சொல்வனத்தில் டாம் ஆல்ட்டர்


(படம்: இணையம். நன்றி)

டாம் ஆல்ட்டர் (Tom Alter) : பிரபல பாலிவுட் நடிகர், ஹிந்தி தியேட்டர் பர்சனாலிட்டி, கிரிக்கெட் பத்தி எழுத்தாளர் என விதவிதமான முகங்கள்.. அவரைப்பற்றிய என் கட்டுரை ஒன்று (டாம் ஆல்ட்டர் என்றொரு கலைஞர்) நடப்பு ‘சொல்வனம்’ இணைய இதழில் வெளியாகியுள்ளது. வாசிக்க அன்பர்களை அழைக்கிறேன்.

லிங்க்: http://solvanam.com/?p=50753

நன்றி : சொல்வனம் இணைய இதழ்

கிருஷ்ணன் நம்பியின் சிறுகதை ’மருமகள் வாக்கு’



கிருஷ்ணன் நம்பி:
1932-ல் அழகியபாண்டிபுரத்தில் (குமரிமாவட்டம்) பிறந்தவர். தனது 18 –ஆவது வயதில் இவரது இலக்கியப் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன எனலாம். முதலில் ஒரு கட்டுரை. பிறகு குழந்தைகளுக்கான கவிதைகள் ‘கண்ணன்’ என்கிற பத்திரிக்கையில் வெளிவரலாயின. ஆரம்பத்தில் சசிதேவன் என்கிற புனைபெயரில் எழுதி, பிறகு ‘கிருஷ்ணன் நம்பி’ ஆக எழுத ஆரம்பித்தார். மிகக் குறைவான சிறுகதைகளே எனினும் சில இலக்கியத்தரம் வாய்ந்தவை எனப் பின்னர் விமரிசகர்களால் கருதப்பட்டன. புற்றுநோயினால் அவதிப்பட்ட நம்பி, தனது 44-ஆவது வயதில் 1976-ல் காலமானார். சுஜாதா, சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆளுமைகளால் நல்ல எழுத்தாளர் எனக் கருதப்பட்டவர். சிறந்த குழந்தைப்பாடல்களை எழுதியவர் என சு.ரா.வினால் பாராட்டப்பட்டவர். ஆயினும், நம்பியின் சில படைப்புகளே புத்தக வடிவம் பெற்றன. அவற்றில் சில :

யானை என்ன யானை– குழந்தைப் பாடல்கள் தொகுப்பு
காலை முதல் மற்றும் நீலக்கடல் – சிறுகதைத் தொகுப்புகள்

சிறுகதை ‘மருமகள் வாக்கு’ : எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சமீபத்தில் தொகுத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இடம்பெற்ற ‘மருமகள் வாக்கு’ சிறுகதையின் மூலம் தமிழ் இலக்கிய வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் வருகிறார் கிருஷ்ணன் நம்பி. கதை எப்படி?

கதையின் காலம் இங்கே முக்கியம். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான காலம். புதிய சுதந்திர நாட்டில், ஜனநாயகத்தில், உள்ளாட்சித் தேர்தல்கள் பரபரப்பாக, உத்வேகத்துடன் நடக்க ஆரம்பித்துள்ளன என்று தெரிகிறது. அதன் பின்னணியில், நம்மை ஒரு மத்தியதரக் குடும்பத்திற்கு அழைத்துச்சென்று கதையை ஆரம்பிக்கிறார் நம்பி. மீனாட்சி அம்மாளுக்குக் கொஞ்சம் நிலம், சொந்த வீடு உண்டு. சொந்தமாய்ப் பசு ஒன்றும் உண்டு என்பதனால் அவளுடைய அந்தஸ்தைப்பற்றி நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். பால் வியாபாரத்தில் கில்லாடி. அரசாங்கத்தில் பியூனாக வேலைசெய்த தன் கணவன் போனபின், தன் ஒரே மகனுக்கு அந்த வேலையை அரசாங்கம் கருணையோடு போட்டுக்கொடுத்துவிட்டதில் அவளது தலை மேலும் நிமிர்ந்துள்ளது. ஒரு கட்டுப்பெட்டியான, ஒல்லியான, ஏழைப் பெண் ருக்மிணியை மருமகளாக வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டாள். மருமகளுக்கு நாளெல்லாம் சமையல்கட்டு, மாட்டுத்தொழுவம் என்று மாயாத வேலை. அவளும் இதுதான் தன் வாழ்வு எனப் புரிந்துகொண்டு சளைக்காமல், நொடிக்காமல் செய்கிறாள். மாமியாரின் நேரடி கண்ட்ரோலில் மருமகள். சமையற்கட்டு, மாட்டுத்தொழுவம் தவிர வெளிஉலகம் பார்த்திராத அப்பாவி ருக்மிணி. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் மீனாட்சி அம்மாளின் ஆர்ப்பாட்டந்தான், கோலோச்சுதல்தான்.

ருக்மிணிக்கு சமையலில் நல்ல கைமணம். பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் மார் வலிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது; ஏன், எதற்கும் பதிலே சொல்லாதிருப்பதுதான் உத்தமம் என்று மாமியார்க்காரி ஆரம்பத்திலிருந்தே மருமகளுக்குக் போதனைசெய்திருந்தாள். வீட்டில் எல்லா வேலைகளும் ருக்மிணிதானா? மாமியார் என்னதான் செய்கிறாள்? நம்பியின் வார்த்தைகளில்:

மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா? ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.

ருக்மிணியை வெளியே பார்ப்பதே அபூர்வம். எப்போதாவது கோயிலுக்கோ குளத்திற்கோ மாமியார் அனுப்பிவைத்தால், அக்கம்பக்கத்துப் பெண்கள் அவள் பின்னேயே ஓடி, அவளது வாயைக் கிளறப் பார்ப்பார்கள். ஆனால் ருக்மிணி வாயே திறக்கமாட்டாள். இவளை முயற்சிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிந்துகொண்டுவிட்ட அக்கம்பக்கம், மாமியாரையாவது சீண்டுவோம் என நினைத்தது. மருமகள் எப்படி இருக்கா என்று அவ்வப்போது கேட்டுப் பார்த்தது. மீனாட்சி அம்மாளா? அவளுக்கென்ன, நன்னா இருக்கா என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்லிவிட்டு பேச்சை உடனே மாற்றிவிடுவாள்.

அடுத்த நாள் அதிரடித் தேர்தல். பூனை அபேட்சகருக்கும் கிளி அபேட்சகருக்கும் கடும் போட்டி. எங்கும் தேர்தல் பற்றியே பேச்சு. யாருக்கு வாக்களிப்பார்கள் மாமியாரும் மருமகளும் என்று பெண்டுகள் கிண்டிப் பார்த்தன:

மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், “ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. “ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?’’ என்றாள் மீனாட்சி அம்மாள். “ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. “பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

தேர்தல் அன்று காலையிலேயே போய் ஓட்டுப் போட்டுவிட்டாள் மீனாட்சி அம்மாள். ஆற்றங்கரைக்குப் பக்கத்தில்தான் ஓட்டுச்சாவடி. ராமலிங்கம் (ருக்மிணியின் கணவன்) குளித்துவிட்டு வரும்போதே அவனை இழுத்துப்போய்விட்டார்கள் ஓட்டுச்சாவடிக்கு. ஈரத்துண்டுடனேயே அவன் ஓட்டுப் போடும்படி ஆனது.

ருக்மிணி? அவள் மாட்டுத் தொழுவத்தில் பசுவுக்குத் தீனி போடுகிறாள். அது சாப்பிடுவதை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மாட்டைத் தடவிவிட்டுக்கொண்டே, அதோடு மனம்விட்டுப் பேசுவதில் அவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி. இதற்கு மீனாட்சி அம்மாளின் அனுமதி தேவையில்லை :

“நான் இன்னிக்கு ஓட்டுப் போடப்போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. சொல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அது மாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’

மீனாட்சி அம்மாளின் ஏற்பாட்டின்படி பக்கத்துவீட்டுப் பெண்கள் மதியம் வந்திருந்தார்கள், ருக்மிணியை வாக்குச்சாவடிக்குக் கூட்டிக்கொண்டுபோக. ருக்மிணி இருக்கிறதிலேயே சுமாராக உடுத்திக்கொண்டு, தலையை வாரிக்கொள்ள சீப்புக் கிடைக்காமல் அவசர அவசரமாக கையினால் தலைய ஒதுக்கிக்கொண்டுப் படியிறங்குகிறாள். மாமியார் கூப்பிடுகிறாள் :

’’இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, “ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப் படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத.. போ! ’’ என்றாள்.

வாக்குச்சாவடிக்கு வந்த ருக்மிணிக்கு எல்லாமே விசித்திரமாக, வேடிக்கையாகத் தெரிந்தன. தூரத்து அனிச்ச மரமொன்று அவளது பால்யகால நினைவை மீட்டது. சின்ன வயதில் வேம்பனூரில், அவள் படித்த பள்ளிக்கூடத்தில் இருந்த அந்த மரத்தில் ஏறி எத்தனைப் பழம் பறித்துத் தின்றிருக்கிறாள். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. சாவடியிலிருந்து ஓட்டுப் போட்டவர்கள் விதவிதமான முகபாவத்துடன் வெளியேறினர். ருக்மிணியின் கியூவும் வேகமாக நகர்ந்தது.

ருக்மிணி என்ன செய்தாள்? கிருஷ்ணன் நம்பியின் கதைக்குள் பயணியுங்கள் அன்பர்களே:

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2008/10/blog-post_3258.html

நன்றி: அழியாச்சுடர்கள் இணைய தளம். படத்திற்கு நன்றி: விகடன்.காம்/இணையம்
w

**

ஆர். சூடாமணியின் சிறுகதை ‘இணைப் பறவை’

முந்தைய பதிவில் எழுத்தாளர் ஆர்.சூடாமணிபற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தோம்.

அவருடைய எண்ணற்ற சிறுகதைகளில் ஒன்றான ‘இணைப் பறவை’ நடுத்தர வகைக் குடும்பம் ஒன்றின் உறவுநிலைகளின் ஆழமான இழைகளை கூர்ந்து பார்க்க முனைகிறது. குறிப்பாக வீட்டின் பெரியவரான தாத்தாவின் நடவடிக்கைகளை சிலநாட்களாக அவரது பேத்தி, வளர்ந்து பெண்ணாகி நிற்கும் ஸ்ரீமதி, அவதானிக்க ஆரம்பித்திருக்கிறாள். மற்றவர்களும் – அதாவது பிள்ளை, மருமகள், பேரன்கள் என வீட்டினுள் உறவாடும் உறவுகள் – அவர் அருகிருந்தும், ஒரு அந்நியரைப் பார்ப்பதைப்போல் பார்க்கின்றனர். எளிதாகப் புரிபடாத, சூட்சும ஆழங்களா மனிதரின் குணாதிசயத்தில்? ஏன் இப்படி இருக்கிறார் ? ஒருவேளை, புத்திகித்தி பிசகிவிட்டதா ?

எப்போதிலிருந்து இது? வீட்டின் பெரியமனுஷியான பாட்டி, அந்தக் குடும்பத்தின் எல்லா அம்சங்களிலும் அங்கம் வகித்தவள், தாத்தாவைக் கண் இமைக்காமல் நாளெல்லாம் கவனித்துக்கொண்ட ஜீவன், பொதுவாக குடும்பத்தில் எல்லாமுமாயிருந்த வயதான பாட்டி, காலமாகிவிட்டாள் சில நாட்கள் முன்பு. வெளியே அப்படித் தெரியாவிட்டாலும், அந்த வீடே குழப்பக் கூடாரமாகத்தான் மாறிவிட்டது. அச்சு கழண்ட வண்டியாய் நிலை தடுமாறுகிறது. பாட்டியின் மறைவு படுத்தும்பாடை அவரது பேத்தி உள்ளுக்குள் ஆழமாக வாங்கிக்கொள்கிறாள். வீட்டிற்குள் உலவிக்கொண்டே, பாட்டியில்லாத தாத்தாவை உன்னிப்பாக கவனித்துவருகிறாள். இடையில் துக்கம் கேட்டு வருகிறவர்களைவேறு சமாளிக்கவேண்டியிருக்கிறது…

ஒரு நாள் இப்படித்தான். வாசல் ஜன்னலிலிருந்து யாரோ வருவதைப் பார்த்து, உடனே வீட்டின் கொல்லைப்புறம்போய் நின்றுவிடுகிறார் தாத்தா. பேத்தி ஸ்ரீமதி தாத்தாவைத் தேடிவந்து சேதி சொல்லி முன்கூடத்திற்கு அழைக்கிறாள்:

’உங்களைப் பார்க்கத்தானே அவா..’

எனக்கு யாரையும் பார்க்க வேணாம். நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சிடு..

உங்களைப் பார்க்காம போவாளா?

ஏதானும் காரணம் சொல்லேன்.. எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லேன்.

நம்பவே மாட்டா…

அப்ப நான் செத்துப்போயிட்டேன்னு சொல்லு.. போ.

ஸ்ரீமதி மறுபேச்சில்லாமல் திரும்பினாள். நெஞ்சம் கனத்தது. இதுவரை தாத்தாவிடம் எத்தனைபேர் வந்துவிட்டார்கள், தம் சொல்லடுக்குகளுடன். பாடம் ஒப்பிக்கிற மாதிரிதான்… ஸ்ரீமதிக்கே அதெல்லாம் அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத வார்த்தைக் குப்பையாகத் தோன்றியதென்றால், தாத்தாவுக்கு எப்படி இருக்கும்?

அவள் எவ்வளவுதான் பேசித் தடுத்தாலும், துக்கம் கேட்கவந்திருந்தவர் போகாமல் தாத்தாவைத் தேடிக்கொண்டு பின்கட்டுக்கு வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் தாத்தாவிற்குள் ஒரு விறைப்பு. வந்தவர் துக்கம் கேட்க, தாத்தா அதனை அலட்சியப்படுத்தி வானத்தைப் பார்த்தால் மழை வருவதுபோலில்லை எனப் பேச்சை மாற்றுகிறார். வந்தவர் சோகப்புலம்பலைத் தொடர, தாத்தா ’ஒங்க ரெண்டாவது பையன் போன இண்டர்வியூ என்ன ஆச்சு, பாங்க் வேலயாத்தானே அந்த இண்டர்வியூ’ என்றெல்லாம் கேட்டு வந்தவரைத் திணற அடித்து அனுப்பிவிடுகிறார். துக்கம் கேட்கவந்தவர் வாசலுக்கு வந்து வெளியேறுகையில் தன் நண்பர்களுடன் தாத்தாவைப்பற்றிச் சொல்வது ஸ்ரீமதியின் காதில் விழுகிறது: “என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !”

ஸ்ரீமதி கொல்லைப்புறம் திரும்பி அங்கு நின்றிருக்கும் தாத்தாவைப் பார்க்கிறாள். தாத்தா எச்சரிக்கிறார்:

“இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ. ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன். ஜாக்கிரதை” என்றார் தாத்தா.

“சரி தாத்தா. யாரும் வராம பாத்துக்கறேன்”

ஒரு ராத்திரி வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகும் தாத்தா வரவில்லை. கொல்லைக்கட்டிலேயே உட்கார்ந்திருக்கிறார். தாத்தாவின் பிள்ளை ரங்கனும் மாட்டுப்பெண் கனகமும் பேசிக்கொள்கிறார்கள்:

“இன்னுமா அங்கேயே இருட்டிலே வெறிச்சுண்டு உக்காண்டிருக்கார்” என்றார் ஸ்ரீமதியின் தந்தை.

“சாப்பிட வரணும்னெ மறந்துட்டாப் போல் இருக்கு” என்றான் ஸ்ரீமதியின் தம்பி.
“பாட்டி இருந்தால் அவருக்கு இப்போ ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா”
……

“இது தினம் தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து” என்றாள் ஸ்ரீமதியின் தாய்.

“பாவம் அப்பா ! அவர் வாய்விட்டுக் கதறி அழுதுட்டார்னா தேவலைன்னு எனக்கு தோன்றது. துக்கத்தை எல்லாம் இப்படி உள்ளேயே வெச்சுண்டு மறுகக்கூடாது” என்றார் ஸ்ரீமதியின் தந்தை தம் மனைவியைப் பார்த்து.

“அது என்ன துக்கமோ ! என்னதான் மனசை அடக்கிண்டாலும் , நிஜமாய்த் துக்கம் இருந்துதானால் கட்டின பொண்டாட்டி செத்து கிடக்கிற போதுகூடவா கண்ணில ஜலமே வராமல் இருக்கும்?”

“நீ என்ன, அப்பாவுக்கு அம்மாமேல பிரியமே இல்லேன்னு சொல்றியா”

“நான் என்னத்தைக் கண்டேன். ஆனா இந்த ஆண்பிள்ளைகளை மட்டும் நம்பவே முடியாது” என்கிறாள் கனகம், ஸ்ரீமதியின் அம்மா.

இன்னொரு நாளில் தாத்தாவின் பேரக்குழந்தைகள் ஸ்ரீமதியும் வாசுவும் அவர்கள்மாட்டுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்:

ஸ்ரீமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். “எனக்கே தெரியலேடா ?” என்றாள்.

“பாட்டியை நெனச்சுண்டியா? எனக்குக் கூட மனசு தாங்கலே ஸ்ரீமதி, பாட்டி இல்லாமே வீடே நன்னாயில்லே.”

“ஆமா, ஆனா நான் இப்போ பாட்டிக்காக அழலேடா வாசு. என்ன வேடிக்கை பாரேன் ! எனக்கு தாத்தாவை நெனச்சாதான் அழுகை வரது”

“அவருக்கென்ன கேடு ! அவர் துளிக்கூட அழல்லே. அவருக்காக இவள் அழறாளாம். போடி நீ ஒரு பைத்தியம். அது கிடக்கிறது …” என்கிறான் ஸ்ரீமதியின் தம்பி.

இப்படி ஒவ்வொருவர் வாயிலும் தினம் விழுந்தெழுகின்ற தாத்தா. கவலைப்பட்டு நோகும் ஸ்ரீமதி.. ஏதேனும் புரிந்துகொள்ளமுடிந்ததா அவளால் தன் தாத்தாவைப்பற்றி ? தொடர்ந்து படியுங்கள் ..ஆர்.சூடாமணியின் ‘இணைப் பறவை’

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2010/07/blog-post.html

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்.

**

ஆர். சூடாமணி – அகவய எழுத்து

 

ஆர். சூடாமணி,
எழுத்தாளர்

தமிழ் மொழியின் சமகால இலக்கியவரலாற்றில் பெண்ணெழுத்தின் பங்களிப்புபற்றி தனியாக எழுதப்பட்டால், ஆர்.சூடாமணியின் பெயர் அங்கு பிரதானமாகப் பேசப்படும். சூடாமணியைத் தவிர்த்து, பெண்ணெழுத்துபற்றி யாரும் சிறப்பாக எழுதிவிடமுடியாது. அவருடைய கதாபாத்திரங்கள் மனிதரின் அகஉலகை, குறிப்பாகப் பெண்களின் அகவெளியின் உணர்வுநுட்பங்களைப் பேசுகின்றன. குண மாறுதல்களைக் காண்பிக்கின்றன.

குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு எனக் கவலைப்படும் பெற்றோர் குழந்தைகளின் உலகத்தைப் பார்த்ததே இல்லையே எனக் கவலைப்படுகிறார் சூடாமணி. இவரது சிறுகதைகளில் சில, குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகிற்குள் தலைநீட்டிப் பார்க்கின்றன. சூடாமணியின் ஒரு கதைப் பாத்திரமான யமுனா என்கிற சிறுமி நோய்வாய்ப்பட்டிருந்த தன் சினேகிதனைக் காப்பாற்றிய கடவுளின்மேல் நன்றியும், பிரியமும் கொள்கிறாள். பெருமாளை அன்போடு கேட்கிறாள்: ’உனக்குப் பாண்டி ஆடத் தெரியுமா? தெரிந்தால் வாயேன்.. உன்னை முதலில் ஆட விடுகிறேன் !’

பிரிட்டிஷ் காலத்து ஐ.சி.எஸ். அதிகாரியான டி.என்.எஸ்.ராகவனின் மகள் சூடாமணி. அவருடைய தாய்வழிப்பாட்டி ரெங்கநாயகி ஒரு எழுத்தாளர். ஆனால் அவரின் காலத்தில் அவருடைய கதை ஏதும் அச்சேறவில்லை. பாட்டியின் வேண்டுகோளுக்கிணங்க அவரது ‘சந்தியா’ என்கிற நாவலை பிரசுரம் செய்தார் சூடாமணி. எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி சூடாமணியின் சகோதரி. இவரது இன்னொரு சகோதரியான பத்மாஸனி ஒரு மொழிபெயர்ப்பாளர். சிறுவயதில் பெரியஅம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்ததே அதிசயம் என்கிற நிலையில் இருந்தார் சூடாமணி. பள்ளிக்கல்வியோடு படிப்பு நின்றது. தனக்கு அமைந்த வாழ்க்கையின் போதாமையை, குறைபாடுகளை இயல்பாக மனதில் வாங்கிக்கொள்ள சிறுவயதிலேயே கற்றார். தனியாக நிறையப் படித்தார். மகரம் என்கிற பெண் எழுத்தாளர்தான் சூடாமணிக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தது. ஆங்கிலத்தையும் ஆசையோடு கற்றார். அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கார்ல் மார்க்ஸிலிருந்து கலைஉலகம்பற்றிய புத்தகங்கள் வரை அவர் நிறையப்படித்திருந்தார். வாசித்த புத்தகங்கள்பற்றி, தன் கருத்தைப் பென்சில் குறிப்புகளாக தனி குறிப்பேடுகளில் பதிதல் இவரது பழக்கம். சூடாமணியின் தன்னம்பிக்கை மற்றும் எழுத்து வளர்ச்சியில் அவரது தாயார் கனகவல்லிக்குப் பெரும்பங்கு உண்டு.

மென்மையான குணநலன்கள் உடைய மனுஷி சூடாமணி. கல்யாணம் செய்துகொள்ளவில்லை. பங்களாவில் தான் உண்டு, தனது அகமுண்டு எனத் தனியாக வாழ்ந்தார். அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நெருங்கிய சிலரைத் தவிர அவரது வீட்டிற்கு வேறு விசிட்டர்கள் பெரும்பாலும் இல்லை. சூடாமணியைப் பொறுத்தவரை ’ஆர்.சூடாமணி’ என்பது அவரது எழுத்து மட்டும்தான். சூடாமணி என்கிற பெண்ணில்லை. ஒரு முக்கிய எழுத்தாளராக அறியப்பட்ட நிலையிலும், இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது, நேர்காணல்கள் கொடுப்பது, டிவி-யில் வருவது போன்ற செயல்களை அறவே தவிர்த்தார். ஃபோட்டோக்களை அவர் அனுமதித்ததில்லை. தன் அகஉலகில் ஆழ்ந்திருந்தார். அதிலேயே அமைதியும், உன்னதமும் கண்டவர். மனித மனத்தின் பிரக்ஞைபூர்வமான எழுத்து அவருடையது.

சூடாமணியிடம் ஒரு பழக்கம். கண்தெரியாத மனிதர்களுக்கு என நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தவர். அவர்களை உட்காரவைத்துக் கனிவோடு பேசிக்கொண்டிருப்பார். அவர்களால் படிக்கமுடியாதே என விசனப்பட்டு தான் படித்த நல்ல கதைகளை அவர்களுக்குப் பொறுமையாகப் படித்துக் காட்டுவாராம்.

2010-ல் தன் 79-ஆவது வயதில் சூடாமணி, கோடிக்கணக்கான மதிப்புள்ள தனது பங்களா மற்றும் சொத்துக்களை ஏழை மருத்துவமாணவர்களின் உயர்கல்வி, நோயாளிகளின் மருத்துவ உதவி என அறச்செயல்களுக்காக வழங்கிவிட்டு மறைந்தார். இறக்கும் தருவாயில் தர்ம காரியத்துக்காக தன் சொத்து முழுவதையும், முறையாக உயிலெழுதி அளித்துவிட்டு மறைந்த ஒரே எழுத்தாளர் நாட்டில் அனேகமாக இவராகத்தான் இருக்கும்.

1957-லிருந்து அரைநூற்றாண்டு காலகட்டத்தில் சூடாமணி ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தீபம், கணையாழி, கல்கி, அமுதசுரபி, தினமணிகதிர், ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கைகளில் இவரது கதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் ‘100 சிறந்த சிறுகதைகள்’ தொகுப்பில் சூடாமணியின் ‘அந்நியர்கள்’ சிறுகதை இடம்பெற்றுள்ளது. சூடாமணி ஆங்கிலத்திலும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார் என்பது ரொம்பப்பேருக்குத் தெரியாது. முறையாக ஓவியம் பயின்ற ஓவியரும் கூட இவர். இவரது நீர்வண்ண ஓவியங்களைப்பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இவரது ஓவியங்கள் இவரது மறைவுக்குப்பின் 2011-ல் சென்னையில் காட்சிக்கு வந்தன. ஆர்.சூடாமணியின் வாழ்வியல், அவரது 50 வருடகாலமாக வாழ்ந்த பிரிட்டிஷ் காலத்து சென்னை வீடு, எழுத்து, ஓவியம், படித்த புத்தகங்கள் எனக் கோடிட்டுக்காட்டும் ‘அழகின் எளிமை’ என்கிற 27-நிமிட குறும்படம் ஒன்றை ஓவியர் மோனிக்கா என்பவர் இயக்கியிருக்கிறார். எழுத்தாளரின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட படம் இது.

இந்த வருட ஆரம்பத்தில், ஒரு இலக்கிய இதழுக்கான பேட்டியின்போது ’பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்?’ என்கிற கேள்விக்கு அசோகமித்திரன் ஆர்.சூடாமணியின் பெயரைத்தான் முதலில் குறிப்பிடுகிறார். எழுத்தாளர் பிரபஞ்சன் ’அவரைப் போன்ற சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் தனித்திருப்பது அரிது. ஆனால் சூடாமணி அன்பில் களித்தார். அறிவிலும் ஞானத்திலும் உள்ளொளிப் பெருக்கிக்கொண்டார்’ என்கிறார். தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திலீப்குமார் ’மிகுந்த உளவியல் கூறுகளுடன் தம் படைப்புகளை வெளிப்படுத்தியவர் சூடாமணி. அவருடைய கதைகளின் பிரதான அம்சம் வற்றாத ஈரமும், எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான்’ என்கிறார். எழுத்தாளர் பா.ராகவன் ’கல்கி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியபோது ஆர்.சூடாமணியின் கதைகள் பிரசுரத்திற்காக வந்திருக்கின்றன. சூடாமணியின் எழுத்தை நெருக்கமாய் அவதானித்ததால் சொல்கிறார்: ‘சிறுகதையின் ஆகப்பெரிய சவாலான வடிவக் கச்சிதம் அவரிடம் வெகு இயல்பாகக் கூடியிருந்தது. சற்றுப் பழமையான மொழிநடைதான். ஆனாலும் நாலு வரிக்குள் கதை நம்மை உள்ளே இழுத்துவிடும். செயற்கையான உச்சக்கட்டங்கள் இல்லாத, இயல்பான படைப்பாக நெஞ்சில் நிறையும், விரியும். அவரது பணிவு, அகங்காரமின்மை, எழுத்தில் அவர் கடைப்பிடித்த நம்பமுடியாத உயர் ஒழுக்கநெறிகள் ஆகியவற்றை வேறு யாரிடமும் காண முடியாது.’ சூடாமணியை ஒருமுறை சந்தித்த எழுத்தாளர் திலகவதி கூறுகிறார்: ’அவர் வெளி உலக மனிதர்களுடன் அதிகம் பழகியதில்லை. நான் கூட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிபாரிசு செய்ததால் ஒரேயொரு முறைதான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால், அவர் கதைகளைப் படித்தால் மனித உறவுகளுக்கு இடையேயான சமகால சிக்கல்களும் நெகிழ்ச்சிகளும் அவ்வளவு நுட்பமாக, அழகாக எழுதப்பட்டிருக்கும்’.

சிறுகதைகள்: ’ஆர்.சூடாமணி கதைகள்’ (கிழக்குப் பதிப்பகம்)
‘தனிமைத் தளிர்’ சிறுகதைத் தொகுப்பு (காலச்சுவடு/கிழக்கு பதிப்பகம்)

குறுநாவல்கள்: பிஞ்சுமுகம், மகளின் கைகள், இரவுச்சுடர்

நாவல்கள்: மனதுக்கினியவள், உள்ளக்கடல், புன்னகை பூங்கொத்து

நாடகம்: இருவர் கண்டனர் (பலமுறை அரங்கேற்றப்பட்ட புகழ்பெற்ற நாடகம்)

ஆங்கிலத்தில் இவரது சிறுகதைகள்: ‘Seeing in the Dark’ by R. Chudamani (Amazon, Snapdeal)

விருதுகள் : 1966-ல் தமிழக அரசின் விருது பெற்றவர். ’இலக்கிய சிந்தனை விருது’ ‘நான்காவது ஆசிரமம்’ சிறுகதைக்காக இவருக்கு வழங்கப்பட்டது. ‘மனதுக்கினியவள்’ நாவல் ’கலைமகள் விருதை’ப் பெற்றது.

இவருடைய ‘இணைப் பறவை’ சிறுகதைபற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)
**

ஆதவனின் ‘புகைச்சல்கள்’ சிறுகதை

அடுத்ததாக எழுத்தாளர் ஆதவனின் ‘புகைச்சல்கள்’ என்கிற சிறுகதைபற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.


ஆதவன்

பெயரிலேயே ஒரு கவர்ச்சி. பிறந்தது தமிழ்நாட்டின் கல்லிடைக்குறிச்சியில். டெல்லியில் ரயில்வே அமைச்சகத்திலும் பின்பு நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிலும் பணிபுரிந்தவர். மென்மையான மனிதர். (நான் பார்த்த முதல் தமிழ் எழுத்தாளர். என் அண்ணாவின் நண்பர். டெல்லியின் சரோஜினி நகரில் என் அண்ணாவின் வீட்டுக்கு ஒரு மாலையில் வந்தார். ஏதோ புத்தகம் கொடுத்தார். வாங்கிச் சென்றார். அப்போது பார்த்தது. எனக்கோ 20 வயது. இவருடைய அருமையை நான் அறிந்திருக்கவில்லை அப்போது!

தமிழ்ச்சிறுகதை உலகில் எழுபதுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். இலக்கிய விமரிசகர்களையும், வாசகர்களையும் ஒருசேர திரும்பிப் பார்க்கவைத்த படைப்பாளி. எழுபதுகளில் கணையாழி போன்ற சிறு பத்திரிக்கைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்து இலக்கிய வாசகர்களைக் கவர்ந்தன. நகர்வாழ் மத்தியதர வகுப்பினரின் வாழ்க்கைப்போக்குகளைப் படம்பிடித்தாலும், குறிப்பாக இளைஞர்களின் உளவியல் சார்ந்த போக்குகளைக் கூர்மையாக சித்தரித்த, நளினமும் நேர்த்தியும் காட்டிய எழுத்து. இயற்கையும் இவரது எழுத்தினால் ஆகர்ஷிக்கப்பட்டதோ என்னவோ, 45 வயதிலேயே ஆதவனை அள்ளிக்கொண்டு போய்விட்டது. இவரது ‘என் பெயர் ராமசேஷன்’ நாவல் ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்று தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முக்கிய சிறுகதைத் தொகுப்புகள்: கனவுக்குமிழிகள் , ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் , புதுமைப்பித்தனின் துரோகம், முதலில் இரவு வரும் போன்றவை

குறுநாவல்கள்: இரவுக்கு முன்பு வருவது மாலை, மீட்சியைத்தேடி, நதியும் மலையும், ’பெண்,தோழி,தலைவி’ – மேலும் சில.

நாவல்கள்: காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன்
’புழுதியில் வீணை’ என்கிற நாடகத்தையும் இயற்றியவர் ஆதவன்.

விருது: சாஹித்ய அகாடமி விருது (1987) ‘முதலில் இரவு வரும்’ சிறுகதைத்தொகுப்பிற்காக (ஆசிரியரின் மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது)

’புகைச்சல்கள்’ சிறுகதையில் : அவன். அவள். இளம் தம்பதி. கல்யாணமாகி ஆறு மாதங்களே ஆகிறது. மணவாழ்வில் பெரிதாகப் பிரச்சினை ஏதும் தலைகாட்டவில்லைதான்.

ஆரம்ப நாட்களின் ஆண்-பெண் இளமைக் கவர்ச்சி இருவரையும் தன்வசம் ஈர்த்துக் கட்டிப்போட்டிருக்க, சின்ன சின்ன உரசல்களைத்தாண்டி எளிதாக நடைபோட்டது தாம்பத்யம். ஒருவர்மீது ஒருவர் காட்டும் அன்பு, உரிமை என்பதெல்லாம் இருவருக்குமே சந்தோஷம் தருகின்றன. ஆனால் மனம் என்று ஒன்று இருக்கிறதே.. அதனால் வெகுநாள் சும்மா இருக்க முடியாதே! எதையாவது கிளப்பவேண்டாமா? சுமுகமாகச் செல்லும் உறவுவெளியில், தன் ஆளுமையை முதலில் நிறுவ முயற்சித்தவள் அவள்தான். அவனிடம் உள்ள தனக்கு ஒவ்வாத சிறுசிறு பழக்கங்களை, குறைகளாகப் பார்த்து அவற்றை சரிசெய்ய தனக்கு உரிமை இருக்கிறதென மனதளவில் ஆரம்பித்து, நியாயம் கற்பித்துக்கொண்டு வார்த்தைகளுக்கு நகர்த்துகிறாள். ஆதவன் எழுதுகிறார்:

’இந்த உரிமையின் போதை முதலில் பிதற்றச் செய்தது அவளைத்தான். அவனுடைய பழக்கங்களைச் சீண்டத் தொடங்கினாள். முதலில் வேடிக்கையாக, பிறகு சீரியஸாக. அவனுடைய ஊதாரித்தனத்தை, அவனுடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை.

முதலிலெல்லாம் சட்டையில் உட்காரும் பூச்சியைத் தட்டிவிடுவது போல அவன் அவளுடைய ஆட்சேபங்களை ஒரு புன்சிரிப்பால் அலட்சியமாகத் தட்டி உதறிவிட்டுத் தன்பாட்டில் இருந்தான். இது அவளுடைய அகந்தையைச் சீண்டியது. தன் அதிருப்தியை அவன் அங்கீகரிக்கும்படி செய்ய வேண்டும். அது அவனைக் காயப்படுத்தவேண்டும் என்பது அவளுக்கு ஒரு தீவிர தாகமாகவும் வெறியாகவும் ஆகி, தன் ஆட்சேபணைகளின் காரத்தை ஏற்றிக் கொண்டே போனாள்.
நிகழ்ந்து கொண்டிருப்பது வெறும் காதல் சீண்டல் அல்ல, தீவிரமான பலப்பரீட்சை; எறியப்படுபவை பூப்பந்துகள் அல்ல; பாணங்கள் – என அவன் உணரச் சிலகாலம் பிடித்தது. உணர்ந்ததும் அவன் எச்சரிக்கை அடைந்தான். .’

என வேகம்பிடிக்கிறது சிறுகதை. அவன் தன் மனைவியின்மீது அன்புடன்தான் இருக்கிறான். அவளும் அவன்மீது அப்படியே – கூடவே அவனிடமிருக்கும் குறைகள் என்னென்ன என்று பூதக்கண்ணாடிகொண்டு பார்ப்பதைப் பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்கிறாள். அவற்றை சீர்செய்து ஒழுங்குபடுத்துவதற்குத் தான் எடுக்கும் முயற்சிகளுக்கு அவன் உடன்படவேண்டும் என்கிற மனநிலையில் தினம் வளர்க்கிறாள் வார்த்தைகளை.. அவன் ஒவ்வொருமுறையும் அவளுடைய குறைகூறுதல்களுக்கு நிதானமாக பதில் சொல்ல முனைகிறான். அவளை ஆசுவாசப்படுத்த முயல்கிறான் :

‘ஹூம்!’ என்று அவன் பெருமூச்செறிந்தான். ‘இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்… வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே! உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா? நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய், பாராட்டமாட்டேன் என்கிறாய்?’

‘ஹோ!’ என்று அவள் நொடித்தாள். ‘நல்ல நேர்மை… நான் ஒன்று கேட்கட்டுமா?’

‘ஒன்றென்ன, ஒன்பது கேள்’

‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா?’

‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’

‘குடிக்க மாட்டேனென்ற தைரியம் – வேறென்ன?’

‘அதுதான் சொன்னேனே.. இது ரொம்பச் சின்ன விஷயம். நீ குடித்தாலும் சரி, குடிக்காவிட்டாலும் சரி, நம்முடைய உறவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’

‘பொய்! சுத்தமான வடிகட்டின பொய்!’ என்றாள் அவள், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவாறு.

இப்படி வாழ்க்கையில் ஒன்றுமில்லாதவற்றையெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்க முயலும் மனைவி. என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாளே.. என்ன செய்வேன் நான்.. என தினம் அவளோடு அல்லாடும் கணவன். இப்படி ஒரு தம்பதியின் மனமுடிச்சுகளைக் காட்டிச் செல்லும் கதை. தொடர்ந்து படியுங்கள்
வாசகர்களே.

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_26.html

நன்றி: ’அழியாச் சுடர்கள்’ இணையதளம். azhiyasudargal.blogspot.in
படம்: இணையம். நன்றி.

**

ஆஹா. . மெல்ல நட மெல்ல நட . .

நகரின் அழகான பூங்காவினில் காலையில் அவசர அவசரமாக நுழைபவர்கள் இயந்திரகதியில் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அடிக்கடி மணியைவேறு பார்த்துக்கொள்கிறார்கள். வேகநடை பயில்கிறார்களாம். 8 ரவுண்டு, 10 ரவுண்டு என ஓடுகிறார்களாம். உடம்பு அப்போதுதான் ஸ்லிம்மாக, தொந்தி தொப்பையைக் காட்டாமல், நீண்ட நாள் நீடித்திருக்குமாம். ஹெல்த் ஃபிட்னெஸ் நிபுணர்களின் அறிவுசார்ந்த உரை; ஆசீர்வாதம். நடக்கிறேன் என்று நல்லது நடந்தால் நல்லதே. எங்கோ ஒரு டஞ்சன் ரூமில் டிவி-க்கு முன் முடங்கிக்கிடப்பதற்கு இது எவ்வளவோ தேவலை.

சுற்றிச் சுற்றி நடப்பவர்கள், ஓடுபவர்கள், மூலையில் நின்றுகொண்டு கைகால்களை வளைப்பவர்கள், தலையை இடது வலதாகத் திருப்பிக் கழுத்தின் பலத்தை சோதித்துப் பார்ப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் இருபதுகளின் வாலிபர்கள். இளங்கன்னிகள். (காலை 8 ½ மணியளவில் நிதானமாக சுற்றிவருகிறார்களே இவர்களில் சிலர் – காலேஜ், ஆஃபீஸ் போன்ற தொல்லை தரும் விஷயங்களோடு சம்பந்தப்படாதவர்களோ?) பார்க் சுற்றிகளில் வயதானவர்களும் அதிகமாகி வருகிறார்கள் என்பது பெங்களூர் ஃபிட்னெஸ் கான்ஷியஸ்-சிட்டி ஆகியிருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. உடல்நலம் பேணுதல் சாலச்சிறந்ததே இருபாலாருக்கும்.

இவர்களில் பலர், ஓடுகையில் அல்லது நடக்கையில் சுற்றுமுற்றும் பார்ப்பதில்லை. சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கடனே என்று அழுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஒருவேளை அந்த நிபுணர் இப்படி காலைநடையின்போது, பூங்காவிலுள்ள செடிகொடிகளிலோ, மரங்களின்மீதோ உங்கள் கண் தப்பித் தவறிக்கூடப் பட்டுவிடக்கூடாதென்றாரா? கவனம் போய்விடக்கூடாதென எச்சரித்துள்ளாரா? இந்தக்கால நிபுணர்களின் மேதாவித்தனத்தை யாரே அறிவார்? கன்சல்ட் செய்யுங்கள்; காசு கொடுங்கள். ஓடுங்கள். ஓடிக்கொண்டே இருங்கள்.

வழக்கமான காலைநடையில் ஈடுபட்டிருக்கையில் போகிறவழியிலே, ஒருநாள் சாலையோரப் பச்சைப்பசேல் பார்க் ஒன்று தென்பட்டது. சிறிய பார்க்தான் எனினும் நன்றாக பராமரிக்கப்பட்டுவருவதாய்த் தோன்றியது. சம்பந்தப்பட்ட புண்ணியவான்களுக்கு நன்றி. இந்தப் பச்சைத்திட்டைக் கடந்தா தினம் நடக்கிறேன். நுழைந்தேன். செவ்வக நடைபாதைச்சுற்றில் நானும் பாதத்தைப் பதித்து நடக்க ஆரம்பித்தேன். வேகமாக நடப்பவர்கள், ஓடுபவர்கள், கைகளைப் பக்கவாட்டில் வீசிக் காற்றை அளப்பவர்கள், ஏதேதோ ஓசைகளை எழுப்பிச் செல்பவர்கள் என விதவிதமான ஜீவன்களுக்கு வழிவிட்டு ஓரமாக இயல்பிற்கேற்ப நடந்தேன்.பொதுவாகவே ஓரமாகச் செல்வது உடம்புக்கு நல்லது என நுண்ணறிவு கூறும்.

நடந்து தொடர்கையில் ஒரு முதியவரைக் கவனிக்கிறேன்; கொஞ்சம் ஓடிவிட்டு பார்க்-பெஞ்சில் சம்மணமிட்டு உட்கார்ந்து தியானிக்கிறார். பூங்காவின் திறந்தவெளிமூலையில் ஒரு பெரியவர் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு தன் உடலுக்கு வேறுவிதமான பயிற்சிதர முயல்கிறார். மெல்லச்சுற்றி வந்துகொண்டிருந்தபோது எங்கிருந்தோ தெளிவாகக் கேட்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம். இந்த மகாவிஷ்ணு நம்மை எங்கும் தனியே செல்ல விடுவதில்லை எனத் தோன்றியது. சுற்றுமுற்றும் பார்த்தேன். முன்னால், சற்றுத் தள்ளி சிவப்பு ஸ்வெட்டர், தொப்பி சகிதமாக வலம்வரும் அந்தப் பெரியவரிடமிருந்தா இந்தச் சத்தம்? புரிகிறது. தன் மொபைலில் போட்டு விஷ்ணுவின் திருநாமங்களை நினைவுபடுத்திக்கொண்டு நடைபயில்கிறார். நிச்சயம் ஹெல்த் நிபுணர்களை சந்தித்துவிட்டுப் பார்க்குக்குள் நுழைந்தவரல்ல இவர். ஒரிஜினல் மனிதர். உடம்போடு மனதின் ஃபிட்னெஸ் குறித்தும் ஏதோ யோசித்து வைத்துள்ளார். இளைஞர்கள், இளைஞிகளில் சிலரும் காதுக்குள் இயர்ஃபோனை விட்டுக்கொண்டு சுற்றிவருகிறார்கள். அவர்கள் அதில் என்ன பாடல் கேட்கிறார்களோ? ஒரு நாள் யாரோ..என்ன பாடல் சொல்லித்தந்தாரோ..? ஏகாம்பரநாதா, ஏழுமலையானே உனக்கே வெளிச்சம். ஏனெனில் நீயே இங்கு ஒரே வெளிச்சம்..

பார்க்கிலே ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்ச் போட்டிருக்கிறார்களே – அவை வயதானவர்களுக்கு மட்டும் என சிலர் நினைப்பதாகத் தெரிகிறது ’பெஞ்சிலபோய் உக்காந்துட்டா நம்ப யூத்தப்பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க’ – இப்படி சிந்திக்கிறார்களோ என்னவோ. வேர்க்க விறுவிறுக்க சுற்றிச் சுற்றி..எப்போது நிறுத்துவது என்றுகூடத் தெரியாமல் சிலர்.. அடப்பாவமே! முடிஞ்சுதுல்ல ஒங்க ஃபிட்னெஸ் ரெஜிமென்? தினப்படி ரவுண்டு? வாங்கப்பா, இப்படி உட்கார்ந்து, சுத்தி வளர்ந்திருக்கிற இந்த மரம் செடி கொடிகளையும் கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்க. இதல்லாம் ஃபிட்னெஸ் ஆசாமிகள் சொல்லித் தரமாட்டானுங்க. அவன்களுக்கே ஒரு மண்ணும் தெரியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உடம்போடு சூட்சும நிலையில் சேர்ந்து மனதென்றும் ஒன்று இருக்கிறதே அதன் நலத்திற்கு, நாம் நடமாடும் இந்த பூமியோடு, மேலே நீல ஆகாயம் பார்த்தலும் முக்கியம். மரம், செடி கொடிகளில், மலர்களில், பறவைகளில் ஈடுபடுதலும் மனதிற்கு இதம் தரும். நீங்கள் இதையெல்லாம் எப்போது அறிவீர்களோ தெரியவில்லையே..

தினம் தினம் வருகிறீர்களே பூங்காவிற்கு.. குறிப்பாக மழையிரவுகளுக்குப்பின்னான இளங்காலைகளில், சூரியனின் கிரணங்கள் பூங்காவின் புத்தம்புது இலைகளில் பட்டு மின்னுவதைக் கவனித்ததுண்டா? செடிகளின் மேலே தட்டான்களின் விர்-விர்.. கண்ணில்பட்டிருக்கிறதா? காகத்தின் கரைதலும், தேன்சிட்டுக்களின் கீச்சுமூச்சுக்களும் காதில் எப்போதாவது விழுந்திருக்கிறதா? (அதற்கு முதலில் உங்கள் இயர்ஃபோன் காதிலிருந்து வெளியே வந்துவிழவேண்டும்.) பூங்காவின் நடுவிலே ஒரு அடர்ந்த இளம் மரம் செந்நிற ஆரஞ்சுப்பூக்களோடு செழித்தாடுகிறதே காலைக்காற்றில்.. அந்த ஓரத்தில் ஒரு மரம் தன் தலையெல்லாம் மஞ்சள் பூக்களைச்சூடி சிலிர்த்திருக்கிறதே..இந்தப் பக்கம், குத்துக்குத்தாக உயர்ந்த இரண்டு, மூன்று ஈச்சைவகை மரங்கள் –அகோரி சாதுக்களின் ஜடாமுடியைப்போல் அதிலிருந்து அடர்ந்து தொங்கும் ஈச்சங்காய்ச் சரங்கள்.. செவ்விலைகளாய், கிளிப்பச்சைத்தழைகளாய் எழுந்து நிற்கும் செடிகள், வேலி ஓரத்து ஜாதிமல்லிக் கொடி பரப்பும் மென்சுகந்தம் – இவையெல்லாம் உங்கள் உணர்வினிலே ஒருபோதும் தட்டியதே இல்லையா? வெறும் இயந்திரகதி ஓட்டமும், ஏனோதானோ நடையும்தானா? பிறகு ஐம்புலன்கள் எதற்கு உங்களுக்கெல்லாம்? நகரத்தில், குடியிருப்பு வளாகங்களுக்கு நடுவில் பூங்காதான் எதற்கு? ஆம்லெட்டும் மோமோஸுமாய் முழுங்கிவிட்டு ஆஃபீஸ் வளாகத்துக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கலாமே – உபரி நேரத்தில் ?

**

எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை’


எம்.வி.வெங்கட்ராம். (படம்:இணையம். நன்றி)

தமிழ் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிலவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். இங்கு வரவிருக்கும் கதைகளில் சில, கதைக்கரு, கதையாடல் அல்லது அவை வாசகனுக்குள் எழுப்பிச்செல்லும் மன உணர்வு போன்றவைகளில் வித்தியாசமாக இருக்கலாம். திறந்த மனதோடு இவற்றை அணுகினால்தான் கதைகளை ஓரளவாவது ரசிக்கமுடியும்.

எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ஒன்றிலிருந்து துவங்குவோம். முதலில் சிறுகுறிப்பு ஆசிரியர்பற்றி. பின் கதைபற்றிக் கொஞ்சம் கதைப்போம் !

எம்.வி.வெங்கட்ராம் (1920-2000) : கும்பகோணத்தில் பிறந்தவர். சுதந்திரத்துக்கு முன்னிருந்த காலத்திலேயே பி.ஏ.(பொருளாதாரம்). புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்ற மணிக்கொடி எழுத்தாளர்களோடு அடையாளம் காணப்பட்டவர். ’காதுகள்’ என்கிற தலைப்பிலான இவரது நாவல் தமிழின் முதல் ‘மாய எதார்த்தவாத’ (magical realism) நாவல் என விமர்சகர்களால் அறியப்பட்டது.

இவரது நாவல்களில் சில : நித்திய கன்னி, ஒரு பெண் போராடுகிறாள், உயிரின் யாத்திரை, இருட்டு, காதுகள், அரும்பு.

சில சிறுகதைத்தொகுப்புகள்: உறங்காத கண்கள், அகலிகை முதலிய அழகிகள், குயிலி, மாளிகை வாசம், எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்.

விருது: சாகித்ய அகாடமி விருது 1993. (‘காதுகள்’ நாவலுக்காக).

‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை’ சிறுகதைபற்றி :

கும்பகோணத்தில் ஒரு மத்தியவர்க்க குடும்பம். காலகட்டம் 1950-கள் எனலாம். குடும்பத்தில் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். அப்பாவுக்குப் பிடித்த பிள்ளை. கதையின் ஆரம்பத்திலிருந்து அப்பா தன் மூத்த மகன் சந்திரனைப்பற்றி சொல்லிச் செல்கிறார். ‘நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச்சொன்னதில்லை என்பதும்’ என்கிறார் தன் அருமைப் பிள்ளைபற்றி.

சட்டப்படிப்பு முடித்தான். ப்ராக்டீஸுக்கு செல்லவில்லை. அப்பாவின் வியாபாரத்தை கவனித்து ஒத்தாசையாக இருக்கிறான். பத்திரிக்கை நடத்த ஆசைப்பட்டான். நடத்தினான். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஆறுமாசக் கணக்கைப் பார்த்தால் நஷ்டம். சரிப்பட்டு வராது என்கிறார் அப்பா. ‘இப்போ என்ன? பத்திரிக்கையை நிறுத்திவிடு என்கிறீர்கள் அதுதானே..’ராக’த்துக்கு மங்களம் பாடிவிட்டேன், சரிதானே?’ என்கிறான் மகன்.

இப்படி, சொன்ன பேச்சைக் கேட்கும் பிள்ளைபற்றி அவருக்கு ஒரே பெருமை. என் அபிப்ராயத்தில் என் மகன் நல்லவன். கல்லூரியில் நன்னடத்தைப்பரிசும் அவனுக்குத்தான். சிகரெட், பொடி, புகையிலை வகையறா தெரியாது. பெண்களிடம் சங்கோஜம் இல்லாமல் பழகுவான். ஆனால் வேலி தாண்டியது கிடையாது. நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று அவன்மேல் எனக்குக் குறை! – பாசமாய்ப் பொங்கும் அப்பா.

இப்பேர்ப்பட்ட பிள்ளை கல்யாணவிஷயத்தில் மட்டும் தன் அப்பாவிடம் மனம்விட்டுப் பேசாமல் மர்மமாக ஏன் இருக்கிறான்? அவரோ அந்தக்காலத்துக்கேற்ப, மகாலட்சுமி என்கிற ஒரு பெண்ணை தன் மகனுக்கேற்றவள் என்று மனதில் திட்டமிட்டுவைத்திருக்கிறார்! 22 வயதான இவனோ பேசாதிருக்கிறான். ’இவன் 40 வயதில்கூட கல்யாணம் செய்யலாம். மகாலட்சுமி ஒரு பெண். அவளை ஊறுகாய் போடமுடியுமா..’ என்கிற நியாயமான சிந்தனை அப்பாவின் மனதில்.

ஒருநாள், வெளியே போயிருந்த மகன் திரும்புகையில், அவனைக் கோபித்துக்கொண்டு கேட்டுவிடுவது என்று முடிவுசெய்கிறார் அப்பா. ஆனால் அதிலும் பிரச்சினை. கோபம் என்றால் முகத்தை ’உர்’ரென்று வைத்திருக்கவேண்டுமே.. அவர் ‘உர்’என்று வைத்திருந்த நேரத்தில் அவன் வரவில்லை. அவர் தன் கடைசிப்பையனோடு (3 வயது) சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கையில் சந்திரன் வருகிறான். எப்படிக் கோபிப்பது என்று அவருக்கு கவலை. (இடையிலே அப்பா தன்னைப்பற்றி: 22-ல் ஒரு பையன், 3 வயதில் ஒரு பையனா என்று கேட்கிறீர்களா? இதற்கென்ன வெட்கம்! எனக்கும் கட்டுப்பாட்டில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தினால் அதை நானும் அவளும் மீறிவிட்டோம்!’ – அடடா அப்பா!)

திரும்பிவந்த சந்திரனை ’எங்கே சுற்றிவிட்டு வருகிறீர்கள்!’ எனக் கோபம் காண்பிக்க முயல்கிறார் அப்பா. அவன் தான் மகாலட்சுமி வீட்டுக்குப்போனதாகவும், அவளுடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம்போனது தெரியவில்லை என்றும் கூறுகிறான். அவருக்கு உள்ளூர சந்தோஷம் – பயல் சரியான ட்ராக்கில்தான் செல்கிறான்!
’அப்படி என்றால் மகாலட்சுமியை உனக்குப் பிடிக்கிறது என்று சொல்..’ என்று பையனை சீண்டுகிறார். முகூர்த்தத்துக்கு நாள் பார்க்கலாமா என்று கேட்ட அப்பாவிற்கு, அவன் ‘வேண்டாம்!’ என்கிறான். ’ஏன் நாள் பார்க்காமல்? சீர்திருத்த திருமணமா?’ என்கிறார் அப்பா.

‘அது இல்லை அப்பா. மகாலட்சுமியை வேண்டாம் என்கிறேன்’ என்று குண்டை வீசுகிறான் மகன். அப்பா அதிர்கிறார்.’ஆரம்பித்துவிட்டாயே! என்ன விளையாட்டு இது. இரண்டுபேரும் சேர்ந்து கும்மாளமடிக்கிறீர்கள்..கல்யாணப்பேச்சில் மகாலட்சுமியைப்பற்றி விளையாடாதே!’ என எச்சரிக்கிறார் அப்பா.

இருவருக்கிடையிலான உரையாடல் சுர்.. சுர்.. :

சந்திரன் தொடர்கிறான்: நிஜமாய்த்தான் சொல்கிறேன்.

ஏன் கருப்பாய் இருக்கிறாள் என்பதாலா?

அதுக்காக இல்லை..

ஒன்னரைக்கண் என்றா?

வந்து..அப்பா..

சதா நாட்டியம் ஆடுகிறாளே அதனாலா?

நான் சொல்லவந்தது…

அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்றுதானே சொல்லப்போகிறாய் !

நீங்கள் இப்படிப் பேசிக்கொண்டே போனால் நான் எப்போது பேசுவது? –கேட்கிறான் சந்திரன்.

’மனதுக்குப்பிடிக்கிறது என்று கல்யாணம் வேண்டாம் என்றால் என்னடா அர்த்தம்? போடா! போடா! கல்யாணம் என்றால் இவ்வளவு வெட்கமா! போ, போ, நாள் வைத்துவிட்டுச் சொல்லிவிடுகிறேன்’ – கதையை சுமுகமாக முடிக்கப்பார்க்கும் அப்பா.

’இரண்டுநாள் தவணை கொடுங்கள் அப்பா, முடிவாகச் சொல்லிவிடுகிறேன்..’ என்கிறான் சந்திரன்.

சந்திரன் இறுதியாக என்னதான் சொன்னான்? அப்பாவின் இஷ்டப்படி மகாலட்சுமியைக் கல்யாணம் செய்துகொண்டானா ?
மேற்கொண்டு தொடர்ந்து படிக்கவேண்டுகிறேன் வாசக அன்பர்களை.

எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை
இணைப்பு: http://www.sirukathaigal.com/tag/எம்.வி.வெங்கட்ராம்/

நன்றி: ’சிறுகதைகள்’ வலைத்தளம் http://www.sirukathaigal.com/

**

அது இல்லாத நாள்

காலைக் காப்பியே கசக்குமாறு
கதையை ஆரம்பித்துவைத்தான் பையன்
அப்பா! போயிடுத்து.. ஃபோன் பண்ணு!
ஃபோன் போட்டால்மட்டும்
புறப்பட்டு வந்துவிடுமா ?
இட்லி சட்னி மிளகாய்ப்பொடி
இதமேதும் தரவில்லை வாய்க்கு
பேப்பர்க்காரனும் இன்னும் வரவில்லை
ஞாயிறில்கூட என்னய்யா அவசரம்
பேப்பர் போடறவனுக்கும்தானே ஞாயிறு
படிக்கிறவனுக்குத்தான் எல்லா சுகமுமா
உழைப்பாளி வர்க்கத்தின் தூரத்துக் குரல்
உடம்பில் சூட்டைப் பரப்புகிறது
ஒன்றும் சொல்வதற்கில்லை
உண்பதற்குத் தவிர வேறெதற்கும்
வாய் திறவாதிருப்பது சாலச்சிறந்தது
காலையிலேயே இப்படி ஆகிப்போச்சே
கலங்கித் தவிக்கிறது போக்கற்ற மனம்
வெளியிலே ஒரு ரவுண்டு
வாக் போய்வரலாமென்றால்
வந்துபார் வெளியில் என்றே
வேஷ்டியை வரிந்துகட்டி
முஷ்டியை உயர்த்தும் வெயில்
இதுக்குல்லாம் பயந்தால் முடியுமா
எதுக்கும் துணிந்தவனைப்போல்
இறங்கிவிடலாம் என்றால் நகரின்
குண்டுகுழிச் சாலைகளோ
நண்டு புகுந்தோடத்தான் லாயக்கு
மதிய உணவு கழிந்தபின்னும் மிக
மந்தமாக நகருதே பொழுது
கிரிக்கெட் இருக்கிறது ஆனால்
இருபது ஓவர் மேட்ச் என்றால்
இரவில்தானே காட்டுவார்கள்
செய்வதறியாக் கையறுநிலையில் – மேலும்
பெய்யும் மழை சென்னையில் என்றார்
ஐராவதம்–அடுத்த ப்ளாக் அழகியின் அப்பா
பகலைக் கடக்கமுடியாப் பதற்றத்தில்
வார இதழ்களையாவது
வாசித்துவைப்போமென்றால்
வாயெல்லாம் பல்லாய்
வதைக்கும் மூஞ்சிகள்
அலுத்துப்போன அரசியல்வாதிகள்
உலுத்துப்போன சித்தாந்தங்கள்
போகமாட்டேன் என்கிறதே பொழுது
போன சனியன் எப்போதுதான் வரும்
இண்டர்நெட் இல்லாத நாளும் ஒரு நாளா

**