விளக்கணைத்த வேளையில்
வேகமாய்ப் பாய்ந்து வருவதாய்
காற்றுக்காக ஜன்னலைத் திறக்க
கணநேரத்தில் படையெடுத்து
கதிகலங்கவைப்பதாய்
கணக்கற்ற குற்றச்சாட்டுகள் உன்மீது
கவலை ஏதும்படாத கண்ணியவானே
காதுகளில் கனிவாக ரீங்கரித்து உன் தீராத
கதை சொல்லத் தேர்ந்தெடுக்கிறாய்
களைப்பாறக் கண்ணயரும் ஒவ்வொரு இரவையும்
சங்கீதக் கதாகாலட்சேபத்தின் மயக்கத்தினூடே
இங்கிதம் மிகத்தெரிந்த நீயோ
ஊசிமூக்கினால் நாசூக்காய்த் துளைபோட்டு
அளவுக்கதிகமானதாக உன்னால் நிச்சயிக்கப்பட்ட
சிவப்புச் சங்கதியை உறிஞ்சிக் குடிக்கிறாய்
இரத்த அழுத்தத்தைச் சீர்செய்து மனித
இனத்தையே காப்பாற்ற முயற்சிக்கும்
இந்த இனிய சேவையை
பாராட்டிப் புகழ்வோர்
அறிந்து அகமகிழ்வோர்
ஐயகோ, மனிதரில் யாரும் இலர்
அதிரடியாக உனக்கு நிகழும் பிரதிஉபகாரம்
அடி, உதை, அவமானக்கொலை
பரிதாபமான உன் வாழ்வுதான்
பரிதவிக்க வைக்கிறதே!
பாழாய்ப்போன இந்த உலகில் இல்லையெனினும்
பேரண்டத்தின் வேறெந்த அதிசய உலகிலாவது
நீயும் நியாயமற்ற இந்த மனிதனும்
நிதம் சேர்ந்து சுகித்து வாழும்
நாளொன்று வராமலா போய்விடும்?
**