கிரிக்கெட்: தோல்விகளும், சப்பைக்கட்டுகளும்

’நமது பௌலிங் அவ்வளவு சரியாக இல்லை என நான் நினைக்கிறேன்’ என்கிறார் கேப்டன் கோஹ்லி, நேற்று (29/11/20) மேட்ச்சையும், தொடரையும் தோற்றுவிட்டபின்பு. இதைக் கண்டுபிடிக்க இவருக்கு இரண்டு மேட்ச்சுகள் ஆனது. தோற்ற பிறகே,  இப்படி அவர் ‘நினைக்கிறார்’! ’ஹெட் கோச்’ என்று ஒருத்தர் இந்திய அணியில்  இருக்கிறாரே, 10 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு. அவர் என்ன ’நினைக்கிறாராம்’? தெரியவில்லை. பாத்ரூமிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையோ, என்னவோ?

தோற்ற இரண்டு போட்டிகளிலும் கோஹ்லியின் பௌலர்கள் என்ன செய்தார்கள்?

முதல் ODI:  வேகப்பந்துவீச்சாளர்கள்

ஓவர்கள் 30. கொடுத்த ரன்கள் 215.   எடுத்த விக்கெட்டுகள் 5.

ஸ்பின்னர்கள்:

ஓவர்கள் 20. கொடுத்த ரன்கள் 152.   எடுத்த விக்கெட்டுகள் 1.

இரண்டாவது ODI : வேகப்பந்துவீச்சாளர்கள்

ஓவர்கள் 30. கொடுத்த ரன்கள் 246.   எடுத்த விக்கெட்டுகள் 3.

ஸ்பின்னர்கள்:

ஓவர்கள் 20. கொடுத்த ரன்கள் 141.   எடுத்த விக்கெட்டுகள் 0.

நமது பௌலர்களின் நம்பர்கள் கண்ணைக்கட்டுகின்றன. ஆனால் கேப்டன் கோஹ்லி/சாஸ்திரிக்கு கண்ணிலேயே படவில்லை! முதல் மேட்ச்சில் ’அடித்த மணி’ – அதன் சத்தம் – காதிலே விழவில்லை. அதனால்தான், ’எந்த மாற்றமும் இன்றி’, இரண்டாவது போட்டியில் அதே அணியை இறக்கி, அதே ரிஸல்ட்டை ஆசையாகப் பெற்றுக்கொண்டார்கள் தெள்ளுமணிகள்.

’சிட்னி ஒரு பேட்டிங் பிட்ச்தான். 305 அதில் ஆவரேஜ் ஸ்கோர்ப்பா.’ சரி. ஆனால் ’அவர்கள்’ விக்கெட்டுகளை சாதாரணமாக எடுக்கிறார்களே, நீங்கள் ஏன் ’எடுக்கவில்லை’? நாங்களும் ரெண்டு மேட்ச்சிலும் 300-க்கு மேல் எடுத்துவிட்டோமே..  

ஓ.. ஆமாம், அவர்களது ஸ்கோர் ஒவ்வொரு போட்டியிலும் 370-ஐ எளிதாகத் தாண்டிச் சென்றதே.. அதனால்தானே அவர்கள் ஜெயிக்கமுடிந்தது, அல்லது அவர்களை ஜெயிக்கவிட்டீர்களே.. என்றால், ’அவர்கள் பேட்டிங் அப்படி. ‘they have got a pretty strong batting line-up, and they understand these conditions and pitches and the angles on the field well’ என்பது கோஹ்லி Bhai-யின் சாமர்த்திய பதில். டி-20 தொடரிலும் இதேதானா? இல்லை அதற்காக வேறுவகை சப்பைக்கட்டு தயார்செய்யப்பட்டுள்ளதா?

Head Coach !

இந்தத் தொடரில் இதுவரை, கோஹ்லி பௌலர்களைக் கையாண்டவிதம், ஃபீல்ட் ப்ளேஸ்மெண்ட்ஸ் – ஒன்றும் சொல்வதற்கில்லை. ”…that was poor captaincy!” என எரிகிறார் கௌதம் கம்பீர், இந்தியாவின் முன்னாள் வீரர். ’6-ஆவது பௌலர்’/ஆல்ரவுண்டர் வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தரையோ, ஷிவம் துபேயையோ ‘ஒரு-நாள் அணி’யில் சேர்த்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை?” -என்றும் குடைச்சல். ட்விட்டர் தடதடக்கிறது நேற்றிலிருந்து. ”தூக்குங்கடா கோஹ்லியை!’’, “இந்த சாஸ்திரியைக் கோச்சா வச்சிகிட்டு ஜெயிச்சாப்லதான் – ரெண்டுபேரையும் காலிபண்ணலன்னா, சர்வதேசத் தொடர்ல வெற்றிங்கறத மறந்துடுங்க!…” என்றெல்லாம் சூடாகும் ட்விட்டராட்டி!

இனி அவசர அவசரமாக,  டிசம்பர் 2-ல் கேன்பர்ராவில் (Canberra) ஆடப்போகும் 3-ஆவது போட்டிக்கான இந்திய அணியில் மாறுதல்கள் வரும். ’மறக்கப்பட்ட’ சிலர் திடீரென நினைவுக்கு வர, உள்ளே அழைக்கப்படுவார்கள் – ‘வாங்கடா.. ஏதாவது செஞ்சு காமிங்க..’ விளைவாக விக்கெட்டுகள் கொஞ்சம் அதிகமாக விழலாம். அல்லது எதிரியின் ரன் விகிதம் கட்டுப்படுத்தப்படலாம். ரிஸல்ட்? தொடரைத் தோற்றாயிற்று. மூன்றாவது  மேட்ச் என்னவானால் என்ன? சாஸ்திரி/கோஹ்லி ஜோடிக்குக் கவலையில்லை. இரண்டு பேரின் ‘போஸ்ட்’டுகளுக்கும் இப்போதைக்கு ஆபத்திருப்பதாகத் தெரியவில்லை.

**

கிரிக்கெட்: இந்தியா தானே தேடிக்கொண்ட தோல்வி

நேற்றைய ஆட்டம், ஆஸ்திரேலியாபோன்ற ஒரு professional outfit-ஐ அவர்களது சூழலிலேயே எதிர்நோக்க, மல்லுக்கட்ட,  தேவைப்படும் பாடங்களைப் படிக்கவில்லை. அல்லது அதற்கான முழுமுனைப்பு இந்திய அணியிடம் இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்த மந்தப் போக்கு அடுத்த மேட்ச்சுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், ஒரு-நாள் தொடரை இந்தியா பரிதாபமாக இழப்பது உறுதி.

போஸ்ட்-மார்ட்டம் தேவையில்லை. சில  விஷயங்களைக் கவனித்தால் போதுமானது.

வழக்கம்போல் கோஹ்லி டாஸைத் தோற்றாயிற்று. ஆஸ்திரேலிய ஓப்பனர்கள் எப்படி நிதானமாக ஆரம்பித்து 150+ வரை இழப்பின்றி ஸ்கோரை கொண்டுசென்றார்கள். பின் வந்தவர்கள் எப்படி இந்தியாவின் பிரதான பௌலர்களைத் தாக்கி ரன் மலையை எழுப்பினார்கள் என்பதை சாஸ்திரி+கோஹ்லி டீம் கவனித்ததா? அல்லது பஜியா, பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு அசட்டு ஜோக்கடித்து, ஒருவருக்கொருவர் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருந்தார்களா பெவிலியனில்? தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவின் திட்டமிட்ட பேட்டிங் வியூகங்களுக்கு, ஒத்து ஊதுவதாக அமைந்தது இந்திய பௌலிங்! ஸ்பின்னர் சாஹலையும், வேகப்பந்துவீச்சாளர் பும்ராவையும் சிட்னியில் சமாளிக்க போதுமான ஹோம்-வர்க் செய்திருந்தார்கள் எதிரிகள். முகமது ஷமியை  மட்டுமே அவர்களால் தொடமுடியவில்லை. ஷமி 3/59. ஜடேஜாவுக்கு விக்கெட் விழவில்லை என்றாலும் எகானமி-ரேட் மோசமில்லை. மற்றவர்கள்? ஒரு ஸ்பின்னர் -that too, team’s leading  wicket taker- 10 ஓவர்களில் 89 ரன் கொடுத்ததாக அனேகமாக சரித்திரம் இல்லை என நினைக்கிறேன். சாஹலை எப்படியும் நொறுக்கித்தள்ளினால்தான் இந்தியாவின் பௌலிங் தாக்கத்தை வரும் தொடர்களில் வெகுவாகக் குறைக்கமுடியும் எனத் திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள் நேற்று. பும்ரா பொதுவாக தாக்கும் பௌலர். 2-3 விக்கெட்டுகளாவது அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். நடக்கவில்லை. செய்னி ஒரு அனுபவமில்லாத பௌலர். வியூகமில்லாத வேகம் விக்கெட்டைத் தராது என்று அவரிடம் யாரும் சொல்லவில்லைபோலும். சாஹலும், செய்னியும் 10 ஓவர்களில் முறையே 89, 83 ரன்கள் கொடுத்தார்கள். எடுத்தது ஆளுக்கு ஒரு விக்கெட். பும்ராவும் பெரிசாக செய்யவில்லை. அவரும் எடுத்தது 1. கொடுத்தது 73. இப்படியான பௌலிங்கில் எதிர்டீமின் இரண்டுபேர் சதமடித்து, ஆஸ்திரேலியா 374 எடுக்காமல் வேறென்ன செய்யும்?

சிட்னியில் இந்திய ரசிகர்கள் !

375 -ஐத் துரத்திய, அல்லது அப்படி ஆரம்பத்தில் காண்பித்துக்கொண்ட இந்திய பேட்டிங் நிலை, எப்படியானது? டாப்-ஆர்டர் லட்சணம்: மயங்க் அகர்வால் 22, கோலி 21, ஷ்ரேயஸ் 2, ராஹுல் 12. உருப்படுமா? 350+ இலக்கை குறிவைக்கிற அழகா இது? கோஹ்லியின் 21 -ல் ஒரு கேட்ச் ட்ராப் வேற. அவர் ஆடியது அவர் இன்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை விட்டுவரவில்லை என்பதையே காட்டியது. ஷ்ரேயஸ் ஐயருக்கு பௌன்சர் ப்ரச்னை. மயங்கும், ராகுலும் ஃபீல்டர் எங்கே நிற்கிறான் எனத் தேடிக்கொடுத்தார்கள் கேட்ச்சை. பௌன்சர்களில் காலியானார்கள் அகர்வால், கோஹ்லி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர். Hardik Pandya was the only silver-lining. பாண்ட்யாவின் 90, தவன்-74 இல்லாவிட்டால் இந்தியா 250-க்குள் சரிந்து இன்னும் பரிதாபமாகப் பிதுங்கியிருக்கும்.

முன்பெல்லாம் டெண்டுல்கர், யுவராஜ், சேஹ்வாக், ரெய்னா  போன்ற ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள், இக்கட்டான நிலையில், அவ்வப்போது சில ஓவர்களும் போடுவார்கள். ரெகுலர் பௌலரிடம் சிக்காத விக்கெட்டுகளையும் சமயத்தில் தூக்கி, அணிக்கு ஒரு ஆசுவாசம் தருவார்கள். ஏற்கனவே ஏற்பட்ட முதுகுப்பிரச்னையால் பாண்ட்யா பௌலிங் செய்வதில்லை இப்போது. நேற்றைய ஆட்டத்தில்,  இந்திய அணியில் ஆறாவது பௌலர், அதாவது பார்ட்-டைம் பௌலர் இல்லாதது பெரும் ப்ரச்னையானது. ஐந்து முக்கிய பௌலர்களில் யாராவது ஒருவருக்கு காயம், அல்லது செமயா அடிவாங்கினால், கேப்டன் அழைக்க என  அந்த 6-ஆவது ஆள், ஆல்ரவுண்டர் அல்லது பௌலிங்கும் கொஞ்சம் தெரிந்த பேட்ஸ்மன் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு. ஏகப்பட்ட ரன்கொடுத்துவிட்டு, கடைசி ஓவரில் கையை உதறிக்கொண்டு ஓடிய சாஹல்.. அடிவாங்கித் திணறிய பும்ரா, செய்னி.. பெப்பே என முழித்துக்கொண்டிருந்த கேப்டன் கோஹ்லி.. சகிக்கவில்லை..

சரி, இந்தியாவின் ஃபீல்டிங்? கேவலம். 3 கேட்ச்சுகள் வெண்ணெய்க்கைகளில் பட்டு வழுக்கித் தரைசேர்ந்தன. மடத்தனமான இந்திய ground fieldingவேறு ஆஸ்திரேலிய ஸ்கோர் வேகமாக ஏற அனுமதித்தது. இந்தியாவின் உடல்மொழி, ஒரு டாப்-லெவல் கிரிக்கெட் மேட்ச் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்ச்சியே இல்லாததுபோல் இருந்தது.

அடுத்த போட்டி நாளை இதே மைதானத்தில். சாஸ்திரி-கோஹ்லியின் மண்டையில் இப்போது ஊர்வதென்ன? நேற்றும் ஆசையாகக் கொடிதூக்கி வந்திருந்தார்கள், நாளையும் வருவார்கள் இந்திய ரசிகர்கள். அவர்களுக்குக் கொண்டாட என, இனிவரும் போட்டிகளில் ஏதாவது இருக்குமா?

**

IND-AUS கிரிக்கெட்: முதல் போட்டிக்கான இந்திய அணி

சிட்னியில் இன்று (27 நவ. 2020) ஆரம்பிக்கிறது இந்தியாவின் ஆஸ்திரேலியக் கதை. கோவிட்-கால நீளத் தொடர்போட்டிகளில் முதலாவதாக ஒரு-நாள் மேட்ச். ஆஸ்திரேலியா முஷ்டியை உயர்த்தி இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது. சிட்னியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு 50% ரசிகர் கூட்டத்தை அனுமதித்துள்ளது. ரொம்ப நாளுக்கப்புறம் ரசிகர்கள் மைதானத்தில். சுவாரஸ்யம். விற்பனை ஆரம்பித்ததுமே டிக்கட்டுகள் போன இடம் தெரியவில்லை! ஒரு கடுமையான, சுவாரஸ்யமான கிரிக்கெட் தொடருக்காக, ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு..

Hardik Pandya,
Allrounder

விராட் கோஹ்லியின் இந்திய அணி எப்படி இருக்கும், யார் யார் உள்ளே? துவக்க ஆட்டக்காரர்களை முடிவு செய்வதிலேயே குழப்பம் கொஞ்சம் இருக்கிறது. ஷிகர் தவன் ஐபிஎல்-இல் காட்டிய ஃபார்மோடு, தன் புகுந்த வீட்டில்/நாட்டில் நன்றாக ’ஆடி’க் காண்பிப்பார் என எதிர்பார்ப்போம்! (தவனின் மனைவி ஆயிஷா முகர்ஜி ஒரு ஆஸ்திரேலிய-இந்தியன், மெல்பர்னில் அம்மணியின் வீடு). தவனுக்குத் துணையாக மட்டையோடு இறங்கப்போவது யார்? மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராஹுல் -இதில் ஒருவர். மூவரின் ஐபிஎல் ஃபார்ம் ஓகே. ஆனால் இன்று ஆரம்பிப்பது 50-ஓவர் மேட்ச். ஒரு-நாள் போட்டிகளுக்கு வேறுவித முனைப்பு, டெக்னிக், ஆட்டம் தேவை. தயாராகத்தான் இருப்பார்கள் இந்தியாவின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மன்கள். கே.எல்.ராஹுல் விக்கெட்-கீப்பராகவும் இயங்கப்போகிறார். ஷிகருடன் ராஹுல் இறங்கி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை ஆரம்பத்தில் ’கவனிப்பதே’ உசிதம் எனத் தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் கோஹ்லியும், ஷ்ரேயஸ் அய்யரும் கவனமாக ரன் சேர்க்காவிட்டால் அணியின் ஸ்கோர் 280-க்கு வரவே திண்டாடும். 5-ல் ஃபார்மில் உள்ள மனீஷ் பாண்டேயும் (அருமையான ஃபீல்டரும்கூட), 6-ல் எதிரியை நொறுக்கப்பார்க்கும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆடவேண்டும். பாண்ட்யா வெகுகாலத்துக்குப் பிறகு (காயம்), இந்திய அணியில். ஆஸ்திரேலியாவுக்கு சொல்ல, அவருக்கு சில விஷயங்கள் இருக்கக்கூடும்!

சிட்னி பிட்ச் ஸ்பின் காண்பிக்கும். இப்போது கொஞ்சம் மாறியிருக்கக்கூடும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள், 6 பேட்ஸ்மன்கள் எனும் விகிதத்தில் இந்தியா களத்தில் இறங்கவேண்டும். பௌலர்கள் அநேகமாக இப்படி இருக்கலாம்: ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் செய்னி. ஸ்பின்னர்கள்? ரவீந்திர ஜடேஜாவின் இடதுகை ஆர்தடாக்ஸ் ஸ்பின் (leftarm orthodox spin) ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள் சிலருக்கு சோதனை தரும். சிட்னிபெரிய மைதானம். ஜடேஜாவின் மந்தகதிப் பந்துகளை சிக்ஸருக்குத் தூக்க முயற்சிக்கையில் எல்லோரும் தப்பிக்க முடியாது! அவருக்கு ஜோடியாக லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹலே சரி. தந்திரமாக சுழல்காட்டி 10 ஓவர்கள் வீசி, ஆஸ்திரேலிய அதிரடி ஆசாமிகள் ஒன்றிரண்டு பேரையாவது வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.

என்னுடைய அனுமானத்தில், சிட்னியில் இப்படி இறங்கவேண்டும் இந்திய XI

1.ஷிகர் தவன் 2. ராஹுல் 3. கோஹ்லி 4. ஷ்ரேயஸ் ஐயர் 5.மனீஷ் பாண்டே 6. ஹர்திக் பாண்ட்யா. 7.ஜடேஜா 8. ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) 9. ஷமி 10. பும்ரா(Bumrah) 11. சாஹல்.

செய்னியின் இடத்தில் டாக்குரை மேலே சேர்த்ததன் காரணம், அவர் மிதவேகத்தில், ஆனால் ஸ்விங் காட்டிப் போடுவார். கொஞ்சம் street-smart ஆன ஆள் என்பது, சிஎஸ்கே-யில் தோனி அவரை பயன்படுத்தியவிதத்திலேயே தெரிந்தது!  செய்னி காண்பிக்க விரும்பும் 140+ வேகம் ஆஸ்திரேலியாவில் அடிவாங்கலாம்.

கோச் என்கிற பெயரில் இந்தியாவின் சாபக்கேடான சாஸ்திரி ஆஸ்திரேலியாவில்.  கோஹ்லியிடம் என்ன கிசுகிசுத்துக் குழப்புவாரோ என்கிற சஞ்சலமும் தலைதூக்குகிறது.  எத்தகைய காம்பினேஷன் அணியில் அமையுமோ! ஒருவேளை, ஷுப்மன் கில் (Shubman Gill) நாளை ஆடுவதை கோஹ்லி விரும்பலாம். அல்லது அதிரடி ஆட்டமாடும் சஞ்சு சாம்ஸன், நம்பர் 5-ல் (பாண்டேக்குப் பதிலாக) இறக்கப்படலாம். (சாம்ஸன் விக்கெட்கீப்பரும்கூட). பார்ப்போம். அமீரகத்தின் ஐபிஎல் -இல் ஆரம்பித்து, தொடர்ந்து Bio bubble-லில் இருந்துகொண்டு இறுகியிருக்கும் இந்திய வீரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக தங்களை சரிப்படுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய சூழலில் பொருத்திக்கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு இந்திய வெற்றி எளிதாகும்.

சில மணிநேரங்களுக்கு முன்பாக: வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னிக்கு முதுகுப்பிடிப்பு என்று கேள்வி. T.நடராஜன் – வருண் சக்ரவர்த்தியின் காயத்தினால் கடைசி தருணங்களில் டி-20 அணியில் சேர்க்கப்பட்ட சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர்- ஒரு-நாள் அணியில் இப்போது இணைக்கப்பட்டிருக்கிறார். கோஹ்லி ஆஸ்திரேலியாவில் ’ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது!

தொடங்கட்டும் போர்..

**

சில கதைகள், சில தலைப்புகள் !

கடந்த நூறாண்டு காலத்தில் எழுதப்பட்ட தமிழின் புகழ்பெற்ற அல்லது குறிப்பிடத்தக்க சிறுகதைகள் என அவ்வப்போது கண்ணில் தென்படுகின்றன. இணையத்திலோ, வேறெங்கோ படிக்கக் கிடைத்தால் வாசிக்கும் வழக்கம் உண்டு. சில கதாசாரியர்கள், சிறுகதைத் தலைப்புகளைப் பார்க்கையில், முதன்முறையாகக் கேள்விப்படுகிறோம் என்பதில், நாம் தமிழில்  எவ்வளவு குறைவாகப் படித்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. என்ன செய்ய? அதற்காக சிலர்போல மூசுமூசு-ன்னு படித்துத் தள்ளுபவன் நானல்ல. மெல்லத்தான், selective ஆகத்தான் வாசிக்கமுடியும்!

கண்ணில்பட்ட, எண்ணத்தைத் தொட்ட சில சிறுகதைகளின்  தலைப்புகள் சற்றே அபூர்வமாக, விசித்திரமாக இருப்பதைக் கவனிக்கிறேன். சிலது நீ..ள..மாகக் காட்சியளித்து மிரட்டுகின்றன. ’என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ, ஏனிந்தப் பெயரை.. வைத்தாயோ..’ என்று சம்பந்தப்பட்ட கதையே அந்தக் கதாசிரியரைப் பார்த்துப் பாடுமோ என்னவோ!

சுவாரஸ்யத்துக்காக சில ‘நீளத் தலைப்புகள்’ கீழே:

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ – ஜெயகாந்தன்

செம்பொனார் கோவிலுக்குப் போவது எப்படி – ந.முத்துசாமி

சிவப்பாய், உயரமாய், மீசை வச்சுக்காமல் – ஆதவன்

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை – அம்பை

டெரிலீன் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்

தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தியோரு சிறுகதைகள் – எம்.யுவன்

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் – பவா. செல்லதுரை

கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் – ப்ரேம்-ரமேஷ்

இருளப்பசாமியும் இருபத்தியோரு கிடாய்களும் – வேல.ராமமூர்த்தி

மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும், வெஜிடபிள் பிரியாணியும் – நாஞ்சில் நாடன்

கதாசிரியர்களின் சிந்தனையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள் :

தாத்தாவும் பேரனும் – தி.ஜானகிராமன்

தாத்தாவின் பேனா – கோணங்கி

சாமியாரும் குழந்தையும் சீடையும் – புதுமைப்பித்தன்

நட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ்.ராமையா

குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும் – இந்திரா பார்த்தசாரதி

காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்

சிறுமி கொண்டுவந்த மலர் – விமலாதித்த மாமல்லன்

குழந்தைகள் – அசோகமித்திரன்

ஒரு எட்டு வயதுப் பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும் – நகுலன்

மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்

காலனும் கிழவியும் – புதுமைப்பித்தன்

ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்

இப்பிடியெல்லாமா ஒரு தலைப்பு (புரியலையே சாமி!) :

ரி – அ.முத்துலிங்கம்

ரீதி – பூமணி

தனுமை – வண்ணதாசன்

நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்

நீதம் -லட்சுமணப் பெருமாள்

மாஞ்சு -சுஜாதா

அன்னமயில் -வேல.ராமமூர்த்தி (அன்னமா, மயிலா.. தெளிவாச் சொல்லுய்யா!)

இதெல்லாம் -பெரும்பாலும்- அந்தக் கால எழுத்தாளர்களின் வேலை.. இப்போது எழுதிவரும் ஆசாமிகள் என்னென்ன சிந்தித்து எதைத் தலைப்பாக வைப்பார்களோ யாரேயறிவார்? எது எப்படியோ, இலக்கிய வாசக, வாசகியருக்கு கும்மாளம்தான்!

**

கோவிட் கால ஐபிஎல் ..

.. வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது அமீரகத்தில். எட்டு ஐபிஅல் அணி வீரர்கள், நிர்வாகிகள், இந்திய, அமீரக கிரிக்கெட் போர்டுகள், அரசாங்கங்கள் (அவர்களது political clearance இல்லையெனில் வெளிநாடுகளுக்குப்போய் ’ஆட’ முடியாது என்பது ரொம்பப்பேருக்குத் தெரிந்திருப்பதில்லை), ஐசிசி, ஸ்பான்சர்கள் என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். கிட்டத்தட்ட இரண்டு மாதம் கொரோனா எதிர்ப்பு bio security bubble-இல் பொறுமையாக, கவனமாக தங்களை நடத்திக்கொள்வது என்பது, வீரர்களுக்கு விளையாட்டைத் தாண்டி, மன அழுத்தம் தரும் தவிர்க்கமுடியாத செயல்பாடு ஆகும்.

Ishan Kishan (MI) kissing
the IPL Cup !

ஐந்தாவது தடவையாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டது. துபாயில் நடந்த IPL ஃபைனலில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது. ஆடிய எட்டு அணிகளில் அதுவே சிறந்தது என்பது ஆரம்ப மேட்ச்சுகளின்போதே தெரியவந்தது. அதற்கடுத்தாற்போல் இரண்டாவதாக முடித்துக்கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் கிட்டத்தட்ட சீராக ஆடியது. மற்ற அணிகளின் ஆட்டம், பெரும்பாலும் தள்ளாட்டம்! சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம்பற்றித் தனியாக எழுதலாம். அவர்கள் கதையே வேறு.

Surya Kumar Yadav,
Mumbai Indians

வைரஸின் தாக்கப்பின்னணியில் ஆடப்பட்ட high-profile டி-20 சேம்பியன்ஷிப்பான ஐபிஎல்-2020, பல்வேறு ஆட்டத்திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. குறிப்பாக பல இளம் இந்திய வீரர்கள் -இதுவரை நாட்டிற்காக ஆட வாய்ப்புகிட்டாதவர்கள்- தங்களின் சிறப்புத்திறன்களை காட்சிக்கு உட்படுத்தினர். கணிப்புகளை நொறுக்கித்தள்ளினர். ராஜஸ்தான் ராயல்ஸின் ஆல்ரவுண்டர் ராஹுல் டெவட்டியா, மும்பை இந்தியன்ஸின் பேட்ஸ்மன்கள் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரின் துவக்க ஆட்டக்காரர் 20-வயது தேவ்தத் படிக்கல், சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட், கொல்கத்தா நைட்ரைடர்ஸின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் T.நடராஜன், கிங்ஸ் லெவென் பஞ்சாபின் லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகியோர். இவர்களில் சிலர் வருமாண்டுகளில் இந்திய அணிக்கான கதவைத் தட்டக்கூடும். இந்திய டி-20 அணியில் இணைக்கப்பட்ட நடராஜன் இன்று இந்திய அணியோடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இறங்கிவிட்டார்!

ஐபிஎல் விருதுகளில் Most Valuable Player award ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை (Jofra Archer) சென்றடைந்தது. அவருடைய துல்லிய யார்க்கர்களும், முகத்துக்கெதிரே எகிறிய பௌன்சர்களும் எதிரணிகளின் டாப்-பேட்ஸ்மன்களை நிலைகுலையவைத்ததை, அதில் சிலர் தடுமாறிக் கீழே சரிந்ததை ரசிகர்களும், விமரிசகர்களும் ஒருசேர கண்டுகளித்தார்கள்.

டி-20-இல் அதிவேக ரன்குவிப்பு அவசியமாயிற்றே. இந்த வகைமையில் அதிரடியாக பேட்டைச் சுழற்றிய – 191.42 என ’ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருந்த – மும்பை இந்தியன்ஸின் கரன் போலார்டிற்கு Super Striker of the Season award கிடைத்தது.

Emerging Player award இளம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்ஸ்மன் தேவ்தத் படிக்கலுக்கு அவருடைய சிறப்பான பேட்டிங்கிற்காக வழங்கப்பட்டது.

இந்த ஐபிஎல்-இல் அதிக ரன்னெடுத்ததற்கான ’Orange Cap’ கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராஹுலுக்கும், அதிக விக்கெட்டுகளுக்கான ’Purple Cap’ விருது டெல்லி கேப்பிடல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா (Kagiso Rabada)வுக்கும் சென்றது.

அதிக சிக்ஸர்களுக்கான விருதை மும்பை இந்தியன்ஸின் இஷான் கிஷன் தட்டிச்சென்றார்.

ஒரு போட்டியில் 132 நாட்-அவுட் அடித்த பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராஹுலின் ஸ்கோர்தான், தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். பௌலிங்கில் கொல்கத்தா நைட்ரைடர்ஸின் வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட்டுகள் (5/20) என்பதே ஒரு மேட்ச்சில் நிகழ்த்தப்பட்ட சிறப்பான பௌலிங்.

ஐபிஎல்-இன் 13-ஆவது பதிப்பை அமீரகத்தில் அபாரமாக நடத்தியாயிற்று. இந்தியாவில் நடக்கவிருக்கும் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல்-இல் இன்னுமொரு அணியைச் சேர்க்கலாம் என இந்தியக் கிரிக்கெட் போர்டு சிந்திப்பதாகத் தெரிகிறது. முன்பு ஒரு முறை ஆடிய ‘குஜராத் லயன்ஸ்’ மீண்டு வருமோ! 2021-க்கான ’ஐபிஎல் ஏலம்’ ஜனவரி/ஃபெப்ருவரியில் இருக்கலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.

**

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணம் – இந்திய அணிகள்

முன்னாள் ஸ்பின்னர் சுனில் ஜோஷி, வேகப்பந்துவீச்சாளர் ஹர்விந்தர் சிங் ஆகியோரைக்கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய தேர்வுக்குழு  தன் முதல் பணியைச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் மூன்று இந்திய அணிகள், ஆரம்பக் குழப்பங்களுக்குப் பிறகு ’திருத்தி’ அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல்  முடிந்தபின் (ஃபைனல் 10-11-20), நவம்பர் 2020 இறுதியிலிருந்து ஜனவரி 2021 வரை 3 ஒரு-நாள், 3 டி-20, 4 டெஸ்ட் போட்டிகள் எனத் தொடர்களை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஆடவிருக்கின்றன. அழுத்தம் நிறைந்த இந்த கோவிட் காலத்தில்,  மூன்றுவகைக் கிரிக்கெட் போட்டிகளை, அயல்நாட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடுமாறு செய்யும் இத்தகைய நீண்ட தொடர் உசிதம்தானா என்கிற கேள்வியும் தலைகாட்டத்தான் செய்கிறது.

நடராஜனைப் பாராட்டும் கேப்டன் டேவிட் வார்னர்

அணிகள் சில புதுமுகங்களைத் தவிர்த்து,  எதிர்பார்க்கப்பட்ட வகையில் இருக்கின்றன. டி-20, ஒரு-நாள் அணிகளில் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த்திற்கு இடமில்லை என்பது ஒரு அதிர்ச்சி.  இந்திய டி-20 அணியில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்நாடு/கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி,  தோள்பட்டைக் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். (காயம்பற்றி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணி, இந்திய போர்டுக்கு சரிவரத் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது). Someone’s loss is someone else’s gain என்கிற கூற்றுக்கேற்ப, அவருடைய இடத்தில் தமிழ்நாடு/சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் T. நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். (இவர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிகளுக்கான, மூன்று ‘ரிஸர்வ் வேகப்பந்துவீச்சாளர்கள்’ லிஸ்ட்டில் இருந்தார்). ’Natarajan is the find of IPL 2020’ என்றதோடு அவர் இந்திய அணியில் இடம்பிடித்ததற்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர். 

தேர்வில், ஒரு முக்கியமான மாற்றமும் நிகழந்தது. சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட அணிகளில் காணாமற்போயிருந்த, இந்தியாவின் ப்ரிமியர் பேட்ஸ்மனான ரோஹித் ஷர்மா, டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காயத்திற்காக ஓய்வு இன்னும் தேவைப்படுவதால் டி-20, ஒரு-நாள் போட்டிகளில் ஆடமாட்டார். இன்னுமொரு அறிவிப்பு: முதல் டெஸ்ட்டிற்குப்பின் டிசம்பர் இறுதியில், கோஹ்லி விடுப்பில் இந்தியா திரும்புகிறார் (அனுஷ்காவுக்குக் குழந்தை பிறக்கும்போது அருகிலிருக்கவேண்டுமே!) எனினும், தொடர்ந்து ஆடிவரும் கோஹ்லிக்கு விடுப்பு  தேவைதான். இதனால் டெஸ்ட்-2, 3, 4-களில் ரோஹித் கேப்டனாக ஆடக்கூடும்.

கேரளா/ராஜஸ்தான் ராயல்ஸின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மன் சஞ்சு சாம்ஸன் முன்னராக டி-20 அணியில் மட்டும் இடம்பிடித்திருந்தார். இப்போது ஒரு-நாள் அணியிலும் அவர் இணைக்கப்பட்டிருப்பது அணிக்கு வலு சேர்க்கும். அவர் ஒரு அதிரடி என்பதோடு அருமையான கீப்பரும். டெஸ்ட் கீப்பர் வ்ருத்திமான் சாஹா காயத்தில் இருப்பதாகத் தெரிகிறது.காயம் சீரியஸ் இல்லை எனில் தொடர்ந்து டெஸ்ட் அணியில் நீடிப்பார்.

ஸௌரவ் கங்குலியின் குறிப்பிடத்தக்க, விமர்சகர்களால் ஸ்லாகிக்கப்பட்ட  இந்திய கேப்டன்சி காலத்தில், ராஹுல் திராவிட் துணைக்கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் வெகுகாலம் சேவை செய்தது நினைவிருக்கலாம்! அந்த ’ரோல்’ கிட்டத்தட்ட இன்னொரு கர்னாடகா பேட்ஸ்மனான கே.எல்.ராஹுலிடம் வந்து சேர்ந்திருக்கிறது. டி-20, ஒரு-நாள் போட்டிகளில் இவரே முதல்-சாய்ஸ் விக்கெட் கீப்பராக ஆட வாய்ப்பு. சாம்ஸன் கீப்பர் எனினும், அவருடைய பேட்டிங்கிற்காகவே அணியில் இருக்கவேண்டியவர்.  அவருடைய ஆடும் ஸ்டைல், பந்து எழுந்து எகிறும் ஆஸ்திரேலியப் பிட்ச்சுகளுக்கு ஒத்துப்போகும். இதெல்லாம் கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்குத் தெளிவாகவேண்டுமே! டெஸ்ட் கிரிக்கெட்டில் சாஹா ஆட முடியாத பட்சத்தில், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக இயங்குவார். இவரது கீப்பிங் தரம் ‘டாப்-க்ளாஸ்’ அல்ல – சாம்ஸன், சாஹா ஆகியோரோடு ஒப்பிடப்படுகையில். கோச் சாஸ்திரியின் பயிற்சியில், புத்திமதியில், இயற்கையாக ரிஷப்பிடம் இருந்த அதிரடி ஆட்டமும் மலையேறிவிட்டதுபோல் தோன்றுகிறது.

காயத்தினால் கடந்த வருடம் ஆடாதிருந்த ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா, ஒரு-நாள் மற்றும் டி-20 அணிக்குத் திரும்பியிருக்கிறார். Welcome change. இவரோடு, மனீஷ் பாண்டே, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராஹுல், மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி-20, ஒரு-நாள் அணி இரண்டிலும் இடம் பெற்றிருக்கின்றனர். இந்தியாவின் பேட்டிங்கிற்கு கோஹ்லியோடு, இவர்களின் திறனே ஆதாரம். அதைப்போலவே பௌலிங்கில், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் செய்னி,  ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும், யஜுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களும். ஆல்ரவுண்டர் சுந்தரின் ‘off-spin’,  ‘பேட்டிங் பவர்ப்ளே’ யில் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மன்களை அடக்க உபயோகமாக இருக்கும்.  சுந்தரின் பேட்டிங் ‘left-handed’, பௌலிங்  ’right-handed’ – சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும்.

வேகப்பந்து வீச்சாளர்
முகமது சிராஜ்

டெஸ்ட் போட்டிகளில்,  இந்தியாவின் பேட்டிங் செயல்பாடுகள்,  கோஹ்லியைத் தாண்டி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராஹுல், மயங்க் அகர்வால், செத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோரைத்தான் நம்பியிருக்கும். இளம் பேட்ஸ்மன் ஷுப்மன் கில் (Shubman Gill), ரிஷப் பந்த் ஆகியோருக்கும் ஆட வாய்ப்பு கிட்டலாம்.  பௌலிங்கில் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா (Bumrah), ஷமி, உமேஷ் யாதவ், செய்னி ஆகியோரோடு,  ஹைதராபாத்/ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜும் (Mohammad Siraj) டெஸ்ட் அணியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.  வலிமையான ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களுக்கு இவர்களது பௌலிங் நெருக்கடி தருமா? பெரும் கேள்வி.

டெஸ்ட் அணியில் இருக்கும் அஷ்வினைத் தவிர, இந்தியாவுக்காக ஆட இரண்டு தமிழர்கள் – வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்-இல் சிறப்பாக ஆடிய இருவரும் டி-20 பங்களிப்புக்காக மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா ஜெர்ஸியில் முதன்முறையாக ஆடப்போகும் சேலத்தின் நடராஜனுக்கு முற்றிலும் புதிய அனுபவம்! ஆஸ்திரேலியாவில் இவர்களின் கதை எப்படிச் செல்லுமோ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

**

”எல்லாம் சரியாப்போச்சுன்னா…

.. (அப்பறமா) உங்கள இங்க சந்திக்கிறேன்!” (Sab theek raha tho.. miljaunga yahi pe..) -ஒரு பிரபலப் புள்ளி சொன்னதாகப் படித்தேன் காலைவேளையில். யாரிது குழப்பம்? என்ன சொல்லுது?

Bhuvan Bam

பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என மனதில் கற்பனை ஓவியம் தேவையில்லை. சொன்னது ஒரு ஆண்.  Influlencer ! (இன்னும் என்ன என்ன வார்த்தைகள் வருமோ ஆண்டவா..). புவன் பாம் (Bhuvan Bam) – இந்தியாவின் டாப்  யூ-ட்யூபர் (Youtuber). காமெடியன், பாடகன், இசையமைப்பாளன் என சிலவருடங்களாக யூ-ட்யூபில் பன்முக ஆர்ப்பாட்டம்.  ரொம்பப் பாப்புலர்! நெட்டிஸன்கள் புவனை பாலிவுட் நடிகை ஆலியா பட் (Alia Bhatt)-இன் ‘ஆண்-வர்ஷன்’ எனக் கலாய்க்கிறார்கள். இது புவனை அசைத்து, அவர் ஆலியாவுக்கான மெஸேஜில் ‘ஆலியா! நீங்கள்தான் என் ‘க்ரஷ்’! ஒரு காஃபி சாப்பிடலாம். வரமுடியுமா!’ என்று ட்வீட்டியிருந்திருக்கிறார். புவனின் மொத்த வருமானம் 2020-கணக்குப்படி உத்தேசமாக 2.9 மில்லியன். ரூபாயல்ல, அமெரிக்க டாலர்! பாம் டெல்லியில் கல்லூரி முடித்த ஒரு மஹாராஷ்ட்ர இளைஞன்.

பேசவந்தது பாமின் புகழ், வருமானம்பற்றியல்ல. அவர் சொன்ன விஷயம். விதம். அப்படி ஆகிவிட்டிருக்கிறது, நாட்டில், உலகில் நிலமை. ’கொஞ்ச நாட்களாகவே உடம்பு சரியில்லை. சோதித்ததில் ‘பாஸிட்டிவ்’! என வந்திருக்கிறது’ என்கிறார் மெஸேஜில். இந்த ‘பாஸிட்டிவ்’-தான் இந்த வருடத்தின் மோசமான, ’நெகட்டிவ்’. ஆண்டு 2020 பிறந்த நேரம் அப்படி! ஆஸ்பத்திரிக்குப் பயந்துகொண்டே போய் அங்கு ‘பாஸிட்டிவ்’ என வந்துவிட்டால் பலருக்கு முகம் சுண்டிவிடுகிறது, குடல் சுருங்கிவிடுகிறது. உயிர்ப்பயத்தின் தாக்கம். ஏகப்பட்டோரை பலிவாங்கி வெற்றிநடை போடுகிறதே இன்னும் இந்த வைரஸ். எந்த அரசாலும், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சியாளர்களாலும் ஒரு பதில் சொல்லமுடியவில்லையே இதற்கு. ‘பொது’ ஜனம் (வைரஸுக்கு முன்னே பிரபலங்களும் சமம்) – என்ன  செய்யும்? பீதியிலேயே பாதி மேலே போய்விடுகிறது . கொஞ்சம்பேர் தப்பித்தும் வந்துவிடுகிறார்கள்தான் – badly thrashed, perennially injured. இப்படி ஒரு காலன், காலத்திற்கேற்ற கோலன்.

ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற சில மேலைநாடுகளில் ‘லாக்டவுன்’ இரண்டாவது சுற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேறு சில தேசங்கள் அறிவிப்போமா வேண்டாமா எனக் குழம்பிக் கிடக்கின்றன. எத்தனை ஊர்களில் எத்தனை சாவு விழுந்தாலும், எனக்கு ஒன்றும் ஆகாது.. அது மற்றவர்களுக்குத்தான் என்பதாக பலர் அலட்சியமாக, சுயபாதுகாப்பின்றி சுற்றி, சுற்றிவருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, ஏனைய மெத்தப்படித்த, ‘முன்னேறிய’ சமூகங்களின் கதியும் இதுதான். நாம் மார்க்கெட்டுகளில் உரசிக்கொள்வோம். அவர்கள் Bar-களில் உரசிக்கொள்வார்கள், பீச்சுகளில் படுத்து உருளுவார்கள். சின்னச் சின்ன வித்தியாசங்கள்.

தத்துவார்த்தமாகப் பார்த்தால்… எதுவும் சொல்லி, எதுவும் ஆகப்போவதில்லை. அழிவோ, ஆக்கமோ, நடக்கவேண்டியதே உலகில் நடக்கும் எப்போதும். இதில் நல்லது, கெட்டது என வகைப்படுத்த முயற்சிப்பதால், தலையைப் பிய்த்துக்கொள்வதால் என்ன ஆகிவிடப்போகிறது – ஒரு பெரும்நிகழ்வின் முழுப் பரிமாணமும் தெரியாதபோது ? அப்படியே தெரிந்துவிட்டாலும்..

**