ஏதோ கருகும் வாசனை

உளம்ததும்பும் தார்மீக சிந்தனையோடு
உதவிசெய்வதாய் ஊருக்குக் காட்ட
பொழுதுபோக்குபோல் வீசப்பட்ட
பொசுக்கென்ற சிறு காசுகள்
பூமியில் விழுந்து மின்னும் நட்சத்திரங்கள்
வெடித்துப்பரவும் வெய்யிலின் சீற்றத்தில்
தீக்குளிக்க விரையும் சாக்குக் கந்தல்
போதிமரத்துப் புத்தனின் பெண்வடிவம் இல்லையெனினும்
ஒற்றை மரத்தின் கீழ் உறைந்திருக்கிறாளே
கால ஓட்டத்தில் களைத்துக் காய்ந்து
கருத்துச் சருகாகிவிட்ட உடம்பு
ஆடாது அசங்காதிருக்கப் பயிற்சி எடுத்துள்ளதா
ஒழிந்து அழிந்துபோன ஒன்றுக்கும் உதவா
உப்புச்சப்பில்லா உறவுகளையும்
அறுந்து அற்றுப்போன வாழ்க்கைக் கயிறையும்
மூடியிருக்கும் கண்ணுக்குள் ஓட்டிப் பார்க்கிறாளோ
யார்பெற்ற குழந்தையோ
யாருடைய உடன்பிறப்போ
யாருடைய மனைவியோ
யாருக்குத்தான் அம்மாவோ
என்னவோ எதுவோ எப்படியெல்லாமோ
அலைக்கழித்த வாழ்க்கைப் பெரும்புயல்
விலகி ஓடி மறைந்துவிட்டது கிழவியிடமிருந்து
எஞ்சியிருந்த வார்த்தையும்
எப்போதோ செத்துவிட்டது
வாடி உலர்ந்த உடம்பு மட்டும்
ஏதோ கடன்பாக்கி இருப்பது போல்
உட்கார்ந்து காத்திருக்கிறது
மறுத்துப் பேசா மரத்தினடியில்

**

கலைந்துவிட்ட கோலம்

எதையும் அடித்துச் செல்லும் காலம்
எழுதிச் செல்கிறது தலையில் நரை
கண்களில் விழுகிறது மெல்லிய திரை
இளமையின் சுகந்தமோ அமர கீதமாய்
இழைந்தாடுகிறது எப்போதும் மனவெளியில்
இருப்பினும் விடாது நிரடுகிறது நிதர்சனம்
வாழ்வின் அந்தரங்க சோகங்களின் கலகம்
தவறாது சொல்லிவருகிறது தினமும்
இருப்பதற்கு லாயக்கில்லை இவ்வுலகம்

**

பழைய வானம், பழைய பூமி . .

உயிர் மிளிர உயர்ந்து நிற்கும் உங்களை அழித்துவிட்டு
உயிரில்லா உணர்வில்லாக் கட்டிடங்களை எழுப்பி
உயரத்திலிருந்து பார்த்துச் சிலிர்க்கவேண்டும் இவர்களுக்கு!
தங்களின் சந்தோஷம் சுகபோகத்திற்காக எதனையும்
ஈவு இரக்கமின்றி அழித்துப் பிழைக்கும் அற்பங்களோடு
சேர்ந்தே இப்புவியில் வாழ்ந்திருக்குமாறு
காலங்காலமாய் இவர்களின் கொடுங்கைகளினாலேயே
சிதைக்கப்பட்டுச் சீரழியுமாறு சபிக்கப்பட்டிருக்கிறீர்கள்
இருந்தும் வாய் திறக்க வாய்ப்பில்லை
ஏனெனில் வாயே தரப்படவில்லையே உங்களுக்கு
தரப்பட்டிருந்தாலும் திறந்திருப்பீர்களா
எதிர்த்து ஏதேனும் சொல்லியிருப்பீர்களா
உங்கள் குணம் தெரியாதா
குட்டக் குட்டக் குனிவதும்
வெட்ட வெட்ட முளைப்பதுமாய்த்தானே
வாழ்ந்து வருகிறீர்கள் இம்மண்ணில் எப்போதும்?
என்றும் மாறா உங்களின் இணையற்ற சாத்வீகம்தான்
எத்திப்பிழைக்கும் இந்த ஜீவன்களிடம்
எதையாவது மாற்றியிருக்கிறதா இதுவரை?

**

கொஞ்சம் பதில் சொல்லும்

நாயென்றும் பேயென்றும்
நாக்குக் கொழுப்பில் நாளெல்லாம்
ஏதேதோ சொல்லி ஏசுகிறீர்
பேய்களைப்பற்றிய உமது ஞானம்
எதுவரையோ யானறியேன்.
ஏதோ கொஞ்சம் எப்போதோ
தின்னக் கொடுத்துவிட்டீர்
என்பதற்காகத்தானே இப்படி
வாலை ஆட்டி நிற்கிறது
உமது அழகுத் திருமுகத்தை
உவகையோடு பார்க்கிறது.
அதனிடம் ஒளிவிடும்
மாசில்லா அன்பை
அளவில்லா விசுவாசத்தை
உமக்குள் காணமுடியவில்லையே
என்கிற ஆதங்கத்திலா
அந்த அப்பாவி ஜீவனின் பெயரையே
வசைமொழியாக்கி
இசைத்துப் பார்க்கிறீர் தினமும்?

**

பாதை மயக்கம்

கண்காணா மரத்தினிலே
வாகாக அமர்ந்து கொண்டு
களிப்புடனே வாய்திறந்து
க்வீக்..க்வீக்..க்வீக் என்றெல்லாம்
ஏதேதோ நாத அலைகளை
எழுப்பும் சின்னஞ்சிறு குருவியே
என் சிந்தனையின் வழிமறித்து
என்னதான் சொல்ல வருகிறாய்?
எண்ணமெல்லாம் எண்ணியதால்
என்ன பெரிதாக நடந்துவிட்டது
இந்தப்பேருலகில் என்கிறாயா?
எந்திரமாய் மாறி எங்கெங்கோ
எகிறிவிட்டிருக்கும் வாழ்வை
இடைமறித்து வழிதிருப்பி
எப்போதோ தொலைந்துபோன
இயற்கையின் பாதையைக் காண்பிக்கிறாயா?

**