அவரவர்க்கு வாய்த்தது

கேக்கென்றும் கோக்கென்றும்
வாங்கி அடைக்கிறார்கள்
ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டு
என்ன போய்க்கொண்டிருக்கிறது உள்ளே
என்கிற பிரக்ஞை ஏதுமின்றி

கையிலே காகிதம்
காகிதத்தில் ஒரு சின்ன சமோசா
ஆவலோடு வாங்கிக்கொண்டு
அழகாக சமோசாவில் ஓட்டை போட்டு
அதற்குள் சாஸைப் பீற்றி அடிக்கிறாய்
வாயில் எச்சிலூற
வாகாக அதைப் பிடித்துக்கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாக
ரசித்துச் சாப்பிடுகிறாய்
தீர்ந்துவிடப் போகிறதே என்கிற கவலையோடு
சுவை துடிக்கும் உன் நாவில்
மெல்லக் கரைகிறது சமோசா
புரிகிறது பொடியனே
நீ உண்கிறாய்
அவர்கள் தின்னப்படுகிறார்கள்

***

பலியின் வலி

படபடக்கும் பச்சை இலைகள்
கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றன
எத்தனைக் குலுக்கியும் விடுவதாயில்லை
பாழும் பேய்க்காற்று சீறிச் சீறித்தான் வீசுகிறது
சுழட்டிச் சுழட்டித்தான் அடிக்கிறது
அதற்கென்ன இப்படி ஒரு கோபம்
இந்த அப்பாவி மரத்தின் மீது
பொட்டல் காட்டில் தனியாக இந்த மரம்
காற்றின் கடும் சீற்றத்தைத் தாங்க முடியாமல்
அரண்டு மிரண்டு ஆடுகிறது
அதன் தலையைப் பற்றி உலுக்கி உலுக்கி
ஏதாவது பலி கொடு என உருமுகிறது பேய்க்காற்று
தப்பிக்க வழியின்றி
தாய் மரத்திலிருந்து பிடியைத்
தளர்த்திக்கொள்கின்றன
தங்கள் கடமையை உணர்ந்துவிட்டிருந்த
உடம்பெல்லாம் மஞ்சளான இலைகள்
வெற்றிக்களிப்பில் ஊதி ஊதி வீசுகிறது காற்று
நழுவி விழும் இலைகளைத் தூக்கிக் கடாசுகிறது
உயரத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட இலைகள்
பூமியின் மீது மோதி விழுகின்றன
புழுதிக்காயம்பட்டுப் புரளும் மஞ்சள் இலைகளைத்
தரதரவெனத் தன் போக்கில்
இழுத்துச் செல்கிறது பேய்க்காற்று

**

தெருக்கூத்து

கூட்டம் கூடாதீர்கள்
கூடிக் கும்மியடித்து என்ன ஆகப்போகிறது
குலமென்ன கோத்ரமென்ன
எந்த ஊர் என்ன பேர்
என்றெல்லாம் கண்டுபிடித்து
என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறீர்கள்
இருக்கும்போதே கவனித்ததில்லை
இறுகிப்போனபின் உருகி என்ன பயன்
விருவிருவென ஆகவேண்டியதைப் பாருங்கள்
விறகுக் கட்டைகளைச் சேகரியுங்கள்
எரிப்பதற்கு இன்னும் ஏதாவது அடுக்குங்கள்
கொளுத்துங்கள் கொளுத்திவிட்டு
கொழுந்துவிட்டு எரியும் ஜுவாலையில்
ஏதாவது தெரிகிறதா எனப் பாருங்கள்
சாம்பலாகிச் சரிந்தபின்
சாமி பூதம் என அரற்றுங்கள்
சத்தம் போட்டுக்கொண்டு வந்து இறங்குவதும்
சப்த நாடியும் ஒடுங்கி போய்ச்சேருவதும்தான்
எல்லோருக்கும் விதிக்கப்பட்டுள்ளது
கூடிக் கூத்தடிக்கும் உமக்கும்
தூரநின்று பார்க்கும் எனக்கும்
சேர்த்துத்தான்
***

தர்மம் காக்க !

பார்க்காததுபோல் முகத்தை
அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டதால்
இந்தப் பக்கம் நிற்பது பெண்ணில்லை
என்றெல்லாம் ஆகிவிடாது
பெண் தான், பெண்ணேதான் இவர்
நீங்கள் இப்போது ஆக்ரமித்திருப்பதும்
இவருக்கான இருக்கையேதான்
கொஞ்சம் பெரிய மனசு வைத்து
லேசாக அசைத்து எழுப்பிவிடுங்கள்
அழுத்தமாய்க் குந்தியிருக்கும் உங்கள் உடம்பை
அம்மணி அமரட்டும்
அதர்மம் விலகட்டும்
பண்பாகப் பஸ் பயணம்
பதட்டமின்றித் தொடரட்டும்

**

கேள்விக்கென்ன பதில் ?

மெட்ரோவில் அன்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பீக் ஹவர் ஆதலால் செம கூட்டம். கனாட்ப்ளேஸ் வழியாக கிழக்கு டெல்லி, நோய்டா நோக்கிச் செல்லும் வண்டி. கூட்டத்துக்குக் கேட்கவேண்டுமா என்ன? மெட்ரோவின் அருமையான ஏசியிலும், நின்றுகொண்டிருப்போர் புஸ்..புஸ் என அடுத்தவர் தோளிலோ, முகத்திலோ மூச்சுவிடும் அளவிற்கு ஒரு நெரிசல். புளிமூட்டைபோல் அத்தனைபேரையும் சுமந்துகொண்டு மெட்ரோ சீறிச் சென்றது. உள்ளே மொபைல் பேச்சு, தங்களுக்குள் நேர்முகப்பேச்சு சகிதம் பிஸியாக பயணிகள். வண்டி நின்றவுடன் பாய்ந்து இறங்க என கதவுக்கருகில் எப்போதும் நெருக்கும் கூட்டம். நெருங்குகிற ஸ்டேஷனைக் குறித்து அறிவிப்பு வந்தது ரயிலில்: ’அடுத்துவரும் ஸ்டேஷன் அக்ஷர்தாம். கதவுகள் வலதுபுறமாகத் திறக்கும்’- பெண்ணொருத்தியின் தெளிவான ஆங்கிலக் குரல். அறிவிப்பைக் கேட்டதும் ‘அதான் எனக்குத் தெரியுமே!’ என்பதுபோல் யாவரும் இருக்க, பக்கத்தில் நின்றிருந்த நான்கு வயது சிறுவனின் குரல் பதட்டமாக உயர்ந்தது: ‘வலதுபுறத்துக்கு பதிலாக இடது புறம் கதவு திறந்துவிட்டால்…என்ன ஆகும்?’ அருகில் நின்றுகொண்டிருந்த அம்மா, அப்பாவைப் பார்த்துத்தான் இந்தக் கேள்வி. அம்மாவின் முகத்தில் புன்சிரிப்பு. மெல்லத் தலையாட்டுகிறாள். பதில் வரப்போகிறது என சிறுவனோடு நானும் ஆவலாகிறேன். ஒரு பதிலும் இல்லை அப்போதுதான் கவனித்தேன். அம்மாக்காரி அலைபேசியில் தன் தோழன் அல்லது தோழியுடன் அரட்டையில் ஆழ்ந்திருக்கிறாள் போல. அந்தப்பக்கம் என்ன சுவாரஸ்யமோ முகத்தில் தன்னை மறந்த சந்தோஷம். பிள்ளையின் உரத்த கேள்வி காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.. சிறுவன் ஏமாற்றத்துடன் ஆனால் பதற்றம் அதிகமாகி கேள்வியை தன் தகப்பனை நோக்கி இப்போது வீசுகிறான்: ‘வலதுபுறம் திறப்பதற்குபதில் இடதுபுறம் கதவு திறந்தால் என்ன ஆகும், சொல்?’ வண்டி இதோ நிற்கப்போகிறது. ஏதாவது இசகுபிசகாக ஆகிவிடப்போகிறதே என்கிற கவலை அவனது பிஞ்சுக்குரலில் அவசரப்படுத்துகிறது. அந்த அப்பாவை நானும் பதற்றத்தோடு பார்க்கிறேன். சொல்லுங்கள் அப்பாவே! அவரோ மெட்ரோவின் கூரையில் ஏதோ தேடுவதுபோல் தெரிந்தது. முகத்தில் ஒரு சோகம். பதில் தெரியவில்லையே என்றா.? ம்ஹூ,ம்.. அவரது முகத்தை பார்த்தால் அவருக்குத் தன் பையனோ, மனைவியோ அருகிலிருக்கிறார்கள் என்கிற ப்ரக்ஞையே இருப்பதாகத் தெரியவில்லை. அம்மா ஒரு உலகில். அப்பா இன்னொரு உலகில். குழந்தையோ இந்த நிதர்சன உலகின் நெருக்கும் பிரச்சனையோடு தடுமாறுகிறான்.

வண்டி நின்றது. பையன் பதற்றத்தோடு இடது வலதாகப்பார்க்க, நல்ல வேளை! அறிவிக்கப்பட்டது போலவே வலதுபக்கக் கதவு சரியாகத் திறந்து கொண்டது. சிறுவனின் முகத்தில் ஆறுதல், புன்னகை. அவனுடைய எமர்ஜென்சியை மெட்ரோவே சுமுகமாகத் தீர்த்துவிட்டது. மீண்டும் அந்த அம்மா அப்பாவைக் கொஞ்சம் நிதானமாக நோக்குகிறேன். அம்மாவின் முகத்தில் இன்னும் மாறாத மந்தஹாசம். மொபைல் பேச்சு ஏற்படுத்திய திவ்யமான பரவசம். ஆஃபீலிருந்து வெளிவந்த பின்னும் கழுத்திலிருந்து இறக்காது, இன்னும் தொங்கவிட்டிருக்கும் பேட்ஜ் ஐபிஎம் என்றது பெருமையாக. கையில் ஹாண்ட்பேக்குடன், சோர்வாக ஏதோ நினைவில், ஓடும் ரயிலோடு சுருதி பிசகாமல் குலுங்கி நிற்கிறார் சிறுவனின் தகப்பன். என்ன கல்யாணம் செய்து கொண்டு என்ன பெரிதாக வாழ்கிறீர்கள்? என்ன சம்பாதித்து என்னத்தக் கண்டீர் நீங்கள் இருவரும். உலகம் மெச்சுவதற்காக கழுத்தில் தொங்கும் கவர்ச்சியான பேட்ஜ், டை, அட்டகாசப் பேச்சு இத்யாதிகள். பெற்ற பிள்ளை அதுவும் சிறுகுழந்தை- அவன் கூட வந்திருப்பதே நினைவிலில்லை. அவனுடைய திடீர்க் கவலை விளைவித்த குறுகுறுப்பான கேள்வி எப்படி சார் காதில் விழும்? ஒரு பொது இடத்தில், அதுவும் கூட்ட நெரிசலில்கூட, அருகிலிருக்கும் தன் குழந்தையை மறந்திருக்கும் அளவுக்கு மனநிலையிருந்தால், இந்த வாழ்க்கை இத்தகு தம்பதியரை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்? ஏதாவது புரிகிறதா இந்தப் பெற்றோருக்கு? ஏதோ தவறு சன்னமாக, ஆனால் நிச்சயமாக நடந்துகொண்டிருக்கிறது என்கிற பல்பு இவர்களது மண்டைக்குள் எப்போது எரியும்? அதற்குள் மிகுந்த நேரமாகிவிட்டிருக்குமே?

**

மதுராபதியே, மதுரம் உன் கீதம்

டெல்லி ராமகிருஷ்ணபுரம் ஸ்ரீநிவாசர் கோவில். பிப்ரவரி மாத ஏகாதசி திங்கட்கிழமை. அங்கு மதுரையில் கூடலழகர் பெருமான் ஸ்ரீவேணுகோபாலனாய்த் திருத்தோற்றம் தந்தருளும் நன்னாள் என்றும் பிறகு தெரியவந்தது. ஸ்ரீநிவாஸருக்குத் திருமஞ்சனத்திற்குச் சொல்லியிருந்தபடியால் அன்று காலை பிப்ரவரியின் கிடுகிடுக்கும் குளிரை ஒருவாறு அலட்சியம் செய்து, குளித்துக் காப்பித்தண்ணி கூட குடிக்காமல் (எவ்வளவு பெரிய விஷயம்), கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தேன். காலை 8 ¾ மணி. எல்லோரும் ஆஃபீஸ் போகிற நேரம். சில வயதான தம்பதிகள், மாமிகளையும் எங்களையும் விட்டால், பெருமாளும் அர்ச்சகர்களும் மட்டும்தான் கோவிலில். இறைச்சலோ, தேவையற்ற சத்தங்களோ ஏதுமின்றி அமைதியே உருவான அழகான கோவில்.

அர்ச்சகர்கள் நிதானமாக மந்திரங்கள் சொல்ல, அழகாக நடந்தது எம்பெருமானுக்குத் திருமஞ்சனம். குளிருக்கேற்ற வெந்நீர், கூடவே பால், தயிர், தேன், இளநீர் என விதவிதமாக நீராட்டினார்கள் அழகுப்பெருமாளையும், அலமேலு மங்கை, பத்மாவதித் தாயார்களையும். பிறகு மஞ்சள் நீராட்டி, சந்தனக் குளியலுக்குப் பின் சாம்பிராணிப் புகையில் லேசாகக் காட்டப்பட்ட துளசி மாலையை உத்ஸவருக்கு சாத்தினார்கள். தீபாராதனை காட்டப்பட்டது. திருமஞ்சனம் முடிந்து திரையும் விழுந்தது. அலங்காரப் பிரியனான மஹாவிஷ்ணு தன்னை அலங்கரித்துக்கொள்ள நிதானமாக நேரம் எடுத்துக்கொள்வார். காத்திருந்தோம்.

சன்னிதிக்கு வெளியே வருகையில் அந்த மாமியைப் பார்த்தேன். நினைவு நாடா பின்னோக்கி வேகம் பிடித்தது. அன்றொரு நாள் இதே கோவில். சன்னிதியில் பெருமாள் சேவித்துக் கொண்டிருக்கையில் சட்டென ஒரு ஏக்கமாய் மனதில் தோன்றியது: முன்பெல்லாம் கோவில் சன்னிதிகளில், பெருமாளை அந்தக் கருணைமிகு திருமாலை நினைத்து சில மாமிகள் – பாடத்தெரிந்த மாமிகள், பெண் குழந்தைகள் ஆழ்வார் பாடல்களைப் பாடுவதையோ, ஸ்லோகங்களைச் சொல்வதையோ கேட்ட சிறுவயது ஞாபகம். இப்போதெல்லாம் கோயிலில் பக்தியோடு பாடும் பழக்கம் போய்விட்டதா? அந்தமாதிரி மனுஷிகள் இந்தக்காலத்தில் இல்லாது போய்விட்டார்களா? சிந்தனை இவ்வாறு ஓடுகையில், திடீரென்று ஒரு கணீர்க் குரல் பெண்கள் வரிசையிலிருந்து எழுந்தது. சன்னிதியில் பரவி சிலிர்க்க வைத்தது. ஆழ்வார் பாடலை அந்தப் பரந்தாமனுடைய சன்னிதியில் அமைதியான, தெளிவான குரலில் பாடிக் குளிர வைத்தார் அந்த மாமி. அந்த ஸ்ரீநிவாஸன் அப்படி ஆசைப்பட்டிருக்கவேண்டும். அனாயாசமாய் நிகழ்ந்தது அன்று.

அந்த மாமிதான் இப்போது மெல்லத் தள்ளாடி வெளியே வந்துகொண்டிருந்தார். திடீரென எனக்குள் எழுந்தது அந்தப் பாட்டுக் கேட்கும் ஆசை. மாமியைக் கேட்டுக்கொள்ளலாமா. பாடுவாரா? நமஸ்கரித்துவிட்டு மெதுவாகக் கேட்டேன்:

’கொஞ்சம் பெருமாளைப்பத்தி பாட முடியுமா ?’

’இப்பவா?’ என்று அவர் திரும்பிப் பார்க்க, பக்கத்தில் இன்னொரு மாமியும், கையில் ஒரு சிறிய மரப்பெட்டியுடன் ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தையும் நின்றிருந்தார்கள்.

’ஏன், எங்கேயாவது போய்ண்டிருக்கேளா’ என்றேன்.

’இந்தக் கொழந்தைக்குப் பாட்டு சொல்லித் தரணும்..’ பதில் சொன்னார் மாமி.அதைப்பார்த்து, ’நீ இப்பிடிக் கொஞ்சம் ஒக்கார்ந்துக்கறயா’ என்றார். அதுவும் சரியென்று அங்கேயே சமத்தாக உட்கார்ந்து கொண்டது. மாமியுடன் நானும் குழந்தையின் அம்மாவும் கருடர் சன்னிதிமுன் அமர்ந்தோம்.
மூடியிருந்த ஸ்ரீநிவாஸர் சன்னிதியை பார்த்துக்கொண்டு, பாட்டை எதிர்பார்த்திருந்தேன்.

மாமி ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! தள்ளாடும் உடம்பு. இருந்தும் கம்பீரம் குறையாத, ஸ்ருதி பிசகாத சாரீரம். ‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாளே, நாராயணா, ராமா, ராமா, ..அதரம் மதுரம்…அகிலம் மதுரம்.. என்று ஒரு பத்துப்பன்னிரண்டு நிமிஷங்கள் மதுரகீதம் அந்த மாயவனின் வாசல் முன் கிளர்ந்தது. மனமோகனமான அதிர்வலைகளை எழுப்பிப் பரவியது. அது ஒரு ஆழ்ந்த அனுபவம்.

ஆண்டவனின் சன்னிதிக்கு வருதல், வந்தபின் வேறு எதிலாவது மனதை செலுத்தாது இருத்தல், மந்திரங்கள் அர்ச்சகர்களால் அனுபவித்துத் தெளிவாக சொல்லப்படல், கூட இருக்கும் பக்தர்களில் பாடத் தெரிந்தவர் இருத்தல், அவர்கள் மனமுருகி இறைவனைப் பாட நேருதல், அதில் நாம் லயித்திருக்குமாறு நிகழ்தல் –இவை எல்லாம் அந்த வேணுகோபாலன் திருவுள்ளமன்றி வேறென்னவாய் இருக்கமுடியும்?

ஒம் நமோ நாராயணா..
**

ஜென்ம ஜென்மாந்திரமாய் …

அழிபவன் அல்ல நான்
மேலும் மேலும்
ஆக்கப்படுபவன்
ஆக்கப்படுதல்
அழிவிலும் நிகழ்கிறது
நிகழ்வில் அழிகிறது
அழிந்தே
ஆகிறது

* * *