டி20 கிரிக்கெட்: இந்தியாவின் ஆஸ்திரேலிய சாதனைகள்

மெல்போர்ன் (Melbourne, Australia) நகரத்தில் 29-1-2016 அன்று நடைபெற்ற இரண்டாவது டி-20 ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்தியா தொடரையும் வென்றது. வெகுநாளைக்கப்புறம், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நிகழ்த்தியிருக்கும் தொடர் வெற்றி இது.

நேற்றைய ஆட்டத்திலும் முதலில் பேட் செய்ய நேர்ந்த இந்தியாவுக்கு ஷிகர் தவன் (Shikar Dhawan), ரோஹித் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தனர். 68 பந்துகளில் 100 ரன்களை எட்டிய இந்தியா, ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு தண்ணி காட்டியது. தவன் வேகமாக விளாசிய 42 ரன்களுக்குப்பின் களத்துக்கு வந்த விராட் கோஹ்லி ஆரம்பத்திலிருந்தே நல்ல மூடில் இருந்ததாகத் தோன்றியது. விறு விறு வேகம் காண்பித்த கோஹ்லி முதலில் ஷர்மாவுடனும், இறுதியில் தோனியுடனும் இணந்து சிறப்பாக ஆடினார். அருமையாக ஷாட்கள் விளையாடிய ஷர்மா 60 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். தோனி(Dhoni) கடைசி ஓவரில் வீழ்ந்தபோதும், கோஹ்லி 33 பந்துகளில் 59 ரன்களை அனாயாசமாக அள்ளினார். இந்தியா 184 என்கிற உயரத்தில் தன் ஸ்கோரைக் கொண்டுபோய் நிறுத்தியது. ஆஸ்திரேலியாவை மிரள வைத்தது.

பதிலளிக்க வந்த ஆஸ்திரேலியா, இந்த மேட்ச்சை இந்தியாவிடம் இழந்துவிடக்கூடாது என்கிற பரபரப்பில் இருந்தது. அதிரடி ஆட்டத்துடன் தன் கதையை ஆரம்பித்தது. குறிப்பாக கேப்டன் ஆரோன் ஃபின்ச் (Aaron Finch). அருமையான ஆட்டம். ஆரம்பத்தில் பந்துவீசிய ஆஷிஷ் நேஹ்ராவும், ஜஸ்ப்ரித் பும்ராவும் (Jasprit Bumrah) தாக்கப்பட்டனர். இளம் இந்திய வீரர் பும்ராவை ஆஸ்திரேலியர்கள் குறி வைத்திருந்தது தென்பட்டது. 10-ஓவருக்குள் 94 ரன்கள்! ஆனால் தோனி, ஸ்பின்னர்களை இறக்கிவிட்டதும், ஆஸ்திரேலியா தடவ ஆரம்பித்தது. அதன் ஆதிக்கம் ஆட்டம் கண்டது. பனிவிழுந்த இரவில் (பகல்-இரவு ஆட்டம் இது-இந்தியா இரவைல் பௌலிங் செய்தது ), ஈரமும், பிசுபிசுப்பும், ஸ்பின் பௌலிங்குக்கு எதிராகவே இருந்தது. ஆயினும் அஷ்வின், ஜடேஜா, யுவராஜ் சிங் ஆகியோர் மிகுந்த லாவகத்துடன் பந்து வீசினர். சாதுர்யமான சுழல்பந்துவீச்சு. எதிர்கொள்ளமுடியாத ஆஸ்திரேலிய விக்கெட்டுகள், ஆடிக் காற்றிலே வேப்பம்பூ போல் உதிர ஆரம்பித்தன.

இந்திய வீரர்கள் இடையிடையே மோசமாக ஃபீல்டிங் செய்து எரிச்சலை ஊட்டினர். அஷ்வினின் பந்துவீச்சில் ஃபின்ச் அடித்த பந்து, `பிடி` என்பதுபோல தவணின் கையில்போய் விழுந்தது. அவருக்கு அது பிடிக்கவில்லையோ ! தடுமாறி கேட்ச்சை நழுவவிட்டார். அஷ்வின் தலையைப் பிய்த்துக்கொண்டார். வேறென்ன செய்ய? ஆனால், சில அற்புதங்களும் நிகழ்ந்தன: ஜடேஜாவின் பந்துவீச்சில், பௌலரின் தலைக்குமேலாக ஆக்ரோஷமாக ஷேன் வாட்சன் தூக்கி அடித்தார். தீக்கதிராய் சீறிய பந்தை உயர்த்திய கையுடன் எம்பி மின்னலாக லாவினார் ஜடேஜா. வாட்சனுக்குத் தன் கண்களை நம்பமுடியவில்லை போலும். சில நொடிகள் பிரமை பிடித்து நின்றார். பின் நடையைக் கட்டினார். இன்னொரு சுவாரஸ்யம்: யுவராஜ் வீசிய சுழல்பந்தை சிக்ஸர் அடிப்பதற்காக கோட்டிற்கு வெளியே பாய்ந்த மேக்ஸ்வெல் அதை நழுவவிட, பந்து தோனியின் கையில் சிக்கியது. மின்னல்வேகத்தில் ஸ்டம்ப்பிங்! சில சமயங்களில் இப்படியும் செய்வாரு நம்ம கேப்டன் !

19-ஆவது ஓவரில் 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஆஸ்திரேலியாவின் கழுத்தில் கை வைத்தார் ஆஷிஷ் நேஹ்ரா. இதுவரை விக்கெட் எடுக்கமுடியாமல் தவித்திருந்த பும்ராவிடம், தோனி கடைசி ஓவரை வீசுவதற்காகப் பந்தைக் கொடுத்தார். சவாலை ஏற்ற பும்ரா, 3 கூர்மையான யார்க்கர்களை வீசி ஆஸ்திரேலியாவை மூச்சுத் திணறச்செய்தார். எதிரணி ஜெயிக்க வாய்ப்பற்றுப்போன நிலையில், 6 ரன்கள் மட்டும் கொடுத்து 2 ஆஸ்திரேலிய வீரர்களைக் கடைசி ஓவரில் காலிசெய்தார். இந்தியாவை வெற்றிப்படிகளில் ஏற்றிவைத்தார் ஜஸ்ப்ரித் பும்ரா.

58000-க்கும் மேற்பட்ட ரசிகர் கூட்டம் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் உற்சாகத்தில் பொங்கி வழிந்தது. இந்திய வம்சாவளி ரசிகர்களுக்கு அருமையான கிரிக்கெட் விருந்து. அவர்கள் இந்தியக் கொடிகளை அசைத்தாட, இந்திய வீரர்களின் உற்சாகம் கரைபுரண்டது. அதன் விளைவு அவர்களின் ஆட்டத்தில் தெரிந்தது. அடுத்த போட்டி சிட்னியில் நாளை(31-1-2016).

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் அபார சாதனை: 29-1-2016 வெள்ளிக்கிழமை மங்களகரமாக முடிந்தது இந்தியாவுக்கு. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலேயே, டி-20 பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில், மித்தாலி ராஜ் (Mithali Raj) தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவை 2-0 என்கிற கணக்கில் வென்றது. சிறப்பாக ஆடிய மித்தாலி, அவுட் ஆகாமல் 37 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி மேடையில் ஏற்றி வைத்தார். சிறப்புப் பங்களிப்பு செய்த மற்ற இந்திய வீராங்கனைகள்: மந்தனா (பேட்ஸ்வுமன்), ஜூலன் கோஸ்வாமி (Jhulan Goswami) (பௌலர்). முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில், வலிமை மிகுந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி சரித்திரம் படைத்தது இந்தியப் பெண்கள் அணி. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு சிலமணி நேரங்கள் முன்பு, அதே நகரில் நமது பெண்கள் நிகழ்த்தினார்கள் இந்த சாதனையை ! இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் பற்றி: தமிழ்நாட்டைச் சேர்ந்த, இந்திய வான்படையில் பணிபுரியும் துரை ராஜ் என்பவரின் மகள். ராஜஸ்தானில் பிறந்த மித்தாலி ராஜ், ஹைதராபாதில் வசிக்கிறார். பெண்கள் ஒரு-நாள் சர்வதேச கிரிக்கெட்டில் 5000-க்கும் மேல் ரன்கள் விளாசிய உலகின் இரண்டாவது பேட்ஸ்வுமன் மித்தாலி ராஜ். இந்தியாவின் மிகச் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரர். சர்வதேச மகளிர் கிரிக்கெட் சாதனைகளுக்காக மத்திய அரசின் அர்ஜுனா விருதும், பத்மஸ்ரீ விருதும் வென்றவர்.இவ்வளவு சாதித்தும், குடத்திலிட்ட விளக்குபோன்று ஆரவாரமின்றி வாழ்பவர் மித்தாலி ராஜ்.

இந்தியப் பத்திரிக்கைகள், நேஷனல் டிவி சேனல்கள் மித்தாலி ராஜின் சாதனைகளை இதுவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை – இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் செய்த அரும்பெரும் பாக்யம்!

**

டி—20 கிரிக்கெட்: இந்தியாவின் சூப்பர் வெற்றி !

5 போட்டிகளைக்கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இந்தியா கடைசி போட்டியை சிட்னியில் எதிர்பாராத விதமாக வென்றது. அதற்குக் காரணமானவர்களில் இருவர் முக்கியமானவர்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் மனீஷ் பாண்டே(கர்னாடகா), மற்றும் (குஜராத்-மும்பை இண்டியன்ஸ்) வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah). அதிர்ஷ்டவசமாகக் கடைசி நேரத்தில் விளையாடும் அணியில் சேர்க்கப்பட்ட பும்ரா, அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களைத் தன் வித்தியாசமான பந்துவீச்சு ஆக்‌ஷனால் திணறவைத்தார். கூடவே 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

அடிலெய்டில் (Adelaide) நேற்று(26-1-2016) நடந்த முதல் டி-20 போட்டியில், முதன் முதலாக 22-வயது பும்ரா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். விளைவு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. அதிரடி ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் புதுமுக வீரர் பும்ராவிடம் சிக்கித் திணறினர். அவருடைய குழப்பும் ஆக்‌ஷன் ஒருபுறம். சீறும் வேகம் மற்றொருபுறம். இன்னும் ஒரு முக்கிய அம்சம்-இடையிடையே அவர் வீசும் துல்லிய யார்க்கர்கள்(yorkers). வீழ்த்திய விக்கெட்டுகள் 3. பும்ரா சேர்க்கப்பட்ட கடைசி இரண்டு மேட்ச்சுகளில் (கடைசி ஒரு-நாள் போட்டி, இன்னொன்று நேற்றைய டி-20), வெற்றிமிதப்பில் கொக்கரித்த ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி எறிந்தது என்பது கவனிக்கப்படவேண்டியது.

இந்திய ஸ்பின்னர்கள் அஷ்வின், ஜடேஜா, இன்னுமொரு புதுமுக பௌலரான ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya, age:22)(பரோடா-மும்பை இண்டியன்ஸ்), மற்றும் அணிக்குத் திரும்பியுள்ள சீனியர் வீரர் ஆஷிஷ் நேஹ்ரா ஆகியோர் இந்திய பௌலிங் தாக்குதலைச் சிறப்பாகச்செய்தனர். ஆஸ்திரேலியா இந்த மேட்ச்சில் நிமிர்ந்து நிற்கவே முடியவில்லை. 189 என்கிற வெற்றி இலக்கை எளிதில் அடையலாம் என ஆரம்பித்த ஆஸ்திரேலியா, கேப்டன் ஆரோன் ஃபின்ச்(Aaron Finch)-ன் 44 ரன்கள் என்கிற அதிகபட்ச ஸ்கோரைத்தான் எட்ட முடிந்தது. மற்ற சூரப்புலிகளான ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வாட்சன் (Shane Watson), டேவிட் வார்னர் (David Warner) ஆகியோர், நின்று ஆடுவதற்கு இந்திய பௌலர்களால் அனுமதிக்கப்படவில்லை. இந்தியாவின் துல்லியப் பந்துவீச்சு அணிக்கு உற்சாகம் தந்ததோடு வெற்றியையும் எளிதாக ஈட்டித் தந்தது. இந்திய ரசிகர்களுக்குக் குடியரசு தினப் பரிசு!

இந்தியா முதலில் பேட் செய்கையில் துணைக்கேப்டன் விராட் கோஹ்லியின் அபாரமான 90 நாட்-அவுட் இன்னிங்ஸில் பெருமிதம் கொண்டது. மற்ற பங்களிப்புகள்: சுரேஷ் ரெய்னா 41, ரோஹித் ஷர்மா 31. 188 க்கு 3 விக்கெட் என்கிற இந்திய ஸ்கோர் 15-20 ரன்கள் குறைவோ என ஆரம்பத்தில் தோன்றியது. `எங்களுக்கு இதுவே போதும், பார்த்துக்கொள்கிறோம் ஆஸ்திரேலியாவை` என்ற கம்பீரத்தில் முதன்முதலாகச் செயல்பட்டனர் இந்திய பௌலர்கள். சாதித்தனர். இதுதான் இந்த வெற்றியின் சிறப்பு அம்சம்.

ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய மீடியாமுன் பேசுகையில், கேப்டன் தோனி இந்திய பௌலர்களையும், விராட் கோஹ்லியின் பேட்டிங்கையும் புகழ்ந்து தள்ளினார். குறிப்பாக புதிதாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யாவின் பங்களிப்பு அவருக்கு சந்தோஷத்தைத் தந்தது. பாண்ட்யாவின் முதல் ஓவர் படுமோசமாக இருந்தது. 6 ஒய்டுகள்(wides). ஆனால் அதற்குப்பின் வீசிய ஓவர்களின் துல்லிய யார்க்கர்கள், வேகமாக அடித்தாட முனைந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களைத் தடுமாறச்செய்தன. 2 விக்கெட்டுகளையும் எடுத்தார் பாண்ட்யா. அதனால்தான் இந்தப் புகழாரம்.

அடுத்துவரும் இரண்டு டி-20 போட்டிகளில் இந்தியாவின் புதிய பௌலர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்தீக் பாண்ட்யா கூர்மையாகக் கவனிக்கப்படுவர். அவர்களுக்கும் அணியில் நிலைபெற அவகாசம் தேவை. அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள `பெரிசு` யுவராஜ் சிங்குக்கு நேற்றைய மேட்ச்சில் வேலை ஏதும் இருக்கவில்லை. அடுத்த மேட்ச்சுகளில் ஏதாவது செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

**

டெல்லி: கடிக்கும் குளிர், சிதறும் ஏழைகள்

நவம்பரிலிருந்து மார்ச் வரை செல்லக்கூடியது டெல்லியின் குளிர்காலம். இந்த வருடம் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சற்றே மிதமான குளிர் இருந்தது எனலாம். ஜனவரி முதல் வாரத்தில் கூட பகல் பொழுது 20-22 டிகிரியில் சுகமாக இருந்தது. மாலை 4 மணிக்குப்பின் தட்ப-வெப்பநிலை திடீரெனச் சரியும். இரவில் 9-11 டிகிரி என நடுக்கி எடுக்கும்.

இந்த வருடம் அவ்வளவு குளிரில்லை என ஒரு வாரம் முன்புதான் அலட்சியமாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள் டெல்லிவாசிகள். பகலில் சிலர் ஸ்வெட்டர் அணியாமல் தங்களது வீரத்தை இயற்கையின் முன் காண்பித்துப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்த நேரம். பொங்கல் முடிந்தது. பதுங்கிக்கிடந்த குளிர் பாய்ந்தது. அதிகாலையிலேயே ஆரம்பித்தது குளிர்காற்று. பகலிலே வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தவர்களை வீட்டுக்குள் தள்ளி கதவைச் சாத்தியது. கடந்த சில நாட்களாக நிலைமை மேலும் மோசம். குளிரைப் பொறுக்கமுடியாமல், ஸ்வெட்டர், அதற்கு மேல் ஜாக்கெட், தலைக்குக் குல்லா என அலங்கரித்துக்கொண்டு வெளியே வர வேண்டிய நிலை. மோட்டார் பைக், ஸ்கூட்டர்களில் செல்பவர்களின் நிலையோ பரிதாபம். அவர்கள் கையுறை, மஃப்ளர் சகிதம் முகத்தையும் மூடிக்கொண்டு அலைவது விசித்திரமான தோற்றம். என்ன செய்வது? பிழைப்பு நடத்தியாகவேண்டுமே.

பணவசதி படைத்தவர்களுக்குக் குளிர்காலமோ, கோடைகாலமோ, ஒரு கவலையுமில்லை. அவர்கள் தங்களை , தங்கள் குடும்பத்தினரை நன்றாக வசதிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நகரின் மத்தியதர வகுப்பினரும், பொறுத்தமாக கம்பளி உடைகளை அவரவர் வசதிக்கேற்ப வாங்கிவைத்துக்கொண்டு குளிர்காலத்தை ஓட்டிவிடுவார்கள். மிஞ்சி, மிஞ்சிப்போனால், ஜலதோஷம், ஜுரம், பாராசிட்டமால், ஆண்ட்டிபையாட்டிக்ஸ் என சில நாட்கள் கடுமையாகப் போகும். அவ்வளவுதான். சமாளித்துவிடலாம்.

தலைநகரின் ஒரு பகுதி அழகு, கம்பீரம், படாடோபம், சொகுசு வாழ்க்கை. அதன் அடுத்த பக்கமோ வாழ்வின் வெளிச்சம்படாத இருள்வெளி. அங்கே நிம்மதியற்று உலவும் ஏழை மக்கள். பெரும்பாலானோர் ஒரு சீசன் முழுக்கப் போட்டுக்கொள்ள ஒன்றிரண்டு பழைய ஸ்வெட்டர்களை, பெரும்பாலும் கந்தல்கள் – வைத்துக்கொண்டிருப்பார்கள். அதையே போட்டுக்கொண்டு 3 மாதம் ஓட்டவேண்டும். வேலைக்கும் செல்லவேண்டும். சம்பாதிக்கவும் வேண்டும். அதிலும் பிஹார் , உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்துப் பிழைப்புக்காக டெல்லி வந்து அல்லல்படும் ஜனங்கள் இருக்கிறார்களே. அவர்கள் பாடு சொல்லி மாளாது. பெரும்பாலோனோருக்கு டெல்லியில் வீடில்லை. கிட்டத்தட்ட அகதிகள் போல்தான். அவர்கள் தலைநகரின் மேம்பாலங்களுக்குக் கீழே தங்கி, அடுப்பை மூட்டி, சப்பாத்தி சுட்டு, பருப்பை வேகவைத்து எப்படியோ கதை ஓட்டுகிறார்கள். கோடைகாலத்தில் அவ்வளவு பிரச்னையில்லை. ஆனால் குளிர்காலம்? போட்டுக்கொள்ள கம்பளி ஆடை, சாக்ஸ் போன்றவை இல்லை. இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கும் சிறு குழந்தைகள் ஸ்வெட்டர் இன்றி, கந்தலை உடுத்திக்கொண்டு, வெறுங்காலுடன் பாலங்களுக்கடியில் உலாத்துவதைப் பார்த்தால் யாருக்கும் மனம் உருகும். யாராவது மனமிரங்கி பழைய ஸ்வெட்டர்களைக் கொடுத்தால்தான் உண்டு. அதுவும் எத்தனை பேருக்குக் கொடுக்கமுடியும்? பாலத்துக்கடியில், சமையல் அடுப்பின் கதகதப்பிலேயே குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். அல்லது குப்பைக் காகிதங்களை, விறகுகளைச் சேர்த்து இரவெல்லாம் தீ மூட்டிக் குளிர்காய்ந்து, தூங்கமுடியாமல்..அப்பப்பா!இப்படியும் ஒரு வாழ்க்கை…

டெல்லியிலும் ஆட்சிகள் மாறுகின்றன.ஆனால் பிரயோஜனம் இல்லை. காங்கிரஸ் கடந்த 10 வருடம் ஆண்டது. புதிய மேம்பாலங்கள், ஸ்டேடியங்கள் கட்டியது. காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தியது. கூடவே எதெதெற்கோ கட்டடங்கள் கட்டியது, புதிய சொகுசு பஸ்களை இஷ்டத்துக்கும் வாங்கியது. தனக்குக் காசுபணம் சேர்த்துக்கொண்டது. வேலையாட்கள், கூலிகள் என்கிற பெயரில், வெளிமாநிலங்களிலிருந்து ஏழை, பாழைகள், கணக்கு வழக்கில்லாமல் குடும்பத்தோடு வந்து பாலங்களுக்கடியில் குடியேறுவதைப் 10 வருஷமாகப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தது டெல்லியின் காங்கிரஸ் அரசு (2004-2014). ஆதரவற்ற ஏழைகள், வேலை வெட்டி இன்றி தலைநகர் முழுக்க அலைந்து திரிந்தால் எப்படி இருக்கும்? தடுக்க எந்த முயற்சியும் அரசு செய்யவில்லை. மாறாக, தேர்தல் சமயத்தில் இந்த ஏழைகளின் குடும்பங்களுக்கு வாக்காளர் அட்டையை வழங்கித் தன் கொடியைக் கூரைகளுக்குமேல் நட்டு, தனக்கு ஓட்டு வங்கியாக மாற்றிக்கொண்டது. நகரத்தின் சட்டம்-ஒழுங்கு, சுகாதாரம், சுற்றுச்சூழல் எப்படி நாசமாகப்போனால் என்ன? அரசியல்வாதிகளுக்கு ஓட்டு முக்கியம். அவர்களின் பேராசை, கதியற்ற மனிதர்களைப்பற்றிய அலட்சியம் ஆகியவை இத்தகைய ஏழை மக்களின் துயர வாழ்க்கையை மேலும் அவலமாக ஆக்கிவருகிறது. இயற்கையும் தன் பங்குக்கு, குளிர்காலத்தில் இந்த ஏழைகளைக் கடுமையாகத் தண்டிக்கிறது. தீராத துன்பத்தின் மாயவலையில் அப்பாவி மக்கள்.

**

கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தடுமாறும் இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெறும், இந்தியா ஆஸ்திரேலியா ஒரு-நாள் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இந்தியாவுக்கான ரிசல்ட்: 0.

சமீபத்தில்தான் தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் வென்ற டீம் இது. திடீரென என்னவாயிற்று இந்திய அணிக்கு? ஏனிந்தத் தடுமாற்றம்? பேட்டிங் சரியில்லையா? அப்படியும் சொல்வதற்கில்லை. துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண் வழக்கம்போல் சோபிக்கவில்லை.அவர் ஜாதகம் அப்படி. ஆனால் ரோஹித் ஷர்மா பிரமாதமாக ஆடினார். இரண்டு ஆட்டத்திலும் அபார சதம் அடித்துள்ளார். விராட் கோஹ்லியும், அஜின்க்யா ரஹானேயும் நன்றாக விளையாடிவருகின்றனர். இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா 300-ஐத் தாண்டியது. பின்னே என்னதான் பிரச்சினை? வழக்கமான பிரச்சினைதான். நமது பௌலிங் வெளி நாட்டில் எடுபடவில்லை. அடித்து நொறுக்கிவிட்டார்கள் ஆஸ்திரேலியர்கள்.

முதல் மேட்ச்சில், இந்தியாவின் புதிய இடது கை வேகப்பந்துவீச்சாளரான பஞ்சாபின் பரிந்தர் ஸ்ரன் (Barinder Sran) தனது முதல் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசினார். 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். அடுத்த பக்கத்தில் அவருக்கு அஷ்வின் துணையிருந்தார். ஆனால் மற்ற பௌலர்கள் அடித்து துவம்சம் செய்யப்பட்டதால் 310 என்கிற இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் அடைந்து வென்றது. இரண்டாவது போட்டியிலும், இந்திய பௌலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களிடம் உதை வாங்கினர். ஸ்பின்னர்கள் கொஞ்சம் நன்றாகப் பந்துபோட்டிருக்கலாம் என்று அழுகிறார் கேப்டன் தோனி. உண்மைதான். ஆனால் யார்தான் சரியாகப் பந்து போட்டார்கள்? அனுபவம் நிறைந்த இஷாந்த் ஷர்மா 5 ஒய்டுகளை வாரி வழங்குகிறார். ஒரு விக்கெட் சாய்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவருக்கு. இந்த மாதிரியான `அனுபவ வீரர்களை` வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா போன்ற, (ச்)சாம்ப்பியன் அணியை வெல்லமுடியுமா?

இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய, விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு பதிலாக, ரன்களை தானம் செய்யும் துல்லியமற்ற பௌலர்கள் இருக்கையில், வெற்றி என்பது கேப்டனின் பகல் கனவாகத்தான் போய்முடியும். இந்திய கேப்டன் இந்நிலையில் என்னதான் செய்வது? முதலில் பேட்டிங் செய்கிற அணி 300 ரன்கள் அடித்தால் போதும்; ஜெயித்துவிடலாம் என நினைத்த காலம் மலையேறிவிட்டது. இதனை இந்திய அணியினர் இனியாவது உணரவேண்டும். இந்திய அணிக்கு பேட்டிங்தான் ஓரளவுக்கு பலம். இனிவரும் போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்ய நேர்ந்தால், குறைந்தபட்சம் 340 ரன்களாவது எடுக்கவேண்டும். அப்போதுதான் வெற்றியைப்பற்றிக் கற்பனையாவது செய்யமுடியும்.

ஃபார்மில் வர சிரமப்படும் ஷிகர் தவனை உடனடியாகத் தியாகம் செய்வது, இந்திய அணிக்கு நல்லது. அவருக்கு பதிலாக நாளைய போட்டியில் (17-1-16), பஞ்சாபின் குர்கீரத் சிங் மான்(Gurkeerat Singh Mann) (பேட்டிங் ஆல்ரவுண்டர்) சேர்க்கப்படுவது உசிதமாக இருக்கும். இதனால் தோனிக்கு, ஒரு பேட்ஸ்மன் + ஒரு பௌலர் உபரியாகக் கிடைக்கும்.

நீங்களும் நானும் தவித்தால் போதுமா? உண்மையில் என்ன நடக்கப் போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம் !

**

காலையில் காதல்

காதலியின் நினைவில், இரவில் தூக்கம் பிடிக்கவில்லை ! மனதெல்லாம் நிரம்பியிருக்கும் மங்கையின் தரிசனத்திற்காக ஏங்கி, காலையில் அவள் வீட்டு வாசலில்போய் நிற்கிறான். அவளோ இன்னும் எழுந்து வந்தபாடில்லை. என்னதான் செய்வான் இவன் – கவிதை பாடுவதைத் தவிர :

காலையில் காதல்

`எல்லே இளங்கிளியே
இன்னமும் உறங்குதியோ !`
ஆண்டாளைப்போலே உனை
அழைத்துப் பாடிவிடலாம்தான்
காலை நேரத்து என் அழைப்பு
காதில் விழுந்தால் உன் அம்மா
கரண்டி தாங்கி பாயக்கூடும்
கவலை மிகக்கொண்டு
கலங்கி நிற்கிறேன் உன் வாசலில்
கண்ணனைத் தவிக்கவிடாது
கருணை புரிவாய்
காட்சி தருவாய் !

**

நரி பரியான கதை !

முந்தைய பதிவான “திருப்பெருந்துறை சிவபெருமான் பற்றி….“ படித்தபின் இங்கு தொடர்ந்தால், நன்றாக இருக்கும். எனினும், கொஞ்சம் முன்கதை சுருக்கம்:

அரிமர்த்தனப் பாண்டியன், நல்ல ஜாதிக்குதிரைகளை வாங்கவேண்டி தனது முதல் அமைச்சரான வாதவூரரை (மாணிக்கவாசகரை) திருப்பெருந்துறைக்கு அனுப்பினான். அங்கே குருவாய், சிவனடியாராய் வந்தமர்ந்திருந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார் மாணிக்கவாசகர். சிவத்தில் ஆழ்ந்தார்; அங்கேயே தங்கிவிட்டார். (இனித் தொடர்ந்து படியுங்கள் . . )

திருப்பெருந்துறையில், மெய்மறந்து பக்திப்பெருக்கில் திளைத்திருந்த மாணிக்கவாசகரின் நாட்கள் வேகமாய் ஓடுகின்றன. ஒரு நாள், பாண்டிய மன்னனிடமிருந்து ஒரு தூதன் வரவிருப்பதாகச் செய்தி வந்தது. திடுக்கிட்டார் மாணிக்கவாசகர். `அடடா! அரச காரியத்துக்காக அல்லவா இங்கு வந்தோம்? என்ன செய்துவிட்டோம்? எனை ஆட்கொண்ட பெருமானே! என் செய்வேன் இனி?` எனக் கலங்கினார். அடியவரின் கவலையை உணர்ந்த சிவன் அவரது கனவில் வந்து, குதிரைகளுடன் விரைவில் திரும்புவதாக பாண்டியனுக்குச் சேதி அனுப்பச்சொன்னார். சிவன் சொன்னபடி செய்தார் மாணிக்கவாசகர். ஏற்கனவே தன்னோடு வந்து அங்கு தங்கியிருந்த படைவீரர்களையும் மதுரைக்குத் திருப்பி அனுப்பினார். மறுபடியும் சிவத்தில் ஆழ்ந்து, பாடிப் பரவிக்கொண்டிருந்த மாணிக்கவாசகரின் கனவில் மீண்டும் திரும்பினார் சிவபெருமான். `மதுரைக்கு நீ திரும்பிப்போ. குதிரைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்! ` என்று உத்தரவிட்டார். மதுரை திரும்பினார் மாணிக்கவாசகர் அதாவது, பாண்டியனின் முதன்மந்திரியான வாதவூரர். ஆனால், குதிரைகள் ஏதும் கூட வரவில்லை!

வெறுங்கையோடு திரும்பிய மாணிக்கவாசகரைப் பார்த்துக் கடுங்கோபம் கொண்டான் பாண்டியன். அவர்மீது, பாண்டிய அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தது, ராஜ்யத்திற்கெதிரான மோசடி எனக் குற்றங்கள் சாட்டப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டார். அவர் முதுகின்மேல் பாறைகள் ஏற்றப்பட்டன. அங்கும் இங்கும் சுமையோடு அலைய வைத்துக் கொடுமைப்படுத்தினர். சிறையில் தன் ஆண்டவனை நினைத்து அழுது புலம்பினார் மாணிக்கவாசகர். செவிமடுத்தார் சிவன். நந்திதேவரை அழைத்து அடுத்த நாளே, மதுரையைச் சுற்றிலும் உள்ள காட்டில் இருக்கும் நரிகளைப் பரிகளாக்கி (குதிரைகளாக்கி) மதுரைக்குள் அனுப்ப ஆணையிட்டார். நந்திதேவர் சிவன் ஆணையைச் செயல்படுத்தினார்.

கிடுகிடுவென மதுரைக்குள் நுழைந்த கம்பீரக் குதிரைகளைப் பார்த்த அரசன் ஆச்சரியமானான். என்ன வகையான ஜாதிக்குதிரைகள் இவை? எங்கிருந்து வந்தன இத்தனை! அவன் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில், குதிரைகள் மீண்டும் நரிகளாயின. ஊளையிட்டு ஊரையே கூட்டியதால், உடன் விரட்டிவிடப்பட்டன. பாண்டியன் கோபம் எல்லை மீறியது. அரசனான என்னிடமே சித்துவேலையா! எனது மந்திரி இவ்வளவு தூரத்துக்குப் போய்விட்டாரா? மாணிக்கவாசகரைக் கடுமையாகச் சித்திரவதை செய்ய எண்ணி, அவரை வெறுங்காலுடன் ஆற்றின் சுடுமணல்படுகைக்கு அனுப்பினான். கொதிக்கும் மணலில், தலையில் பாறையுடன் நிற்கவைத்து வறுத்தெடுத்தார்கள் வீரர்கள். சூடும், சுமையும் தாங்கமுடியாது அவர் தள்ளாடியபோது, அடியும் சரமாரியாக விழுந்தது. மாணிக்கவாசகர் துவண்டார். மனதுக்குள் மருண்டார். தனக்கேன் இத்தகைய சோதனை, தண்டனை எல்லாம்? சித்தம் கலங்கி சிவபெருமானிடம் முறையிட்டார். `ஆட்கொள்வதுபோல் நாடகமாடி எனை அழவைத்து வேடிக்கை பார்க்கும் அருமையே, ஆதியே, சிவனே! உனையே நம்பிய உனது அடிமைக்கு உரிய பரிசா இது? ஆத்மநாதனே, அநியாயமாய் இல்லையா இதெல்லாம் உனக்கு?` அவரது கதறல் சீண்டியது சிவனை. சிரித்தார் இறைவன்.

கருணைபொங்க சிவன் கீழ்நோக்க, வெறும் மணல்படுகைகளாயிருந்த, நீர் காணா கோடையின் வறண்ட சுடுவெளியில், திடீரெனப் பெருவெள்ளம் பாய்ந்தது. பாண்டிய வீரர்கள் திடுக்கிட்டனர். மழையே இல்லை. வெள்ளம் எங்கிருந்து வருகிறது? எகிறிய வெள்ளநீர் மாணிக்கவாசகரைச் சுற்றிச் சுற்றிச் சென்றது. அவருக்கு ஆபத்து ஏதுமில்லை. மேலும், அவர் தலையில் கட்டியிருந்த பாறைகள், உடற்கட்டுகள் அறுந்து விழுந்து சிதறின. அப்பனின் அருள்விளையாடலை உணர்ந்த மாணிக்கவாசகர் பரவசமானார். அவன் புகழ்பாடி உருகினார். தள்ளி நின்று கவனித்த வீரர்கள் குலைநடுக்கம் கண்டனர். இதில் ஏதோ சூழ்ச்சி, அபாயம் இருக்கிறது என பயந்து, அவரை விட்டுவிட்டு ஓடினர். அரசனிடம் சென்று அலறினர். மன்னனின் குழப்பம் அதிகமாயிற்று. ஊரில், வெள்ள நீர் வெகுவாக உயர்வதாக வந்த செய்தி அவன் நிம்மதியைக் கெடுத்தது. வைகை அணை உடைந்துவிடக்கூடாதே எனப் பதறினான். தண்டோரா போட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண்பிள்ளையை அணைக்கு வரச்சொன்னான். அணையின் கரைகளை அதிரடியாக உயர்த்த உத்தரவிட்டான். பணி ராப்பகலாக நடந்தது.

வந்திப்பாட்டி என்றழைக்கப்பட்ட நிராதரவான மூதாட்டி ஒருத்தி, மதுரையில் வசித்துவந்தாள். பரம ஏழை. எனினும் பரமனின் பக்தை. தினமும் கஷ்டப்பட்டுப் புட்டு சமைத்து சிவனுக்குப் படைத்துவிட்டு, அதனை எதிர்வரும் எவருக்கேனும் உண்ணக் கொடுத்தாள். தன்னால் முடிந்த சிவகாரியத்தை சிரத்தையோடு செய்துவந்தாள். அவளுக்கும் அரசனின் அவசர தண்டோரா செய்தி போய்ச்சேர்ந்தது. `நான் ஆண்பிள்ளைக்கு எங்கே போவேன்? மண் அள்ளிக் கொட்ட, என் உடம்பும் ஒத்துழைக்காதே. ஒன்றும் செய்யாவிட்டால், அரச குற்றம் வந்துவிடுமே.. ஐயோ! என் சிவனே !` என அழுது அரற்றினாள். அடிமையின் அழுகை ஒலி காதில் விழுந்தது, காலனை எட்டி உதைத்த சிவனுக்கு. அவர்தான் திருவிளையாடல் சக்ரவர்த்தி ஆயிற்றே! நகர்த்தினார் காய்களை வேகமாய். சிறிது நேரத்தில், பாட்டியின் வீட்டுக் கதவை ஒரு இளைஞன் தட்டினான். கதவு திறந்த வந்திப்பாட்டியிடம் கெஞ்சலாகச் சொன்னான்: ”பாட்டி! ராஜ உத்திரவு பற்றிக் கேள்விப்பட்டேன். நானோ அனாதை. ஏழை. பசியால் வாடுபவன். உன் வீட்டிலிருந்து நான் போய், அணையில் மண் அள்ளிப்போடவா? வேலை முடிந்து மாலையில் வந்தபின், நீ சமைத்த புட்டைக் கூலியாகக் கொடுத்தால் போதும்!” என்றான். பாட்டிக்கு ஒரே ஆச்சரியம். மனம் லேசானது. ”சரி! நீ அப்படியே மன்னனின் வேலையைக் குறையேதும் வைக்காமல் செய்துவிட்டு வா. மாலையில் உனக்குப் புட்டு சமைத்துப்போடுகிறேன்!” என்றாள். பாட்டியின் வேலைக்காரனாக, குடும்பத்து ஆளாகப் பெயர் கொடுத்துவிட்டு, தன் பணியை ஆரம்பித்தான் அந்த இளைஞன்.

அதிரடி வேலையின் நேரடி மேல்பார்வைக்காக, குதிரையேறி உலவினான் பாண்டியன். மன்னன் அந்தப்பக்கம் வருகிறான் எனத்தெரிந்து, அப்போது மரத்தின்மேல் சாய்ந்து, தூங்குவதுபோல் பாவனை செய்தான் அந்த இளைஞன். சில நொடிகளில் அதற்கான பலன் கிடைத்தது. விளாசிய சாட்டையடி பலமாய் அவன் முதுகில் விழுந்தது. வலியால் அதிர்ந்தான் இளைஞன். அதிர்ந்தது அகிலமும். தன்முதுகிலும் சுரீரென வலிபரவ, பாண்டியனும் நிமிர்ந்தான். தடுமாறினான். இருந்தும், `உம்..! `என இளைஞனைக் கோபமாய்ப் பார்த்து சாட்டையை மேலும் உயர்த்தினான். இளைஞன் பயந்து, அவசரமாய் மண்ணள்ளி எடுத்து ஓடினான். அவன் தன் சட்டியிலிருந்து, வெள்ளப்பகுதியில் மண்ணைக் கொட்ட, சீறிப் பாய்ந்துகொண்டிருந்த வெள்ளம், வேகம் தளர்ந்தது. வேகமாகப் பின்வாங்கி வடிய ஆரம்பித்தது. கூர்மையாகக் கவனித்திருந்த பாண்டியன், ஆச்சரியமும் அதிர்ச்சியுமானான். உடல் தனையறியாது, நடுக்கம் கண்டது. குதிரையில் மெல்ல முன்னேறி, இளைஞனை அழைத்து அருகில்வரச் சைகை செய்தான். வந்ததும் `யார் நீ!` என வினவினான். இளைஞன் வந்திப்பாட்டியின் பெயர், விலாசம் சொன்னான். தான் அவளுடைய ஏழை வேலைக்காரன் என்றான். அரசனின் குழப்பம் தலைக்குமேலேறியது. இளைஞன் வழிகாட்ட, வந்திப்பாட்டியின் வீடுநோக்கி விரைந்தான்.

வேலைக்காரனாக வந்து தன் பரமபக்தைக்கு உதவிய சிவபெருமான், அவளுக்கு மோட்சம் அளிக்க முடிவெடுத்தார். அவளைக் கைலாசத்துக்கு அழைத்துவர சிவகணங்களை அனுப்பியிருந்தார். விரைந்துவந்த சிவகணங்கள் வந்திப் பாட்டியிடம் விஷயம் சொல்லி, அவள் தயாராவதற்காக வீட்டின் வெளியே அரூபமாய்க் காத்திருந்தனர். பாட்டியின் வீடடைந்த மன்னன் திரும்பிப் பார்க்க, இளைஞன் அங்கில்லை. வெளியில் வந்த வந்திப்பாட்டியோ, தான் கைலாசம் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னாள்! மன்னன் அதிர்ந்தான். கலங்கிய மனதுடன், அரண்மனை திரும்பினான். வெள்ளம் வடிந்துவிட்டதாக அவனுக்கு செய்தி காத்திருந்தது. குழப்பமும் அதிர்ச்சியும் வடிந்தபாடில்லை.

அந்த கொடும் இரவில் தூக்கமின்றிப் புரண்டான் அரிமர்த்தனப் பாண்டியன். நல்ல சிவபக்தன் அவன். அந்தச் சிவனிடந்தான் சொல்லி அவனும் அழுதான். “என்ன நடக்கிறது என் நாட்டில்? ஒன்றும் புரியவில்லையே அப்பனே! குதிரைகள் திடீரென வருகின்றன. கண்ணுக்கெதிரேயே பரிகள் நரிகளாகின்றன. மந்திரியின் சித்துவேலையோ என அவரைத் தண்டித்தால், வெள்ளம் பாய்கிறது தலைநகருக்குள். அணையை உயர்த்த உத்தரவிட்டால், யாரோ ஒருவன் வந்து மண்ணெடுத்துப் போடுகிறான். அடங்காத வெள்ளம் அவன் சொன்னபடி ஆடுகிறது! வயசான பாட்டியின் வீட்டுக்கு விஜாரிக்கப் போனால், அவளுக்கு அரசனைப்பற்றிய அக்கறை ஏதுமில்லை; கைலாசத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறாள்! எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. என்ன ராஜ்யம் இது? என்ன மாதிரியான ராஜா நான்? இந்த ராஜ பதவிக்கு நான் தகுதியானவன்தானா! “ எனத் துவண்டுபோய் சிவனை நினைத்தான். குமுறினான். பின்னிரவின் கனவில், சிவபெருமான் தோன்றினார்: “பாண்டியனே! உன் முதன்மந்திரியான வாதவூரர் (மாணிக்கவாசகர்)பொருட்டுதான் நான் இப்படி எல்லாம் நாடகமாடினேன். உன் குற்றம் ஏதும் இதில் இல்லை. ஆதலால், நீ கலங்காது நல்லாட்சி செய்வாயாக!“ என்று ஆசீர்வதித்து மறைந்தார் ஆதிசிவன்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே மாணிக்கவாசகரை சிறையிலிருந்து விடுவித்தான் பாண்டிய மன்னன். அவரிடம் மனமாற மன்னிப்புக் கோரினான். அவரையே தன் ராஜ்யத்தின் முதன்மந்திரியாகத் தொடருமாறு வேண்டிக்கொண்டான். மாணிக்கவாசகர் நடந்ததெல்லாம் சிவன்விளையாடல் எனச்சொல்லி, தான் சிவபாதையில் தொடர்ந்து நடக்கவேண்டியிருப்பதை அவனுக்கு உணர்த்தினார். சிவசிந்தனையோடு, அங்கிருந்து வெளியேறினார்.

**

திருப்பெருந்துறை சிவபெருமான் பற்றி மாணிக்கவாசகர்

புதுக்கோட்டைப் பகுதியில் பிறந்து வளர்ந்து, புரட்சிக்குப் பேர்போன க்யூபா (அல்லது ஸ்பானிஷ் மொழியில் கூபா) வரை சென்றிருந்தும், அருகிலுள்ள ஆவுடையார் கோவில் பக்கம் போய்ப் பார்த்ததில்லை. `பக்கத்தில்தானே இருக்கு..எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம்!` என்று மெத்தனமாய் விட்டுவிட்ட எத்தனையோ புண்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இப்போது தூரத்தில், புதுடெல்லியில் போய், குளிருக்கிதமாய் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு உட்கார்ந்து யோசிக்கிறேன் !

கொஞ்சம் பொறுங்கள், சொல்ல வந்தது என் புராணம் அல்ல. மார்கழிமாதப் பாடல்களான சிவபெருமானுக்கான திருப்பள்ளியெழுச்சியில், பாட்டுக்குப் பாட்டு திருப்பெருந்துறை மன்னா! .. திருப்பெருந்துறை உறை சிவபெருமானே…என்றெல்லாம் உருகுகிறாரே இந்த மாணிக்கவாசகர்? எங்கிருக்கிறது இந்த ஊர்? ஆவுடையார் கோவில் என இப்போது அழைக்கப்படும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகிலிருக்கும் ஊர்தான் மாணிக்கவாசகரின் சிந்தை குளிர்வித்த அந்த திருப்பெருந்துறை.

இளம் வயதிலேயே கல்வி ஞானத்திற்குப் பேர்போனவர், `வாதவூரர்` என முன்பு அழைக்கப்பட்ட மாணிக்கவாசகர். இவரது மொழிப்புலமை, ஆன்மிக அறிவு பற்றிக் கேள்வியுற்று அசந்து போன அரிமர்த்தன பாண்டியன், இந்த இளைஞரை தன் ராஜ்யத்தின் முதல் மந்திரியாக நியமித்தான். (அந்தக் காலத்தில் மந்திரி பதவிக்கு எப்பேர்ப்பட்ட ஆட்களைத் தேர்ந்தெடுத்தார்கள் அரசர்கள், கவனித்தீர்களா! `முதல்வர் வேட்பாளர்` என அறிவித்துக்கொண்டு இந்தக் காலத்தில் அலைகிறதுகளே சில தெள்ளுமணிகள்.. சரி, விடுங்கள், இது வேறெங்கோ கொண்டுபோய் விட்டுவிடும் !). திருப்பெருந்துறைப் பகுதியில் சிறந்த ஜாதிக்குதிரைகள் கிடைக்கின்றன எனக் கேள்விப்பட்டு, அவற்றை வாங்குவதற்காக, வாதவூரரை திருப்பெருந்துறைக்கு அனுப்புகிறான் பாண்டிய மன்னன். கஜானாவிலிருந்து கொஞ்சம் பொற்காசுகளும், துணைக்கு வீரர்களையும் அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறை வருகிறார் வாதவூரர் (மாணிக்கவாசகர்). ஊரில் நுழைந்ததுமே குளுகுளு வயல்களும், சுற்றியுள்ள குளங்களில் தாமரை மலர்களுமாய் ரம்யமான காட்சி மனதை அள்ளுகிறது. ஊரின் கோவிலில் சிவபெருமான் ஆத்மநாதராக அருள்பாலிக்கிறார். ஆத்மாவுக்கு ஸ்வரூபம் உண்டா? இல்லை. அதைப்போலவே இங்கே ஆத்மநாதர் அரூபமாயிருக்கிறார். கூடவந்த வீரர்களைத் தனியே தங்கச் சொல்லிவிட்டு, ஆற்றில் (வெள்ளாறு – முன்னாளைய ஸ்வேத நதி) குளித்துவிட்டு, நீறணிந்து கோவிலுக்குள் சென்று துதிக்கிறார் மாணிக்கவாசகர். கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிவருகையில் ஒருபக்கம், குருங்க மரத்தடியில் ஒரு சிவனடியார் அமர்ந்திருக்கிறார். வேறு யார், நம் அப்பன் சிவபெருமான்தான், இவரை ஆட்கொள்ள இந்த நாடகத்தை ஆரம்பித்தார் அங்கே. ஏற்கனவே சிவஞானத்தில் திளைத்திருந்தவரான மாணிக்கவாசகரை சிவனடியாரின் சாந்தமான தோற்றம் வசீகரிக்கிறது. இவர் சிவனடியாரோ, சிவனேதானோ! என மயங்கி அவருடைய பாதங்களில் சிரம் வைத்துப் பணிகிறார். தென்னாடுடைய சிவனும் மாணிக்கவாசகரின் தலையில் தன் திருப்பாதம் வைத்து தீட்சை அருள்கிறார். சிவனின் பாத ஸ்பரிசம் பெற்ற இளம் மாணிக்கவாசகர், பரவசமயமாகிறார். சிவன் இனிதே மறைய, இறைவனின் புகழை அப்போதே பாட ஆரம்பிக்கிறார் மாணிக்கவாசகர். திருப்பெருந்துறையிலேயே தங்கிவிடுகிறார். சிவபெருமானுக்குக் கோவில் கட்டுகிறார். சிவன் பெருமையைப் பாடிப் பூஜித்து நாட்களைக் கழிக்கிறார்.

மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில், அந்தக்கால (9-ஆம் நூற்றாண்டு) திருப்பெருந்துறையின் ஊர்ச்சூழல், அழகு பற்றி, ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு வரி சொல்கிறார். பச்சைப்பசேல் என வயல்கள். எங்கும் குளிர்ந்த சூழல். தடாகங்களில் கிண்ணங்கள் போல் மலர்ந்த செந்தாமரைப் பூக்கள் என ஊர்க்கதையும் சொல்கிறது அவர் வர்ணனை. சிவபெருமானின் அருமை, பெருமைபற்றி ஒரு பாசுரத்தில் மாணிக்கவாசகர் :

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

(பொருள்: நீ எல்லா உயிர்களிலும் நிற்பவன், போகுதல், வருதல் (இறப்பு, பிறப்பு) இல்லாதவன் என்றெல்லாம் உனைப் புகழ்ந்து பாடி, ஆடி மகிழ்வோரைக் கண்டுள்ளோமே தவிர, உன்னையே கண்டறிந்ததாகக் கூறுபவரைப்பற்றி நாங்கள் இதுவரைக் கேட்டதில்லை ! குளிர்ச்சிமிகு வயல்வெளியால் சூழப்பட்ட திருப்பெருந்துறைக்கு அரசனே! சிந்தனைக்கும் எட்டாதவனே! எங்கள்முன் வந்து எங்களின் கர்மவினைகளை அழித்து, எங்களை ஆண்டு அருள்புரியும் எங்கள் தலைவனே! உறக்கத்திலிருந்து எழுந்தருள்வாயாக !)

`குதிரை வாங்கத்தானே திருப்பெருந்துறை வந்தார் இவர் ! அது என்னவாயிற்று? பாண்டிய மன்னன் கேட்கவில்லையா?` நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் கவலை உங்களுக்கு! சரி, `நரி பரியான கதை`யை அடுத்த பதிவில் பார்ப்போம்..

**

சார்வாகன் – படைப்பும் பணியும்

தமிழின் இலக்கிய ரசிகர்கள்கூட அதிகம் கேட்டிராத பெயர். ஒருமுறை, இலக்கியப் படைப்புகளுக்கான `அழியாச்சுடர்கள்` வலைத்தளத்தில் இலக்கிய ஆளுமைகளின் பெயர் தேடுகையில் , தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் எவ்வளவோ பேர்களுக்கிடையில் “..சம்பத், சா.கந்தசாமி, சாரு நிவேதிதா, சார்வாகன், சி.மோகன்…“என்று செல்லும் வரிசையில் கண்ணில்பட்ட பெயர். சற்றே வித்தியாசமான, ஆதலால் கவர்ச்சியாய்த் தோன்றும் பெயர்.

எழுத்தாளர் சார்வாகன் `டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசன்` என்கிற ஒரு மருத்துவ நிபுணராகவே அவர் வாழ்நாளில் அறியப்பட்டவர். தொழுநோயால் தாக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட கைகளை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்செய்யும் நுண்ணிய மருத்துவத்தில், 60-ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புப் பணியாற்றியவர். ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் பின்னர் இந்தியாவிலும் இவரது மருத்துவப்பணி தொடர்ந்தது. கடினமான துறையில் மருத்துவ நிபுணத்துவம் மற்றும் அரிய மனிதநேயப் பணிக்காக இந்திய அரசு அவருக்கு 1984-ல் `பத்மஸ்ரீ` விருது வழங்கி கௌரவித்தது. தொழுநோய் பாதிப்பு அறுவைச் சிகிச்சை குறித்தான அவரது ஆய்வுக்கட்டுரை `ஸ்ரீனிவாசன் கருத்தியல்`(Srinivasan Concept) என மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியால் (Madras Medical College) ஏற்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சில எழுத்தாளர்களைப்போல், நாளொரு சிறுகதையும், மாதமொரு நாவலுமாய் எழுதிக் குவித்தவரா சார்வாகன்? இல்லை. அளவில் மிகவும் குறைவாகத்தான் எழுதியிருக்கிறார். இலக்கியம் என்று வருகையில் அளவுகோல் `தரம்` சம்பந்தப்பட்டது. அதாவது quality மட்டுமே கவனிக்கப்படவேண்டியது. Quantity அல்ல. உலகப் புகழ்பெற்ற செக் {Czech Republic-(formerly Austria-Hungary Empire)} எழுத்தாளரான ஃப்ரான்ஸ் காஃப்கா (Franz Kafka), மிகவும் குறைவாக எழுதியவர். 41 வயதுவரையே வாழ்ந்தவர். ஆனாலும் அவர் 1912-ல் எழுதிப் பதிப்பிடத் தயங்கிய `Metamorphosis’ என்கிற குறுநாவலிற்காக, இன்றும் இலக்கிய ரசிகர்களால் வாசிக்கப்படுகிறார், மேலை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் எனப் போற்றப்படுகிறார்.

`சார்வாகன்` என்ற புனைப்பெயரில் எழுத ஏதாவது காரணம்? மகாபாரதப் போர் முடிந்தபின், வெற்றிபெற்ற பாண்டவர்கள் தருமருக்கு முடிசூட்டுகின்றனர். முடிசூட்டுவிழாவில், சார்வாகன் என்கிற ஒரு ரிஷி எழுந்து, “தம் பாட்டனார், உறவினர் பலரையும் கொன்று அழித்தபின்தான் பாண்டவர்க்கு இந்த வெற்றி கிடைத்தது. தகாத செயல்களின் பலனாய் வந்த வெற்றி இது. தருமர் அரசராய் முடிசூடிக்கொள்வதில் எந்த தர்மமும் இல்லை. இதனை நான் ஏற்க மாட்டேன் !“ என்று உரக்கக் கூறினார். எங்கும் சந்தோஷமும், கொண்டாட்டமுமாய் இருக்கும் வேளையில், இப்படி எதிர்த்துச் சொன்ன சார்வாக ரிஷி மேல் அவையில் பலர் கடும் கோபம் கொண்டனர். தடுத்தும் கேளாமல் சிலர் அவர்மீது பாய்ந்து அடித்துத் தாக்க, அவர் அங்கேயே உயிரிழந்தார். தனக்கு வரப்போகும் ஆபத்தைப்பற்றிக் கவலைகொள்ளாமல், தன் மனதில் சரி எனப் பட்டதைப் பேசவேண்டிய இடத்தில் பேசிய ரிஷி சார்வாகனின் பாத்திரம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகவும், அதனாலேயே தான் `சார்வாகன்` எனப் புனைப்பெயர் வைத்துக்கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் சார்வாகன்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்ட்டன் செகாஃப்-க்குப் போன்று (Anton Chekhov (ரஷ்யனில் `ச்செக்காஃப்` என உச்சரிக்கவேண்டும்), மருத்துவம், இலக்கியம் என்கிற முற்றிலும் வித்தியாசமான துறைகளில் சாதித்தவர் சார்வாகன். மனதை சோர்வடையவைக்கும், சிக்கலான மருத்துவப் பணியைச் சிறப்புறச் செய்துகொண்டே, அவ்வப்போது, சிறுகதைகள், குறுநாவல்களை 60-70-களில் எழுதிவந்தார் சார்வாகன். தமிழ்நாட்டின் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளில் அவரது கதை ஏதும் வெளியானதில்லை. இலக்கியத்தரம் போற்றும் சிறுபத்திரிக்கைகள் சிலவற்றில் அவருடைய சிறுகதைகள் அச்சேறின. அவருடைய `வளை` என்கிற சிறுகதை ஜெயகாந்தனை ஆசிரியராகக்கொண்ட `ஞானரதம்` பத்திரிக்கையில் வெளிவந்து, இலக்கியச் சர்ச்சையைக் கிளப்பியது. `தர்ப்பணம்` என்கிற சிறுகதை நா.பார்த்தசாரதியினால் நடத்தப்பட்ட `தீபம்` இதழால் வெளியிடப்பட்டது. மேலும் அவரது `வளை` சிறுகதை `வெறிநாய் புகுந்த பள்ளிக்கூடம்` என்கிற மற்றொரு சிறுகதையோடு, அப்போது புது டெல்லியிலிருந்து வெளியான `கணையாழி` மாத இதழிலும் வெளியாகியது. நகுலனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பொன்றில், சார்வாகனின் `சின்னூரில் கொடி ஏற்றம்` என்கிற சிறுகதை இடம்பெற்றுள்ளது. இந்தக் கதை இலக்கிய விமரிசகர் வெங்கட் சாமிநாதனால் மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுதி ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஒரு உன்னத நோக்கத்தை முன்வைத்து, செயல்பாடுகளில் மனிதர்கள் முதலில் இறங்குகிறார்கள். பின் அந்த நோக்கத்தை மறந்துவிட்டு, செயல்பாடுகளிலும், அதற்கான வழிகளிலுமே கவனம் வைத்து, தங்கள் இலக்கினை இழக்கிறார்கள். உலகெங்கும் தனிமனித, சமூக, அரசியல் போராட்ட வரலாறுகளில், இதனைக் கண்கூடாகக் காணலாம். இந்தக் கருத்தை உள்வைத்தே பெரும்பாலான கதைகளை சார்வாகன் படைத்திருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மக்கள் முன் வைக்கப்பட்ட உயர்லட்சியங்களையும், சுதந்திரத்துக்குப்பின் மதிப்பீடுகளின் சரிவுகளையும், வீழ்ச்சிகளையும் சார்வாகன் தன்னுடைய `அமர பண்டிதர்` எனும் கதையில் உன்னதமாகப் பதிவு செய்திருக்கிறார். சமூக வாழ்வின் விசித்திரங்களை, அவலங்களைப் பகடி செய்வதில் (social parody) அவரது படைப்பின் நிபுணத்துவம் தெரிகிறது.

அறுபதுகளில் சி.சு.செல்லப்பாவினால் நடத்தப்பட்ட `எழுத்து` பத்திரிக்கையில் சார்வாகனின் சில படைப்புகள் வெளிவந்தன. அவரது ஆரம்பகாலக் கவிதைகள் சிலவற்றை வாசித்த செல்லப்பா, `நீங்கள் கவிதையே நிறைய எழுதுங்கள்` என்றாராம். ஆனால், நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட சார்வாகனின் கவிதைகள் எதுவும், இதுவரை அச்சேறவில்லை என்பது தமிழ் இலக்கியத்தின் சோகம்.

`நான் என்ன சொல்றேன்னா..` என்கிற ஒரு சிறுகதைத் தொகுப்பை, 1993-ல்தான் க்ரியா பதிப்பகம் படுகாலதாமதமாக வெளியிட்டது. சார்வாகனின் 41 சிறுகதைகள், 3 குறுநாவல்களை ஒரு முழுத்தொகுப்பாக நற்றிணை பதிப்பகம் 2013-ல் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டது. இவையே வாசக உலகத்துக்கு, ஒரு அபூர்வ தமிழ் இலக்கியவாதியை அறிமுகம் செய்யும் புத்தகங்கள்.

சென்னையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி, தனது 86-ஆவது வயதில் உடல்நலக் குறைவால் மறைந்தார் டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசன் என்று மருத்துவ உலகில் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர் சார்வாகன். ஒரே விருது – 1971-ல் `இலக்கியச் சிந்தனை` விருது – சார்வாகனின் `கனவுக்கதை` என்கிற சிறுகதைக்காக வழங்கப்பட்டது. சிலர் கொஞ்சம் சிரமப்பட்டு, தலைநிமிர்ந்து பார்த்திருப்பர். அப்புறம், வழக்கம்போல் மறந்துபோய்விட்டிருப்பர் இப்படி ஒரு எழுத்தாளர் நம்மிடையே இருக்கிறாரே என்பதை. யாரைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு நல்ல எழுத்தாளரைப்பற்றி, சகஎழுத்தாளர்கூட வாயைத் திறந்து ஏதும் சொல்வதில்லை இங்கே. தமிழ் எழுத்துச் சூழல் அப்படி!

**

2016 – வாழ்த்தும் சிந்தனையும்

இந்த நூற்றாண்டின் 16-ஆம் வருடம் புகுந்துவிட்டது நம் வாழ்வில் இன்று.
வெளியே நிற்கின்றன ஏதேதோ எதிர்பார்ப்புகள். உள்ளே இருக்கலாம் பல ஆச்சரியங்கள் !

புத்தாண்டின் காலை, கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, விஷ்ணு சகஸ்ரநாமம் என நம்மில் சிலருக்கு ஆன்மிக வழியில் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் சிலருக்கு, பிக்னிக்குகள், ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் எனத் துவங்கியிருக்கலாம். பெரும்பாலும் இன்று விடுமுறை நாளாதலால், அனைவரும் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் குலாவி மகிழ்வர். ஆஃபீஸே வாழ்க்கை என்கிற சித்தாந்தத்தோடு அலையும் சில ஆண்களுக்கு, வீடென்று ஒன்றும் உண்டு ; அங்கே ஆண்கள், பெண்கள், கூடவே குழந்தைகளும் உண்டு; அதற்குள் இனிதே உலவுவது எப்படி என மனைவிமார்களும், குழந்தைகளும், பெற்றோரும் திரும்பவும் சொல்லித்தர இன்று முனையக்கூடும்.

புத்தாண்டு தினத்திலிருந்து, தனியார் வாகனங்களுக்கான `ஆட்-ஈவன்` திட்டத்தை (Odd-Even Formula) கேஜ்ரிவால் அரசு டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது. ஜனவரி 1 –ஒற்றைப்படை எண் (odd number). ஆதலால், ஒற்றைப்படை எண்ணில் முடியும் தனியார் வாகனங்களையே இன்று தலைநகரில் ஓட்ட முடியும். இரட்டைப்படை எண்ணுள்ள வாகன உரிமையாளர்கள் 2, 4, 6 ..போன்ற தேதிகளில் மட்டுமே தங்கள் வாகனங்களுடன் வெளியே தலைகாட்ட முடியும். தாறுமாறாக தனியார் வாகனங்கள் வெளியே உலவினால் ரூ.2000 அபராதம். பெண்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் விதிவிலக்கு. தலைநகரின் காற்று மாசுக் கட்டுப்பாட்டிற்காக கேஜ்ரிவால் & கோ.வின் முயற்சி இது. இதை அமுல்படுத்துவதில் குழப்பங்களும், பொதுமக்களுக்கு இடைஞ்சல்களும் தவிர்க்கமுடியாதவை என விமரிசனங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு (மற்றும் சில மாநிலங்களுக்கு) இது தேர்தல் வருஷம். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இப்போதுதான் வெள்ளம் வடிந்திருக்கிறது. மக்களின் பிரச்சினைகள் வடிந்திருக்கின்றனவா? முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள் மக்கள். தமிழகத்திற்கு சிறப்பான ஆட்சிதரும் நல்லாட்சி அமையுமாக.

பிரதமர் நரேந்திர மோதி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர், நாட்டிற்கான புதிய தொழில்துறை, பொருளாதாரத் திட்டங்களுடன் புத்தாண்டில் பவனிவருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

உலகெங்கும் வன்முறை, தீவிரவாதம், போர்நிலை நீங்கி, அமைதியும், சுபிட்சமும் நிலவுமாக! இயற்கைப்பேரிடர்கள் பூமிக்குப் பக்கத்திலே வாராதிருக்குமாக!

நாட்டிலும், நாட்டுக்கு வெளியேயும் வசிக்கும் அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

**