வளரும் பாரதம்… வந்தே பாரத் !

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்காக சென்னை போகவேண்டியிருந்தது.  நெருங்கிய உறவின் நீண்டநாள் அழைப்பு. முகூர்த்தத்திற்கு சில நாட்கள் முன்பு வரை,  குடும்பத்தில் யார் யாரெல்லாம் போவது, எத்தனை நாட்கள் சென்னை மாநகரில் தங்கலாம் என்றெல்லாம் சிந்தனையும், பேச்சும், காப்பியுமாகவே கழிந்ததால், வழக்கம்போல், நாள் நெருங்கி அழுத்த, திடீர் முடிவானது.  புதுசா ஓட ஆரம்பிச்சிருக்கே அந்த ‘வந்தே பாரத்’தில் போய்ப் பார்க்கலாம் நம்ம  சென்னைக்கு என்று. லேட்டா முடிவுக்கு வந்தா, லேட்டஸ்ட் ட்ரெய்ன் கிடைச்சிடுமா அவ்வளவு ஈஸியா?  ’தத்கால்’ புக்கிங்கில் பயணத்திற்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கே விரட்டிப் பிடித்தோம்!

மைசூரிலிருந்து பெங்களூரு, காட்பாடி வழியாக சென்னை செல்லும், இந்திய ரயில்வேயினால் துவக்கப்பட்டிருக்கும் அதிவேக நவீன மின்சார ரயில் இது. 6 மணி 25 நிமிடம் எடுத்துக்கொள்கிறது இந்தப் பயணத்திற்கு. எங்களுக்கு அதிலும் 1 1/2 மணிநேரம் மிச்சம். நாங்கள் பெங்களூர் வாசிகளாயிற்றே. பெங்களூர் ரயில் நிலையத்துக்கு மதியம் 2.50-க்கு வந்து ஐந்து நிமிடங்களில் வெளியேறுகிறது ஸ்டேஷனைவிட்டு. டபுள் டெக்கர் போன்ற மற்ற எக்ஸ்ப்ரெஸ்கள் நிற்கும் சில பல ஸ்டேஷன்களை அனாயாசமாகப் புறந்தள்ளி, வேகமாக முன்னேறும் அதிவிரைவு ரயில். நாங்கள் வசிக்கும் ப்ரூக்ஃபீல்டிலிருந்து உபர் டாக்ஸி பிடித்து, பெங்களூரு மெயின் ஸ்டேஷனுக்கு (SBC) போய், வ.பா-வைப் பிடித்தோம்.  

முதலில் சொல்லவேண்டியது தோற்றம்பற்றி. அதாவது.. appearance. வடிவேலு லாங்குவேஜில்.. லுக்கு! காலங்காலமாக பெருஞ்சதுரமே முகமாக, கம்பி பிண்ணிய முகப்பு ஜன்னல்களுடன்,  பாடாவதி கலரில், உருண்டை ஹெட்லைட்டுடன் அழுக்காக வந்து நிற்கும் இந்திய ரயிலாக இல்லாமல், பளிச்சென்று வெள்ளையாக, நீலக்கோடுடன், சிறிய அழகான எல் இ டி ஹெட்லாம்ப்புகளுடன், வித்தியாச வடிவேந்தி   ’வந்தே பாரத்’ என முகத்தில் சிறிதாக எழுதிக்கொண்டு, ஒரு ரயில்வண்டி இந்திய ப்ளாட்ஃபார்மில் கம்பீரமாக வந்து நிற்பதே கொஞ்சம் நம்பமுடியாத காட்சிதான்! வேறு வண்டி பிடிப்பவர்கள்கூட, தங்கள் மூட்டை, முடிச்சு அவசரத்தினூடே கொஞ்சம் நின்று,  திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு,  தங்கள் பாடாவதியின் படியில் கால்வைத்து ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

நவம்பர் 2022-ல் பிரதமர் நரேந்திர மோதியால் துவக்கிவைக்கப்பட்டது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்ப்ரெஸ் ரயில். எங்கள் டிக்கட்டை சோதித்ததில், நாங்கள் ஏறவேண்டிய கம்பார்ட்மெண்ட் C-7 என்றது. ஏறி சீட்டுகளில் உட்காருகையில், கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தெரிந்தன. சுத்தமான பெரிய கண்ணாடி ஜன்னல்கள், தரமான,  மென்மையான ரூஃப் லைட்டிங், எதிரே  தமிழ், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வார்த்தைகளை ஓட்டி, பயணிகளை நிதானமாக வரவேற்கும் எல் இ டி திரை/ தெளிவான பெண்குரல்,  ஃப்ளைட்டுகளில் இருப்பதுபோன்ற, சரியான அளவிலான கைப்பிடிகள், எதிர் சீட்டின் பின்புறத்திலிருந்து எளிதாகத் திறக்கும் சிறு டிஃபன் டேபிள், சுத்தமான ஃப்ளோரிங். சரியாக வடிவமைக்கப்பட்டதோடு, பராமரிக்கவும்படும், நவீன டாய்லெட்டுகள் என்பது இந்திய ரயில்வேயில் இதுவரை நாம் சந்தித்திராதது.  இந்தியப் பயணிகளின் உள்நாட்டு ரயில் பயணத்தை சர்வதேசத் தரத்திற்குக் கொண்டுவர இந்திய ரயில்வேயின் தீவிர முயற்சிகளில் ஒன்று ’வந்தே பாரத்’ தொடர் ரயில்கள்.

பெங்களூரு-சென்னை என 4 ½ மணி நேரம்தான் வந்தே பாரத்தில். மற்ற எக்ஸ்ப்ரெஸ்கள் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டு நம்மைக் குலுக்கோ குலுக்கெனக் குலுக்கி, அயர்த்தி சென்னையில் ஒருவழியாகத் தள்ளிவிட்டுப்போய்விடுகின்றன.  வந்தே பாரத்தில் வேறென்ன சொல்லும்படி இருக்கிறது என்றால்.. இருக்கிறது சில.  பயண ஆரம்பத்தில் உங்களுக்குத் தரப்படுகிறது ஆங்கில அல்லது தமிழ் தினசரி இதழ். ஒரு மணி நேரத்திற்குப்பின் வருகிறது டிஃபன் டைம். ஒரு சின்ன ட்ரேயில் ஒரு குண்டு ஆலு சமோஸா, ஒரு நம்கீன் (அவல், கடலை, ஓமப்பொடி என Bikaner க்ரூப்பின் குஜராத்தி மிக்ஸர்) பாக்கெட், Chayoos-ன் இன்ஸ்டண்ட் டீ மிக்ஸ் அல்லது கொல்கத்தா ப்ராண்ட் ஒன்றின் காப்பி மிக்ஸ் பாக்கெட். வெல்கம் டு வந்தேபாரத் என அழைக்கும் சிறிய பேப்பர் கப்பில் சுத்தமான ஃப்ளாஸ்கிலிருந்து ஊற்றப்படும் வெந்நீர் – காப்பியோ, டீயோ நீங்களே தயாரித்துக்கொள்ள என. கூடவே அது என்ன ட்ரேயில்..சின்ன பேக்கட்? ஆ.. ஸ்வீட். எடுத்து படித்துப்பார்த்தேன் ஒட்டியிருந்த லேபிளை. ஸ்ரீ கஜானந்த் ஸ்வீட்ஸ், பெங்களூர் என்றது. சுத்த நெய்யில் செய்யப்படும் பாப்புலரான ஸ்வீட் ஸ்டால்களை பெங்களூரிலும், சுற்றுவட்டாரத்திலும் கொண்ட குழுமம். உள்ளே மைசூர் பாக். நெய் விரலில் ஒட்ட, வாயில் கரைதது பாக். நாக்கு இன்னும் இருக்கா!-என்றது.  மொத்தத்தில் ருசிக்க, தரமான உணவுப்பொருட்கள். சாப்பிட்டு முடித்து சில நிமிடங்களில் நமது ஜனங்கள் ஆயில்பேப்பர், டிஷ்யூ என மூலைக்கு மூலை எறிந்துவிடும் கொடுங்குணம் கொண்டவர்களாயிற்றே.. அதை உடனே தவிர்க்க, ஃப்ளைட்டில் நடப்பதுபோல, பாலிதீன் பையுடன் குப்பை கலெக்ட் செய்ய என நீலச் சீருடையில் வரும் ரயில்வே அலுவலர்கள். இதுவன்றி மீதமிருக்கும் நேரத்தில் மென்மையாக உங்களை அணுகி, Snickers, KitKat  போன்ற சர்வதேச பாப்புலர் சாக்லட்டுகளை விற்கவும் செய்கிறார்கள் வந்தே பாரத்தில்.

பெங்களூர் திரும்பும் பயணத்தில்,  காலை 6-க்கு சென்னையிலிருந்து புறப்படுகிறது வந்தே பாரத். காலையில் ஆங்கிலம் அல்லது தமிழில் நியூஸ்பேப்பர் கொடுக்கிறார்கள். (மைசூரிலிருந்து புறப்படும் வண்டியில் ஆங்கிலமும், கன்னடமும் சாய்ஸ் ஆக இருக்கும்).அப்புறம் வருகிறது காலைச்சிற்றுண்டி. ம்ருதுவான இட்லி-ஜோடி, ஒரு மெதுவடை. இதமான காரத்தில் தேங்காய் சட்னி. சிறிய பிஸ்கெட் பேக் – Lotte Choco Pie. Coffee or tea- உங்கள் விருப்பம். சரியான சீரான வேகத்தில் (எல் இ டி ஸ்க்ரீன் அவ்வப்போது வண்டியின் வேகத்தை 103 கி.மீ, 110 கி.மீ எனக் காண்பிக்கிறது), சரியான வருகை நேரத்தில், குலுங்காது வந்து நிற்கிறது பெங்களூரு ஸ்டேஷனில். வேறென்ன வேண்டும் ஒரு இந்திய ரயில் பயணத்தில்!

ரயில் பயணமாக லால் பாக் (Lalbagh) எக்ஸ்ப்ரெஸ், சென்னை எக்ஸ்ப்ரெஸ், டபுள் டெக்கர், ஷதாப்தி, என பெங்களூரிலிருந்து சென்னைக்கு சில சமயங்களில் பயணிக்கையில், இடையிடையே ஏகப்பட்ட குட்டி ஸ்டேஷன்களில் வண்டி நிற்கும். அலுப்போடு நகரும். செல்லும். அந்த வேலையே இங்கு நடக்காது, வந்தே பாரத்தைப் பொறுத்தவரை. பெங்களூரிலிருந்து பிற்பகல் 2: 55-க்குப் புறப்பட்ட வண்டி, 3 மணிநேரம் கழித்து காட்பாடி ஜங்ஷனில் 3-4 நிமிடம் நின்றது. பிறகு சென்னையை நோக்கி தண்டவாளத்தில் பறத்தல். இரவு சரியாக 7:29-க்கு சென்னை சென்ட்ரலின் 1-ஆம் எண் நடைமேடையில் வந்து நின்று, தன் பயணிகளை மெல்ல உதிர்த்துவிட்டது. பயணக் களைப்பே தெரியாமல் பயணிகள் ஃப்ரெஷ்ஷாக வந்து இறங்கியது பார்க்க, நன்றாக இருந்தது.

மேலும்: நாடு முழுதும் முக்கிய நகர்களை சர்வதேசத் தரத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நவீன, வேக, மின்சார ரயில்கள் மூலம் இணைக்கக் கருதி மத்திய அரசின் ’மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்’ இந்த ’வந்தே பாரத்’ ரயில்வே ப்ராஜெக்ட் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் பெயர் ’ட்ரெய்ன் 18’ என இருந்திருக்கிறது! முதன் முதலாக வந்தே பாரத் எக்ஸ்ப்ரெஸ் 2019-ல் துவக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. மைசூர்-சென்னை வந்தே பாரத் இந்த வகையில் ஐந்தாவது எக்ஸ்ப்ரெஸ் ரயிலாகும். சென்னை பெரம்பூரிலுள்ள ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைதான் (Integral Coach Factory, Chennai) புதிய தொழில்நுட்பத்துடன், நவீன வந்தே பாரத் ரயில் பெட்டிகள். வந்தே பாரத்தின் எலெக்ட்ரானிக்/ கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்களை வடிவமைத்ததில் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் பங்களிப்பு தந்திருக்கிறார்கள் எனவும் தெரியவருகிறது. சராசரி வேகம் 105-115 என்றாலும், மணிக்கு 180 கி.மீ. வரை வேகம் காட்டக்கூடிய ரயில் வண்டி. நாட்டின் பல்வேறு பகுதிகளில் துவக்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலும் 16 பெட்டிகளைக் கொண்டது.

இன்று (8-4-23) சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிரதமரால் துவக்கப்பட்டிருக்கும் புதிய சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத், சற்றே வித்தியாசமானது. 8 பெட்டிகள். அதில் ஒன்று எக்ஸிக்யூட்டிவ் கம்பார்ட்மெண்ட் என்கிறது செய்தி. இந்த ஏசி எக்ஸ்ப்ரெஸில், சேர்-கார் சீட்டுகள்: 450 (டிக்கட் விலை:ரூ.1215). எக்ஸிகியூட்டிவ் சேர்கார் சீட்டுகள்: 56 (டிக்கட் விலை ரூ. 2310). சென்னை-மைசூர் வந்தே பாரத்தைப்போல, சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் எக்ஸ்ப்ரெஸும் , புதன் தவிர்த்து வாரத்தின் மற்ற நாட்களில் ஓடும். சென்னையிலிருந்து மதியம் 2:25-க்குப்புறப்படும் இது, கோயம்புத்தூருக்கு இரவு 8:15-க்கு வந்து சேரும். இடையில், சேலம், ஈரோடு, திருப்பூர் என மூன்றே ஸ்டாப்புகள். அதேபோல, கோயம்புத்தூரில் காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத், காலை 11:50-க்கு சென்னை வந்து சேருகிறது. சென்னை-கோயம்புத்தூரிடையே செல்லும் ஏனைய இண்டர்-சிட்டி எக்ஸ்ப்ரெஸ்களைவிட, 1 1/2 மணி குறைவான நேரத்தில், ஏசி குளுகுளுப்பில், வந்தே பாரத் உங்களை சொகுசாகக் கொண்டுபோய் சேர்க்கும். இந்தப் புது விரைவு ரயிலில் பயணிப்பதற்கான டிக்கட்டுகள், புக்கிங் ஆரம்பமான சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டன. ஐபிஎல் டிக்கெட் சேல் மாதிரில்ல இருக்கு வந்தே பாரத் சேல்!

பியுஷ் கோயல் (Piyush Goyal) திறனான மந்திரியாகத் தலைமை தாங்கும் மத்திய ரயில்வே அமைச்சகத்திலிருந்து இன்னும் நல்ல பொதுநல முயற்சிகள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது எனத் தோன்றுகிறது.

**

ஐபிஎல்2023: முதல் போட்டியில் குஜராத் வெற்றி

குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் குதூகல IPL ஆரம்ப விழா நேற்று (31-3-23). தங்களுக்குத் தெரிந்த ‘கிரிக்கெட்டை ஆடி’ மஹா ரசிகர்களை சூடேற்றிவைத்த இந்தியத் திரைவானின் இளம் நட்சத்திரங்கள் – ரஷ்மிகா மந்தனா. தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia). சுஃபி, வெஸ்டர்ன் பாடகர் அரிஜித் சிங் ஆட்டத்திற்குத் துணையாகக் குரல்கொடுத்தார். ரசிகர்களின் ஆனந்தம்பற்றிக் கேட்கவும் வேண்டுமா!

அரங்கேறி நடமாடும் மங்கை… போல

அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்..!

-ஆடும் அணங்குகள் தமன்னா, ரஷ்மிகா மந்தனா

தோனியின் காலில் விழும் (வடக்குப் பழக்கம்) பிரபல பாடகர் அரிஜித் சிங்

(என்னதான் சிரிப்போ!) – ரஷ்மிகா, தமன்னா

முதல் மேட்ச். பாண்ட்யாவின் குஜராத் டைட்டன்ஸ் vs தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். பாண்ட்யா டாஸ் ஜெயித்து பௌலிங் என்று சொல்ல, தோனியின் மஞ்சள் வீரர்கள் மைதானத்தில் பேட்டுடன். ருதுராஜ் கெய்க்வாட் சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் மனதிலிருந்து ரஷ்மிகாவையும், தமன்னாவையும் மறையும்படி செய்துவிட்டார்! அப்படி ஒரு விளாசல். குறிப்பாக பாண்ட்யா, (அயர்லாந்தின் ஜோஷுவா லிட்டில், ஜோஸப் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை கடைந்துஎடுத்துவிட்டார் கடைந்து. முகமது ஷமியும், ரஷீத் கானும் மட்டுமே அவரது ஆவேசத்திலிருந்து தப்பித்தார்கள். இருந்தும், சதம் வரவில்லை அவரிடம். 4 பௌண்டரி, 9 சிக்ஸர், 92-ல் அவுட். மொயீன் அலி கொஞ்சம் சேர்த்தார்.

CSK’s Gaikwad: Sublime innings

தோனி இவ்வளவு கடைசியில் வந்திருக்கக்கூடாது எனத் தோன்றியது. 5-ஆவது அல்லது 6-ஆவது இடத்தில் வந்திருந்தால் இன்னும் ரன் சேர்ந்திருக்கும். ராயுடு, ஜடேஜா, ஷிவம் துபே எல்லாம் ஃப்லாப் ஷோ. ஆனாலும், அஹமதாபாத் ஸ்டேடிய ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்துதான் வைத்திருந்தார் மகேந்திர சிங் தோனி. அவர் அடித்த ஒரு சிக்ஸரே, ரசிகர்களின் முகங்களை மினுமினுக்கவைத்தது. காமிரா காண்பித்தது. இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 178 என்றது சென்னையின் ஸ்கோர்.

வ்ரித்திமான் சாஹாவும், ஷுப்மன் கில்லும் துவக்கினார்கள் குஜராத்தின் அக்கவுண்ட்டை. வேகம் காட்டமுயன்ற சாஹா 25-ல் வெளியேற்றப்பட்டார். முதன்முறையாக இம்பேக்ட் ப்ளேயர் (impact player) ரூல் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஐபிஎல்-இல். ரூலின்படி, ஆரம்ப 11-ல் இருக்கும் ஒரு வீரருக்கு பதிலாக, போட்டியின் தருணத்தை பொருத்து அணியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு இம்பாக்ட் ப்ளேயர் உள்ளே வந்து ஆடலாம். பௌலிங், பேட்டிங் செய்யலாம். ஏற்கனவே இரண்டு அணியாலும் அறிவிக்கப்பட்ட தலா 5 இம்பேக்ட் ப்ளேயர்களிலிருந்து ஒருவர் தான் இதற்கு கேப்டனால் தேர்வுசெய்யப்படவேண்டும். ஆனால், வெளியேற்றப்பட்ட வீரர் திருப்பி வந்து ஆட்டத்தில் கலந்துகொள்ளமுடியாது என்பதும் நிபந்தனை. முதலில் இதைப் பயன்படுத்தியது தோனி. குஜராத் பேட்டிங்போது, வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேயை (Tushar Deshpande), பேட்ஸ்மன் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக உள்ளே வரச் செய்தார். ஆனால் தேஷ்பாண்டே அப்படி ஒன்றும் இம்பாக்ட் ஏற்படுத்திவிடவில்லை!

Player of the Match: GT’s Rashid Khan

புதிதாக ஐபிஎல் ஆட வந்த சிஎஸ்கேயின் வேகப்பந்துவீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தனது அருமையான யார்க்கர், லெக்-கட்டர்களுடன் குஜராத்தின் வேகத்தை மட்டுப்படுத்தித் திணறவைத்தார். 3 முக்கிய விக்கெட்களைப் பிடுங்கி வீசினார்.

ஃபீல்டிங்கில் அடிபட்ட வில்லியம்ஸனுக்குப் பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக பேட்ஸ்மன் சாய் சுதர்ஷனை குஜராத் பேட்டிங்போது உள்ளே அழைத்தார் பாண்ட்யா. சாய் வேகமாக 22 அடித்துவிட்டு வெளியேற, விஜய் ஷங்கர் 27 அடித்தார். ஷுப்மன் கில் தன் ஃபார்மை உறுதிசெய்தவாறு விறுவிறுவென 63 என விளாசி குஜராத்திற்கு டாப் ஸ்கோர் கொடுத்தார். இருந்தும், டெத் ஓவர்களில் சென்னை ஜெயிக்க வாய்ப்பிருப்பதுபோல் மேட்ச் வித்தை காட்டியது. ஆனால் ரஷீத் கான் 19-ஆவது ஓவரில் சிக்ஸர், பௌண்டரி விளாசி சென்னையை அடக்க, கடைசிஓவரில் ஒரு சிக்ஸ், பௌண்டரி என குஜராத் வெற்றிக்கு வழிசெய்தார் ராஹுல் தெவட்டியா. 182/5. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் மூன்றாவது தொடர் வெற்றி இது. சிஎஸ்கே! அடுத்த சந்திப்புல திருப்பிக் கொடுத்திருங்கப்பா!

இன்று (1-4-23) சனிக்கிழமை. Double header. முதலில் (3:30 pm) பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸையும், அடுத்த போட்டியில் (7:30 pm) லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸையும் சந்திக்கின்றன. 3 புதிய கேப்டன்கள் – டெல்லிக்கு டேவிட் வார்னர், பஞ்சாபுக்கு ஷிகர் தவன், கொல்கத்தாவுக்கு நிதிஷ் ரானா. லக்னோவுக்கு கே.எல்.ராஹுல் என்பது தெரிந்ததே!

WPL, IPL .. கிரிக்கெட் ரசிகர்களின் யோகம்!

கத்தி போச்சு, மாங்கா வந்தது டும் டும் டும்.. ! – என்பதுபோல WPL போய், IPL உள்ளே நுழைகிறது நாளை (31-3-23) அகமாதாபாத் மைதானத்தில், கிரிக்கெட் ரசிகர்களின் மனவெளியில்.

மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி WPL கோப்பையை வென்று, WPL-ன் முதல் எடிஷன் போட்டிகளை சில நாட்களுக்கு முன் மும்பையில் முடிவுக்குக் கொண்டுவந்தது. பெண்களுக்கான முதல் டி-20 லீக் கிரிக்கெட் சேம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக ஆரம்பித்து நடத்தியதிலும்,எதிர்பார்த்ததைவிட ரசிகர்களின் ஆதரவு, ஆரவாரம் மைதானங்களில் பொங்கியதாலும் இந்திய கிரிக்கெட் போர்டும், அணி உரிமையாளர்களும், கமர்ஷியல் ஸ்பான்சர்களும் ஏகப்பட்ட குஷியில் இருக்கிறார்கள்.

WPL players: Smriti Mandhana, Nat Sciver-Brunt, Jemimah Rodrigues

கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை அணிக்கு ரூ.6 கோடி பரிசுப்பணமாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை. இவற்றைத் தாண்டி டூர்னமெண்ட்டின் சிறப்பு வீராங்கனை (ஹேலி மேத்யூஸ்)- ரூ.5 லட்சம், ப்ளேயர் ஆஃப் த ஃபைனல் (நாட் ஸிவர்-ப்ரண்ட்) ரூ.5 லட்சம், திறன்வாய்ந்த புதிய வீராங்கனை (யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia) ரூ.5 லட்சம், சிறந்த கேட்ச் பிடித்த வீராங்கனை (ஹர்மன்ப்ரீத் கௌர்) ரூ.2 1/2 லட்சம், ஃபைனல் மேட்ச்சில் சிறந்த பவர் ஹிட்டர் (ராதா யாதவ்) விருதுக்காக ரூ.1 லட்சம் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டு 2023-க்கான கோலாகல WPL விழா மார்ச்சில் நிறைவடைந்தது .

Above: IPL bowlers – Washington Sundar, Natarajan, Ashwin, Shardul Thakur

நாளை(31-3-23) ஆரம்பமாகிறது ஆண்களுக்கான கிரிக்கெட் ஆட்டபாட்டம். அதாவது, நம்ம IPL ! முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் (கேப்டன்: ஹார்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (கேப்டன்: எம்.எஸ்.தோனி) -உடன் மோதுகிறது. இரு அணிகளுக்கும் தீவிர ரசிகர்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிறையப்பேர். ஆதலால், போட்டி அதிஆர்வமாக கவனிக்கப்படும். குஜராத் அணியில் பாண்ட்யாவோடு, நியூஸிலாந்தின் கில்லாடி(!) கேன் வில்லியம்ஸன், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், முகமது ஷமி, ராஹுல் தெவாட்டியா, சாய் கிஷோர் ஆகியோர் பலம் காட்டுகிறார்கள். போன வருடம் பத்து போட்டிகளில் தோற்று பரிதாபமாகக் காட்சியளித்த சிஎஸ்கே-யில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், இங்கிலாந்தின் மொயீன் அலி, தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியஸ் (Dwaine Pretorius), அம்பதி ராயுடு ஆகியோர் முஷ்டியை உயர்த்தி நிற்கிறார்கள். தோனி முதல் மேட்ச்சில், காயம் காரணமாக ஆடமாட்டாரோ என்றொரு வதந்தி!தொடரின் பின்பகுதியில் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சென்னை அணியில் சேர வாய்ப்பு. அஹமதாபாதின் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் முதல் போட்டியிலேயே பொறிபறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை ஆட்டமாடிய பெண்களைக் கொஞ்சம் மனதிலிருந்து அகற்றிவிட்டு, ஆடவிருக்கும் ஆண்வீரர்களை இனி கவனிக்கப் பாருங்கள், கிரிக்கெட்டின் போதை பக்தர்களே! உங்களுக்கு சுக்ர தெசைதான் இப்போது…

**

WPL 2023:  முதல் சேம்பியன் யார்? டெல்லியா? மும்பையா?

கடந்த நாலு வாரங்களாக இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் குஷிப்படுத்திவரும் பெண்களின் முதல் இந்திய டி-20 லீக் ஆன WPL (Women’s Premier League),   இறுதிக் கட்டத்தை வந்தடைந்திருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் பெண்கள் அணி, மும்பை இந்தியன்ஸ் மகளிர் குழாமுடன் WPL கோப்பைக்காக மோதத் தயாராய் உறுமிக்கொண்டு நிற்கிறது.

Meg Lanning (DC) & Harmanpreet Kaur (MI) posing with the WPL Cup

இதுவரை நடந்த சுவாரஸ்யமான போட்டிகளில் இந்த இரு அணிகள்தான் டாப்கிளாஸ் என்பதில் எந்த சந்தேகமும் எவருக்குமில்லை. மூன்றாவது இடத்தில் உ.பி.வாரியர்ஸ். 4,5 ஆவது இடங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜயண்ட்ஸ்! அணியின் பலம் என்று பார்த்தால் மும்பை இண்டியன்ஸ்தான் மனதில் முதலில் வருகிறது. டெல்லியும் சளைத்ததில்லை. முதலில் ஃபைனலில் நுழைந்த டீம் அதுதானே. உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டனான மெக் லானிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி அணியில் இந்தியாவுக்கு U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues), ஷிகா பாண்டே, மரிஸான் காப், அலைஸ் கேப்ஸி(Alice Capsey), ஜெஸ் ஜோனஸன் எனத் திறன்வாய்ந்த வீராங்கனைகள்.

Alice Capsey (centre) being congratulated for a wicket by Delhi Capitals’ girls.

இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கும் மும்பை இண்டியன்ஸில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மாத்யூஸ், WPL -ல் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய இஸ்ஸி வோங், முன்னேறிவரும் இந்திய  வீராங்கனை சைகா இஷாக் (Saika Ishaque), யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia), ஆல்ரவுண்டர்கள் அமேலியா கர் (Amelia Kerr), நாட் ஸிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt),  ராதா யாதவ் போன்ற in-form players.

Hayley Mathews – Mumbai Indians’ opener

மும்பையின் ப்ராபர்ன் (Brabourne) ஸ்டேடியத்தில் மகளிர் கிரிக்கெட்டின் கடும்போட்டி ஒன்று நிகழவிருக்கிறது நாளை இரவு (26-3-23). மும்பையின் அந்தத் திகிலான இரவில், அழகுமிகு WPL கோப்பை யார் கைகளில் அமர்ந்து மின்னுமோ!

**

சீறிப் பாயும் பெண்கள் கிரிக்கெட் – இந்தியாவின் WPL

முதன்முதலாக சர்வதேச அளவிலான பெண்களுக்கான முன்மாதிரி (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மார்ச் 2023-ல் ஆரம்பிக்கவிருக்கிறது.  WPL – Women’s Premier League – துவக்கப்படுவதற்கான இந்திய கிரிக்கெட் போர்டின் ஆரம்ப அறிவிப்புக்குப் பின்,  உலகெங்குமான  கிரிக்கெட் வீராங்கனைகள், அதனுள்ளே நுழைந்துவிடப் படபடக்கிறார்கள். இந்திய வீராங்கனைகளுடன், அயல்நாட்டு அதிரடி பெண் கிரிக்கெட்டர்களும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஆடப்போகும் மகளிர் கிரிக்கெட்டின் high profile T-20 போட்டிகள் இவை. மும்பையில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மொத்தம் 22 போட்டிகளின் இறுதியில், எந்த அணி தட்டிச்செல்லுமோ அலங்கார WPL கோப்பையை!

WPL-ன் அழைப்பின் பேரில் வீராங்கனைகள் ஏலத்திற்காக சுமார் 1500 பேர் பதிவு செய்திருந்தார்கள். தங்கள் நாட்டிற்காக ஆடிவருபவர்களும், U-19 வீராங்கனைகளும் கொண்ட நீண்ட பட்டியல். இந்திய வீராங்கனைகளையும் உள்ளடக்கிய இந்த பட்டியல், இந்திய கிரிக்கெட் போர்டினால் சுருக்கப்பட்டு 449 வீராங்கனைகள் மட்டும் ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த ப்ரிமியர் லீகில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் 5 பெண்கள் அணிகள் ஆடவிருக்கின்றன: குஜராத் ஜயண்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ், மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய மகளிர் கிரிக்கெட் அணிகள் நேற்று (13-2-23) மும்பையின் Jio Global Centre-ல் நடந்த கிரிக்கெட் வீராங்கனைகளின் ஏலத்தில் பங்கேற்றன. WPL ஏலத்தில், அதிகபட்ச அடிமட்ட விலை -Base Price – ஆக ஒரு முன்னணி வீராங்கனைக்கு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூ.40 லட்சம், ரூ. 30 லட்சம் என அடுத்தடுத்த பிரிவுகளும் இருந்தன. தன் நாட்டு அணிக்காக இதுவரை ஆடியிராத  வீராங்கனை ஒருவரின் அடிமட்ட விலை ரூ. 20 லட்சம், ரூ. 10 லட்சம் என்கிற பிரிவுகளில் இருந்தது. இதற்கு மேல், ஒரு வீராங்கனையின் ஆடும் திறன், சர்வதேச அனுபவம், அவர் ஒரு batter, bowler, allrounder- ஆகியவற்றைப்பொருத்து ஏலத்தில் அவர்களின் விலை ஏறியது அல்லது அடிமட்ட விலையைத் தாண்டாது, அதே விலையிலேயே சில கிரிக்கெட்டர்கள் விலைபோனார்கள்! WPL அணிகள் தங்களுக்கேற்ற வீராங்கனைகளைப்பற்றி நிபுணர் குழுவின் ஆலோசனைகளை, ஏலத் திட்டங்களை லேப்டாப்புகளில் நிரப்பி, எடுத்து வந்து அமர்ந்திருந்தன. உதாரணமாக குஜராத் ஜயண்ட்ஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் (மெண்ட்டர்), நூஷின்  அல் காதிர் (பௌலிங் கோச்), பெங்களூரு அணிக்கு டைரக்டர் மைக் ஹெஸ்ஸன், மும்பை அணிக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்/ கோச் ஜூலன் கோஸ்வாமி போன்றவர்கள் அணியின் உரிமையாளர்கள், பிரதிநிதிகளுடன் உட்கார்ந்திருந்து தங்களுக்கான வீராங்கனைகளை வாங்குவதில் முனைப்புக் காட்டினர்/ ஆலோசனை தந்தனர்.

WPL’s lady auctioneer Mallika Sagar

எல்லாம் பெண், எதிலும் பெண் என்கிற லட்சிய வேகத்தில் WPL இருக்கிறதோ ! ஐபிஎல் ஏலத்தில் வரும் உலகப்புகழ் ஆண் ஏலக்காரர் ஹக் எட்மெடீஸ் (Hugh Edmedeas), WPL ஏல நிகழ்ச்சிக்குத் தேர்வாகவில்லை. பெண் auctioneer மல்லிகா சாகர் என்பவர் வந்து, இந்திய / சர்வதேச வீராங்கனைகளை WPL-க்காக ஏலம்போட்டு கலக்கியதை உலகம் பார்த்து வியந்தது நேற்று! ஸ்போர்ட்ஸ் 18 சேனல் அழகாக எல்லாவற்றையும் லைவ் காண்பிக்க,  பார்த்து மகிழ நேர்ந்தது. தற்போது தென்ன்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை ஆடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கள் ரூமில் மெகாஸ்க்ரீன் போட்டு, தங்களில் சிலர் அதிகவிலைக்குத் தேர்வானதைப் பார்த்துக் குதித்துக்கொண்டிருந்ததையும் லைவ் ஆகக் காண்பித்தார்கள். கூடவே, தங்களின் செல்லப்பெண் உலகளாவியப் புகழ் பெற்றுவிட்டதையும், பெரும்பணத்தை அள்ளிவிட்டதையும் டிவியில், ஃபோனில் பார்த்து கைதட்டியும், கண்கசக்கியும் உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனைகள் சிலரின் பெற்றோரையும் லைவ் காட்சி க்ளிப்களில் மென்மையாகக் கொண்டு வந்திருந்தது Sports 18.

இந்திய வீராங்கனைகளில் அதிகபட்ச விலையை வென்றவர்கள்: ஸ்ம்ருதி மந்தனா ரூ 3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்). தீப்தி ஷர்மா ரூ. 2.6 கோடி (உ.பி. வாரியர்ஸ்). ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ.2.20 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). ஷெஃபாலி வர்மா ரூ. 2 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). பூஜா வஸ்த்ராகர் ரூ. 1.9 கோடி (மும்பை இண்டியன்ஸ்), ஹர்மன்ப்ரீத் கௌர் ரூ. 1.8 கோடி (மும்பை இண்டியன்ஸ்), ரிச்சா கோஷ் ரூ. 1.9 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), ரேணுகா சிங் டாக்குர் ரூ.1.5 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia)   ரூ. 1.5 கோடி (மும்பை இண்டியன்ஸ்), தேவிகா வைத்யா ரூ.1.4 கோடி (உ.பி. வாரியர்ஸ்), ஸ்னேஹ் ரானா ரூ.75 லட்சம் (குஜராத் ஜயண்ட்ஸ்).

மேலே : மும்பை இண்டியன்ஸின் நீதா அம்பானி ஏலம் எடுக்க முயற்சிக்கிறார்!

கீழே : RCB, MI ஏலத்தில் எடுத்த இந்திய முன்னணி வீராங்கனைகள் இருவர்

முதலில் ஏலத்தில் இடம்பெற்றவர் இந்திய துணைக் கேப்டனும், கிரிக்கெட் உலகில் பிரசித்திபெற்றவருமான ஸ்ம்ருதி மந்தனா. அவர்தான் WPL ஏலத்தின் டாப் வின்னர். மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எனக் கடுமையாகப் போட்டிபோட, இறுதியில் பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். அதைப்போல கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்காக டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ் போட்டிபோட்டன. இறுதியில் மும்பை வென்றது அவரை ! ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவுக்காக டெல்லி, உ.பி, மும்பை இன்டியன்ஸ் மோதிப்பார்த்தன. உ.பி. வென்று, அவரைத் தன் அணியில் சேர்த்துக்கொண்டது.

படம்: ஏலத்தைக் கூர்மையாக அவதானிக்கும் குஜராத் ஜயண்ட்ஸ் பிரதிநிதிகள். மத்தியில் மித்தாலி ராஜ்

ஐந்து அணிகளுமே முக்கிய அயல்நாட்டு வீராங்கனைகளை தங்கள் அணிக்கு வாங்கிப்போடுவதில் தீவிரம் காட்டின. எதிர்பார்த்ததைப்போலவே போட்டி பற்றிக்கொள்ள, சிலர் மிக அதிக விலைகொடுத்து ஏலமெடுக்கப்பட்டார்கள். ஆஷ்லே கார்ட்னர், ஆஸ்திரேலியா ரூ.3.2 கோடி (குஜராத் ஜயண்ட்ஸ்), நேட் ஸிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt) , இங்கிலாந்து ரூ.3.2 கோடி (மும்பை இன்டியன்ஸ்), பெத் மூனி (Beth Mooney) ஆஸ்திரேலியா ரூ.2 கோடி (குஜராத் ஜயண்ட்ஸ்), ஸோஃபீ எக்ள்ஸ்டன் (Sophie Ecclestone), இங்கிலாந்து ரூ.1.8 கோடி (உ.பி.வாரியர்ஸ்), எலிஸ் பெர்ரி (Elyse Perry), ஆஸ்திரேலியா ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), மரிஸான் கேப் (Marizanne Kapp) , தென்னாப்பிரிக்கா ரூ.1.5 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்). தாஹ்லியா மெக்ரா (Tahlia McGrath) , ஆஸ்திரேலியா ரூ.1.4 கோடி (உ.பி. வாரியர்ஸ்). மெக் லானிங் (Meg Lanning), ஆஸ்திரேலியா ரூ. 1.1 கோடி (டெல்லி கேபிட்டல்ஸ்),  ஷப்னம் இஸ்மாயில், தென்னாப்பிரிக்கா ரூ.1 கோடி (உ.பி. வாரியர்ஸ்). அமேலியா கெர் (Amelia Kerr) , நியூஸிலாந்து ரூ.1 கோடி (மும்பை இண்டியன்ஸ்). இந்த வெளிநாட்டு வீரர்களுக்கான அணிகளின் பரபரப்புக்கிடையே, ரூ.60 லட்சத்துக்கு இங்கிலாந்தின் ஸோபியா டன்க்ளியை (Sophia Dunkley) மலிவாக வாங்கிவிட்டது குஜராத் ஜயண்ட்ஸ். அதேபோல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிஸா ஹீலியை (Alyssa Healy) ரூ.70 லட்சத்துக்கு வாங்கிப்போட்டது உ.பி.வாரியர்ஸ். கிரிக்கெட் விளையாடும் ஏனைய நாடுகளிலிருந்தும் (excepting the top 10) குறைந்த பட்சம் 5 பேரையாவது ஏலத்தில் எடுக்க ஒரு திட்டமிருந்தது. தாய்லாந்து, சிங்கப்பூர், அமீரகம், நமீபியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ICC Associate Members ஆகும். இவற்றிலிருந்து ஒரே ஒரு வீராங்கனை – தாரா நாரிஸ் (Tara Norris, USA) மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டார். டெல்லி கேபிட்டல்ஸ் ரூ.10 லட்சத்திற்கு அவரை வாங்கிப்போட்டுக்கொண்டது (எதுக்கும் இருக்கட்டும்!)

தற்போது தென்னாப்பிரிக்காவில் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆடிவரும் இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகளான ஹர்லீன் தியோல் (Harleen Deol) , ராஜேஷ்வரி கயக்வாட் (Rajeshwari Gayakwad) , (பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஸ்பின் வீசிய) ராதா யாதவ் ஆகியோர் தலா ரூ. 40 லட்சத்துக்குத்தான் (Base Price) வாங்கப்பட்டார்கள்.

படம் : WPL -ல் 15 வயது சிறுமிகள் ! சோனம் யாதவ், ஷப்னம் ஷகீல்

ஜனவரியில் U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த இந்திய வீராங்கனைகளும் ஏலத்தில் ரூ.10 லட்சம் என்கிற ஏல ஆரம்பத்தொகையில் இருந்தார்கள். சிலரே வாங்கப்பட்டார்கள். அவர்கள் ஏலத்தில் இப்படி எடுக்கப்பட்டார்கள்: அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஷ்வேதா செஹ்ராவத் ரூ.40 லட்சம் (உ.பி. வாரியர்ஸ்), வேகப்பந்துவீச்சாளர் டிட்டஸ் சாது ரூ. 25 லட்சம் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), வேகப்பந்துவீச்சாளர் எஸ்.யஷஸ்ரீ, பதினாறு வயது பறவைகள் பார்ஷவி சோப்ரா(Parshawi Chopra) (ஸ்பின்னர், உ.பி. வாரியர்ஸ்) , ஹர்லி காலா (Hurley Gala) (ஆல்ரவுண்டர், குஜராத் ஜயண்ட்ஸ்), தலா ரூ.10 லட்சம். 15 வயது உ.பி. ஸ்பின்னர் சோனியா யாதவ் (மும்பை இண்டியன்ஸ்), அதே வயது ஆந்திரா மீடியம் பேசர் ஷப்னம் ஷகீல் (குஜராத் ஜயண்ட்ஸ்) ஆகியோர் WPL -ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் இளைய தலைமுறையினரிடையே எவ்வளவு ஆழமாக ஊன்றியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

மார்ச் 4-லிலிருந்து 26 வரை WPL போட்டிகள் மும்பை, நவி மும்பை மைதானங்களில் நடக்கவிருக்கின்றன. பெண்கள் கிரிக்கெட் உலகின் பெரும் நட்சத்திரங்களுடன் தோளுரசும் வாய்ப்பினைப் பெற்ற மகிழ்ச்சியில் நமது இளம் வீராங்கனைகள் சிலர் ஒவ்வொரு அணியிலும் இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள, பங்களிப்பு தர, கிரிக்கெட்டில் முன்னேற அருமையான வாய்ப்பு WPL மூலம் இவர்களுக்கெல்லாம் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பெண்களுக்கான high profile சர்வதேச டி-20 சேம்பியன்ஷிப்பை உலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்திய கிரிக்கெட் போர்டு பாராட்டுக்குரியது. Women’s Hundred (England), WBBL (Australia) என இதுவரை மகளிர்க்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும்,  இந்தியாவில் நடக்கும் WPL என்பது ஒரு game changer, டாப் க்ளாஸ் ப்ரொஃபனல் கிரிக்கெட் எனப் பெயர்பெற்றுவிடும்  என நம்பலாம்.

**

பெண்கள் T-20 கிரிக்கெட் உலகக்கோப்பை 2023: இந்தியா – பாக் மேட்ச்

தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்திருக்கும் ICC மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையில், இன்று (12-02-23) மாலை தன் முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் ஸ்ரீலங்கா தென்னாப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா நியூஸிலாந்தையும், இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸையும் தோற்கடித்துவிட்டன.

பெண்களின் கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய டாப் அணிகளாகப் பார்க்கப்படுகின்றன. அடுத்தவரிசையில் நியூஸிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகள் சவால்விடும் அணிகளாக எதிர் நிற்கின்றன.

Harmanpreet Kaur & Bismah Maroof

இதுவரை பல ஐசிசி போட்டிகளில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்திருப்பினும், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டிக்கு மீடியா ஹைப் அதிகமாகி வருகிறது! ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்தியாவில் மாலை ஆறரை மணிக்கு போட்டியை நேரலையில் தருகிறது என்பதில் ரசிகர்கள் ஒரே உற்சாகம்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், தெனாப்பிரிக்கா என 10 அணிகள் போட்டியிடும் மகளிர் டி-20 உலகக்கோப்பை இது.

India star Smriti Mandhana

இன்றைய மேட்ச்சில் இந்தியாவுக்குக் கொஞ்சம் பின்னடைவு: துவக்க ஆட்டக்காரரும் துணைக்கேப்டனுமான ஸ்ம்ருதி மந்தனா கையில் காயம் காரணமாக ஆடமாட்டார். இன்று குறிப்பான பங்களிப்பு தர வாய்ப்பிருக்கக்கூடிய வீராங்கனைகள்:

இந்தியா: கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், (U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன்) ஷெஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் (Richa Ghosh)(விக்கெட் கீப்பர்), ராஜேஷ்வரி கெய்க்வாட் (Rajeshwari Gayakwad), ரேணுகா சிங் டாக்குர் (Renuka Singh Thakur), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues), தீப்தி ஷர்மா (Deepti Sharma).

பாகிஸ்தான்: கேப்டன் பிஸ்மா மரூஃப் (Bismah Maroof), நிடா தர் (Nida Dar), நஷ்ரா சந்து, முனீபா அலி (விக்கெட்கீப்பர்), ஃபாதிமா சானா, ஆலியா ரியாஸ்

India-Pak Women’s T20 Cricket World Cup Match, Cape Town: Star Sports 1830 hrs (IST)

**

இந்தியா-ஆஸ்திரேலியா : நாக்பூர் டெஸ்ட்

இந்தியாவை இந்திய மண்ணில் கடந்த 15 வருடங்களாக வெல்லமுடியாத ஆஸ்திரேலியா, 4 மேட்ச்சுகள் கொண்ட டெஸ்ட் தொடரை (Border-Gavaskar Trophy) நாளை (9-2-2023) நாக்பூரில் துவக்குகிறது.

வலிமையாக வந்திருக்கும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி, எங்கே இந்தியாவில் நம் பருப்பு வேகாதோ, தோற்றுவிடுவோமோ என்ற பயம் கவ்வ, இந்தியாவில் பிட்ச் இப்படி..அப்படி.. என்றெல்லாம் ஏற்கனவே பிதற்ற ஆரம்பித்துவிட்டது. ’எந்த ஒரு நாடும், தன் பலத்துக்கு ஏற்றவாறுதான் பிட்ச்சைத் தரும். ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்கையில், அவர்களுக்குத் தோதான க்ரீன் பிட்ச்சுகளைத்தானே அவர்கள் நமக்குத் தருகிறார்கள்? Bouncy pitches கூடாது என்றா நாம் அங்கே சொல்கிறோம்? சர்வதேச கிரிக்கெட் என்று வந்துவிட்டால், எந்த பிட்ச்சிலும், எந்த ஒரு சூழலிலும் விளையாடத் தெரிந்திருக்கவேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர்.

நன்றாகத் திட்டமிட்டு 4 ஸ்பின்னர்களுடன் இந்திய மண்ணில் இறங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா. இத்தனை ஸ்பின்னர்களோடு இதுவரை எந்த ஒரு அயல்நாட்டு அணியாவது இந்தியா வந்திருக்கிறதா? இருந்தும் ஒரே பதற்றம்! கடந்த இங்கிலாந்து தொடரின்போது அஷ்வினும், அக்ஷரும் எதிரிகளைக் கிழி கிழியென கிழித்து எறிந்தது கெட்டகனவாய் வந்துகொண்டிருக்கிறதோ என்னவோ? அஷ்வினின் ஸ்பின்னை சமாளிப்பதுபற்றி அவர்கள் ஓவர்டைம் போட்டு யோசிப்பதாகத் தெரிகிறது! பின்னே, பரோடாவிலிருந்து அஷ்வினைப்போலவே பௌலிங் ஆக்‌ஷனுடன் ஸ்பின் போடும் ஒரு வீரரை அழைத்துவந்து நெட் ப்ராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறதே ஒரு வாரமாக! ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டூப்ளிகேட் அஷ்வின் என அழைக்கப்படும் பரோடாவின் கத்துக்குட்டி பௌலரான மகேஷ் பித்தியாவை (Mahesh Pithiya ) பந்து போடச்சொல்லி ஆடி, ஆடி பார்த்துக்கொண்டிருக்கிறாராம். மகேஷே இண்டியன் எக்ஸ்ப்ரெஸுக்கு விவரமாகச் சொல்லியிருக்கிறார். ட்விட்டர்வாசிகள் கவனிக்காமலிருப்பார்களா! கேலி, கிண்டல் என்று இறங்கிவிட்டார்கள். பொழுது போக்க விஷயம் கிடைத்துவிட்டது..

மேலே: நகலும் அசலும்

கொஞ்சம் சீரியஸாக விஷயத்துக்கு வருவோம். இந்திய பிட்ச்சுகளில் ஆடி இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன், பிரமாத ஹோம்வர்க்கோடு உழைக்கிறது ஆஸ்திரேலியா. Highly professional approach. டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் சிறப்பாக ஸ்பின்னை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக நிறைய விளாசுவார்கள் என எதிர்பார்க்கலாம். காயம் காரணமாக ஜோஷ் ஹாசல்வுட், மிட்செல் ஸ்டார்க் இருவரும் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார்கள். ஆல்ரவுண்டர் காமரூன் க்ரீன் (Cameroon Green) ஆடுவதும் சந்தேகம். இது ஒரு பின்னடைவு என்றாலும், கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins), ஸ்காட் போலண்ட் (Scott Boland) – இருவரும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள். துணையாக வருபவர்கள் ஸ்பின்னர்கள் நேத்தன் லயன், ஆஷ்டன் ஏகார் (Ashton Agar) (அல்லது டாட் மர்ஃபி (Todd Murphy). இவர்களிடம் நாக்பூரில் நமது பேட்டிங் புலிகள் ஆட்டம்காணாது இருக்கவேண்டும்.

Above: Fast bowler Scott Boland

காயத்திலிருந்து இன்னும் பூரண குணம் அடையாததால், ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) , ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியில் இல்லை. முகமது சிராஜ், முகமது ஷமி (அல்லது உமேஷ் யாதவ்) வேகப்பந்துவீச்சை இந்தியாவுக்காகக் கையாள்வார்கள். ஸ்பின் டெபார்ட்மெண்ட்டில், ரவி அஷ்வின், அக்ஷர் பட்டேல், (காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும்) ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழல் கொண்டு எதிரியைத் தாக்குவார்கள். பட்டேலுக்கு பதிலாக குல்தீப் யாதவைக் கொண்டுவரலாம் என சிலர் சொன்னாலும், பட்டேலின் பேட்டிங் திறன், ஸ்பின் பௌலிங்கையும் மிஞ்சி அணிக்குக் கைகொடுக்க வாய்ப்புண்டு.

Shubman Gill. Rohit’s opening partner?

பேட்டிங்கில் ரோஹித் ஷர்மாவுடன் ஷுப்மன் கில் (Shubman Gill) துவக்குவதே நல்லது. ஷுப்மன் அபாரமான ஃபார்மில் இருப்பதால், அணியின் நலன் கருதி ராஹுலைக் கொஞ்சம் பெஞ்சில் உட்காரவைக்கலாம். தவறில்லை. புஜாரா, கோஹ்லிக்குப் பின் சூர்யகுமார் யாதவை இறக்கினால், ஆஸ்திரேலியாவுக்கு பீதி கிளம்பும். மடமடவென விக்கெட்கள் சரிந்து நெருக்கடியான நிலை வந்தால், மிடில் ஆர்டரில் விளாசி சூர்யாவால் ஸ்கோரை சரி செய்ய முடியும். கோஹ்லிக்கு நாக்பூர் மைதானம் அதிர்ஷ்டமானதாக இதுவரை அமைந்திருக்கிறது என்கிறது புள்ளிவிபரம்.

யார் இந்தியாவுக்கு விக்கெட்கீப்பர்? ரிஷப் பந்த் இல்லாதது இடிக்கிறது இங்கே. இதுவரை அணியில் ஸ்டாண்ட்-இன் விக்கெட்கீப்பராக அமர்ந்திருந்து ஆனால் இதுவரை ஆட வாய்ப்பில்லாதிருக்கும் கே.எஸ். பரத்திற்கு இப்போது வாய்ப்பு கொடுப்பது நல்லது. நல்ல கீப்பர் என்பதோடு, திறன் வாய்ந்த பேட்ஸ்மனும்கூட. கே எல் ராஹுலே பார்த்துக்கொள்வார் என்று அசடு வழியாமலிருப்பது அணிக்கு நல்லது. டெஸ்ட் ஸ்டாண்டர்ட் விக்கெட்கீப்பர் அல்ல ராஹுல். அவரால் ஸ்பின்னர்களுக்குத் திறமையாக கீப் செய்ய முடியாது.

கேப்டன் ரோஹித்தும், கோச் திராவிடும் சில சாதுர்யமான முடிவுகளை, எதிரணியின் பலம் கருதி எடுக்கவேண்டியிருக்கும் – அவை சர்ச்சைக்குள்ளானாலும் பரவாயில்லை என்று.

Star Sports 1. 09-02-23 @ 09:30 hrs (IST) Nagpur

காந்தி talks ?

மய்யம் என்ற ஒன்றை ஆரம்பித்து ஒரு மையமில்லாது போய்விட்ட ’உலக நாயகன்’, ஒரு கலைஞனாக மட்டும் மிளிர்ந்த காலகட்டம். துல்லியமாகச் சொன்னால் 1987 – இங்கே ஃபோகஸுக்கு வருவது. தெற்கு டெல்லியின் சிரிஃபோர்ட் ஆடிட்டோரியம் என்று நினைவு. நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. ஒன்றில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. புஷ்பக் – வடநாட்டு ஆடியன்ஸுக்கு. தெற்குப்பக்கம் அதன் பெயர் பேசும்படம்,  புஷ்பக விமானம் இப்படி. குறிப்பாக கன்னடப் பிரதேசத்தில் மட்டும் 25 வாரங்களைத் தாண்டி அட்டகாசம் செய்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய கமல் ஹாசன் படம். பெங்களூரின் சில இடங்களில் அமைக்கப்பட்ட சுவாரஸ்யக் காட்சிகள். வேலைவெட்டி இல்லா கமலைவிட தன்னிடம் அதிகம் உண்டு காசு என அமர்ந்திருக்கும் சாக்கைத் தூக்கிக் காட்டி சீண்டும் அந்த விஷமப் பிச்சைக்காரன் காட்சிப்படுத்தப்பட்ட இடம் – பெங்களூரின் வின்ஸர் மேனர் ஹோட்டல் அருகில். அமலாவின் அமெரிக்கையான அழகும்,  பாலிவுட்டின் (தூர்தர்ஷனின் ‘நுக்கட்’ சீரியல் புகழ்) சமீர் கக்கர், டினூ ஆனந்த் (ஐஸ் கத்தியோடு மிரட்டும் காமிக்கல் வில்லன்!) ஆகியோரின் நடிப்பும் அதகளம் செய்த ஒரு கனாக்காலத்தின் திரைவெளி. ‘ஒரு பிரேதத்தைச் சுற்றிக் காதலை வளர்த்திருக்கிறீர்களே.. படம் பார்க்க விரும்புகிறேன்!’ – என்று சிங்கீதத்திடம் சொன்னாராம் சத்யஜித் ரே.

இந்தப் புஷ்பக்கின் நினைவு காலையில் ஏன் தீண்டியது? காரணம்.கிஷோர் பாண்டுரங் பெலேகர் (Kishor Pandurang Belekar)! மராத்தி திரைமுகமான அவர் இயக்கியிருக்கும் காந்தி டாக்ஸ் (Gandhi Talks – காந்தி பேசுகிறார்). புஷ்பக் (பேசும்படம்) போல வசனமில்லாப் படம்- வெகுநாட்களுக்குப் பிறகு இந்தியத் திரைகளில். A dark comedy. இப்போதைய தலைமுறையினரில் புஷ்பக் போன்ற வித்தியாசமான, அழுத்தமான நடிப்புப் பங்களிப்புகளைத் தந்த படங்களைத் தேடிப் பார்ப்பவர்கள் குறைவு. அப்படி ஒரு படமும் எண்பதுகளில் வந்தது என்பதே பலருக்குத் தெரியாது. இந்தக் காலத்துக்கேற்றபடி ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பின்னணிகொண்டு கொஞ்சம் ட்ரெண்டிங்காக, பலர் தன்னை சம்பந்தப்படுத்திப் பார்க்கப் பொருத்தமாக ஒரு படத்தை எடுத்து வெளியே விட்டால் என்ன என்று பெலேகர் & கோ (Zee Studios /  Kyoorious Digital) கொஞ்சம் மற்றோரிடமிருந்து வேறுபட்டு யோசித்ததின் திரைவிளைவு காந்தி டாக்ஸ். ம.செ. விஜய் சேதுபதி, அதித்தி ராவ், அரவிந்த் சாமி, சித்தார்த் ஜாதவ் போன்றோர் வார்த்தையின்றி, உடல்மொழி மட்டுமே கொண்டு ஜாலம் காட்டியிருக்கிறார்களா? எப்படி! பார்த்தால்தான் தெரியும் படமும், அது செல்லும் தடமும். இந்த வருடம் திரையில் ஒளிரும்..

**

ஓடு.. விட்டுட்டு..

எல்லாத்துக்கும் பழகிப்போன, அல்லது கிட்டத்தட்ட மரத்துப்போய்விட்ட மனசு. இதை துணைவைத்துக்கொண்டுதான் அலையவேண்டியிருக்கிறது அங்குமிங்குமாக இந்த வாழ்வில். அவ்வப்போது, ‘அறிய”வும் வேண்டியிருக்கிறது, நேரிடுகிறது பலவற்றை. இந்த அறிதலில் அக்கம்பக்கம் பார்ப்பது, கேட்பது, பத்திரிக்கைகளைப் புரட்டுவது, மீடியாவைப் பார்ப்பது.. இப்படி வகை வகையாய். அறிதல் சரி. தெளிதல் உண்டா என்று அசட்டுத்தனமாகக் கேட்கமுயற்சிக்காதீர்கள்..

காலைக் காப்பி தீர்ந்துவிடும் முன்னால் செய்திகளைக் கொஞ்சம் பார்ப்போம் என லேப்டாப் ஸ்க்ரீனில் கண்ணை உருட்டினால்.. இது திடீரெனப் பட்டது. அதிர்ச்சி. அப்போ.. இன்னும் மரக்கவில்லையா மனம்? என்ன அப்படி ஒரு நியூஸ்? நம் நாட்டுக் குப்பையா? அயல்நாட்டு அதிர்வா?

இஸ்ரேலில் பென் குரியன் (Ben Gurion) ஏர்ப்போர்ட். ஃப்ளைட் பிடிக்க நேரமானதால் அவசர அவசரமாக ஓடிவந்தார்கள் ஒரு தம்பதி. கையில் சின்ன கேரியரில் குழந்தை. செக்-இன் கவுண்ட்டர் மூடப்படும் பரபரப்பு. பதட்டம். வேகமாக போர்டிங் லவுஞ்சுக்கு ஓடவேண்டுமே.. குழந்தையை கேரியருடன் செக்-இன் கவுண்ட்டர் வாசலிலேயே போட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள் உள்ளே. குழந்தையுடன் ஓடுவது எவ்வளவு கஷ்டம்.. பாவம்! மேலும் குழந்தைக்கு டிக்கெட்வேறு வாங்கவில்லையாம்.  செக்-இன் கவுண்ட்டர் அலர்ட் ஆனது. ஏர்ப்போர்ட் செக்யூரிட்டியிடம் தகவல் போனது. அவர்கள் உடனே போர்டிங்கை நிறுத்தி, உள்ளே போய் அந்த மகத்தான பெற்றோர்களை வெளியே இழுத்துவந்துவிட்டார்கள். குழந்தையை எடுத்துக்கொள்ளவைத்தார்கள். டெல் அவீவிலிருந்து (Tel Aviv) பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸுக்குப் (Brussels) போகும் ரியான்ஏர் (Ryanair) ஃப்ளைட் அது. பெல்ஜியக்காரர்கள்தான் இந்த தம்பதி.. ஜெகதாம்பதி. இஸ்ரேலியப் போலீஸ் மேலும் விசாரணையில் இருக்கிறதாம். ரியான்ஏரில் பெற்றோர் தங்கள் கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பயணிக்கலாம். ஆனால் அதற்கு அவர்களின் டிக்கட் கட்டணத்தோடு, 27 டாலர் எக்ஸ்ட்ரா கொடுக்கவேண்டும் . அல்லது குழந்தைக்கு, தனி சீட்டுக்கான டிக்கெட் வாங்கிவிடவேண்டும். பெற்றோர் இதில் எதையும் செய்யவில்லை. குழந்தைக்கு டிக்கெட்? – என்று கேட்கப்பட்டவுடன், விட்டுட்டு.. ஓடியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு நிகழ்வை நாங்கள் சந்தித்ததே இல்லை என்கிறார்கள் பென் குரியன் ஏர்ப்போர்ட் ஸ்டாஃப். ’டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ நாளிதழில் வெளியாகியிருந்த செய்திக்குக் கீழே ஒரு வாசகரின் கமெண்ட்: அந்தப் பெற்றோர்களைப் போகவிட்டிருக்கலாம். இந்தக் குழந்தை அவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்திருக்குமே!

என்னமாதிரி உலகம் இது. இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறது?

**

ICC U-19 மகளிர் கிரிக்கெட்: இந்தியா உலக சேம்பியன்

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ICC) முதல் U-19 பெண்களுக்கான உலகக்கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றுவிட்டார்கள். நேற்று (29-1-2023) தென்னாப்பிரிக்காவின் பாட்ஷெஃப்ஸ்ட்ரூமில் (Potschefstroom) நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் அனாயாசமாக வீழ்த்திவிட்டது இந்தியா. சர்வதேச வெளியில், பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் முதல் உலகக்கோப்பை. மாபெரும் கௌரவம்.

19-வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியை 17-வயது ஷெஃபாலி வர்மா (Shefali Verma) அபாரமாகத் தலைமை தாங்கி நடத்திச்சென்றார். (இவர் தன் 15 வயதிலேயே இந்திய சீனியர் மகளிர் அணிக்குத் தேர்வான அதிரடி பேட்டர் (batter). ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் விக்கெட் வீழ்த்தும் ஆஃப் ஸ்பின்னரும் கூட. இவருடன் இந்தியாவுக்கு உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துக்கொடுத்த இன்னுமொரு பேட்டர் ஷ்வேதா செஹ்ராவத் (Shweta Sehrawat). நேற்றைய ஃபைனலில் இவர்களின் விக்கெட்டுகளை இங்கிலாந்து சீக்கிரமே வீழ்த்திவிட்ட நிலையில், இந்தியாவுக்குத் தக்க சமயத்தில் கைகொடுத்துக் கரேயேற்றிவிட்டவர்கள் சௌம்யா திவாரி (Sowmya Tiwari), ஜி. த்ரிஷா எனும் இருவர். Cool and composed. செம ஜோடி!

டாஸ் வென்ற இந்தியா, இங்கிலாந்தை முதலில் பேட் சொன்னபோது, கம்பீரமாக பிட்ச்சில் வந்து நின்றது அவர்களின் துவக்க ஜோடி: கேப்டன் க்ரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (Grace Scrivens) மற்றும் லிபர்ட்டி ஹீப். இந்தியா வேகப்பந்துவீச்சாளர் டிட்டஸ் சாதுவை  (Titus Sadhu) ஒரு பக்கமும், மறுமுனையில் ஸ்பின்னர் அர்ச்சனா தேவியையும் இறக்கித் தாக்கியது. முதல் ஓவரிலேயே சாது, இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் ஹீப்பை காட்-அண்ட்- போல்ட் செய்துவிட்டார். அடுத்த முனையில் எளிதாகத் தெரிந்த அர்ச்சனாவின் சுழல் வீச்சைத் தூக்கி அடித்து ரன் சேர்க்கப் பார்த்தது இங்கிலாந்து. ஆனால் சுழலை சமாளிப்பதில் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் மட்டுமே அது வெளிப்படுத்தியது. இந்தியப் பெண்களின் ஷார்ப் ஃபீல்டிங்கும் சேர்ந்துகொள்ள,  இங்கிலாந்தின் ஸ்கோர் முன்னேறமாட்டேன் என்று அடம்பிடித்தது.

Archana Devi takes a stunning one-handed catch

ஏழு ஓவர்களுக்குள், 22 ரன்களிலேயே இங்கிலாந்தின் முக்கிய நான்கு வீராங்கனைகளை ஆளுக்கு இரண்டாக வெளியேற்றிவிட்டார்கள் பௌலர்கள் சாதுவும், அர்ச்சனாவும். கேப்டன் ஷெஃபாலி சாதுர்யமாக இரு முனைகளிலும் மேலும் ஸ்பின்னை நுழைத்தார். பர்ஷவி சோப்ராவும் (Parshavi Chopra), மன்னத் கஷ்யப்பும் (Mannat Kashyap) நெருக்கோ நெருக்கென்று நெருக்க, தடுத்தாடவும் தெரியாமல், அடித்தாடவும் முடியாமல் தடுமாறித் தத்தளித்த இங்கிலாந்தின் இன்னிங்ஸ், 68 என்கிற சொற்ப எண்ணிக்கையில் உயிரை விட்டது. அவர்களது கோச்கள், நிர்வாகிகள் பேயறைந்ததுபோல் மைதானத்தில் உட்கார்ந்திருந்ததை காமிரா படம்பிடித்துக் காண்பித்தது. செமிஃபைனலில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்தா இது? நம்பமுடியவில்லை.. இல்லை… இல்லை..!

Indian U 19 Women’s Cricket team lofts the World Cup !

கோப்பையைக் கைப்பற்ற இந்தியாவின் முன் 69 என்கிற இலக்கு. ஆனால் எளிதாக நினைத்துவிடக்கூடாது. இது உலகக் கோப்பை  ஃபைனல். விட்டுவிடாதே… ஜாக்ரதை! – என்று எச்சரிக்கை மணி ஒவ்வொரு இந்திய வீராங்கனையின் மனதிலும் அடித்திருக்கும். அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன ஷ்வேதாவும், ஷெஃபாலியும் இந்திய பதில் ஆட்டத்தைத் துவக்கினார்கள். ஷெஃபாலி ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி. 15 ரன்னில் காலியானார். ஷ்வேதா 5 ரன்னில் அவுட் ஆகி வெளியேற, இங்கிலாந்துக்கு ஏகப்பட்ட குஷி. ஸ்பின் போட்டு இந்தியாவை வீழ்த்திவிடலாம் என பொறி வைத்தது. அடுத்ததாக ஆடவந்த பத்தாம் வகுப்புப் பையனைப்போல் காட்சி தந்த சௌம்யாவும்,  எட்டாவது வகுப்பு மாணவி ஒருத்தி கையில் பேட்டுடன் நிற்பது போன்ற தோற்றத்தில் தென்பட்ட த்ரிஷாவும், கஷுக் மொஷுக்கென்றிருந்த  இங்கிலாந்துப் பெண்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்கவேண்டும். இவர்களாவது உலகக்கோப்பையை வெல்வதாவது.. என்கிற சிந்தனை அவர்களுக்குள் தலையெடுத்திருக்கலாம். ஆனால் நிலமையின் தீவிரத்தை உணர்ந்திருந்த இந்தியப் பிஞ்சுகள் அயரவில்லை. தளரவில்லை. அதிஜாக்ரதையாக இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். ஸ்கோர் மெல்ல சீராக உயர்ந்தது. 48 ரன் பார்ட்னர்ஷிப். வெற்றி சில ரன்களில் நிகழ்ந்துவிடும் என்கிற நிலையில் 24 ரன்னில் அவுட் ஆனார் அழகாக பேட்டிங் செய்துகொண்டிருந்த த்ரிஷா. அதே ஸ்கோரில் திறனோடு ஆடிக்கொண்டிருந்த சௌம்யா வெற்றி ரன்னை ஆஃப் சைடில் லேசாகத் தட்டிவிட்டு குதித்துக்கொண்டு மறுமுனைக்கு ஓட.. ஹேய் ! இந்திய கோச்சுகளும், அணிவீரர்களும் மைதானத்துக்குள் பாய்ந்தோடிவந்து சூழ்ந்து கொண்டனர். சில வீரர்கள் சந்தோஷச் சத்தம்போட, சிலரின் கண்களில் உணர்ச்சிப் பிரவாகம் நீராக வழிந்ததைக் காணமுடிந்தது. .

அபூர்வமான இந்த உலகக்கோப்பை ஃபைனலைப் பார்க்க இந்திய வம்சாவளியினர், இந்திய ரசிகர்கள் குழு ஒன்று ஆர்வமாக வந்திருந்தது. ஆட்ட ஆரம்பத்திலிருந்தே வேகவேகமாகக் கொடிகளை அசைத்துக்கொண்டிருந்தது. ஐ லவ் யூ இந்தியா ! – என்றெல்லாம் பேனர்கள். பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளோடு, சில கருப்பினத் தென்னாப்பிரிக்கர்களையும்  அடக்கிய கதம்பக் கூட்டம் அது. இப்போது இந்தியா! இந்தியா ! – என்று சந்தோஷமாக, சத்தமாக ஆர்ப்பரித்தார்கள் அவர்கள். இந்தியாவின் ஜாவலின் த்ரோ ஒலிம்பிக் சேம்பியன் நீரஜ் சோப்ராவும் உட்கார்ந்து மேட்ச் பார்த்து கைதட்டி, இந்திய அணியை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். மற்றபடி இங்கிலாந்தின் ரசிகர்களே ரொம்பி வழிந்தார்கள் அந்த தென்னாப்பிரிக்க மைதானத்தில்.

England Captain Grace Scrivens congratulates Indian Skipper Shefali Verma

சர்வதேசத் திறனோடு, போராட்ட, அர்ப்பணிப்பு குணங்கள் நிறைந்த பெண்களினாலும் இந்தியாவுக்கு கிரிக்கெட் உலகக்கோப்பை கிட்டிவிட்டது. இந்திய கேப்டன் ஷெஃபாலி வர்மாவின் கையில் வெற்றிக்கோப்பை வந்ததும் அந்த வீராங்கனைகளின் குதூகலம், ஆர்ப்பரிப்பு காணக்கிடைக்காதது. சேம்பியன்ஷிப்பை வென்ற இந்திய அணியில் ஒவ்வொரு வீராங்கனைக்கும் பதக்கம் ஐசிசியால் வழங்கப்பட்டது. உலகின் நம்பர் 2-ஆக முடிவான இங்கிலாந்து அணி ஏமாற்றத்துடன் தங்களுக்கான மெடல்களைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆட்ட முடிவை நம்பமுடியாதவர்கள் போன்று குழப்பமாக ஓரத்தில் போய் நின்றது!

அதிக ரன்களும், விக்கெட்களும் எடுத்த இங்கிலாந்தின் திறன்மிகு கேப்டன் க்ரேஸ் ஸ்க்ரிவன்ஸுக்கு உலக்கோப்பைத் தொடர் ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் டிட்டஸ் சாதுவுக்கு ஃபைனலில் ஆட்டநாயகி விருது.

India’s terrific coach (and former India fast bowler) Nooshin Al Khadeer

இந்த உலகக்கோப்பை வெற்றியில் இந்திய மகளிர் கிரிக்கெட் கோச்சும், முன்னாள் வீராங்கனையுமான நூஷின் அல் காதிரின் (Nooshin Al Khadeer) பங்களிப்பு மிகவும் முக்கியமானது. போற்றத்தகுந்தது என்கிறார் முன்னாள் மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ். கிரிக்கெட் போர்டு, இந்திய ஆண்கள் அணி வீரர்கள், மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி போன்ற முன்னாள் மகளிர் லெஜண்ட்கள் ஆகியோரிடமிருந்து பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணி இப்போது. வென்ற அணிக்கும், கோச் போன்ற பயிற்சியாளர் குழுவுக்குமாக சேர்ந்து ரூ.5 கோடியை நேற்று இரவே பரிசாக அறிவித்துவிட்டது கிரிக்கெட் போர்டு. உலகக்கோப்பையை வென்ற அணியை, புதன்கிழமை அஹமதாபாதில் நடக்கவிருக்கும், இந்தியா – நியூஸிலாந்து மூன்றாவது டி-20 போட்டியை நேரில் பார்க்கவருமாறும் அழைத்திருக்கிறது. அங்கு நிரம்பி வழியப்போகும் நரேந்திர மோதி மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் உலக சேம்பியன்களான நமது இளசுகளை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பு!

உலகிலேயே முதன் முதலாக பெண்களுக்கான டி 20 ப்ரிமியர் லீக் இந்த மார்ச்சில் இந்தியாவில்  துவங்கவிருக்கிறது. இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வருடத்தில் உலகக்கோப்பையுடன் சிலிர்க்கிறார்கள் நமது இளம் பெண்கள்.. ஆஹா!

Brief scores :

England Women Under 19s: 68 all out (17.1 overs)

India Women Under19s: 69 for 3 (14 overs)

**