தாயைப் பாடவே தயக்கம் ..

ஜகன்மாதாவான அன்னை மகாலக்ஷ்மியை, பக்திமிகுதியால் புகழ்ந்து பாடல் இயற்றுமுன், கவிஞர் சற்றே தயங்குகிறார். தான் யார், தன்னுடைய தகுதி என்ன என சிந்திக்கிறார். மிகக்குறைந்த திறனுடைய தான், பிராட்டியைப்பற்றி எழுத முனைந்தது சரிதானா என யோசிக்கிறார். இத்தகைய மனநிலையில், அன்னையை நோக்கி சொல்வதாக ’ஸ்ரீலக்ஷ்மி ஸகஸ்ரம்’ கவிதைத் தொகுப்பின் ஆரம்பமாக அவர் எழுதியது:

ஆதிகாலத்தில் தோன்றிய அற்புதங்களானவையும், நித்தியங்களானவையுமான வேதங்களில் காணப்படும் அதிஅழகான அலங்கார வார்த்தைகள்கூட, அம்மா! உன் மாபெரும் சக்தியை, மகோன்னதமான பெருமையை வர்ணிக்கும் முயற்சியில் பரிதாபமாய்த் தோற்றுப்போயின. ’பதபாக்னி’ எனப்படும் பேரழிவுசக்தியுடைய அக்னியாலும்கூட, சமுத்திரத்தைப் பூராவும் உலரவைக்கமுடியாதே. உலகத்தில் மிகச்சிறிய ஒரு ஜீவன்களில் ஒன்றான கொசுவின் குஞ்சினால், ஒரு மகா சமுத்திரத்தின் நீரையெல்லாம் உறிஞ்சிக் குடித்துவிட முடியுமா ! அதைப்போல அற்பமான திறன் உள்ள நானா, உன் அளவிலாப் பெருமையை முழுமையாய் எழுதிவிடுவேன்? இது சாத்தியமில்லை, என மருள்கிறார்.

மேலும் ஒரு பாடலில், கவிதை எழுதுவதில் தன் மிகக்குறைந்த திறன்பற்றி நினைக்கையில் இப்படி அன்னையிடம் சொல்கிறார் :

ஒரு படைப்பு காவியமாய் விளங்க, எழுத்துக்கலையின் அடிப்படைகளான சக்யம், லட்சியம் போன்ற நவரசங்கள் ஒருவனது எழுத்தில் சீராக, சிறப்பாக வெளிப்படவேண்டும். இத்தகைய ரசங்கள் மீதான ஆளுமை எனக்கில்லை. மொழியின் வண்ணமிகு சொற்களால் வர்ணிக்கும் ஜாலமும் அறிந்திலேன். இப்படி ஏகப்பட்ட குறைபாடுகளுடன்தான், அன்னையே, உன் புகழ் பாடத் துணிந்துவிட்டேன். உன்மீது கொண்ட பக்தியினால்தான் இப்படி. மனிதரின் எத்தனையோ குற்றங்களை மன்னித்துக் காக்கும் மாதாவான நீ, இந்த எளியோனின் குறைபாடுகளையும் மன்னித்துக் கருணைகாட்டவேண்டும் என வேண்டி நிற்கிறார்.

கவிதை எழுத ஆரம்பிக்குமுன்பே,  தன் இயலாமை, குறைபாடுகள்பற்றி சிந்தித்து,  லக்ஷ்மித் தாயாரிடம் இப்படி அடக்கம்காட்டி வேண்டி நின்றவர், பிற்காலத்தில் ‘கவிதார்க்கிஹ சிம்ஹம்’ (கவிஞர்களில் சிங்கம்) என ஆன்மீக சான்றோர்களால் புகழப்பட்ட வேதாந்த தேசிகன். தமிழ், சமஸ்க்ருதம் என இருபெரும் மொழிகளில் வல்லவர் என அறியப்பட்ட மேதை. பக்தியோகத்தில் சிறந்து விளங்கிய ஞானி. காஞ்சீபுரத்துக்கு அருகிலுள்ள தூப்புல் எனும் கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன், ஸ்வாமி தேசிகன் என்றெல்லாமும் அழைக்கப்படும், ராமானுஜருக்குப் பின்வந்த ஹிந்துமத ஆச்சாரியரும் இவரே, இயற்பெயர் வேங்கடநாதன். தேசிகன் என்கிற வார்த்தைக்கு வடமொழியில் ‘குரு’, ‘ஆச்சார்யர்’ எனும் பொருள்.

இன்னொரு ஸ்லோகத்தில் தேசிகன் தொடர்கிறார்:

தாயே.. உனது புகழைப்போற்றிப் பாடுகையில் அடியேன் படைப்புக்கடவுளான பிரும்மாவுக்கு சமம் என  ஆகிவிடுகிறேன்! – என்று எழுதிவிட்டார். எப்படிச் சொன்னார் தேசிகன் இப்படி? அவரே விளக்குகிறார் : இரவில் வரும் சந்திரனின் எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பிரகாசமான குளிர்ந்த ஒளிப் பிரவாகத்தை, அந்த இரவினில் அங்குமிங்குமாகப் பறக்கும் மின்மினிப்பூச்சியின் மினுக்கும் சிறு ஒளித்துகளோடு ஒப்பிடலாகுமா? கூடாதுதான். ஆனால் பகலில், சூரியனின் பிரும்மாண்ட ஒளிவீச்சுக்கு முன்னே, இவை இரண்டுமே காணாமற்போய்விடுமல்லவா? அப்படிப் பார்த்தால் இவையிரண்டும் ஒன்றுதானே! அதைப்போலவே, கிட்டத்தட்ட ஒன்றுமில்லை எனும் அளவினதான என்னுடைய மிகக்குறைந்த திறனும், பிரும்மதேவனின் எல்லையில்லா அறிவும், அம்மா, தங்களின் மகிமைக்குமுன் ஒன்றுமே இல்லைதானே.. இந்த வகையில் நானும் பிரும்மாவும் ஒன்றல்லவா ! – எப்படி இருக்கிறது நமது கவிஞரின் ஒப்பீடு !

அன்னை மகாலக்ஷ்மியின் கருணையை நினைந்துருகி, அவர் வடமொழியில் இயற்றிய புகழ்பெற்ற பாடற்தொகுப்பு ’ஸ்ரீஸ்துதி’. அதன் ஒரு பாடலில், தாயாரைப் போற்றிப் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தபின், தனக்குள் உருவாகியிருக்கும் மனநிலைபற்றி இப்படிக் கூறுகிறார் ஸ்வாமி தேசிகன்:

அம்மா! உன் திருவடியில் என்னை சமர்ப்பித்த பிறகு, என்னில் ஏற்பட்டிருக்கும் புதிய மனநிலைகள்தான் என்னே! கடும் இருளை விரட்டிவிடும் சூரியனைப்போல், தொடர்ந்துவரும் சம்சார பந்தம் விளைவிக்கும் நீங்காத பயத்திலிருந்து என்னை அவை விடுவிக்கின்றன. உனது கருணையினால் ஏற்பட்ட இத்தகு உயர்மனநிலைகள், பல்வேறு கல்யாணகுணங்களை உடைய எம்பெருமானிடம் (மகாவிஷ்ணுவிடம்) எனது பக்தியை  மேலும் மிகுதிப்படுத்துகின்றன. அபரிமித சக்தி நிறைந்த உனது கருணையினால், இத்தகைய நன்மைகளையெல்லாம் நீயாகவே எனக்கு வழங்கிவருகிறாய்.

நிலைமை இப்படி இருக்க, அடியேன் உன்னிடம் பிரார்த்தித்துப் பெற்றுக்கொள்ள என்று தனியாக என்ன இருக்கிறது தாயே!

**

ஒரு ஹோமத்தின்போது …

 

பெங்களூர் ஜெயநகர். ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கோயில். காலை 10 மணிப்போல் ஆரம்பித்த சுதர்ஷன ஹோமம் மெல்ல முன்னேறுகிறது. அர்ச்சகர்களும், சார்ந்தவர்களும் நிதானமாக மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறார்கள்.  அமைதியான சூழலில், மந்திர ஒலி அலையலையாகப் பரவி வியாபிக்கிறது.

ஹோமகுண்டத்தின் முன்னே,  ஒரு வரிசையில் பெண்கள். எதிர்வரிசையில் ஆண்கள். ஒரு குட்டிப்பையன் -நாலு வயசு இருக்கலாம்- அம்மாபக்கம் அப்பாபக்கம் என, ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறான். இடையிலே அவனது அப்பா பிடித்து உட்காரவைத்து ஒரு சுலோகத்தை சொல்லவைக்கிறார். கொஞ்சம் சொன்னான். இன்னும் சொல்லு.. என்கிறார் தந்தை. தெரில ! – என்கிறான். மறுபடியும் திமிறி அந்தப் பக்கத்துக்குத் தாவல். கீழே உட்கார முடியாததால், அப்பாவுக்குப் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் தாத்தாவிடம் இப்போது வந்து சிக்கிக்கொண்டான்! பேரப் பிள்ளையை சார்ஜ் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார் பெரியவர். இழுத்து மடியில் உட்காரவைக்கிறார்..

விஷமம் பண்ணக்கூடாது ஒரு எடத்துல ஒக்காரணும்!

ம்ஹூம்.. அங்கே போய் ஒக்காந்துக்கறேன்..

ஸ்…அங்கயும் இங்கயுமா ஓடக்கூடாது. கோவிச்சுக்குவா!

யாரு ?

அங்க பார். அந்த மாமா !

அங்க என்ன நடக்கறது?

ஹோமம் நடக்கறது ..

இது எப்போ முடுயும்..?

டேய் ! மந்த்ரம் சொல்றார் பாரு  மாமா.  கேளு..

ஏன் ஃபாஸ்ட்டா சொல்லமாட்டேங்கிறா ?

மந்த்ரம்லாம் மெதுவாதான் சொல்லணும்.

ஏன்?

அப்பதான் உம்மாச்சி காப்பாத்துவார்..

அங்க ஒக்காந்துண்டு  என்ன பண்றா?  எனக்கு  அங்கே போகணும்..

அங்கேலாம் போகக்கூடாது.

ஏன் ?

ஃபயர்! அதுக்குள்ளேயிருந்து நெருப்பு வருது பாத்தியா!

நெருப்பு எப்பிடி அங்கேருந்து வர்றது?

அந்த மாமா நெய்ய விடறார்!

நெய்யா! எனக்கு உன்னும் தெரியலயே

அடேய்.. அவர் கையில பார்றா .. லாங் ஸ்பூன்

அது .. ஸ்பூனா?

ம்.. உட்டன் (wooden) ஸ்பூன்.. அதுலேர்ந்து நெய் விடறார்.

நெய்ய ஏன் அதுக்குள்ள விடறார்?

அப்பதான் நெருப்பு  பெரிசா மேல வரும்.

பையனின் கண்களில் மின்னும் ஆச்சரியம் .

நெருப்பு.. எம்பி எம்பி மேல வர்றது !

ம்..

கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் நழுவி ஓடிவிட்டான். எதிர்வரிசை அம்மாவிடம் போய் உட்கார்ந்துகொண்டான்.

ஹோமம் முடியும் தருவாயில்..  மீண்டும் தாத்தாவின் மடியில் பேரன்.

அங்க என்ன பண்றா ?

பாத்துண்டே இரு.. தெரியும்!

ஐயோ!

என்னடா?

அந்த மாமா.. வாழப்பழத்தத் தூக்கி  நெருப்புலே போட்டுட்டார் !

ம்..

ஏன் போட்டார் ?

அதப் பார் ! அவர் கையில..

ஆப்பிள்!  ஆ! அதயும் போட்டுட்டாரே நெருப்புக்குள்ள ..

ம்..

ஏன் இப்பிடிப் பண்றார் அந்த மாமா ?

அதுல்லாம் உம்மாச்சிக்கு.

அவர்தான் நெருப்புக்குள்ள போட்டுட்டாரே…

நெருப்புக்குள்ளதான் உம்மாச்சி வந்து ஒக்காந்திருக்கு.

நெருப்புக்குள்ளயா ! எனக்கு  உன்னும் தெரியலயே..

நம்ப கண்ணுக்குத் தெரியாது.

எப்பிடி?

மந்த்ரம் சொன்னா இல்லியா? அப்போ நைஸா.. நெருப்புக்குள்ள வந்து உம்மாச்சி ஒக்காந்திருக்கும்.

அப்பறம்?

அப்பறம் யாருக்கும் தெரியாம.. போய்டும்!

நெஜமாவா!  – பையன் கொழுந்துவிட்டெறியும் ஜுவாலையை கண்மலரப் பார்க்கிறான்..

சுதர்ஷனுக்கு தீபாராதனை செய்கிறார் அர்ச்சகர்.

எல்லாரும் கன்னத்துல போட்டுக்கறா பாரு! – எதிர்வரிசையை காண்பித்து சொல்கிறார் தாத்தா.

நீயும் கன்னத்துல போட்டுக்கோ..

போட்டுக்கொள்கிறான் சிறுவன்.

கைகூப்பு! காப்பாத்து..ன்னு பெருமாள சேவிச்சுக்கோ !

பெருமாளையும், கூட்டத்தையும் மாறி மாறிப் பாத்துக்கொண்டே கைகூப்புகிறான் குழந்தை.

**

 

CWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு!

 

இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது! என்னப்பா சொல்ல வர்றே! -என்கிறீர்கள். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை காணாத அதிசயமாய் கதை விசித்திரமாய் விரிந்து அப்படித்தான் முடிந்தது. நியூஸிலாந்து வீரர்களுக்கு தங்களுக்கு ஏன் உலகக்கோப்பை கொடுக்கப்படவில்லை என்றே புரிந்திருக்காது என்று தோன்றியது. அப்படி ஒரு அதிர்ச்சியில் நியூஸிலாந்து வீரர்கள் ஓரமாய் நின்றிருந்தார்கள்.

பந்து பந்தாக விவரிக்காமல், சுருக்கமாகச் சொல்வோம்.   லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14/7/19) நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்றது, முதலில் பேட் செய்தது நியூஸிலாந்து. பிட்ச் மந்தமாக செயல்பட, நியூஸிலாந்து நினைத்த அளவுக்கு தாக்கி ஆட இயலவில்லை. ஹென்றி நிக்கோல்ஸ் 55, டாம் லேத்தம் 47, வில்லியம்சன் 30 என்றுதான் போனார்கள். இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 எடுத்தார்கள்.  இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் ப்ளங்கெட் சிறப்பாக வீசினார்கள்.

242 ஐ நோக்கி நன்றாகத் துவங்கியது இங்கிலாந்து. இதற்கு முந்தைய மேட்ச்சில் அம்பயரோடு(ஸ்ரீலங்காவின் குமார் தர்மசேனா) குஸ்திபோட்ட ஜேஸன் ராய் எளிதில் தூக்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோ நிதானம் காட்டினார். விக்கெட்டுகள் சில விழுந்தன. த்டுமாற்றம். அப்போது  பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (59) சேர்ந்து ஸ்க்ரிப்ட்டை மாற்றி எழுதினர். ஒரு கட்டத்தில், இங்கிலாந்து எளிதாக கோப்பையைத் தட்டிச் செல்லும் எனவே தோன்றியது. 84/4 என்றிருந்த ஸ்கோரை 196 க்கு 5 விக்கெட்டுகள்(45 ஆவது ஓவர்) என வேகமாக அவர்கள் உயர்த்தியது, நியூஸிலாந்துக்கு பீதியைக் கிளப்பியது. அவ்வப்போது குதித்துக் காண்பித்த நியூஸி ரசிகர்கள் அடங்கிக் கிடந்தார்கள்.

அடுத்த பக்கத்தில் விக்கெட்டுகள் சரிய, ஸ்டோக்ஸ் மட்டும் அஞ்சாது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார்.  அவரது துணிச்சலும், இலக்கில் குவிந்த கவனமும் பாராட்டத்தக்கது. 9 பந்துகளில் இங்கிலாந்து 22 ரன் அடித்தாகவேண்டிய நிலையில், ஸ்டோக்ஸ் உயர அடித்த ஷாட்டை பௌண்டரி லைனுக்கு முன்னாள் எம்பிப் பிடித்த நியூஸி ஃபீல்டர் ட்ரெண்ட் போல்ட், அதனை உள்ளே  எறிவதற்குள் தடுமாறி வெளியே காலை வைத்துவிட்டார். சிக்ஸர்! கடைசி ஓவரில் மேலும் ஒரு பயங்கரம். 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஸ்டோக்ஸ் இருக்கிறாரே..அவரடித்த பந்து ஃபீல்டாகிவிட இரண்டாவது ரன்னுக்காக விக்கெட்கீப்பர் பக்கம் மட்டையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தார். நியூஸி ஃபீல்டர் ஃபீல்ட் செய்து வீசிய பந்து ஸ்டோக்ஸின் மட்டையைப் பதம்பார்த்து, கோபித்துக்கொண்டு பௌண்டரியை நோக்கி ஓடிவிட்டது! அம்பயர் தர்மசேனா ஆனந்தமாகி, 2+4=6 ரன் என விரல்களைக் காண்பித்துவிட்டார். இப்படியெல்லாமா ஒரு துரதிருஷ்டம் வரும் நியூஸிலாந்துக்கு. கடைசி பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பேட்ஸ்மன் மார்க் உட் ரன் -அவுட் ஆகிறார். ஸ்கோர் இங்கிலாந்து 241 ஆல் அவுட் (பென் ஸ்டோக்ஸ் 84 நாட்-அவுட்). நியூஸிலாந்தின் ஸ்கோர் 241/8.  உலகக்கோப்பையின் முதல் Tie!

இங்கேதான் காரியத்துக்கு வருகின்றன ஐசிசி-யின் விதிமுறைகள் – இந்த உலகக்கோப்பைக்காக விசேஷமாகத் தயாரித்தவை! ஃபைனலில் ஸ்கோர் ‘டை’ஆனால், சூப்பர் ஓவர் விளையாடி முடிவு செய்யவேண்டும். ஒவ்வொரு அணியும் ஒரு ஓவர் விளையாட, எந்த அணி அதிகபட்ச ஸ்கோர் செய்கிறதோ அதுதான் சேம்ப்பியன்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அவர்களது ராசிக்காரர்களான ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோரை அனுப்பியது. இங்கே பௌலரைத் தேர்ந்தெடுப்பதில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன் தப்பு செய்துவிட்டார் எனத் தோன்றுகிறது. ட்ரென் போல்ட் நியூஸிலாந்தின் டாப் பௌலர் என்றாலும், நேற்று அவர் வீசிய லட்சணம் சரியில்லை. ஏகப்பட்ட ரன் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. பழைய ரெப்யூட்டேஷனை மனசில் கொள்ளாமல், ஃபெர்குஸன், மேட் ஹென்றி ஆகிய இருவரில் ஒருவருக்கு சூப்பர் ஓவரைத்தந்திருந்தால் இங்கிலாந்து இப்படி அடித்திருக்காது எனத் தோன்றுகிறது. ஆளுக்கொரு பௌண்டரி அடித்த இங்கிலாந்து ஜோடி, 15 ரன்கள் எடுத்துவிட்டது. இருபக்கத்து ரசிகர்களும் உலைபோல் கொதித்துக்கொண்டிருந்தனர்.

இங்கிலாந்து உலக சேம்பியன் !

நியூஸிலாந்து சூப்பர் ஓவர் ஆட, மார்ட்டின் கப்ட்டில் (ஃபார்மில் இல்லாதவர்) மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரை அனுப்பியது. இவர்கள் 16 எடுத்துவிட்டால் நியூஸிலாந்து உலக சேம்ப்பியன். ஆனால், விதிக்கு பிடித்த ஆட்டமாயிற்றே கிரிக்கெட்! அது 23-ஆவது ப்ளேயராக மைதானத்தில் ஏற்கனவே இறங்கியிருந்தது. இங்கிலாந்து தன் சூப்பர் பௌலராக,  உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்புதான் அணியில் சேர்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை பந்துபோடச் சொன்னது.  ஆர்ச்சருக்கு இது முதல் இண்டர்னேஷனல் டூர்னமெண்ட். பதற்றம் முகத்தில். அடிக்கடி அருகில்போய் கேப்டன் மார்கன் ஏதேதோ சொல்கிறார். ஆர்ச்சரின் ஒரு பந்தை ஆவேசமாகத் தூக்கி சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார் நீஷம். நியூஸியின் பல்ஸ் ஏறியது! ஆனால் அனுபவசாலியான கப்ட்டில் ஒன்று, இரண்டு என்று ஓடினார். நியூஸியின் வேதனை. கடைசி பந்து. 2 ரன் தேவை நியூஸிலாந்துக்கு. ஆர்ச்சருக்கு அட்வைஸ் கேப்டனிடமிருந்து. கீழே குனிந்து தலையாட்டிய ஆர்ச்சர் வேகமாக ஓடி வந்து, எதிர்த்துத் தாக்கமுடியாத லெந்த்தில் பந்தை இறக்கினார். கப்ட்டில் பதறி லெக்சைடில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ரெண்டு ரன் வேண்டுமே..திரும்பிப் பாய்ந்தார். அந்தோ! இங்கிலாந்து ஃபீல்டிங் நேராக  விக்கெட் கீப்பருக்கு அனுப்ப, பட்லர் பெய்ல்ஸைத் தட்டி,  ரன் -அவுட் செய்துவிட்டார். என்ன ஃபைனல்டா இது.. ஒரே பேஜாராப்போச்சே. சூப்பர் ஓவரும் டை Tie). இரு அணியும் எடுத்தது , தலா 15 ரன்கள்!

சோகமே உருவாக நியூஸிலாந்து

வேறொரு ஸ்போர்ட்டாக இருந்திருந்தால், இந்த இடத்தில் முடிவு வந்திருக்கும். நியூஸிலாந்து, இங்கிலாந்து இரு அணிகளும் ஜாய்ண்ட்-வின்னர்ஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும். அதுவே நியாயமானதாகவும் இருந்திருக்கும். ஆனால் ஐசிசி-யின் குதர்க்கம் நிற்காதே. சூப்பர் ஓவர் பற்றி அவர்கள் அசரீரி கேட்டு, மேலும் ஒன்று எழுதிவைத்திருந்தார்கள். சூப்பர் ஓவர் ’டை’ ஆனால், எந்த அணி நிறைய பௌண்டரிகள் அடித்ததோ அதுவே வின்னர்.. கோப்பை அதற்குத்தான். வேகவேகமாக எண்ணி, இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதாக அறிவித்துவிட்டார்கள். நியூஸிலாந்து உறைந்து நின்றது. இவ்வளவு சிறப்பாக ஃபைனலிலும் ஆடி என்ன பயன்? வெறும் ரன்னர்ஸ்-அப் தானே கடைசியில்.  நியூஸிலாந்துக்கு இல்லையே கோப்பை..

’’எல்லாம் ‘டை’, ‘டை’ என்றானபின், அடித்த பௌண்டரிகளை எண்ணி, உலகக்கோப்பையை அறிவிக்கிறார்களே.. என்னால் ஜீரணிக்கமுடியவில்லை’’ என்றார் சோகம் ததும்பும் குரலில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன்.  மிகவும் மென்மையானவர். மேற்கொண்டு சொல்லமாட்டார்.  ‘’உலகக்கோப்பையில் 22 ஹீரோக்கள். யாருக்கும் வெற்றியில்லை!” என்று தலைப்பு கொடுத்த ’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு, மேலும் கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)-விற்கு 5 ரன் தானே தரவேண்டும். 6 ரன் ஏன் கொடுக்கப்பட்டது?’’ நியூஸிலாந்தின் இன்னுமொரு பத்திரிக்கை, ’பௌண்டரி எண்ணுகிறேன் என்று சொல்லி, எங்களது கோப்பையைத் திருடிவிட்டார்கள்!’ என்கிறது.

ஆட்டத்தை அந்த நாட்டில் விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்த நியூஸிலாந்தின் பெண் பிரதமர்  ஜஸிண்டா ஆர்டன் (Jacinda Ardern) சொல்கிறார். ’’என்ன ஒரு நம்பமுடியாத மேட்ச். இப்படி ஒன்றை வாழ்நாளில் பார்த்ததில்லை. கிரிக்கெட் சரித்திரத்தில்  ஒரு அருமையான போட்டியாக இது நிற்கும். ஆயினும் முடிவு கண்டு, என் நாட்டினரைப் போலவே நானும் புத்தி பேதலித்துப்போயிருக்கிறேன். என்ன செய்வது? எங்களது அணி நாடு திரும்பட்டும். அவர்களுக்கு நியூஸிலாந்தின் உயர் ஹீரோக்களுக்கான சிறப்பான வரவேற்பைத் தருவேன்!’’

**

Pictures courtesy: Google

CWC 2019 : கிரிக்கெட்டும் ஜோதிடமும்

 

இந்தியா உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இல்லை, வெளியேற்றப்பட்டுவிட்டது. அதற்கு கோஹ்லியைத் திட்டலாம். ரோஹித்தைத் திட்டலாம். தோனியையும் திட்டலாம். இந்தியாவின் முன்னாள் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த மீடியாமுன் எதையாவது அலசிப் பொழுதுபோக்குவார்கள். இந்திய கிரிக்கெட் போர்ட் என்ன செய்யும்? ரவி ஷாஸ்திரிக்கு ’ப்ரொமோஷன்’ அல்லது ’எக்ஸ்டென்ஷன்’ கொடுக்கும். அவரை இன்னும் இரண்டு உலகக்கோப்பைகளுக்கு சேர்த்து ’கோச்’ சாக புக் செய்யும். ஷாஸ்திரி, கோஹ்லி-அனுஷ்கா ஷர்மாவுடன்  செல்ஃபீ எடுத்து, அடுத்து இந்தியா விளையாடவிருக்கும் வெஸ்ட் இண்டீஸைச் சுற்றிச்சுற்றி வரலாம்.

தொலையட்டும், விடுங்கள்.  இந்த உலகக்கோப்பையை யார் வெல்வார்கள்? ஆஸ்திரேலியாவை அடித்து வீழ்த்தி, ஃபைனலில் நுழைந்த இங்கிலாந்தா? இந்தியாவை வெளியேற்றிய நியூஸிலாந்தா? பெரும் கேள்வி இது. கிட்டத்தட்ட தன் கையில் கப் வந்துவிட்டதுபோல் இங்கிலாந்து மிதக்க ஆரம்பித்துவிட்டது.. Tomorrow is another day என்கிற சொல்வழக்கை அது மறந்துவிட்டிருக்கலாம்!

விளையாட்டில் எதிர்கால வெற்றிகளை கணிக்க, ஜோதிடமாய் சொல்ல முடியுமா? கால்பந்திற்கும் அமானுஷ்ய கணித்தலுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. 2010-ல் நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் வெற்றி அணியாக, ஸ்பெய்னை சரியாகக் கணித்தது ஒரு ஆக்டோபஸ் (Paul, the Octopus). இப்படி கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு எந்த ஆக்டோபஸும் கிடைக்கவில்லைதான். பார்படோஸ் (Barbados), வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இப்போது இங்கிலாந்துக்காக வேகப்பந்துவீசும் ஜோஃப்ரா ஆர்ச்சர், கொஞ்சம் அமானுஷ்ய சக்தி உடையவர்போல் தெரிகிறது. 2014-15-ல் அவர் போட்ட சில ட்வீட்டுகள் இந்த உலகக்கோப்பை நடப்புகளைக் குறிப்பவையாகத் தோன்றுகின்றன. இந்த விஷயத்தில், மேலும் ஆராய்ச்சி தேவை!ஆனால் நடப்பு கிரிக்கெட் உலகக்கோப்பையில் என்ன நடக்கும் என்பதை சிலர் முன்னரே கூற முற்பட்டிருக்கிறார்கள்.

Kane Williamson, Captain, NZ

இந்தியாவின் செமிஃபைனல் வெளியேற்றத்துக்குப் பின், ஒரு வாட்ஸ்ப் வலம் வந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். அதில் ஒரு ஜோதிடர். வழக்கமான அதிபிரகாச வீபூதிப்பட்டை, குங்குமம், நாமம், இத்தியாதிகள் அலங்கரிக்காத முகம். இளைஞர். ’புதுயுகம்’ சேனலில்,  இந்த வருட ஆரம்பத்தில் வந்த நிகழ்ச்சி. ஒரு பெண் அவரைக் கேட்கிறார் உலகக்கோப்பை பற்றி சில கேள்விகள். பதிலாக, அந்த இளம் ஜோதிடர் நிதானமாக, செமிஃபைனலில் நுழையவிருக்கும் அணிகளின் பெயர்களை சரியாகக் குறிப்பிடுகிறார். மேலும் சொல்லியிருக்கிறார். இங்கேதான் கவனிக்கவேண்டிய விஷயம் இருக்கிறது. ’இந்த முறை ஒரு புதிய அணிதான் உலகக்கோப்பையை வெல்லும்’. அதாவது, இதுவரை கோப்பையை வென்றிராத அணி. அப்படிப் பார்த்தால், ஏற்கனவே இது  உண்மையாகிவிட்டது. இதுவரை உலகக்கோப்பையை ஒருமுறைகூடத் தொட்டுப் பார்த்திராத இங்கிலாந்தும், நியூஸிலாந்தும்தான்  இறுதிப்போட்டிக்காக (14/7/19) ஆயத்தமாகி நிற்கின்றன. கூடவே அந்த இளைஞர் சொல்கிறார்: கிரகங்களின் போக்குப்படிதான் எல்லாம் என்றாலும், ‘ ’என்னோட ப்ரடிக்‌ஷன் – நியூஸிலாந்து டைட்டில் வின்னர்!’ (உலகக்கோப்பையை வெல்லும்) என்றிருக்கிறார்.  சரி, இதோடு விட்டாரா மனுஷன்? ’கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்தின் கேப்டன்)தான் ‘Man of the series’ என்றுவேறு சொல்லியிருக்கிறாரே.. அப்படியென்றால், வில்லியம்சன் ஃபைனலில் அடித்து நொறுக்குவாரோ? என்னப்பா இது, அசகாய சூரராக இருப்பார் போலிருக்கிறதே  இந்த ஹாசன்? (நடந்துமுடிந்த லோக்சபா, அசெம்ப்ளி தேர்தல் முடிவுகள்- குறிப்பாக ஸ்டாலின்பற்றி- முன்கூட்டியே இவர் ’குறி’ சொன்னதாகத் தெரிகிறது).

யார் இந்த மனிதர், ஊர்? பேர்? கூகிள்ஸ்வாமி புண்ணியத்தால் கொஞ்சம் தெரிந்தது. நம்ப சேலத்துக்காரர். பெயர்: பாலாஜி ஹாசன். நாளை இரவு ’காட்டி’விடும் – பாலாஜி சரியாகத்தான் சொன்னாரா இல்லையா என்று.  ஒருவேளை உலகக்கோப்பைக்குப் பின், பாலாஜி ஹாசன் புகழ், பன்மடங்கு பெருகுமோ, என்னவோ?

**

CWC 2019 : இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து; இந்தியா வெளியே !

மேன்செஸ்டரில் மழை குறுக்கேவந்து போட்டுக்காட்டிய அதிரடி ஆட்டம் காரணமாக,  இரண்டு நாள் நீடித்த செமிஃபைனலில், நியூஸிலாந்து, முதல் ரேங்க் அணியான இந்தியாவை உலகக்கோப்பையிலிருந்து வெளியே தள்ளியது. இன்று நடக்கவிருக்கும் அடுத்த செமிஃபைனலில் ஆடும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றை, கோப்பைக்கான இறுதிப்போட்டியில் (14/7/19) நியூஸிலாந்து சந்திக்கும்.

நேற்றோடு (10/7/19), ஒரு பில்லியன் மக்களின் உலகக்கோப்பைக் கனவு கலைந்து,  காற்றோடு போய்விட்டது. என்ன ஆடி, எவ்வளவு மேலே வந்து, என்ன புண்ணியம்? எப்போது சாத்தவேண்டுமோ அப்போது பார்த்து, 1,1,1 என முதல் மூன்று மூர்த்திகள் அபத்தமாக சரிந்துவிழ, இந்தியாவின் கதை, இன்னிங்ஸ் ஆரம்பித்த நிமிடங்கள் சிலவற்றிலேயே சிதறிவிட்டது. ’ டேபிள்-டாப்பராக இருப்பதில் என்ன பயன்? ஒரு 45-நிமிட நேரம் சரியாக விளையாடாததால் நாங்கள் வெளியேறவேண்டுமா?’ என்பது இந்தியக் கேப்டன் கோஹ்லியின் அங்கலாய்ப்பு. ஆமாண்டா, கண்ணு! இங்கேல்லாம் அப்படித்தான். கரணம் தப்பினால் மரணம் தான்..

9/7/19-ல் செமிஃபைனல் போட்டி ஆரம்பிக்கையில், முக்கியமான டாஸை வழக்கம்போல் கோட்டைவிட்டார் கோஹ்லி. முதலில் பேட் செய்த  நியூஸிலாந்து பிட்ச்சின் மந்த நிலையில், இந்திய பௌலர்களின் துல்லிய வீச்சைக் கவனமாக சந்தித்து ஆடியது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தும், கேப்டன் வில்லியம்சன் எதிர்பார்க்கப்பட்டபடி மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ரன்கள் சேர்த்தார். அவரோடு ஆடிய முன்னாள் கேப்டன் ராஸ் டேய்லர் நிதானத்தின் உச்சத்தில் விளையாடினார். முதல்நாள் மாலையில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்துகையில், நியூஸிலாந்து 211 க்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்திய பௌலர்கள் பும்ரா, புவனேஷ்வர், ஆல்ரவுண்டர் ஜடேஜா அபாரமாகப் பந்து வீசினர். ஜடேஜாவின் முதல் ஆறு ஓவர்களில் ஒரு பௌண்டரியும் அடிக்கமுடியவில்லை அவர்களால்.  (அதே சமயத்தில் இன்னொரு ஸ்பின்னரான சாஹல் அடிவாங்கினார்). மேலும் தாக்கிய மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, உலகக்கோப்பை விதிகளின்படி நேற்று (10/7/19), விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. 47-ஆவது ஓவரைத் தொடர்ந்து புவனேஷ்வர் குமார் வீச, ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங்கில் இந்தியா ஜொலித்தது. முதல்நாள் நாட்-அவுட் பேட்ஸ்மன்களுள் ஒருவரான டாம் லேத்தம் (Tom Latham) தூக்கிய பந்தை, பௌண்டரிக்குப் பக்கத்தில் பேலன்ஸ் இழக்காது உயர எம்பிப் பிடித்து லேத்தமை வீட்டுக்கு அனுப்பிவைத்தார் ஜடேஜா. குமாரின் விக்கெட். வேகமாக ரன் சேர்க்கமுயன்ற டேய்லரின் ஒரு ஷாட்டில் சீறிய பந்தை,  மிட்விக்கெட்டில்  அமுக்கி, ஒரு நேர்-த்ரோவில் ஸ்டம்பைத் தாக்கி ரன்-அவுட்டாக்கினார் ஜடேஜா. மூவண்ண ரசிகர்கள் சீட்டு நுனிக்கு வந்திருந்தனர். பும்ராவும், குமாரும் துல்லியமாகப்போட்டு நெருக்க, 8 விக்கெட்டுக்கு 239 ரன்களே நியூஸிலாந்தால் முடிந்தது என்பது இந்திய பௌலர்களின் திறனைக் காண்பித்தது. இதுவரை .. இந்தியக் கதை ஒரு த்ரில்லர்!

240 எடுத்தால் ஃபைனல் என்கிற நிலை. ரோஹித், ராஹுல் ஆட இறங்கினார்கள். சாதாரணமான நாட்களில்,  இந்த இலக்கு இந்திய அணிக்கு ஒரு ஜூஜூபி. ஆனால் நேற்றைய தினம் வேறு கதையை இந்தியாவுக்காக வைத்திருந்தது.

ஆட விட்டால் ஆடிக்கொண்டே இருப்பார்கள் இந்தியர்கள் என்பதை  நியூஸிலாந்து கேப்டன் அறிந்திருந்தார். இந்திய முன்னணி வீரர்களை குறிவைத்துத் தாக்கி வீழ்த்தினால்தான் விடிமோட்சம் நியூஸிலாந்திற்கு என்பது அவரது பொறியில் தட்டியது. தனது வேகப்பந்துவீச்சாளர்கள், ஃபீல்டர்களை வைத்துக் கடுமையாக வியூகம் அமைத்தார் வில்லியம்ஸன்.  அப்படியே, கேப்டன் விரும்பியபடியே செய்துகாண்பித்தனர் ஆரம்ப பந்துவீச்சாளர்களான மேட் ஹென்றியும் (Matt Henry), ட்ரெண்ட் போல்ட்டும்(Trent Boult). குறிப்பாக  ஹென்றியின் துல்லிய இன்-ஸ்விங்கர்கள் இந்திய ஸ்டாரான ரோஹித் ஷர்மாவையும், கே.எல்.ராஹுலையும் நிற்கவிடாது, அடுத்தடுத்து காவு வாங்கிவிட்டன. மறுமுனையில் பதற்றத்தோடு ஆடமுயன்ற  கோஹ்லியை,  நேரத்தை வீணாக்காது டிஸ்மிஸ் செய்தார் போல்ட். இந்தியா 5 ரன்களில் 3 விக்கெட்டுகள். என்ன நடக்கிறது என்று கோஹ்லி புரிந்துகொள்ளுமுன்பே, ரிஷப் பந்த்தும், கார்த்திக்கும் மைதானத்தில் இறங்கி தடவிக்கொண்டிருந்தனர்.

கார்த்திக் கொஞ்சம் நின்று, விளையாட முயன்றார். முடியவில்லை. இப்போது ஹர்தீக் பாண்ட்யா, ரிஷப் பந்துடன். இருவரும் தங்கள் இயற்கையான ஆட்டத்தை மாற்றியமைத்து, மெல்ல ஓட்டிப் பார்த்தனர் கொஞ்ச நேரம். நியூஸிலாந்தின் ஸ்பின்னர் சாண்ட்னர் இறங்கி பந்து போட்டது, ரிஷப் பந்தின் சிக்ஸர் பசியை ஒரேயடியாகக் கிளப்பிவிட்டது.  சாண்ட்னரின் ஒரு சுழல் பந்தை மண்டிபோட்டவாறு தூக்க, பௌண்டரியில் அதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஃபீல்டரிடம் பந்து சரணடைந்தது. பந்த் அசடுவழிய வெளியே வர, கோஹ்லியின் ரத்தம் சூடாகிவிட்டது. மேலே எங்கோ உட்கார்ந்திருந்தவர் வேகமாகஇறங்கி வந்தார் கோச் ஷாஸ்திரியிடம். ஏதோ வாக்குவாதம். என்ன ப்ரயோஜனம்?

நியூஸிலாந்தின் வில்லியம்சன், சுழல், வேகமென மாறி மாறிப்போட்டு நெருக்கினார் பாண்ட்யாவையும், தோனியையும். சிங்கிள்களில் எத்தனை சேர்க்கமுடியும்?  ஓவர்கள் வேஸ்ட்டாகின. பொறுமை இழந்த பாண்ட்யா, ரிஷப் பந்த் செய்த தவறைச் செய்தார். தூக்கினார் உயர. வில்லியம்சனிடம் பிடிபட்டு, முகம் வெளிறி வெளியேறினார். 240-ஐ மறந்துவிடுவது நல்லது. 150 கூட வரமுடியாது, இந்தியா அவமானத் தோல்வியடையும் என்கிற நிலை.

ஜடேஜா, தோனி

முதல் ஏழு மேட்ச்சுகளில் கோஹ்லி-ஷாஸ்திரி ஆகிய மேதைகளின் கவனத்திற்கு வந்திராத ரவீந்திர ஜடேஜா, 8-ஆவது ஆளாக இப்போது பிட்ச்சில் இறங்கியிருந்தார். தோனியோடு கொஞ்சம் பேச்சு. அடுத்த சில பந்துகளிலேயே  ஆவேசம் தெறித்தது. நியூஸிலாந்தின் சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்களான ஹென்றி, போல்ட், ஃபெர்குஸன்..யாரையும் விடவில்லை. வெறியோடு தாக்கினார் ஜடேஜா. ஃபீல்டர்களைப் பின்னுக்குத் தள்ளுவதும், பௌலர்களோடு பேசுவதுமாக டென்ஷன் காட்டினார் வில்லியம்சன். ஜடேஜாவிடம் மாற்றமில்லை. பௌண்டரிகள், பின் அனாயாச சிக்ஸர்கள்.  மூஞ்சி தொங்கி உட்கார்ந்திருந்த ரசிகர்கள் துள்ளிநின்றார்கள். இது யாருடா இப்ப? ஏற்கனவே ஓவர்கள் குறைந்திருக்க, இப்போது ரன்கள் எகிறின. தோனி அவ்வப்போது சிங்கிள் எடுத்து ஜடேஜாவை முன்னே பாயவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் நியூஸிலாந்தின் ஃபீல்டிங்கும் பிரமாதம். இல்லாவிட்டால்  ஜடேஜா-தோனி ஜோடி, இன்னும் ரன் சேர்த்திருக்கும்.

நமது ஆரம்ப வீரர்கள், மிடில்-ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தடவித் தடவி, ஏகப்பட்ட பந்துகளை வீணடித்ததால், வரப்போகும் பந்துகள் வெகுவாகக் குறைந்திருந்தன. எடுக்கவேண்டிய ரன்களோ மலைபோல் முன்னே. ஜடேஜா-தோனி ஜோடியின்மீது அளவிலா அழுத்தம். எங்கோ காணாமல் போயிருந்த இந்திய ஸ்கோரை, 200-க்குமேல் இவர்கள் கொண்டுவந்ததே ஒரு சாதனை. தோனியிடமிருந்து பௌண்டரி வராது போக,  48-ஆவது ஓவரில் போல்ட்டின் ஒரு பந்தை, முன்னே பாய்ந்து நேராக சிக்ஸருக்குத் தூக்க முயன்றார் ஜடேஜா. துரதிருஷ்ட வசமாக கேட்ச் ஆகி அவர் வெளியேறுகையில், மைதானம் அமைதியில் உறைந்தது. 59 பந்துகளில் 77 ரன்கள். அதில், 4 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள். இந்தக் கட்டத்தில் தோனி அடித்தது ஒரேயொரு பௌண்டரி. தோனி-ஜடேஜா ஜோடி அசத்தலாக, 106 ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. அதில் ஜடேஜா 77. தோனி 29. ஆட்டம் எந்த கதியில் இருந்திருக்கும் என்பது புரிந்திருக்கும். ’ஜடேஜாவும் தோனியும் பிட்ச்சில் தொடர்ந்திருந்தால், எதுவேண்டுமானாலும் நடந்திருக்கும்!’ என்கிறார் ஆட்டத்துக்குப்பின், நியூஸிலாந்தின் ட்ரென்ட் போல்ட்.

ஜடேஜா வெளியேறியபின், நாலே பந்துகளில் தோனி, மார்ட்டின் கப்ட்டிலின் நேர்-த்ரோவில் துரதிர்ஷ்டமாக ரன்-அவுட் ஆனார். 50 ரன்கள் (பௌண்டரி 1, சிக்ஸர் 1). அதற்கப்புறம் என்ன, புவனேஷ்வர், சாஹல் பின்னாடியே பெவிலியனை நோக்கி ஓட, 221 ஆல்-அவுட். ஒரு இந்தியக் கனவு இசகு-பிசகாக முடிந்தது.

சிறப்பான தலைமை, வியூகம், ஆட்டம் என சரியான தருணத்தில் வெளிக்கொணர்ந்த நியூஸிலாந்து, 2019 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

கொசுறு: சில நாட்களுக்கு முன், ஸ்டார்-இன் வர்ணனைப்புலியான சஞ்சய் மஞ்ச்ரேகர், ரவீந்திர ஜடேஜாவை ‘bits and pieces cricketer’ என்றார். ட்விட்டரில் செமயா வாங்கிக்கட்டிக்கொண்டார்! இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் மஞ்ச்ரேகரைக் கிழித்திருந்தார். நேற்றைய ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் ட்விட்டர்வாசிகள் திளைத்திருக்கிறார்கள். மஞ்ச்ரேகர்? கீழே குனிந்து bits and pieces-ஆப் பார்த்துப்  பொறுக்கிக்கொண்டிருக்கிறதே ஒரு அசடு? ஓ.. அதுதானா அது?

**

Picture Courtesy: Google

 

CWC 2019 :  முதல் செமிஃபைனலில் இந்தியா, நியூஸிலாந்து

 

ரசிகர்களுக்கு அதிர்ச்சிதரும் வகையில்  மகா மோசமாக ஆடி, உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய தென்னாப்பிரிக்கா, தன் கடைசி போட்டியில் உலகக்கோப்பை ஃபேவரைட்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவை ஒரு போடு போட்டுவிட்டுப் போய்விட்டது. விளைவு? செமிஃபைனலுக்கான வரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு வந்துவிட்டது. கடைசி நிலையில் இருக்கும் நியூஸிலாந்தை 09/07/19 அன்று, முதல் செமிஃபைனலில் சந்திக்கிறது. ஆரம்பச்சுற்றில் மழையின் காரணமாக, இந்தியா-நியூஸிலாந்து போட்டி ரத்தானது. வியாழன் (11/7/19) வரும் இரண்டாவது செமிஃபைனலில், ஆஷஸ் (Ashes) எதிரியான இங்கிலாந்தை, ஆஸ்திரேலியா கவனிக்கும்!

வலிமையான அணியென மார்தட்டி நின்ற ஆஸ்திரேலியாவின் தலையில் அழுந்தக் குட்டி, ‘ஒன்னத் தெரியும்டா..டேய்.. !’ என்றது, தென்னாப்பிரிக்கா அன்று. போட்டியில் சதம் அடித்துக் காண்பித்த அணியின் கேப்டன் ஃபாஃப் தூ ப்ளஸீ (Faf du Plessis) , ’இந்தப் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு மகிழ்வு தரும் !’ – என்றிருக்கிறார். கூடவே, ’உலகக்கோப்பையிலிருந்து வெளியே செல்கையில், ஒரு சின்னச் சிரிப்புடன் போகிறோம்!’ என்றும் குறிப்பிட்டார் தென்னாப்பிரிக்கக் கேப்டன்.

இந்தியா தன் கடைசி ‘ரவுண்ட்-ராபின்’ போட்டியில் (6/7/19) ஸ்ரீலங்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சாதனை சதமாக உலகக்கோப்பையில் தன் 5-ஆவது சதத்தை அடித்த ‘hit-man ‘ ரோஹித் ஷர்மாவுடன், இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராஹுலும் சேர்ந்துகொண்டார். ஸ்ரீலங்காவுக்காக முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ்  பொறுமையாக ஆடி சதம் அடித்தார்.

விராட் கோஹ்லி – கேன் வில்லியம்ஸன்

ஓல்ட் ட்ராஃபர்ட், மேன்செஸ்டரில் (Old Trafford, Manchester), நியூஸிலாந்தை,  இந்தியா விளையாடவிருக்கிறது. மழைமேகங்கள்வேறு கவியப்போவதாக சேதி. வருணபகவானும்  செமிஃபைனல் பார்க்க ஆசைப்படுவாரோ!  முன்னதாக, உலகக்கோப்பையின் ஹை-ப்ரொஃபைல் மேட்ச்சில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா,  பாகிஸ்தானுக்கெதிராக 336 விளாசி வென்றது இங்கேதான். இதே மைதானத்தில்,  ஆஃப்கானிஸ்தானுக்கெதிராக விளையாடி வென்ற இங்கிலாந்து, 397 (உலகக்கோப்பையின் உச்ச ஸ்கோர்) எடுத்தது. வெஸ்ட் இண்டீஸை வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் (bat) செய்து 291 எடுத்தது. ரன் அதிகமாக வரும் இந்த மைதானத்தில், இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்வது முக்கியம். இல்லாவிட்டால் நியூஸிலாந்து குவிக்க ஆரம்பித்துவிடும். விராட் கோஹ்லி என்ன செய்வாரோ?

இதற்கு முந்தைய போட்டியில் ஸ்ரீலங்காவை தோற்கடித்த இந்திய அணியில் நாளைய அரையிறுதிக்காக  மாற்றம் இருக்கலாம்.  புவனேஷ்வர் குமார் போன மேட்ச்சில் சரியாக ஆடவில்லை. கிட்டத்தட்ட குல்தீப் யாதவின் நிலையும் அதேதான். முகமது ஷமி  புவனேஷ்வரின் இடத்தில் உள்ளே வருவதே நலம். பேட்டிங்கில், நம்பர் 6, 7 ஆவது இடங்களில் எம்.எஸ்.தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் அவசியம் இறங்கவேண்டும். மிடில் ஆர்டர் அசடு வழிந்தால், கீழ்வரிசையில், டெத்-ஓவர்களில் (death-overs) தாக்கி ஆட, ஜடேஜாவால் முடியும். அவருக்குப் பின் வரும் பௌலர்கள் குல்தீப், சாஹல், ஷமி, பும்ரா (8,9,10,11) – பேட்டிங்கில் வெறும் தெண்டம்.  அவர்களால் டீமிற்கு ரன் சேரும் என நம்பினால், இந்தியா காலி.

நியூஸிலாந்து டீமில் காயத்தால் கடைசி போட்டிகளில் ஆடாதிருந்த, டாப் பௌலரான லோக்கி ஃபெர்குஸன் (Lockie Ferguson), நாளை இந்தியாவுக்கு எதிராக இறங்குவார் என எதிர்பார்க்கலாம். அவரோடு ட்ரெண்ட்  போல்ட் (Trent Boult), இடதுகை ஸ்பின்னர் சாண்ட்னர் (Mitchell Santner) ஆகியோர் இந்திய பேட்ஸ்மன்களை புரட்டிப்போடப் பார்ப்பார்கள். இவர்களையும், நியூஸியின் அருமையான ஃபீல்டிங்கையும் தாண்டி, மேன்செஸ்டரில் முதலில் பேட் செய்தால்,  இந்தியா 320-க்குமேல் எடுக்கவேண்டியிருக்கும். இதற்குக் குறைந்தால், கதை தேறாது. ரோஹித், கோஹ்லி, ராஹுல் ஆகியோரின் ரன்சேர்க்கை, வேகமாகவும், விரைவில் விக்கெட் இழக்காமலும் அமையவேண்டும். இளம் ரிஷப் பந்த், ஹர்தீக் பாண்ட்யா ஆகிய பெரிதாகப் பேசப்படும் பேட்டிங்-புயல்கள், தங்கள் வேலையை எதிரிக்குக்  காட்டவேண்டிய தருணம் இது.

நியூஸிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptill), மிடில்-ஆர்டரில் கேப்டன் வில்லியம்ஸன், ராஸ் டேய்லர் ஆகியோரைக் குறிவைத்து  விரைவில் தூக்கிவிடுவதே உத்தமம். இவர்கள் வெகுநேரம் தாக்குப்பிடித்தால் அது, இந்தியா ஃபைனலில் நுழைவதைத்  தடுத்துவிடும். இவர்களை பிட்ச்சில் செட்டில் ஆகவிடாமல் விரட்டுவதில், பும்ராவுக்கும், ஷமிக்கும், இரண்டாவது பவர்-ப்ளேயில் பௌலிங் செய்யும் சாஹல், குல்தீப் ஆகியோருக்கும் ( இருவரும் ஒருவேளை ஆடினால்) முக்கியப் பொறுப்பு இருக்கிறது. இடதுகை சுழல் ஜடேஜா ஒருபக்கம் ரன் கொடுக்காது அழுத்தி, எதிரியை நெருக்குவார் என எதிர்பார்க்கலாம்.

நாளைய முதல் செமிஃபைனலில், இந்தியாவில் ஐபிஎல் ஆடிய அனுபவம் நியூஸிலாந்தின் வில்லியம்ஸனுக்கும், ட்ரெண்ட்  போல்ட்டிற்கும் கைகொடுக்கும் என்கிறார் நியூஸிலாந்தின் முன்னாள் கேப்டனும், ஐசிசி-யின் கிரிக்கெட் பத்தி-எழுத்தாளருமான டேனியல் வெட்டோரி. இந்த மதிப்பீடு சரியாக இருக்கலாம். இருவரும் ரோஹித், ராஹுல், கோலி, பாண்ட்யா போன்றவர்களுக்கெதிராக நிறைய ஆடியவர்கள். அப்படிப் பார்த்தால், இந்திய வீரர்களும்தான் இவர்களுக்கெதிராக ஐபிஎல் ஆட்டம் போட்டிருக்கிறார்கள்!

மைதான நிலவரத்தை பூரணமாகப் புரிந்துகொண்டு, எதிர் அணிக்கெதிராக சரியான வியூகம் அமைத்து, சிறப்பான கிரிக்கெட்டைத் தரும் அணியே வெற்றி பெற்று, உலகக்கோப்பையின் ஃபைனலுக்கு முன்னேறும். அது இந்தியாவாக இருக்கவேண்டுமே என்கிற ஏக்கம், நமக்கு இருப்பது நியாயம்தான்!

**

CWC 2019 செமிஃபைனல் : பாகிஸ்தான் இன்னுமா எட்டிப் பார்க்கிறது !

உலகக்கோப்பையின் ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. நேற்றைய சுவாரஸ்யமான போட்டியில் முரண்டுபிடித்த ஆஃப்கானிஸ்தானை, வெஸ்ட் இண்டீஸ் அடக்கி வீழ்த்தியது. கர்ரீபியன் தீவுகளுக்கு ஃப்ளைட் பிடிக்குமுன், வெஸ்ட் இண்டீஸுக்கு ஒரு ஆறுதல் வெற்றி. சனிக்கிழமை இந்தியா, ஸ்ரீலங்காவுடனும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடனும் மோதுகின்றன.

இன்று (5/7/19) பாகிஸ்தான் பங்களாதேஷுடன் மல்லுக்கட்டப்போகிறது. நடப்பு உலகக்கோப்பையில் இரு அணிகளுக்கும் கடைசிப்போட்டியாக அமையவிருப்பது இது. ஆனால், பாகிஸ்தான் ரசிகர்களில் பலர், 9 பாய்ண்ட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலிருக்கும் தங்கள் அணியின் மீது நம்பிக்கை இழக்கவில்லைபோலும். பாக். ரசிகர்களை விட்டுத்தள்ளுங்கள். அவர்களது பத்திரிக்கைகளும் தீவிர ரசிகர்களிடையே கற்பனையை வளர்த்துவருகின்றன. இங்கிலாந்திடம் அனாவசியமாகத் தோற்று, அதற்கு இரண்டு பாய்ண்ட்டுகளை தாரை வார்த்த இந்தியாவையும் கடுமையாக விமரிசித்து வருகின்றன. பாகிஸ்தானின் பிரபல நாளேடான டான் (Dawn), பாகிஸ்தான் ஒருவேளை, நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி  செமிஃபைனலில் நுழைந்துவிட்டால், எதிரணிகளால் சமாளிக்கமுடியாத அளவிற்கு அது பயங்கர அணியாக மாறிவிடும் எனக் கூறியிருக்கிறது! பாகிஸ்தானின் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மது, தங்கள் அணி செமிஃபைனலில் நுழைவதுபற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: அல்லா உதவிசெய்வாரேயானால் உலகக்கோப்பையில் அதிசயம் நிகழமுடியும் (“..we need to be realistic, but if Allah helps, then miracles can happen” )

ஒரு இளம் பாக். கிரிக்கெட் ரசிகை

இப்படியாகத்தானே.. பாகிஸ்தானில் இன்னும் சூடு கிளம்பிக்கொண்டிருக்கிறது! பாக்.கின் செமிஃபைனல் நுழைவு சாத்தியக்கூறுகள்பற்றி ரசிகர்கள் (பாக். ரசிகர்களும்தான்) ரசமான விளையாட்டில் இறங்கியிருக்கிறார்கள். ட்விட்டர் ஒரே அல்லோலகல்லோலப்படுகிறது.

களத்தில் காட்சி தற்போது இப்படி இருக்கிறது: நாலாவது இடத்தில் 11 பாய்ண்ட்டுகளுடன்இருக்கும் நியூஸிலாந்தை இழுத்துத் தள்ளிவிட, முதலில் பாகிஸ்தான் பங்களாதேஷை வீழ்த்தி 11 பாய்ண்ட்டுகள் பெறவேண்டும். சமப் பாய்ண்ட்டுகள் வந்துவிடும். ஆனால் நியூஸிலாந்தின் NRR (Net Run Rate) பாக்.கைவிட அதிகமாயிற்றே. அதையும் காலிசெய்யவேண்டுமே.. அதனால், பங்களாதேஷை பாக். வென்றால் போதாது. கீழ்க்காணும் சாத்தியக்கூறுகளில் ஒன்றையாவது பயன்படுத்தி பெரிய வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தினால், பாகிஸ்தானின் ரன் -ரேட் நியூஸிலாந்தைவிட அதிகமாகிவிடும். உள்ளே நுழைந்துவிடலாம்:

1) பாகிஸ்தான் இன்றைய மேட்ச்சில் குறைந்தது 400 ரன் அடிக்கவேண்டும். அதுமட்டும் போதாது. பங்களாதேஷை 84 ரன்களுக்குள் நசுக்கித் தூக்கி எறியவேண்டும். 316 ரன்களில் வெற்றி. நியூஸிலாந்தைவிட பாக். ரன்-ரேட் அதிகமாகிவிடும். செமிஃபைனலில் சீட்டு!

2) பாகிஸ்தானால் 350 ரன்தான் எடுக்கமுடியுமா? தோஷமில்லை. பங்களாதேஷை 38 ரன்களில் ஆல்-அவுட் செய்துவிட்டால், 312 ரன் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துவிடுமே.. அப்புறம் என்ன, செமிஃபைனல்தான்.

3) ’என்ன, 350, 400 ரன்களா? ரொம்ப ஜாஸ்தியில்லையா?’ – என்கிறதா பாகிஸ்தான்? போனால்போகட்டும். ஒரு கடைசி வாய்ப்பு: 308 ரன்னாவது பங்களாதேஷுக்கு எதிராக எடுத்துவிடட்டும். ஒரே கண்டிஷன்: பங்களாதேஷை ஒரு ரன்கூட எடுக்க, பாகிஸ்தான் விடக்கூடாது. அதாவது 0-வில் ஆல்-அவுட். சரிதானே! பாக். வந்துடுமே செமிஃபைனல்ல!

ஆனால் இதிலும் ஒரு பயங்கரம்: பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பேட்(bat) செய்தால், பாகிஸ்தானுக்கு சங்குதான்..

Fazal Amin தென்னாப்பிரிக்காவிலிருந்து இப்படி ட்வீட்டிக் கலக்குகிறார்: What if Sarfaraz wins the toss and decides to bowl first !

**

Picture  courtesy : Google

CWC 2019 :  செமிஃபைனலில் இந்தியா !

 

ஒரு பக்கம் குட்டையான பௌண்டரியினால் சர்ச்சைக்குள்ளான அதே பர்மிங்காமில் நேற்று (2-7-19) நடந்தது இன்னுமொரு போட்டி. அதில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா, உலகக்கோப்பையின் அரையிறுதியில் பிரவேசித்துவிட்டது. 2015-ல் நடந்ததைப்போலவே, உலகக்கோப்பையின் Top-4-ல் பங்களாதேஷ் நுழைய முடியாமல்போனதற்கு இந்தியா காரணமானது.

Birmingham: இந்திய அணியின் சீனியர் ரசிகை, 87-வயது சாருலதா பட்டேல் !

நீலவண்ணம் அலையலையாக அசைந்துகொண்டிருந்த மைதானத்தில், 350 என்கிற ஸ்கோரை நோக்கிய ஆர்வத்தில் இந்தியா முதலில் பேட்செய்ய இறங்கியது. ஆனால் முஸ்தாஃபிஸுர் ரஹ்மானின் (5 wickets) ப்ரமாத வேகப்பந்துவீச்சும், ஷகீப்-அல்-ஹஸனின் கூரிய ஸ்பின்னும் இந்தியாவைத் தடுமாறச்செய்து, 314-ல் தன் கதையை முடித்துக்கொள்ளவைத்தது. ரோஹித் ஷர்மா (104) (7 பௌண்டரி, 5 சிக்ஸர் – இந்தக்கோப்பையில் அவரது 4-ஆவது சதம்), கேஎல்.ராஹுல் (77) க்ரீஸில் இருக்கையில் இந்தியா 340 -ஐக்கூட எட்டக்கூடும் எனத் தோன்றியது. ஆனால், கோஹ்லி, பாண்ட்யா, தோனி், (ஜாதவுக்குப் பதிலாக நுழைந்த) கார்த்திக் ஆகியோர்கள் கைகொடுக்கவில்லை. மிடில்-ஆர்டரின் ஒரே விதிவிலக்கு, பங்களா பௌலிங்கை நொறுக்கிய ரிஷப் பந்த்(48). முஸ்தாஃபிசுர் ஒரே ஓவரில் கோஹ்லி, பாண்ட்யா என சாய்த்தும் அசராமல், அதற்கடுத்த ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 3 பௌண்டரிகளை விளாசினார் பந்த். இந்தப் பையனிடம் சரக்கு இருக்கிறது!  இன்னிங்ஸின் கடைசி ஓவரை தோனி விளையாடியவிதம், கிரிக்கெட்டில் தற்போது எந்த நிலையில் அவர் இருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அவரால் கொஞ்சம் அடிக்கமுடியும்; கொஞ்சம் ஓடமுடியும்.. மேட்ச்சை ஜெயித்துக் கொடுக்கமுடியாது. அந்தக் காலம்.. மலையேறிவிட்டது.

பிட்ச், பேட்டிங்கிற்கு சிரமம் தர ஆரம்பிக்கையில் பங்களாதேஷ் 315 என்கிற இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. பும்ராவும், (குல்தீப் யாதவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்த) புவனேஷ்வர் குமாரும் டைட்டாகப் போட்டு நெருக்கினார்கள்.  பங்களாதேஷ் வீரர்கள்,  ஷமி, பாண்ட்யா, சஹல் ஆகியோரைத் தாக்கி ரன் குவிக்க முயன்றார்கள். ஒரு கட்டத்தில், ஷகீப்-அல்-ஹஸனின்(66) திறமையான பேட்டிங், கோஹ்லிக்குக் கவலையைக் கொடுத்திருக்கவேண்டும். பாண்ட்யாவை ஒரு பக்கம் கொளுத்திப்போடவைத்தார். தேவைப்படும் ரன் ரேட் ஏறிக்கொண்டிருக்கையில், பங்களாதேஷ் அடித்துத்தானே ஆகவேண்டும். பாதிப் பிட்ச்சில் குத்தி எகிறிய பாண்ட்யாவின் பந்துகள் லட்டுகளாகத் தோன்ற, பௌண்டரிக்குத் தூக்க முற்பட்டனர் ஷகீப்பும், லிட்டன் தாஸும்.  ஆனால் அவர்களை ஒருவர்பின் ஒருவராகக் காலிசெய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார் பாண்ட்யா (3 விக்கெட்டுகள்). பங்களாதேஷ் ஸ்கோர் 179/6. தள்ளாடியது.  ரசிகர்கூட்டத்தின் முகம் வாட ஆரம்பித்தது. விக்கெட்டுகள் மேலும் சரிய,  8-ஆம் எண் பேட்ஸ்மனான முகமது சைஃபுதீன்(51 நாட்-அவுட்) மட்டும் கடுமையாக எதிர்த்தாடினார். பங்களாதேஷுக்கு எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராகப் பரிமளிப்பாரோ சைஃபுதீன் ?

48-ஆவது ஓவரில், தன்னை எல்லோரும் ஏன் இப்படிப் புகழ்கிறார்கள் என பங்களாதேஷுக்குக் காண்பித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா. தன் கடைசி ஓவரின் ஐந்தாவது, ஆறாவது பந்துகளாக துல்லிய யார்க்கர்களில்,  ரூபெல் ஹுசைன், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் ஆகிய கடைசி  விக்கெட்டுகளை நெம்பித் தூக்கி எறிந்து, இந்தியக் கொடிகளை உயரத்தில் அசையவைத்தார் பும்ரா (4 விக்கெட்டுகள்). இந்திய வெற்றி, சொற்ப ரன் வித்தியாசத்தில், நிகழ்ந்தது. இருந்தும், அரையிறுதி மேடையில் இந்தியாவைத் தூக்கிவைத்தது.

ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் அரையிறுதிக்குள் வந்துவிட்டன. மற்ற இரு இடங்களுக்காக – இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடையே போட்டி. 1992-ஐப் போல், இப்போதும் கடைசிக் கட்டத்தில் பாக். உள்ளே நுழையுமா! பார்ப்போம்..

**

 

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முதல் தோல்வி

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில், தன் முதல் தோல்வியை இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இந்தியா தழுவியது நேற்று(30-6-19). வரிசையாக வந்த வெற்றிகளால் ஒரு மிதப்பில் இருந்திருக்கக்கூடிய இந்திய அணிக்கு இப்படி ஒரு அடி விழுந்தது சரிதான். கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்குமுன், தன்னை சரியாக நிமிர்த்திக்கொள்வது இந்தியாவுக்கு முக்கியம்.

ஒரு பெரிய ஸ்கோரை நோக்கியே இந்த ஆட்டம் செல்லும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகியிருந்தது. இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராயும் (66), ஜானி பேர்ஸ்டோவும்(Jonny Bairstow) கொடுத்த அபார துவக்கமும், மேற்கொண்டு நடந்த ஆட்டமும் இங்கிலாந்து 370-380 வரை செல்லலாம் என நினைக்கத் தோன்றியது. இறுதியில் 337-ஐ ஸ்கோர் தாண்டவில்லை என்பதே கொஞ்சம் ஆச்சரியம்தான். பேர்ஸ்டோ சதம் (111), ராய் (66), ஸ்டோக்ஸ் (79) என முக்கிய தனிப்பட்ட ஸ்கோர்கள்.

இந்தியாவின் துவக்கத்தை அபத்தமாக ஆக்கிய ராகுல், தடவித் தடவி பூஜ்யஸ்ரீ ஆகி வெளியேறினார். ரோஹித் (102), கோஹ்லி(66) முதலில் மெதுவாக ஆரம்பித்து (அந்த பவர்-ப்ளேயில் இங்கிலாந்தின் பௌலிங் டாப்),  பின்னர் வேகம்பிடித்தனர். நாலாம் நம்பர் விஜய் ஷங்கரை பெஞ்சில் உட்காரச்சொல்லிவிட்டு, மைதானத்துக்குள் வந்த ரிஷப் பந்துக்கு கேப்டனின் உற்சாக சப்போர்ட் இருந்தது – தன் இஷ்டத்துக்கு அடித்து ஆட. அப்படித்தான் துவக்கினார் தன் முதல் மேட்ச்சை அவரும். ஆனால் இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்,  அவரை 32 ரன்களில் காவு வாங்கிவிட்டது. தோனிக்கு முன்பாக இறக்கப்பட்ட ஹர்தீக் பாண்ட்யா(45), அவரது வழக்கமான பாணியில் ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்த முயன்றார். தோனி டெஸ்ட் மேட்ச்போல் ஆட ஆரம்பித்து, பின் வேகம் ’காட்டி’ , ஒன்றையும் சாதிக்கமுடியாமல் நாட்-அவுட்டாக(42) நின்றார். அவருடைய தனிப்பட்ட சராசரி  சரி! ஆனால், 338-ஐத் துரத்திய இந்தியக் கதை, 306-ல் சோகக்கதையாக முடிந்தது.  தோனியும், ஜாதவும் இன்னும் கொஞ்சம் முனைந்திருந்தால் அந்த இலக்கு கிட்டியிருக்கும். இங்கிலாந்து வீழ்ந்திருக்கும் என்று தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

பொதுவாக கிரிக்கெட் மைதானத்தின் பௌண்டரி நீளம் நாலாதிக்கிலும் சுமார் 70 மீட்டரிலிருந்து 89-90 மீட்டர் வரை இருக்கும். பர்மிங்காம் மைதானத்தின் ஒரு பக்க பௌண்டரி நீளம் 59 மீட்டர்தான். ரொம்பவே குட்டையான பௌண்டரி ஒரு பக்கத்தில்.  Bizarre and Crazy என்றார் தோற்றுவிட்ட கேப்டன் கோஹ்லி.  தோற்றதற்கு சறுக்கினது சாக்கா? அப்படியும் கொள்ளலாம்தான். இங்கிலாந்து பேட்டிங்கின்போது, அதாவது இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சின்போது என்ன நடந்தது? இந்தியாவின் வலிமைமுகமான ஸ்பின் பௌலிங்கை பலவீனப்படுத்தி அழித்துவிட்டது இங்கிலாந்து. குறுகிய பௌண்டரி வழியே இந்திய ஸ்பின்னரகளை அலாக்காகத் தூக்கி வீசிவிட்டார்கள் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள். குறிப்பாக  லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சஹலைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பேர்ஸ்ட்டோவின் 6 சிக்ஸரிகளில் ஐந்து, இப்படி அடிக்கப்பட்டதுதான். குல்தீப் யாதவும் பெரிசாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பொதுவாக எதிரி டீமைத் திணறவைக்கும் சஹல்-குல்தீப் ஜோடி, நேற்றைய போட்டியில் இப்படி ரன் தானம் செய்தது: சஹல் 10-0-88-0.   குல்தீப் : 10-0-72-1. அதாவது இங்கிலாந்தின்  ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்த, 20 ஓவர்களில் 160 ரன்கள் எதிர் அணிக்கு இந்திய ஸ்பின்னர்கள் தாரைவார்க்கும்படி நேர்ந்தது. இந்தியா தன் ஸ்பின்னர்களுக்கு 20 ஓவர்கள் நிச்சயம் கொடுக்கும் என்பது இங்கிலாந்துக்குத் தெரியாதா? குட்டையான பௌண்டரியைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஆரஞ்சு-நீல இந்திய அணி !

இந்திய பேட்ஸ்மன்களும், நீளக் குறைவான பௌண்டரிவழியே இங்கிலாந்தின் ஸ்பின்னர்களைத் தூக்கி அடித்திருக்கலாமே.. ரன் சேர்த்திருக்கலாமே.. எனக் கேட்கும் புத்திசாலிகள் கவனிக்க: அவர்கள் அணி சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களால் ஆனது – மார்க் உட், லியாம் ப்ளங்கெட், க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) என நீள்கிறது லிஸ்ட். அணியில் ஒரே ஒரு ஸ்பின்னரை (ஆதில் ரஷீத்)- சாஸ்திரத்துக்காக-வைத்திருந்தார்கள். அவருக்கு 10 ஓவர் கொடுத்தால் ரோஹித், பந்த், பாண்ட்யா போன்ற அதிரடிப் பேய்கள் பின்னிவிடுவார்கள் எனத் தெரிந்தே, அவருக்கு வெறும் 6 ஓவர்கள் கொடுத்து விலக்கிக்கொண்டார்கள். நிறைய வேகப்பந்துவீச்சாகப் போட்டு இந்தியாவைத் தாளித்துவிட்டார்கள்.

பேட்ஸ்மன்கள், பௌலர்களின் தனிப்பட்ட திறமைகளினால் மட்டும், ஆட்டத்தின் வெற்றி, தோல்வி எப்போதும் நிகழ்வதில்லை என்பது இங்கே ஓரளவு புரிந்திருக்கும். ஒருபக்கம் குட்டையான பௌண்டரி உள்ள மைதானமாகவைத்து, ஸ்பின் பௌலிங்கில் சிறந்த அணிக்கெதிராக அதிகபட்ச ஸ்கோர் கொடுத்து ஜெயிக்கமுடியும். இது ஒரு வியூக மிக்ஸர்:  நல்ல கிரிக்கெட் + கொஞ்சம் குள்ளநரித்தனம். லேட்டாகத்தான்  தலைக்கு மேலே பல்ப் எரிந்திருக்கிறதுபோலிருக்கிறது, ரவி சாஸ்திரி, விராட் கோலி கூட்டணிக்கு!  அதனால்தான் போட்டியின் இறுதியில் பொறுக்கமுடியாமல் வாயைத் திறந்து, கொஞ்சம் மேட்டுக்குடித்தனமாக, அல்லது நாகரீகமாக, பர்மிங்காம் மைதானத்தை bizarre, crazy என்றெல்லாம் சொன்னார் கோஹ்லி! ’ஆடத்தெரியாத நங்கைக்கு மேடை கோணலாகத் தெரிந்ததோ..!’ என நாமும் நாகரீகமாக நமது கேப்டனைத் திட்டலாம்தான்.. அவர் சொன்னதிலும் பாய்ண்ட் இருக்கிறது என்பதைத் தவறவிடலாகாது.

கொசுறு:  தன்னுடைய இரண்டாவது ஜெர்ஸியான ஆரஞ்சு-நீலத்தில் இந்தியா நேற்று விளையாடியது. ஜெர்ஸி பிரகாசம்.  ஆட்டம்.. ம்ஹூம்..!

**