சனிக்கிழமை அதிகாலை. பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட். ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வேங்கடரமணர் கோவில். இரண்டு வரிசையாக சன்னிதிக்கு முன் ஆண்கள், பெண்கள் என சுமார் இருபது பேர். சனிக்கிழமை காலைநேரங்களில் ஆண்களில் எப்போதும் பிரதானமாக நின்று சகஸ்ரநாமம், வேங்கடேச ஸ்தோத்ரமெல்லாம் உறக்கச்சொல்லும் பெரியவர் அன்று வரவில்லை. முன்னின்ற பெண்களில் சிலர் கணீரென ஆரம்பிக்க, மற்றவர்கள் சேர்ந்து சொல்லிமுடித்தார்கள். என்னைப்போல் நின்றிருந்த ஏதுமறியா ஆண்கள் சிலர், சேர்ந்துபாடுகிறோம் பேர்வழி என்று கெடுத்துவைக்காமல், வாயைத் திறக்காமல், பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு, இறைவனின் புகழைக் காதால் கேட்டுமகிழ்ந்தோம். இன்னும் திரை விலகவில்லை. சில நிமிடங்கள்தான், ஆறரை மணிக்கு, பெருமாளுக்குத் திருமஞ்சனம் ஆரம்பிக்கும்.
எனக்கு முன்னே நின்றிருந்த பெண்மணி என் பக்கமாகத் திரும்பி, நாம் உட்கார்ந்துகொள்ளலாமே.. என்பதாகச் சொல்லிவிட்டு மெல்ல உட்கார, நான் இடம்விட்டு, இன்னும் பின்னால் நகர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் உட்கார ஆரம்பித்ததை கவனித்து, அமர்ந்துகொண்டேன். எனக்கு முன்னே ஆறேழு பேர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். பரபரப்பேதுமின்றி, நிதானமாக திருமஞ்சனத்தை தரிசிக்கலாம். தொண்ணையில் வாழைப்பழம், தேன் கலந்த பிரசாதமும் கிடைக்கும். பிறகு வீடு நோக்கிய நடை..
இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். எல்லோரும் திரை விலகக் காத்திருந்தார்கள். என் முன்னே அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி திடீரெனத் திரும்பி ‘நான் உங்களுக்கு மறைக்கிறேனா?’ என்றார். கொஞ்சமும் இதை எதிர்பாராததால், சற்றே திடுக்கிட்டவனாய், ‘இல்லையே.. நீங்கள் எதையும் மறைக்கவில்லை‘ என்றேன் அவசரமாக. அவர் திருப்தியுற்றவராய் சன்னிதிக் கதவை நோக்கியிருந்தார். எல்லோரும் தனக்கு சாமி சரியாகத் தெரிகிறதா அல்லது தெரியவேண்டுமே என்றுதான் முன்னோக்கி எம்புவார்கள்.. கூர்ந்து பார்க்க முனைவார்களே தவிர, பின்னாலிருக்கிறவனுக்கு நாம் மறைக்கிறோமா என்கிற சிந்தனை வருமா என்ன? எத்தனை பேருக்கு வரும்?
எங்கோ இதுவரையில் அலைந்துகொண்டிருந்த மனம், இப்போது இதற்குத் திரும்பியது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்ததில்.. மற்றவர்களா நமக்கு மறைக்கிறார்கள்? நமது மனமேதானே இந்தத் திருப்பணியைச் செய்துவருகிறது எப்போதும். பெருமாளுக்கும் நமக்கும் இடையில் திரையாய் தொங்கிக்கிடப்பது இந்தப் பாழாய்ப்போன மனம்தானே. கண் என்னவோ, கோவிலில் கடவுளின் விக்ரஹ உருவைப் பார்க்கத்தான் செய்கிறது. மனம் பெரும்பாலும் வேறெதையோ அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறது? மனம் பார்க்காத காட்சியை, கண்மட்டும் பார்த்து என்ன பயன்? அதுவா ஆண்டவன் தரிசனம் ? ஏதேதோ சிந்தனை ஓட, முன்பு படிக்க நேர்ந்த தியாகராஜ ஸ்வாமிகளின் வாழ்வின் நிகழ்வொன்று, நினைவடுக்குகளின் மேலேறிப் படபடத்தது..
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நாள். திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகள் ராமா.. ராமா.. என லயித்திருக்கிறார் வழக்கம்போல. ராமனைத் தவிர வேறொன்றுமில்லை இவ்வுலகில்..அவர் மனதில். அப்போதுதான் அந்த இளைஞன் அங்கு வந்து சொல்லிச் சென்றிருந்தான். ஒவ்வொரு கோவிலுக்காகப் போய் வருகிறான் போலும். திருவேங்கடத்துக்குப் போனானாம். அங்கே அவன் கண்டது கண்கொள்ளாக் காட்சியாம். ராமனைப்போலவேதான் அந்தக் கடவுளும் இருந்தாராம். ஏகப்பட்ட பொருத்தங்கள் என்றெல்லாம் சொல்லி அவரது சிந்தனையைத் திருப்பிவிட்டுவிட்டுப் போய்விட்டான் வந்தவன். என்ன, நம் ராமனைப்போல் இன்னொரு தெய்வமா? அப்படியா இருக்கிறது உண்மையில் எனச் சிந்தித்த மனம், போய் பார்த்துவிடவேண்டும் என்கிற நிலைக்கு வந்துசேர்ந்தது. கிளம்பிவிட்டார் மூன்று சிஷ்யர்களையும் கூட்டிக்கொண்டு.
இந்தக் கால பஸ் சர்வீஸா, காரா என்ன, அப்போதெல்லாம். பாதையைக் கேட்டுக்கொண்டே கால் கடுக்க பொழுதெல்லாம் நடப்பது, களைத்தால் எங்காவது வழியில் தங்குவது, இளைப்பாறிக்கொள்வது, மீண்டும் நடப்பது.. இதுதான் பயணம்..திவ்யதேசப் பிரயாணம். பாதையெல்லாம் சரியாக இருக்கிறதோ என்னவோ, அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.. போய்விடவேண்டியதுதான் என அந்த வயதான காலத்திலும் மனதில் எழுந்தது ஒரு பொறி. உருவானது ஒரு உத்வேகம்.
ஒருவழியாக திருவையாறிலிருந்து திருவேங்கடத்துக்குண்டான நீண்ட தொலைவு, ஏதேதோ வழிச் சிரமங்களையெல்லாம் கடந்து, மலையேறி, திருமலைக்கு வந்தாகிவிட்டது. குளுகுளுவென்றிருக்கிறதே இங்கே..! இதோ.. இதுதானா அவனிருக்கும் இடம். தூரத்திலிருந்து பார்க்கையிலேயே களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டதே. கோவிலுள் நுழைந்து கருடப் பெருமானையும் வணங்கித் தாண்டியாகிவிட்டது. இனி அவனுடைய தரிசனம்தான். நாம் கேள்விப்பட்ட அந்த வேங்கடரமணன். ராமனை ஒத்திருப்பவனா? அப்படி ஒரு அழகா இவனும் ? ஆசையோடு பார்க்கையில்.. அவசரமாக விழுந்துவிட்டது திரை. அதிர்ச்சி. அவருடைய சிஷ்யர்களுக்கு சுள்ளென்று வந்தது கோபம். அதற்குள் என்னய்யா திரை? ஏனிந்த அவசரம்? அர்ச்சகர்களை நோக்கிக் கேள்விகள் பறக்க, நொடியில் பெரும் வாக்குவாதமாக மாறியது.
தியாகராஜ ஸ்வாமிகள் குறுக்கிடுகிறார். தன் சிஷ்யர்களைத் தடுக்கிறார். பெருமாளை தரிசிக்க வந்திருக்கிறோம். சாந்தமாக இருப்பதல்லவா முக்கியம்? கோபத்தில் வார்த்தைகளை விட்டுக்கொண்டு நிற்கலாமா? கடிந்துகொள்கிறார். சிஷ்யர்கள் ஒருவழியாக அமைதியாக, எனக்கு ஏன் இப்படி.. சிந்தனை வசப்படுகிறார் தியாகராஜர்.
திரையா எம்பெருமானை மறைத்திருக்கிறது? அது என்ன திரை? அந்த ராமனா இங்கிருப்பதும்? அவன் தானா இவன்.. என சந்தேகப்பட்டுக்கொண்டே வந்தது மனம். குழப்ப எண்ணமதைக்கொண்ட மனமல்லவா திரையாகத் தொங்குகிறது? சஞ்சலமுள்ள மனசை வைத்துக்கொண்டு தரிசனத்தை யாசித்தால் எப்படிக் கிடைக்கும்? யோக்யதை வேண்டாமா? மனம் கலங்குகிறார். கண்களும் சேர்ந்துகொள்கிறது. சிஷ்யர்கள் கவனித்துப் பதறுகிறார்கள். நம் குருவிற்கு என்னவாயிற்று? தொலைதூரத்திலிருந்து மெனக்கெட்டு வந்தும் தரிசனம் கிடைக்கவில்லையே என்று அழுகிறாரோ..
தியாகராஜ ஸ்வாமிகளின் மன நெகிழ்வு, இறைவனை இறைஞ்சும் வார்த்தைகளாக உருக்கொள்கிறது. நாதம் நாடி வருகிறது.. பாடுகிறார் பரம்பொருளை நினைத்தேங்கி, மனமுருக வேண்டி..
தெர தீயக ராதா – நா லோனி
திருப்பதி வேங்கடரமணா – மத்சரமுனு
தெர தீயக ராதா ..
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதி – நா லோனி
தெர தீயக ராதா ..
(திரை விலக்கமாட்டாயா-எந்தன்
திருப்பதி வேங்கடரமணா.. தீயமனத்
திரை விலக்கமாட்டாயா..
பரமபுருஷ தர்மமான மோக்ஷம்தனை
அடையவிடாது தடுக்கும் எந்தன்
திரைவிலக்க மாட்டாயா..)
உருகும் பக்தனைப் பார்த்து உளமகிழ்கிறார் திருமால். எரிந்து சரியுமாறு செய்கிறார் இடைநின்ற திரையை. அர்ச்சகர்கள் அதிர்ந்து பார்க்க, அதிவிசேஷமான தரிசனம் திருவையாறு ஸ்வாமிக்கு. ’ஆஹா..வேங்கடரமணா..! நீயே என் ராமன். நீயே பரந்தாமன். என்னே என் பாக்யம்.. என்னே என் பாக்யம்’’ கரைகிறார் தியாகராஜர், திருமலை சன்னிதியில்.
**