு அவரை வாங்கிப்போட்டுக்கொண்டது (எதுக்கும் இருக்கட்டும்!)

தற்போது தென்னாப்பிரிக்காவில் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆடிவரும் இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகளான ஹர்லீன் தியோல் (Harleen Deol) , ராஜேஷ்வரி கயக்வாட் (Rajeshwari Gayakwad) , (பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஸ்பின் வீசிய) ராதா யாதவ் ஆகியோர் தலா ரூ. 40 லட்சத்துக்குத்தான் (Base Price) வாங்கப்பட்டார்கள்.

படம் : WPL -ல் 15 வயது சிறுமிகள் ! சோனம் யாதவ், ஷப்னம் ஷகீல்

ஜனவரியில் U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த இந்திய வீராங்கனைகளும் ஏலத்தில் ரூ.10 லட்சம் என்கிற ஏல ஆரம்பத்தொகையில் இருந்தார்கள். சிலரே வாங்கப்பட்டார்கள். அவர்கள் ஏலத்தில் இப்படி எடுக்கப்பட்டார்கள்: அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஷ்வேதா செஹ்ராவத் ரூ.40 லட்சம் (உ.பி. வாரியர்ஸ்), வேகப்பந்துவீச்சாளர் டிட்டஸ் சாது ரூ. 25 லட்சம் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), வேகப்பந்துவீச்சாளர் எஸ்.யஷஸ்ரீ, பதினாறு வயது பறவைகள் பார்ஷவி சோப்ரா(Parshawi Chopra) (ஸ்பின்னர், உ.பி. வாரியர்ஸ்) , ஹர்லி காலா (Hurley Gala) (ஆல்ரவுண்டர், குஜராத் ஜயண்ட்ஸ்), தலா ரூ.10 லட்சம். 15 வயது உ.பி. ஸ்பின்னர் சோனியா யாதவ் (மும்பை இண்டியன்ஸ்), அதே வயது ஆந்திரா மீடியம் பேசர் ஷப்னம் ஷகீல் (குஜராத் ஜயண்ட்ஸ்) ஆகியோர் WPL -ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் இளைய தலைமுறையினரிடையே எவ்வளவு ஆழமாக ஊன்றியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

மார்ச் 4-லிலிருந்து 26 வரை WPL போட்டிகள் மும்பை, நவி மும்பை மைதானங்களில் நடக்கவிருக்கின்றன. பெண்கள் கிரிக்கெட் உலகின் பெரும் நட்சத்திரங்களுடன் தோளுரசும் வாய்ப்பினைப் பெற்ற மகிழ்ச்சியில் நமது இளம் வீராங்கனைகள் சிலர் ஒவ்வொரு அணியிலும் இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள, பங்களிப்பு தர, கிரிக்கெட்டில் முன்னேற அருமையான வாய்ப்பு WPL மூலம் இவர்களுக்கெல்லாம் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பெண்களுக்கான high profile சர்வதேச டி-20 சேம்பியன்ஷிப்பை உலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்திய கிரிக்கெட் போர்டு பாராட்டுக்குரியது. Women’s Hundred (England), WBBL (Australia) என இதுவரை மகளிர்க்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும்,  இந்தியாவில் நடக்கும் WPL என்பது ஒரு game changer, டாப் க்ளாஸ் ப்ரொஃபனல் கிரிக்கெட் எனப் பெயர்பெற்றுவிடும்  என நம்பலாம்.

**

பெண்கள் T-20 கிரிக்கெட் உலகக்கோப்பை 2023: இந்தியா – பாக் மேட்ச்

தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்திருக்கும் ICC மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையில், இன்று (12-02-23) மாலை தன் முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் ஸ்ரீலங்கா தென்னாப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா நியூஸிலாந்தையும், இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸையும் தோற்கடித்துவிட்டன.

பெண்களின் கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய டாப் அணிகளாகப் பார்க்கப்படுகின்றன. அடுத்தவரிசையில் நியூஸிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகள் சவால்விடும் அணிகளாக எதிர் நிற்கின்றன.

Harmanpreet Kaur & Bismah Maroof

இதுவரை பல ஐசிசி போட்டிகளில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்திருப்பினும், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டிக்கு மீடியா ஹைப் அதிகமாகி வருகிறது! ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்தியாவில் மாலை ஆறரை மணிக்கு போட்டியை நேரலையில் தருகிறது என்பதில் ரசிகர்கள் ஒரே உற்சாகம்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், தெனாப்பிரிக்கா என 10 அணிகள் போட்டியிடும் மகளிர் டி-20 உலகக்கோப்பை இது.

India star Smriti Mandhana

இன்றைய மேட்ச்சில் இந்தியாவுக்குக் கொஞ்சம் பின்னடைவு: துவக்க ஆட்டக்காரரும் துணைக்கேப்டனுமான ஸ்ம்ருதி மந்தனா கையில் காயம் காரணமாக ஆடமாட்டார். இன்று குறிப்பான பங்களிப்பு தர வாய்ப்பிருக்கக்கூடிய வீராங்கனைகள்:

இந்தியா: கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், (U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன்) ஷெஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் (Richa Ghosh)(விக்கெட் கீப்பர்), ராஜேஷ்வரி கெய்க்வாட் (Rajeshwari Gayakwad), ரேணுகா சிங் டாக்குர் (Renuka Singh Thakur), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues), தீப்தி ஷர்மா (Deepti Sharma).

பாகிஸ்தான்: கேப்டன் பிஸ்மா மரூஃப் (Bismah Maroof), நிடா தர் (Nida Dar), நஷ்ரா சந்து, முனீபா அலி (விக்கெட்கீப்பர்), ஃபாதிமா சானா, ஆலியா ரியாஸ்

India-Pak Women’s T20 Cricket World Cup Match, Cape Town: Star Sports 1830 hrs (IST)

**

இந்தியா-ஆஸ்திரேலியா : நாக்பூர் டெஸ்ட்

இந்தியாவை இந்திய மண்ணில் கடந்த 15 வருடங்களாக வெல்லமுடியாத ஆஸ்திரேலியா, 4 மேட்ச்சுகள் கொண்ட டெஸ்ட் தொடரை (Border-Gavaskar Trophy) நாளை (9-2-2023) நாக்பூரில் துவக்குகிறது.

வலிமையாக வந்திருக்கும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி, எங்கே இந்தியாவில் நம் பருப்பு வேகாதோ, தோற்றுவிடுவோமோ என்ற பயம் கவ்வ, இந்தியாவில் பிட்ச் இப்படி..அப்படி.. என்றெல்லாம் ஏற்கனவே பிதற்ற ஆரம்பித்துவிட்டது. ’எந்த ஒரு நாடும், தன் பலத்துக்கு ஏற்றவாறுதான் பிட்ச்சைத் தரும். ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்கையில், அவர்களுக்குத் தோதான க்ரீன் பிட்ச்சுகளைத்தானே அவர்கள் நமக்குத் தருகிறார்கள்? Bouncy pitches கூடாது என்றா நாம் அங்கே சொல்கிறோம்? சர்வதேச கிரிக்கெட் என்று வந்துவிட்டால், எந்த பிட்ச்சிலும், எந்த ஒரு சூழலிலும் விளையாடத் தெரிந்திருக்கவேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர்.

நன்றாகத் திட்டமிட்டு 4 ஸ்பின்னர்களுடன் இந்திய மண்ணில் இறங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா. இத்தனை ஸ்பின்னர்களோடு இதுவரை எந்த ஒரு அயல்நாட்டு அணியாவது இந்தியா வந்திருக்கிறதா? இருந்தும் ஒரே பதற்றம்! கடந்த இங்கிலாந்து தொடரின்போது அஷ்வினும், அக்ஷரும் எதிரிகளைக் கிழி கிழியென கிழித்து எறிந்தது கெட்டகனவாய் வந்துகொண்டிருக்கிறதோ என்னவோ? அஷ்வினின் ஸ்பின்னை சமாளிப்பதுபற்றி அவர்கள் ஓவர்டைம் போட்டு யோசிப்பதாகத் தெரிகிறது! பின்னே, பரோடாவிலிருந்து அஷ்வினைப்போலவே பௌலிங் ஆக்‌ஷனுடன் ஸ்பின் போடும் ஒரு வீரரை அழைத்துவந்து நெட் ப்ராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறதே ஒரு வாரமாக! ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டூப்ளிகேட் அஷ்வின் என அழைக்கப்படும் பரோடாவின் கத்துக்குட்டி பௌலரான மகேஷ் பித்தியாவை (Mahesh Pithiya ) பந்து போடச்சொல்லி ஆடி, ஆடி பார்த்துக்கொண்டிருக்கிறாராம். மகேஷே இண்டியன் எக்ஸ்ப்ரெஸுக்கு விவரமாகச் சொல்லியிருக்கிறார். ட்விட்டர்வாசிகள் கவனிக்காமலிருப்பார்களா! கேலி, கிண்டல் என்று இறங்கிவிட்டார்கள். பொழுது போக்க விஷயம் கிடைத்துவிட்டது..

மேலே: நகலும் அசலும்

கொஞ்சம் சீரியஸாக விஷயத்துக்கு வருவோம். இந்திய பிட்ச்சுகளில் ஆடி இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன், பிரமாத ஹோம்வர்க்கோடு உழைக்கிறது ஆஸ்திரேலியா. Highly professional approach. டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் சிறப்பாக ஸ்பின்னை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக நிறைய விளாசுவார்கள் என எதிர்பார்க்கலாம். காயம் காரணமாக ஜோஷ் ஹாசல்வுட், மிட்செல் ஸ்டார்க் இருவரும் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார்கள். ஆல்ரவுண்டர் காமரூன் க்ரீன் (Cameroon Green) ஆடுவதும் சந்தேகம். இது ஒரு பின்னடைவு என்றாலும், கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins), ஸ்காட் போலண்ட் (Scott Boland) – இருவரும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள். துணையாக வருபவர்கள் ஸ்பின்னர்கள் நேத்தன் லயன், ஆஷ்டன் ஏகார் (Ashton Agar) (அல்லது டாட் மர்ஃபி (Todd Murphy). இவர்களிடம் நாக்பூரில் நமது பேட்டிங் புலிகள் ஆட்டம்காணாது இருக்கவேண்டும்.

Above: Fast bowler Scott Boland

காயத்திலிருந்து இன்னும் பூரண குணம் அடையாததால், ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) , ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியில் இல்லை. முகமது சிராஜ், முகமது ஷமி (அல்லது உமேஷ் யாதவ்) வேகப்பந்துவீச்சை இந்தியாவுக்காகக் கையாள்வார்கள். ஸ்பின் டெபார்ட்மெண்ட்டில், ரவி அஷ்வின், அக்ஷர் பட்டேல், (காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும்) ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழல் கொண்டு எதிரியைத் தாக்குவார்கள். பட்டேலுக்கு பதிலாக குல்தீப் யாதவைக் கொண்டுவரலாம் என சிலர் சொன்னாலும், பட்டேலின் பேட்டிங் திறன், ஸ்பின் பௌலிங்கையும் மிஞ்சி அணிக்குக் கைகொடுக்க வாய்ப்புண்டு.

Shubman Gill. Rohit’s opening partner?

பேட்டிங்கில் ரோஹித் ஷர்மாவுடன் ஷுப்மன் கில் (Shubman Gill) துவக்குவதே நல்லது. ஷுப்மன் அபாரமான ஃபார்மில் இருப்பதால், அணியின் நலன் கருதி ராஹுலைக் கொஞ்சம் பெஞ்சில் உட்காரவைக்கலாம். தவறில்லை. புஜாரா, கோஹ்லிக்குப் பின் சூர்யகுமார் யாதவை இறக்கினால், ஆஸ்திரேலியாவுக்கு பீதி கிளம்பும். மடமடவென விக்கெட்கள் சரிந்து நெருக்கடியான நிலை வந்தால், மிடில் ஆர்டரில் விளாசி சூர்யாவால் ஸ்கோரை சரி செய்ய முடியும். கோஹ்லிக்கு நாக்பூர் மைதானம் அதிர்ஷ்டமானதாக இதுவரை அமைந்திருக்கிறது என்கிறது புள்ளிவிபரம்.

யார் இந்தியாவுக்கு விக்கெட்கீப்பர்? ரிஷப் பந்த் இல்லாதது இடிக்கிறது இங்கே. இதுவரை அணியில் ஸ்டாண்ட்-இன் விக்கெட்கீப்பராக அமர்ந்திருந்து ஆனால் இதுவரை ஆட வாய்ப்பில்லாதிருக்கும் கே.எஸ். பரத்திற்கு இப்போது வாய்ப்பு கொடுப்பது நல்லது. நல்ல கீப்பர் என்பதோடு, திறன் வாய்ந்த பேட்ஸ்மனும்கூட. கே எல் ராஹுலே பார்த்துக்கொள்வார் என்று அசடு வழியாமலிருப்பது அணிக்கு நல்லது. டெஸ்ட் ஸ்டாண்டர்ட் விக்கெட்கீப்பர் அல்ல ராஹுல். அவரால் ஸ்பின்னர்களுக்குத் திறமையாக கீப் செய்ய முடியாது.

கேப்டன் ரோஹித்தும், கோச் திராவிடும் சில சாதுர்யமான முடிவுகளை, எதிரணியின் பலம் கருதி எடுக்கவேண்டியிருக்கும் – அவை சர்ச்சைக்குள்ளானாலும் பரவாயில்லை என்று.

Star Sports 1. 09-02-23 @ 09:30 hrs (IST) Nagpur

காந்தி talks ?

மய்யம் என்ற ஒன்றை ஆரம்பித்து ஒரு மையமில்லாது போய்விட்ட ’உலக நாயகன்’, ஒரு கலைஞனாக மட்டும் மிளிர்ந்த காலகட்டம். துல்லியமாகச் சொன்னால் 1987 – இங்கே ஃபோகஸுக்கு வருவது. தெற்கு டெல்லியின் சிரிஃபோர்ட் ஆடிட்டோரியம் என்று நினைவு. நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. ஒன்றில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. புஷ்பக் – வடநாட்டு ஆடியன்ஸுக்கு. தெற்குப்பக்கம் அதன் பெயர் பேசும்படம்,  புஷ்பக விமானம் இப்படி. குறிப்பாக கன்னடப் பிரதேசத்தில் மட்டும் 25 வாரங்களைத் தாண்டி அட்டகாசம் செய்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய கமல் ஹாசன் படம். பெங்களூரின் சில இடங்களில் அமைக்கப்பட்ட சுவாரஸ்யக் காட்சிகள். வேலைவெட்டி இல்லா கமலைவிட தன்னிடம் அதிகம் உண்டு காசு என அமர்ந்திருக்கும் சாக்கைத் தூக்கிக் காட்டி சீண்டும் அந்த விஷமப் பிச்சைக்காரன் காட்சிப்படுத்தப்பட்ட இடம் – பெங்களூரின் வின்ஸர் மேனர் ஹோட்டல் அருகில். அமலாவின் அமெரிக்கையான அழகும்,  பாலிவுட்டின் (தூர்தர்ஷனின் ‘நுக்கட்’ சீரியல் புகழ்) சமீர் கக்கர், டினூ ஆனந்த் (ஐஸ் கத்தியோடு மிரட்டும் காமிக்கல் வில்லன்!) ஆகியோரின் நடிப்பும் அதகளம் செய்த ஒரு கனாக்காலத்தின் திரைவெளி. ‘ஒரு பிரேதத்தைச் சுற்றிக் காதலை வளர்த்திருக்கிறீர்களே.. படம் பார்க்க விரும்புகிறேன்!’ – என்று சிங்கீதத்திடம் சொன்னாராம் சத்யஜித் ரே.

இந்தப் புஷ்பக்கின் நினைவு காலையில் ஏன் தீண்டியது? காரணம்.கிஷோர் பாண்டுரங் பெலேகர் (Kishor Pandurang Belekar)! மராத்தி திரைமுகமான அவர் இயக்கியிருக்கும் காந்தி டாக்ஸ் (Gandhi Talks – காந்தி பேசுகிறார்). புஷ்பக் (பேசும்படம்) போல வசனமில்லாப் படம்- வெகுநாட்களுக்குப் பிறகு இந்தியத் திரைகளில். A dark comedy. இப்போதைய தலைமுறையினரில் புஷ்பக் போன்ற வித்தியாசமான, அழுத்தமான நடிப்புப் பங்களிப்புகளைத் தந்த படங்களைத் தேடிப் பார்ப்பவர்கள் குறைவு. அப்படி ஒரு படமும் எண்பதுகளில் வந்தது என்பதே பலருக்குத் தெரியாது. இந்தக் காலத்துக்கேற்றபடி ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பின்னணிகொண்டு கொஞ்சம் ட்ரெண்டிங்காக, பலர் தன்னை சம்பந்தப்படுத்திப் பார்க்கப் பொருத்தமாக ஒரு படத்தை எடுத்து வெளியே விட்டால் என்ன என்று பெலேகர் & கோ (Zee Studios /  Kyoorious Digital) கொஞ்சம் மற்றோரிடமிருந்து வேறுபட்டு யோசித்ததின் திரைவிளைவு காந்தி டாக்ஸ். ம.செ. விஜய் சேதுபதி, அதித்தி ராவ், அரவிந்த் சாமி, சித்தார்த் ஜாதவ் போன்றோர் வார்த்தையின்றி, உடல்மொழி மட்டுமே கொண்டு ஜாலம் காட்டியிருக்கிறார்களா? எப்படி! பார்த்தால்தான் தெரியும் படமும், அது செல்லும் தடமும். இந்த வருடம் திரையில் ஒளிரும்..

**

ஓடு.. விட்டுட்டு..

எல்லாத்துக்கும் பழகிப்போன, அல்லது கிட்டத்தட்ட மரத்துப்போய்விட்ட மனசு. இதை துணைவைத்துக்கொண்டுதான் அலையவேண்டியிருக்கிறது அங்குமிங்குமாக இந்த வாழ்வில். அவ்வப்போது, ‘அறிய”வும் வேண்டியிருக்கிறது, நேரிடுகிறது பலவற்றை. இந்த அறிதலில் அக்கம்பக்கம் பார்ப்பது, கேட்பது, பத்திரிக்கைகளைப் புரட்டுவது, மீடியாவைப் பார்ப்பது.. இப்படி வகை வகையாய். அறிதல் சரி. தெளிதல் உண்டா என்று அசட்டுத்தனமாகக் கேட்கமுயற்சிக்காதீர்கள்..

காலைக் காப்பி தீர்ந்துவிடும் முன்னால் செய்திகளைக் கொஞ்சம் பார்ப்போம் என லேப்டாப் ஸ்க்ரீனில் கண்ணை உருட்டினால்.. இது திடீரெனப் பட்டது. அதிர்ச்சி. அப்போ.. இன்னும் மரக்கவில்லையா மனம்? என்ன அப்படி ஒரு நியூஸ்? நம் நாட்டுக் குப்பையா? அயல்நாட்டு அதிர்வா?

இஸ்ரேலில் பென் குரியன் (Ben Gurion) ஏர்ப்போர்ட். ஃப்ளைட் பிடிக்க நேரமானதால் அவசர அவசரமாக ஓடிவந்தார்கள் ஒரு தம்பதி. கையில் சின்ன கேரியரில் குழந்தை. செக்-இன் கவுண்ட்டர் மூடப்படும் பரபரப்பு. பதட்டம். வேகமாக போர்டிங் லவுஞ்சுக்கு ஓடவேண்டுமே.. குழந்தையை கேரியருடன் செக்-இன் கவுண்ட்டர் வாசலிலேயே போட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள் உள்ளே. குழந்தையுடன் ஓடுவது எவ்வளவு கஷ்டம்.. பாவம்! மேலும் குழந்தைக்கு டிக்கெட்வேறு வாங்கவில்லையாம்.  செக்-இன் கவுண்ட்டர் அலர்ட் ஆனது. ஏர்ப்போர்ட் செக்யூரிட்டியிடம் தகவல் போனது. அவர்கள் உடனே போர்டிங்கை நிறுத்தி, உள்ளே போய் அந்த மகத்தான பெற்றோர்களை வெளியே இழுத்துவந்துவிட்டார்கள். குழந்தையை எடுத்துக்கொள்ளவைத்தார்கள். டெல் அவீவிலிருந்து (Tel Aviv) பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸுக்குப் (Brussels) போகும் ரியான்ஏர் (Ryanair) ஃப்ளைட் அது. பெல்ஜியக்காரர்கள்தான் இந்த தம்பதி.. ஜெகதாம்பதி. இஸ்ரேலியப் போலீஸ் மேலும் விசாரணையில் இருக்கிறதாம். ரியான்ஏரில் பெற்றோர் தங்கள் கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பயணிக்கலாம். ஆனால் அதற்கு அவர்களின் டிக்கட் கட்டணத்தோடு, 27 டாலர் எக்ஸ்ட்ரா கொடுக்கவேண்டும் . அல்லது குழந்தைக்கு, தனி சீட்டுக்கான டிக்கெட் வாங்கிவிடவேண்டும். பெற்றோர் இதில் எதையும் செய்யவில்லை. குழந்தைக்கு டிக்கெட்? – என்று கேட்கப்பட்டவுடன், விட்டுட்டு.. ஓடியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு நிகழ்வை நாங்கள் சந்தித்ததே இல்லை என்கிறார்கள் பென் குரியன் ஏர்ப்போர்ட் ஸ்டாஃப். ’டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ நாளிதழில் வெளியாகியிருந்த செய்திக்குக் கீழே ஒரு வாசகரின் கமெண்ட்: அந்தப் பெற்றோர்களைப் போகவிட்டிருக்கலாம். இந்தக் குழந்தை அவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்திருக்குமே!

என்னமாதிரி உலகம் இது. இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறது?

**