நம்ம தமிழ்நாடு !

பேனா, வாட்ச் போன்ற சங்கதிகளை ஆசையாக சேகரிப்பதில், பயன்படுத்தி மகிழ்வதில்,  சிலருக்கு ஒரு விதமான பித்து இருக்கும். அடியேனும் கிட்டத்தட்ட அந்த ஜாதிதான்.  குழந்தைத்தனமான ஆசைகளும், விசித்திரப் பழக்கவழக்கங்களும் இல்லாதவனெல்லாம் ஒரு மனிதனா, என்ன !

90-களுக்கு முன், க்யூபா (Spanish -கூபா), வடகொரியா போன்ற ஒரு ‘சோஷலிச’ நாடாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த இந்தியாவில், வெளிநாட்டுப் பொருட்கள் கிடைப்பதே அபூர்வம். யாராவது கொண்டு வந்து, இங்கு விற்றால்தான் உண்டு. அதையும் காதோடு காதுவைத்தாற்போல் விற்பார்கள், வாங்குபவர்களும் அப்படியே. ரகசியத்திலும் ஒரு பெருமை! அப்போதெல்லாம், ஒருவர் தன் கையில் ஒரு ஃபேவர் லூபா (Favre Leuba), டிட்டோனி (Titoni), கேமி (Camy), ஹென்ரி சாண்டஸ் (Henri Sandoz) என ஸ்விஸ் ரிஸ்ட்-வாட்ச்(!) கட்டியிருந்தால், கால் தரையில் படாது. அவரது மணிக்கட்டை பொறாமையோடு கவனிப்பார்கள் வாங்கமுடியாத அப்பாவிகள். அதே போல் இந்த பேனா விஷயமும். யாராவது, பைலட் அல்லது பார்க்கர்  பேனாவை சட்டைப் பாக்கெட்டிலிருந்து, எடுத்து கையை லேசாக சிலுப்பிக்கொண்டே எழுதினால், கையெழுத்துப் போட்டால், ரசனை உள்ள ஜனம் கவனிக்கும். பைலட் பேனாலன்னா எழுதறான்! இருபது வருடங்களில் எவ்வளவு மாறிவிட்டது நாட்டில். இப்போதைய இந்தியாவோ,  ஒரு சிறு உலகம். எந்த ஒரு தரமான நுகர்வோர் பொருளையும் எளிதாக வாங்கிவிடலாம். ஜனங்களிடம் பணமும்  அநியாயத்துக்குப் புழங்குகிறது!

சில மாதங்களுக்கு முன் கைக்கடிகாரங்களின் உலகில்,  புதிய வருகைகள், அந்தக்கால அரபு மற்றும் ரோமன் எண்கள் உள்ள ’கால எந்திரங்கள்’, நவீன மல்டி-டயல் க்ரோனோமீட்டர்கள்  எனத் தேடித் தேடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இடையிடையே ’ஸ்மார்ட் வாட்ச்’களின் ஆட்டம் வேறு, காலத்தின் மாறும் கோலம். மனம் எதிலும் செல்லாவிட்டால், வாட்ச்சுகளையாவது உருட்டுவோம். 2019-ன் இந்தியப் புது வருகைகளில், நடுத்தரவகை கடிகாரங்களில், டைமெக்ஸ் (Timex), Citizen, ஃபாஸில் (Fossil), டைட்டன்(Titan) ஆகியவை முன் நின்று ஈர்க்கின்றன.

பிரதமர் மோதி கடந்த மாதம், தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு தமிழ் உணவுவகைகளை  விருந்தாக அளித்தது, தமிழ் வார்த்தைகளைப் பேசியது பத்திரிக்கைகளில் லேசாக வந்தது. மேலும், ஐநா-விலும், தாய்லாந்தின் சர்வதேச கூட்டம் ஒன்றிலும் தமிழ்க் கவிதைகளைக் குறிப்பிட்டு அவர் பேசியது மீடியாவிலும், தேசிய நாளிதழ்களிலும் பிரதானமானது. இதெல்லாம்  ஒரு காரணமாக இருக்குமோ? தமிழ், தமிழ் என தடதடக்கிறதே எங்கும்

இந்திய அரசு கடிகாரத் தயாரிப்பாளரான ஒருகாலத்தில் கோலோச்சிய ஹெச்.எம்.டி (hmt) -க்குப் பின், இந்தியாவின் டாப் வாட்ச் ப்ராண்டாக வலம் வரும் டாடாவின் டைட்டன், தனது கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியிருக்கிறது. உற்பத்திசாலை துவங்கப்போகிறதா புதிதாக? இல்லை. ‘நம்ம தமிழ்நாடு’ எனும் சிறப்புப் பதிப்பாக தமிழ் எழுத்துக்களுடன், சித்திரங்களுடன் கைக்கடிகாரங்களை வெளியிட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் டைட்டனின் ப்ரிமியம் ரேஞ்ச் கடிகாரங்களைப் பார்க்கையில், பெங்காலிகளைக் குஷிப்படுத்தும் விதமாக பெங்காலி மொழி எழுத்துக்கள், குறியீடுகளுடன் கைக்கடிகாரங்கள்-சில மாடல்கள் டைட்டனிலிருந்து சில வருடங்களுக்கு முன்னரே வந்திருப்பது தெரியவந்தது. அதேபோல், மும்பை நகரின் பாரம்பர்யம் பற்றியும் ஒரு வெளியீடு. ஏன், தமிழ் இவர்களுக்கு ஞாபகம் வரவில்லையா.. என சிந்தனை ஓடியது அப்போது. பதில் கிடைத்துவிட்டது இப்போது!

உலகின் மிகத்தொன்மையான மொழிகளில் ஒன்றான, இந்தியாவின் பாரம்பரியம் மிக்க தமிழ் மொழி, தமிழ்நாடு ஆகியவற்றை சிறப்பிக்க எண்ணி, மொழி, கலாச்சாரம், பெருமை மிகு தமிழ்க்கோவில் சிற்பங்கள் எனக் காட்டும் வகையில் புதிய பதிப்பாக ‘நம்ம தமிழ்நாடு’ கடிகார வகைகள் (Limited Edition), உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறது டைட்டன் நிறுவனம். தமிழ்நாட்டின் மீதான எங்களின் சிறு கவிதை முயற்சி என்கிறது! (சரி.. சரி..காதுல விழுந்தாச்சு). டைட்டன் அறிமுகப்படுத்தியிருப்பது தினசரி வாழ்க்கைக்கான Workwear, day-today-wear அல்ல; கொஞ்சம் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்.

தமிழ் விஷயத்தில் டைட்டன் வேகமாக இயங்குகிறதே என வியந்து, தேடியதில், சில படங்களும், விபரங்களும் கிடைத்தன.

1. புதிய மாடல் ஒன்றில், இத்தகைய சிறப்புகள்: Mother of Pearl Dial, டயலின் மேற்பகுதியில் கடிகாரத்தின் பெயர் ‘டைட்டன்’ எனத் தமிழிலேயே. (தமிழைக் கடிகார டயலில் பார்த்துப் பழக்கப்படாத கண்கள் கொஞ்சம் விரிகிறது!) எண்கள் இருக்கும் இடங்களில், புள்ளியோ, கோடோ இருப்பதற்குப் பதிலாக,  ‘இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து’ என கருப்பில் தமிழ் எழுத்துக்கள். 12 இருக்கும் இடத்தில் Titan’s Brand Logo. டயலின் கீழ் பகுதியில் ’தேதி’. கடிகாரத்தின் கேஸ், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மற்றும் ரோஸ்கோல்ட் வண்ணத்தில். ஸ்டைலான metal strap in same colours.  ‘மினரல் கிளாஸ்’ பொருத்தப்பட்ட கடிகாரம்.  ஆண், பெண் இருபாலருக்கும் கிடைக்கிறது. ஸ்டீல்/ரோஸ் கோல்ட் நிறம் பிடிக்காதவர்களுக்கென, Gold case/ strap வகையும் உண்டு.

2. இரண்டாவதில் இப்படி அம்சங்கள்: ரோஸ் கோல்ட் கேஸ். டயலில் சில சிறப்புகள்: தமிழ்நாட்டுக் கோவில் கோபுரம் மற்றும் கோவில் தூண்களில் காணப்படும் யாளி சிற்பம் ஆகியவை கோட்டோவியமாக பிண்ணனியில்  பொறிக்கப்பட்டுள்ளது அழகு. இதில் தேதிக்காக ஒரு ’ஜன்னல்’ வைத்து ஓடிவிடாமல், வலது புற மேல்பக்கத்தில் ஒரு சிறு ‘Date dial’-தனி முள்ளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ‘டைட்டன்’ எனத் தமிழில் மேல்பகுதியில் எழுதியிருக்கிறார்கள். கட்டிக்கொள்ள பரௌன் கலரில் லெதர்-ஸ்ட்ராப். மினரல் க்ளாஸ் டயலை மூடியிருக்கிறது.

3. மூன்றாவது மாடல் பிரத்யேகமாகப் பெண்களுக்கானது. காஞ்சீபுரம் தீம். டயலின் இடது பாதி mother of pearl finish. நம்பர் 9 வரும் இடத்தில் தமிழில் ‘டைட்டன்’ என எழுத்துக்கள்.  வலது பாதி ஜரிகையில் மயில் வடிவமொன்று -காஞ்சிப் பட்டை மனதில் கொண்டு.  அழகான கருப்பு லெதர் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதில் தேதி இல்லை. 

மூன்று மாடல்களும் தரமானவை -Water Resistant: 5 ATM. Quartz movement. சர்வதேச பிராண்டுகளைப் போல ‘quartz movement’-க்கு இரண்டு வருட வாரண்ட்டி கிடைக்கிறது. தமிழ் லிமிட்டெட் எடிஷன் வாட்ச்களின் விலை Rs. 4495 – 6995 ரேஞ்சில்.

CNBC மீடியா, தமிழைக் கொண்டாடும் டைட்டனின் இம்முயற்சியை ஸ்லாகித்து எழுதியிருக்கிறது. முதன் முறையாக, தமிழ் எழுத்துக்கள், சிற்பங்களுடன் இந்தமுறை மார்க்கெட் களத்தில்! சும்மா, தமிழ்..தமிழ்.. என்று பாட்டுப்பாடிக்கொண்டிராமல், தமிழ்ப் பாரம்பர்யத்தைக் கோடிடும்  ஒரு தமிழ் வாட்ச்சை வாங்கிக் கையில் கட்டிப்பாருங்கள்.. கர்வம், பெருமைன்னா என்னன்னு புரியும்!

**

குழந்தையை இங்கிட்டுக் குடுத்துட்டு, போங்க உள்ளே !

 

நமது நாட்டில் நெருக்கடியான சமூக, அரசியல் சூழல்களிலும், அடிக்கடி தாக்கும் இயற்கைச் சீற்றங்களின்போதும் ராணுவம் மற்றும் துணைராணுவத்தினர் (para-military forces), தங்கள் பணி எல்லைகளைத் தாண்டி, ஒரு அவசர நிலையில், அதிரடியாக மக்கள் சேவைகளில் மத்திய அரசினால் ஈடுபடுத்தப்பட்டு  வருகிறார்கள். அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், ஒடிஷா, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்கள் கடந்த சிலமாதங்களாக கடும் மழை, ஆற்றுவெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு குடிசைகளும், சிறுவீடுகளும் அடித்து செல்லப்பட்டபோது,  ராணுவத்தினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றில் குதித்து, வெள்ளத்தில் சிக்கிய வயதானோர், குழந்தைகளை மீட்டுவந்தது, ஆங்காங்கே நிகழ்வுகளாகப் படங்களுடன் மீடியாவில் தெரியவந்தன. கூடவே, அவ்வப்போது மாநில காவல்துறை அதிகாரிகள், காவலர்களின் பணிகளும், சாதாரண மக்களுக்காக செய்த திடீர் ஒத்தாசைகளும் தெரியவந்ததில், பொதுவாக எதற்கெடுத்தாலும் குறைகூறிக்கொண்டிருக்கும்  ஜனங்களுக்கும் ஒரு அசாதாரண திருப்தி. அப்பாடா,  ஏதோ கொஞ்சம் நல்லவங்களும் இருக்காங்கபோலத் தெரியுதே!

எந்த வகையான அரசுப் பணியில் நியமிக்கப்பட்டாலும், இந்தியப் பெண்கள் தங்கள் பணி எல்லைகள், நெருக்கடிகள், சமயங்களில் தங்களின் இயலாமைகளைத்  தாண்டியும், சில காரியங்களை செய்துகாட்டி அசத்திவிடுகிறார்கள். அதீத கடமை உணர்வு, சுயகட்டுப்பாடு, சேவை மனப்பான்மை ஆகிய தளங்களில், ஆண் வர்க்கத்தினரை அஸால்ட்டாக அடிச்சுத் தூக்கிவிடுகிறார்கள் இவர்கள் என்பதும் தெரியவருகிறது..

‘நியூஸ்18’  மீடியா சமீபத்தில் ஒரு சிறு செய்தியைப் போட்டது. ட்விட்டரில் அதிர்ந்ததின் விளைவு. அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டு மாணவிகள், TET (Teachers’ Eligibility Test) தேர்வெழுத என, தேர்வு மையத்திற்கு வந்துவிட்டார்கள். தேர்வு நேரம் நெருங்கியது. தேர்வெழுத வந்த மற்றவர்கள் தேர்வு மையத்திற்குள் ஒவ்வொருவராக நுழைந்தார்கள். இந்த இரண்டு பெண்களும் பேந்தப்பேந்த விழிக்க ஆரம்பித்தார்கள். ஒரு பிரச்னை விஸ்வரூபமெடுத்து அவர்களைத் தாக்கியது. என்ன, ஹால்டிக்கட்டை மறந்துவிட்டு வந்துவிட்டார்களா, அந்த அசடுகள்? இல்லை. இருவரின் கைகளிலும் கைக்குழந்தைகள். இளம் தாய்மார்கள் அவர்கள். வீட்டில் பார்த்துக்கொள்ள ஆளில்லை போலும்; எடுத்துக்கொண்டு பரீட்சை நடக்கும் இடத்திற்கே வந்துவிட்டார்கள். இங்கே அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். குழந்தையை எடுத்து பரீட்சை ஹாலுக்குள் செல்ல அனுமதியில்லை.

என்ன படித்து என்ன பயன்? தேர்வெழுதவே முடியாது, வீடு திரும்ப வேண்டியதுதானா? நமக்கெல்லாம் இனி உத்தியோகம் கிடைத்து, அதைப் பார்த்ததுபோல்தான்..எல்லாம் வெட்டிப்பேச்சு, வெறுங்கனவு..’ மனம் வெதும்பி, புலம்பிக்கொண்டே திரும்பிப் படிகளில் இறங்கியபோது, எதிரே நெருங்கினார்கள், இரண்டு அஸ்ஸாம் பெண் போலீஸ் அதிகாரிகள். ‘என்னம்மா ? என்ன பிரச்னை? எதுக்கு அழுகை இப்போ!’ பெண்கள் இருவரும் காட்டினார்கள். பொட்டலங்கள்போல கைகளில், ஒருவயதிற்கும் குறைவான கைக்குழந்தைகள். சொன்னார்கள்: ‘வீட்டில் பார்த்துக்கொள்ள யாருமில்லை. இங்கே, உள்ளே குழந்தையோடு செல்ல அனுமதி இல்லை. தேர்வு எழுத முடியாது. சான்ஸ் போச்சு… போகிறோம்! எங்களின் வேலைவாய்ப்பும் போகிறது எங்களோடு..”

அஸ்ஸாம் பெண் போலீஸ் சேவை!
Courtesy: Twitter/News 18

போலீஸ் அதிகாரிகள் அதிர்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். கைகளை நீட்டினார்கள். ’ கொடுங்கள் எங்களிடம். குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறோம். கவலைப்படாதீர்கள் அம்மா! உள்ளே ஓடுங்கள். பயப்படாமல், பரீட்சையைப் பார்த்து எழுதுங்கள்!’ இதை எதிர்பாராத அந்த இளம்பெண்கள் திடுக்கிட்டார்கள். வேறுவழியின்றி, தயக்கத்தோடும், பயத்தோடும் சின்னக்குழந்தைகளை பெண் போலீஸ் அதிகாரிகளிடம் கைமாற்றினார்கள். உள்ளே போய் தேர்வு எழுதினார்கள். இரண்டு மணிநேரம் கழித்து வெளியே ஓடிவந்து, அரக்கப் பரக்கப் பார்த்தார்கள். இரண்டு பெண் போலீஸ்களும், கொஞ்ச தூரத்தில், குழந்தைகளைக் கையிலேந்தி அங்குமிங்குமாக நடந்துகொண்டிருப்பதைக் கண்டு இழுத்து மூச்சுவிட்டுக்கொண்டார்கள்.  அவர்களிடம் போய், கலங்கிய கண்களுடன் கைகூப்பிவிட்டு,  குழந்தைகளை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு நடையைக் கட்டினார்கள், நாளைய குழந்தைகளின் வருங்கால ஆசிரியைகள்.

’அஸ்ஸாம் போலீஸ் (AP)-இன் இந்த இரண்டு பெண் அதிகாரிகள் கையில் குழந்தையுடன் உலவும் படம், ட்விட்டரில், இப்படியான வாக்கியங்களுடன்  வந்தது:

‘அம்மா ‘என்பது ஒரு வினைச்சொல் . அது நீங்கள் யார் என்பதை அல்ல, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது !’

ட்விட்டர்வாசிகளுக்குத் தலைகால் புரியவில்லை!

**

” ஜெகம் புகழும் புண்ய கதை ….

 

.. ராமனின் கதையே..! அதை செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே !” – என்று ஒரு அமர கீதம். தமிழ் சினிமாவின் பொற்காலத்தின் ஒரு பகுதியான அறுபதுகளில், திரையில் எதிரொலித்துப் பரவியது. ரசிகர்களிடையே பிரபலமான பாடல், இன்றும் பரவசத்தோடு கேட்கப்படுகிறது. ஒரு பாடலைக் கேட்டு ஆனந்திப்பார்களே ஒழிய, இதை எழுதியது யார் என நமது இனிய தமிழ் மக்கள் சிந்திக்கமாட்டார்கள் – பொதுவாக இதுதான் நிலைமை! கவிஞர் மருதகாசியின் கைவண்ணம் இது. 1963 -ல் வெளிவந்த ’லவகுசா’ திரைப்படத்தில் வருகிற இந்தப் பாடலில், ராமாயணக் காவியத்தையே ஒற்றைப் பாடலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் மருதகாசி. ராமன், சீதை – தெய்வீக ஜோடியின் புத்திரர்களான சிறுவர்கள் லவன், குசன் ஆகியோர், தாங்கள் யார், தங்கள் தந்தை யார் எனத் தெரியப்படுத்திப் பாடுவதாகத் திரையில் வெளிப்பட்டது. கேட்டோரின் காதுகளில், குறிப்பாக ராம பக்தர்களின் செவிகளில் ரீங்கரித்து நின்றது. அந்தப் பொடியன்களுக்குப் பொருத்தமான நளினமான இளங்குரலில் பி.சுசீலாவும், பி.லீலாவும் இழைத்திருக்கின்றனர். பி.லீலாவுக்கு அமைந்த முதல் திரைப்படப் பாடலும் இதுதானாம். கே.வி.மகாதேவன் இசைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட படம் லவகுசா. சூப்பர்-டூப்பர் ஹிட் இரண்டு மொழிகளிலுமே. என்.டி. ராமாராவும் அஞ்சலிதேவியும் ராமர், சீதையாகக் கலக்கிய திரைக்காவியம். தமிழ் ’லவகுசா’வில் ஜெமினி கணேசன், ராமனின் தம்பி லக்ஷ்மணனாக வருகிறார். அப்போது இளமையோடு லக்ஷணமாக இருந்திருப்பாரோ…! தெலுங்கு நடிகர் சோபன் பாபு நடித்திருக்கிறார் தம்பி சத்ருக்னனாக. குணச்சித்திர நடிகை பி.கண்ணாம்பா ராமனின் அன்னை கோஸலையாக நடிக்க, பூமாதேவியாக நடித்திருப்பவர் எஸ்.வரலக்ஷ்மி. பின்னாளின் இரண்டு பெருநட்சத்திரங்கள் இப்படத்தில்..பாவம், சிறு பாத்திரங்களாக.   துணிவெளுப்பவர், அவரின் மனைவி ரோல்களில் எம்.ஆர். ராதா, மனோரமா!

மருதகாசியை ராமன் ஏற்கனவே பிடித்துவிட்டிருந்தார்! ‘சம்பூர்ண ராமாயணம்’(1950) படத்தில் ராவணன் பாடுவதாக வரும், சி.எஸ்.ஜெயராமன் பாடிய, ‘இன்றுபோய் நாளை வாராய்.. என, எனை ஒரு மனிதனும் புகலுவதோ…..! ’ என்ற உருக்கமான பாடலும் ஐயா மருதகாசியின் சித்திரம்தான்.

இவருடைய திரையுலகப் பிரவேசம் திருச்சி எஸ்.லோகநாதனின் உதவியுடன் நிகழ்ந்திருக்கிறது. மருதகாசியின் முதல் திரைப்படப் பாடல் ’மாயாவதி’ எனும் படத்தில் வந்தது. ‘பெண் எனும் மாயப்பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ..’ என ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பாடலை. எந்தப் பெண், எப்படி ஏமாற்றினாளோ இவரை.. ஒன்றும் தெரியவில்லை! அதற்கப்புறம் பொன்முடி, மந்திரிகுமாரி, தூக்குத்தூக்கி, அமரகவி, மக்களைப்பெற்ற மகராசி, பாவை விளக்கு என புகழ்பெற்ற பல படங்களில் இவரது பாடல்கள் ஒலித்து ரசிகர்களை வசப்படுத்தின. ‘வாராய்…நீ.. வாராய்! போகுமிடம் வெகுதூரமில்லை..நீ வாராய்..!’, ‘உலவும் தென்றல் காற்றினிலே…’,  ‘எந்நாளும் வாழ்விலே…கண்ணான காதலே…!’, ’காவியமா நெஞ்சின் ஓவியமா..’, ‘மாசிலா.. உண்மைக்காதலே…’ மற்றும்,  ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே.. ஏனோ அவசரமே.. எனை அழைக்கும் வானுலகே’ போன்ற இனிமையான பாடல்களை வழங்கிய கவிஞர்.

சக கலைஞர்களை மதித்துப் போற்றிய மாமனிதர் மருதகாசி. பிரபல கவிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போன்றும், உடுமலை நாராயண கவியைத் தன் அண்ணனெனவும் மதித்தாராம். வாலி, டி.எம்.எஸ். ஆகியோருக்கும் திரையுலகவாழ்வில் ஆரம்பத்தில் உதவியிருக்கிறார். முப்பதாண்டுகளுக்குமேல் தமிழ்த் திரையுலகில் சிறந்த பாடலாசிரியராய் பிரகாசித்தவர். 4000 -த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பெருங்கவிஞர் மருதகாசி. திருச்சி மாவட்டம் மேலக்குடிகாட்டில் பிறந்து கும்பகோணத்தில் படித்துவளர்ந்தவர்.   2007-ல், மருதகாசியின் பாடல்கள், புத்தகங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு, தேசிய உடைமை ஆக்கியது. ஏதோ, அவர்களால் முடிந்தது..

சனிக்கிழமையாயிற்றே எனக் கோவிலுக்குப்போய், திரும்பி வந்து டிவி-யைப்போட்டால்.. தீர்ப்பு என்கிறார்கள், ஜென்மபூமி என்கிறார்கள்.. கோவில் என்கிறார்கள்…ராம் ராம் என்கிறார்கள். மனம் பரபரத்து,  அடி அடுக்கிலிருந்து தேடி எடுத்துக்கொடுத்தது  – ‘ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே..’ . கூடவே ஏதேதோ கதையெல்லாமும் வந்து சேர்ந்துகொண்டது.

**

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – 2

நேற்றைய பதிவிலிருந்து ஜெயகாந்தன் சிறுகதை தொடர்கிறது … :

திண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தத் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப்  பார்த்தார். ஆமாம். அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் ஓங்கி இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில், அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து,  அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார்.

‘அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸிலே வேலை செய்யற நாயுடு – சைக்கிளிலே வந்தவன் – சைக்கிளிலே உக்காந்தபடியே, ஒரு காலைத் தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே… அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்க மாட்டான்னு நெனைச்சேன்… இப்போ திரும்பி வந்திருக்கான்! அவனை இவன் சும்மாவா விடுவான்? இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான்? பெரிய கொலைகாரனாகவும் இருப்பான் போல இருக்கே…’ என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே அந்த மஸ்லின் ஜிப்பாகூட இல்லை. முண்டா பனியனுக்கு மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் ‘பிலுபிலு’வென வளர்ந்திருக்கிறது. தோளும் கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன.

‘ஐயையோ… கத்தியை வேற எடுத்துண்டு வரானே… நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்…  இங்கேதான் வரான்!’ என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று ‘படா’ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார்.  அவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான்.

‘ஏண்டாப்பா… எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சான். அவனையெல்லாம் விட்டுட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே ? இந்த அம்மா கடன்காரி வேற, உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா. நேக்குப் புரியறது… மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா, பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே ‘லேசா’ ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு. என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே?’ என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி.

அந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். ‘அடப் போறாத காலமே! ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான்!’ என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு. ‘எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன?’ என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும்,  பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் – சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, ‘படக்’கென்று அரை அடி நீளத்துக்கு, ‘பளபள’வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி,  ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான். குஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: ‘நல்ல வேளை! தப்பிச்சே. ஆத்தை விட்டு வெளிலே வராதே… பலி போட்டுடுவான், பலி!’

அவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து,  ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார்.  அவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துலக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும்,  குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு,  அவனே எழுந்து உள்ளே போனான். அங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும்,  அவன் வெளியே தலை காட்டவே இல்லை.

அந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவும், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும், “வீட்டில் பெண்டு பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி.  “ஆமாம் ஆமாம்” என்று அவர் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள்.

அப்படிப் போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார்.

காலை பதினொரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான்.  வீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டுவிட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான்.  காலனியில் ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து ‘தப தப’வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான்.

திடீரென்று, “மாமா… உங்க பனியன் மண்ணுலே விழுந்துடுத்து…” என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு, மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது.

அப்போதுதான் அவன் பயந்தான்.  தன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை,  யாராவது பார்த்து விட்டார்களோ என்று,  சுற்று முற்றும் திருடன் மாதிரிப் பார்த்தான்.

“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா ?  உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு,  அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா.  அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கச்சே…  நான் மெதுவா வந்துட்டேன்.  எனக்கு மிட்டாய்  வாங்கித் தரயா.. ? திருடிண்டு வந்துடு.  அந்தப்  பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு ! ”

அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது,  அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோடு,  பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.

அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து,  ரகசியமாகச் சொல்லிற்று குழந்தை: “அம்மா பாத்தா அடிப்பா… சுருக்கப் போய்,  அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு  ஓடி வந்துடு!  நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன் !”

அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டு, கடைக்கு ஓடினான். ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான். திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள,  ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! ‘இது உன் வீடு’ என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம்.  அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். ‘யாராவது வந்து, அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ..’ என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.

“பாப்பா… பாப்பா” என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.

‘உஸ்’ என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு,  கதவுக்குப் பின்னால் ஒளிந்து  காத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது.

“இங்கேதான் இருக்கேன். வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ! ” என்று அவனை இழுத்து உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை.

குழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான்.

“எல்லாம்..  எனக்கே எனக்கா?”

“ம்…”

இரண்டு மூன்று சாக்லெட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில், இனிப்பின் சாறு வழிந்தது.

“இந்தா! உனக்கும் ஒண்ணு” என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும் தந்தபோது

“ராஜி… ராஜி !” என்ற குரல் கேட்டதும்,  குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது.

“அம்மா தேடறா…” என்று அவனிடம் சொல்லி விட்டு, “அம்மா! இங்கேதான் இருக்கேன்” என்று உரத்துக் கூவினாள் குழந்தை.

“எங்கேடி இருக்கே?”

“இங்கேதான்… திருட வந்திருக்காளே புது மாமா! அவாத்திலே இருக்கேன்.”

அவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே கொடுத்து, “அம்மா அடிப்பாங்க. இப்போ போயிட்டு அப்பறமா வா” என்று கூறினான் அவன்.

“மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா.  இதோ! மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்பறமா  வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷுக்குக் கூட…!”

குழந்தை போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு,  அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான். மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன், வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி, பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டு, சற்று நேரம் படுத்து உறங்கினான்.

நான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும், எழுந்து நின்று வணங்கினான். குழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீதம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது.  போலீஸ்காரரை வணங்கிய பின், தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன்.

“தெரியும்டா… பொல்லாத ரசீது… ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா? உடனே யோக்கியனாயிடுவியா, நீ? மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும். என்ன? நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு… என்னைக்கிடா  நீ ரிலீஸானே?” என்று மிரட்டினான் போலீஸ்காரன்.

“முந்தா நாளுங்க, எஜமான்” என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன.

அப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார். முதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோ டி வந்தார்.

“உங்களுக்கே நன்னா இருக்கா? நாலு குடித்தனம் இருக்கற எடத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா?”

‘வாக்கிங் ஸ்டிக்’கைத் தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார்.

“அட அசடே! அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும்? திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா? அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு… அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே?” என்று குஞ்சுமணியைச் சீதம்மாள் அடக்கினாள்.

முதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன்,  வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான்.

“இங்கே உனக்கு என்ன வேலை?” என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார்.

“இவன் ஒரு கேடி, ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க. அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்.”

முதலியார், அவனையும், போலீஸ்காரனையும், மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார்.

“என்னுடைய ‘டெனன்டை’ காலி பண்ணச் சொல்றதுக்கு நீ யார்? மொதல்லே ‘யூ கெட் அவுட்’!”

முதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான். “எஸ், ஸார்” என்று இன்னொரு முறை சலாம் வைத்தான்.

“அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க? திருடாதப்போ அவன் எங்கே போறது? அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ!” என்று கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார்.

“ஓய், குஞ்சுமணி! இங்கே வாரும். உம்ம மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர், திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படறீர். நான் ஜெயிலுக்குப் போகாத பல திருடன்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்.” என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார்.

“என்ன கோனாரே… நீயும் சேர்ந்துகிட்டு யோக்கியன் மாதிரிப் பேசிறியா?… நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே?…” என்று கேட்டபோது கோனார் தலையைச் சொறிந்தான்.

கடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார்:

“இந்தாப்பா… உன் கிட்டே நான் கை நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா, எங்கிட்டே சொல்லு. நான் பாத்துக்கறேன்…” என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார்.

அன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தான். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது. காலையில் பால் கறக்க வந்த கோனார்,  அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான். குஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து,  பசுவைத் தரிசனம் செய்தார். குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீதம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது. அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு, அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள்.

மத்தியானமாயிற்று; மாலையாயிற்று. மறுநாளும் ஆயிற்று… இரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும், அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று, மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள்.

அந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும்,  ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி, திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது. மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.

“ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?” என்று கண்களைக் கசக்கிக் கொண்டு, தனிமையில் அழுதது குழந்தை.

**

நன்றி :  ‘அழியாச்சுடர்கள்’/ராம்பிரசாத் / நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி, “ஜெயகாந்தன் சிறுகதைகள், – ஜெயகாந்தன்” தொகுப்பு

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது

இலக்கிய எழுத்தாளர்கள், ரசிகர்களால் அதிகமாக சிலாகிக்கப்படும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை, அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன் சில நாட்களுக்குமுன். அப்போது, தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தனின் இந்தக் கதை கிடைத்தது. 1969-ல் எழுதப்பட்டது; இன்றும் வாசிக்க சுகமானது. படித்துமுடித்தபின் வாசகர்களுக்காகப் பகிரலாம் எனத் தோன்றியது. கொஞ்சம் நீளமாக இருப்பதால் இரு பகுதிகளாகத் தருகிறேன்:

ஜெயகாந்தன் சிறுகதை :

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது

ஜெயகாந்தன்

வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு, மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான், முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் ‘திக்’கென்று என்னமோ உடைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாத்திரத்திலேயே தன்னைக் கவ்விக் கொண்ட அந்தப் பயத்தினால்தான், அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததா என்று நிச்சயிக்க முடியாத நிலையில், அவனை அடையாளம் கண்டது ம் அச்சம் கொண்டதும் சுப்புக் கோனாருக்கு ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. அது பனிக்காலம்தான். இன்னும் பனிமூட்டம் விலகாத மார்கழி மாதக் காலை நேரம்தான். அதற்காக உடம்பு திடீரென்று இப்படி உதறுமா என்ன? பாதத்தின் விரல்களை மட்டும் பூமியில் ஊன்றி, குத்திட்டு அமர்ந்திருந்த கோனாரின் இடது முழங்கால் ஏகமாய் நடுங்கிற்று. எழுந்து நின்று கொண்டான். உடம்பு நடுங்கினாலும் தலையில் கட்டியிருக்கும் ‘மப்ள’ருக்குள்ளே திடீரென வேர்க்கிறதே! முண்டாசை அவிழ்த்துத் தலையை நன்றாகச் சொறிந்து விட்டுக் கொண்டான் கோனார்.

காலனி காம்பவுண்டின் இரும்பாலான கதவுகளை ஓசையிடத் திறந்து பெரிய ஆகிருதியாய் உள்ளே வந்து கொண்டிருந்த அவன், தன்னையே குறி வைத்து முன்னேறி வருவது போலிருந்தது கோனாருக்கு. அவன் கால் செருப்பு ரொம்ப அதிகமாகக் கிறீச்சிட்டது. அவன் கறுப்பு நிறத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தான். உள்ளே போட்டிருக்கும் பனியனும், இடுப்பிலணிந்த நான்கு விரற்கடை அகலமுள்ள தோல் பெல்ட்டும், அந்த பெல்ட்டிலே தொங்குகின்ற அடர்ந்த சாவிக் கொத்தின் வளையத்தை இணைத்து இடுப்பில் செருகி இருக்கும் பெரிய பேனாக் கத்தியும் தெரிய அணிந்த மஸ்லின் ஜிப்பா; அதைப் பார்க்கும்போது சாவிக் கொத்திலே இணைத்த ஒரு பேனாக் கத்தி மாதிரி தோன்றாமல், கத்தியின் பிடியிலே ஒரு சாவிக் கொத்தை இணைத்திருப்பது போல் தோன்றும் அளவுக்கு அந்தக் கத்தி பெரிதாக இருந்தது.

அவன் சுப்புக் கோனாரைச் சாதாரணமாகத்தான் பார்த்தான். தான் வருகிற வழியில் எதிரில் வருகிற எவரையும் பார்ப்பதுபோல்தான் பார்த்தான். போதாதா கோனாருக்கு? ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பால் கறக்கவும் முடியாமல், பசுவின் காலை அவிழ்க்கவும் முடியாமல் தன்னைக் கடந்து செல்லும் அவனது முதுகைப் பார்த்தவாறு உறைந்து போய் நின்றிருக்கும் கோனாரைப் பார்த்து, வேப்ப மரத்தில் கட்டிப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிக்கு என்ன மகிழ்ச்சியோ? ஒரு துள்ளுத் துள்ளிக் கட்டை அவிழ்த்துக் கொண்டு பசுவின் மடியில் வந்து முட்டியதைக் கூட அவன் பார்க்கவில்லை.

வழக்கம்போல் படுக்கையிலிருந்து எழுந்ததும் பசுவின் முகத்தில் விழிப்பதற்காக ஜன்னல் கதவைத் திறந்த முதல் வீட்டுக் குடித்தனக்காரரான குஞ்சுமணி , இந்த மஸ்லின் ஜிப்பாக்காரனின் – காக்கை கூடு கட்டிய மாதிரி உள்ள கிராப்பையும், கிருதாவையும் பார்த்து முகம் சுளித்துக் கண்களை மூடிக் கொண்டார். கண்ணை மூடிக் கொண்ட பிறகுதான்,  மூடிய கண்களுக்குள்ளே அவனை அவருக்கு அடையாளம் தெரிந்தது. மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தார். அவனேதான்!

அவனைத் துரத்திக் கொண்டு யாராவது ஓடி வருகிறார்களா என்று பார்ப்பதற்காகக் குஞ்சுமணி வெளியில் ஓடி வந்தார்.

அப்போது அவன் அவரையும் கடந்து மேலே போய்க் கொண்டிருந்தான். வெளியில் வந்து பார்த்த குஞ்சுமணி, பசுவின் காலைக் கட்டிப்போட்டு விட்டு,  தன் கால்களையும் பயத்தால் கட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் சுப்புக் கோனாரைப் பார்த்தார். கோனாருக்குப் பின்னால் காம்பவுண்டு ‘கேட்’டுக்கு வெளியே நின்றிருந்த அந்த ஜட்கா வண்டியிலிருந்துதான் இவன் இறங்கி வருகிறானா என்று குஞ்சுமணியால் தீர்மானிக்க முடியவில்லை. ஏனெனில் – தெருவோடு போகிற வண்டி தானாகவே அதன் போக்கில் நின்றிருக்கலாமென்று தோன்றுகிற விதமாக அந்த ஜட்கா வண்டியின் குதிரை, பின்னங்கால்களை முழங்கால் வளையப் பூமியில் உந்தி விறைத்துக் கொண்டு புழுதி மண்ணில் நுரை கிளம்பச் சிறுநீர் கழித்த பின், கழுத்துச் சலங்கை அசைய அப்போதுதான் நகர ஆரம்பித்திருந்தது. காலையில் தனக்கு வரிசையாகக் காணக் கிடைக்கின்ற ‘தரிசன’ங்களை எண்ணிக் காறித் துப்பினார் குஞ்சுமணி. துப்பிய பிறகுதான் ‘அவன் திரும்பிப் பார்த்துவிடுவானோ’ என்று அவர் பயந்தார். அந்தப் பயத்தினால், தான் துப்பியது அவனைப் பார்த்து இல்லை என்று அவனுக்கு உணர்த்துவதற்காக, “தூ! தூ! வாயிலே கொசு பூந்துட்டது” என்று இரண்டு தடவை பொய்யாகத் துப்பினார் குஞ்சுமணி.

அவன் அந்தக் காலணியின் உள்ளே நுழைந்து இரண்டு பக்கமும் வரிசையாய் அமைந்த அந்தக் குடியிருப்பு வீடுகளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல், அவற்றின் உள்ளே மனிதர்கள் தான் வாழுகிறார்களா என்றூ அறியக் கூட சிரத்தையற்றவனாய், தனது இந்த வருகையைக் கண்டபின் இங்கே உள்ள அத்தனை பேருமே ஆச்சரியமும், அச்சமும், கவலையும், கலக்கமும் கொள்வார்கள் என்று தெரிந்தும், அவர்களின் அந்த உணர்ச்சிகளைத் தான் பொருட்படுத்தவில்லை என்று காட்டிக் கொள்ளுகிற ஓர் அகந்தை மாதிரி, ‘இங்கே இருக்கும் எவனையும் போல் எனக்கும் இங்கு நடமாட உரிமை உண்டு’ என்பதைத் தனது இந்தப் பிரசன்னத்தின் மூலம் ஒரு மெளனப் பிரகடனம் செய்கின்ற தோரணையில், பின்னங் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்புறம் கோத்த உள்ளங்கைகளைக் கோழிவால் மாதிரி ஆட்டிக் கொண்டு, ‘சரக் சரக்’ என்று நிதானமாய், மெதுவாய், யோசனையில் குனிந்த தலையோடு மேலே நடந்து கொண்டிருந்தான்.

அந்த அகந்தையையும், அவனது மெளனமான இந்தப் பிரகடனத்தையும்தான் ,குஞ்சுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், தாங்கிக் கொள்ளாமல் வேறென்ன செய்வது? ஏற்கனவே ஒரு பக்கம் பயத்தால் படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனத்துள், அவனது இந்த நடையைப் பார்த்ததும் கோபமும் துடிதுடிக்க ஆரம்பித்தது. ஆனால், அறிவு நிதானமாக வேலை செய்தது அவருக்கு.

“இவன் எதற்கு இங்கு வந்திருப்பான்! இவன் நடையைப் பார்த்தால் திருடுவதற்கு வந்தவன் மாதிரி இல்லை. எதையோ கணக்குத் தீர்க்க வந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நிதானம் இவன் நடையில் இருக்கிறதே…. ஆள் அப்போ இருந்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் சதை போட்டிருக்கான். அப்போ மட்டும் என்ன…. சுவரேறிக் குதிச்ச வேகத்திலே கீழே விழுந்து, முழங்காலை ஒடிச்சுக்காமல் இருந்திருந்தான்னா அத்தனை பேரையும் அப்படியே அள்ளித் தூக்கித் தூர எறிஞ்சுட்டு ஓடிப் போயிருப்பான்… அன்னிக்கு முழங்கால்லேருந்து கொட்டின ரத்தத்தையும், பட்டிருந்த அடியையும் பார்த்தப்போ, இவனுக்கு இன்னமே காலே விளங்காதுன்னு தோணித்து எனக்கு. இப்போ என்னடான்னா நடை போட்டுக் காட்டறான், நடை! அது சரி! இப்போ இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?… என்ன பண்ணினாப் போவான்?… இவன் வந்திருக்கறது நல்லதுக்கில்லைன்னு தோணறதே. இன்னிக்கு யார் மொகத்திலே முழிச்சேனோ? சித்தமின்னே இவன் மொகத்திலே தான் முழிச்சேனோ?…” என்ற கலவரமான சிந்தனையோடு சுப்புக் கோனாரைப் பரிதாபமாகப் பார்த்தார், குஞ்சுமணி. அந்தப் பார்வையில் சுப்புக் கோனாரின் உடம்பையும், அந்த ‘அவனு’டைய உடம்பையும் ஒப்பிட்டு அளந்தார்.

‘கோனாருக்கு நல்ல உடம்புதான்… தயிர், பால், வெண்ணெய், நெய்யில் வளர்ந்த உடம்பாச்சே! சரிதான்! ஆனால், அடி தாங்குமோ? அவனுக்கு அன்னிக்கு முழங்காலிலே அடி படாமல் இருந்திருந்தா, இந்த சுப்புக் கோனார், கீழே விழுந்திருந்த அவன் முதுகிலே அணைக்கயத்தாலே வீறு வீறுன்னு வீறி இருப்பானா! அந்தக் கயறே ரத்தத்திலே நனைஞ்சு போயிடுத்தே!… அடிபட்டு ரத்தம் கொட்டற அந்த முழங்காலிலே ஒண்ணு வச்சான். அவ்வளவுதான்! பயல் மூர்ச்சை ஆயிட்டான். அதுக்கப்புறம் பொணம் மாதிரின்னா அவனை இழுத்துண்டு வந்து, வேப்பமரத்தோட தூக்கி வச்சுக் கட்டினா… அப்புறம் அவன் முழிச்சுப் பார்த்தப்போன்னா உயிர் இருக்கறது தெரிஞ்சது… ‘தண்ணி தண்ணி’ன்னு மொனகினான். நான்தான் பால் குவளையிலே தண்ணி கொண்டு போய்க் குடுத்தேன். குடுத்த பாவி அத்தோடே சும்மா இருக்கப் படாதோ! ‘திருட்டுப் பயலே! உனக்குப் பரிதாபப் பட்டா பாவமாச்சே!’ன்னு பால் குவளையாலேயே கன்னத்திலே ஓங்கி இடிச்சேன்… தண்ணி குடிச்ச வாயிலேருந்து கொடகொடன்னு ரத்தம் கொட்டிடுத்து.  அவன் கண்ணைத் திறந்து கறுப்பு முழியைச் சொருகிண்டு என்னைப் பார்த்தான். அதுக்கு அர்த்தம் இப்போன்னா புரியறது…’

‘எலே பாப்பான், இருடா வந்து பாத்துக்கறேன்’ங்கற மாதிரி அன்னிக்கே தோணித்து. இப்போ வந்திருக்கான்… நான் தண்ணி குடுத்தேனே… அதை மறந்திருப்பானா என்ன? எனக்கென்ன – மத்தவா மாதிரி ‘ஒருத்தன் வகையா மாட்டிண்டானே, கெடைச்சது சான்ஸ்’னு போட்டு அடிக்கற ஆசையா? ‘இப்படித் திருடிட்டு, ஓடிவந்து, இவா கையிலே மாட்டிண்டு, அடி வாங்கி, தண்ணி தண்ணின்னு தவிக்கறயே… நோக்கென்னடா தலையெழுத்து?’ன்னு அடிச்சேன். இல்லேங்கல்லை… அடிச்சேன்… அவனுக்கு அடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்போ திருப்பி அடிக்கத்தான் அவன் வந்திருக்கான். எனக்கு நன்னாத் தெரியறது. அவன் நடையே சொல்றதே! நன்னா, ஆறு மாசம் ஜெயில் சாப்பாட்லே உடம்பைத் தேத்திண்டு வந்திருக்கான். வஞ்சம் தீக்கறதுக்குத்தான் வந்திருக்கான்.  பாவம்! இந்த சுப்புக் கோனாரைப் பார்க்கறச்சேதான் பாவமா இருக்கு.. அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானே? இவன் கணக்குத்தான் அதிகம். என்னமா அடிச்சான்! அடிக்கறச்சே மட்டும் நன்னா இருந்ததோ? இப்போ திருப்பி தரப் போறான்… நேக்கும்தான்… என் கணக்கு ஒரு அடிதான்… ஆனால், அதை நான் தாங்கணுமே! இந்தக் காலனிலே இருக்கிறவாள் எல்லாருமே ஆளுக்கு ஒரு தர்ம அடி போட்டா… அப்படி இவன் என்ன மகா சூரன்? எல்லாரையுமா இவன் அடிச்சுடுவான்?” என்ற எண்ணத்தோடு மறுபடியும் சுப்புக் கோனாரின் உடம்பை அளந்து பார்த்தார் குஞ்சுமணி. அவன் உடம்போடு தன் உடம்பையும் – ஏதோ இலங்கைக்குப் பாலம் போடும்போது அணில் செய்த உதவி மாதிரி தன் பலத்தையும் கூட்டி, அதன் பிறகு தானும் சுப்புக் கோனாரும் சேர்ந்து போடுகிற கூச்சலில் வந்து சேருவார்கள் என்று நம்புகிற கூட்டத்தின் பலத்தையும் சேர்த்துப் பெருக்கிக் கொண்ட தைரியத்தோடு குஞ்சுமணி பலமாக ஒருமுறை – இருமினார்! அவர் என்னமோ அவனை மிரட்டுகிற தோரணையில் கனைத்து ஒரு குரல் கொடுக்கத் தான் நினைத்தார். அப்படியெல்லாம் கனைத்துப் பழக்கமில்லாத காரணத்தினாலோ, அல்லது நாள் முழுவதும் அந்த நடராஜா விலாஸில் சரக்கு மாஸ்டராக அடுப்படிப் புகையில், கடலை எண்ணெயில் உருட்டிப் போட்ட புளி உருண்டை தீய்கிற கமறலில் இருமி இருமி நாள் கழிக்கிற பழக்கத்தினாலோ, கனைப்பதாக நினைத்துக் கொண்டு அவரால் இருமத்தான் முடிந்தது. அவன், அவரையோ, அவர் இருமலையோ கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டு வாசற்படிகளில் ஏறினான்.

“நல்ல இடம்தான் பார்த்திருக்கான். திண்ணையிலே உக்காந்துக்கப் போறான். பக்கத்திலே இருக்கிற குழாயடிக்கு எப்படிப் பொம்மனாட்டிகள் வந்து தண்ணி பிடிப்பா? இதோ! இன்னும் சித்த நாழியிலே எங்க அம்மா ரெண்டு குடத்தையும் கொண்டு வந்து திண்ணையிலே வச்சுட்டு, ‘குஞ்சுமணிக் கண்ணா! என் கண்ணோல்லியோ? ரெண்டே ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்து குடுத்துடுடா’ன்னு கெஞ்சப் போறாள். பாவம். அவளுக்கு உக்காந்த இடத்திலே சமைச்சுப் போடத்தான் முடியும். தண்ணிக் குடம் தூக்க முடியுமா என்ன? ரெண்டு குடத்தையும் எடுத்துண்டு நான் குழாயடிக்குப் போகப் போறேன். அப்படியே அலாக்கா என்னைத் திண்ணை மேலே தூக்கி… சொல்லிடணும்…. ‘ஒரு அடி தாம்பா தாங்க முடியும். அதோட விட்டுடணும்… அவ்வளவுதான் என் கணக்கு’ன்னு சொல்லிடணும். நியாயப்படி பார்த்தா அவன் முதல்லே சுப்புக் கோனாரைத்தானே அடிக்கணும்? இந்தக் கோனாருக்கு அவனை அடையாளம் தெரியலியோ?

“ஏய், சுப்பு! பாத்துண்டு நிக்கறீயே… ஆளை உனக்கு அடையாளம் தெரியலையா?” என்று குரலைத் தாழ்த்திச் சுப்புக் கோனாரை விசாரித்தார், குஞ்சுமணி.

“அடையாளம் எனக்குத் தெரியுது சாமி. என்னையும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோன்னுதான் யோசிக்கிறேன்” என்று முணுமுணுத்தான் சுப்புக் கோனார்.

அந்த நேரம், கையில் பால் செம்புடன் வெளியில் வந்த குஞ்சுமணியின் தாயார் சீதம்மாள், சுப்புக் கோனார் பாலைக் கறக்காமல் தன் பிள்ளையாண்டானுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதுவும் அவன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதைத் தானும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், காதை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துச் செவி மடலில் செருகிக் கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள்.

சாதாரணமாகக் குஞ்சுமணி யாருடனும் பேசமாட்டார். காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியாகப் பசுவைத் தரிசனம் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டு வெற்றிலை சீவல் போட ஆரம்பிப்பார். சீதம்மாள் பாலை வாங்கிக் கொண்டு போய், காப்பி கலந்து, அவரைக் கூப்பிடுவதற்கு முன் இரண்டு தடவையாவது வெற்றிலை போட்டு முடித்திருப்பார் குஞ்சுமணி. காப்பி குடித்த பிறகு இன்னொரு முறை போடுவார். வெற்றிலை, சீவல், புகையிலை அடைத்த வாயுடன் இரண்டு குடங்களையும் தூக்கிக் கொண்டு குழாயடிக்கு வருவார். அவர் அதிகமாகப் பேசுகின்ற பாஷையே ‘உம்’, ‘ம்ஹீம்’ என்ற ஹீங்காரங்களும் கையசைப்பும்தான். அப்படிப்பட்ட குஞ்சுமணி காலையில் எழுந்து வெற்றிலை கூடப் போடாமல் இந்தக் கோனாரிடம் போய் ஏதோ பேசுகிறார் என்றால், அது ஏதோ மிக அவசியமான, சுவாரசியமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த சீதம்மாள், மோப்பம் பிடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு நாலு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள். அவ்விதம் அவள் பார்க்கும்போது அந்தப் பூட்டிக் கிடக்கும் வீட்டின் முன்னால் நின்றிருக்கும் அவன், இவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தான்.

“இங்கேதான் பார்க்கறான்… அம்மா, நீ ஏன் அங்கே பார்க்கறே?” என்று பல்லைக் கடித்தார் குஞ்சுமணி.

“யார்ரா அவன்? பூட்டிக் கிடக்கற வீட்டண்ட என்ன வேலை? கேள்வி முறை கிடையாதா? யாரு நீ?” என்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் குரலை உயர்த்திச் சப்தமிட்டவாறே பால் செம்புடன் கையை நீட்டி நீட்டிக் கேட்டுக்கொண்டு, அவனை நோக்கி நடந்த சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் குஞ்சுமணி.

“அவன் யாரு தெரியுமோ? முன்னே ஒரு நாள் காலையிலே எங்கேயோ திருடிட்டு, அவா துரத்தறச்சே ஓடி வந்து நம்ப காம்பவுண்டுச் சுவரிலே ஏறிக் குதிச்சுக் காலை ஒடிச்சிண்டு, இந்தக் கோனார் கையிலே மாட்டிண்டு அடிபட்டானே….”

“சொல்லு…”

“பத்து மணிக்குப் போலீஸ்காரன் வரவரைக்கும் வேப்பமரத்திலே கட்டி வச்சு, போறவா வரவா எல்லாரும் ஆளுக்கொரு தர்ம அடி போட்டாளே…”

“ஆமா…”

“நான் கூடப் பால் குவளையாலே கன்னத்திலே ஓங்கி இடிச்சேனே… அவன்தான் – அந்தத் திருடன்தான் வந்திருக்கான்… திருடறதுக்கு இல்லே. எல்லாருக்கும் திருப்பிக் குடுக்கறத்துக்கு…”

“குடுப்பான்… குடுப்பான். மத்தவா கை பூப்பறிச்சுண்டிருக்குமாக்கும்… திருடனைக் கட்டி வச்சு அடிக்காம கையைப் பிடிச்சு முத்தம் குடுப்பாளாக்கும்? என்ன கோனாரே! இந்த அக்கிரமத்தைப் பாத்துண்டு நிக்கறீரே? மரியாதையா காம்பவுண்டை விட்டு வெளியே போகச் சொல்லும்… இல்லேன்னா போலீஸைக் கூப்பிடுவேன்னு சொல்லும்” என்று அந்தக் காலனியையே கூட்டுகிற மாதிரி ‘ஓ’ வென்று கத்தினாள் சீதம்மாள்.

அவளுடைய  கூக்குரல் கிளம்புவதற்கு முன்னாலேயே அந்தக் காலனியில் ஓரிருவர் பால் வாங்குவதற்காகவும், குழாயடியில் முந்திக் கொள்வதற்காகப் பாத்திரம் வைக்கவும் அங்கொருவர், இங்கொருவராய்த் தென்படலாயினர்.

இப்போது சீதம்மாளின் குரல் கேட்ட பிறகு, எல்லாருமே அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணையின் மேல் வந்து உட்கார்ந்திருக்கும் அந்த அவனைப் பார்த்தனர்; பார்த்ததும் அடையாளமும் கண்டனர். சுப்புக் கோனார் மாதிரியும், குஞ்சுமணி மாதிரியும் அவனது பிரசன்னத்தைக் கண்டு அவர்களும் அஞ்சினர்.

கூட்டம் சேர்ந்த பிறகு கோனாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. ‘என்ன இவன்? பெரிய இவன்!  திருட்டுப் பயல்தானே? அன்னிக்கு வாங்கின அடி மறந்திருக்கும். என்ன உத்தேசத்தோட வந்திருப்பான்னுதான் யோசிச்சேன்…’ மப்ளரை உதறித் தோளில் போட்டுக் கொண்ட கோனார், பலமாக ஒரு கனைப்புக் கனைத்தான். ‘ம்…’ என்று குஞ்சுமணி அந்தக் கனைப்பை மனசுக்குள் சிலாகித்துக் கொண்டார். கோனார், தைரியமாக, கொஞ்சம் மிரட்டுகிற தோரணையுடனேயே அவன் உட்கார்ந்திருந்த அந்தத் திண்ணையை நோக்கி நடந்தான். அவனுக்குத் துணையாக – ஏதாவது நடந்தால் விலக்கி விடவோ, அல்லது கூச்சலிடவோ ஒரு ஆள் வேண்டாமா? அதற்காக – குஞ்சுமணியும் கோனாரின் பின்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.

“எலே..!  உன்னை யாருன்னு இங்கே எல்லாருக்கும் தெரியும். இடம் தெரியாம வந்துட்டே போல இருக்கு. வேறே ஏதாவது தகராறு வரதுக்கு முன்னாடி இந்தக் காம்பவுண்டை விட்டு வெளியே போயிடு” என்று கோனார் சொல்லும் போது –

“ஆமாம்பா… தகராறு பண்ணாம போயிடு… நோக்கு இடமா கிடைக்காது?” என்று குஞ்சுமணியும் குரல் கொடுத்தார்.

அவன் மெளனமாக ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். பின்னர் சாவதானமாய் இடுப்பை எக்கி பெல்ட்டோ டு தைத்திருந்த ஒரு பையைத் திறந்து, நான்காய் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தைத் கோனாரிடம் கொடுத்துவிட்டு, அதிலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து, அந்தப் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.

கோனார் அந்தக் காகிதத்தைக் குஞ்சுமணியிடம் கொடுத்தான். குஞ்சுமணி அதை வாங்கிப் பார்த்ததும் வாயைப் பிளந்தார்.

“என்னய்யா கோனாரே… முதலியார் கிட்டே இரண்டு மாச அட்வான்ஸ் ஐம்பது ரூபாய் கட்டி, ரசீது வாங்கிண்டு வந்திருக்கானய்யா…” என்று ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டார்.

“நன்னா இருக்கே, நாயம்! சம்சாரிகள் இருக்கற எடத்துலே திருட்டுப் பயலைக் கொண்டு வந்து குடி வெக்கறதாவது? இந்த முதலியாருக்கென்ன புத்தி கெட்டா போயிடுத்து? ஏண்டா குஞ்சுமணி! நானும் இந்த வீடு காலியான பதினைந்து நாளா சொல்லிண்டு இருக்கேனோன்னோ? நம்ப சுப்புணி பிள்ளை பட்டம்பி இங்கே ஏதோ ‘கோப்பரேட்டி’ பரீட்சை எழுத வரப் போறேன்னு கடிதாசி எழுதினப்பவே சொன்னேனே…. ‘அந்த முதலியார் மூஞ்சியிலே அம்பது ரூபாக் காசை ‘அடுமாசி’யா விட்டெறிஞ்சுட்டு இந்த இடத்தைப் பிடிடா’ன்னு சொன்னேனோன்னோ?… நேக்கு அப்பவே பயம்தான்… வயசுப் பொண்கள் இருக்கற எடத்துலே எவனாவது கண்ட கவாலிப் பயல் வந்துடப்படாதேன்னு… பாரேன்…. அவனும் அவன் தலையும்…. கட்டால போறவன்… பீடி வேறே பிடிச்சுண்டு… என்ன கிரகசாரமோ?” என்று முடிவற்று முழங்கிக் கொண்டிருந்த சீதம்மாளை வாயைப் பொத்தி அடக்குவதா, கழுத்தை நெரித்து அடக்குவதா என்று புரியாத படபடப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முகத்துக்கு நேரே இரண்டு கையையும் நீட்டி –

“அவன் காதுலே விழப் போறது. வாயை மூடு…. அவன் கையால எனக்கு அடி வாங்கி வெக்கறதுன்னு கங்கணம் கட்டிண்டு நிக்கறயா? எவனும் எங்கேயும் வந்துட்டுப் போறான். நமக்கென்ன?” என்று கூறிச் சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் குஞ்சுமணி.

“நேக்கு என்னடா பயம்? நோக்கு பயமா இருந்தா, நீ ஆத்துக்குள்ளே இரு… புருஷாள்ளாம் வெளிலே போயிடுவேள்; நாங்க பொம்மனாட்டிகள்னா வயத்துலே நெருப்பைக் கட்டிண்டு இங்கே இருக்கணும்.  இப்பவே குழாயடியிலிருந்த தவலையைக் காணோம்… கொடியிலே உலர்த்தியிருந்த துணியைக் காணோம்… போறாக்குறைக்கு திருடனையே கொண்டு வந்து குடி வச்சாச்சு.  காதுலே,  மூக்கிலே ரெண்டு திருகாணி போட்டுண்டிருக்கற கொழந்தைகளை எப்படித் தைரியமா வெளிலே அனுப்பறது? ஓய்… கோனாரே, பேசாம போய் போலீசுலே ஒரு ‘கம்ப்ளேண்டு’ குடும். இதே எடத்துலே இவனைப் பிடிச்சுக் குடுத்திருக்கோம்” என்று வழி நெடுக, வாயைப் பொத்துகிற மகனின் கையைத் தள்ளித் தள்ளிப் புலம்பியவாறு வீட்டுக்குள் சென்ற சீதம்மாள், உள்ளே இருந்தும் உரத்த குரலில் அந்தத் தெருவுக்கே அபாய அறிவிப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில், சுப்புக் கோனார், வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த பசுவின் மடியில் பாலை ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைப் பார்த்துவிட்டுக் கோபமாக வைது கொண்டு ஓடி வந்தான். பசுவின் மடியில் கொஞ்சங்கூட மிச்சம் வைக்காமல், உறிஞ்சிவிட்ட எக்களிப்பில், வாயெல்லாம் பால் நுரை வழியத் துள்ளிக் கொண்டிருந்தது கன்றுக் குட்டி. பசு, கோனாரைக் கள்ளத்தனமாகப் பார்த்தது. ஆத்திரமடைந்த கோனார் , பசுவின் காலைக் கட்டியிருந்த அணைக் கயிற்றை அவிழ்த்துச் ‘சுரீர்’ என்று ஒன்று வைத்தான். அடுத்த அடி கன்றுக் குட்டிக்கு. பசுவும் கன்றும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு காம்பவுண்டு கேட்டைத் தாண்டி ஓடின.

கையில் பால் செம்புடன் வெளியில் வந்த சீதம்மாளைப் பார்த்துச் சுப்புக் கோனார் கத்தினான்: “பாலுமில்லை ஒண்ணுமில்லை, போங்கம்மா.  கன்னுக்குட்டி ஊட்டிப்பிடுத்து… இந்தத் திருட்டுப் பய முகத்திலே முழிச்சதுதான்” என்று சொல்லிக் கொண்டே இது தான் சந்தர்ப்பமென்று அவனும் அங்கிருந்து நழுவினான்.

திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டிருந்த குஞ்சுமணி, “மத்தியானத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடு” என்று குரல் கொடுத்தார். ‘அதற்குள்ளே இங்கு என்னென்ன நடக்கப் போகிறதோ?’ என்று எண்ணிப் பயந்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் காலனி முழுவதும், ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாள் விடியற்காலையில், எங்கோ திருடிவிட்டு, தப்பி ஓடிவந்து, சுவரேறிக் குதித்து, இங்கே சிக்குண்டு, எல்லோரிடமும் தர்ம அடி வாங்கி, போலீசில் ஒப்படைக்கப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்ற ஒரு பழைய கேடி, இங்குள்ள, இத்தனை நாள் காலியாக இருந்த, இதற்கு முன் ஒரு கல்லூரி மாணவன் தங்கிப் படித்துக் கொண்டிருந்த,  அந்தக் கடைசிப் போர்ஷனில் குடி வந்திருக்கிறான் என்கிற செய்தி பரவிற்று.

(கதை தொடர்கிறது .. அடுத்த பகுதி சுவாரஸ்யமானது. விடாது படிக்கவும்!)

**நன்றி: அழியாச்சுடர்கள்/ ராம்பிரசாத், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா, புது தில்லி –

’இந்திய எழுத்தாளர்கள் வரிசை-’ஜெயகாந்தன் சிறுகதைகள்’’/ஜெயகாந்தன்)

 

கு.ப.ரா. சிறுகதை: நூருன்னிஸா

கு.ப. ராஜகோபாலனின் அழகான கதைகள் பல. எதைத் தருவது இங்கே, எதை விடுவது? எளிதல்ல அது. எனினும், ஒரு கதை கீழே. படிப்பவர்கள், இது இந்திய சுதந்திரத்துக்கு முன்னாலான காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதை முதலில் புரிந்துகொள்வது நல்லது. அந்தக் காலத்தில் ஜெயிலுக்குப்போவது என்பது, சுயவாழ்வைப்பற்றிக் கவலைப்படாமல், நாட்டின் சுதந்திரத்தை மட்டுமே மனதில்கொண்டு, அந்நிய அரசிற்கெதிராக செயல்பட்ட தேசபக்தர்களின் காரியங்களின் விளைவு. அது பெருமைக்குரிய, தீரச் செயலாகக் கருதப்பட்ட உன்னத காலம்..

சிறுகதை:  நூருன்னிஸா  

-கு.ப.ரா.

நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம்  இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசிய இயக்கத்திலோ ஒரு தேக்கம்; காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் அப்பொழுது சிதைவுற்றுக் கிடந்தது.

தபாற்காரன் ஒரு கற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளுடன், ஒரு கவரையும் கொண்டு வந்து கொடுத்தான். தன்னந்தனியாக எனக்கு இவ்வுலகில் யார் கடிதம் எழுதக் கூடுமென்று எண்ணிக் கொண்டே, அதை உடைத்துப் படித்தேன். பின்வருமாறு ஆங்கிலத்தில் அது எழுதப்பட்டிருந்தது:

மதராஸ்.

குலாம் காதர் கான், எம்.ஏ.,

ப்ரோ. டிப்டி கலெக்டர்.

என் அருமைத் தோழா,

நீ என்னை மறந்திருப்பாயென நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாகக் கடிதம் எழுதாதற்குக் காரணம், எனக்கு நீ இருக்குமிடம் தெரியாததுதான். இப்பொழுதும், இந்தக் கடிதத்திற்கு மேலேற்படும் நமது சந்திப்பிற்கும் காரணம் என் தங்கை நூருன்னிஸா. நாம் படித்தபொழுது  நம்முடன் விளையாடினவள், நினைவு இருக்கிறதா ? தற்செயலாகச் சென்ற பத்தாம் தேதிப் பத்திரிகையில் உன் பெயரைக் கண்டு அதை எனக்குக் காட்டினாள். அவள் உன் ‘இனிஷியல்‘களைக் கூட நினைவில் வைத்திருந்ததால்தான் நீ என்று நிச்சயிக்க முடிந்தது. உடனே அவள் சொன்னதன் பேரில், உன் முகவரியைக் கேட்டு வேலூருக்கு, ‘டெமி அபிஷியலா‘கத் தந்தி அடித்துப் பதில் வரவழைத்தேன். அது இன்று கிடைத்தது.

நமது பன்னிரண்டாவது வயதில், திருச்சியில் படிக்கும் போது, ஒரு சிறுபிள்ளை சபதம் செய்து கொண்டோமே, நினைவு இருக்கிறதா; நாம் ஒருவரை ஒருவர் அறியாமல் மணம் செய்துகொள்வதில்லை என்று? அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தக் கடிதம். சென்னையில் எனக்குத் திருமணம். பத்திரிகை இதனுடன் இருக்கிறது. நீ வந்தே தீர வேண்டும்.

உன் அன்புள்ள,

குலாம் காதர்.

இந்தக் கடிதம் மின்னலைப் போல் என் மனத்தின் மறதி இருளை, அப்பொழுது பளிச்சென்று போக்கிற்று. இந்த பத்து ஆண்டுகளாகப் பரதேசிபோல் திரிந்த பொழுதும், உப்பு சத்தியாக்கிரகம் காரணமாக ஆறுமாதம் சிறையில் இருந்தபொழுதும், அடிக்கடி என் மனத்தில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண் உருவம் யாருடையது என்று தவித்தேன்; அப்பா! அது நூருன்னிஸாவுடையதுதான்!  ஒரு சிறுமியின் முக்காடிட்ட, குற்றமற்ற முகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறு என்று அசைந்தாடும் இரண்டு குறைகூறும் விழிகள். ரோஜாக்களினிடையே மல்லிகைபோல கீழ் இதழைச் சற்றே கடித்து வெளியே தொற்றின பல்வரிசை. இத்தகைய உருவம் மோகினிபோல் என் மனத்தில் குடிகொண்டு ஆட்டி வைத்ததே – அது அவளுடையது!

அவளுடைய மனநிலையும், என் மனநிலையை ஒத்திருக்கக் கூடுமா என்ன! இல்லாவிட்டால் இக்கடிதத்திற்கு ஏன் காரணமாகிறாள்? கூட்டத்திற் கலந்து திரியும் என்னைக் குறித்தல்லவோ அவள் கூப்பிடுவது போலிருக்கிறது!

2

குலாம் காதருக்கும் எனக்கும் இருக்கும் இந்த நட்பு தொடங்கியதே மிகவும் வேடிக்கையான செய்தி. எனது பத்தாம் வயதில் என்னை என் தகப்பனார், திருச்சியில் ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் சேர்த்தார். அங்கே குலாம் என் ‘பக்கத்துப் பையன்‘. பெண்சாயல் கொண்ட, வளர்ந்த வாலிபன்.

ஒருநாள் கணக்குப் போடும்பொழுது குலாம் என் சிலேட்டைப் பார்த்துக் ‘காப்பி ‘ அடித்து விட்டான். அது எப்படி வெளியாயிற்றென்றால், நான் பிசகாய்ப் போட்டிருந்த வழி அவனுடைய சிலேட்டிலும் காணப்பட்டது. உடனே, ஆசிரியர், நான் ‘காப்பி‘ அடித்தேனென்று என்னைப் பிரம்பால் அடித்தார்.

குலாம் அன்று மாலை வீட்டுக்குப் போகும்பொழுது என்னைக் கைதட்டிக் கூப்பிட்டான். ‘நீ ஏன் என்மீது குற்றஞ் சாட்டவில்லை ?‘ என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை.

அவனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியாது. ‘அடே, என்னோடு எங்க மோட்டாரில் எங்க வீட்டுக்கு வா. அப்புறம் உங்க வீட்டில் கொண்டு விடுகிறேன் ‘ என்றான்.

காரில் ஏறினோம். காரில் சவாரி செய்ய வேண்டுமென்ற என் விருப்பம் பூர்த்தியாயிற்று. பதினைந்து நிமிடத்தில் தென்னூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டு வாசலுக்குக் கார் விர்ரென்று போய் நின்றது.

கயாசுதீன் சாகேப் ஒரு பெரிய வியாபாரி. ஆற்காடு நவாப் வம்சத்தைச் சேர்ந்தவராம். வீட்டின் முன் கூடத்தில் பெரிய வெல்வெட்டுத் திண்டுகள் போட்டுச் சாய்ந்து கொண்டிருந்தார். எதிரில் ஹுக்காவும், பாத்திரம் ஒன்றும் இருந்தன. எங்கே பார்த்தாலும், நிலைக் கண்ணாடிகள், பெரிய, பெரிய மொகலாயப் படங்கள், பளிங்கு மயில் ஒன்றில் செருகப்பட்டிருந்த ஊதுவத்திகளிலிருந்து வாசனை கம்மென்று வீசிற்று. காலுக்கு மெத்தின்றிருந்த ரத்தினக் கம்பளங்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன.

குலாம் குதித்துக்கொண்டு போய் அவரிடம் ஏதோ சொன்னான். திகைத்துப் போயிருந்த என்னைப் பார்த்து அவர், ‘இங்கே வா! ‘ என்று கூப்பிட்டார். பிற்காலத்தில் நான் மெளலானா ஷௌகத் அலியைப் பார்க்கும்போதெல்லாம், அவர் ஞாபகம் எனக்கு வரும். குலாம், என்னை அவரிடம் இழுத்துக் கொண்டு போனான். அவர் என்னைத் தடவிக் கொடுத்துக் கொண்டே தம் மனைவியைக் கூப்பிட்டார். உள்ளேயிருந்து அந்த அம்மாளும், அவளுடைய இரண்டு பெண்களும் வந்தார்கள். இப்பொழுது நினைவிலிருந்து சொல்லுகிறேன். அந்த அம்மாளுக்குச் சுமார் முப்பது வயசு இருக்கலாம். உயர்ந்து வளர்ந்த அழகான மாது. அவள் மெதுவாக ஒவ்வோர் அடி எடுத்து வைத்து வந்த பொழுதும் கால் சலங்கை கலீர் கலீரென்று சத்தம் செய்தது. மூத்த பெண் அலிமா, குட்டையாயும் பருமனாயும் இருந்தாள். இளைய பெண் நூருன்னிஸாவோ குலாமைப்போலவே இருந்தாள். அப்பொழுது அவளுக்கு எட்டு வயசு இருக்கலாம். இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லும் ஆற்றல் எனக்கு அப்பொழுது இருந்ததா என்ற சந்தேகம் வேண்டாம். கிடையாது. ஆனால் என் மனத்தில் ‘போட்டோ‘ பிடித்ததுபோல் பதிந்திருக்கிற அம்சங்களையே இப்போது எடுத்து எழுதுகிறேன்.

நூருன்னிஸாவின் உருவம் என் மனத்தில் வரைந்த சித்திரம்போல் நிற்கிறது. நான் முதல்முதலில் பார்த்த அன்று, அவள் சரிகைமயமாயிருந்த பச்சைப் பாவாடை உடுத்திருந்தாள். இலேசான மஞ்சள் பட்டு ரவிக்கையும், ரோஜாப் பட்டுத் தாவணியும் அணிந்திருந்தாள். காலில் காப்பு, பாதரசம், கையில் காப்புகள், விரல்களில் மோதிரங்கள். கர்நாடக முஸ்லீம்களைப் போல குருடு முதலியன இல்லை. முகம் என் மனத்தில் அப்படியே இருக்கிறது. நீண்ட புருவங்களும் தலைமுடியும் கன்னங்கறேலென்று இருந்தன. பின்னல் இல்லாமல் தலைமுடியை முடிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. அவளது உடலின் சிவப்புக்கு ஈடே சொல்ல முடியாது. அவளுடைய கண்கள்.. அவற்றின் தன்மையை எடுத்துச் சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் தாமரை இதழ்கள் போன்றவை, மீனுருவம் கொண்டவை என்று கவியைப்போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

கயாசுதீன் தம் மனைவியிடம் ஏதோ சொன்னார். அவள் என்னை ஒருதரம் பார்த்துவிட்டு அலிமாவிடம் ஏதோ சொன்னாள். அலிமா உள்ளே போய் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைகள் நிறைந்த ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதை என்னிடம் கொடுத்தபோது, குலாமின் தாயினது முகத்தில் தோன்றிய அன்புப் பார்வையை நான் மறக்கவே முடியாது. என் கன்னத்தை ஒருதரம், தாய்போல தடவிக் கொடுத்தாள்.

குலாம் என்னைக் கூட்டிக்கொண்டு காருக்குச் சென்றான். அதில் ஏறி உட்கார்ந்தோம். புறப்படும்பொழுது வாசற்பக்கம் கண்ணெடுத்துப் பார்த்தேன். நூருன்னிஸா முக்காட்டைப் பல்லால் கடித்துப் பிடித்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். என் கண்களைச் சந்தித்த நிமிடமே, உள்ளே ஓடிவிட்டாள்.

அன்று முதல் நானும் குலாம் காதரும் இணைபிரியாமல் திரிந்தோம்; விளையாடினோம்; அரட்டைகள் அடித்தோம். ஆகாயக்கோட்டைகள் கட்டி மகிழ்ந்தோம். எந்நேரமும் நான் அவனுடைய வீட்டில்தான் இருப்பேன். நூருன்னிஸாவும் எங்களுடன்தான் இருப்பாள். நாங்கள் செய்வதையும் பேசுவதையும் உற்றுக் கவனித்துக்கொண்டிருப்பாள். தானும் கூட விளையாடுவாள். தெரியாமல் பின்னால் ஒளிந்து வந்து, என் கண்களைப் பொத்துவதில் அவளுக்கு ஓர் ஆனந்தம். ஏன், எனக்கும்தான் ஒருவித மகிழ்ச்சி அப்பொழுது உண்டாகும். அவளுடைய கைகள் மென்மையாக, ரோஜா மலர்போல இருக்கும். கைகளை எடுத்துவிட்டுக் கலகலவென்று சிரிப்பாள். அவளுடைய கன்னங்கள் குழிவுபடும். அச்சமயம் என் மனம் என்னவோ, நான் எடுத்துச் சொல்லமுடியாத ஒரு மகிழ்ச்சியை அடையும்.

நாலாம் ஃபாரம் வரையில், நானும் குலாமும் இப்படி இருந்தோம். திடாரென்று என் தகப்பனாரைத் திருச்சியிலிருந்து மாற்றி விட்டார்கள் பிறகு எனக்கும் குலாமுக்கும் சந்திப்பே கிடையாது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனிடமிருந்து இந்தக் கடிதம் வந்திருக்கிறதென்றால் என் மகிழ்ச்சியை என்னென்பது ? மறுநாள், இரவு வண்டியில் சென்னைக்குப் புறப்படேன்.

3

உறவினர்கள் நிறைந்த அந்தப் பங்களாவில் குலாம், என்னைத் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு பழைய நாட்களைப்பற்றிப் பேசிக்கொண்டே இருந்தான். முகம்மது காசிம் என்ற பாடகரின் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோஜா மலர்கள்! அத்தரும், பன்னீரும் நீர் பட்டபாடாய் வழங்கப்பட்டன. குலாம் என்னைப் பங்களாவின் மேல்மாடியிலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். வெகுநேரம் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். குலாமின் தாய், மகனைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள். நான் இருப்பதைப் பார்த்துச் சட்டென்று பின்வாங்கி, முகத்தை மூடிக் கொண்டாள்.

‘அம்மா யாரென்று எண்ணுகிறாய் ? நம்… ‘ என்று குலாம் பேச்சைத் தொடங்கினான்.

‘ஆம். நினைவிருக்கிறது. நலந்தானே, தம்பி ?‘ என்று கேட்டுக் கொண்டே மெதுவாக அந்த அம்மாள் முன் வந்தாள்.

‘நலந்தான், அம்மா!‘

‘எங்கே இருக்கிறாய் ?‘

‘திருச்சியில் இருக்கிறேன்.‘

‘திருமணம் ஆயிற்றோ ?‘

‘இல்லை!‘

பேசும்பொழுதே அவ்வுருவிற்குப் பின்னால், இன்னும் ஓர் இளம் உருவம் நிழல்போல நிற்பதுபோன்ற பிரமை தட்டியது எனக்கு. ஒரு நிமிடம், நூருன்னிஸாவே என்முன் தோன்றுவாளோ என்ற ஆசை. மறுநிமிடம், ‘சே! அது எப்படி முடியும்? அவள் பர்தாப் பெண் அல்லவா?’ குலாமும், கடிதத்தில் எழுதினதைத் தவிர நேரில் அவளைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே ?‘ என்ற நினைப்பு ஏற்பட்டது. அவளைப்பற்றிக் கேட்கக்கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. அவளை நிச்சயமாகப் பார்க்க முடியாதென்ற எண்ணம் ஏற்பட்ட பிறகுதான், குலாமுடன் வழக்கம்போல் பேசலானேன்.

இரவு பத்து மணிக்குக் குலாம் படுத்துக்கொள்ளச் சென்றான். எனக்கு ஒரு தனியறை ஒழித்துத் தந்திருந்தார்கள். என் தனியறையின் தனிமையில் நான் படுக்கையில், படுத்துப் புரண்டேன். மின்சார விளக்கின் வெளிச்சம் எனக்குத் தாங்க முடியாததாக இருந்ததால், அதை அணைத்துவிட்டுச் சாளரத்தைத் திறந்து வைத்தேன். அதன் வழியாக முழுநிலவு என் படுக்கையின் மேலே தன் ஒளியைப் பரப்பியது. படுக்கையில் உட்கார்ந்து கொண்டு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினேன். அதே வீட்டின் ஒரு பாகத்தில் ‘அவளும்‘ அப்பொழுது உலவிக் கொண்டிருந்தாளல்லவா!

என் இருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ ? முடியாது. பூவின் அவா, மணமாக வெளியேறி உணர்வைத் தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை, எப்படி அவள் இருதயக் கரையில் போய் மோத முடியும் ? முடியாதுதான்! அக்கடிதத்தில் தன் சகோதரனைக் கருவியாகக் கொண்டு, என்னை ஏன் இங்கு வரவழைத்தாள் பின்னே ? என்னிடத்தில் அவளுக்கு ஓர்… அதெப்படி நான் சொல்லுவது ?

இப்படி என் பேதை மனம் கேள்விகளும் மறுகேள்விகளும் போட்டுக்கொண்டு, கடல்போல அலையலையாய்ப் பொங்கிக் கொண்டிருந்தது.

நடுநிசி ஆயிற்று. எனக்குத் தூக்கம் வரவே இல்லை. பட்டணத்தின் ஓசையும் அடங்கிவிட்டது. தூரத்திலிருந்து கடலின் ஓலந்தான் காற்றில் மிதந்து வந்தது. திடாரென்று மனத்தில் ஓர் ஆவல் மூண்டது. ‘ஒருவேளை இப்பொழுது என்னை நூருன்னிஸா பார்க்க வரக் கூடுமா ? அல்லது என்னைத்தான் எங்கேயாவது எதிர்ப்பார்க்கிறாளோ ?‘ என்று நினைத்தேன்.

மெதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆம், அது நூருன்னிஸாதான்! வந்து எனக்கு அருகே இருந்த சாளரத்தின் அப்புறத்தில் நின்றாள். அதே உருவந்தான்! வயதிற்கு ஏற்ற வாட்டசாட்டம் மட்டுமே வேறாக இருந்தது. நிலவில் முகம் தெளிவாகத் தெரிந்தது. இன்னது சொல்கிறேன் என்று அறியாமல் எழுந்து நின்று, ‘எண்ணியபடி ஆயிற்றே!‘ என்றேன்.

ஒருவிரலால் தன் உதடுகளை அவள் பொத்திக் காட்டினாள். தன் மார்பில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தாள்.

‘இதை ஊருக்குப் போய்ப் படி.. நாளைக்குக் காலையிலேயே புறப்பட்டு விடு! பார்த்தாய்விட்டது. ஒரு நிமிடம் தாமதிக்கக் கூடாது‘ என்று சொல்லித் திரும்பினாள்.

சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தாள்! நிலவின் வெளிச்சத்தில் அவளுடைய அழகான முகத்தில், கலவரத்தினால் முத்து முத்தாய் வேர்வை துளித்திருந்ததைக் கவனித்தேன். நான் தாவியோடி அவள் கையைப் பற்றினேன்.

ஒரு நிமிடம் அப்படியே நின்றோம்!

மறுநொடியில் மெதுவாகக் கையை விடுவித்துக்கொண்டு, போய்விட்டாள்.

4

மறுநாள் காலை நான் பயணத்திற்குத் தயாராயிருந்ததைக் கண்டு குலாமிம் முகம் வாட்டமடைந்தது.

‘என்ன சேதி‘ என்றான்.

‘அதுதான் ஒருநாள் இருந்தாயிற்றே; மற்றொரு சமயம் சந்திப்போம். எனக்குக் கொஞ்சம் அலுவல் இருக்கிறது‘ என்றேன்.

அரைமணிக்குள் அந்தப் பங்களாவைவிட்டு வெளியேறி விட்டேன்.

திருச்சியில், காவேரிக்கரை ஓரத்தில் என் அறையிலிருந்து சாளரத்தின் வழியாகத் திரும்பவும் அதே சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தேன், எவ்வளவு மாறுபட்ட மனநிலையில்! கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்:

‘இக்கடிதத்தை என் வாக்காகவும், என் அடையாளமாகவும் நீ வைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடினபோது என் மனத்தில் உன்னிடம் ஏற்பட்ட பற்று, என்னை விட்டு இன்னமும் அகலவில்லை. ஏனென்றால், உன் உருவம் எப்போதும் சிலைபோல என் முன் நிற்கிறது. நான் என்றென்றும் இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இந்தப் பிறவியில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறி விட்டது. இனி என் நாட்களை, முன்பு அவுரங்கசீப்பின் தங்கை ஜெபுன்னிசா கழித்ததுபோல கழிக்கப்போகிறேன். என் தாயிடம், ’உனக்குத் திருமணமாகவில்லை’ என்று நீ சொன்னது, எனக்குத் திருப்தியைக் கொடுத்தது. இனிமேல் நீ வேறொரு பெண்ணிடம் ஈடுபடாமல், உன் வாழ்நாட்களை என் மனத்தோடு மட்டும் ஒன்றும்படி காலம் கழிப்பாயானால், நானும் சோர்வின்றி வாழ்வேன். ’அப்படியே செய்கிறேன்’ என்று நீ எனக்குப் பதில் எழுத வேண்டாம். நீ செய்வாய் என்று எனக்கு ஒரு திடநம்பிக்கை இருக்கிறது. அதுவே என் உயிர்நாடி.

நான் மெய்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாம் இருவரும் இவ்வுலகில் கணவன் மனைவியல்ல. எப்போதும், உடல் ஆசை வேண்டாம் நமக்கு. நினைவென்னும் வானத்தில் ஒளிரும் இன்பமெனும் முழுநிலவுக்குக் களங்கம் உண்டாக்காதிருப்போம்! சரிதானே..

– நூருன்னிஸா

அவ்வொளி மயக்கத்தில் அவளே முழுமதியின் உருவில் வந்து, என்னிடம் வாக்கு வாங்குவதுபோல் இருந்தது. என் மனமோகினியின் கட்டளைப்படி நான் உலகவழிகளில் திரிந்து வருகிறேன். நான் செய்யும் எல்லாச் செயல்களிலும்,  நான் நினைத்ததும் என் முன் தங்கப்பதுமை போல வந்து நின்று, என்னை ஊக்கி வருகிறாள். அவள் என் சோர்விலும், என் மனத்தின்முன்  குதித்துக்கொண்டு வந்து நின்று, எனக்கு ஆறுதல் தருகிறாள்.

**

அருஞ்சொற்பொருட்கள்:

1.  ஹூக்கா :  அந்தக் காலத்தில், வடநாட்டில் புகைபிடிக்கப் பயன்படுத்தப்பட்ட, உயரமாக நிற்கும் ஒரு பித்தளை சாதனம். மேல்பகுதி ஒரு சிறு கூஜாபோன்ற அமைப்பிலிருக்கும்.ஒருபக்கம் புகையிலைபோட்டு எரித்து, அடுத்ததட்டில் நீர் இருக்கும்-அதன்வழி சுத்தப்படுத்தப்பட்ட, குளிர்விக்கப்பட்ட புகை, ஒரு நீளமான குழாய்வழியாக புகைப்பவரால் அனுபவிக்கப்படும்.  மொகலாயர் காலத்தில் பிரசித்தியான ஒரு ‘ராயல்’ ஐட்டம்! இப்போதும் ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மரபுவழிக் குடும்பங்களில் முதியவர்களால் புழங்கப்படும் ஒரு சாதனம். .

2.  ‘ஃபார்ம்’ : பிரிட்டிஷ் காலத்திலும், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவிலும் சில வருடங்கள் புழக்கத்திலிருந்த ஆரம்பப் பள்ளிப்படிப்புத் திட்டம். வகுப்புகள் 1-5 : துவக்க வகுப்புகள். வகுப்பு 6 என்பது , ‘ஃபார்ம் 1’ என அழைக்கப்பட்டது.

**

நன்றி: அழியாச்சுடர்கள், ராம்பிரசாத். ‘கு.ப.ரா. எழுத்துக்கள்’ , அல்லயன்ஸ் பதிப்பகம்.

 

கு.ப. ராஜகோபாலன்

”ராஜகோபாலனைப்போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை….  அவருடைய எழுத்துகளைப் படிக்கும்பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படுகிறது. பட்டுப்போன்ற சொற்களிலும், பத்து பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலை வடிவங்களையும், உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார் அவர்!”

கு.ப.ரா. என்று தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடப்படும் கு.ப.ராஜகோபாலனைப்பற்றி, தி.ஜானகிராமன் சொன்னது, மேற்கண்டது. எழுத்தாளர்களே படித்துப் பிரமித்த புனைவெழுத்து கு.ப.ரா.வினுடையது. அவர் எடுத்துக்கொண்ட, அதே சமயம் ஏனைய எழுத்தாளர்கள் தவிர்த்துவந்த, பொருள்பற்றி, சமகால எழுத்தாளர்கள் சிலர் விமரிசனம் வைத்தார்கள்.   1934-லிலிருந்து 1944 வரை என ஒரு குறுகிய காலகட்டத்தில்தான், தமிழ் இலக்கிய உலகில் அவர் பங்காற்றியிருக்கிறார். அந்தக் காலவெளியில், அருமையான கதைகள், நாடகங்கள் பலவற்றைத் தந்துவிட்டுப் போயிருக்கிறார் இந்த ஆளுமை. அவரது நாற்பதுகளில் இடது கண் பார்வை போய், வேறுவிதமான உடல் நலக்குறைவுகளுக்கும் ஆளாகி, மருத்துவம் என்கிற பெயரில் போராடி, அகாலமாகக் காலமானார் கு.ப.ரா.

கு.ப.ரா.

”சளசளப்பும், சப்த ஜாலங்களும், ஏதோ பெரிதாகச் சொல்லப்போவதுபோல மிரட்டுகிற மூடுமந்திரச் சொற்பிரயோகங்களும், முழுமையில்லாத தோல்வி மூளிகளை, உள்மனச் சோதனைகளாகச் சப்பைக்கட்டு கட்டும் முடவெறியும் காதைத் துளைக்கிற காலத்தில், ராஜகோபாலனின் எழுத்தின் தெளிவும், அமைதியான வீர்யமும், தன்னம்பிக்கையும், சிறு பிரவாகமாக எங்கோ சலசலத்துக் கொண்டிருப்பதை இப்பொழுதைய வாசகர்களைப் போய்ப் பார்க்கச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. ‘கோபம் கொண்ட இளைஞன்’ (angry youngman) என்கிற இங்கிலீஷ் சொற்கட்டு ஒன்று அடிக்கடி கேட்கிறது. வயதுக்கும், கோபத்துக்கும் சம்பந்தமேயில்லை. ராஜகோபாலன் எழுதியதும் கோபக்கார இளைஞனின் எழுத்துத்தான். 42 வயதில் செத்துப் போகாமல் இன்று அவர் இருந்திருந்தால், அதே கோபக்கார இளைஞனாகத்தான் இருந்திருப்பார்.” இப்படித் தன் சமகால தமிழ் எழுத்துவெளியை ஒருபக்கம் குத்திக்காட்டி, கு.ப.ரா- வின் படைப்புகளைப் புகழ்ந்தவரும் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் தி.ஜானகிராமன்தான்.

பெண் மனதின் மென்நிலைகளை, கலாபூர்வமாக எழுத்தில் கொண்டுவருவதில் வல்லவர் கு.ப.ரா. அலங்காரமில்லாதது, அடக்கமானது, நுண்ணியது, நுட்பமானது; சில வரிகளில் வாசகனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புனைவெழுத்து அவருடையது. கும்பகோணத்தில் வாழ்ந்த கு.ப.ராஜகோபாலன்,  எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தியோடு கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம், மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறார். பிச்சமூர்த்தியும் கும்பகோணத்திலேயே வசித்ததால் இது எளிதாக அமைந்தது. எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவோடும் தொடர்பில் இருந்தவர். கண்பார்வை மிகவும் பாழ்பட்டுத் தடுமாறி, கு.ப.ரா. மிகவும் துவண்டுபோன சமயத்தில், படைப்புச்சக்திப் பெரிதும் வெளிப்பட்டிருக்கிறதுபோலும் அவரிடமிருந்து. அவரது இளைய சகோதரி சேது அம்மாள் கூடவே இருந்து, கு.ப.ரா. சொல்லச் சொல்லப் பொறுமையாக உட்கார்ந்து எழுதிக்கொடுத்து, உபகாரம் செய்திருக்கிறார். இலக்கிய இதழ்களான மணிக்கொடி, சுதந்திரச் சங்கு ஆகியவை கு.ப.ராஜகோபாலனின் கதைகளை அக்காலத்தில் வெளியிட்டன. இப்படியெல்லாம் ஏகப்பட்ட சிரமங்களினூடே வெளிப்பட்டதே கு.ப.ரா.வின் படைப்புகள். ’சிறிது வெளிச்சம்’, ’கனகாம்பரம்’, ’காணாமலே காதல்’, ’புனர்ஜென்மம்’ போன்ற பிரபலமான சிறுகதைத் தொகுப்புகளோடு,  ’ஆறு அறிஞர்களின் அலட்சியம்’, ’எதிர்கால உலகம்’, ’அகலிகை’, ‘சிந்தனை’ போன்ற நாடகங்களையும் எழுதியவர் கு.ப.ரா.

அல்லையன்ஸ், காலச்சுவடு ஆகிய பதிப்பகங்களில் இவரது கதைகள் கிடைக்கும். ஆன் – லைனில் வாங்க: discoverybookpalace.com, panuval.com, noolulagam.com போன்ற தளங்கள். ’கு.ப.ரா. சிறுகதைகள்-முழுத்தொகுப்பு’ Paperback-ஆகவும், ‘சிறிது வெளிச்சம்’ சிறுகதைத் தொகுதி Kindle edition-ஆகவும் Amazon-ல் கிடைக்கின்றன

கு.ப.ரா.வின் சிறுகதை ஒன்றை அடுத்த பதிவில் பார்ப்போம்…

**