Melukote Temple மேலக்கோட்டை பயணம் (பகுதி 1)

”பெங்களூரிலா இருக்கிறீர்கள்? மேலக்கோட்டை போய்வந்தீர்களா? என்ன? இன்னும் போகவில்லையா? அவசியம் ஒரு தடவை குடும்பத்தோடு போய்ட்டு வந்திருங்க சார். ராமானுஜர் 12 வருஷம் அங்கே இருந்திருக்கார். திருநாராயணபுரம்னு அந்த ஸ்தலத்துக்கு பேரு..!” என்றெல்லாம் என்னை சந்திக்கும்போதெல்லாம் சொல்லித் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார் ஒரு நண்பர் டெல்லியில். சரி, ஒரு ட்ரிப் போயிட்டுவந்துடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொள்வேன்.

கடந்த வாரம் என் பெண்ணிற்கு சேர்ந்தாற்போல் விடுமுறை. வெள்ளிக்கிழமையில் புறப்படலாம் எங்கேயாவது என்றாள். மேலக்கோட்டை! மணியடித்தது மனம். பெங்களூரிலில் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து. சுமார் 150 கி.மீ. தூரத்திலிருக்கும் அந்த ஊருக்கு, மைசூர் ரோடில் மாண்ட்யா போய்ப் போகலாம் எனத் தெரியவந்தது. கார் காத்திருக்கிறது. ஒரு டிரைவரை ஏற்பாடு செய்தோம். வந்துவிடப்பா காலையில் 6 ½ மணிக்கு என்று சொல்லியாயிற்று. வழக்கம்போல் லேட்டாக ஓட்டுனர் வர, ஒருவழியாக காலை 7 மணிக்கு பெங்களூரின் ஹென்னூர் விட்டுப் புறப்பட்டோம். 8 மணிக்குள் பெங்களூர் அவுட்டர் போய்விட்டோம். இருந்தும் பஸ்களும் பெரிய ட்ரக்குகளும் சாலையை இடது வலதாக மேய்ந்துகொண்டிருந்தன. வோக்ஸ்வாகனை 100-க்கு மேல் சீறவிட்டு அவைகளுக்குள் புகுந்து வெளியேறி மாண்ட்யா நோக்கி முன்னேறினோம். பிதாதி (Bidadi), ராம்நகர், மத்துரு (Madduru) ஆகிய ஊர்களைக் கடந்து 9.35-க்கு மாண்ட்யா வந்துசேர்ந்தோம். காஃபி குடிக்கக்கூட கீழே இறங்கவில்லை.

ஜிபிஎஸ் போட்டுப்பார்த்ததில், மாண்ட்யாவிலிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மேலக்கோட்டை போகிறது என்றது. மாண்ட்யாவிலிருந்து 36 கி.மீ. தூரம்.(மைசூரிலிருந்து வடக்காக 51 கி.மீ.-ல் இருக்கிறது). நாங்கள் பயணித்த சாலை முதலில் குறுகலாகி பயமுறுத்தியது. பின் விசாலமாகிப் பளபளத்தது புதிதாகப் போடப்பட்டிருந்த தார் சாலை. எங்களது காரும் புத்தம்புதிது. கேட்கவா வேண்டும்? போக்குவரத்து நெரிசலில்லாத மலைப்பகுதியின் வழுவழு சாலையில் இருபுறமும் காடுகள் சூழ்ந்திருக்கக் சீரான வேகத்தில் காலையில் பயணித்தது மனதுக்குப் பிடித்திருந்தது. பெங்களூரின் கான்க்ரீட் குவியலிலிருந்து, போக்குவரத்து நெருக்கடிகளிலிருந்து தற்காலிக விடுதலை. இடையிடையே தென்பட்டன குக்கிராமங்கள். மாடுகள், ஆடுகள், கோழிகள், சாலையின் இருமருங்கிலும் யூகலிப்டஸ் மரங்கள் என இயற்கைச் சூழல் ரம்யமாயிருந்தது. 45 நிமிடத்திற்குப்பின் வந்துசேர்ந்தோம் நாங்கள் தேடிய ஊருக்கு. யதிராஜர் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை தன்னகத்தே 12 வருடங்களுக்கு மேலாக வசியப்படுத்தி வைத்திருந்த முக்கிய வைஷ்ணவ ஸ்தலமாக அறியப்படும் மேலக்கோட்டை. (கன்னட மொழியில் மேலுக்கோட்டே(Melukote). கடல்மட்டத்திலிருந்து 3589 அடிக்கு மேல், க்ரானைட் குன்றுகளின் இடையே குளுகுளுவென ஒரு அழகுப் பிரதேசம். யாதவகிரி என்று கிருஷ்ணர் காலத்தில் அழைக்கப்பட்ட மலைப்பகுதி. ராமானுஜர் காலத்து வனம் சூழ்ந்த கிராமம், தற்போது மாண்ட்யா மாவட்டம், பாண்டவபுரா தாலுக்காவில் ஒரு சிறிய டவுனாக உருமாறியிருந்தது.

கால ஊர்தியில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றுவருவோம். 11-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இந்து சமயம் சைவம், வைஷ்ணவம் எனச் செங்குத்தாகப் பிரிந்திருந்தது. அதில் ஒன்றும் குற்றமில்லை. ஆனால் சோழமன்னன் ஒரு சைவமதத் தீவிரவாதி! சிவன் தான் கடவுள். மற்ற தெய்வத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு எதிரே நில்லாதே! வைஷ்ணவர்களை விரட்டிவிரட்டி அடித்தான். நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு அவனது பிரதேசத்தில் யாரும் உலவக்கூடாது. அவனுடைய அட்டூழியங்கள் தாங்கமுடியவில்லை. நித்யகர்மாக்களை செவ்வனே தொடரவென, வைஷ்ணவத் துறவியான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தைவிட்டு வெளியேறி, தம் சிஷ்யர் சிலரோடு தற்போதைய கர்னாடகாவின் மேலக்கோட்டைப் பகுதிக்கு வந்தார். அந்தப்பிரதேசத்து மக்கள் அப்போது மழையின்றி வறுமையில் தவித்துவந்தார்கள். மேலக்கோட்டைக்கு அருகிலிருந்த தொண்டனூருக்கு முதலில் சென்ற ராமானுஜர், அந்த ஊர்க் குளங்களெல்லாம் கேட்பாரின்றி வற்றிக் கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தார். அப்பாவி மக்களுக்கு முதலில் ஏதாவது செய்யமுயல்வோம். ஆண்டவனைப் பிறகு கவனிக்கலாம் என கிராம மக்களைச் சேர்த்துக்கொண்டு நீர்வளச் சீரமைப்பில் ஈடுபட்டார். தொண்டனூர் நம்பி என்னும் சீடரின் தலைமையில் கடும் உழைப்புக்குப்பின், கல்யாணிகுளம் என்கிற பெரியகுளத்தை வெட்டி, பக்கத்துக்கால்வாய் வழி நீர் வந்துசேர வழி செய்தார். பருவமழை வந்தால் நிரம்ப என ஏனைய சிறுகுளங்களும் தூர்வாரப்பட்டன. ஸ்ரீரங்கத்து சாமியின் அன்பும், சேவையும் பாமர மக்களை மகிழ்வித்தன. அவர்கள் சற்று ஆசுவாசப்பட்டவுடன், மேலக்கோட்டைக் கோவில் பற்றி விஜாரித்தார் உடையவர். சுல்தானின் படைகளால் சூறையாடப்பட்டு சிதைந்துபோய்விட்டது என்றனர். ’’சாமீ! எங்களுக்குக் கும்பிடக்கூட சாமி இல்ல!’’ என்றனர் சோகமாய், அந்த ஊர் ஜனங்கள்.

புதர்களும் புற்றுக்களுமாய் மண்டிக்கிடந்த வெளியில் பகலெல்லாம் சுற்றித் திரிந்தார் ராமானுஜர். பாழடைந்த பெருங்கோவிலின் சிதிலங்கள் ஆங்காங்கே தெரிந்தன. அந்தப் பகுதியின் வேறுசில கிராமங்களிலும் மேலும் சில கோவில்கள் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த கதையை ஊர் மக்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார். அருகில் ஆண்டுகொண்டிருந்த சிற்றரசனை சந்தித்தார் அவர். ராமானுஜர்பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது மிகுந்த மதிப்புகொண்டிருந்தான் மன்னன். அவனிடம், மேலக்கோட்டைக் கோவிலையும் மற்ற சிதிலமடைந்த கோவில்களையும் மீட்டுப் புதிதாய்க் கட்டித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் உடையவர். மன்னன் அதற்கு உடன் இணங்கினான். முதலில் காணாமற்போயிருக்கும் மூலவர் விக்ரஹத்தைக் (செலுவநாராயணர்) கண்டுபிடிப்போம் என எண்ணியவன், தன் படைவீரர்களை விட்டு மேலக்கோட்டை கோவிலின் சிதிலங்களை அலசச் செய்தான். அவர்களும் ராமானுஜரின் மற்றும் கிராமத்துப்பெரியவர்களின் உதவியோடு தேடினர். மேலக்கோட்டை மூலவரான திருநாராயாணப் பெருமாள் பெரும்புதரும் புற்றுமாய்ப் உயர்ந்திருந்த ஒரு பகுதியில் மறைந்து கிடப்பதைக் கண்டனர். சேதமேதுமின்றி பெருமாளை வெளியே எடுத்து மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். மன்னன் உற்சாகமானான். சொன்னபடி மேலக்கோட்டை செலுவநாராயண ஸ்வாமி கோவிலை சிறப்பாகக் கட்டி முடித்தான். இதைப்போலவே அடுத்த சில ஆண்டுகளில் தொண்டனூர், பேலூர்(Belur), தலக்காட் (Talakad), கடக் (Gadag) ஆகிய ஊர்களில் நாராயணர் திருக்கோவில்களை மீண்டும் கட்டுவித்தான். விஷ்ணு கோவில்களை கொடுத்த வாக்குப்படி அவன் சிறப்பாகக் கட்டிக் கொடுத்ததால், மனமகிழ்ந்தார் ராமானுஜர். அவனுக்கு விஷ்ணுவர்தன் என்கிற பெயரைச் சூட்டி சிறப்பித்தார். பிற்காலத்தில் அவன் அவ்வாறே அழைக்கப்பட்டான்.

Sri Selvanarayana Swamy Temple, Melukote

மேலக்கோட்டைக்கு வந்த ராமானுஜர், புதிதாகக் கட்டப்பட்ட செலுவநாராயணர் கோவிலில் பூஜைக்கிரமங்களை ஏற்படுத்தி மூலவருக்கு நித்ய பூஜைகளை ஆரம்பித்துவைத்தார். மக்கள் பெருமகிழ்வுடன் சாமி கும்பிட்டனர். மூலவர் வந்துவிட்டார். உத்சவர் இல்லாமல் ஒரு கோவிலா? எங்கே போய்விட்டார் அவர்? ராமானுஜர் பெரிதும் விசனப்பட்டார்.ஒரு இரவில் உடையவரின் கனவில் தோன்றிய உலகலந்த பெருமாள், தான் சுல்தானின் அரண்மனையில் இருப்பதாகச் சொல்லி மறைந்தார்.  அவ்வளவுதான் . இருப்புக்கொள்ளவில்லை ராமானுஜருக்கு. சுல்தானை சந்தித்தே ஆகவேண்டும். தன் சிஷ்யர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு டெல்லிக்கு நெடும்பயணம் மேற்கொண்டார், தன் வயோதிகம் பற்றிய சிந்தனை ஏதுமின்றி.

ராமானுஜரைப் பரபரப்புக்குள்ளாக்கிய ’செல்வப்பிள்ளை’ என்று அழைக்கப்படும், செலுவநாராயண ஸ்வாமி கோவிலின் இந்த உத்சவர் விக்ரஹம் புராண காலத்தோடு தொடர்புடையது. இதன் மஹாத்மியமே வேறு! இந்த உத்சவ மூர்த்தியின் ஆரம்பப் பெயர் ‘ராமப்ரியா’. ஏனெனில் ராமபிரானால் முதலில் பூஜிக்கப்பட்டது இது. அவருக்குப்பின் வந்த சூர்ய வம்சத்தினராலும் தொடர்ந்து வணங்கப்பட்டுவந்தது. பிறகு இது சந்திரவம்சத்திற்கு கைமாறியது. கிருஷ்ணராலும், ஏனைய சந்திரவம்சத்தினராலும் பூஜிக்கப்பட்டது. ராமனாலும், கிருஷ்ணனாலும் பூஜிக்கப்பட்ட சிறப்புடைய மூர்த்தி இந்த செல்வப்பிள்ளை ! இதை விட்டுவிட்டு எப்படி நிம்மதியாய் இருக்க முடியும் ராமானுஜரால் ?

**

க்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது.

முதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோரும் கைகொடுக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்து அசத்தியது. இந்திய தரப்பில் ஹர்தீக் பாண்ட்யா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவுக்கு 2. தனது இரண்டாவது கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் பும்ராவுக்குக் கிடைத்தது ஒரு விக்கெட் தான். புவனேஷ்வரையும் அஷ்வினையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள்.

பதில் கொடுக்க இறங்கிய இந்திய பேட்ஸ்மன்களை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான க்றிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால்(Jake Ball), லியாம் ப்ளங்கெட் ஆகியோர் வேகத்தினாலும், துல்லியத்தினாலும் கடுமையாக சோதித்தார்கள். கல்கத்தாவின் மைதானம் அவர்களுக்கு குஷியூட்டியதுபோலும். அளவுகுறைந்த பந்துகள் (short pitched balls) வேகம் காட்டி, முகத்துக்கு முன்னே எழும்பித் திணறவைத்தன. இந்தத் தொடரின் இந்திய அபத்தம் நமது ஆரம்ப ஆட்டக்காரர்கள். அவர்களை ஆட்டக்காரர்கள் என்பதை விடவும் ஓட்டக்காரர்கள் எனச் சொல்லலாம். அதாவது மைதானத்தைவிட்டுவிட்டு ஓடுவிடுபவர்கள்! ஷிகர் தவணுக்குப்பதிலாக இறங்கிய ரஹானே எப்போது வந்தார், எங்கே சென்றார் எனவே தெரியவில்லை. போதாக்குறைக்கு அளவுகுறைந்து வேகம் எகிறிய ஜேக் பாலின் பந்தைத் தூக்குகிறேன் பேர்வழி என்று புஸ்வானம் கொளுத்தினார் கே.எல்.ராஹுல். பந்து விக்கெட்கீப்பருக்கு மேலே சிகரம் தொடமுயன்று கீப்பரின் கையில் சரணடைந்தது. ரஹானேயும் ராஹுலும் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில் முரளி விஜய்யையே ஒரு-நாள் போட்டியிலும் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணம் தலைகாட்டியது.

மூன்றாவதாக இறங்கிய கேப்டன் கோலி சில நல்ல ஷாட்டுகள் – இடையிடையே இங்கிலாந்து ஃபீல்டருக்குக் கேட்ச்சிங் பயிற்சி கொடுக்க முயற்சி என்று பொழுதை ஓட்டினார் முதலில். பிறகு சுதாரித்து அரைசதமெடுத்து நம்பிக்கை ஊட்டிய தருணத்தில், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துவிட்டாரா கேப்டன்! ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ! அதுவும் ஒரு கனவானது. இங்கிலாந்து பௌலர்கள் நனவாக்க விடவில்லை. 25 ரன் தான் முன்னாள் தலைவரால் முடிந்தது.

விடாது போராடிய பாண்ட்யா-கேதார்:
அடுத்த முனையில் கேதார் கவனித்து ஆடி, பந்துக்கு ஒரு ரன் என்கிற வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தார். ஹர்தீக் பாண்ட்யா கேதார் ஜாதவுடன் ஜோடி சேர, இந்தியா இலக்கை இனிதே நெருங்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பார்ட்னர்ஷிப் அருமையாக அமைய, வெற்றிக்கற்பனைக்கு உயிரூட்டப்பட்டது. இந்த ஜோடியை எப்படியும் பிரித்தாலே வெற்றி என்கிற நிலையில் இங்கிலாந்து வெகுவாக முனைந்தது. இருவரும் வேகமாக ஓடி ரன் சேர்ப்பது, அவ்வப்போது ஒரு பெரிய ஷாட் என வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அதிரடியாகக் கடந்தார் பாண்ட்யா. ஆனால் பாண்ட்யாவை 47-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் நீக்கிவிட, இங்கிலாந்தின் முகம் மலர்ச்சிகண்டது. வெற்றியின் வாடிவாசல் அதற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதோ!. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா? பெவிலியனில் தோனி, கோலி, ஜடேஜா, பாண்ட்யா என வீரர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தயாராக, முதல் இரண்டு பந்துகளை அனாயசமாக சிக்ஸர், பௌண்டரி எனத் தூக்கி ஜல்லிக்கட்டுக் காளையாகத் தூள் கிளப்பினார் கேதார். ரசிகர்கள் உற்சாக மழையில். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை ரன் தராத டாட் பந்துகளாய் (dot balls) வீசி, இந்தியாவை இறுக்கினார் வோக்ஸ். வேறுவழியில்லை என 5-ஆவது பந்தை கேதார் உயரமாகத் தூக்கப்போய், அந்த ஷாட்டிற்காகவே வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஃபீல்டரான சாம் பில்லிங்ஸ் (Sam Billings) கேட்ச்சை லபக்கினார். 90 ரன் எடுத்த கேதார் சோர்ந்த முகத்துடன் வாபஸ் பெவிலியனுக்கு. கடைசி பந்து புவனேஷ்வருக்கு. ம்ஹூம். புண்ணியமில்லை. இந்திய இன்னிங்ஸ் 316-லேயே முடிவுகண்டது. தொடர் முழுதும் இங்கிலாந்து காட்டிய கடும் உழைப்புக்குப் பரிசாக கல்கத்தா தந்தது ஐந்து ரன்னில் ஆறுதல் வெற்றி.

3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, அடித்து விளையாடி அரைசதமும் கண்ட பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன். கேதார் ஜாதவ் தொடர் நாயகன். 2-1 என்கிற கணக்கில் ஒரு-நாள் தொடர் இந்திய வசமானது. இந்தத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிகளாக ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவின் சிறப்புப் பங்களிப்புகளைச் சொல்லலாம். இந்தியா இன்னும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடர்களில். ஆனால் இந்தியாவின் பரிதாப ஆரம்ப ஜோடியை என்னதான் செய்வது?

**

க்ரிக்கெட்: இந்திய வெற்றியில் யுவராஜ் – தோனி ஷோ !

ஒதிஷாவின் கட்டக்கில் (Cuttack) நேற்று (19-1-17) நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்-தோனி ஜோடியின் மறக்கமுடியாத மட்டையாட்டம், கடுமையாகப் போராடிய இங்கிலாந்துக்கெதிராக, இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

முதலில் பேட் செய்த இந்தியா வழக்கம்போல் தடுமாறியது. ராஹுல், தவண், கோஹ்லி ஆகிய புலிகள் ஆட ஆரம்பிக்கும் முன்னரே, துல்லிய வேகம் காட்டிய இங்கிலாந்தின் க்றிஸ் வோக்ஸினால் (Chris Woakes) பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியா 25, மூணு விக்கெட் காலி! இந்த நேரத்தில், அந்தக் காலத்திய கனவு ஜோடி களத்தில் இறங்கியது. யுவராஜ் சிங்-எம்.எஸ்.தோனி! ரசிகர்களிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனோதானோவென 30, 40 அடித்து இவர்களும் மூட்டை கட்டிவிடுவார்கள் என்கிற நினைப்புதான் மேலோங்கியிருந்தது. இந்தியா 300-ஐத் தொட்டுவிடுமா? தொட்டாலும் போதுமா இங்கிலாந்தை வீழ்த்த? விடைதெரியாக் கேள்விகள் காற்றில் மிதந்தன.

யுவராஜிற்கு இதுவே கடைசி சான்ஸ். இதில் அல்ப ஸ்கோரில் வீழ்ந்தால் அடுத்த மேட்ச்சில் இல்லை. இனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. வாழ்வா, சாவா? இன்று நான் என்ன செய்யப்போகிறேன்? பஞ்சாப் வீரரின் மூளை கதகதத்து விடை தேடியது. வழக்கத்துக்கு மாறாக ஜாக்ரதையான ஆட்டம். அடுத்த முனையிலோ, அதைவிட மிதமாகன ஆட்டத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் கேப்டன் தோனி. இங்கிலாந்தின் குஷி வெளிச்சம் காட்டியது: ஃபார்மில் இல்லாத இவர்கள் எந்த நிலையிலும் அவுட் ஆகிவிடுவார்கள் !

ஆனால், கட்டக்கின் மாலைப்பொழுது வேறொரு கதை எழுத ஆரம்பித்திருந்தது. காலம் யுவராஜ், தோனியை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்து காட்ட விரும்பியதுபோலும். அரைசதத்தை நிதானமாகக் கடந்த யுவராஜ், தன் வழக்கமான ஷாட்டுகளுக்குத் திரும்பினார். தோனியும் அவ்வப்போது விளாசிப் பார்த்தார். 30 டிகிரி மிதமான வெப்பத்தில், கட்டக் கூட்டம் கூல்ட்ரிங்ஸ், ஐஸ்க்ரீம் ஏந்தி உற்சாகமாகி, எதிர்பார்க்க ஆரம்பித்தது: பெரிசுகள் ரெண்டும் இன்னிக்கு ஏதோ செய்யப்போறதுகள் !

அதிரடிக்குத் திரும்பிய யுவராஜ் முன்னேறி, வெகுநாட்களுக்குப்பின் சதம் கண்டார். மேலே நிமிர்ந்து சிலநொடிகள் ஆகாசத்தைப் பார்த்தார். தோனி அருகில் வந்து தட்டிக்கொடுக்க, தன் மார்பில் டார்ஜான் போல பேட்டினால் குத்திப் பெருமைப்பட்டு க்ரீஸுக்குத் திரும்பினார் யுவராஜ். (கைதட்டிப் பாராட்ட அவரது இளம் மனைவி ஏனோ மைதானத்தில் இல்லை!) பழைய யுவராஜ் கம்பீரமாய் ப்ரசன்னமாகியிருக்க, இங்கிலாந்து திடுக்கிட்டது. இதுவரை பொறுமையாக ஆடிய தோனியும் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். பௌலர்கள் வேகவேகமாக மாற்றப்பட்டனர். ஃபீல்டர்கள் இந்தக்கோடிக்கு அந்தக்கோடி எனப் பறந்தனர். பலனில்லை. பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்து இங்கிலாந்தைக் கலவரமாக்கியது.

45-ஆவது ஓவரில் இந்தியா 300-ஐத் தாண்டி சீறியது. ப்ரமாதமாக ஆடிய யுவராஜ் 150 ரன்களில் அவுட்டானார். தோனி 134 ரன்கள் (6 சிக்ஸர்கள்) எடுத்து ஸ்கோரை வெகுவாக ஏற்றிவிட்டார். பிறகு வந்த கேதார் ஜாதவ் (22), அவுட் ஆகாமல் இருந்த ஹர்தீக் பாண்ட்யா(19), ரவீந்திர ஜடேஜா(16) என பௌண்டரி, சிக்ஸராகப் படபடக்க, இந்தியா சற்றும் எதிர்பாராவிதமாக ஸ்கோரை 381 க்கு 6 விக்கெட் என உயர்த்தி, ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

கட்டக்கின் பிட்ச் பேட்ஸ்மன்களின் சொர்க்கம். பௌலர்களின் நரகம். சிறிய மைதானமாதலால் இங்கிலாந்து சவாலை ஏற்று சிறப்பாக ஆடியது. துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் (82), ஜோ ரூட் (54) மூலம் எகிற ஆரமபித்தது இங்கிலாந்து. ரன் சராசரியை 7-க்கு அருகில் ஆரம்பத்திலிருந்தே வைத்திருந்து போராடியது. இங்கிலாந்து கேப்டன் ஆய்ன் மார்கன் (Eoin Morgan) சிறப்பான எதிர்ப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது அவரிடமிருந்து ஆக்ரோஷமான ஷாட்டுகள் பௌண்டரி, சிக்ஸர் எனப் பதம் பார்த்தன. இங்கிலாந்தின் நம்பிக்கை வளர்ந்தது. ஆல்ரவுண்டர் மோயின் அலி தன் பங்கை சிறப்பாகச் செய்து ரன் வேகத்தை மேலேற்றினார். அவர் 55 ரன்னில் அவுட்டானதும் இங்கிலாந்து தடுமாற ஆரம்பித்தது. ஆயினும் மார்கன் நம்பிக்கை இழக்காது இந்திய பௌலர்களைத் தொடர்ந்து தாக்கினார். 82 பந்துகளில் சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் 49-ஆவது ஓவரில் ரன் –அவுட் ஆனார். லியாம் ப்ளன்கெட் ( Liam Plunkett) சிறப்பாக ஆடியும், டெத் ஓவர்களில் (death overs) பந்துவீசிய புவனேஷ்வர் குமாரும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் வெகு பிரயாசைப்பட்டு இங்கிலாந்தை இலக்கை நெருங்கவிடாமல் தடுத்துவிட்டனர். இறுதியில் கோஹ்லியின் இந்தியா 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரையும் கைப்பற்றியது. இடையிடையே நெருக்கடியில் இருந்த கட்டக் ரசிகர் கூட்டம், நிம்மதிப்பெருமூச்சு விட்டது !

இங்கிலாந்திடம் இந்திய பௌலர்கள் செம்மையாக அடிவாங்கிக்கொண்டிருந்தவேளையில், ரவீந்திர ஜடேஜா மிகவும் பிரமாதமாக வீசி 45 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஷ்வின் 63 ரன் கொடுத்தாலும், 3 விக்கெட்டுகளை சாய்த்தார். புவனேஷ்வருக்கு ஒன்று; பும்ராவுக்கு இரண்டு விக்கெட்டுகள். இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றவர்களை பெண்டெடுத்துவிட்டார்கள் இந்திய பேட்ஸ்மன்கள். யுவராஜ் எதிர்பார்த்தபடி ஆட்டநாயகனானார்.

கோஹ்லி & கோ., கல்கத்தாவில் தொடரின் இறுதி போட்டியை 22 ஜனவரியில் விளையாடவிருக்கிறது. கே.எல்.ராஹுல், ஷிகர் தவன் ஆகியோர் அங்கே ஏதேனும் செய்யும் உத்தேசமுண்டா ?

**

க்ரிக்கெட்: புனேயில் கோஹ்லி, கேதார் சரவெடி !

நேற்று (15-1-17), புனேயில் நடைபெற்ற முதல் ஒரு-நாள் க்ரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி, கேதார் ஜாதவ் ஆகியோரின் ரன் மழையால், இந்தியா பெரிய இலக்கைத் தகர்த்து வென்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன் ராய் அருமையாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடக்க இங்கிலாந்து குஷியானது. ’ஆடு மனமே ஆடு… இது பேட்டிங் பிட்ச்சுதான் ஆடு !’ என்று அதற்குள் பாட்டு கிளம்பியிருக்கவேண்டும். இந்தியாவின் பலம் எனக் கருதப்பட்ட அஷ்வின், ஜடேஜா ஸ்பின் ஜோடியை இங்கிலாந்தின் பேட்ஸ்மன்கள் அனாயாசமாக துவம்சம் செய்தார்கள். ஆனால் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராய், ஜடேஜாவின் ஸ்பின் ஆகாத ஒரு நேர்ப்பந்தை தாக்க முன்னே பாய, பந்து டிமிக்கி கொடுத்து தோனியிடம் தஞ்சமாகி ஸ்டம்ப் செய்யவைத்தது. ராய் 73. முதலில் மெதுவாகத் துவங்கினாலும், ஜோ ரூட் ஸ்கோரை சீராக உயர்த்த ஆரம்பித்தார். சுவாரஸ்ய மிகுதியால், ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்தை மிட்விக்கெட்டுக்குத் தூக்கப்போக, ஹர்தீக் பாண்ட்யாவின் அருமையான கேட்ச்சில் 78 ரன்னில் காலியானார். இந்திய பௌலர்கள் தடுமாறிக்கொண்டிருக்கையில், பாண்ட்யா மட்டும் சிறப்பாக வீசினார். கேப்டன் மார்கனையும், பட்லரையும் விரைவில் தூக்கி வீசி, இங்கிலாந்து மிடில் ஆர்டரைக் குலைத்தார். 300 க்குள் இங்கிலாந்தை நிறுத்திவிடலாம் என கோஹ்லி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். வெங்கலக் கடையில் யானை புகுந்ததுபோல கிடுகிடுத்து 5 சிக்ஸர்களை விளாசி 40 பந்துகளில் 62 எடுத்தார். இங்கிலாந்து ஸ்கோர் 350-ஐ எட்டிவிட, கோஹ்லியின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.

351-ஐத் துரத்த எத்தனித்த இந்தியாவின் ஆரம்பமே அபத்தம். துவக்க வீரர்கள் எப்போது வந்தார்கள், போனார்கள் என்றே தெரியவில்லை. கோஹ்லி 3-ஆம் நம்பரில் இறங்கி நிலைமையைச் சீர் செய்ய முனைந்தார். ஆனால், மறுபக்கம் பெரிசுகளான யுவராஜ் சிங்கும், தோனியும் அசட்டுத்தனமாக ஆடி அவுட்டாகிச் செல்வதை வேதனையுடன் பார்க்கவேண்டிவந்தது. இந்தியா சரிய, ஸ்கோர் 63. இழப்பு 4 விக்கெட்டுக்கள். ம்ஹூம்..! உருப்புடுகிற வழியாகத் தெரியவில்லை.

ஆனால் அடுத்து இறங்கிய கேதார் ஜாதவ் எதிர்பாராத வகையில், கோஹ்லியின் வெற்றி முனைப்புக்கு உறுதுணையாக ஆனது ஆச்சரியம். விராட் கோஹ்லி வேகம் காட்ட, கேதார் ஜாதவ் பொறுமையாக ஆடித் துணையிருப்பார் என நம்பிக்கை பிறந்த நிலையில், கேதார் தன் கேப்டனையும் அதிரடியில் மிஞ்சி புனே ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தார். விராட்டும், கேதாரும் பட்டாசு கிளப்ப, இந்திய ஸ்கோர் சீறிப்பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத இங்கிலாந்து குழம்பிக் கிறுகிறுத்தது. 5-ஆவது விக்கெட்டிற்கு 200 ரன் அதிரடியாக சேர்க்கப்பட்டது. தன் 27-ஆவது சதத்தைக் கடந்து 122 ரன்(5 சிக்சர்கள்) எடுத்திருக்கையில், அசால்ட்டாக அடித்த ஒரு ஷாட் மிட்-ஆஃபில் லட்டு மாதிரி இறங்க, கேட்ச் கொடுத்து தலையைச் சிலுப்பிக்கொண்டு வெளியேறினார் இந்தியக் கேப்டன்.

இங்கிலாந்தின் நம்பிக்கை திரும்பிவரும்போல் இருந்தது. அடுத்துவந்த ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா நிலைமையைப் புரிந்துகொண்டு நிதானமானார். எதிர்முனையில், கேதார் ஜாதவ் தன் புயல் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால் காலில் ஏற்பட்ட சுளுக்கு அவரை நொண்டவைத்து நோகவைத்தது. ஓடுவதற்கு சிரமப்பட்டு பந்தை அவ்வபோது தூக்கி அடித்து ரன் சேர்த்தார். அப்படி ஒரு முயற்சியில் 120 ரன்னில்(4 சிக்சர்கள்) கேட்ச் கொடுத்து கேதார் அவுட் ஆனதும், இங்கிலாந்தின் முகம் மலர்ந்தது.

ஆனால் அசராத பாண்ட்யா, கழுகுபோல் மறுமுனையில் காத்திருந்தார். அவ்வப்போது பௌண்டரி விளாசி இந்தியாவை வெற்றி நோக்கி செலுத்துவதில் மும்முரமாயிருந்தார். இந்த நிலையில் ஜடேஜா ஒரு சாதாரணப்பந்திலேயே கேட்ச் ஆகி விழுந்தார். 7 விக்கெட்டுகள் காலி. அஷ்வின் மைதானத்தில் இறங்குகையில், ஜெயிக்க சொற்ப ரன்களே தேவைப்பட்டது. எனினும் க்ரிக்கெட்டில் ஒன்றையும் நம்பமுடியாதே என்கிற கவலை ரசிகர்களில், குறிப்பாகப் பெண்முகங்களில் படபடப்பாய்த் தெரிந்தது. அஷ்வினும் பாண்ட்யாவும், ரிஸ்க் எடுக்காமல் சிங்கில்களாகத் தட்டி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தனர். 7 ரன் தான் தேவை என்கிற நிலையில் 48-ஆவது ஓவரின் கடைசி பந்தை திடீரென சிக்ஸருக்குத் தூக்கி ஆரவாரத்தை ஆரம்பித்துவைத்தார் பாண்ட்யா. அடுத்து வந்த 49-ஆவது பந்தின் முதல் பந்தை மொயின் அலி வீச, அஷ்வின் ’என்னாலும் முடியும் தம்பி!’ என்றார். பந்து உயர்ந்து ஸ்டேடியத்துக்குள் சீறியது; இந்தியா வென்றது.

மஹாராஷ்ட்ராவின் ரஞ்சி கேப்டன் கேதார் ஜாதவ், புனே ரசிகர்களோடு சேர்ந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த தன் வயசான பெற்றோர்முன் ஆட்ட நாயகன் விருதை வென்றது சந்தோஷம்.

விராட் கோஹ்லி இந்திய ஒரு-நாள் க்ரிக்கெட் அணிக்கு கேப்டனானபின் விளையாடிய முதல் போட்டியும் வெற்றியாக முடிந்தது. 2016-ல் ஆரம்பித்த கோஹ்லியின் சுக்ர திசை தொடர்கிறது எனத் தெரிகிறது !

**

கோஹ்லியின் கீழ் தோனி !

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பைத் துறந்தபின், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் ஒரு-நாள் தொடர் இன்று (15-01-2017) புனேயில் ஆரம்பமாகிறது. கடந்த மாதம் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து எதிரணி; ஒரு-நாள் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் அய்ன் மார்கன் (Eoin Morgan) தலைமையில்.

இந்தியாவிற்கு இரண்டு கிரிக்கெட் கேப்டன்கள் இருப்பது பொருந்தி வரவில்லை. டெஸ்ட் கேப்டனான விராட் கோஹ்லியும் ஒரு-நாள் மற்றும் டி-20 அணிகளின் தலைமையை ஏற்கப் போதிய பக்குவம் அடைந்துவிட்டதால், நான் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டேன் என்றார் இந்தியாவின் முன்னாள் கேப்டன். தோனியின் இந்திய கிரிக்கெட் அணித் தலைமை சகாப்தம் இவ்வாறாக முடிவடைந்தது. இந்தியாவின் மறக்கமுடியாத, மக்கள் மனதில் இடம்பெற்ற கேப்டன் தோனி என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கமுடியாது. அவரது தலைமைப்பண்புகளும், பக்குவமும், வெற்றி வியூகங்களும் வெகுநாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களால் ஸ்லாகிக்கப்படும்.

விராட் கோஹ்லியோ முற்றிலும் வித்தியாசமான மனிதர். தோனியிடம் காணப்பட்ட குளிர்ச்சியான சுபாவம் அரவே இல்லாதவர். ஆதலால் தோனியிலிருந்து வெகுவாக விலகிய பிம்பம் உடையவர். டெஸ்ட் கேப்டனாக அவரது உணர்ச்சிக்கொந்தளிப்புகள், வியூகங்கள், அணியைக் கையாளும் விதம், குறிப்பாக அனுபவமற்ற இளம் வீரர்களில் முகிழ்த்து நிற்கும் திறமையை ஊக்குவிக்கும் திறன் ஆகியவை ஏற்கனவே கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்களின் கவனத்துக்கு வந்துவிட்டவை. கூடவே, கடுமையான போட்டி மனப்பான்மை கொண்ட கோஹ்லி எந்த எதிரணியையும் வெகுவாக சோதிக்கும், திகைக்கவைக்கும் இயல்புகள் கொண்ட ஒரு கேப்டன். ஒரு-நாள் மற்றும் டி-20 வகைக்கிரிக்கெட்டில் அவரது கூரிய, ஆக்ரோஷத் தலைமைத் திறன் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

கோஹ்லிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு-நாள் இந்திய அணி, திறமையான வீரர்களோடு சர்வதேச விளையாட்டுக்கு திரும்பிவரும் சில வீரர்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக மிடில் ஆர்டர் அதிரடி யுவராஜ் சிங். ரஞ்சி ஃபார்மை வைத்து சர்வதேசக் கிரிக்கெட்டில் ஒருவரின் விளையாட்டு எப்படி இருக்கும் என கணிப்பது அவ்வளவு எளிதானதல்ல. எப்படி இருப்பினும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து கோஹ்லி யுவராஜை முதல் போட்டியில் ஆடவிடுவார் என எதிர்பார்க்கலாம். இதே போன்று ஷிகர் தவன், கே.எல்.ராஹுல்-உடன் துவக்க ஆட்டக்காரராக இறங்கவாய்ப்பு உள்ளது. முன்னால் கேப்டன் தோனி அனேகமாக நம்பர் 4-ல் கோஹ்லிக்கு அடுத்தபடியாக இறங்குவார் எனத் தோன்றுகிறது. தோனியின் அனுபவ பேட்டிங் பலம் சேர்க்கும். 5-ஆவதில் யுவராஜ் என்றால், 6-ஆவது இடம் மிகவும் முக்கியமானது. இந்த இடத்தில் மனீஷ் பாண்டே ஆடுவது அணிக்கு-ஒருவேளை விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பட்சத்தில்- ஒரு ஸ்திரத்தன்மையைத் தரும். ஸ்பின் போடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான கேதார் ஜாதவ் ஒருவேளை கோஹ்லியின் கணக்கில் நுழையக்கூடும். 7, 8, 9-ஆவது இடங்களில் ஹர்தீக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் இறங்குவதே உசிதம். ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சைக் கவனித்துக்கொள்வார்கள் என யூகிக்கவேண்டியிருக்கிறது.

யுவராஜ் சிங்கின் ஸ்பின் திறன் கோஹ்லிக்கு இந்தத் தொடரில் உதவலாம். டெஸ்ட் தொடரைப்போலவே, ஒரு-நாள், டி-20 போட்டிகளிலும் அஷ்வின் கோஹ்லியின் வெற்றி வியூகத்தில் முதலிடம் வகுப்பார் என்றே தெரிகிறது. அமித் மிஷ்ரா முதல் மேட்ச்சில் இருப்பாரா என்பது சந்தேகமே. இந்த ஒரு-நாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்கள் அஜின்க்யா ரஹானே, அம்பத்தி ராயுடு இல்லாதது ஆச்சரியம்.

கடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் படுதோல்வி கண்டதால், இங்கிலாந்தின் ஒரு-நாள் கதையும் அதே கோட்டில் செல்லும் என எதிர்பார்ப்பது அசட்டுத்தனம். மார்கன் தலைமையில், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), பேர்ஸ்டோ (Jonny Bairstow), பட்லர் என பேட்டிங் ஆழம் நிறைந்த அணி இது. பயிற்சிப் போட்டியில் 93 அடித்த சாம் பில்லிங்ஸையும் (Sam Billings) இங்கே குறிப்பிடவேண்டும். ஸ்பின் ஆல்ரவுண்டர்களான மோயின் அலியும், ஆதில் ரஷீத்தும்(Adil Rashid) வேகபந்துவீச்சாளர்களுக்குத் துணைநின்று இந்திய பேட்ஸ்மன்களைத் திணற அடிக்க முயல்வார்கள். அவர்களது முயற்சிகள் எப்படி இருப்பினும், இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு முன், மிகவும் திறமையான ஃபீல்டிங் அணி என்பது உண்மை. இந்திய ஃபீல்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, மனீஷ் பாண்டே, ஹர்தீக் பாண்ட்யாவைத் தவிர்த்துக் குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை. யுவராஜின் ஃபீல்டிங் காலம் மலையேறி வருடங்களாகிவிட்டது.

கேப்டனாகப் பொறுப்பேற்றபின், இந்தியாவிற்கான தன் முதல் ஒரு-நாள் தொடரைக் கைப்பற்ற கோஹ்லி நிறைய முனைவார். உழைக்கவேண்டிவரும். தோனி, யுவராஜ் போன்ற சீனியர்களின் ஒத்துழைப்பும் அவசியம். மொத்தத்தில், அணியில் மிகச்சரியான காம்பினேஷன் அமைப்பதிலேயே பாதி வெற்றி கைக்குள் வந்துவிடும் எனத் தோன்றுகிறது. வெற்றிமுகம் காண்பாரா விராட் கோஹ்லி?
**

ஜல்லிக்கட்டு – அநியாயத் தடை

இப்போதெல்லாம் ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ்நாட்டின் உணர்வுவெளியைக் கொளுத்திப்போடுகிற தவிர்க்கமுடியாத விஷயமாக மாறிவிட்டது இந்த ஜல்லிக்கட்டு. நீதிமன்றத் தடை காரணமாக, ஜல்லிக்கட்டை பாரம்பரியமாக நடத்திவரும் தமிழ்க்கிராமங்களில் பெரும் ஏமாற்றத்துடன், எரிச்சலுடன் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராமத்து இளைஞர்கள் கோர்ட் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள். சீறித் திமிரும் காங்கேயம் வகை நாட்டுக் காளைகள் செழுமையாக வளர்க்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு, சிங்காரிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகப் பொறுமையின்றி நிலத்தைக்கீறி தூசி பரப்புகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இன்னும் கிடைத்தபாடில்லை. எதற்கெடுத்தாலும் இப்போதெல்லாம் கோர்ட்டின் அனுமதி அல்லவா தேவைப்படுகிறது. எவ்வளவு முன்னேறிவிட்டது நம் நாடு, ஆஹா..!

’ஏறுதழுவுதல்’ என ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டு, பிற்காலத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தக் கிராமிய விளையாட்டு காலங்காலமாக தொடர்ந்து நடந்துதானே வந்தது தமிழ்நாட்டில்? பொங்கல் விழாவின் தொடர்ச்சி அல்லவா இது? நிச்சயமாக தமிழ்க் கலாச்சார உணர்வோடு, விழாக்கோலத்தோடு தொடர்புடைய வீரவிளையாட்டு. இதையெல்லாம் இப்போது கோர்ட்டில்போய் சொல்லவேண்டிய, நிரூபிக்கவேண்டிய அவசியம் ஏன் தமிழனுக்கு வந்தது? இப்போது எதற்காக, யார் இதில் குற்றம் கண்டுபிடித்துத் தடைசெய்யச் சொல்லியிருக்கிறார்கள்?

பீட்டா (PETA) என்றொரு சர்வதேச விலங்குநல அமைப்பும், ’விலங்குநல வாரியம்’ போன்ற இந்திய அமைப்புகளும் சேர்ந்து, ஜல்லிக்கட்டின்போது விளையாட்டு என்கிற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என உச்சநீதிமன்றத்தில் சோகக்குரல் எழுப்பி, முதலைக்கண்ணீர் வடித்து, ஜல்லிக்கட்டிற்கான தடையை வாங்கியுள்ளன. PETA என்றால்? People for the Ethical Treatment of Animals. விலங்குகளை முறையாக நடத்தவேண்டும் எனக் கோருபவர்களின் அமைப்பு! பலே! கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இது ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதை முதலில் கவனியுங்கள். இன்று, நேற்றல்ல. 36 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. உலகெங்கும் கிளைகள் எனப் பரவிக்கிடக்கிறது இப்போது. புகழ்பெற்ற மனிதர்கள், செய்வதறியா, பொழுதுபோகாப் பணக்காரர்கள், அசட்டு நடிக, நடிகைகள் எனப் பெரும்புள்ளிகளை தங்களோடு இணைத்துக்கொண்டு ஏதேதோ விளம்பரம் செய்து,உலகெங்கும் விலங்குகள் துன்புறுத்தப்படாது காப்பாற்ற முயற்சிப்பதாக டமாரம் அடித்துவரும் ஒரு அமைப்பு.

விலங்குநலத்திற்காகவென, மூன்றாம் உலக நாடுகளில் முனைப்புக் காட்டும் இத்தகைய சர்வதேச அமைப்புகள், முன்னேறிய நாடுகளில் ஒரு புல்லையும் புடுங்கமுடிந்ததில்லை. சுருக்கமாக சில உதாரணங்கள்: பணக்கார நாடான கனடாவில் ஆண்டுதோறும் ‘சீல்’ (Seal) எனப்படும் சாதுவான, அப்பாவிப் பனிப்பிரதேச விலங்குகளை அடித்துக் கொல்கிறார்கள் ஆயிரக்கணக்கில். எதற்காக? அந்த விலங்கின் தோல் விலை மிகுந்தது. காசாசை. அதற்காக உலோகத் தடிகளால் அடித்து, துடிதுடித்து விழும் விலங்குகளைக் கத்தியால் கொடூரமாகக் கிழித்து உயிர் இன்னும் இருக்கும் நிலையிலேயேகூட, தோலை உரித்து எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதர்கள் என அழைக்கப்படலாமா? கண்ணெதிரே நடக்கும் இத்தகைய மிருகவதைக்கு, கொடுங்கொலைக்கு எந்த அரசுத் தடையையும் இந்த பீட்டாவினால் அங்கே வாங்கமுடியவில்லை. ஜப்பான் போன்ற வளமான நாட்டில் என்ன நடக்கிறது? வருடாந்திர டால்ஃபின் வேட்டை(Annual Dolphin hunt) எனச் சொல்லிக்கொண்டு மீனவர்கள் கடற்பகுதிகளில் உயர்வகை டால்ஃபின்களைச் சுற்றி வளைத்துக் கொலைசெய்து ஆர்ப்பரிக்கிறார்கள். இது ஜப்பானிய வேட்டைக்காரர்களின் வீரவிளையாட்டாம். ஒவ்வொரு வருடமும் செப்டம்பரிலிருந்து மார்ச் வரை இந்தப் படுகொலை தவறாது அரங்கேறுகிறது. பீட்டா போன்ற விலங்குநலக் கருணையாளர்கள் ஜப்பானில் இந்தக் கொடுமைக்கு எதிராகத் தடைவாங்குவதுதானே? ஏன் செய்யவில்லை? அங்கே அவர்களின் பாச்சா பலிக்காது. பீட்டாவிற்குள் தோட்டாவைப் பாய்ச்சிவிடுவார்கள் அவர்கள் !

பணம் கொழிக்கும் நாடுகளில் முண்டமுடியாமல்போன நிலையில், இந்தியா போன்ற பெரிய, அதே சமயம்சாதகமான சுதந்திரச் சூழலுடன் கூடிய, இன்னும் சுயக் கலாச்சாரத்தை ஒரேயடியாக விட்டுவிலகிவிடாத நாடுகளின் பக்கம் பீட்டா தன் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்தது. அதற்கும் பணம் இருக்கிறது, பலம் இருக்கிறது. விளையாடக் கொஞ்சம் களம் வேண்டாமா? நல்ல நோக்கத்தை முன்வைத்துத் தப்புத்தண்டாக்கள் செய்வதும் எளிது இல்லையா? வல்லரசு நாடுகள், பன்னாட்டு நிறுவனங்களின் இலக்குகள், சுயநலக்காரியங்களுக்குத் துணைபோக, அவர்களிடம் பணமும், உதவியும் பெற்று விலங்கு நலம் என்கிற பெயரில் இந்தியா போன்ற ஆசிய, ஆஃப்பிரிக்க நாடுகளில் தன் விஷமங்களை பீட்டா செய்ய ஆரம்பித்து வருடங்கள் ஆகின்றன. மேற்கொண்டு விளக்க ஆரம்பித்தால், விஸ்தாரமாக தனியாகக் கட்டுரை எழுதவேண்டிவரும். அந்த வேலை இப்போது வேண்டாம். ஆதலால், சுதந்திர, ஜனநாயக விழுமியங்களைக்கொண்டு தங்களுக்கு சாதகமான சூழல் பெற்றிருப்பதால், இந்தியா போன்ற முன்னேறிவரும் நாடுகளில் தங்களின் கைவரிசைகளை , பீட்டா போன்ற அமைப்புகள் காட்ட ஆரம்பித்துள்ளன; மிருகநலம் என்கிற பெயரில், கிராம மக்களின் சமூக, கலாச்சார, பாரம்பரியச் சுவடுகளை, அதற்கான மூலங்களை, வாழ்வாதாரங்களை சிதைப்பதில் கவனம் செலுத்துகின்றன எனப் புரிந்துகொண்டால், இப்போதைக்குப் போதுமானது.

பீட்டா போன்ற விலங்குநல அமைப்புகள் எழுப்பிய நீதிமன்ற சிக்கலில் ஜல்லிக்கட்டு பலிகடாவாக ஆகியுள்ளது தமிழ்நாட்டில். கடந்த இருவருடங்களாக ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசியல், சமூக தளங்களில் குரல்கள் உயர்ந்துவருகின்றன. அரசியல், சினிமா உலக உணர்ச்சிவீரர்களைத் தாண்டி, வேறொரு குரலும் கேட்கக் கிடைத்தது. ஆழ்ந்த சிந்தனையுடன், அளந்து பேசும் ஆன்மீகவாதியான சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கூறியவற்றிலிருந்து ஒரு பகுதி:

“…..நம் கலாச்சாரத்தில் மாட்டினை நாம் வெறும் விலங்காக பார்க்கவில்லை. நம் வாழ்வில் பல அம்சங்களில் மாடுகள் அங்கம் வகிக்கின்றன. நாம் விவசாயம் செய்தாலும் சரி, விளையாடினாலும் சரி, மாட்டுடன் அதன் பாலுடன் நமக்கொரு சம்பந்தம் இருக்கிறது. அதைப் போலவே அதனுடன் விளையாடும் பழக்கமும் நம் கலாச்சாரத்தில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்துவருகிறது.

ஜல்லிக்கட்டில் போட்டியிடும் காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை. கொல்வதும் இல்லை. காயம் ஏற்படுவதோ, தற்செயலாக மரணம் சம்பவிப்பதோ மனிதர்களுக்குத்தான், காளைகளுக்கு அல்ல. விலங்குகள் உரிமை, விலங்குகள் துன்புறுத்தல் என்று பேசுபவர்கள், உண்மையுடன் இருந்தால், தினமும் லட்சக்கணக்கான மிருகங்களை கொன்று வருகின்ற இறைச்சி தொழிற்சாலைகளை மூடுவதற்கு பாடுபடட்டும்.

ஒரு மிருகத்தின் உயிரை எடுப்பது கொடுமை அல்லவா? ஆனால், அதுகுறித்து யாருக்கும் கவனம் இல்லை. உணவுக்காகக் கூட அவற்றைக் கொல்வதில்லை, ஏற்றுமதி செய்வதற்காக கொல்கிறார்கள். உலகிலேயே அதிக மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வது இந்தியாதான். வெட்கக்கேடான விஷயம் இது. நமக்கு ஊட்டமளித்து, நமக்காக உழைத்து, நம் மண்ணை வளப்படுத்திய இந்த விலங்குகளை வெறும் பணத்துக்காக வெட்டிக் கொல்கிறோம். நம் தாயின் பாலினை குடித்தது போலவே இந்த விலங்குகளின் பாலினையும் நாம் குடித்திருக்கிறோம். ஆனால், அவற்றை வெட்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவமானத்துக்குரிய செயல் இது.

இவற்றை எல்லாம் எதிர்த்து சண்டையிடுவதற்கு பதில், தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்குக் கிடைக்கும் எளிமையான சந்தோஷத்தை அழிக்கப் பார்ப்பது முறையல்ல. ஜல்லிக்கட்டு விளையாட்டு உயிர்ப்புடன் இருக்க வேண்டும். எதிர்காலத்திலும் இது மிகுந்த சிறப்புடன் நடக்க வேண்டும்..’’ என்று சொல்லியிருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.

இத்தகைய ஜல்லிக்கட்டுக்கு இந்த வருடமும் அனுமதி வழங்கவில்லை உச்சநீதிமன்றம். பொங்கலுக்கு முன்பாக அவசரம் அவசரமாகத் தீர்ப்பு வழங்கமுடியாதாம். இதுவே சல்மான் கான் போன்ற ஒரு பாலிவுட் நடிகரின் கேசாக இருந்தால், 24 மணிநேரத்துக்குள் சாதகமான முடிவுகொடுத்துவிடுவார்கள் நமது நீதி அரசர்கள்! சாதாரண மக்களின் உணர்வெழுச்சிக்குப் பதில் சொல்ல நேரமில்லை, கொழுத்த சம்பளத்துடன் இந்நாட்டில் வேலைசெய்யும் இந்த மாமனிதர்களுக்கு. மகா கேவலம்.
இந்த நிலையில், தடையை மீறி அலங்காநல்லூரிலும், வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் ஏனைய தமிழ்நாட்டு கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கிராமத்தார்கள், போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். அவர்களுக்கும் வேறுவழி தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் காத்திருந்து கண்டது ஒன்றுமில்லை. களத்தில் காளைகளுடன் இறங்கிவிடவேண்டியதுதான் என முடிவெடுத்துவிட்டார்கள் போலும்.

கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமோ இந்த விஷயத்திலும்?
**