ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆஹா..வட போச்சே!

”காக்கா, ‘கா..கா..’ன்னு கத்திச்சா.. வடை கீழே விழுந்திருச்சு.. நரி தூக்கிட்டு ஓடிருச்சு..!” – ஆசியகோப்பை 2022-ன் கதைச் சுருக்கம்.

ஃபைனலுக்கு ஒரு நாள் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் (முன்னாள் வீரர்) ரமீஸ் ராஜா, துபாய்க்கு வந்து தங்கள் அணியின் வியூகம், வீர தீர மகாத்மியத்தைப்பத்தி, கூடவே இந்தியா வெளியேற்றப்பட்ட விதம் (சந்தோஷம்) பற்றி அபாரமா கமெண்ட் அடிச்சிவிட்டிருந்தார் (ஸ்ரீலங்கா ஃபைனலில் இருப்பதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை!): ’’இந்தியாவிடம் திறமையான வீரர்கள் அதிகம்தான். அதுக்காக இப்படி அடிக்கடி டீமை மாத்தியிருக்கக்கூடாது. அதான் டீம் செட் ஆகல.. க்ரூப் 4-லேயே வெளியேறும்படி ஆகியிருச்சு. ஆனா.. பாகிஸ்தான் அப்படிச் செய்யல. எங்களோட பெஸ்ட் 11-ஐ மெய்ண்ட்டெய்ன் பண்ணி, முனைப்பா ஆடினோம். வந்துட்டோம் ஃபைனலுக்கு!’’ (இனி என்ன, கோப்பை எங்களுக்குத்தான்!-னு சொல்லவேண்டியதுதான் பாக்கி). வாயைத் திறந்து காக்கா கத்த, வடை கீழே விழ, லங்கா தூக்கிட்டு ஓடிருச்சு..

Sri Lanka lifts Asia Cup 2022

வியூகக் கணக்குகளையும், திறமைகளையும் தாண்டி, கிரிக்கெட் ஒரு விசித்திர விளையாட்டு. ஒரு சில ஓவர்களில், ஒரு சில விளாசல்களில் கதை மாறிவிடும். எத்தனைப் பார்த்திருக்கிறோம். டாஸ் வென்றபின், முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட ஸ்ரீலங்கா 36 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து முழித்தது. 58 ரன் எடுக்கையில் 5 விக்கெட்டுகள் காலி! பாகிஸ்தான் கோப்பையை கையால் தொட்டுவிட்ட நிலை. பச்சை-வெள்ளைகளின் உற்சாக ஆரவாரம். இயற்கைதானே. அப்படித்தான் இருந்தது மைதானத்து நிலமை. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் பனுகா ராஜபக்சவும் (Bhanuka Rajapaksa) , ஆல்ரவுண்டர் வனிந்து ஹஸரங்காவும் ஒரு தீர்மானத்துடன் களத்தில் இறங்கியிருந்தார்கள். பாகிஸ்தானின் பெஸ்ட் பௌலர்களான, நஸீம் ஷா, ஹஸ்னெய்ன், ஷதாப் கான் ஆகியோரை ஆக்ரோஷமாகத் தாக்கி, ரன்களை வேகமாக அடுக்கினார்கள். பாகிஸ்தான் திணறியது. டென்ஷனில் கேட்ச்சுகளை நழுவவிட்டது. 120-130 -ஐத் தாண்டாது ஸ்ரீலங்கா ஸ்கோர் என நினைத்திருக்கையில், 170-ல் போய் நின்றது. ராஜபக்ச 71. சிக்ஸர் 3, பௌண்டரி 6 என சூப்பர் ஆட்டம்.

பாகிஸ்தான் கோப்பைக்கான இலக்கை நோக்கி இறங்குகையில், துவக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் ஆடினார் நன்றாக. விராட் கோஹ்லியோடு அடிக்கடி ஒப்பிடப்படும் பாக். சூப்பர்ஸ்டார் கேப்டன் பாபர் 5 ரன்னிலே ஓட்டம். அடுத்துவந்த ஃபகர் ஸமனும் (Fakhar Zaman) ரன் எடுக்காமலே காலி. லங்காவின் பிரமோத் மதுஷன் லியனகமகே ( பல் சுளுக்கிக்கிது) படுதுல்லியப் பந்துவீச்சு. 4 விக்கெட்டுகள். போதாக்குறைக்கு மகேஷ் தீக்‌ஷனா (Maheesh Theekshana), ஹஸ்ரங்காவின் ஸ்பின் வேற. பாகிஸ்தான் தடதடத்தது. நொறுங்கி, 147-ல் வாயைப் பிளந்தது.

வெகுவருஷங்களுக்குப் பின் ஸ்ரீலங்காவுக்கு ஆசிய கோப்பை. நினைத்துப் பார்க்கையில், இந்தியா, பாகிஸ்தானோடு ஒப்பிடுகையில் அதிகம் பேசாத லங்கர்கள். முனைப்போடு இலக்கை நோக்கி நகர்ந்தவர்கள். கோச் க்றிஸ் சில்வர்வுட்டும் (Chris Silverwood), கேப்டன் தஸுன் ஷனகாவும் (Dasun Shanaka) காட்டிய தீவிரம். உழைப்பு.  கோப்பைக்குத் தகுதியானவர்கள்தான் ஸ்ரீலங்கா அணி.

Asia Cup Final -Score: Sri Lanka 170 for 6. Pakistan 147 all out.

**

கோஹ்லிக்கு சதம். இந்தியாவுக்கு?

ஓவராக சிந்தித்து, திட்டம் தீட்டி, என்னென்னவோ செய்து ஆசிய கோப்பையைத் தவறவிட்டுவிட்டது ராஹுல் திராவிட் / ரோஹித் தலைமையிலான இந்தியா. க்ரூப் 4-ல், ஸ்ரீலங்காவிடம் தோற்றவுடனேயே இந்திய அணியின் வீடு திரும்பலுக்கான ஏர் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுவிட்டனதான். இருந்தாலும் பாக்கி இருக்கும் ஒரு மேட்ச்சை ஆடித்தானே ஆகவேண்டும். ஐசிசி விடாதே! சரியாக முயற்சிக்கப்படாத வீரர்களுக்கு மேலும் வாய்ப்புகொடுக்கலாம் என்கிற சிந்தனையில் (!), கேப்டன் ரோஹித், பாண்ட்யா, பிஷ்னோய் போன்றவர்கள் விலக, மீதமுள்ள இந்திய அணி இறங்கியது துணைக்கேப்டன் ராஹுல் தலைமையில், ஆஃப்கானிஸ்தானுக்கெதிராக.

Coach Dravid, Captain Rohit

ஆசிய கோப்பை போட்டிகளில் ஆடிய இந்திய அணித் தேர்வினை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். ஒரே ஒரு வீரரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோரும் உள்ளே.. வெளியே ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அதாவது ஆடவைக்கப்பட்டார்கள். தான் நீக்கப்படுவோம் என்கிற கவலையோ, பயமோ இல்லாமல் எல்லா மேட்ச்சையும் வரிசையாக ஆனந்தமாக ஆடிய ஒரே வீரர் விராட் கோஹ்லி. ஃபார்மில் இல்லாத கோஹ்லி அணியில் ஏன் என்கிற அளவுக்கு ஆசிய கோப்பையின் ஆரம்பத்தில் எரிச்சலூட்டியது அவரது தேர்வு. ஆயினும் இந்திய அணி அவரை மட்டும் ஆடு பார்க்கலாம்.. ஆடு என ஆடவைத்தது. சரியாக அவர் ஆடாவிட்டாலும் அழகுபார்க்கும் மனநிலையில் இருந்தது நிர்வாகம். அணியின் வெற்றிவாய்ப்பெல்லாம் முக்கியம் அல்ல, கோஹ்லி என்கிற கிரிக்கெட் ஸ்டாரை, கார்ப்பரேட் செல்லக்குழந்தையை எப்படியாவது ஃபார்முக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்கிற முயற்சியில் முனைப்பு காட்டிக்கொண்டிருந்த  ராஹுல் திராவிட் & கோ! தைர்யம் கொடுக்கப்பட்ட நிலையில், கோஹ்லியும் சஞ்சலமின்றி ஆடி ஆடி, ரன்னும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, இறுதிவாய்ப்பை இழந்துவிட்ட இந்தியாவின் கடைசி போட்டியில் சதம் அடித்துவிட்டார். எண்ணற்ற வாய்ப்புகளை விழுங்கி, 1000 நாட்களுக்கப்புறம் ஒரு சதம். வாயெல்லாம் பல் அவருக்கு. ஆளில்லா ஸ்டேடியத்தில் இந்திய ரிசர்வ் வீரர்கள், கோச், மற்றும் இன்னபிறக்கள் கைதட்டி சிரித்துக்கொண்டிருந்தன நேற்று இரவு(8-9-22). வாழ்த்துகள்.. வாழ்த்துகள்! நாலா திசையிலிருந்தும் வந்துவிழும் வாழ்த்துகள்..

Chetan Sharma, Chief Selector, India

இந்தியா நடப்பு சேம்பியனாக இருக்கும் ஆசிய கிரிக்கெட் சேம்பியன்ஷிப் போட்டிகள் எக்கேடுகெட்டாவது போகட்டும். கோப்பையை பாகிஸ்தான் வெல்லட்டும், இல்லை, லங்கா லவட்டிச் செல்லட்டும். நமக்கு நம்ம கோஹ்லி ஃபார்முக்கு வந்தாச்சு..! இதுதான் இந்திய கிரிக்கெட் போர்டின் குறிக்கோள் போலத் தெரிகிறது. வேறெந்த நாட்டிலும் 3 வருடமாக ஃபார்மில் இல்லாத ஒரு சீனியர் ப்ளேயருக்கு இப்படி ஒரு அதீத முக்கியத்துவம், (இளம் வீரர்களைத் தடுத்த நிலையில்-at the cost of young, promising players) தொடர் வாய்ப்புகள்  தரமாட்டார்கள். இந்த காலகட்டத்தில் இரண்டு இளம் வீரர்களை அவரிடத்தில் தயார் செய்து விட்டிருப்பார்கள். அத்தகைய முனைப்புதான் அணியின் எதிர்காலம் குறித்து ஒரு நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கவேண்டிய தொலைநோக்குப் பார்வை. இந்திய விளையாட்டு நிர்வாகிகளுக்கு நாடு, அணி, வெற்றிவாய்ப்பு எல்லாம் ஒரு பொருட்டல்ல. ஹீரோ! சூப்பர் ஸ்டார்! புகழ்.. இப்படி ஹீரோ வர்ஷிப் செய்துகொண்டு, கதைபேசியே காலம் ஓட்டுபவர்கள் இந்தியர்கள். நினைத்து வருந்த வேண்டிய விஷயமிது.

கோஹ்லி எப்படியோ ஃபார்முக்கு திரும்பியது நல்லதாப்போச்சு என முடியக்கூடும். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்ட்டிகளில் அவர் விளாசக்கூடும்தான். அப்படி நடந்தால் அணிக்கு நல்லது. ஆனால் ஒரு ஆளை நம்பி உலகக்கோப்பை கைமாறிவிடாது! கிரிக்கெட் ஒரு ’அணி விளையாட்டு’. ஒருத்தர் மட்டுமே ஃபார்மில் இருந்தால் போதும், உலக சேம்பியனாகிவிடலாம் என ஆட்டம் காட்டும் விளையாட்டல்ல கிரிக்கெட். இதனை நமது கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் இனிமேலாவது தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஒருத்தரையே பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிராமல், எதிர்கால ஸ்டார்களை வளர்த்து, உருவாக்குவதில் கவனம் செலுத்தவேண்டும்.

**