. . புரிந்தும் புரியாமலும்

காலையில் ஒரு இருபது-நிமிட நடைக்குப்பின் சாலையோரமாக அந்த ரெஸ்ட்டாரண்ட் தலைதூக்கும். நடைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க நினைத்து, அதற்குள்போய் ஒரு கிளாஸ் காஃபி குடிப்பது வழக்கம். கிளாஸ் என்றால் பெங்களூரின் ஷார்ட் கிளாஸ். வேகமாகக் குடித்தால் நொடியில் காலியாகிவிடும். சூடாக வாங்கி, நிதானமாக அனுபவித்துக் குடிப்பதே உசிதம். காலைக் குளிருக்கும் இதம். காஃபியை வாங்கிக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து வெளியே பார்க்க இடம் தேடுகையில், வாசலோரத்தின் ஒவ்வொரு டேபிளிலும் ஒவ்வொருவர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சரி என மூலையில் பார்த்தபோது, ஒரு இருக்கை ’அட, வா இந்தப்பக்கம்’என்றது. போய் உட்கார்ந்துகொண்டேன்.

வெளியே சாம்பல்போர்வையாய் வானம். லேசான காற்றில் ஒரு ஜிலுஜிலுப்பு. காஃபி நன்றாக இருந்தது. ஏதோ சிந்தனையில் மனமிருக்க, கண்கள் வானத்தில் நிலைத்திருக்கையில், திடீரென மேகப்போர்வைக் கொஞ்சம் விலகியது. உள்ளிருந்து நிலவைப்போல் மங்கலாக மாயாஜாலங்காட்டி வெளிப்பட்டது சூரியன். அவ்வப்போது காலை அல்லது மாலைப்பொழுதினில், அதை நானே பார்த்துவிடுகிறேன். மேகமூட்ட நாட்களில்தான் காட்சி கிடைப்பதில்லை. சிலசமயம் அதுவே, ’நா இங்கேதான் இருக்கேன் பாரு !’ – எனத் தன்னைத் திரைவிலக்கிக் காட்டிவிட்டு மூடிக்கொண்டுவிடுகிறது. சிந்தனையினூடே மனம் பாடல் ஒன்றை தன் ஆழடுக்கிலிருந்து எடுத்து விசிறியது :

எங்கிருந்தபோதும் உனை மறக்கமுடியுமா
என்னைவிட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

என்று மனம் ஓட்டுகையில், சூரியன் ஒளிந்துவிட்டிருந்தது.
தொடர்ந்து மேலெழுந்து ரீங்கரித்தது சுசீலாவின் குரல் :

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீயில்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வரும்வரை.. நிம்மதி.. இல்லையே…

இந்த வரிகள் மனதிலே மீண்டும் ரீ-ப்ளேயானபோது அந்தக்கால காட்சிகள் மனக்கண்ணில், கற்பனைத் திரையில் ஓடின. இப்படியெல்லாம் பெண்கள் ஒரு முப்பது-நாற்பது வருடம் முன் உருகியிருக்கிறார்கள் மனங்கவர்ந்தவனை நினைத்து. காதல் என்பது எப்பேர்ப்பட்ட மென் உணர்வாய் மனதில் அழகாய் இறங்கியிருந்திருக்கவேண்டும். மன ஆழத்தில் இதமாக அனுபவிக்கப்பட்டிருக்கவேண்டும். இப்படி இவர்கள் உருகும்படி அல்லவா அந்த ஆண்களும் இருந்திருப்பார்கள். அது ஒரு காலகட்டத்தின் அழகிய கதாபாத்திரங்கள். இளம் மனங்களின் நாசூக்கான உணர்வு வெளிப்பாடு. அது தரும் ஆழ்ந்த சுகம்.. மாறாத சோகம்.

இப்படி சிந்தனை ஓடுகையில், இப்போது நமது யுவர்கள், குறிப்பாக சல்வார்-கமீஸ்களிலும், பேண்ட்-ஷர்ட், சூட் என பிஸினஸ் உலகத்திற்கேற்ப பரபரப்பாய் உலாவருபவர்கள் – பதவி, பணம், அந்தஸ்து என இலக்குகளை நோக்கி பாய்ந்துகொண்டிருக்கும் இளமனுஷிகள் –இவர்களில், இந்த இயந்திர வெளியில், இத்தகைய மென் உணர்வுகள் உண்மையில் தோன்றுமா? காதில் இயர்-ஃபோனும் கையில் நித்திய மொபைலுமாய், அல்லது ப்ளூடூத் புண்ணியத்தில் தனக்குத்தானே சிரித்துக்கொண்டு, பேசிக்கொண்டு எந்தக் கவலையையும், பொறுப்பையும் சந்திக்காது, அருகில் மோப்பமிடும் ஆபத்துக்களைக்கூட உணராது, உலாவரும் நகரத்தின் இளசுகளைக் கவலையோடு பார்க்கிறேன். இவர்கள் காதில் தப்பித்தவறி… ’பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீயில்லாத உலகத்திலே சிங்காரமில்லை..
’ என்று விழுந்துவைத்தால் என்ன நினைப்பார்கள்? ’நீயில்லாட்டி நான் ஏன் சிங்காரமாய் இருக்கக்கூடாது? இது என்ன பேத்தல்?’ என்றா? இந்த வரி: ‘வரும்வரை நிம்மதி இல்லையே..’ கேட்டால் என்ன சொல்வார்கள்? ‘’ Cool dude..cool ! ஷிவ் வெளிநாட்லேர்ந்து திரும்ப ரெண்டுவருஷம் ஆகுமா? ஸோ வாட்! ஷங்கர் இருக்கான்ல..சீண்டுவோம்.. போக்குவோம் பொழுதை..கமான் டீ! எதுக்கு இப்படி அநியாயத்துக்கும் யோசிக்கிறே ?’’ என்பார்களோ? பெரும்பாலான ஆண்களின் நிலையைத் துருவினால், அது இதைவிட அபத்தமாக இருக்கும்.

இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை என்றும் சிலசமயம் தோன்றுகிறது. காதல் எனும் ஆழ்மனம் சார்ந்த மென் உணர்வு, அழகியல் ரீதியாக, தற்செயலாகக்கூட இவர்களில் நிகழ்ந்துவிடக்கூடாது எனத் திட்டமிட்டு நாசப்படுத்துவதுபோலல்லவா நிகழ்த்தப்படுகின்றன காட்சிகள் இப்போதெல்லாம் – நமது சினிமாக்களிலும், சீரியல்களிலும், பொதுவெளிகளிலும் ? திரையிசைக்கு எழுதப்படும் பாடல்களும், சினிமா வசனங்களும் எவ்வளவு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கின்றன நாளுக்குநாள்? எவனாவது கவலைப்படுகிறானா? நவீனம் என்கிற பெயரில் இன்னும் ஏதேதோ அபத்தங்கள் சமூக வாழ்வில் மண்டிக்கிடக்கின்றனவே.

சமூக, பொருளாதார இடைமறித்தல்களையெல்லாம் மிஞ்சி, இளம்வயதினரில் இயற்கை அவ்வப்போது மென்மையாக உணர்வுகளை நிகழ்த்தும்தான். அதனை இவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்களோ, எப்படி வெளிப்படுத்துவார்களோ! ஏதோ சொல்ல நினைத்து, ஏதோ சொல்லி, விதவிதமான சமூகசூழலில் எப்படி எப்படியோ அசைவார்கள். ஏதேதோ பாடுவார்கள். அதற்கேற்ப சிலர் ஆடுவார்கள். பின்னே சிலர் ஓடுவார்கள். காட்சிகள் தினந்தினம் மாறும். விதவிதமான செய்திகளைக் கூறும்.

சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறுசிலர், ‘அந்தகன் வரும்போது.. அவனியில் யார் துணை ?’ என்று மனதுக்குள் பாடிக்கொண்டே மெல்ல நடந்துகொண்டிருப்பர். சிரித்துக்கொண்டே கடந்து செல்லும் காலம்.

**

என்ன, நான் சொல்வது ?

இருக்கிறது ..
வாயைத் திறக்குமுன்னே
இல்லவே இல்லை என்கிறது மறுப்பு
முடித்துவிடலாம்..
நம்பிக்கை துளிர்க்கையில்
நம்மால் முடியாது எனும் அவநம்பிக்கை
நடுவிலே எழுகிறது முட்புதராய்
நடுங்காதே நல்லதே நடக்கும் ..
தேற்றுவதற்குள்
தேறாது ஒன்றும் பேராது என
வேறாக விஷயத்தைச் சித்தரிக்கும்
போறாத வேளையில் பிறப்பெடுத்து
சேறாகக் குழப்பும் ஜீவன்கள்
எதிர்ச்சொல்லுக்கும் மறுப்புக்கும்
அவநம்பிக்கைக்கும் அவதூறுக்கும்
அவ்வப்போது அதிர்ந்துகொண்டிருந்தால்
ஆகவேண்டியதைப் பார்க்கவேண்டாமா
மனிதனின் உளறலை புலம்பலைப்
பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டு
கன்னத்தில் கைவைத்தா நிற்கிறது
காலம் ?

-ஏகாந்தன்

யானையை வர்ணிக்க முயன்ற சுண்டெலி

நகரின் உட்புறச்சாலையோர சாக்கடைப் பொந்திலிருந்து வெளிப்பட்டது சின்னதாய் ஒரு சுண்டெலி. வெளியைக் கண்டால் பயமதற்கு. மிரண்டு போய் அந்தப் பக்கம் பார்க்க, எதிரே நடைபாதையைத் தாண்டி இன்னொரு இருட்டுப்பொந்து ஈர்த்தது மனதை. எலிமனமாயிற்றே!. ஆனால் பெரிய சாலையைக் குறுக்காகக் கடக்க வேண்டுமே. ஒரே ஓட்டமாக ஓடிவிடவேண்டியதுதான் அந்தப் பக்கத்துக்கு. அதற்குள் ஏதோ சத்தம் கேட்க, தன் எண்ணெய்க்கண்ணை இடுக்கிப் பக்கவாட்டில் பார்த்தது. கருப்பாக பெரியமலையொன்று சாலையின் நடுவிலே அசைகிறதே. யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. ‘என்ன ஒரு ஜீவனிது. எத்தனை பெரிசு.. இருந்தும் எத்தனை மெதுவாக நடக்கிறது’ என மனதுக்குள் கிண்டலடித்தது சுண்டெலி. தன் சிற்றறிவைக் கூராக்கி மேலும் ஆராய்ந்தது:

உருவமோ கருப்பு
முகமோ ஐயோ..வெறுப்பு
மலைபோலிருந்தும் என்ன ஒரு மசமசப்பு
தூணைப்போலக் கால்கள்..துவண்டுபோன நடை
சாலையில் இது நடக்க யாரும் போடலையோ தடை
சாலையென ஒன்றிருந்தால்
சரக்கெனப் பாய்ந்து கடக்கவேண்டும்
சாய்ந்து சாய்ந்து நடப்பதென்பது
மனிதர்கள் மட்டுமே செய்யும்
மரபுகளின் மீதான அத்துமீறல் ..

யானை சென்றுவிட்டது. தன் சிறுமண்டைக்குள் சிக்கிக்கொண்ட பெரும் யானையை இன்னும் எப்படியெல்லாம் தாக்கவேண்டும் என விமரிசன வரிகளை அசைபோட்டுக்கொண்டே, சாலையின் குறுக்கே சரக்கென்று ஓடியது சுண்டெலி. இன்னுமொரு பொந்துக்குள் சுகமாய் நுழைந்துகொண்டது.
ஏதோ ஒரு சாதாரண ஜீவன் என நினைத்துவிடாதீர். சுண்டெலி சமூகத்தில் விருதுபல வாங்கிய பெருங்கவிஞன் இது என சேதி ஒன்று காதுக்கு எட்டியிருக்கிறது.

**

’சொல்வனம்’ சிறுகதை : நிஜமாக ஒரு உலகம்

’சொல்வனம்’ இணையப் பத்திரிக்கையின் நடப்பு இதழில்
(இதழ் 182, 26 டிசெம்பர், 2017) எனது சிறுகதை
‘நிஜமாக ஒரு உலகம்’ வெளிவந்துள்ளது.
அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன்.

லிங்க்: https://solvanam.com/?p=51152

நன்றி: ’சொல்வனம்’

**

கந்தர்வன் சிறுகதை ’மைதானத்து மரங்கள்’

எழுத்தாளர் கந்தர்வன் பற்றிய குறிப்பை முந்தைய பதிவில் பார்த்தோம். அவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘மைதானத்து மரங்கள்’ கதைபற்றிக் கீழே பார்ப்போம்:

சிறுவயதிலிருந்தே, தன் வீட்டருகே இருந்த பெரிய மைதானத்தையும், அதனைச் சூழ்ந்திருந்த அடர்மரங்களையும் பார்த்து வளர்ந்தவனின் கதை. மைதானம், மரங்களை வைத்துக்கொண்டு என்னய்யா பெரிய்ய கதை என்கிறீர்கள். உங்களுக்கு கந்தர்வனே சொன்னால்தான் சரிப்படும்.. படியுங்கள்:

அம்மா கூடப்போய் பெண்கள் துறையில் குளிக்க வெட்கப்பட்டு, அவளோடு சண்டை போட்டு இவன் தன்னோடு சேர்த்துக் குஞ்சு குளுவான்களோடு ஊருணிக்கு குளிக்கப் புறப்பட்ட காலத்திலிருந்து , இந்த மைதானத்தோடு இவனுக்கு ரகசிய சம்பந்தம் உண்டு. அப்பா, அம்மா கைகளை உதறிவிட்டு இவன் தானே நடக்கத் துவங்கி, கைகளை வீசி நடந்து வந்ததே, அருகிலிருந்த இந்த மைதானத்திற்குத்தான். அப்போதிலிருந்து இந்த மைதானந்தான் இவனுக்கு ஆதரவு.
மதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த மைதானம் பரந்து கிடந்தது. மைதானத்தின் சிறப்பு அதன் பரப்பளவினால் வந்ததல்ல. அதன் இவ்வளவு மகிமைக்கும் காரணம் அதன் கிழக்கு, மேற்கு ஓரங்களில் ஆஜானுபாகுவாய்க் கிளைகள் விரித்து நிற்கும் அந்தப் பெரிய பெரிய மரங்கள்தான். அவைகளைச் சாதாரணமாய் மரங்கள் என்றழைப்பதே சிறுமைப்படுத்தியதாகிவிடும். நெடுநெடுவென்று வளர்ந்து வீடுகள்போல் தூர்கட்டி, மைதானத்து ஓரங்களைக் கருகருவென்று இருள் போர்த்திக்கொண்டு, பூவும் பிஞ்சும் காயும் பழங்களுமாய் நிற்கும் அந்தப் புளிய மரங்களை ‘விருட்சங்கள்’என்றுதான் யதார்த்தமாக சொல்லவேண்டும்.

சரி, இவன் மட்டுந்தானா அங்கே சுற்றித் திரிந்தது? விதவிதமான மனிதர்கள் வந்து மரநிழலில் உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் அரட்டை அடிப்பார்கள். மாடுமேய்க்கும் சிறுவர்களும், அங்கே உட்கார்ந்து தாயம், ஆடுபுலி என ஆடிக்களித்துப் பொழுதைக் கழிப்பதுண்டு. எத்தனையோ பேருக்கு கோடையில் ஒரு குளுமையையும், மனசுக்கு ஒரு சந்தோஷத்தையும் , அமைதியையும் தந்தன, ஓங்கி வளர்ந்திருந்த அந்த பெருமரங்கள். மேலும் எழுதுகிறார் கந்தர்வன்..

இவன் சிறுபிள்ளையாயிருந்தபோது மைதானத்து மரத்தடிகளில் அதிகமாய் உட்கார்ந்ததே இல்லை. இவனைக் கவர்ச்சித்ததெல்லாம் சூரியனை நேராகப் பார்த்துக் கிடந்த அந்த மைதான வெளிதான். மரத்தடி என்பது உட்காருபவர்களுக்குண்டானது. இவனால் அந்த வயதில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கூடத் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியாது. மைதான வெளியிலென்றால் ஆடிக்கொண்டேயிருக்கலாம். ஓடிக்கொண்டேயிருக்கலாம். ஒவ்வொரு சமயம் விளையாட்டு உச்சத்திலிருக்கையில் மரத்தடியிலிருந்து ‘அப்படிப் போடுரா சபாசு’ என்ற உற்சாகக் குரல்கள் சிறுவர்களை எட்டும். அந்த நாட்களில் அவர்களின் அடுத்தடுத்த ஏவல் குரல்களுக்காகவும், உற்சாக ஒலிகளுக்காகவும் ஆட்டம் தூள்படும். இறங்கு வெயில், மஞ்சள் வெயில், லேசிருட்டு என்ற பொழுது மாற்றங்கள் ஆட்ட மும்முரத்தில் புத்திக்கு உறைக்காது. இருட்டுக் கனமாகி கனமாகி, அடித்த கிட்டிப்பிள்ளையைத் தேடமுடியாமற் போனாலும், உருண்ட கோலிகளைக் குனிந்து குனிந்து கண்களை இடுக்கி இடுக்கிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமற் போனாலும், ஆட்டத்தை மாற்றி வேறு விளையாட்டில் முனைவார்கள். கடைசியாய் ஓடி வருவது தெரியாமல் முட்டி மோதி, எதிரே வருபவனை பெயர் மாற்றிக் கூப்பிட்டு, எல்லோரும் அதற்காக ஓவென்று சிரித்து அந்தச் சிரிப்புகளிலும் அயர்ச்சி வந்து அப்புறந்தான் அந்த மைதான வெளியில் ஆட்டபாட்டங்கள் முடியும்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள், மனதில் பட்ட அடி, அவமானம் தாளாமல், வேதனையிலிருந்து விடுபடமுடியாமல் தவித்துத் தத்தளித்த இவனை, இந்த மரங்கள் தங்கள் காலடியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்த முயன்றன. இவன் மீதிருக்கும் பிரியத்தை மரங்களும்தான் வேறெப்படிக் காட்டும்? மேலே படியுங்கள்:

இவன் எட்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதன் முறையாக மைதான வெளியிலிருந்து ஒதுங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். அன்று அவன் காலையில் பள்ளிக்கூடம் போய் இறைவணக்கம் முடிந்து வரிசையில் வந்து வகுப்பில் உட்கார்ந்தான். ஆங்கிலம்தான் முதல் பீரியட். ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். வெள்ளை பேண்ட்டும், வெள்ளை சட்டையும், வெள்ளை மனசுமாய் மிகுந்த கவர்ச்சியோடிருப்பார். வகுப்பிற்குள் நுழையும்போதே ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தார். அவர் முகத்தில் கவலை நிறைந்திருந்தது. நாற்காலியில் உட்காருமுன்பே அதைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார். “ இன்னும் ஸ்கூல் பீஸ் கட்டாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வேண்டும். பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இந்த வகுப்பில் இன்னும் பீஸ் கட்டாதவர்கள் ராகவன், முத்து…” அடுத்தடுத்த பெயர்கள் அவன் காதில் விழவில்லை. ‘முத்து… முத்து… முத்து…’ என்றுதான் எல்லாமே இவன் காதில் விழுந்தன.

அம்மாதான் வீட்டிலிருப்பாள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். ஆதீன ஆபிஸ் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பத்து நாளாய்ப் பன்னிப் பன்னிச் சொல்லியும் ‘இந்தா தாரேன், அந்தா தாரேன்’ என்று சொல்லிக்கொண்டே தினமும் ஓடிவிடுகிறார். அம்மாவோடு சண்டை போட்டுப் புண்ணியமில்லை. அஞ்சறைப் பெட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு மஞ்சள் சீரகம் இல்லையென்றாலும், சீசாவைப் பார்த்துவிட்டு எண்ணெய் இல்லையென்றாலும், தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள்….

அவன் அன்றுதான் மைதான வெளியை மறந்துவிட்டு, மரத்தடியில் உட்கார்ந்து மைதானத்தை வெறித்து நோக்கினான். ஆங்காங்கு சில மரத்தடிகளில் அந்த வெயில் நேரத்தில் ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். வேளை கெட்ட வேளைகளில் இப்படி வந்து உட்காருபவர்கள், உளைச்சல் தாளாமல்தான் வருகிறார்கள் என்பது அவனுக்கு அருவலாய்ப்பட்டது. வகுப்பில்பட்ட அவமானம், இவன் உடலை நடுக்கியது. இவனால் செய்யக்கூடியது அப்போதைக்கு வேறெதுவுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. வகுப்பை விட்டு வெளியே வருகையில் மாணவர்கள் இரக்கத்தோடு பார்த்த பார்வைகள், இன்னும் இவன் உடல் முழுதும் ஈக்களாய், எறும்புகளாய் மொய்த்துக் கிடந்தன. உக்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

சாலைகளும் மைதான வெளியும் ஊர் முழுவதும் வெயிலின் உக்கிரத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கையில், உடல் நடுங்கி இவன் உட்கார்ந்த இந்த மரத்தடி மட்டும் இளங்காற்றுச் சிலுசிலுப்பும், இதமான நிழலுமாய் குளுகுளுவென்றிருந்தது. நெடுநேரம் அப்படியே சிலையாயிருந்தான். இந்தச் சிலுசிலுப்பும், குளுமையும் இவனின் மனப்பாரத்தை லேசு லேசாய் கரைத்துவிட்டன. இவன் மரத்தடியிலிருந்து எழுந்தபோது குழப்பமும், நடுக்கமும் குறைந்திருந்தன.

ஒருவழியாக, இவனும் தட்டுத்தடுமாறிப் படிப்பை முடித்தான். வேலைக்கு நாயாய் அலைந்து
கிடைக்காமல், மரத்தடியில் வந்து விழுந்துகிடந்தான். அப்பா போனபின், ஆச்சு, ஏதோ ஒரு வேலை, பொண்டாட்டி பிள்ளைனு ஏதேதொ நடந்து, சம்சாரியானான். ஆனால், சந்தோஷம், நிம்மதி என்பதெல்லாம் கிடைக்கக் கொடுத்துவைத்திருக்கவேண்டாமா? வாழ்க்கையின் தீராத பிரச்சினைகள், இந்த ஏழையைப் புரட்டி எடுக்க, மாலை வேலைகளில் மரங்களிடம் மீண்டும் தஞ்சமானான். தொடர்கிறார் கந்தர்வன்:

கல்யாணமாகிப் பிள்ளைகள் வந்து, கூடவே தம்பி தங்கைகள் என்று இவன் சுமை அதிகரித்து, ஒரு பழைய செல்லரித்துப்போன கப்பலாய் மாறிப்போனான். மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் எல்லோருடைய தேவைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்கள் இவனை எதிரியாக்கியே நடந்தன. அப்போதும் இவன் அந்தச் சிலுசிலுவென்றும், குளுகுளுவென்றுமிருந்த மரத்தடிகளிலேயே மருந்து வாங்கித் தேய்த்துவிட்டான்…

அக்கம் பக்கத்தில் சொல்வார்கள், “ முத்துக்கு இந்த மைதானத்திலே பாதியாவது பள்ளிக்கூடக்காரக குடுத்திரணும். அனுபவ பாத்தியதைனு வந்தா பள்ளிக்கூடப் புள்ளைகளைவிட, இவந்தான் ரொம்ப இதை அனுபவிச்சுட்டான்.”

வீட்டுக்குப் பக்கத்தில் இந்த மைதானம், வாழ்விலே ஏதோ ஒரு துணைபோல இருக்கிறதென காலந்தள்ளிய அப்பாவி மனிதனை, ஒரு நாள் மாலை கண்ட காட்சி, அடித்துத் துவைத்துப்போட்டது.. ஏழைகளுக்குத்தானே கஷ்டத்துக்குமேல் கஷ்டம்? பட்டகாலிலே படுவதெல்லாம் அப்பாவி ஜென்மங்களுக்குத்தானே.. படியுங்கள் அன்பர்களே, கந்தர்வனின் சிறுகதை ‘மைதானத்து மரங்கள்’

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2010/11/blog-post_22.html

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்

**