அசோகமித்திரன்

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவரான அசோகமித்திரன் மறைந்துவிட்டார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் என ஒரு பெரும்காலவெளி காண்பித்த நகர்வாழ் மத்தியதர சமூகத்தின் தினசரி வாழ்வுப்போராட்டங்களை உன்னிப்பாக அவதானித்து, எழுத்தில் உன்னதமாய்க் கொண்டுவந்த படைப்பாளி. 8 நாவல்கள், 15 குறுநாவல்கள், 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திகள், கட்டுரைகள் என ஒரு இடைவெளியின்றி தமிழ்ப்பரப்பில் இயங்கிவந்தவர். இருந்தும் ஆரவாரமில்லாதவர். எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தெரியாதவர். An extraordinary, unassuming genius, no doubt.

தமிழ் இலக்கிய வாழ்வில் தொடரும் அபத்தமான குழு அரசியலில் என்றும் அவர் சிக்கியதில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தவர் அசோகமித்திரன். மென்மையாகப் பேசியவர். குறைவாகவே தன்னை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டவர். வெகுசில நேர்காணல்களையே தந்திருக்கிறார். அந்த நேர்காணல்களில் அவர் சொன்னவையும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதில்லை. அலங்காரமற்ற சாதாரண மொழியில் வாசகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்துச்சிற்பி அவர். அவருடைய புகழ்பெற்ற நாவலான ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ செகந்திராபாதில் 1948-ல், ஹைதராபாத் பகுதி இந்திய யூனியனில் இணைக்கப்பட்டபோது நிகழ்ந்த இனக்கலவரங்கள் அடிக்கோடிட்ட சமூகவாழ்வினைப் பதிவு செய்கிறது. கரைந்த நிழல்கள் எனும் நாவல் தமிழ்ச் சினிமா உலகினை பிறிதொரு கோணத்திலிருந்து பார்க்கிறது. மானசரோவர், தண்ணீர், ஒற்றன் போன்ற நாவல்களும் ப்ரபலமாகப் பேசப்படுபவை.

மிகவும் சிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுகிறார் அசோகமித்திரன். சொற்சிக்கனத்துக்குப் பேர்போனவர். அனாவசியமாக ஒரு வார்த்தை, வர்ணனை எதுவும் கிடைக்காது அவரது எழுத்தில். அவரது படைப்பில் படைப்பாளி துருத்திக்கொண்டிருப்பதில்லை. போதனைகள் இல்லவே இல்லை. சாதாரண நிகழ்வுகளினூடே பூடகமாக மனித வாழ்வைப்பற்றி எதையோ வாசகனுக்கு உணர்த்தப் பார்த்தவர். சிறுகதையின் பொதுவாக அறியப்பட்ட வடிவங்களைத் தாண்டி வெறும் நிகழ்வுகளின் கோர்வையாகவும், கதாபாத்திரத்தின் சிந்தனைப்போக்காகவும்கூட தன்னுடைய சிறுகதைகளைப் படைத்துள்ளார். சிறுகதையைப்பற்றி அறியப்பட்டுள்ள கோட்பாடுகளை மனதில் நிறுத்திக்கொண்டு அவரைப் படிப்பவருக்கு அசோகமித்திரன் எளிதில் பிடிபடுவதில்லை. பார்வை, எண்கள், காந்தி போன்ற சிறுகதைகளை இவ்வகைகளில் குறிப்பிடலாம்.

முன்பு, இதழொன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்குப் பிடித்த தன் கதைகளென சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார் அசோகமித்திரன். அவை: அப்பாவின் சிநேகிதர், ராஜாவுக்கு ஆபத்து, நானும் ஜே.ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம், பதினெட்டாவது அட்சக்கோடு. மேலும், தனக்குப் பிடிக்காதவை எனவும் இரண்டைக் குறிப்பிட்டிருக்கிறார் ! தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகியவை இந்த மாதிரியும் அறியப்படுகின்றன. காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன், விமோசனம், பறவை வேட்டை, பிரயாணம் போன்ற சிறுகதைகள் இலக்கியவெளியில் அடிக்கடி ஸ்லாகித்துக் குறிப்பிடப்படுகின்றன. காலச்சுவடு பதிப்பகம் ஐம்பது ஆண்டுகாலமாய் அவர் எழுதிய சிறுகதைகளை ஒரு பெரும்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.

1996-ல் அவருடைய சிறுகதைத்தொகுப்பான ’அப்பாவின் சிநேகிதர்’ நூலுக்காக சாகித்ய அகாடமி அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. தமிழுக்கான ’ஞானபீட விருது’க்காக அவரது பெயர் சமீபகாலத்தில் குறிப்பிடப்பட்டுவந்தது. சர்வதேசத் தரம் வாய்ந்த அசோகமித்திரனுக்கு அந்த விருது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். கொடுக்கப்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேசிய விருதிற்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் உள்ள தொடர்பு மிகவும் சன்னமானது. கிட்டத்தட்ட இல்லாமலானது.

இலக்கிய மாத இதழான கணையாழியின் ஆசிரியராக இருபது வருடகாலம் பணியாற்றியிருக்கிறார் அவர். இந்தக்காலகட்டத்தில் (எண்பதுகளின் இறுதிவரை), புதிய படைப்பாளிகளின் படைப்புகள் பலவற்றைக் கணையாழியில் பிரசுரித்துள்ளார் அசோகமித்திரன். அவரது நாவலான ‘தண்ணீர்’ கணையாழியில்தான் தொடராக வெளிவந்தது. அதனைத் திரைப்படமாக்க முயற்சிசெய்யப்பட்டது. ஏனோ அது வெளிச்சத்துக்கு வரவில்லை. அமெரிக்க இலக்கியத்தை அதிகம் பயின்றவர். ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் தெரிந்துவைத்திருந்தவர் அசோகமித்திரன். அவைபற்றிய அவரது பத்திகள் தமிழோடு ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. அமெரிக்க இலக்கியத்தின் தாக்கம் அவரது எழுத்துக்களில் உண்டு என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ’அதிர்ந்துபேசாத எழுத்து’ என அசோகமித்திரனின் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டார் சுந்தர ராமசாமி. இலக்கியத்தில் ‘கவிதை’ என்கிற வகைமை (genre) அவரை அவ்வளவாகக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.

அசோகமித்திரனின் புகழ்பெற்ற படைப்புகள் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் வந்துள்ளன. புகழ்பெற்ற ஆங்கிலப்பதிப்பகமான ’பெங்குயின் இந்தியா’ அசோகமித்திரனின் மூன்று படைப்புகளை (மொழிபெயர்ப்பு:என்.கல்யாணராமன்), ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. My years with Boss, The Ghosts of Meenambakkam (குறுநாவல்), Still bleeding from the wound (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்கள் அவை. இளம் வயதில் செகந்திராபாதில் வாழ்ந்திருந்த அசோகமித்திரன் தன் அப்பாவின் மறைவிற்குப்பிறகு சென்னைக்கு இடம்பெயர நேர்ந்தது. அவரது அப்பாவின் சிநேகிதரான, புகழ்பெற்ற படநிறுவனமான ஜெமினி ஸ்டூடியோஸின் அதிபர் வாசன் இளம் அசோகமித்திரனைச் சென்னைக்கு அழைத்தார். ஜெமினி ஸ்டூடியோஸில் வேலைபார்த்த அசோகமித்திரன் அங்கே தன் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள்பற்றி ஹாஸ்யம் கலந்து எழுதிய குறிப்புகளே ‘பாஸுடன் சில வருடங்கள்’ என்கிற சுவாரஸ்யமான புத்தகம். தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக ஆங்கிலத்திலும் எழுதியவர் அசோகமித்திரன்தான். அவருடைய பத்தி எழுத்துக்கள் இண்டியன் எக்ஸ்ப்ரெஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஸ்டேட்ஸ்மன், நேஷனல் ஹெரால்ட் ஆகிய ஆங்கில தினசரிகளிலும், அப்போது ப்ரபலமாக இருந்த வார இதழான ’இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இண்டியா’விலும் பிரசுரம் கண்டன. கூடவே, மொழிபெயர்ப்புப் பணியையும் செய்துள்ளார் அசோகமித்திரன். அனிதா தேசாயின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆங்கில நாவலான Fire on the Mountain அசோகமித்திரனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதனை சாகித்ய அகாடமியே வெளியிட்டுள்ளது.

சமகாலப் படைப்பாளிகளான க.நா.சுப்ரமணியம், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி,நகுலன், ஆகியோர்களுடன் நட்புடனும், தொடர்பிலும் இருந்தார் அசோகமித்திரன். தன் வீட்டுக்கு வந்து சந்தித்த எழுத்தாளர்களோடு மனம்விட்டு உரையாடி மகிழ்ந்தவர். அவருடைய எண்பதுகளில் அவர் மெலிந்து, உடல்சோர்ந்து காணப்பட்டாலும், உற்சாகமாகக் கடைசிவரை எழுதிவந்தார். அமெரிக்க பல்கலையான University of Iowa அசோகமித்திரனுக்கு படைப்பிலக்கியத்திற்கான ஃபெலோஷிப்பை (Creative writing fellowship) வழங்கி கௌரவித்துள்ளது. அசோகமித்திரன்பற்றிய ஆவணப்படம் ஒன்று அம்ஷன் குமாரால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் தற்செயலாகக் கிடைத்த ஒரு தமிழ்க்கடையில் மாத இலக்கிய இதழான ’தடம்’ கிடைத்தது. உள்ளே எட்டிப்பார்த்ததில் அசோகமித்திரனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. வாங்கிவந்தேன். அதில், ஃப்ரெஞ்சுப்புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸால் (Charles Dickens) எழுதப்பட்ட ’இரு நகரங்களின் கதை’ (A tale of two cities) நாவலே தன்னை வாசிக்க, எழுதத் தூண்டிய புத்தகம் என்கிறார் அவர். தமிழில், புதுமைப்பித்தனின் பெயர் நினைவிலில்லாத ஒரு சிறுகதையையும் இவ்வாறே குறிப்பிடுகிறார். ’உங்கள் புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்கிற ஒரு கேள்விக்கான பதிலில் ‘…..ஒரு கதையில இடம்பெறக்கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டாப் போதும்னு நினைக்கிறேன்’ என்கிறார் அசோகமித்திரன்.

**

க்ரிக்கெட்: இந்தியாவின் தொடர்வெற்றியும், சர்ச்சைகளும்

இரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி, இந்தியாவை வெற்றிமேடையில் ஏற்றிவிட்டார். தொடர் 2-1 என்று இந்தியாவின் கணக்கில் வர, பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (Border-Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்கப்பட்டது.

தரம்ஷாலா மேட்ச்சை ஜெயித்தால்தான் தொடர் என்கிற நிலையில் இரு அணிகளும் மோதின. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் பக்கமே முள் சாய்ந்திருப்பதாய்த் தோன்றியது. காயம் காரணமாக விராட் கோஹ்லி ஆடமாட்டார் என்பதே ஸ்மித்தை ஏகமாகக் குஷிப்படுத்தியது. தொலஞ்சான்யா! டாஸையும் வென்றது ஆஸ்திரேலியா. தரம்ஷாலா பிட்ச் இதுவரை அமைந்த பிட்ச்சுகளில் அருமையானதாகத் தோன்றியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வேகவேகமாக ரன் எடுத்தது. விக்கெட்டுகளும் விழுந்துகொண்டிருந்தன. இதுவரை தொடரில் ஃபார்ம் காண்பிக்காத டேவிட் வார்னர் அரைசதத்தைப் பூர்த்திசெய்தார். சர்ச்சைகள் ஒருபுறமிருக்க பேட்டிங்கில் பின்னி எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். இன்னுமொரு சதம் இந்தத்தொடரில். 144-க்கு 1 விக்கெட் என ஆஸ்திரேலியா கம்பீரமாக முன்னேறியது.

லஞ்சுக்குப் போகுமுன்தான் ரஹானேக்கு முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவின் முகம் நினைவில் வந்ததுபோலும். கொஞ்சம் போடச்சொன்னார். லஞ்ச்சில் என்ன சாப்பிட்டாரோ! குல்தீப் வெகுவாக மாறிவந்திருந்தார். அவரது சினமன்(chinaman) பந்துகள் ஆஸ்திரேலியர்களிடம் விளையாட ஆரம்பித்தன! முதலில் ஆபத்தான வார்னரைத் தூக்கி எறிந்து ஆர்ப்பரித்தார். தொடர்ந்து ஹாண்ட்ஸ்காம்ப்(Peter Handscomb), மேக்ஸ்வெல், கம்மின்ஸ் (Cummins) என ஒவ்வொருவராக குல்தீப்பின் ஜாலத்தில் சரிந்தார்கள். ஒருவழியாக 300 வந்து ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஆடியதால் ஆஸ்திரேலிய பௌலர்களைக் கையாள்வதில் சிக்கல் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராஹுல் மீண்டும் ஒரு அரைசதம் எடுத்துக் கைகொடுத்தார். அருமையாக ஆடிய புஜாராவும் அரைசதம். ஆஸ்திரேலிய ஸ்கோரை எப்படியும் தாண்டிவிட மிகவும் மெனக்கெட்டது இந்தியா. ஃபார்மில் இல்லாத கேப்டன் ரஹானே 46 எடுத்தார். பின் வந்த விக்கெட்கீப்பர் சாஹாவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பெரிதும் உழைத்தார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஓவராக அவரைச் சீண்ட, கம்மின்ஸ் எகிறும் வேகப்பந்துகளினால் ஜடேஜாவைத் தாக்கப் போர்மூண்டது! சூடாகிவிட்ட ஜடேஜா தான் ஒரு ராஜ்புட் என்பதை வீரமாய் விளக்கினார் ! அடுத்தடுத்த கம்மின்ஸ் பந்துகளை பௌண்டரி, சிக்ஸர் எனச் சீறவிட்டு பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கோஹ்லியையும், ரசிகர்களையும் குஷிப்படுத்தினார். சாஹா 31, ஜடேஜா 63 என அசத்தினர், சிறப்பாக வீசிய ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயனுக்கு 5 விக்கெட்டுகள். இந்தியா எடுத்த 332 ஆஸ்திரேலியாவின் மனதில் கிலியை உண்டுபண்ணியிருக்கவேண்டும்.

தொடரைக் கோட்டைவிட்டுவிடக்கூடாதே என்கிற அழுத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆரம்பித்தது. உமேஷ் யாதவ் வேகத்தினாலும், ரிவர்ஸ் ஸ்விங்கினாலும் ஆஸ்திரேலியர்களை அதிரவைத்தார். ரென்ஷா, வார்னர் இருவரையும் அதிரடியாக வெளியேற்றினார். நிதான ஆட்டத்திற்குப் பேர்போன ஆஸ்திரேலியக் கேப்டனை பீதி கவ்வியது. புவனேஷ்குமாரின் ஸ்விங் பௌலிங்கிற்கு உடனே பலியாகி ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தார் ஸ்மித். மேக்ஸ்வெல்லின் அதிரடி 45-ஐத் தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. 137 ரன்களில் பரிதாபமாக இந்தியாவிடம் சரண் அடைந்தது ஆஸ்திரேலியா. இந்திய பௌலர்களின் உத்வேகப்பந்துவீச்சு மிகவும் பாராட்டுக்குரியது. உமேஷ், ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ரன் அதிகமாகக் கொடுத்துவிடக்கூடும் என்கிற பயத்தில் ரஹானே அவருக்கு ஐந்து ஓவருக்குமேல் தரவில்லை.

இந்தியாவுக்கு இலக்கு 106. இத்தகைய சிறிய இலக்குகள் 4-ஆவது நாளில் பெரும் ப்ரச்சினையை பேட்டிங் அணிக்குத் தரவல்லது. இதுவோ இறுதிப் போட்டி. தொடரின் தலையெழுத்தை நிறுவப்போவது. எனவே இந்தியா இலக்கை நோக்கி வழிமேல் விழிவைத்து நகர்ந்தது. இருந்தும் முரளி விஜய் தடுமாறி கம்மின்ஸிடம் வீழ, அதே ஓவரில் இந்தியாவின் Mr.Dependable-ஆன புஜாரா ரன்–அவுட் ஆகிவிட, 46-க்கு இரண்டு விக்கெட்டுகள்; இந்தியாவுக்குத் தலைவலி ஆரம்பித்துவிட்டதோ எனத் தோன்றியது, ஆனால் ராஹுல் தன் நிதானத்தை இழக்காது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடிசேர்ந்த ரஹானேயை முகத்துக்கெதிரே எகிறும் வேகப்பந்துகளினால் மிரட்டப் பார்த்தார் கம்மின்ஸ். ஆனால் தடுத்தாடி, தடுமாறிவிழும் மனநிலையில் ரஹானே இல்லை. கம்மின்ஸின் எகிறும் பந்துகளை விறுவிறு பௌண்டரிகளாக மாற்றினார். போதாக்குறைக்கு, கம்மின்ஸின் 146 கி.மீ. வேகப்பந்தொன்றை மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களுக்கு போதையூட்டினார் ஒல்லி உடம்பு ரஹானே! ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. இந்தத் தொடர் நமக்கில்லை என்று அதற்குப் புரிந்துவிட்டது. ராஹுல் தன் ஆறாவது அரைசதத்தைப் பூர்த்திசெய்து வெற்றி ரன்களையும் எடுத்தவுடன், மைதானத்தில் ஆட்டம் ஆடி, கோஹ்லி அங்கில்லாத குறையை ரசிகர்களுக்காக நிவர்த்தி செய்தார். வெற்றிக்கு அடையாளமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் பிடுங்கி எடுத்துக்கொண்டு அமைதியாக நடந்தார் அஜின்க்யா ரஹானே. இளம் ரசிகர்களின் கூச்சல், ஆரவாரத்தில் தரம்ஷாலா அதிர்ந்து எழுந்தது. கோஹ்லி மைதானத்துக்குள் ப்ரவேசித்து வீரர்களோடு கைகுலுக்கி மகிழ்ந்தார். தொடரின் விதியை நிர்ணயித்த தரம்ஷாலா மேட்ச்சில் ரஹானே காட்டிய அமைதியான ஆனால் அழுத்தமான தலைமை மறக்க இயலாதது.

இத்தொடர் பற்றிய முதல் கட்டுரையில் நான் கூறியபடி இது ஒரு அபாரத் தொடராக நடந்துமுடிந்தது. இருதரப்பிலிருந்தும் அபரிமித ஆட்டத் திறமைகளின் வெளிப்பாடுகள், மைதானத்துக்குள்ளும் வெளியேயும் அதிரடிச் சச்சரவுகள் என ரசிகர்களையும், விமர்சகர்களையும் இறுதிவரை சீட்டின் நுனியில் வைத்திருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித்தின் DRS தப்பாட்டம்பற்றி பெங்களூரில் விராட் கோஹ்லி வீசிய குண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும், ஏன் ஐசிசி-யையும்கூட அதிரவைத்தது. பதிலாக, தன் மூளை ஒருகணம் மழுங்கிவிட்டதாகவும் அது தவறுதான் என்றும் ஸ்மித் வழிந்த கோலாகலக் காட்சி அரங்கேறியது! ஹேண்ட்ஸ்காம்ப் தனக்கு DRS-பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனத் தன் கேப்டனோடு ஒத்து ஊதி ஹாஸ்யத்தை அதிகப்படுத்தினார். இந்தியக் கிரிக்கெட் வாரியம் வீடியோ ரெகார்டிங்கோடு ஸ்மித்திற்கு எதிராக ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்போய், திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிடம் உடனடியாகப்பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு நேர்ந்தது. விவ் ரிச்சர்ட்ஸ், டேல் ஸ்டெய்ன், டூ ப்ளஸீ ஆகியோரிடம் தனது ஆவேச அதிரடிகளுக்காகப் பாராட்டுப்பெற்றார் கோஹ்லி. நேர்மாறாக, ஆஸ்திரேலியா மீடியா விராட் கோஹ்லியை அவமதிப்பதில், குறைசொல்வதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியவீரர்களை மைதானத்தில் வார்த்தைகளால் சீண்டுவது, பழித்துக்காட்டுவது கடைசிப் போட்டிவரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தோல்விபயம் தங்களைப் பற்றிக்கொள்ள என்ன செய்வதெனத் தெரியாதுவிழித்த ஸ்மித் குழுவினர் எப்பாடுபட்டாகிலும் இந்தியர்களின் ஆட்டகவனத்தைக் குலைக்க முற்பட்டனர். விளைவு தரம்ஷாலாவின் இந்திய முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கின்போது ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் மேத்யூ வேட் (Mathew Wade) விஷம வார்த்தைகளினால் ஜடேஜாவின் கவனம் கலைக்கமுயன்றது, முரளிவிஜய்யின் லோ-கேட்ச் அனுமதிக்கப்படாதபோது பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஸ்மித் விஜய்யை கெட்டவார்த்தைகளால் திட்டி, டெலிவிஷன் கேமராவில் சிக்கியது என ஒரே ரணகளம். தொடரின் இறுதியில் தன்னுடைய சில நடத்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஸ்மித். ’‘ஆஸ்திரேலிய வீரர்கள் எனது நண்பர்கள் என ஆரம்பத்தில் நான் சொன்னது உண்மைதான். ஆனால் அது இப்போது மாறிவிட்டது; இனி நான் அப்படிச்சொல்வதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை !’’ என்று மனதில் உள்ளதைப் போட்டுடைத்தார் கோஹ்லி. மொத்தத்தில் பெரும் ஆர்வத்தை உலகெங்குமுள்ள க்ரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே கிளர்ந்தெழவைத்த டெஸ்ட் தொடர் இது. Most riveting Test series ever played in recent times.

2016-17 க்ரிக்கெட் சீஸன் இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோஹ்லி, முரளி விஜய், கே.எல்.ராஹுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 6 அரைசதங்களை எடுத்து அசத்தினார்கள். கோஹ்லி 3 இரட்டை சதங்களையும், புஜாரா ஒரு இரட்டை சதத்தையும் விளாசி முத்திரை பதித்தனர். இங்கிலாந்துக்கெதிராக சென்னையில் கருண் நாயர் அடித்த முச்சதமும் இந்த சீஸனின் மகத்தான அம்சங்களில் ஒன்று. பௌலிங்கில் உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜாவின் பங்களிப்பு மகத்தானது. தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜா முதன்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப்பெற்றுள்ளார். அஷ்வினுக்கு இரண்டு ஐசிசி விருதுகள். இந்திய அணி அபாரமாக டெஸ்ட்டுகளை ஆடி 4 தொடர்களைக் கைப்பற்றிய காலமாக இது பேசப்படும். இனி வெளிநாட்டு மைதானங்களிலும் தன் திறமை காட்ட இது அணியினை உற்சாகப்படுத்தும். எனினும், அதற்கு இன்னும் நாளிருக்கிறது. அதற்குள் கொஞ்சம் ஐபிஎல் ஆடலாம் !

**

பெங்களூர் டெஸ்ட்: இந்தியாவின் ’பழிக்குப்பழி’ வெற்றி

சுழல் தந்த திடீர் திகில் க்ளைமாக்ஸில் ஆஸ்திரேலியாவை சரணடையவைத்து இரண்டாவது டெஸ்ட் மேட்ச்சைக் கைப்பற்றிவிட்டது இந்தியா. பெங்களூரில் பந்துவீச்சு, வார்த்தைவீச்சு என அனல் பறக்க ரசிகர்களை, கிரிக்கெட் விமரிசகர்களை எகிறவைத்த அதிரடிப்போட்டி, இரண்டு அணிகளையும் வெகுவாக சூடேற்றியிருக்கிறது. தொடர் 1-1 என்று சமன்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த களமான ரான்ச்சி (16-03-2017) பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

புனேயின் பிட்ச் போலில்லாவிட்டாலும், இதுவும் ஸ்பின்னிற்கு துணைபோகும்தான் எனத் தயார்செய்துகொண்டுதான் ஆஸ்திரேலியா பெங்களூரின் சின்னசாமி ஸ்டேடியத்தில் கால்வைத்தது. புனேயில் இந்திய ஸ்பின்னர்களுக்குத் தண்ணிகாட்டி, இந்திய பேட்டிங்கை முறித்து ஒரேயடியாக வீழ்த்திவிட்டதில் கண்ட பெருமிதம் ஆஸ்திரேலியர்களின் முகத்தில் வெளிச்சமாய்த் தெரிந்தது. கோஹ்லியின் தலைமையிலான இந்தியாவோ அடிபட்ட நாகமெனக் கொதித்திருந்தது. அது எப்போது சீறும், எப்போது கொட்டும் எனத் தெரியாத ஆஸ்திரேலியர்கள் கோஹ்லியையும் மற்றவர்களையும் ஆட்டத்தினூடே கமெண்ட் அடித்து, அவர்களது கவனத்தைக் கலைத்துச் சீண்டுவதில் சுகம் கண்டனர். கோஹ்லியும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவதாக இல்லை. தீவிரக் க்ரிக்கெட்டோடு, கடும் உளவியல் அழுத்தப்போட்டியும் அரங்கேறியிருந்தது பெங்களூர் மைதானத்தில். ’நீயா! நானா! பார்த்துவிடுவோம்!’ என்று புஸ்..புஸ் என்று ஒருவர்மீது ஒருவர் நெருப்புப்புகை விட்டுக்கொண்டிருந்த வரலாற்றுப்போட்டி!

இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்ததே தவிர அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. போட்டியின் முதல்நாள் காலையில் முரளி விஜய்க்குக் காயம் என அறிவிக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார். பதிலாக, ஐந்து வருடங்களுக்குப்பிறகு தலைகாட்டிய அபினவ் முகுந்த் (தமிழ்நாடு கேப்டன்) கே.எல்.ராஹுலுடன் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார். ரன் சேர்க்க மறந்துபோனார். கேப்டன் கோஹ்லி? அவருக்கும் பேட்டிங் மறந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆஸ்திரேலியர்கள் கேலிசெய்வதற்கு ஏதுவாக, அற்பத்தனமாக ஆடி அவுட்டானார். புஜாரா, ரஹானே, அஷ்வின், சாஹா, ஜடேஜா ..இவர்களெல்லாம் எதற்காக மட்டையைப் பிடித்துக்கொண்டூ மைதானத்தில் இறங்கினார்கள் என்றே தெரியவில்லை. நேத்தன் லயனின் (Nathan Lyon) அபார சுழல்வீச்சில் இந்தியர்கள் தவிடுபொடியானார்கள். கே.எல்.ராஹுல் மட்டும், வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார் போலும். பெருங்கவனத்துடன் போராடி ஆடினார். கடைசியில் துணையாக சரியாக ஜோடி இல்லாத நிலையில், நேத்தன் லயனைத் தூக்கி அடிக்க முயற்சித்து 90 ரன்களில் அவுட்டானார். லயனுக்கு 8 விக்கெட்டுகள். இந்தியா வெறும் 189. முதல் நாள் பேட்டிங் ஆடிய லட்சணம் இது. ஸ்மித் & கம்பெனியின் குதூகலத்திற்கு ஓர் எல்லையில்லை.

தொலையட்டும்; ஆஸ்திரேலியா ஆடவருகையில் அவர்களை நமது ஸ்கோரை நெருங்கவிடாமல் நொறுக்கித்தள்ளியிருக்கவேண்டாமா? அதுதான் இல்லை. ஆஸ்திரேலியாவின் ப்ரமாதமான 20-வயது துவக்கவீரர் மேட் ரென்ஷா (Matt Renshaw) (60), ஷான் மார்ஷ் (66), மேத்யூ வேட்(Mathew Wade)(40) என்பவர்களின் முதுகில் சவாரிசெய்த ஆஸ்திரேலியா, முன்னேறி 276 அடித்துவிட்டது. அஷ்வின் அருமையாகப் போட்டும், ரன்கொடுப்பதைக் குறைக்கமுடிந்ததே தவிர, விக்கெட் சரியவில்லை. ஆனால் கோஹ்லியால் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ரவீந்திர ஜடேஜா, 6 விக்கெட்டுகளை அனாயாசமாக வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 85 ரன் முன்னிலை என்ற நிலையில், இந்தியா இந்த மேட்ச்சிலும் காலி என்பதே பெரும்பான்மையோரின் சிந்தனையாக ஆகியிருந்தது.

வெடிப்புகள் தெரிய ஆரம்பித்த இத்தகைய பிட்ச்சில் மூன்றாவது நாள் ஆடுவது எளிதானதல்ல. அதுவும் தடவிக்கொண்டிருக்கும் இந்திய பேட்ஸ்மன்கள் என்ன செய்வார்கள் என்று எல்லோரும் யூகித்திருந்தார்கள். ஆனால் கதை கொஞ்சம் வித்தியாசமாக அமைந்துவிட்டது. முதல் நாளில் துல்லியமாக வீசி இந்தியாவை எளிதில் சுருட்டிய நேத்தன் லயனை, இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ஆடிவிட்டார்கள் நம்மவர்கள். அவருக்கு ஒரு விக்கெட்டும் விழவில்லை. புனேயில் இந்தியாவை அதிரவைத்த ஓ’கீஃப் இங்கே பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. இருந்தும் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாஸ்ல்வுட்டின்(Josh Hazlewood) ப்ரமாத பந்துவீச்சில் இந்திய விக்கெட்டுகள் பலியாகிக்கொண்டிருந்தன. கே.எல்.ராஹுல் பொறுப்பாக ஆடி இன்னுமொரு அரைசதம் எடுத்துத் துணையிருந்தார். செத்தேஷ்வர் புஜாரா(Cheteshwar Pujara) அபாரமாக ஆட, கோஹ்லியைப்போலவே இதுவரை ஃப்ளாப்-ஆகிக்கொண்டிருந்த ரஹானே இந்த முறை முழித்துக்கொண்டு ஒழுங்காக ஆடினார். இந்தியாவுக்கு எதிர்பாராத 118-ரன் பார்ட்னர்ஷிப் அமைய, ஆஸ்திரேலியாவின் தலைவலி ஆரம்பித்தது. 4-ஆவது நாளில் தொடர்ந்து ஆடிய இந்தியா வழக்கம்போல் வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 92, ரஹானே 52, சாஹா 20(நாட் அவுட்). இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் திறமையான பந்துவீச்சு மற்றும் கூர்மையான ஃபில்டிங்கிற்குமுன் போராடி 274 எடுத்ததே நம்பமுடியாததாக இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு தரப்பட்டது 188 ரன் இலக்கு. 4-ஆவது, 5-ஆவது நாட்களில் இதனை அடைந்துவிட்டால் தொடரில் அசைக்கமுடியாத ஒரு வலுவான நிலை அதற்கு கிடைத்துவிடும். கடினமான இலக்குதான். இருந்தும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள், குறிப்பாக ரென்ஷா, ஸ்மித், ஹாண்ட்ஸ்கோம்ப் (Peter Handscomb), ஸ்டார்க் என்று நல்ல ஃபார்மில் இருப்பதால் நம்பிக்கையுடன் ஆட ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. அஷ்வினிடம் மீண்டும் விழுந்தார் வார்னர். (இதுவரை அஷ்வின் வார்னரை டெஸ்ட்டுகளில் 9 தடவை அவுட் ஆக்கியுள்ளார். ஜோடிப்பொருத்தம்!) ரென்ஷா இஷாந்திடம் காலியாக, 2 விக்கெட்டுக்கு 42 வெறும் 9 ஓவர்களில். வேகமாகப் போய்க்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு ப்ரேக் கொடுக்க நினைத்து அஷ்வினைத் திருப்பிக் கூப்பிட்டார் கோஹ்லி. அஷ்வினிடம் விக்கெட்டை இழக்காமல் தடுத்து ஆடவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் பொதுவான இந்தத் தொடருக்கான ப்ளான். முதல் இன்னிங்ஸில் 49 ஓவர்கள் போட்டும் அஷ்வினுக்கு இரண்டே விக்கெட்டுகள்தான். ஆனால் இதுவோ 4-ஆவது நாள் விளையாட்டு. அஷ்வினைத் தடுத்து ஆடுவது பிரச்னையை உண்டுபண்ணும் என நினைத்து அடித்து ஆட ஆரம்பித்தார் ஸ்மித். இந்த சமயத்தில் ஷான் மார்ஷ் உமேஷ் யாதவிடம் எக்கச்சக்கமாக மாட்டினார். DRS கேட்டிருக்கவேண்டும். ஸ்மித் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் மார்ஷ் வெளியேற, 67-க்கு 3 விக்கெட் என்றானது. பயப்பட ஒன்றுமில்லை 7 விக்கெட் பாக்கியிருக்கிறது 120 ரன் தானே எடுக்கவேண்டும். ஆனால் உமேஷ் யாதவின் யார்க்கர்-நீளப் வேகப்பந்துகள் எகிற மறுத்து, கீழே தடவிச்சென்று பேட்ஸ்மனின் பாதத்தில் மோதி மோசம் செய்தன. அப்படி ஒரு பந்தில் ஸ்மித் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டார். DRS review கேட்கலாமா வேண்டாமா என்பதாக எதிரே நின்றிருந்த ஹாண்ட்ஸ்காம்போடு பேசினார். தவறில்லை. ஆனால் மேலும் குழம்பி, மைதானத்தில் (டிவி-யோடு உட்கார்ந்திருக்கும்) தங்கள் அணியினரிடமிருந்து இதுகுறித்து சிக்னல் பெற முயன்றார் ஸ்மித். This is not at all allowed. இந்தப் பித்தலாட்டத்தைக் கவனித்த கோஹ்லி இடையிலே புகுந்து சீற, அம்பயர் நைஜல் லாங் ‘நோ!..நோ!’ என அலறிக் குறுக்கிடவேண்டிவந்தது. (மேட்ச் முடிந்தபின்னும் கோஹ்லி இந்த சர்ச்சைபற்றி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தின் தில்லுமுல்லுபற்றி, நேர்காணலில் ஓபனாகப் போட்டுத்தள்ள, இது ஒரு பெரும் சர்ச்சையாகி விஸ்வரூபமெடுத்துள்ளது. உலகெங்கும் நிபுணர்களும், பழைய புலிகளும் இதனைக் கூர்மையாகக் கவனித்துவருகின்றனர்.) ஸ்மித் வேறுவழியின்றி நடையைக் கட்டுகையில் ஸ்கோர் 74-க்கு 4 ஆனது. ஆஸ்திரேலியாவின் பதற்றம் தெளிவாகத் தெரிந்தது. இந்தியாவின் உற்சாகமோ கோஹ்லியின் வடிவில் பொங்கித் தெறித்தது!

குழப்பத்தைத் தலையில் சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா ஆடிக்கொண்டிருந்தது. மிட்ச்செல் மார்ஷ் அவுட் ஆகையில், 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியாவுக்கு ஜெயிக்க 87 ரன்களே தேவைப்பட்டது. இன்னும் 5 விக்கெட்டுகள் கைவசம். வண்டியை இலக்கை நோக்கி ஓட்டிவிடலாம் எனத்தான் ஆஸ்திரேலியா நினைத்திருக்கவேண்டும். ரசிகர்களையும் இப்படியான சிந்தனையே ஆட்கொண்டிருந்தது. ஆனால் அந்த மாலையில், அஷ்வினின் கணக்கோ வேறுவிதமாக இருந்தது. ஹாண்ட்ஸ்காம்ப், வேட், ஸ்டார்க் எனப் பிடுங்கி எறிந்து ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை முறித்தார் அஷ்வின். ஆரம்பித்தது கோஹ்லியின் ருத்ர தாண்டவம். ரசிகர்களின் பக்கம் திரும்பி கைகாட்டி ஏத்திவிட்டார் மனுஷன்! ரசிகர்கள் போதையில் எழுந்தாட, இந்தியக்கொடிகளும் சேர்ந்துகொண்டன. ஆஸ்திரேலியாவின் மூடுவிழா நடந்துகொண்டிருந்தது. கடைசி இரண்டு விக்கெட்டுகளான ஓ’கீஃபையும், லயனையும் முறையே ஜடேஜாவும், அஷ்வினும் லபக்க, ஆஸ்திரேலியாவின் பெங்களூர் தீர்த்த யாத்திரை, இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது.

இந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியாவின் தரப்பிலிருந்து ஒரே அலட்டல், பீற்றல் வெளிப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் கருண்நாயரை ’டக்’ அவுட் செய்த ஆவேசத்தில் ஸ்டார்க் அவர் முன்னே சென்று ‘கமான்!’ என்றதோடு, மேலும் முன்னேறி ‘நாலெழுத்து’ கெட்டவார்த்தையை அவர் மீது வீசினார். கருண் நாயரிடமிருந்து ரியாக்ஷன் இல்லை. புஜாரா, கோஹ்லி விளையாடுகையில் கிண்டல்கள் அதிகமாக இருந்தது. முதல் நாளில் இந்தியாவின் 8 விக்கெட்டுகளை, குறிப்பாக விராட் கோஹ்லியின் விக்கெட்டையும் சாய்த்த ஸ்பின்னர் நேத்தன் லயன் குஷி மூடில் கூறியது இது: ’’எங்களுக்குத்தெரியும். பாம்பின் தலையை வெட்டிவிட்டால் உடல் சரிந்து விழுந்துவிடும் என்று!’’. ஆட்டம் முடிந்தபின் பேசுகையில், தன் தலைமையில் இது மிகவும் இனிப்பான வெற்றி என்று கூறிய கோஹ்லி, ஆஸ்திரேலியாவை சீண்டத் தவறவில்லை. ’தலை வெட்டப்பட்டாலும் இந்தப் பாம்பு கொட்டிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது!’ என்றார். ’என் விக்கெட்டை எடுத்துவிட்டதாலேயே இந்தியாவை எப்போதும் ஜெயித்துவிடமுடியாது. மற்றவர்கள் இருக்கிறார்கள்; கவனித்துக்கொள்வார்கள். நாங்கள் ஒரு அணி !’ என்றார் மேலும்.

வீரவசனங்கள் பேசியாயிற்று. மார்ச் 16-ல் தொடங்கும் ரான்ச்சி (ஜார்கண்ட்) கதை எப்படிச் செல்லுமோ ! இந்தியா பெங்களூர் டெஸ்ட்டை வென்றுவிட்டதே ஒழிய, அதன் பேட்டிங் ப்ரச்சினைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பதை மறந்துவிடமுடியாது. குறிப்பாக கோஹ்லி நேரே வரும் பந்தை சரியாக யூகிக்காமல், அவசரப்பட்டு மட்டையை மேலேதூக்கி, எல்பிடபிள்யூ ஆகிற அசட்டுத்தனத்திலிருந்து விரைவில் விடுபடவேண்டும். அவர் நன்றாக பேட்டிங் செய்துவிட்டு வாயைத் திறந்தால் நல்லது . இருந்தாலும், எப்படியும் இந்தியாவை ஜெயித்துவிடவேண்டும் என்று மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேயும் ஏதேதோ செய்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலியா போன்றதொரு அணியை எதிர்கொள்கையில், இந்தியக் கேப்டனாக அவர் பேசாமல் இருக்கமுடியாதுதான் !

**