ஜிம்பாப்வே செல்லவிருக்கும் புதிய இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை10-ல் துவங்கவிருக்கும் ஜிம்பாப்வே-க்கு எதிரான ஒரு-நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை 29-06-2015 அன்று அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
மாறுதல் செய்யப்பட்டிருக்கும் இந்திய அணியில் புதியவர்கள் சிலர் இடம் பிடித்திருக்கிறார்கள். சில சீனியர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள். தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் மத்தியவரிசை ஆட்டக்காரரான மும்பை அணியின் அஜின்க்யா ரஹானே முதன்முறையாக ஒருநாள் மற்றும் டி-20 இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பழைய புலிகளான தோனி, கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ், அஷ்வின், ஷிகர் தவன் போன்றோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல காரியத்தை ந்மது கிரிக்கெட் போர்டு, பங்களாதேஷ் டூரின்போதே செய்திருக்கவேண்டும். Better late than never!

நமது முந்தைய பதிவில் (25-6-2015) குறிப்பிட்ட சில இளம் வீரர்களை ஜிம்பாப்வே டூருக்காக இந்திய போர்டு தெரிவு செய்துள்ளது மகிழ்ச்சிதரும் ஆச்சரியமாக உள்ளது! வரவேற்கத் தக்கது. அவர்கள்: ராபின் உத்தப்பா (கர்னாடகா)- விக்கெட் கீப்பர்/துவக்க ஆட்டக்காரர். மனிஷ் பாண்டே (வயது 25,கர்னாடகா), மனோஜ் திவாரி(மேற்கு வங்கம்)-இருவரும் மத்தியவரிசை ஆட்டக்காரர்கள். சந்தீப் ஷர்மா(வயது 22,பஞ்சாப்)-வேகப்பந்துவீச்சாளர். இவர்களன்றி இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம் பெறும் சீனியர் வீரர்கள்: முரளி விஜய்(தமிழ்நாடு)-துவக்க ஆட்டக்காரர், ஹர்பஜன் சிங்(பஞ்சாப்) சுழல்பந்து வீச்சாளர். கேப்டன் அஜின்க்யா ரஹானேயுடன் இடம்பெறும் ஏனைய சீனியர் வீரர்கள்: புவனேஷ்வர் குமார்(உத்திரப்பிரதேசம்), மோஹித் ஷர்மா(ஹரியானா) –இருவரும் வேகப்பந்துவீச்சாளர்கள், அம்பத்தி ராயுடு (ஹைதராபாத்) மத்தியவரிசை ஆட்டக்காரர், கேதார் ஜாதவ்(மஹாராஷ்ட்ரா) -மத்தியவரிசை பேட்ஸ்மன், ஸ்டூவர்ட் பின்னி(Stuart Binny)(கர்னாடகா), அக்ஷர் பட்டேல்(வயது 21, குஜராத்), கரன் ஷர்மா (ரயில்வே கிரிக்கெட் அணி) -மூவரும் ஆல்ரவுண்டர்கள், தவல் குல்கர்னி((Dhawal Kulkarni)மும்பை)- வேகப்பந்துவீச்சாளர்.

இந்திய கிரிக்கெட் போர்டு, 2016-ல் நிகழவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளை மனதில் கொண்டு, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் வீரர்களைத் தெரிவு செய்துள்ளதாகக் கூறுகிறது. கடந்த ஓரிரண்டு வருடங்களாகவே, தேசத்துக்காக விளையாடும் வாய்ப்புக்காகக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கும், திறமை மிளிரும் இளம்வீரர்களைத் தேர்வு செய்தது பாராட்டவேண்டிய விஷயம்.

அஜின்க்யா ரஹானே இந்தியாவின் சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களில் ஒருவர். ஆனால், இதுவரை தற்காலிகமாகக்கூட கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதில்லை என்பதால் அவருடைய அணுகுமுறை வரும் தொடரில் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற இயலாது. தேர்வு செய்யப்பட்டிருக்கும் இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி, தங்கள் திறமையை வெளிநாட்டு மண்ணிலும் நிரூபிக்க முயல்வார்கள் என நம்பலாம். குறிப்பாக ஐபிஎல் புகழ் சந்தீப் ஷர்மா swing and line & length medium pacer. இவரது பந்து வீச்சு துல்லியமானது, விக்கெட்டுகளை விரைவில் பறிப்பது. ஜிம்பாப்வே பிட்ச்சுகளில் இவரது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பது குறிப்பாகக் கவனிக்கப்படும். இதைப்போலவே ஐபிஎல், ரஞ்சி டிராஃபி மேட்ச்சுகளில் சிறப்பாக ஆடிவரும் ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி ஆகியோரின் பேட்டிங் ஜிம்பாப்வே மண்ணில் எப்படி இருக்கும் என்பதனையும் கிரிக்கெட் வல்லுனர்களும், ரசிகர்களும் கண்ணில் எண்ணெயைவிட்டுக்கொண்டு கவனிப்பார்கள்!

**

அது சரி !

சரியான இடம் போக
சரியான நேரத்தில்
சரியான பஸ் பிடித்து
சரியாக சில்லரை கொடுத்து
சரியான டிக்கெட் வாங்கி
சரியான இடம் தேடி உட்கார்ந்தேன்
சரியாகத்தான் இருந்தது பயணம்
சரியான இடம் வருமுன்
தவறான இடத்தில் இறங்கிவிட்டேன்
சரி போகட்டும்
சரியாக நமக்கு எதுதான் நடந்திருக்கிறது ?

**

கடைசி மேட்ச்சில் இந்தியா வெற்றி – ஆனால் . . ?

நேற்று(24-6-2015) டாக்காவில் முடிந்த 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா பங்களாதேஷை தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, இந்தத் தொடரில் முதன் முறையாக பொறுப்புடன், முனைப்புடன் விளையாடியது. கடைசி மேட்ச்சிலாவது ஜெயிக்க வேண்டுமே என்கிற ஜாக்கிரதை உணர்வு. ஷிகர் தவன் 75 ரன்கள், கேப்டன் தோனி 69 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர். அம்பத்தி ராயுடு 44, சுரேஷ் ரெய்னா 39 ஆகியோரின் துணையாட்டம் நன்றாக அமைந்தது. இந்தியாவின் ஸ்கோர் முதன்முறையாக இத்தொடரில் 300-ஐத் தாண்டியது. 318 என்கிற இலக்கை துரத்தி, மூன்றாவது மேட்ச்சிலும் இந்தியாவை தோற்கடித்து, முதன்முதலாக இந்தியாவை `ஒயிட்வாஷ்` செய்ய ஆசைப்பட்டது பங்களாதேஷ்! ஆனால் நேற்று இந்திய பௌலர்களிடம் அதன் பாச்சா பலிக்கவில்லை. இந்திய ஸ்பின்னர்கள், ரெய்னா, அஷ்வின், பட்டேல், ராயுடு முறையே 3,2,1,1 விக்கெட்களை ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் வீழ்த்தி, பங்களாதேஷை நிலைகுலைய வைத்தனர். குல்கர்னி 2, ஸ்டூவர்ட் பின்னி 1 என மற்ற விக்கெட்டுகள் பறிபோக, பங்களாதேஷ் 240 ரன்களில் இந்தியாவிடம் சரணடைந்தது. இருந்தும் முதல் இரண்டு போட்டிகளை வென்றிருந்ததால், 2-1 என்கிற நிலையில் இந்தியாவுக்கெதிரான தொடரை பங்களாதேஷ் முதன்முறையாகக் கைப்பற்றியது.

அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்டு, அலங்கோலமாக பங்களாதேஷில் நடத்தப்பட்ட இந்த இந்தியா-பங்களாதேஷ் ஒரு டெஸ்ட் மேட்ச், மற்றும் 3 போட்டிகள் அடங்கிய ஒரு-நாள் தொடர்பற்றி, சில சங்கடமான கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. பங்களாதேஷின் உச்ச பருவமழை காலமான ஜூன் மாதத்தில் எந்த ஒரு வெளிநாட்டு அணியும் கிரிக்கெட் விளையாட அங்கு வருவதில்லை. தினம் தினம் கருமேகங்கள் மிரட்ட, மழைவரும் காலமிது. இதெல்லாம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு தெரியாத விஷயமா? இருந்தும், பங்களாதேஷில் ஜூன் மாதத்தில் இந்த கிரிக்கெட் தொடரை அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன? பங்களாதேஷ் போர்டு கூப்பிட்டால் உடனே ஒடிவிடவேண்டுமா? அதுவும் அனல்பறக்கும் கோடையும், எதனையும் விடாது நாசம் செய்யும் ஒரு கசகசப்பான மழைகாலத்தில்தானா, அந்த நாட்டுக்கு அணியை அனுப்ப வேண்டும்? உலகக்கோப்பைத் தொடருக்குப்பின், நமது அணி இப்போதுதான் இந்தியக் கடும் கோடையில் ஐபிஎல் தொடரை விளையாடி முடித்திருக்கிறது. ஒரு மாத இடைவேளை /ஓய்வுகூட கொடுக்கப்படாமல் இந்தியவீரர்களைத் தங்கள் குடும்பத்தோடு இருக்க அனுமதிக்காமல், ஏன் இப்படி விரட்டி, விரட்டி வேலை வாங்க வேண்டும்? நமது வீரர்களின் ஓய்வு, ஆரோக்கியம், ஆட்டத்தயார்நிலை, இவற்றில் நமது கிரிக்கெட் போர்டுக்கு அக்கறை இல்லையா?

அப்படியே அணியை அனுப்பவேண்டிய சர்வதேச கிரிக்கெட்டின் கமிட்மெண்ட் இருந்தால், இந்தியாவின் இளம் வீரர்களை, ஒரு சில சீனியர் வீரர்களுடன் சேர்த்து பங்களாதேஷுக்கு அனுப்பியிருக்கலாமே? இந்திய அணிக்குள் எப்போதும் நுழையத் தயாராயிருக்கும், தகுதி மிகுந்த வீரர்களான ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி, சர்ஃபராஸ் கான், சௌரவ் திவாரி, சஞ்சு சாம்ஸன், சந்தீப் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா, அனுரீத் சிங், போன்றோரை இந்த டூருக்காகத் தேர்வு செய்திருந்தால், அவர்களுக்கும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இவர்களில் யாராவது சிறப்பான ஆட்டத்தை, இத்தகையக் கடும் சூழலில் வெளிப்படுத்த நேர்ந்தால், அவர்களை இந்திய அணியில் நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்கலாம். எதிர்கால இந்தியக் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இத்தகைய இளம் வீரர்களின் பங்களிப்பு ஏதுவாக அமையும்.

இந்தத் தொடரில், இந்திய முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களின் ஆட்டம் படுமோசம். காட்டுத்தனமான வேகத்தை மட்டுமே நம்பி இராமல், வேகப்பந்துவீச்சாளர்களின் உண்மை பலமான யார்க்கர், இன்–கட்டர், ஆஃப்- கட்டர், ஸ்விங் எனப் பல்திறமை கொண்ட இளம் பந்துவீச்சாளர்களை இனம்கண்டு இந்திய அணியில் சேர்க்கவேண்டும். வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியா வெற்றி பெற, மிகவும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயமிது.

ஜக்மோகன் டால்மியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் போர்டு, தனது சமீபத்திய முடிவுகளில் அனாவசியப் பதற்றம், அவசரம் காட்டுவதாகத் தெரிகிறது. இது தேவையில்லாத ஒன்று. இந்தியக் கிரிக்கெட்டின் வெற்றி என்கிற இலக்கோடு, வீரர்களுக்குப் போதுமான ஓய்வு, தொழில்ரீதியான பயிற்சி, தயார்நிலை, இந்தியாவில் சிறப்பான ஆடுகளங்கள் ஆகியவற்றைப்பற்றிச் சிந்திக்கவேண்டும். காலங்கடத்தாது, சரியான முடிவெடுக்கவேண்டும்.

**

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே.. !

சில சமயங்களில் மாலை ஆரத்திக்காக காத்திருப்போம் டெல்லியின் அந்தக் கோவிலின் வாசலில். அப்போது, அங்கிருக்கும் பெஞ்சுகளில் உட்கார்ந்து சகபக்தர்களுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். ஒரு மாலைப் பொழுதில் அந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்தேன். பக்கத்தில் செக்யூரிட்டி ஆசாமி ஒரு டெல்லிவாலாவுடன் ஏதோ ஹிந்தியில் சளசளத்துக்கொண்டிருக்க, தெளிவான மெதுவான குரலில் அவரிடமிருந்து வந்தது அந்த தமிழ்த் திரைப்படப்பாடலின் வரிகள்…

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே..
குடியிருக்க நான் வரவேண்டும்!
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தரவேண்டும்?..

வயது 70-ஐ நெருங்கியிருக்கும். சற்றே குள்ளம். வேஷ்டி, சட்டை. நெற்றியில் பளிச்சென வீபூதிப் பட்டை. சிவனடியார் போன்ற சாதுத் தோற்றம். ஆனால், மனதில் ஆடிக்கொண்டிருப்பது எம்.ஜி.ஆரின் ஹீரோயினா? ஹ்ம்… யாரைப்பற்றி என்ன சொல்வது இந்த உலகத்தில்?

பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் இந்த ஜாலிப் பேர்வழியைப்பற்றி நாசூக்காக விஜாரித்தேன். அவர் லேசாக சிரித்துக்கொண்டே `ரொம்ப லைட்டா நெனச்சுராதீங்க! சாஸ்திரமெல்லாம் படிச்சவரு!`

ஓ! அப்படிப் போகுதா சங்கதி? கொஞ்சம் பேசிப் பார்ப்போம் என நினைத்து அருகில் சென்று உட்கார்ந்தேன்.

ஒரு தயக்கமான சிரிப்பு, ஜாக்ரதையான அறிமுகத்துக்குப்பின்
’உங்களக் கோவிலுக்குள்ளே பார்க்கறது அபூர்வமா இருக்கு.. சகஸ்ரநாம பாராயணத்திலும் நீங்க கலந்துக்கறதில்ல போலெருக்கு..` என்று இழுத்தேன்

`நா அங்கல்லாம் போறதில்லே. விஷ்ணு சகஸ்ரநாமமா சொல்றாங்க..! தப்பும் தவறுமா..ம்ஹூம்` என்றார் சலிப்புடன்.

’ஆமாம். வேகமா படிச்சுட்டுப்போயிட்ராங்க’ என்று ஒத்து ஊதிவைத்தேன், அவருடனான ஃப்ரிக்குவென்ஸியைக் கொண்டுவருவதற்காக.

’’முழுசா சரியா சொல்லவராட்டா, சொல்லவேண்டாமே.

`ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகரஸ்நாம தத்துல்யம் ராம நாம வரானனே`

என்கிற வரிகளை நிதானமா மனசுலே வாங்கிண்டு, ரெண்டுதரம் சொன்னாக்கூடப் போறுமே! சகஸ்ரநாமம் பூரா சொன்னதுக்கான பலன் கெடச்சுடும்’’ என்றார் அவர்.

மேற்கொண்டு பேச்சு கடவுள், மந்திரம், வேதம் என நீண்டது.
’’ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஏற்ற மந்திரங்கள், செய்ய வேண்டிய யாகங்களுக்கான வழிமுறைகள் பற்றி வேதங்கள்ல விபரமா சொல்லி இருக்கு. மந்திரத்தை மனப்பாடம் பண்ணிட்டா மட்டும் போறாது. தகுதி உள்ள வேத ஆச்சாரியர்களிடமிருந்து சரியா, முறையா கத்துக்கணும். சமஸ்கிருதத்தில உச்சரிப்பு ரொம்ப முக்யம். மந்திரங்களை மிகச் சரியா உச்சரிக்கத் தெரியணும். உச்சரிப்பு மாறிடுச்சுன்னா, உபத்திரவமாப் போயிடும். அர்த்தம் அனர்த்தமாயிடும். இதப்பற்றி யஜூர் வேதத்தில தெளிவா சொல்லப்பட்டிருக்கு..’’

‘’எந்தக் கடவுளுக்கும் மனைவின்னு ஒன்னு கெடயாது. தெய்வம் ஒன்னுதான். பரப்பிரும்ஹம். அதுக்கு பலவேறு சக்திகள் இருக்கு. அதத்தான் பெண் ரூபமா வரிச்சு, சிவனோட மனைவி பார்வதி, விஷ்ணுவோட மனைவி லக்ஷ்மி என்றெல்லாம் கொண்டாடறோம். வணங்குறோம்…’’

’’வினாயகர் இருக்காரு. அவருக்கு சித்தி, ரித்தின்னு ரெண்டு பொண்டாட்டிகள்-ன்னு சொல்றாங்க. அவரு ஒருத்தருதான். அவருக்கு பொண்டாட்டில்லாம் இல்ல. அது அவரோட தெய்வீக சக்தியின் வடிவம். அதத்தான் மனைவிமாரா வழிபடறாங்க வடநாட்டுல. ’’

சொல்லிக்கொண்டே சென்றார் மனிதர். நான் இடையிடையே `ம்` கொட்டிக்கொண்டிருந்தேன். மடையைத் திறந்து விட்டாயிற்று; இனி வெள்ளம் தான்!

’’ `சுதர்ஷன்` -ங்கிற பெயரில பெருமாளை சேவிக்கிறோம். சுதர்ஷன் –னா என்ன அர்த்தம்? `சு` – `தர்ஷன்`. `சு`-ங்கிறதுக்கு சமஸ்கிருதத்தில விசேஷமான, சிறந்த குணங்களையுடைய–ன்னு பொருள் இருக்கு. (சுகன்யா, சுப்ரியா, சுஹாசினி, சுசித்ரா –ன்னு பொண்களுக்குப் பேரெல்லாம் இருக்கே…) இங்கே அதுக்கு, `மிகவும் விசேஷமான, சிறந்த தரிசனம்-னு அர்த்தம். பெருமாள், மகாவிஷ்ணு தன் அதீத சக்தியையெல்லாம் கொண்டிருக்கிற அவருடய திவ்ய ஆயுதமான சக்கர ரூபத்தில, பக்தர்களுக்குக் கொடுக்கும் `விசேஷக்காட்சி` -ன்னு அர்த்தம். அதுதான் சுதர்ஷன். அதத்தான் நாம `சக்ரத்தாழ்வார்`-னு, சுதர்ஷன் –னு பூஜை செஞ்சிட்டு வர்ரோம்..பகவானோட சக்தி, கீர்த்தி, சிறப்பு பற்றி அவன் சன்னிதிலே பாடறோம். ஸ்வாமி மஹா தேசிகன் அதப்பத்தித்தான் `சுதர்ஷனாஷ்டக`த்திலே ப்ரமாதமா எழுதியிருக்கார்.’’

`சுதர்ஷனை வேண்டிக்கொண்டா எல்லாம் நடக்கும், வேண்டியது வேண்டியபடி கிடைக்கும்னு நம்பறோம்` என்றேன்.

அவர் தொடர்ந்தார்: ‘’கடவுளுக்கென்ன… அவர் நீ வேண்டிக்கொண்டது எதுவா இருந்தாலும் கொடுத்துடுவார். எல்லாத்தயும் கடந்த ஞானம் தான் எனக்கு வேணும்னு யாரும் அவர்ட்டபோய்க் கேட்கப்போறதில்ல! பணம், காசு, சொத்துபத்து வேணும்னுதான் ப்ரார்த்தனை செய்வான் மனுஷன். காசு, பணந்தான் எல்லாம்..எம்ஜிஆர் படத்துல ஒரு பாட்டு வரும். ஞாபகம் இருக்கா? என்று என்னைப் பார்த்தார். நான் யோசிக்க, அவரே எடுத்தார், பாடினார்:

காசேதான்…கடவுளடா – அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமடா !
கைக்கு கை மாறும் பணமே- உன்னை
கைப்பற்ற நினைக்குது மனமே!- நீ
தேடும்போது வருவதுண்டோ?
விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ?…

“பகவானுக்குத் தெரியும் ஒன்னயப்பத்தி! ஒன்னயக் கொஞ்சம் அலக்கழிப்பார். அப்புறம்…“இதுதானே வேணும்.. இந்தா!“ன்னு கொடுத்துடுவார்! அதுக்கப்பறம் ஒம் பாடு! பணத்த வச்சுகிட்டு ஆட்டம் போடுவே, நல்லது, கெட்டதுன்னு நிறைய கர்மாக்களப் பண்ணுவே.. அதன் பலனா அடுத்த பிறவி…அதுக்கடுத்த பிறவின்னு சுத்திகிட்டே இருக்க வேண்டியதுதான். விமோசனம் இல்லே..!“

`அப்போ இந்த அவஸ்தையிலிருந்தெல்லாம் ஒரு விடுதலை, விமோசனமே மனுஷனுக்குக் கெடைக்காதா?` என்றேன் அவரைப் பார்த்து.

`மொதல்லே இந்தப் பணம், காசு, போகம்.. இதெல்லாமே, காலப்போக்குல நீடித்த சந்தோஷம், நிம்மதி தரக்கூடிய சங்கதிகள் இல்லன்னு ஒருத்தனுக்குத் தன்னாலே புரியணும். எல்லாத்தையும் விட்டுவிட்டு அவன் சுத்தமா வெளியே வந்துடணும். இதையெல்லாம் தாண்டிய பரமநிம்மதி வேணும்னு அவன் மனம் ஏங்கணும். அதத்தவிர வேற ஒண்ண அவன் மனம் நாடக்கூடாது. அந்த நிலையில அவன் பகவானிடம் சரணடைந்து, “அப்பா! நான் பட்டதெல்லாம் போதும்! இந்த சம்சார சாகரத்தைத் தாண்டின, பழி, பாவம், கர்மாக்களுக்கு அப்பாற்பட்ட பரமகதியைத் தா!“ன்னு கெஞ்சிக் கேட்டு நிக்கணும். பகவானும் பார்ப்பார். உண்மையில இவனுக்கு இதுமட்டும்தான் வேணுமா? இல்ல, சும்மா குழம்பிப்போயி இங்க வந்திருக்கானா-ன்னு ஒன்னய சோதிப்பார். புரட்டிப்புரட்டி எடுப்பார். அவரோட சோதனை எல்லாத்துலயும் நீ பாஸாகிட்டா, நீ கேட்ட அந்தப் பரிபூரண அமைதியை, ஞான நிலையைத் தந்துடுவார். பகவத் கீதையில பகவான் கிருஷ்ணர் சொல்றார்: `மனிதர்களில் ஏகப்பட்டபேர் என்னை நாளெல்லாம் பூஜிப்பார்கள், பாடுவார்கள்..ஆடுவார்கள்..தேடுவார்கள்.. ஆனால், கோடியில் ஓரிருவரே, இறுதியில் என்னை வந்து சேருவார்கள்` என்கிறார். அதனால அது அவ்வளவு எளிதா நடக்கக்கூடிய விஷயம் இல்ல!“ என்று முடித்தார் அவர்.

நல்லதொரு இறை சிந்தனையைக் கிளறிவிட்ட பெரியவருக்கு மானசீகமாக நன்றி சொல்லிக்கொண்டே, கோவிலுக்குள் நுழைந்தேன்.

**

ஹ்ம்..! ஒங்க பேரு ?

நாடு ரொம்பத்தான் வேகமா முன்னேறிகிட்டிருக்கு. எதத்தான் ஆன்–லைனில் ஆர்டர் செய்வது என்கிற விவஸ்தையே ஜனங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஏகப்பட்ட ஆன்–லைன் சேல்ஸ் கம்பெனிகள், மழைக்குப்பின் முளைவிட்டு மண்டும் காளான்கள் போலப் புறப்பட்டிருக்கின்றன. போட்டிபோட்டுக்கொண்டு தூசி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடுக்கும் ராமதூதர்களாய், டூ-வீலரில் அலைந்து திரிந்து, நம் வீட்டுக் கதவுகளில் மோதி, தலையைக் கோதி நிற்கும் இளைஞர்கள். ஒரு தேசம் என்பதற்கான மரபுவழி அடையாளமான, மக்கள், இனம், சமூகம், மொழி, கலாச்சாரம் என்கிற சிந்தனை வடிவமெல்லாம் கலைந்துக் காலவதியாகி நாளாகிவிட்டது. நாடே ஒரு மாபெரும் இயந்திரமாக இரவு, பகலாக எப்போதும் தடதடத்துக்கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், டெல்லி போன்ற மெகாநகரத்தில் இப்பவெல்லாம் நம் வீட்டிலேயேகூட, சும்மா அமைதியாகக் கொஞ்ச நேரம் விழுந்து கிடப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமாகத் தோன்றவில்லை. அரைமணி-முக்கால் மணிக்கு ஒருமுறை காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்து பார்த்தால் தமிழ்ப் படத்தில் புதுசா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வில்லன் போல் ஒருவன் நின்றிருப்பான் கையில் கடுதாசோ, கவரோ, பாக்கெட்டோ, ரெஜிஸ்டரோ- என்ன கன்ராவியோ? ஒருமுறையான பயிற்சி இல்லாத, வீட்டிலுள்ள பெண்களை, பெரியவர்களை எப்படி அணுகவேண்டும், பேச வேண்டும் என்கிற இங்கிதம் தெரியாத ஜன்மங்கள். தினம்தினம் ஏதோ ஒரு வகையில், இந்த பேஜார்ப் பயல்களை tackle செய்துதான் ஆகணும்!

குறிப்பாக, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தர்மபத்தினி வெளியே சென்றிருக்கும் நேரத்தில், வீட்டில் தனியாகக் கொஞ்சநேரம் இருக்கலாம், பிடித்தமான பழைய பாடல்களை அசைபோடலாம் என்றெல்லாம் கற்பனைப் படகில் சவாரி செய்துகொண்டிருப்பவர்தான் நீங்கள் என்றால், உங்களைப்போன்ற வடிகட்டின அசடு வேறு யாருமில்லை. இப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் காலை நேரம். ஒரு Black Coffee-ஐப் போட்டு கப்பைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, தனியாக இருப்பதின் அலாதியான சுதந்திரத்தை அனுபவிப்பதாக பாவித்துக்கொண்டு, அமைதியாக உட்கார்ந்திருந்தேன். நெட்டில், ஆழ்வார்கள், ஞானிகள், ஆண்டவன் என ஆனந்தமாயிருந்தேன். பொறுக்குமா அவனுக்கு? அடித்தான் பெல்லை. போய்க் கதவைத் திறந்து பார்த்தால், `என்ன இது! சங்கு, சக்ர, கதாதாரியான மஹாவிஷ்ணு இந்த எரிக்கும் வெயிலில், என்ன செய்வதென்று தெரியாமல் இப்படியெல்லாம் காட்சிதர ஆரம்பித்துவிட்டாரா? பாண்ட்டு, ஷர்ட்டு, ஒரு கையில் பாட்டில், இன்னொரு கையில் ஏதோ ஒரு ரெஜிஸ்தர்!

கதவைத் திறந்த என்னைப் பார்வையால் அளவிட்டான். `வீட்ல கூலர் எங்க இருக்கு?’ என்றான்
என்னமோ என் வீட்டில் கூலரை வைத்துக்கொண்டு, இவன் பாட்டிலோடு பாட்டுப் பாடிக்கொண்டு எப்ப வருவான்னு ஏங்கிகிட்டு நான் இருக்கிற மாதிரி!

`எதுக்கு`? கேட்டேன்.

பாட்டிலை (உள்ளே வெண்மையான திரவம்) ரஜினிகாந்த் ஸ்டைலை ஞாபகப்படுத்தும் வகையில் சுழற்றிக்கொண்டே, வேறெங்கோ பார்த்துக்கொண்டு `கொசு அதிகமாயிருச்சு. மருந்து அடிக்கணும்!`

நம்ம ஆரோக்யத்திலதான் இவன்களுக்கு என்ன அக்கறை…அடடா! கேஜ்ரிவால் சர்க்காரா நடக்குது.. ஹ்ம், பரவாயில்ல!

`கூலர் இந்த வீட்ல இல்லப்பா!` என்றேன்.

`நெனச்சேன் அப்பவே! ஒங்கிட்ட இதல்லாம் எங்க இருக்கப்போகுது?` என்பது மாதிரி என்னை அலட்சியம் செய்து, எதிர்வீட்டில் கொசுவடிக்க ஆயத்தமாகி பெல்லடித்தான்.

ஹூம்..! வந்துர்ரானுங்க கால வேலைல காரணத்தோட! உள்ளே திரும்பி நெட்டில் மீள்ஆழ்ந்தேன். ஒரு அரைமணி, முக்கால்மணி ஆகியிருக்குமா? மறுபடியும் இந்த பாழாய்ப்போன காலிங் பெல்.
கதவைத் திறந்தவுடன் முகத்தில் கடுகடுப்புடன் ஒரு பார்வை. அவனைச் சொல்லியும் குற்றமில்லை. நகரத்தையே கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கும் இந்த வெயில் யாரையும் எளிதாகச் சூடேற்றிவிடும்.

அவனிடமிருந்து பாய்கிறது கேள்வி: ”ஹ்ம்! ஆப் கா நாம்?” (ஒங்க பேரு?). அவன் கேட்ட விதமும் தொனியும் `ஏதோ, எனக்குப் பெயர் வைத்ததின் மூலம் எங்கப்பா பெரிய தவறு செய்துவிட்டார்` என்று சுட்டிக்காட்ட வந்தவன்போல் இருந்தது. என் வீட்டு வாசலில் நின்று என்னையே உருட்டிப் பார்க்கிறான்..இவனையெல்லாம்…! பதில் ஏதும் சொல்லாமல் கையை நீட்டினேன். ஒரு கவரை அலட்சியமாக அதில் திணித்தான். அப்போலோ ஹாஸ்பிடல் க்ரூப்-பிலிருந்து வந்திருக்கிறது. ஏதோ மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பேப்பர் போலும்.

இது எதற்கு என்னிடம் வந்திருக்கிறது? நமக்கெல்லாம் ஆண்டவன் அல்லவா இன்ஷூரன்ஸு? அவர் இப்படி கூரியர், கீரியர் அனுப்புகிற ஆசாமி அல்லவே? அவருடைய ஸ்டைலே வேறதானே? வழியே தனி வழியல்லவா! நான் சிந்தனைவண்டியை நகர்த்திக்கொண்டிருக்க, அவன் பொறுமையில்லாமல் `பேரச்சொல்லுங்க!` என்று சிடுசிடுத்தான். அந்தக் கவரில் சின்னப்பிரிண்ட்டில் கொசுமொய்த்ததுபோல் எழுதியிருந்ததைப் படித்தேன். `கேதார் நாத் பாண்டே` என்றது விலாசம். என்னது! நான் எப்போது கேதார் நாத் பாண்டே ஆனேன்? எனது கோபம் டெல்லி மதியத்தின் 45 டிகிரியை நேரடியாக வம்புக்கு இழுத்தது.

”இத எடுத்துக்குட்டு இங்க வந்து பெல்லடிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றேன் அதிசூடாக.

என் சீற்றத்தை எதிர்பார்க்காதவனாய் சற்றுத் தடுமாறி, `இது ஒங்களுக்குத்தான் சார்!` என்று மேலும் கடுப்பேத்தினான். ஒண்ணு-ரெண்டு பத்துக்குமேல கத்துக்காமலேயே வேலக்கு வந்துட்டானா?

தலைக்குமேல் காண்பித்துக்கேட்டேன் (நிலைப்படிமேலே “70-B” என்று என் வீட்டு எண் கம்பீரமாக நின்றது) : “இது என்ன நம்பர்-னு புரியுதா? “

அவன் செம்மறி ஆடுபோலே தலையாட்டி “70-B சார்!” என்றான்.

“இந்தக் கவர் 70-B -க்குத்தான் வந்திருக்கா?” முகத்தில் இடிக்காத குறையாக அவன் முன்னே நீட்டி நாகப்பாம்பாய்ச் சீறினேன்.

பதறிப்போய் வாங்கிப் பார்த்தான். “கேதார் நாத் பாண்டே, 71-B” … என்றிருந்ததை அப்போதுதான் பார்த்திருக்கிறான்.
“சாரி சார்!” என்று வழிந்துவிட்டு, ஒன்றும் ஆகாததுபோல திரும்பி, எதிர்த்த வீட்டு பெல்லை அமுக்கினான்.

நான் கோபம் தணியாமல், ”இந்தமாதிரி வீட்டு நம்பரைக்கூடப் பார்க்காமல் யார் வீட்டுக் கதவையாவது தட்டி, ஒருத்தரோட முக்கியமான டாக்குமெண்ட்டை வேறு ஒருத்தர்ட்ட கொடுத்துட்டுப் போறதுதான் கூரியர் டூட்டியா? இப்படியா வேல பாக்குறீங்க நீங்கல்லாம்?” என்று மீண்டும் குரலில் அனல் பறக்கவிட்டேன். அதற்குள் எதிர்த்தவீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவன் டென்ஷனாகி, குரலைத் தாழ்த்தி, ”தவறு செய்யறவந்தானே சார், மனுஷன்!” என்று தன் தத்துப்பித்துவத்தைக் கேஷுவலாக எடுத்துவிட்டான். முகபாவனையில் ‘சாரி! உள்ள போயிருங்க சார்.` என்பது போன்ற கெஞ்சல்!

சரி, ஒழி! என்று அவனை எதிர்த்தவீட்டுக்காரரிடம் ஒப்படைத்து உள்ளே வந்தேன். டேய், பசங்களா! இன்னிக்கு இது போதும்டா. வீட்ல கொஞ்சம் நிம்மதியா மனுஷன இருக்கவிடுங்க..ஒங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும். கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தேன். ஆறிப்போயிருந்த கொசுறுக் காஃபியை எடுத்து ஆயாசத்துடன் வாயில்
விட்டுக்கொண்டேன்.

**

நித்தம் நித்தம் ஆடுகின்ற ஆட்டம்

சொத்துபத்து செல்வ போகம்
தீராது கொண்டிருப்பார் மோகம்
பற்றிக்கொள்ளும் பேராசை
பழக்கப்பட்ட பழங்காலத்து ஓசை
ஓட்டுகிறார் இப்படியே காலத்தை
கேட்டிலார் விதியின் ஓலத்தை
விடாது தொடரும் வினை நித்தம்
முற்றிப்போய்விடும் பித்தம்
ஓய்ந்துவிடும் ஒருநாள் சத்தம்
எல்லாம் அப்பனே, உன் சித்தம்

**

விஷம் கொடுத்துத் தீர்த்துக்கட்ட முயற்சி

யதிகளின் ராஜா-3 (இறுதிப் பகுதி)

ஸ்ரீரங்கத்துக்கோவில் மற்றும் வைஷ்ணவ மடத்தின் நிர்வாகத்தைத் தன் சிஷ்யர்கள் துணையுடன் சிறப்பாக நிர்வகித்தார் ராமானுஜர். சான்றோர் மத்தியில், அவர் புகழ் மேலும் மேலும் பரவியது. ஆனால் அவரைப் பிடிக்காதவர்களும் இருக்கவே செய்தார்கள். அவர்களில் சிலர் அவரைக் கொலை செய்யவும் துணிந்தார்கள்.

மற்ற சன்னியாசிகளைப்போலவே, ஊர் வலம் சென்று பிச்சை எடுத்து உண்பது ராமானுஜரின் வழக்கம். சிஷ்யர்களும் கூடவே செல்வர். அவ்வாறு ஒரு நாள் ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டு நின்றார். அவரை வெறுத்த அந்த வீட்டுக்காரன், அவர் வரும் நேரமறிந்து உணவில் விஷம் கலந்து வைத்திருந்தான். ராமானுஜர் வாசலில் வந்து நின்றவுடன், தன் மனைவியை அனுப்பி, அந்த விஷ உணவைப் பிச்சையாக இட்டுவரச்சொல்லி , தான் உள்ளிருந்தான். மனைவிக்கு அதில் இஷ்டமில்லை. மாறாக இது பெரும் பாவமாயிற்றே என்று பயந்தாள். இருந்தும் கணவனின் கட்டளையை மீறமுடியாது வாசலுக்குப் பதட்டத்துடன் சென்றாள். வாசலில் நின்றிருந்த, தேஜஸான முகம் கொண்ட அந்த பால சன்னியாசியைப் பார்த்ததும் மனம் பதறியது; கண் கலங்கியது. கால்கள் தடுமாறின. எப்படியோ அருகில் சென்று, அவருடைய பாத்திரத்தில் பிச்சையைப் போட்டுவிட்டாள். ராமானுஜரை நேரிடையாக நோக்கும் தைரியம் இன்றி, தலைகுனிந்து, நடுங்கும் கைகளுடன், கைகூப்பினாள். ராமானுஜர் அந்தப் பெண்ணை ஆசீர்வதித்தார். பயமிகுதியால் தலைசுற்றக் கீழே விழ இருந்தவள், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.

தனக்குப் பிச்சையிட்ட அந்தப் பெண்ணின் நடுக்கத்தையும், தடுமாற்றத்தையும் கவனித்திருந்தார் ராமானுஜர். அந்தப் பெண் இட்ட பிச்சையைத் தனியாக வைக்குமாறு கூறினார். சிந்தனையுடன், சிஷ்யர்கள் உடன்வர மடத்துக்குத் திரும்பினார். சிஷ்யர்கள் அந்தப் பெண் போட்ட உணவைச் சோதித்ததில், அதில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. ராமானுஜரிடம் விஷயத்தைச் சொன்னார்கள். விஷம் வைத்தவனுக்காகவும், அவனது குடும்ப நலனுக்காகவும் நாராயணனிடம் பிரார்த்தனை செய்துகொண்டார். தன் சிஷ்யர்களிடம், பதற்றமடையவேண்டாம் என்றும், இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.எப்படியோ இந்த விஷயம் திருக்கோட்டியூர் நம்பியின் காதுகளுக்கு எட்டியது. அவர் பதறியடித்துக்கொண்டு தன் சிஷ்யர் ஒருவருடன், ஸ்ரீரங்கம் நோக்கி கால்நடையாக வந்துகொண்டிருந்தார். தன்னைப்பார்க்க திருக்கோட்டியூர் நம்பி வந்துகொண்டிருப்பதை அறிந்த ராமானுஜரும், தன் சிஷ்யர் கிடாம்பி ஆசான் என்கின்ற இளைஞருடன், நம்பியை வழியிலேயே சந்திக்க விரைந்தார்.

இருவரும் காவிரி ஆற்றுப்படுகையில் சந்தித்துக்கொண்டனர். கோடைகாலம் உச்சத்தில் இருந்தது. ஆற்றுமணல் நெருப்பாய்ப் பொரிந்தது. ராமானுஜரைத் தூரத்திலிருந்தே பார்த்த நம்பிக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. தன் குருவான நம்பியை நெருங்கியவுடன், ஆச்சாரியனின் பாதங்களில், அந்த சூடான மணலையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் ராமானுஜர். சம்பிரதாயப்படி, பெரியவர்களைக் காலில் விழுந்து வணங்கும்போது அவர்கள் `போதும்` எனச்சொல்லும் வரையிலும் சிஷ்யர்கள், சிறியவர்கள் தொடர்ந்து காலில் விழுந்து வணங்கிக்கொண்டிருப்பார்கள். அந்த வழிப்படி, ராமானுஜரும் தொடர்ந்து தரையில் விழுந்து வணங்கிக்கொண்டிருக்க, திருக்கோட்டியூர் நம்பி `போதும்` என, ஏனோ சொல்லவில்லை. நெருப்பாய்த் தகிக்கும் ஆற்றுமணலில் ராமானுஜர் மீண்டும் மீண்டும் விழுந்து வணங்க, அவரது செந்நிற மேனி, மேலும் சிவந்தது. அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜரின் சிஷ்யரான கிடாம்பி ஆசானுக்கு இது பொறுக்கவில்லை. கோபத்துடன் திருக்கோட்டியூர் நம்பியைப் பார்த்து, “ நன்றாயிருக்கிறது நீர் செய்வது! இவரை இந்த வெயிலிலேவைத்து இப்படியே கொன்றுவிடுவீர் போலிருக்கிறது. உமக்கு, அந்த விஷம் வைத்த பாவி எவ்வளவோ மேல்!’’ என்று படபடத்தார்.

திருக்கோட்டியூர் நம்பி உடனே `போதும்` என்றார் ராமானுஜரிடம். அவரை மனதார ஆசீர்வதித்தார். கிடாம்பி ஆசான் பக்கம் திரும்பி, ‘’என் ராமானுஜனை உண்மையான பக்தியுடன், நன்றாகக் கவனித்துக்கொள்பவர்கள் யாரிருக்கிறார்கள் என்று கவலையோடு இருந்தேன். இப்போது நீ இருக்கிறாய் எனக் கண்டுகொண்டேன். இனி என் கடைசி காலத்தில் நான் நிம்மதியாகக் கண்மூடலாம்!“ என்றார் நம்பி.

வியாசமுனிவரின் `பிரும்மசூத்திர`த்திற்கு சிறப்புமிகு விளக்கவுரை எழுதினார் ராமானுஜர். அதை அவர் சரஸ்வதி மடத்தில் அரங்கேற்றுகையில், தாயார் சரஸ்வதி தேவியே காட்சியளித்து அதனை `ஸ்ரீ பாஷ்யம்` என்று புகழ்ந்து அழைத்தார். அன்னை சரஸ்வதி தேவியே ராமானுஜரை `பாஷ்யகாரர்` என்றும் அழைத்து, அவருக்கு நீங்காத பெருமை சேர்த்தார்.

காவிரியின் ஆற்றுமணலில் ஒரு நாள், சிறுவர்கள், சிறுமிகள் கோவில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிறிய மரப்பாச்சி பொம்மையைப் பெருமாளாக பாவித்து, மண் கோவிலுக்குள் வைத்து வணங்கினர். சின்ன மரத்தட்டில் கொஞ்சம் மணலை வைத்து அதைக் குங்குமப்பிரசாதம் என போவோர் வருவோருக்கு வழங்க முயன்றனர். யாரும் அந்தக் குழந்தைகளை, அவர்களது சாமி விளையாட்டை நின்று பார்க்கவில்லை. பொருட்படுத்தவில்லை. அப்போது ராமானுஜர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். ஒரு 3-4 வயது மதிக்கத்தக்க குழந்தை அந்த மரத்தட்டை எடுத்துக்கொண்டு அவர்முன் ஓடிவந்து மழலை மாறாது சொன்னது: ”ப்ரசாதம்! பெருமாள் ப்ரசாதம்! வாங்கிக்குங்கோ!”

ராமானுஜர் குழந்தையின் கள்ளமற்ற மனதை, பக்தி உணர்வைப் புரிந்து கொண்டார். அதன் முன் குனிந்து, தன் இடதுகைமேல் வலதுகை வைத்து நீட்டினார். குழந்தையும் சிரித்துக்கொண்டே, அவர் கையில் தன் பிஞ்சு விரல்களால் கொஞ்சம் மணலை இட்டது. அதனை பக்தியுடன் `ஓம் நமோ நாராயணாய` என்று கூறியபடி ஏற்றுத் தன் நெற்றியில் குங்குமமாய் இட்டுக்கொண்டு நடந்தார் ராமானுஜர்.

`யதி` என்ற சொல்லுக்கு வீட்டைவிட்டு வெளியேறி, காவி தரித்து வாழும் சாமியார் என்று பொருளல்ல. தன் யோக அனுஷ்டானத்தினால், சாதனாக்களினால், சீரிய தவத்தினால், பரப்பிரும்மத்தை உணர்ந்தநிலையில் வாழும் முனிவர், ரிஷி என்று அர்த்தம். அத்தகைய `யதி`களின் ராஜா என்ற பொருள்பட, ராமானுஜர் `யதிராஜர்` என சாஸ்திரமறிந்தவர்களால் கொண்டாடப்பட்டார். இவருக்கு, எம்பெருமானார், உடையவர், பாஷ்யகாரர் என்கிற பெயர்களும் வழங்கிவந்தன.

கி.பி.1017 தமிழ் பிங்கள வருடத்தில் தோன்றிய ராமானுஜர், 120 வருடங்கள் வாழ்ந்து இந்து மத மறுமலர்ச்சிக்கு, ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய வளர்ச்சிக்கு வித்திட்ட மகானாகக் கருதப்படுகிறார். பௌத்தம், ஜைனம் போன்ற மதங்களாலும், இந்து மத துவேஷிகளாலும் தாக்கப்பட்டு இந்துமதம் பலவீனப்பட்டுக்கிடந்த 11-ஆம் நூற்றாண்டில், தன் சீரிய விஷ்ணுபக்தி, சாஸ்திர மேதமை, தலைமைப்பண்பு, அனைவரிடமும் அளவுகடந்த அன்பு என்கிற சிறப்புப் பண்புகளைத் துணையாகக்கொண்டு, இந்து மதத்தினர்க்கு இறை நம்பிக்கை ஊட்டினார். இந்து மதத்தின் வளர்ச்சிப்பாதையை சீர்ப்படுத்தி, புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றார் அவர். ராமானுஜரின் புகழ் வடநாட்டில் காஷ்மீரம் வரை பரவியிருந்தது. 14-ஆம் நூற்றாண்டில் காசியில் குரு ராமானந்தர், ராமானுஜரின் விசிஷ்ட்டாத்வைதக் கொள்கைகளைப் பின்பற்றி, ஜாதி, மத பேதமின்றி கபீர்தாசர், ரவிதாசர் போன்றோரைத் தன் சிஷ்யராகக்கொண்டு, வைஷ்ணவ நம்பிக்கைகள் பரவச்செய்தார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்மீதும் உயர்வு, தாழ்வு மனப்பான்மையின்றி கருணையுடன் பழகினார் ராமானுஜர். இதற்காக அவரது சமூகத்திலிருந்தே அவருக்கு மிகுந்த எதிர்ப்பு இருந்தது. அதனைப்பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. தாழ்த்தப்பட்டோரை `திருக்குலத்தார்` என அன்புடன் அழைத்து, ஸ்ரீமன் நாராயணன் எனும் முழுமுதற்கடவுளை வணங்கச் செய்தார். ஸ்ரீமன் நாராயணனின் முன் அனைவரும் சமமே என்றார். அவ்வாறே அனைவரையும் நடத்தவும் செய்தார். இந்துமதத்தின் வைணவ சம்பிரதாயத்தை விளக்கும் வகையில் 6 சிறப்பு வாய்ந்த அடிப்படை நூல்களை இயற்றினார் ராமானுஜர். அவை:

1) மஹாபுருஷ நிர்ணயம்: தாயார் மகாலக்ஷ்மியுடன் கூடிய பெருமாள் நாராயணன் தான் பரப்பிரும்ஹம் அல்லது பரம்பொருள் என நிர்ணயிக்கிறது இந்த நூல்.
2) கீதார்த்த சங்கிரகம்: பகவத் கீதைக்கு ராமானுஜரின் சிறப்புரை
3) வேதாந்த சங்கிரகம்: உபநிடதக் கருத்துக்களை விரிவாக விளக்கும் நூல்
4) சித்தித்ரயம்: விசிஷ்ட்டாத்துவைதக் கொள்கைகளை நிறுவும் நூல்.
5) ஆகம ப்ராமாண்யம்: இந்த நூல் `பாஞ்சராத்ர ஆகமங்களை` விளக்குவது .
6) நித்யக் கிரந்தங்கள்: அன்றாட வைஷ்ணவ சடங்குகள், பூஜை முறைகளை விளக்கும் நூல்

இவரது கடைசிகாலத்தில் ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் எழுப்பப்பட்ட இவரது விக்ரஹத்தில், தன் யோகசக்தி முழுதையும் இவர் இறக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் பரமபதம் எய்திய ராமானுஜருக்கு கோவிலில் தனி சன்னிதி ஒன்று உள்ளது. அதில் பத்மாசன நிலையில், அபூர்வமான மூலிகைத் தைலங்களால் பதப்படுத்தப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக இன்னும் இவரது திருமேனி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சன்னிதியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை, கற்பூர, குங்குமப்பூ காப்புகள் இதற்கு நிகழ்த்தப்படுகின்றன. சன்னிதியில் ராமானுஜருக்கு அபிஷேகம் கிடையாது. தீபாராதனை மட்டுமே உண்டு. அங்கே ராமானுஜர் இருப்பதாகக் கருதப்படுவதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில், அர்ச்சகர், பக்தர்கள், மெல்லிய சன்னமான குரலிலேயே பேசிக்கொள்வது வழக்கம்.

பிங்கள வருடத்தில் தோன்றிய ராமானுஜர், தமிழ் 60-வருடக் கணக்குப்படி இரண்டாவது முறையாக, 120 ஆண்டுகளுக்குப்பின் வரும் பிங்கள வருடத்திலேயே 1137-ல், பங்குனி உத்திர தினத்தன்று ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை அடைந்தார்.

**

நரகத்துக்குத்தான் போவாய் நீ !

யதிகளின் ராஜா -2 (தொடர்ச்சி)

சந்தோஷம் மனதில் பரவ, மெல்லக் காலடி எடுத்துவைத்து உள்ளே சென்றார். அவர் வருவதை கவனமாகப் பார்த்திருந்த திருக்கோட்டியூர் நம்பியின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பலமுறை வணங்கினார் ராமானுஜர்.

அவரை எழுந்திருக்கச் சொல்லி ஆசீர்வதித்தார் திருக்கோட்டியூர் நம்பி. வந்த காரியம் என்ன என்று வினவினார்.
தன் மனதில் வெகுநாட்களாகவே நாராயண மந்திரத்தின் அர்த்தத்தை அறிந்துகொள்ள ஆவல் இருந்ததாகவும், அதற்காகவே ஸ்வாமியிடம் வந்ததாகவும் மிகவும் பவ்யமாகச் சொன்னார். தனக்கு அதனை உபதேசித்தருளுமாறு பிரார்த்தித்து நின்றார் ராமானுஜர்.

ராமானுஜரின் வேண்டுதலுக்கு செவி மடுத்தார் திருக்கோட்டியூர் நம்பி.
அவருக்கு அந்த விசேஷ மந்திர அர்த்தத்தை உபதேசம் செய்தார். பரப்ரும்ஹமான (பரம்பொருளான) அந்த மஹாவிஷ்ணுவையே சதா பக்தியுடன் நினைந்துருகி, இந்த மந்திரத்தை சிரத்தையுடன் தொடர்ந்து சொல்லி தியானிப்பவர் வைகுண்டத்தை (மோட்சத்தை) அடைவது நிச்சயம் என்றார். இறுதியில் ஒரு அபாயகரமான எச்சரிக்கையையும் இணத்தார். `உனக்காக மட்டும், நீ வேண்டிக்கொண்டதால், இது தரப்பட்டுள்ளது. இதனை வேறு எவரிடமும் பகிர்ந்துகொண்டாயானால், நீ நரகத்துக்குத்தான் போவாய்!` என்பதே அது.
`ஆச்சார்ய ஆக்ஞைப்படியே அனைத்தும்` என்று சம்மதித்து, ஸ்வாமி நம்பியை மீண்டும் வணங்கி ஆசிபெற்று விடைபெற்றார் ராமானுஜர்.

வெளியே வந்தவர் எதிரே இருந்த திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணர் திருக்கோவிலுக்குள் நுழைந்தார். ஆனந்தமாய்ப் பெருமாளை வணங்கி மகிழ்ந்தார். கோவிலில் காணப்பட்ட படிகளில் ஏறி, கோபுரம் நிமிர்ந்து நின்ற முதல்தள மாடத்திற்குச் சென்றார். வெளியே பார்க்கலானார். எதிரே பெரிய தெரு. விவசாயிகள், வணிகர்கள், கூலி ஆட்கள், எளியோர்கள், செல்வந்தர்கள் எனப் பலவகைப்பட்ட மனிதர்கள். அன்றாட அல்லல்களில் ஆழ்ந்து அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜரின் மனதில் பெரும் கருணை பாலாய்ச் சுரந்தது. மானிடராய்ப் பிறந்தவருக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள், துக்கங்கள்.. ஜனனம், மரணம்..ஜனனம்…என்று அந்த விஷ வளையத்திலிருந்து விடுபடமுடியாமல், காலமெல்லாம் தவித்துக் கிடக்கிறார்களே? இவர்களுக்கு பகவத் விஷயத்தைப்பற்றி, பகவானின் திருவடியை நாடினால்தான் இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிற மனிதவாழ்க்கை ரகசியத்தை, உன்னதமான உண்மையை எடுத்துச் சொல்வோர் யாருமில்லையே? அப்படி ஒரு வழி இருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாதே? இவர்கள் எத்தனை காலம் காத்திருக்க நேரும்? எந்த ஜன்மத்தில், யாரிடம், என்ன உபதேசம் பெற்று உய்வார்கள்? ஜீவனாகிய சமுத்திரத்தைக் கடந்து கரையேறுவார்கள்? அதுவரை இப்படியே உழன்று, உழன்றுத் தவிக்கவேண்டியதுதானா என அவர் மனம் அரற்றியது.

அப்போது திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்ற நாராயண மந்திரத்தின் சக்தி அவரை மெல்ல வருடியது. நான்தான் இருக்கிறேனே என்றது ! அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த மனிதர் கூட்டத்தைக் கொஞ்சம் நிற்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார் ராமானுஜர். தான் கூறுவதைக் கவனமாக செவிமடுக்கச் சொனனார். கோவில் மாடத்தில் நின்றிருந்த அவரின் தலைக்குப் பின்னே காலைச்சூரியன் தகதகத்தது. ராமானுஜர் அப்போது ஒரு தேவதூதன் போல ஒன்றுமறியாப் பாமரர்களுக்கும், வைஷ்ணவ பக்தர்களுக்கும் ஒருசேரத் தோன்றினார். பிறப்பு இறப்பு என்று மாறி மாறி நிகழும் துன்பச்சுற்றிலிருந்தும், இடையே தொடரும் துன்பமயமான, அல்லல் மிகுந்த வாழ்க்கையிலிருந்தும் பரிபூரண விடுதலையை அந்த பரம்பொருள் ஒன்றே அருளமுடியும் என்றார். ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே புருஷோத்தமன். அவனே பரப்பிரும்மம். அந்த பரம்பொருளே கதி என மனதார நம்பி, எப்போதும் அன்போடு அவனை நாடி, அவனுடைய திருவடித்தாமரையை தியானித்து, நாராயண மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் சொல்லி வந்தால் உங்களுக்கெல்லாம் வைகுண்டம் என அழைக்கப்படும் பரம்பொருளின் திருவடி நிச்சயம் கிடைக்கும். அதுவே அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் உங்களையெல்லாம் விடுவித்துக் காக்கும் என்று எடுத்துரைத்தார். திருக்கோட்டியூர் நம்பியிடம் தான் சற்றுமுன் கற்ற புனித மந்திரமான `ஓம் நமோ நாராயணாய` என்கிற மந்திரத்தை, ஜாதி பேதமின்றி, உயர்வு, தாழ்வு பாராட்டாது, கூடி இருந்த அனைவருக்கும் அன்புடன் வழங்கினார். அந்த மந்திரத்தைத் தான் சொல்ல, அதனை அவர்களைத் திருப்பிச் சொல்ல வைத்தார் ராமானுஜர். அவர்களுக்கு இடப்பட்ட கடமை, தொழில், வாழ்வாதாரம் எதுவாயினும் அதனை முறையாகச் செய்துகொண்டு, நாராயணமந்திரத்தை மனதில் எப்போதும் நம்பிக்கையோடு ஜெபித்து வருமாறு வலியுறுத்தினார்; அதுவே இறுதியில் அவர்களை உய்விக்கும், கரைசேர்க்கும் என்று ஆசி கூறினார். கூடியிருந்தவர்கள் மிகுந்த பக்திப் பரவசமாகி, அவரை நோக்கிக் கைகூப்பி வணங்கினர். அவருடைய அனுமதியுடன் கலைந்து, தத்தம் வேலைகளைப் பார்க்க உற்சாகமாகக் கிளம்பினர்.

திருக்கோஷ்டியூர் கோவில் மாடமேறி ராமானுஜர் செய்த, குடியானவர், வணிகர், அந்தணர் என்கிற பாகுபாடற்ற எல்லோருக்குமான அந்த மந்திர உபதேசம் பற்றிய செய்தி, உடனே திருக்கோட்டியூர் நம்பியின் காதுகளுக்கு எட்டியது. கோபத்துடன் அலறிப்புடைத்துக்கொண்டு ராமானுஜரை நோக்கி வந்தார் அவர். சுற்றிலும் சிலர் பார்த்திருக்க, `ராமானுஜா! என்ன காரியம் செய்தாய்! இதைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால் நீ நரகத்துக்குத்தான் போவாய் என்று சொன்னேனே? மறந்துவிட்டாயா? என்னிடம் சத்தியம் செய்து கொடுத்தபின்னும் இப்படி ஏன் நடந்துகொண்டாய்? பதில் சொல்` என்று சீறினார் நம்பி.

ராமானுஜர் ஸ்வாமி நம்பியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். பணிவுடன் பதில் சொல்லலானார்: ”தங்கள் வாக்குப்படி இந்த மந்திரத்தை பக்தி சிரத்தையோடு சொல்பவர்கள், அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுபட்டு, வைகுண்டம் சென்றடைவார்கள் அல்லவா? ஒன்றுமே அறியாத இந்த அப்பாவி ஜனங்களுக்கு நல்வழிகாட்டுவோர் யாருமில்லையே? இவர்களுக்கு இந்த மந்திர உபதேசத்தை நாமே செய்தாலென்ன? இவர்களும் அதனை பக்தியுடன் சொல்லி வருவார்களேயானால், எல்லாக் கர்மவினைகளிலிருந்தும் அவர்கள் விடுபடுவார்கள். பரம்பொருளின் திருவடி அவர்களுக்கு நிச்சயம். ஆச்சார்யனின் வாக்குப் பொய்க்காதல்லவா? இவ்வாறான சிந்தனை என் மனதைத் தாக்கியது; அதனாலேயே வேறுவழியின்றி, அடியேன் அப்படி செய்ய நேரிட்டது“ என்றார் ராமானுஜர்.

`அவ்வளவு பெரியவனாகிவிட்டாயா நீ ராமானுஜா? குருவுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீறிய நீ, நரகத்துக்குத்தான் போவாய். நினைவில் கொள்!` என்று கொதித்தார் திருக்கோட்டியூர் நம்பி.

ராமானுஜர் கூப்பிய கையுடன் குருவுக்குமுன் தலைதாழ்த்தி நின்றார். மென்மையான குரலில் பதில் வந்தது: ”ஆகட்டும் ஸ்வாமி! தங்கள் வாக்குப்படி, இந்த மந்திரத்தைச் சொல்லித் தியானிக்கும் அனைவரும் வைகுண்டம் எனும் அந்த மோட்சத்தை அடையட்டும். அதற்குப்பதிலாக, அடியேன் மட்டும் நரகம் செல்வதாயின், அது எனக்குச் சம்மதமே. அதுவே என் பாக்யம்! தங்கள் ஆக்ஞைப்படியே நடக்கட்டும் ஸ்வாமி!“ என மெதுவாக, நிதானமாகச் சொன்ன ராமானுஜர், தன் ஆச்சாரியனின் பாதங்களில் விழுந்து வணங்கி அவருடைய ஆசியைக்கோரி நின்றார்.

அந்தக்கணத்தில் திருக்கோட்டியூர் நம்பியின் மனம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. தான் நெருப்பினால் சூழப்பட்டதுபோல் துடித்தார். தன் முன் எந்தக் கள்ளமும் கபடுமின்றி, நிர்மல்யமாய் நிற்கும் சிஷ்யன் ராமானுஜனைப் பார்த்து உடல் நடுங்கியது அவருக்கு. ராமானுஜரை நோக்கி, செய்வதறியாமல், தாங்கமுடியாமல் அரற்றினார் நம்பி: ”இத்தனை வேத சாஸ்திரம் படித்தும், இத்தனைக் காலம் ஓதியும் எனக்கு அந்த அகம்பாவம் இன்னும் போகவில்லையே! உன்னிடமோ அகத்தையே காணவில்லையே! மற்றவரெல்லாம் வைகுண்டம் செல்லவேண்டும். பெருமாளின் திருவடியைச் சேரவேண்டும் என ஏங்கும் ஒருவனை இன்றுதான் முதன்முதலாய்க் கண்டேன். என் அகக்கண்ணைத் திறந்துவிட்டாய்….ஆ! உன்னையா சிஷ்யன் என்றேன்.? நீர் அல்லவோ எம்பெருமான்!” என்று உணர்ச்சிவசப்பட்டார்; ராமானுஜரை ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார் நம்பி.

குருவின் இந்தச் செய்கையால், ராமானுஜரும் மெய்சிலித்தார். `ஸ்வாமி! தங்களுக்குக் கொடுத்த வாக்கை மீற நேர்ந்த அடியேனை மன்னித்து ஆசீர்வதிக்கவேண்டும்` எனப் பிரார்த்தித்தார். ராமானுஜரை ஆசீர்வதித்த திருக்கோட்டியூர் நம்பி, பரவசத்துடன் அவரைப் பார்த்து நின்றார். சுற்றிக்கூடியிருந்த அக்ரஹாரத்து அந்தணரும், ஊர்க்காரர்களும் கண்முன்னே இந்த அதிசய நிகழ்ச்சியைக்கண்டனர். இருவரையும் பார்த்துக் கைகூப்பி வணங்கினர். திருக்கோட்டியூர் நம்பியிடம் பிரியா விடை பெற்று ஸ்ரீரங்கம் திரும்பினார் ராமானுஜர். (தொடரும்)

Sri Ramanujar யதிகளின் ராஜா ! – 1

தம் யோகசக்தியினால், நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களை நம்மாழ்வார் அருளுமாறு வேண்டிப் பெற்றார் நாதமுனிகள். பிறகு அவரே தன் பிள்ளைகளைக்கொண்டு இந்தப் பாசுரங்களை முறையாக இசைப்படுத்தி, நாடெங்கும் புகழ்பெறப் பரப்பினார். நாதமுனிகளின் பேரன் ஆளவந்தார் எனப்படுபவர். யமுனைத்துறைவன் என்றும் பேருண்டு இவருக்கு. வேத சாஸ்திரங்களில் திளைத்து திருவரங்கப்பெருமானுக்கு பக்திக்கைங்கர்யம் செய்துவந்தார். தர்க்கசாஸ்திர முறைகளிலும் தன்னிகரற்று விளங்கினார் ஆளவந்தார்.

Sri Ramanujacharya

பால்ய வயதில், ராமானுஜர் அப்போது காஞ்சிபுரத்தில் வரதராஜப்பெருமாளுக்குத் திருக்காரியங்கள் செய்துவந்த திருக்கச்சிநம்பி என்பவரை குருவாகக்கொண்டு வேத, சாஸ்திரங்கள், சம்ப்ரதாய முறைக் கல்வி ஆகியவற்றைப் பயின்று வந்தார். அந்த வயதிலேயே ராமானுஜரிடம் காணப்பட்ட, ஒரு ரிஷிக்கே உரித்தான தேஜஸ் மிகுந்த தோற்றம், மேதமை ஆகியவை வேதசாஸ்திரம் படித்தவர்களை வெகுவாக ஈர்த்தது. அவரைப் பார்க்க நேர்ந்த பாமரர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவரது புகழ் மெல்ல, மெல்ல வாய்வழி வார்த்தையாய் பரவ ஆரம்பித்திருந்தது. தனக்குப் பின் வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையை எடுத்து வளர்க்கும் தகுதி வாய்ந்தவர் ராமானுஜரே எனக் கண்டுகொண்டார் ஆளவந்தார். யாருக்கும் தெரியாமலே காஞ்சிபுரம் சென்று, அங்கு இளைஞனாக இருந்தும் வேதசாஸ்திரங்களில் பக்திசிரத்தையுடனும், ஆத்மார்த்தவாகவும் ஈடுபட்டிருக்கும், ராமானுஜரை ரகசியமாகக் கண்டு மகிழ்ந்தார் அவர். பின்னர் காதோடு காதுவைத்தாற்போல் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

தன் அந்திம காலத்தில் நோயுற்றிருந்தார் ஆளவந்தார். தன் காலம் நெருங்கிவிட்டது என்றறிந்த அவர், ராமானுஜரைத் தன்னை வந்து சந்திக்குமாறு தன் சிஷ்யர் பெரிய நம்பி மூலம் செய்தி அனுப்பினார். ராமானுஜரும் ஆளவந்தாரின் சாஸ்திரப் புலமை, அதீத விஷ்ணு பக்தி பற்றி நன்கு அறிந்து, அவர்மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரையே தன் மானசீகக் குருவாகக்கொண்டு வணங்கி வந்த அவர், என்று நாம் ஸ்ரீரங்கம் சென்று இந்த ஆச்சாரியனை சந்திப்போம் என மனதில் ஏக்கம் கொண்டிருந்தார். ஆளவந்தாரின் சீடரே வந்து தன்னை அழைக்கவே, உடனே அவருடன் கிளம்பி, நடந்து ஸ்ரீரங்கம் சென்றடைந்தார். ஆனால் ஆளவந்தாரைத் தரிசிக்கும், ஆசிபெற்று மகிழும் பாக்யம் ராமானுஜருக்குக் கிட்டவில்லை. ஏனெனில், அன்று காலையில்தான் உடல் நலமில்லாதிருந்த ஸ்வாமி ஆளவந்தார் பரமபதம் எய்தியிருந்தார்.

ராமானுஜர் எத்தகைய வேதவித்து என்பதுபற்றி, அவருடைய யோக்யதாம்சங்கள் பற்றித் தன் மற்ற சிஷ்யர்களுடன் தன் கடைசிக்காலத்தில் பேசியிருந்தார் ஆளவந்தார். ஆதலால் ராமானுஜர் பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருந்த சிஷ்யர்கள், தங்கள் ஆச்சாரியர் காலமான அந்த துக்கமான தருணத்திலும், அவரால் அழைக்கப்பட்டிருந்த இளம் ராமானுஜரை ஆர்வத்துடன் கவனித்தனர். தன் மானசீகக்குருவை நேரில்கண்டு, ஆசி வாங்கமுடியாத துர்பாக்யத்தை எண்ணிக் கண்கலங்கியவாறு ஆளவந்தாரின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்றார் ராமானுஜர். அப்போது அவருடைய கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. ஆளவந்தாரின் வலது கையில் மற்ற விரல்கள் நீண்டிருக்க, மூன்று விரல்கள் மட்டும் குறிப்பாக மடங்கி இருந்தன. துணுக்குற்றார் ராமானுஜர். இவை தனக்கு ஏதோ சமிக்ஞை செய்கின்றனவா என மனக்கிலேசமுற்றார். கிடத்தப்பட்டிருந்த ஆளவந்தாரின் திருவடிகள் இருக்கும் பகுதியில் சென்றமர்ந்தார். தன் ஆச்சார்யனை வணங்கிக் கண்மூடி, தியானம் செய்தார். தனக்கு ஏதாகிலும் செய்தி அல்லது உத்தரவு இருப்பின் அதைத் தெளிவுபடுத்தி அருளுமாறு மனதுக்குள் மன்றாடினார் ராமானுஜர்.

சிறிது நேரத்தில், அவர் மனதில் சாந்தம் நிலவியது. ஒன்றன் பின் ஒன்றாக மூன்று விஷயங்கள் தோன்றின. இந்த மூன்றும் தன் மானசீககுரு தனக்கிடும் கட்டளைகள்- இவற்றை நான் நிறைவேற்றியாக வேண்டும் என உணர்ந்தார். அவற்றை மெல்ல வாய்விட்டுச் சொன்னார் ராமானுஜர்: “ 1) வியாச முனிவர் அருளிய `ப்ரும்ம சூத்திர`த்துக்கு உரை எழுதுவேன் 2) வியாசர், பராசர பட்டர் ஆகிய ரிஷிகளின் பெயர் புகழுற நிலைக்கும்படிச் செய்யப் பாடுபடுவேன் 3) நம்மாழ்வாரும் ஏனைய ஆழ்வார்களும் அருளிய 4000 திவ்யப்பிரபந்தங்களின் வழிப்படி `விசிஷ்டாத்வைதம்` எனும் தத்துவத்தை நிறுவுவேன்” என்றார். இவற்றை அவர் சொல்கையில் ஆளவந்தார் ஸ்வாமியின் மூடியிருந்த விரல்கள் ஒவ்வொன்றாக இயல்பு நிலைக்கு நீண்டன. இதனை நேரில் கண்ட ஆளவந்தாரின் சிஷ்யர்களும், கூடியிருந்த வைஷ்ணவப் பெரியோர்களும் அதிசயித்தனர்; ராமானுஜரே ஸ்ரீவைஷ்ணவப் பரம்பரையின் அடுத்த ஆச்சாரியர் என்பது அவர்கள் மனதில் சந்தேகமறத் தெளிவாயிற்று.

ஆளவந்தாரின் அந்திமச்சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ஸ்ரீரங்கநாதனையும் சேவிக்காமல், காஞ்சீபுரம் திரும்பினார் ராமானுஜர். ஆளவந்தாருக்குப்பின் ஸ்ரீரங்கத்தின் வைஷ்ணவ மடம் தலைமையின்றித் தவித்தது. பெரியநம்பியும் ஏனைய சிஷ்யர்களும், ஸ்ரீரங்கத்துக்கு வருமாறு ராமானுஜரை அழைத்தார்கள். அவரும் கோரிக்கைக்கு உடன்பட்டு, ஸ்ரீரங்கம் சென்றடைந்தார். ஸ்ரீரங்கத்துத்துக் கோவில் வழிபாட்டு முறைகள் ஒரு நேர், சீரின்றி இருப்பதைக்கண்டார். அவற்றை, கோவிலைச் சார்ந்த அந்தணர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஒழுங்குபடுத்தினார். இன்றும் ஸ்ரீரங்கத்துக் கோவிலில் ராமானுஜர் காட்டிய கோயிலொழுகு முறைப்படிதான் உத்சவம், திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல், பூஜை புனஸ்காரங்கள் என அனைத்தும் சீராக நடைபெற்று வருகின்றன .

விஷ்ணுபக்தியில் திளைத்திருந்தும், ராமானுஜருக்கு அஷ்டாட்சரமான (எட்டெழுத்து மந்திரமான) நாராயண மந்திரத்தின் பொருளை ஒரு சிறந்த குருவின் ஆசியுடன், அவர் வாயிலாகத் தெரிந்துகொள்ள ஆவல் அதிகமானது. அதற்குத் தகுதியான குரு ஒருவர் திருக்கோஷ்டியூரில் வசிக்கிறார் என்றும், அவரே வேதமந்திர நுணுக்கங்களில் விற்பன்னர் எனவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரைச் சந்திக்க கால்நடையாகத் திருக்கோஷ்டியூர் சென்றார் ராமானுஜர். இந்த மந்திரப்பொருளின் பொருளை உள்வாங்கிக்கொள்ள ராமானுஜர் யோக்யதையானவர்தானா என சந்தேகப்பட்டவர்போல் இருந்தார் திருக்கோட்டியூர் நம்பி என்கிற அந்த வயதான ஆச்சார்யன். திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு எதிரே விரிந்த அக்ரஹாரத் தெருவில், திருக்கோட்டியூர் நம்பியின் வீடு இருந்தது. அங்கு சென்று வாசற்கதவை பவ்யமாகத்தட்டினார் ராமானுஜர்.

`யாரது?` என்கிற குரல் உள்ளேயிருந்து மெல்லக்கேட்டது.

`ராமானுஜன். ஸ்வாமியை தரிசித்துவிட்டுப் போகலாம் என வந்திருக்கிறேன்` என்றார் ராமானுஜர்.

`போய் இன்னொருமுறை வா!` என்று பதில் வந்தது உள்ளிருந்து.

திரும்பி, ஸ்ரீரங்கம் சென்றார் ராமானுஜர். இவ்வாறு ஒருமுறை, இருமுறை என்றல்ல – 17 தடவை நடந்தே ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பியை சந்திக்க முயன்றார் ராமானுஜர். பலனில்லை. ஆச்சாரிய அனுமதி கிடைத்தபாடில்லை.

தனக்கு மந்திர உட்பொருளை அறியும் யோக்யதை இல்லையோ என்று மாய்ந்துபோனார் ராமானுஜர். இருந்தும், சில கால இடைவேளைக்குப்பின், 18-ஆவது முறையாகக் கால்நடையாகத் திருக்கோஷ்டியூர் சென்றடைந்தார். ஆச்சாரியன் திருக்கோட்டியூர் நம்பியின் வாசற்கதவை மிகுந்த மரியாதையுடன், எதிர்பார்ப்புடன் மெல்லத் தட்டினார்.

`யாரது வாசலில்?`

`அடியேன்.. அடியேன் ராமானுஜன் ….ஸ்வாமியைத் தரிசிக்க…` தயங்கியவாறு ஆரம்பித்தார் ராமானுஜர்.

`உள்ளே வா!` என்று உத்தரவு வந்தது….(தொடரும்)

வடக்கே போகும் ரயில் – 3

(தொடர்ச்சி – இறுதிப் பகுதி)

… மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றுகையில் சாலை ஓரத்தில், ப்ராஜக்ட் இடத்தின் நடுவில் வளர்ந்திருக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். நன்கு வளர்ந்து நிற்கும் மரங்களை வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் மீண்டும் நடும் `டெக்னிக்` பற்றிய பேச்சு வந்தது. 1995-லேயே தமிழ்நாட்டில் இதனை செய்திருக்கிறார்கள் என்றார். ஒரு ப்ராஜக்ட்டுக்காக பெரிய மரங்களை ஒரு இடத்திலிருந்து அப்புறப்படுத்தி மீண்டும் வேறு இடத்தில் நட்டிருந்தார்கள். இரண்டு மூன்று வருடங்களில் அந்தப் புதிய இடத்தில், இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் வளர்ந்து தழைத்திருந்ததைப் பார்க்க எங்களைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் அழைத்திருந்தார்கள். போய்ப்பார்த்தோம். மரங்கள் மீண்டும் மண்பிடித்து வளர்ந்திருந்தவிதம் அந்த professional job-ஐ மிக நன்றாகச் செய்திருந்தார்கள் என்று காண்பித்தது என்றார். ஜப்பானில் மரங்களை அகற்றி மீள்-நடுதல் (re-planting of trees), techniques in growing trees போன்ற விஷயங்களை நானறிந்தவகையில், லேசாக அவரிடம் பகிர்ந்துகொண்டேன். இந்தியாவின் பல இடங்களில் 20-30 வருடம் வளர்ந்த ஜாதி மரங்களையும் நாங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி re-planting செய்துள்ளோம். என்றார். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு குறித்து நினைவு கூர்ந்தார்.

”ஒருமுறை ஒரு on-going project-க்காக அந்த இடம் சுத்தம் செய்யபட்டு சமநிலைக்கு கொண்டுவரப்படவேண்டியிருந்தது. புதர்கள், சிறு செடிகளோடு அங்கு வளர்ந்திருந்த அந்த மூன்று இளம் மரங்களையும், வெட்டி அகற்ற முடிவு செய்திருந்தோம். வேறு வழியில்லை. எங்களின் முடிவு தெரிந்தவுடன், பக்கத்துக் கிராம மக்கள் உடனே எதிர்ப்புத் தெரிவிக்க ஓடிவந்தார்கள். அந்த மரங்களை `வெட்டவிட மாட்டோம்` என்று கூச்சலிட்டார்கள். அதற்கு வலுவான காரணமும் அவர்களிடம் இருந்தது. அந்த மரங்கள் ஒரு விசேஷக் கலவையாக ஒன்றோடு ஒன்று பின்னி வளர்ந்திருந்தன. அவை ஒரு அரச மரம், ஒரு வேப்பமரம், ஒரு வில்வமரம்! என்ன ஒரு rare combination! அந்த ஊர்க்காரர்கள் `இதுல மட்டும் ஒங்க கைய வச்சீங்க, நீங்க தொலைஞ்சீங்க! நாங்க கும்பிட்ர சாமி இது, ஜாக்ரதை!` என்று மிரட்டினார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மாவின் காட்சிப் படிமமாக அந்த மரங்களை அவர்கள் கருதினார்கள். நாங்கள் அவர்களை ஒருவழியாக அமைதிப்படுத்தி `நாளை முடிவு சொல்கிறோம்` என்று அனுப்பிவைத்தோம். வனத்துறை அதிகாரிகள் மீட்டிங் நடந்தது. இன்னொரு பாதுகாப்பான இடத்தை சற்றுத்தள்ளிக் கண்டறிந்தோம். தலைமையகத்திடம் பேசி அனுமதி வாங்கினோம். இந்த மூன்று மரங்களையும் சற்றுத் தொலைவில் கிராம மக்களின் ஊர் எல்லைக்குள், பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்சென்று மீள்-நடுவது (safe re-planting of the trees) என்பது முடிவானது. அடுத்த நாள் வந்த கிராமத்தாரிடம் எங்களின் புது முடிவைச் சொன்னோம். அவர்களது மத உணர்வுக்கு எதிராக நாங்கள் செல்லமாட்டோம். மரங்களை வெட்ட மாட்டோம். உயிரோடு அகற்றி திருப்பி நடுவோம் என்றோம். அவர்கள் நம்பவில்லை. “இப்படி வளர்ந்த மரத்தைப் பிடுங்கி திருப்பி நடுவதாவது? அது பிழைக்குமா? கதை விடுகிறீர்களா?“ என்றார்கள். முன்பு நாங்கள் செய்த பணியின் படங்களைக் காண்பித்தோம். கிராமப்பெரியவர்களைத் தேற்றி, ஒருவழியாக நம்பும்படி செய்தோம்.”

”மூன்று மரங்களைச் சுற்றியும் அளவெடுத்து வட்டம்போட்டு, மெதுவாகத் தோண்ட ஆரம்பித்தோம். ஆணிவேர், கிளைவேர்கள் வெட்டுப்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. மெல்ல, அடியிலிருந்து மண்ணை அகற்றி தனியாக எடுத்துவைத்துக்கொண்டோம். ஒரு குறிப்பிட்ட ஆழம் தோண்டப்பட்டவுடன் நிபுணர்கள் பார்வையிட்டார்கள். ஆலோசனை சொன்னார்கள். சல்லிவேர், கிளைவேர்களின் நுனியில் மரங்கள் விழுந்துவிடும் நிலையில் ஆடின. அவைகள் சாய்ந்துவிடாமல் பக்கத்தில் இழுத்துக் கட்டினோம். இரண்டு நாட்களுக்கு அவைகளை அந்த நிலையிலேயே விட்டுவைத்தோம். திடீரென்று அவசர அவசரமாகப் பிடுங்கிப் புது இடத்தில் கொண்டுபோய் நட்டால், அதிர்ச்சியில் அந்த மரங்கள் உயிரிழக்கக்கூடும். ஆதலால், தாங்கள் `இந்த இடத்திலிருந்து அகற்றப்படப்போகிறோம்.. ஏதோ நடக்கிறது` என்று அவை புரிந்துகொள்ளும் உணர்வுநிலைக்கு அவைகளைத் தயார் செய்யத்தான் இந்த இரண்டு நாள் அவகாசம். இந்த நிலையில், புதிய இடத்தில் இதே அளவுக்குக் குழிவெட்டப்பட்டு, இங்கிருந்த அகற்றப்பட்ட `மரங்களின் பிறந்தமண்` புதுக்குழியில் இடப்பட்டுத் தயாராய்க் கலந்துவைக்கப்பட்டது. மூன்றாவது நாள் இந்த மரங்களின் மிச்சமிருக்கும் வேர் இணைப்புகளை மெதுவாகத் துண்டித்து மேலே தூக்கி, அதற்கான வண்டியில் மூன்று மரங்களையும் சாய்த்துவைத்து இழுத்துச்சென்றபோது, கூடவே கிராமத்தாரின் ஊர்வலமும் வந்தது. பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டு, கோஷமிட்டுக்கொண்டு கிராம மக்கள், புதிய இடத்தில் மூன்றுமரங்களும் அதிஜாக்ரதையாக ஊன்றப்பட்டு, தண்ணீர் ஊற்றப்படுவதைப் பார்வையிட்டார்கள். இரண்டு மாதங்கள் வனத்துறை நிபுணர்கள் மேலிட உத்தரவின்படி, கவனமாக அவற்றின் வளர்ச்சியைக் கண்காணித்தார்கள். மரங்களுக்குப் புதிய மண், புதிய சூழல் பழகிப்போனது. புதிய வேர்கள் உண்டாயின. மரங்களை மண் நன்றாகப் பிடித்துக்கொண்ட பாதுகாப்பு உணர்வில், பளபளக்கும் இலைக்கொழுந்துகள், மூன்று மரங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக முகிழ்க்க ஆரம்பித்தன. கிராமத்து மக்களுக்கும் போன மூச்சு திரும்பி வந்தது! இப்போது அந்த இடத்தில் அந்த மூன்று மரங்களும் நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கின்றன” என்றார்.

மதியம் குறிப்பிட்ட நேரத்தில் ராஜதானி எக்ஸ்பிரஸ், நாக்பூர் ஸ்டேஷனில் வந்து நின்றது. நமது வனத்துறை நண்பர் சூட்கேஸ், பைகளுடன் இறங்கினார். கையில் சிறுபையில் ஒரு சிறு வாழைக்கன்று போல் ஒன்று சணல் கயிறினால் கட்டப்பட்டிருந்தது. ”இது என்ன? ஏதேனும் விசேஷமானதா” என்று கேட்டேன். அதற்கு அவர், “பெங்களூரில் கிடைத்தது. சின்னஞ்சிறு பழமாய் இந்த வகை வாழைமரத்தில் வரும். மிகவும் இனிப்பான வகை. மத்தியப்பிரதேசத்தில் கிடைப்பதில்லை. அதனால் கன்று வாங்கி எடுத்துச்செல்கிறேன். என்வீட்டுப் பின்புறத்தோட்டத்தில் நடுவதற்கு” என்றார் ஆர்வமாக.

“வாழ்த்துக்களும் நன்றியும் மிஸ்டர் காஜி(Qazi)! உங்களோடு செலவிட்ட பயணநேரம் மிகவும் அருமையானது” என்று கைகுலுக்கினேன். நானும், கூட வந்த இந்தியராணுவ நண்பரும் அவருடன் வாசல்வரை சென்று வழியனுப்பினோம்.

அவர் இறங்கிப்போய்விட்டாலென்ன? இன்னும் ஏகப்பட்ட கதைகளை தன்னகத்தே அடக்கிக்கொண்டு வடக்கு நோக்கி விரைந்துகொண்டிருந்தது ராஜதானி எக்ஸ்பிரஸ்.
**