காட்டழகிய சிங்கர், ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில்கள்
அடுத்த நாள் காலையில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம மண்டபத்தில் உட்கார்ந்து அளவளாவிக்கொண்டிருக்கையில், ‘காட்டழகிய சிங்கர் கோவிலுக்குப்போறோம்..வர்றீங்களா?’ என்றார் உறவினர். கரும்புதின்னக் கூலியும் வேண்டுமா என்ன? ’இதோ வந்துட்டேன்..!’’ என்று பாய்ந்து அவரது மாருதி ஆல்ட்டோவில் ஏறிக்கொண்டேன். ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது பிரும்மாண்டமான ஆயிரம் ஆண்டு பழமையான கோவில். ஒரு காலத்தில் பெரும் வனமாய் இந்தப்பகுதி இருந்ததாம். காட்டின் முரட்டு யானைகள் மக்கள் குடியிருப்புப்பகுதிகளிலும் அசால்ட்டாகப் புகுந்து அட்டகாசம் செய்தனவாம். இதுகளின் தொல்லையைத் தாங்காத மக்கள் காட்டின் நடுவில் நரசிம்மப்பெருமானுக்குக் கோவில் கட்டி வழிபட்டதால் யானைகளின் தொல்லை ஒருவாறு கட்டுக்குள் வந்ததாம்.
கோவிலுக்கருகே விஸ்தாரமாக திறந்தவெளி. அருகே கல்யாணமண்டபம் போன்று கட்டியிருந்தார்கள். பக்கவாட்டில் காரை பார்க் செய்து நடந்து உள்ளே சென்றோம். பெரியகூட்டம் ஏதுமில்லை. நாங்கள் சென்றபோது திரை போட்டிருந்தார்கள். சன்னிதிக்கு முன் காத்திருந்தோம். திரைவிலகியதும் தீபம் காட்டினார்கள். தீபத்தைத் தவிர பெருமாளுக்கருகில் வேறு வெளிச்சமில்லை. தூரத்திலிருந்து பார்த்ததால் முகம் தெரிவது கஷ்டமாயிருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கர்ப்பகிருஹத்தை நோக்கி நகர்ந்தது. மிக அருகில் சென்றதும் பார்த்தோம். எட்டடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் நரசிம்மப் பெருமாள். தாயார் லக்ஷ்மி மடியில் அமர்ந்திருக்க அவரை இடதுகையால் அணைத்தவாறு, வலது கையினால் அபயஹஸ்தம் காட்டி, கம்பீரமாய் அருள்பாலிக்கிறார். கவர்ச்சியான அருட்தோற்றம். கோவில் பிரஹாரத்தைச் சுற்றிவருகையில் கோவிலின் பழமையை உணரமுடிகிறது.
விஜயதசமி அன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இக்கோவிலுள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி, காலையிலிருந்து மாலைவரை பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தருகிறார். திருக்கார்த்திகை அன்று 1008 விளக்கு (சகஸ்ரதீபம்) ஏற்றப்பட்டு விசேஷ பூஜைகள் உண்டு. ஸ்ரீராமானுஜரின் சிஷ்யரான ஸ்ரீரங்கத்துக்காரரான பிள்ளை லோகாச்சாரியார், இக்கோவிலுக்கு வந்து ஏகாந்தத்தில் அமர்ந்து நீண்ட நாட்கள் தியானம் செய்திருக்கிறார். ’ஸ்ரீவசனபூஷணம்’ போன்ற ரகசிய கிருந்தங்களை இந்தக் கோவிலில் அமர்ந்துதான் இயற்றினாராம் அவர்.
காட்டழகிய சிங்கரின் தரிசனம் கண்டபின் அங்கிருந்து ’அப்படியே ஜம்புகேஸ்வரரையும் போய் சேவிச்சுடுவோம். இன்னிக்கு பிரதோஷமா இருக்கு!’ என்றார் எங்களைக் கூட்டிச் சென்ற தயவான். ’கெளம்புங்க!’ என்றேன். திருச்சி – திருவானைக்காவலில் உள்ள சிவபெருமானின் புகழ்பெற்ற பெருங்கோவிலது. சோழமன்னன் கோ செங்கட்சோழனால் 1800 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டதாம் இதுவன்றி மேலும் 77 மாடக்கோவில்களை தன் ஆட்சிக்காலத்தில் அவன் கட்டுவித்தான். சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இது அப்புஸ்தலம் (நீர் ஸ்தலம்) என அழைக்கப்படுகிறது. அம்பிகை அகிலாண்டேஸ்வரி நீரினால் லிங்கத்தைத் தோற்றுவித்து சிவனை வழிபட்ட சிறப்பான சிவஸ்தலம். ‘ஜம்பு’ என அழைக்கப்படும் வெண்நாவல் மரத்தின் கீழ் லிங்கவடிவில் காணப்படுவதால் சிவபெருமானுக்கு இங்கு ஜம்புகேஸ்வரர் என்கிற திருப்பெயர். நீர் எப்போதும் கருவறையில் சுரந்துகொண்டே இருக்குமாம் இந்த ஸ்தலத்தில்.
பிரும்மாண்டமான கோவிலின் நுழைவாசலில் புகுகையில் ஒரு சின்னஞ்சிறு வஸ்துவைப்போல் உணரநேர்ந்தது. இறைமை அல்லது தெய்வீகம் எனும் மாபெரும் சக்தியின் முன் மனிதன் என்பவன் ஒரு அற்பம் – அதாவது ஒன்றுமில்லை – எனப் புரிந்துகொள்ளத்தான் இந்த பிரும்மாண்டமோ? உள்ளே செல்லச்செல்லக் கோவில் பரந்து விரிந்தது. ஜம்புகேஸ்வரரின் தரிசனம் சுவற்றில் உள்ள ஒரு சிறு ஓட்டைவழியே கிடைத்தது. உள்ளே குருக்கள் லிங்கத்துக்குப் பூஜை செய்துகொண்டிருந்தார். வணங்கி மகிழ்ந்தோம். பிரகாரத்தை எல்லோரும் சுற்றி வந்தோம்.
அங்குமிங்கும் பார்த்து அரட்டை அடித்துக்கொண்டு கொஞ்சம் நேரத்தை வீணாக்கிவிட்டோம்போலும். அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் சன்னிதிக்குப்
போனால் சாத்திவிட்டிருந்தார்கள். சன்னிதிக்கு வெளியே ஒரு மூலையில், குருக்கள்கள் நின்றுகொண்டு, ஃப்ளாஸ்க்கில் கொண்டுவரப்பட்டிருந்த தேநீரை காகிதக்கப்புகளில் அருந்திக்கொண்டிருந்தார்கள். கேட்டதற்கு ‘இப்பத்தான் சாத்தினோம். பத்தரை மணி ஆயிடுத்தில்லியா!’ என்றார்கள். சரிதான். அம்மாதானே என்று நினைத்து எப்பவேண்டுமானாலும் அவளது சன்னிதிக்கு வரலாமா? நேரம் என்று ஒன்று இருக்கிறா இல்லையா? கவனிக்காதது நம் தவறுதான் எனப் பேசிக்கொண்டு, அம்பிகையின் சன்னிதியைப் பார்த்துக் கைகூப்பிவிட்டு வெளியே வந்தோம். சன்னிதிக்குமுன், துவஜஸ்தம்பத்திற்கு முன் எனப் பெரிய செவ்வக உலோகத்தட்டுகளில் பக்தர்கள் எண்ணெய், நெய் விளக்கேற்றி வைத்து வணங்கினார்கள். ஒரு இடத்தில் ஒரு இளந்தாய் தன் குழந்தையை விளக்கிற்குமுன் விழுந்து வணங்கச்சொன்னாள். இரண்டரை வயதேயிருக்கும் மொட்டையடித்திருந்த அந்தப் பெண்குழந்தைக்கு என்று தோன்றியது. விளக்கிற்குமுன், கிட்டத்தட்ட குட்டிக்கரணம் போடும் நிலையில் தன் சிறுதலையை செங்குத்தாகத் தரையில் வைத்து வணங்கியது குழந்தை.
இந்த அம்பிகை ஒருகாலத்தில் பெரும் உக்ரத்துடன் இருந்தாளாம். ஜனங்கள் அருகே செல்லவே நடுநடுங்கினார்கள். இங்கே விஜயம் தந்த ஆதிசங்கரரிடம் இதுபற்றி முறையிட்டு ஸ்வாமிகள்தான் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்து எங்களுக்கு அருளவேணும் என்று அவர்கள் ப்ரார்த்தித்துக்கொண்டார்கள். ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரியின் சன்னிதிக்கெதிரே வினாயகப் பெருமானை முதலில் ப்ரதிஷ்டை செய்து வணங்கினார். தான் பூஜித்துவந்த ஸ்ரீசக்ரங்களை அம்பிகையின் காதுகளுக்குக் காதணிகளாக அணிவித்து அம்பிகையின் முன் நெடுந்தியானத்தில் அமர்ந்தார் ஆதிசங்கரர். நாளடைவில் அன்னை மனம் குளிர்ந்தாள். தன் உக்ரம் தணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தாள். ஆதிசங்கரர் அணிவித்த ஸ்ரீசக்கரங்கள் இன்றும் அகிலாண்டேஸ்வரியின் சன்னிதியில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
(தொடரும்)