மனிதர்களின் கதை

இரண்டு மூன்று நாட்கள் முன்பு ஒரு காலை. வாக் போய்விட்டு திரும்புகையில், மனைவி சொன்னது தற்செயலாக நினைவில் தட்டியது. வரும்போது கொத்தமல்லி பெரியகட்டா ஒன்னு வாங்கிண்டு வரமுடியுமா. அது நினைவில் வருகையில் சம்பந்தா சம்பந்தமில்லா சாலையில் என் இஷ்டத்துக்கு நகரின் காலைவாழ்க்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். கொத்தமல்லிக்கு எந்தப்பக்கம் போகணும் என சற்றே குழம்பி, கொஞ்சம் முன்னே சென்று இடதுபுறச்சாலையில் திரும்பி நடந்தேன். இந்த பிரதான சாலையில் இருநூறு மீட்டருக்கு ஒரு காய்கறிக்கடை அல்லது காய்கறி வண்டி இருக்கும். கொஞ்சதூரம் நடந்ததுமே வலதுபுறம் ஒரு பெரிய காய்கறிக்கடை தென்பட, காலைச்சாலையின் போக்குவரத்தை இடது வலமெனப் பரபரப்பாய்ப் பார்த்தேன். ஏதாவது சிந்தனையில் எப்போதுமிருக்குமாறு சபிக்கப்பட்டிருப்பதால், தாறுமாறான ட்ராஃபிக் எரிச்சலூட்டும் சாலையை சரிவரக் கடப்பது ப்ரும்மப்பிரயத்தனம் எனக்கு. ஒரு வழியாகக் கடந்தேன். கடையை நெருங்கிக்கொண்டிருந்தேன்.

தனிவீடு அது. இரண்டுமாடிக் கட்டிடம். காய்கறிக்கடையை நெருங்குமுன் அது வந்ததால், அதன் முன் நான் வர நேர்ந்தது. அப்போது எதிர்ப்பட்டார் அவர். அறுபத்தைந்து இருக்கலாம் என்றது சுருக்காகக் கணக்குப்போட்ட மனது. மனதுக்கென்ன, எதையாவது கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, கேட்டாலும் கேட்காவிட்டாலும் இடையே புகுந்து ஏதாவது சொல்லவேண்டியது. ம்…அது பிறந்தவேளை அப்படி. அவருடைய முகத்திலிருந்து கண்களை காய்கறிக்கடைப்பக்கம் திருப்ப முனைகையில் நெருங்கிவிட்டார். ஹலோ என்றார் எதிர்பாராதவிதமாக. அதிர்ந்தவனாய், இருந்தும் அதனைக் காண்பிக்காது, கூச்சச் சிரிப்புடன் மெல்ல ஹாய் என்றேன். யாரிவர்? என்னை வேறு யாராவது என நினைத்துவிட்டாரோ? நின்றேன்.

எப்படி இருக்கிறீங்க.. என்று ஆர்வத்துடன் என் முகம் பார்த்து ஆரம்பித்தார். ம்.. ஃபைன்.. என்றேன் லேசாகத் தடுமாறி. ’யாருப்பா இவரு? நீ ஒரு மந்தம்..என்ன ஏதுன்னு தெரியாம பதில் சொல்றே..’ என மனம் தந்தி அடிக்கையில், அவர் மிக இயல்பாகத் தொடர்ந்தார். இதற்கு முன்னே ஒங்கள வேறெங்கோ பார்த்திருக்கிறேன்னு தோணுது. எங்கே.. ஞாபகம் வரமாட்டேங்கறது என்று லேசாக சிரித்தவர், எங்கே இருந்தீங்க முன்னாடி? – என்றார். அவரைப்பற்றி எந்த ஞாபகமும் எனக்கில்லை. ஆனால்,ஒரு சகமனிதரிடம் அப்படி முகத்தில் அடிக்கிற மாதிரி சொல்வது மரியாதை இல்லை எனத் தோன்றியது. ஒங்கள இதுக்குமுன் .. எனக்கும் குழப்பமா இருக்கு.. என்றேன் பலவீனமாக. மேலும், அந்நியோன்னியமாய் அவர் ஆரம்பித்து ஏதோ சொல்ல விரும்புகையில் தட்ட முடியவில்லை. யாரும் – அவர் எவ்வளவு சாதாரணமாகத் தோன்றினாலும், என்னிடம் தானாக வந்து பேசுகையில் அவரை அலட்சியம் செய்வதோ, சிலரைப்போல் அப்படியே அவரை அம்போ என விட்டுவிட்டு, பெரியமனுஷத்தனமாய் வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நகல்வதோ என் அகராதியில் இருந்ததில்லை. அதனால் அவர் சொல்லமுயற்சிப்பதைக் கேட்க ஆரம்பித்தேன். அவர் எங்கேயாவது நிறுத்துகையில், ஏதாவது சொல்லிவிட்டுப் போய்விடலாம் என எதிர்பார்த்தேன். அவர் கேட்ட கேள்விக்கு, ஆமாம். முன்னெல்லாம் வேறொரு இடத்திலதான் இருந்தேன். ஹொரமாவு.. என்றேன். வாய் உண்மையைச் சொன்னதும், மனது உள்ளுக்குள்ளிருந்து குட்டியது. ’யாரோ எவரோ, ஒன்னுந்தெரியல. ஏதோ கேட்கறாரு. ரொம்ப அவசியமாக்கும். இவருகிட்டபோய் உண்மையை சொல்றது.. ஹொரமாவு.. தோசமாவுன்னு ! ’ அதன் லாஜிக் அப்படி. மனதின் கேலியை அலட்சியம் செய்தேன். அவரைத் தவிர்க்கமுடியாதவனாய், அவர் முகத்தை, தோற்றத்தை ஆராய்ந்தேன். மிடில்க்ளாஸ். வேஷ்டி சட்டையோடு, ஏதோ காரியமாக வெளியே புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார். குடும்பத்தோடு போஸ்ட்-ரிடையர்மெண்ட் வாழ்க்கை போலும் என நினைக்கையில் தொடர்ந்து பேசிச் சென்றார்.

நானும் ஆரம்பத்தில குடும்பத்தோட கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில இருந்தேன். ரொம்ப வருஷம் அங்கேதான். ஒரே கஷ்டம் சார்.. அதை ஏன் கேக்கிறீங்க.. என்றார் (நான் எங்கே கேட்டேன்?) பாவமாக இருந்தது முகம். வாழ்ந்து களைத்த முகம். அவர் விஷயத்தை சொல்ல ஆரம்பித்தவிதமோ, முகபாவமோ ஏதோ ஒன்று – என்னை மேலும் பொறுமையாகக் கேட்கவைத்தது. ஓ ..ரொம்பவும் கஷ்டப்படும்படியாயிடுத்து, இல்லயா? வாழ்க்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருவிதமாப் படுத்துது. சிலசமயத்துல அது தாங்கமுடியாத அளவுக்குப் போயிடுது என்றேன் அவருக்கு இதமாக இருக்கட்டுமென. (உண்மையும் அதுதானே. ஒவ்வொருத்தனும் உதைபட்டு, மிதிபட்டுத்தானே கொஞ்சம் முன்னேறியிருக்கோம், அல்லது மேல வந்திருக்கோம்?) இப்படிச் சொல்கையில் எனக்கே அவருடன் சிலகாலம் பழகிய உணர்வு வந்திருப்பதை உணர்ந்தேன். ஆமா சார்.. நான் ரொம்ப அடிபட்டுட்டேன். சின்ன வயசுல அம்மா போயிட்டா. அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரு. சித்தி.. மேலே தடுமாறினார். மாற்றாந்தாய் சார். எங்களத் தெருவுல நிக்கவச்சிட்டா.. சின்ன வயசுக் கொடுமைகள் நினைவைத் தாக்க, ஒரு பதற்றம் அவர் குரலை அழுத்தியது. அந்த வீட்டுக்காக கோர்ட் ஏறி ஏறி இறங்கித்து எங்க குடும்பம். எங்க வக்கீல் நாகேந்திர ராவ் சார்.. பெரிய கில்லாடி.. கேள்விப்பட்டிருப்பீங்க..ஒரு சிட்டிங்குக்கு இருபதாயிரம் வாங்குவாரு அப்பவே. தெணறிப்போனோம். அதயும் இதயும் வித்து எப்படியோ கேஸ் நடத்துனோம். ஆனா கடைசில ஜெயிச்சிட்டோம் என்றார் திருப்தியுடன்.

வீடு இப்போ ஒங்ககிட்டதானெ இருக்கு? கேட்டேன் அவரைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்த. ஆமா சார். பூர்வீக வீடு ஏகப்பட்ட போராட்டத்துக்குப் பிறகு எங்ககிட்ட ஒருவழியாத் திரும்ப வந்துடுத்து. வாடகைக்கு விட்டிருக்கோம் என்றார். ஓ, இப்போ குடும்பத்தோடு இந்தப்பக்கமா வந்துட்டீங்களா என்றேன் யூகித்தவாறு. எங்கே வேல பாத்தீங்க நீங்க? – எனக் கேட்டதற்கு அரசாங்கத்தில் ஏதோ ஒரு டெபார்ட்மெண்ட் பேர் சொன்னார். ஸ்டேட் கவர்ன்மெண்ட் வேலயாக இருக்கலாம். சரியாகப் புரியவில்லை. நான் விஆர்எஸ் வாங்கிண்டு வந்துட்டேன் சார். இப்போது இங்கேதான் இருக்கேன் என்று பின்பக்கத்தைக் காட்ட, அந்த பச்சை நிற வீடு – ஓ, அதை பங்களா எனவே சொல்லாம் – கம்பீரமாக உயர்ந்து, பக்கத்துக் காய்கறிக்கடையை சித்திரக்குள்ளனாய் காட்டி நின்றிருந்தது. சொந்தவீடுதானே இது? மெல்லக் கேட்டேன் ஆச்சரியம் மேலிட அதைப் பார்த்தவாறே. ’பெரிய வீடா கட்டிருக்காரு பாரு..ஒன்ன மாதிரியா சின்ன ஃப்ளாட்டுக்குள்ள தலய விட்டுண்டு..’ என ஆரம்பித்த மனசை, சித்த சும்மா இருக்கியா என அடக்கினேன். ஆமா சார் என்றார். முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் லேசாகத் தலைகாட்டி மறைந்தன. அப்பறம் என்ன கவலை உங்களுக்கு, ஆண்டவன் ஆயிரந்தான் சோதிச்சாலும், கடைசியா ஒரு வழியக் காட்டி, வசதியா ஒக்காரவச்சிட்டான்ல! – என்றேன். ஆமாம் என்பதுபோலத் தலையாட்டினார். அவன் சோதிச்சான்னு சொல்றதைவிட நம்ம கர்மா நம்ம படுத்தியிருக்கு, இப்போ கழிஞ்சிருச்சுன்னு புரிஞ்சுக்கணும் இல்லயா? மனிதனுக்கு ஏதோ ஒரு தருணத்தில் திருப்தின்னு ஒன்னு மனசுல வரணும். இல்லாட்டி வாழ்ந்தோம்னு சொல்லிக்கிறதுல என்ன அர்த்தம் என மனதில் தோன்றியதை சொன்னேன். ஆமா சார். நீங்க சொல்றது சரிதான். இது போதும் சார். இதுக்குமேல கேக்கப்படாது என்றார் மனிதர் உணர்ச்சி வசப்பட்டு.

மனம்விட்டுப் பேசியதில் அவருக்கு ஒரு திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். முகம் இப்போது அமைதியாகக் காணப்பட்டது. சரி சார்..பாக்கலாம் என்று முடித்தவராய் கையை நீட்டினார். பிடித்துக் குலுக்கினேன். பாக்கலாம். பை..! அவர் தலையாட்டியவாறு மெல்ல நடந்து செல்வதைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு நிற்கையில், என் மனைவியின் முகத்தை மனது சட்டென்று போட்டுக்காட்டியது. காய்கறிக்கடைப் பக்கம் வேகமாகத் திரும்பினேன்.

**

சின்னதாக ரெண்டு . .

பூசித் தடவி.. போற்றிப்போற்றி..

போகிற இடம் தெரியாதென்பதால்
போகாதிருக்க முடியாது
இதற்கிடையில் ..
தெவிட்டாத அலங்காரம்
தீவிர கண்காணிப்பு – ஒருநாள்
நெருப்பு கொஞ்சவிருக்கும் மேனிக்கு

**

சிட்டாக ஒரு சிந்தனை

சிட்டுக்குருவிக்கான நாளில் உட்கார்ந்து
சிந்தித்தாயிற்று கொஞ்சநேரம்
எட்டி உயர்ந்திருக்கிறது பால்கனிப்பக்கம்
தட்டுத்தட்டாய் கிளைபரப்பிக் கீழ்வீட்டுமரம்
வெட்டச்சொல்லிடவேண்டியதுதான் இன்றைக்கு
தட்டில் வடாமும் காயமாட்டேன் என்கிறது ..

**

சொல்வனத்தில் ’பின்னிரவின் நிலா’

‘சொல்வனம்’ இணைய இதழில் (இதழ்:186, தேதி:8-3-2018) என் சிறுகதை ‘பின்னிரவின் நிலா’ வெளிவந்துள்ளது. வாசகர்களை சொல்வனம் இணையதளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.

லிங்க்: https://solvanam.com/?p=51708

நன்றி: சொல்வனம்

**

தொடர்ந்து வரும் அப்பா

இல்லை என்றானபின் மேலும்
இருக்க ஆரம்பித்தார் மனதில்
இப்போதெல்லாம் என்னில்
அவ்வப்போது ஒரு சிந்தனை
ஆறமாட்டாமல் வருகிறது
திரும்பிவந்து மீண்டும் சிலநாள்
இருக்கமாட்டாரா நம்மோடு
அந்தக்காலம் போலவே இரவு
ஆகாரம் முடிந்த கையோடு
ஆகாயத்தில் நிலாவும்
அதன்கீழே அப்பாவும்
தோழர்களாய்த் துணைவரக்
காலார நடக்கலாமே
கதைகதையாய்ப் பேசலாமே
ஆல் இந்தியா ரேடியோவில்
அருணாச்சலத்தின் நாதஸ்வரத்தை
ஆற அமர உறங்காதிருந்து
ஆர்வமாய் ரசிக்கலாமே
. . .
அப்பா .. ?

*

உங்களுக்குத்தான் தெரியுமே ..

டெல்லியில் குளிர் அகன்று, கோடை கால் பதித்திருக்கும் காலைப்பொழுதொன்றில் கனாட்ப்ளேஸ் ஒரு ரவுண்டு போய்வரலாம் என ஆட்டோவில் ஏறினேன். ரேட் சம்பந்தப்பட்ட வழக்கமான வார்த்தைப் பரிமாற்றத்திற்குப்பின் வண்டியில் உட்கார, ஆட்டோ கிளம்பி ட்ராஃபிக்குக்குள் வித்தைகாட்டி முன்னேறியது. ஓட்டுனர் பேசும் மூடில் இருந்தார். ’மூணுமாசமாச்சு வண்டியைத்தொட்டு. இதுதான் முதல் சவாரி’. வண்டி ரிப்பேரா என்று கேட்டதற்கு ’இல்ல சார். ஒடம்பு சரியில்லாமப் போயிருச்சு..’ என்றார் சோகமாக. அப்போதுதான் கவனித்தேன். ஹோலிப்பண்டிகைக்குப் பின் டெல்லியே ஸ்வெட்டரைக் கழட்டித் தூக்கி எறிந்துவிட்ட நிலையில், இன்னும் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு வண்டியில் உட்கார்ந்திருக்கிறார். ‘வண்டி கிடக்கட்டும் உங்க உடம்பைக் கவனிச்சுக்கவேண்டாமா. அதுதானே முக்கியம்?’ என்றேன். மேலும், ’மகன் கூட இருந்து பாத்துக்கறான்ல ?’ – கேட்டேன். விரக்தியை உருண்டையாய் தொண்டையில் விழுங்கி, ’ஆப்தோ ஜான்த்தே ஹை(ன்)!’ என்றார். சற்றே திடுக்கிட்டேன். நானே ஓரிடத்தில் இல்லாமல் ஊர்சுற்றுபவன். நாடோடி. இவரை அறிந்தவனுமில்லை. ’உங்களுக்குத்தான் தெரியுமே’ என்கிறாரே.. எனக்கென்ன தெரியும் என்று நினைத்துவிட்டார் எனக் குழம்பியவாறு, ’என்ன சொல்கிறீர்?’ என்றேன். பதில் சொன்னார்:

ஆப் சஹி ஹை(ன்)
துனியா பி சஹி ஹை(ன்)
ஃபிர் பி ..
கோயி கிஸிகா நஹி ஹை(ன்)

நீங்கள் சரி
உலகமும் சரிதான்
ஆனால் ..
யாரும் யாருக்காகவும் இல்லை

என்று தத்துவமாய்த் தெறித்தார். ஓ! கவிஞரல்லவா வந்திருக்கிறார் ஓட்டுனராக.
கொஞ்சம் யோசித்து ’உண்மைதான் நீங்க சொல்றது’ என்றேன். சீட்டில் கோணலாக உட்கார்ந்துகொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவர், ட்ராஃபிக் விலகிக் கொடுக்க, வேகமெடுத்தார். சாதாரண மனிதர்கள், வாழ்வின் ஏற்ற இறக்கங்களில், சுக துக்கங்களில் தினமும் விழுந்துவிழுந்து எழுந்திருப்பவர்கள். அன்றாடப் போராட்டங்களில் அடிக்கப்பட்டு, நிமுக்கப்பட்டுப் புடம்போடப்படுபவர்கள். அனுபவம் தத்துவமொழியாகப் பேசுகிறது அவர்களது வாயிலிருந்து.

டெல்லியின் மெட்ரோவையும், DTC எனப்படும் டெல்லி போக்குவரத்துக்கழக பஸ் சர்வீஸையும் தவிர்த்துப் பார்த்தால், பொதுமக்கள், அதாவது ஸ்கூட்டர், கார்போன்ற வாகனமில்லா அசடுகள் தினமும் முட்டி மோதவேண்டியது ஆட்டோக்காரர்களிடம்தான். மெட்ரோ ஸ்டேஷன்களிலும், மற்ற இடங்களின் குடியிருப்பு மற்றும் சந்தைப் பகுதிகளிலும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இதுவெல்லாம் போதாதென்று இப்போது எலெக்ட்ரி ரிக்ஷாக்கள் பிரபலமாகியிருக்கின்றன. ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன், டெல்லியின் தீவிர காற்றுமாசுக் குறைப்பு நடவடிக்கைகளின் பலனாகத் துவக்கப்பட்டவை. பாட்டரியில் இயங்குவதால் சத்தமே இல்லாமல் சாலையில் கடந்துவிடுகிறது. காற்று மாசும் இல்லை. ஏற்கனவே இங்கு ஆட்டோக்கள் இயற்கைவாயுவினால்தான் இயக்கப்படுகின்றன. இருந்தும், டெல்லியில்தான் காற்றுமாசு அதிகம் எனப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். காற்றுமாசிற்குத் தலைநகரின் சுற்றுப்பகுதிகளின் முரட்டுத்தனமான தொழில்மயமாக்கமும் முக்கிய காரணம் என்பதை வசதியாக மறந்துவிட்டு அளந்துகொண்டிருப்பார்கள்.

இந்தமுறை டெல்லி பயணத்தின்போது, நாங்கள் குடியிருக்கும் தலைநகரின் கிழக்குப்பகுதியில் எலெக்ட்ரிக் ரிக்ஷாவில் அடிக்கடி பயணம் செய்துபார்த்தேன். சென்னையின் ஷேர்-ஆட்டோ மாதிரி, பொதுவாக பத்து ரூபாய்- ஒரு சவாரி என்று வாங்கிக்கொள்கிறார்கள்; சுமார் ஒரு கி.மீ. தூரம்வரை. தூரம் அதிகமானால் இருபது, முப்பது எனக் கேட்பதும் உண்டு. சத்தமில்லாமல், புகையில்லாமல் வசதியாக இருக்கிறது. எலெக்ட்ரிக் ரிக்ஷாவின் வருகைக்குப் பின், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர்களின் கதை அதோகதியாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. மூலைக்கு மூலை சோகத்துடன் காலிவண்டியுடன் நிற்கிறார்கள். சவாரிகள் அவர்களிடம் வரத் தயங்குகிறார்கள்.

ஒரு நாள் மாலை, அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய்வரலாம் என குடியிருப்பு வளாகத்தின் முகப்புவாயிலுக்கு வந்தேன். என் தலையைக் கண்டதும் மெல்லப் போய்க்கொண்டிருந்த எலெக்ட்ரிக் ரிக்ஷா தயங்கி நின்றது. கூடவே வயதான சைக்கிள் ரிக்ஷாக்காரர் ஒருவரும் அருகில் கொண்டுவந்து நிறுத்தி முகத்தைப் பார்த்தார். சரி, சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொள்வோம். மெதுவாகப் போகட்டும் அவசரம் ஒன்றுமில்லை என்று நினைத்து ஏறினேன். பேச்சுக்கொடுத்தேன். என்ன இது, இந்த குறைந்த தூரத்துக்கு இருபது, முப்பது என்கிறீரே. அந்தவண்டிக்காரர் (எலெக்ட்ரிக் ரிக்ஷா) பத்துரூபாய்தானே வாங்குகிறார் என்றேன். அதற்கு அவர், ‘ஓ தோ பேட்டரிவாலா ஹை ஜி! ஹமே தோ ஷரீர் ஸே மெஹ்னத் கர்னா பட்த்தா ஹை’ (அது பேட்டரிவண்டி ஐயா. எங்களுக்கு உடம்பினால் உழைக்கவேண்டியிருக்கிறதே) என்றார் பரிதாபமாக. அவரைப் பார்த்தேன். 65 வயதிருக்கலாம். நலிந்த உடம்பு. இந்த வயசான காலத்தில், பொழுதெல்லாம் மிதி மிதி என்று சைக்கிள்ரிக்ஷாவை மிதித்து உழைத்து சம்பாதிக்கும் மனிதர். மின்சக்தியும், மனித வியர்வையும் ஒன்றா? சரீர உழைப்புச் செய்து சம்பாதிப்பவருக்குப் பணம் சற்றுக்கூடுதலாகக் கொடுப்பதில் நியாயம் இருக்கிறது. ’ஆப் கி பாத் சஹி ஹை’ (நீங்க சொல்றது சரிதான்) என்றேன்.

வண்டிபோய்க்கொண்டிருந்தது. ஊர்ல எலெக்ட்ரிக் ரிக்ஷா அதிகமாகியிடுச்சே.. உங்களோட தினப்படி வருமானமெல்லாம் இப்போ எப்படி? என்றேன். அதை ஏன் கேக்குறீங்க. சவாரிக்காக நாங்க மணிக்கணக்காக் காத்திருக்க வேண்டியிருக்கு. ஒங்கள மாதிரி ஒன்னு ரெண்டு பேருதான் வர்றாங்க. முன்னே கொடுத்த பணத்தில கொறச்சிகிட்டுத்தான் கொடுக்கறாங்க.. நாங்க எப்படித்தான் பொழக்கிறது சொல்லுங்க என்றார். கஷ்டந்தான். நீங்க டெல்லிதானா, எந்த ஊரு? எனக் கேட்டதற்கு பிஹார்ல இருக்கு எங்க கிராமம். அங்கேயிருந்து பொழப்புக்காக டெல்லிவந்து பத்து வருஷமாகுது..ஏதோ ஓடிக்கிட்டிருக்கு. என்றார். குடும்பம்? ’பொண்டாட்டி அக்கம்பக்கத்துல வீட்டு வேலக்குப்போயி ரெண்டுகாசு சம்பாதிக்கிறா. பையன் ஸ்கூல்ல கொஞ்சம் படிச்சான். பதினாறு வயசாகுது. வேறொரு சர்க்கார் ஸ்கூல்ல கூட்டிப்பெருக்கிற வேல கெடச்சிருக்கு’. ’பொண் கொழந்த இல்லயே’ என்றேன் கவலையுடன். ’ஒரு பொண்ணு. மூத்தது. கட்டிக்கொடுத்திட்டேன்’ என்றார் திருப்தியுடன். நல்லவேளை, ஒங்களோட பாதிக் கஷ்டத்தை ஆண்டவன் தீத்துட்டான் என்றேன். ’ஹா(ன்) ஜி. காலயில எழுந்து முகம் கழுவியதும், அந்த ’ஊப்பர்வாலா’வத்தான் ரெண்டு நிமிஷம் நெனச்சுக்குறேன். எனக்குத் தெரிஞ்சமாதிரி ஏதோ ஒழச்சுத்தான் சாப்டுறேன். யாரயும் ஏமாத்தல, கெட்டகாரியம் செய்யல’ என்றார் குரல் தழதழக்க.

இந்தியா முழுதும் பெருகிக் கிடக்கின்றனர் ஏழை ஜனங்கள். அதிலும் நகரங்களுக்குப் பிழைப்பு தேடிவரும், ஒரு வேலையையும் முறையாகச் செய்வதறியா கிராமத்து ஏழைகளின் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. முன்பெல்லாம் டெல்லியின் எண்ணற்ற மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் இத்தகைய ஏழைகள் கொத்துக்கொத்தாக உட்கார்ந்திருப்பதை, படுத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் முதியவர்கள், (வடநாட்டு கிராமவழக்கப்படி முக்காடுபோட்டுக்கொண்டு) கற்களை அடுக்கி, விறகுகளைச் செருகி, நசுங்கிய அலுமினியப் பாத்திரங்களில் எதையாவது சமைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்கள், உடம்பில் சரியாகத் துணியில்லாமல் அங்குமிங்குமாக அலையும் குழந்தைகள் என சோகத்தின் விதவிதமான உருவங்கள். பெரும்பாலும் பக்கத்து மாநிலங்களான உத்திரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானாவிலிருந்து நகரில் பிழைப்புதேடிவந்து செய்வதறியாது திகைக்கும் அபலைகள். இந்தமுறை டெல்லி திரும்பியபோது, சிலமாறுதல்களைக் காண்கிறேன். மேம்பாலங்களின் அடிப்பகுதியில் சாலையோரமாக இரும்புக்கிராதிபோட்டு, உள்ளே செடிகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறது முனிசிபல் நிர்வாகம்.

சரி, திக்கற்ற இந்த அபலைகள் எங்கே போனார்கள் ? நகரின் உட்பகுதிகளுக்குள் சிறுகூட்டமாக நகர்ந்து, அவ்வளவு பிரதானமாக இல்லாத சிறு சாலையோரங்களில், பாலித்தீன், தார்ப்பாலின் எனக் கிடைப்பதைக்கொண்டு சிறிய முக்கோண டெண்ட்டுகளைப் போட்டுக்கொண்டு குடியேறியிருக்கிறார்கள். அதே ஏழ்மை, முகத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் துக்கம். தினசரி சோத்துக்கான தொடரும் போராட்டம், வேதனை. அந்தக் குடிசைகள் முன்னும் சில சமயம் எரிகிறது அடுப்பு. கொதிக்கிறது ஏதோ அந்த ஏழைகளின் பாத்திரங்களிலும், அவ்வப்போதாவது.

**