தமிழ் இலக்கிய முன்னோடிகள்

தஞ்சாவூருக்கு அருகில், மன்னார்குடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அந்த ஊர்.. எப்போது இதைப்பற்றி முதன் முதலில் கேள்விப்பட்டேன்? என் 17, 18 வயதுகளில் ஜெயகாந்தனுக்குள் நுழைந்திருந்தேன், தற்செயலாக. ’வாழ்க்கை அழைக்கிறது’ வாசித்தபின், என்னது.. வாழ்க்கை குழப்புகிறதே என்றிருந்தது நினைவில் வருகிறது. மேலும் அவ்வப்போது தேடி கதைகளைப் படிக்கையில், தமிழின் நல்ல எழுத்துக்கள் அகஸ்த்மாஸ்தாக என் மீது மோதியிருக்கின்றன. தரமான எழுத்து என்றெல்லாம், இலக்கியவாதிகள், இலக்கிய வாசகர்கள் எதைச் சொல்கிறார்கள் என்பதுபற்றிய ப்ரக்ஞை சில வருடங்களிலேயே உருவாகிவிட்டிருந்தது என் அதிர்ஷ்டம். 19-ஆம் நூற்றாண்டு வரை பாடிப்பாடியே பொழுதை ஓட்டிக்கொண்டிருந்த  தமிழ் பாஷையில், உரைநடை, நாவல் என்பதெல்லாம் எப்போது பிரவேசித்தன என்று எங்கோ படித்துக்கொண்டிருந்தேன். எதிர்வந்தார், வடுவூர் துரைசாமி ஐயங்கார்! யாருடா இது-ன்னு மேலும் கொஞ்சம் படிக்கையில், நாவல் என்கிற வகைமையை தமிழுக்குள் பிரவேசிக்கவைத்த எழுத்தாளர்களுள் ஒருவர் எனத் தெரியவந்தது – அதிலும் துப்பறியும் நாவல்கள்!

தமிழ் இலக்கிய முன்னோடிகள் Tamil Ilakkiya Munnodigal (Tamil Edition)

ஐயங்காரைப்பற்றி மேலோட்டமாக அப்போது கேள்விப்பட்டதோடு சரி. அதன் பின் அவர் நினைவிலில்லை. புத்தக ரூபத்தில் எதிர்வரவும் இல்லை.  இப்போது சில மாதங்களுக்கு முன், இலக்கிய முன்னோடிகள் பற்றி, கொஞ்சம் எழுதலாம் என ஆரம்பித்தேன். எழுத்து ஓடிக்கொண்டிருக்கையில், புதுமைப்பித்தன், கு.ப.ரா., சி.சு.செல்லப்பா, க.நா.சு. மௌனி என்று கதைகள் நகர்ந்தன. நூலுக்கென, சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் உரைநடை வெளி என ஆராய்கையில், எதிரில் வந்தார் வடுவூரார்!  ஐயங்காரின் அழகிய நடையில், ஜனரஞ்சக நாவல்கள். கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். தமிழ் நாவலின் தோற்றம், வளர்ச்சியில் வடுவூராரின் பங்களிப்பு சரியாக கணிக்கப்படாததுபற்றி க.நா.சு. தனது நூல் ஒன்றில் ஆதங்கப்பட்டதையும் பார்க்க நேர்ந்தது. சரி, ஐயாவையும் சேர்த்திடவேண்டியதுதான் என முடிவு செய்தது மனம். காலக் கிரமப்படி வரிசை வருவதால், வடுவூரார் முதல் இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டார். பெரியவர். அமர்ந்திருக்கட்டும்!

அமேஸானில் வெளிவந்திருக்கும் அடியேனின் புதிய மின்னூல்: ‘தமிழ் இலக்கிய முன்னோடிகள்’. வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், வ.வே.சு ஐயர், கு.ப. ராஜகோபாலன் எனத் தொடங்கி கதை வேகமாகப் பாய்கிறது.  ராஜம் கிருஷ்ணன், ஜி. நாகராஜன், சார்வாகன் என வந்து நிற்கிறது இந்தப் புத்தகத்தில். இலக்கியகர்த்தாக்களைப்பற்றிக் கொஞ்சம் எழுதி, அவர்களது படைப்புகள், வாழ்ந்த காலத்தின் கூறுகள் என மேலும் ரஸமாகக் கொண்டுசெல்ல முயற்சித்திருக்கிறேன்.

.அன்ப, அன்பிகள் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு வாசித்துப்பாருங்களேன் ! அமேஸான் கிண்டில் எடிஷன். நூலை வாசிப்பதற்கு உங்களுக்கு அமேஸான் தளத்தில் ஒரு சாதாரண அக்கவுண்ட், கிண்டில் ரீடர் செயலி (லேப்டாப், டேப்லட், மொபைலில் வாசிக்க) அவசியம். (‘Free Kindle App’ downloadable from amazon.in or amazon.com etc) .

மின்னூலை, அமேஸான் தளத்தில் இந்த ‘லிங்க்’கில் கண்டு, வாசியுங்கள்:  

ASIN: B095N4Q48P

ஏ கா ந் த ன்

வருடம் மேல் வருடமாக..

இந்தக் கொடும் பிசாசு வந்திறங்கி, தலைவிரிகோலமாய் ஆடிக்கொண்டிருந்த நிலையில், போன மே-யில் எழுதிவைத்திருந்த ஒன்று  கண்ணில் பட்டது இப்போது. புரிகிறது. வேண்டுதலை, வழக்கம்போல் அவன் ஏற்கவில்லை. வேண்டுதல், வேண்டாமை இலாது இருக்கக் கற்றுக்கொள் என்கிறானா? சொல்வான். அவனுக்கென்ன,  அழகிய முகம் ..

நம் முகத்தைத்தான் கண்ணாடியில் பார்க்கச் சகிக்கவில்லை. சரி. கிறுகிறுக்க வைத்த போன ஆண்டு, கிறுக்கவைத்த கவிதை:

அடுத்த ஆண்டாவது ?

கொரோனாப் பிசாசின்

சொல்லொணாக் கொடுமை

வீட்டிற்குள்ளேயே நடக்கிறேன்

மூலைக்கு மூலை  அமர்கிறேன்

மூச்சை இழுத்து விடுகிறேன்

பகலில்கூட அசட்டுத்தனமாய்

படுக்கையிலே விழுந்து புரள்கிறேன்

சாமி கும்பிடவும் ஒரு நேரம் என்றில்லை

வீட்டுக்குள்ளேதானே அவனும் மூலையில்

கோவிலுக்குப் போகும்

பாதையெல்லாம் மறந்து நாளாயிற்று

பரமனுக்கும் புரியாமலா இருக்கும்

பண்டைய சாத்திரங்களும் இதுபற்றி

பகர்ந்திருக்குமோ  ஏதாவது

பதறும் மனது எதை அலசும்? எதை அறியும்?

அற்ப வைரசின் அலட்டல்களுக்கே உலகம்

உருப்படியாக ஒரு பதில் சொன்னபாடில்லை

உலகநாதா, ஒரே தாதா

மூஞ்சியை மூடி உடம்பை மூடி

முழுமூச்சில் கதவையெலாம் மூடி

மூடி மூடியே முடிந்துவிடும் வருடம்

அடுத்து வரவிருக்கும் ஆண்டாவது

அலுங்காமல் குலுங்காமல் செல்ல

அனுமதிப்பாயா ஆபத்பாந்தவா

அண்ட பேரண்டங்களின் அதிபதியே

மண்டியிடுகிறேன் வீட்டிலிருந்தே..

**

மரத்தின் கீழே அவள்

காலையில் ஒரு கப் காஃபியோடு வழக்கம்போல் நெட்டில் மேய்ந்தேன். நல்ல வேளையாக செய்திகள் எனும் மக்காத குப்பைக்குள் மண்டிவிடாமல், இலக்கியத்தின் பக்கம் இறங்கியிருந்தேன். முதல் நாள் விட்ட விக்ரமாதித்யனின், நகுலனின் நினைவில் அலைகையில். பார்க்க நேர்ந்தது ஒரு கவிதையை. சிங்களம் தந்த கவிதை. ’சிங்களத்துச் சின்னக் குயிலே..’ என்றொரு பாடல்வேறு, ஏடாகூடமாக நினைவில் தட்டுகிறது.

நான் வாசித்த முதல் சிங்களக் கவிஞர். மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல. காலைக் கவிதையின் தாக்கம், உடனே பகிர்ந்தால்தான் சுமை இறங்குமெனக் காதில் கிசுகிசுத்தது :

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

என்னிடம் கூறப்பட்டதைப்போலவே – அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில்

வாகனத்தை நிறுத்திய வேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினூடாக

கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு

பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே

290 Art - When I'm an Old Woman in Art ideas | art, old women, artist

**

நன்றி: ’கூடு’ இதழ். தமிழில்: கவிஞர் எம்.ரிஷான் ஷெரீஃப் (இலங்கை)

வாழ்க்கை எனும் யோகம்

சில வருடங்களுக்கு முன் ஒரு யோகா நிகழ்ச்சிக்காக வேலாயுதம்பாளையம் எனும் ஒரு கிராமத்தில் தங்கவேண்டியிருந்தது. நான் தங்கவென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடு, ஒரு பெரும் குன்றினை எதிர்நோக்கியிருந்தது. ஒரு காலத்தில், சுமார் 1900 வருடங்கள் முன்பு, ஜைனத் துறவிகள் இத்தகைய  மலைப்பகுதிகளில் உலவினார்கள், தங்கி தியானங்களில் ஈடுபட்டிருந்தார்கள், இங்கேயே வாழ்வைக் கழித்தார்கள் என அறிந்திருக்கிறேன். அந்தத் தொன்மைபற்றிய சிந்தனை ஏதோ ஒரு ஆர்வத்தை எனக்குள் உசுப்பிவிட்டிருந்தது. அப்படியென்றால், ஜைன மத ஸ்தாபகரும், குருவுவான மகாவீரரின் காலத்திலிருந்து சில நூற்றாண்டுகள் தாண்டி அவர்கள் இப்போதைய தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கவேண்டும்…

ஒரு மதியப்பொழுதில், என்னோடு வந்திருந்த சிலருடன் குன்றுகளின் மீது ஏறினேன். சற்று உயரம் ஏறிக் கடந்தபின், பறவையின் கூடுபோல அழகாக அமைந்திருந்த  சிறு குகை ஒன்று கண்ணில் பட்டது. இத்தகைய ஒதுக்குப்புறமான இடங்களில் நாம் இப்போதெல்லாம் எதனை எதிர்பார்க்கமுடியும்? அதே காட்சியே அங்கும் காணக்கிடைத்தது. உடைந்த பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்கள், தீப்பெட்டிகள், சுருட்டி எறியப்பட்ட பாலிதீன், காகிதம் என குப்பைகூளங்கள் குகைக்குள் வியாபித்திருந்தன. இந்தியாவின் பல இடங்களில், இதுபோன்ற  ஒவ்வொரு பழங்காலக் குன்றிலும், குகையிலும், அவ்வப்போது அங்கு வரும் சுற்றுலாக்காரர்கள், காதலர்கள் தங்கள் பெயர்களை அழுத்தமாகப் பொறித்துவிட்டுப் போயிருப்பதையும் பார்க்கலாம்.

இந்தக் குகையும் அவைகளிலிருந்து, இந்த விஷயத்தில் வித்தியாசப்பட்டிருக்கவில்லை. எங்கும் ’KPT loves SRM’ என்பதுபோன்ற இளசுகளின் வாசகங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. அந்த இடத்தைக் கொஞ்சம் முனைந்து நாங்கள் சுத்தப்படுத்தினோம். இப்போது அந்தக் குகை ஒருவழியாகத் தன்னைக் காண்பிக்க ஆரம்பித்தது. பாறைத் தளத்தில் படுக்கைகள்போல் சில செதுக்கப்பட்டிருந்தது கண்ணில் பட்டது. இவற்றில்தானே அந்தக்கால ஜைன சாதுக்கள் படுத்து உறங்கியிருப்பார்கள்…

Lord Mahavir and Jain Religion

அத்தகைய ஒரு ‘படுக்கை’யின் மீது நான் உட்கார்ந்து பார்த்தேன். திடீரென என் உடம்பெங்கும் அதிர்வுகள். ஆச்சரியம். என்ன இது? என்ன இருக்கிறது இங்கே? எதுவானாலும், அந்த இரவை அங்கேயே கழிப்பது என மனதில் முடிவுசெய்துகொண்டேன்.  இரவில் குகைக்குத் திரும்பினேன். அந்தப் படுக்கைகளில் ஒன்றில் மெல்லப் படுத்தேன். எப்பேர்ப்பட்ட இரவானது அது! அந்த இரவினில்.. பல நூற்றாண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த அந்த ஜைனத் துறவியின் சூட்சும உடம்பு இன்னும் அங்கேயே, உயிர்ப்போடு நிலவுவதை உணர்ந்தேன். அவரைப்பற்றி எனக்குத் ‘தெரிய’ ஆரம்பித்தது. அந்தத் துறவிக்கு இடது கால் இல்லை. அதாவது முழங்காலுக்குக் கீழே.. கால் இல்லை. ஏதுகாரணத்தினாலோ அதை அவர் இழந்திருக்கவேண்டும். இப்படியெல்லாம் புரிந்தது.

அத்தகைய துறவிகள் மனித நடமாட்டத்திலிருந்து வெகுதொலைவில், சராசரி வாழ்வுக்கூறுகளிலிருந்து முற்றிலுமாக விலகி, தனிமையில், அமைதியாக ஆழ்ந்து காலங்கழித்திருக்கவேண்டும். அவர்களது உன்னதமான உணர்வுபூர்வமான வாழ்வியலின் காரணமாக, யாருமே இந்த உலகில் விட்டிராத அளவுக்கு, தங்களின் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள்போலும். அந்தத் துறவியின் வாழ்வுநெறிகள், ஆன்மீகப் பயிற்சிகள் எனப் பலவற்றையும் என்னால் அப்போது உணர முடிந்தது..

கடந்துபோய்விட்ட அந்தக் காலவெளியின் மன்னர்கள், ஆட்சியாளர்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். அப்போது வாழ்ந்த செல்வந்தர்கள், மெத்தப்படித்த ஆண்கள், பெண்கள் நமது நினைவுகளில் இல்லை. ஆனால், எளிமையே உருவான இத்தகைய சாதுக்கள் 1900 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப்போலவே, இன்றும் உயிர்ப்புடன் உலவுகிறார்கள். உணரப்படுகிறார்கள் …

’உங்களது விதியைச் செதுக்குவதற்கான ஒரு யோகியின் கையேடு’ எனும் புத்தகத்திலிருந்துதான், மேற்சொன்னது. புத்தக ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாஸுதேவ். பெங்குயின் இந்தியா பதிப்பகத்தால் ஏப்ரல் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

Source: A Yogi’s Guide to Crafting Your Destiny (Penguin/ also available in Amazon)

**