இந்தியாவின் கிரிக்கெட் தொடர் வெற்றி – ச்சலோ டெல்லி !

விராட் கோஹ்லிக்கு சுக்கிர திசை நடந்துகொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் ஏதுமில்லை (ஜோஸ்ய விஷயத்தில் ஞானசூன்யமானவர்கள் இதை அலட்சியம் செய்க!). ஸ்ரீலங்காவில் கிரிக்கெட் தொடரை சில மாதங்களுக்கு முன் போராடி வென்றது அவரது தலைமையில் அங்கு சென்ற இந்திய அணி. இப்போது இந்தியாவில் விளையாடிவரும் தென்னாப்பிரிக்க அணி கடந்த 9 வருடங்களாக வெளிநாட்டில் எந்த டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை எனும் பெருமைகொண்டது. 15 தொடர்களை வரிசையாக அந்நிய மண்ணில் வென்ற உலகின் நம்பர் 1 கிரிக்கெட் அணி. ஒருநாள் தொடரிலும், டி-20 தொடரிலும் சமீபத்தில் இந்தியாவை ஒரு சாத்து சாத்தி வென்றவர்கள். அத்தகைய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்துவதென்பது எளிதான காரியமில்லை. பெரும் உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரில் ஆடிவரும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பாராட்டுக்குரியது.

மொஹாலியிலும், நாக்பூரிலும் பிட்ச் ஸ்பின்னுக்குத் துணைபோனதுதான் இந்திய வெற்றிக்குக் காரணம் என்பார்கள் எதற்கெடுத்தாலும் புலம்புபவர்கள். சிலரிருக்கும் மனநிலையோ வேறானது. அவர்களால் இந்தியா எப்படி விளையாடி ஜெயித்தாலும், இந்திய வெற்றியை ஜீரணிக்க இயலாது. குறைசொல்லிப் பழக்கமே தவிர, பாராட்டிப் பழக்கமில்லை. தொலையட்டும். எந்த ஒரு கிரிக்கெட் தேசமும் தன் அணியின் வலிமையை கருத்தில்கொண்டு, அதற்குச் சாதகமாகத்தான் பிட்ச்சைத் தயார் செய்யும். இதில் தவறேதுமில்லை. சில மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும், முறையே அவர்களது ஹோம் பிட்ச்சுகளில் தோனியின் தலைமையிலான இந்திய அணியை அடித்துத் துவம்சம் செய்தார்கள்.தோய்த்துத் தொங்கவிட்டார்கள். அப்போது இந்திய பத்திரிக்கைக்காரர்களோ,டி.வி.சேனல்களோ, ஏன் இந்திய அணியினரோகூட பிட்ச்கள் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பௌலர்களுக்கு சாதகமானவை, அதனால்தான் அந்த அணிகள் வென்றன என்று கூறவில்லை. ஒரு தரமான சர்வதேச அணி என்பது எந்த நிலையிலும், எந்த நாட்டின் மைதானத்திலும், நிலைமைக்கேற்பத் தங்களது ஆட்டத்தைச் சரிசெய்து விளையாடும் திறமை வாய்ந்த வீரர்களைப் பெற்றிருக்கவேண்டும். திறமையாக, முனைப்புடன் விளையாடினால் வெற்றி அல்லது டிரா. தடுமாறித் தடவினால், தோல்வி அல்லது படுதோல்வி –இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளவேண்டியதுதான். இந்தியா உட்பட எந்த சர்வதேச அணிக்கும் பொருந்தும் இது.

இந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதன்மையான பௌலராகத் திகழ்கிறார். 15 முறை, 5-விக்கெட்டுகளை ஒரு இன்னிங்க்ஸில் வீழ்த்துவதென்பது ஸ்பின்–கலையில் தேர்ச்சிபெற்ற பௌலர் ஒருவரால் மட்டுமே முடியும். அஷ்வின் தேர்ச்சிபெற்று வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. கடந்த மாதங்களில் அவரது கடும் உழைப்பு இந்தியாவின் மகத்தான வெற்றியில்போய் முடிந்திருக்கிறது. இதனை நன்றாக உணர்ந்தே, விராட் கோஹ்லி அஷ்வினைப் புகழ்ந்திருக்கிறார். அஷ்வினுடன் சேர்ந்து சிறப்பாகப் பந்துவீசிவரும் ஜடேஜா, மிஷ்ரா ஆகியோரது பங்களிப்பும் சிறப்பானது.

வெற்றிக்கு இடையிலேயும் இந்திய அணி கவலைப்படவேண்டிய நிலையில் இருப்பது, குழப்பிவரும் அவர்காளில் சிலரின் பேட்டிங்கினால்தான். முரளி விஜய், புஜாரா – இருவர் மட்டுமே திறமைகாட்டி, முனைப்புடன் விளையாடுகிறார்கள். ஷிகர் தவண்(Shikar Dhawan) கொஞ்சம் பரவாயில்லை. மற்றவர்கள் இடைவிடாது தடவிவருவது அணிக்கு நல்லதல்ல. வெளிநாடுகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் நம்பகமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்–ஆன அஜின்க்யா ரஹானே இந்தத் தொடரில் இதுவரை நிலைத்து ஆடமுடியாமல்போனது ஏமாற்றமே. கோஹ்லியும், ரோஹித் ஷர்மாவும் ஏதோ மைதானத்துக்குள் வந்துபோகவேண்டுமே என வருவது போல் இருக்கிறது. வருகிறார்கள். போகிறார்கள்.

அடுத்த மேட்ச் நடக்கவிருப்பது டெல்லியில் – டிசம்பரின் விறைக்கவைக்கும் குளிரில். தொடரை வென்றுவிட்டோம் என்கிற தலைக்கனத்தோடு அந்த மைதானத்தில் இறங்கினால், இந்தியர்களுக்குச் செம்மையான அடிவிழ வாய்ப்பிருக்கிறது. 9 வருஷத்தில் முதன்முறையாக வெளிநாட்டுத்தொடரை இழந்துவிட்டோமே என்கிற பதற்றத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கர்கள், டெல்லியில் இந்தியர்களின் வருகைக்காகத் தயாராக இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சுக்கு இங்கே வேலையிருக்கிறது. டெல்லியின் பிட்ச் வேறு, டெல்லி சொல்லப்போகும் கதையும் வேறாக இருக்கலாம்.

**

தனிமை

நீலவானின் வெண்மேகங்கள் தங்கள்
கோலத்தைக் காட்டுகின்றன ரகசியமாய்
மெல்லிய மாலையின் குளிர் காற்று
அசைத்துப் பார்க்கிறது குழந்தையைப்போல
கிளையில் அமர்ந்திருக்கும் பறவையின் அழகு
அலையெழுப்பப் பார்க்கிறது மனதில்
எங்கிருந்தோ எழும் தேவகானம்
ஏகாந்தத்தைக் கலைக்க எத்தனிக்கிறது
குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிறது
தனிமை

-ஏகாந்தன்
**
(`வார்ப்பு`- கவிதைக்கான இணைய இதழில் வெளிவந்த கவிதை. நன்றி: வார்ப்பு)

பித்தன் மகனுக்குப் பிடித்த பித்துக்குளி – 2

தொடர்ச்சி..

70-வருட பக்தி-இசைவாழ்வில் ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார் பித்துக்குளி முருகதாஸ். 30 கேசட்டுகள் வெளிவந்துள்ளன. முருகன்மீதுதான் பெரும்பாலும், எனினும் அம்பிகையின், கண்ணனின், தன் குருவின் புகழ் பாடும்பாடல்களையும் எழுதி இசை அமைத்துள்ளார். `அலைபாயுதே கண்ணா`, `ஆடாது அசங்காது வா கண்ணா!` ஆகிய பிரபலமான கண்ணன் பாடல்களை, வழக்கமாகப் பாடும் ராகத்திலிருந்து விலகி, வித்தியாசமாக மெட்டமைத்துப் பாடி அசத்தியிருக்கிறார் இவர். `கண்ணா` என்பது நீங்களும் நானும் சொல்லும்போது ஒரு சொல் மட்டுமே. `கண்ணா` என்கிற சப்தம் இவர் வாயிலிருந்து வந்தால், அது தேவகானம். (கேட்கலாம் யூ-ட்யூபில்)

முருக பக்தரான சாண்டோ சின்னப்பத்தேவர் தான் எடுத்த `தெய்வம்` என்கிற பக்திப்படத்தில் பித்துக்குளி முருகதாஸை, முருகதாஸாகவே வரச்செய்து ஒரு பாடலைப் பாடவும் வைத்தார். புகழ்பெற்ற அந்தப் பாடல்: `நாடறியும் நூறு மலை..நானறிவேன் சுவாமிமலை`.

மலேஷியா, நேபாளம், மொரீஷியஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் முருகதாஸ் நடத்திய இசைக்கச்சேரிகள், இந்துமத பக்திக்கலாச்சாரம் ஆங்காங்கே வேரூன்ற காரணமாய் அமைந்தன. இந்திய வம்சாவளி மக்களை மீண்டும் தங்கள் தாய்நாட்டோடு தொடர்புபடுத்தின. மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, மலேஷியா போன்ற நாடுகளுக்கு 40-தடவைகளுக்கு மேல் அழைக்கப்பட்டிருக்கிறார். இவரது பக்திப்பாடல் நிகழ்ச்சிகள், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு, வரவேற்புடன் நடத்தப்பட்டுள்ளன. நேபாள ராணி, முருகதாஸின் ஆழ்ந்த முருகபக்திபற்றிக் கேள்வியுற்று, அவரை அரண்மனைக்கு அழைத்து மரியாதை செய்வித்தார்.

தென்னாப்பிரிக்க பயணங்களின்போது, பித்துக்குளி முருகதாஸுக்கு, இந்திய வம்சாவளியினரும், தென்னாப்பிரிக்கர்களும் அமோகமான வரவேற்பளித்தனர். முருகதாஸின் கவர்ச்சித் தோற்றம், கம்பீரக் குரல், இவர் தந்த வித்தியாசமான பக்திமழை கண்டு தென்னாப்பிரிக்க நாடே சிலிர்த்தது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா இவரைச் சந்திக்கையில், `எங்கள் நாட்டில் என்னைவிடவும், உங்களை நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கிறது!` என்று முருகதாஸைப் பாராட்டவைத்தது. தென்னாப்பிரிக்காவிற்குப் பலமுறை சென்றிருந்த முருகதாஸ், அங்கு தனக்குக் கிடைத்த பணத்தை வைத்து, கல்வி அறக்கட்டளை ஒன்றைத் துவக்கினார். ஏழை ஆப்பிரிக்கக் குழந்தைகளின் கல்விக்கு அது உதவி தருவதாய் அமைந்தது.

இந்தியாவிலும், சென்னையில் ஸ்ரீ ஜோதிர்மய தேவி அறக்கட்டளை அவர் முயற்சியால் தொடங்கப்பட்டது. தனது கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு அறக்கட்டளையை நடத்தி, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க நினைத்தது இந்தக் கருணை உள்ளம். கச்சேரிகளை ஏற்பாடு செய்பவர்களிடம் `எனக்குக் கொடுக்கவிருக்கும் பணத்தை வைத்து ஏழைகளுக்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்` என்று அடிக்கடிக் கூறிவந்திருக்கிறார் முருகதாஸ்.

பஜனைக் கச்சேரிகளின்போது இவருடன் தம்புரா வாசித்து, சேர்ந்து பாடிக் குரல் கொடுத்தவர் தேவி சரோஜா என்பவர். இவரை முருகதாஸ் தன் 58-ஆவது வயதில் மணம்புரிந்துகொண்டார். இருவரும் சேர்ந்து பாடிய `ராதாகல்யாணம்` கச்சேரிகள் பிரபலமானவை. இவருடன் பயணம் செய்து, சேர்ந்து கச்சேரி செய்து, உற்றதுணையாக இருந்த அந்தப் பெண்மணி 2011-ல் காலமானார்.

ஸ்ரீரமண மகரிஷி, ராமதாஸ் ஸ்வாமிகள், ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி ஆகிய மூன்று மகான்களையும் தான் சந்தித்ததே இறைவன் நடத்திய திருவிளையாடல்தான் என்கிறார் பித்துக்குளி முருகதாஸ். தனது 36-ஆவது வயதில் திருவண்ணாமலை சென்றது ரமண மகரிஷியைச் சந்திக்கத்தான். அவரைப் பார்த்தவுடனேயே `இவர்தாண்டா உன் குரு!` என்றது என் மனம்` என்கிறார் முருகதாஸ். திருவண்ணாமலையில் சிலகாலம் வாசம். சிவானந்தரை வடநாட்டில் ஒரு கும்பமேளாவின்போது சந்திக்க நேரிட்டது. `இவர்கள் வாழ்ந்த காலத்தில், நானும் வாழ்ந்தது நான் செய்த பாக்யம்` என்று பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் பித்துக்குளி முருகதாஸ். தன்னைப்பற்றிப் பேச நேரும்போதெல்லாம், `நான்` என்று குறிப்பிடாமல் `இவன்` என்றே தன்னைக் குறிப்பிடுவது இவரது வழக்கம்.

`ஒரு தாசனின் கட்டுரைகள்`, `கந்தர் அனுபூதி அனுபவ விரிவுரை` ஆகிய நூல்களையும் எழுதியிருக்கிறார் முருகதாஸ். இந்திய அரசின் `சங்கீத நாடக அகாடெமி` விருது, தமிழக அரசின் `கலைமாமணி`, தான்சேன் இசைவிழாவின் `தியாகராஜர் விருது`, `சங்கீத சாம்ராட்` எனப் பல விருதுகள் இவரைத் தேடிவந்தன.

நீலமயிலேறி ஞாலம் வலம்வந்த பாலமுருகனின் அடியவர்களில், அவருக்கு மிகவும் இஷ்டமானவரோ இவர்? அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. 1920-ல் தைப்பூசத்தன்று பிறந்தார் பாலசுப்ரமணியனாக. 2015-ல் கந்த சஷ்டியன்று, கந்தனின் திருவடி போய்ச்சேர்ந்தார் பித்துக்குளி முருகதாஸாக!

**

பித்தன் மகனுக்குப் பிடித்த பித்துக்குளி – 1

முருகதாஸ் சரி, பித்துக்குளி என்றா யாரும் தன் பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்வார்கள் என்று சின்ன வயதில் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் அவருடைய பாடலைக் கேட்கும்போதெல்லாம் அந்தக் குரலில் இருந்த ஒலிநயம், பாடலைப்பாடும் ஒரு தோரணை போன்றவை எளிதாக அவரின்பால் கேட்பவரை ஈர்த்தது. இந்த மனிதர் யார்? பார்க்க எப்படி இருப்பாரோ என்று நினைக்க ஆரம்பித்தது மனம். எப்படித் தெரிந்துகொள்வது? நெட்டாவது கொட்டாவது அந்தக்காலத்தில்? பத்திரிக்கைகளில் செய்தியோடு, கலர் ஃபோட்டோகூட வராத காலமது. இவர் தோற்றம் எப்படிப்பட்டது எனத் தெரிய நாளானது.

காவிநிறத் தலைப்பாகை, மேலுடை, கழுத்தில் பவழ மணி மாலை, கருப்புக்கண்ணாடி. கைவிரல்களில் சிவப்பு வண்ணம்! விரல்கள் விளையாட ஒரு பழைய ஹார்மோனியப்பெட்டி. இப்படி மேடையில் ஏறி அமர்ந்தாலே ஆளை அசத்தும் தோற்றம். பித்துக்குளி முருகதாஸை சாதாரணமாக, ஒரு பக்திப்பாடகர் என்று வகைப்படுத்திவிட்டு ஓடிவிட முடியாது. இவரது வாழ்க்கைப் பலவித பரிமாண அடுக்குகள் கொண்டது.

“பித்தா.. பிறைசூடி.. பெருமானே.. அருளாளா…“ என்று சிவபெருமானை நினைந்து உருகினார் சுந்தரர். அந்தப் பித்தனின் மகன் முருகன்மீது, சிறுவயதிலிருந்தே சித்தம் வைத்திருந்தார் முருகதாஸ். சிறுவனாக இருந்தபோது பாரம்பரிய இசையின் அடிப்படைகளைத் தன் பாட்டியிடம் கற்றார். இவருடைய தந்தை மேடையில் பக்திப்பாடல்களைப் பாடுபவர். இவரது படிப்பு 8-ஆவது வகுப்புடன் முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது. இளம் வயதிலேயே ஆன்மிகத்தை நாடியது மனம். வீட்டைவிட்டு வெளியேறி, ஞானிகளையும், துறவிகளையும் தேடி அலைந்தார். வள்ளிமலை ஸ்வாமியைச் சந்தித்தது ஆரம்பத் திருப்பமாக அமைந்தது. அவரிடம் யோகப் பயிற்சியையும், திருப்புகழ் போன்ற முருகன் பாடல்களையும் மனம் லயித்துக் கற்றார் முருகதாஸ்.
இப்படிச் சுற்றித் திரிந்தபோது ஈரோட்டுக்கருகில், ஸ்வாமி ப்ரும்மானந்த பரதேசியை சந்திக்க நேர்ந்தது. இவருடைய பக்திப் பரவசத்தைப் பார்த்த ஸ்வாமிகள் `நீயும் என்னைப்போலப் பித்துக்குளியாகத்தான் வரப்போகிறாய்!` என்றாராம். `டேய்! பித்துக்குளி..` என்று சிறுவனை அடிக்கடி அழைக்கவும் செய்தார் ஸ்வாமிகள்.

தெற்கு கர்னாடகத்தின் கஞ்சன்காடு ஆஸ்ரமத்தில் மகான் ராமதாஸ் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றார் பித்துக்குளி. அங்கேயே கொஞ்ச காலம் தங்கி அவரிடம் உபதேசம் பெற்றார். அங்கிருந்தபோது ஒருநாள் மிகுந்த பரவசத்துடன் இவர் முருகன் மீது பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்டிருந்த ஸ்வாமி ராமதாஸ் சொன்னாராம் “நீ ஒரு முருகதாஸ்!` ஏற்கனவே பித்துக்குளி என்ற பட்டம். இப்போது முருகதாஸ். இணைந்து அவரின் பெயராய் நிலைத்தது: பித்துக்குளி முருகதாஸ்.

1936-ல், தன் 16-ஆவது வயதில் இந்திய சுதந்திரப் போராட்டவீரர்களுடன் சேர்ந்து ,பிரிட்டிஷ் அரசிற்கெதிராக பெங்களூர்ப் போராட்டத்தில் இவர் குதிக்க நேர்ந்தது. ஆங்கிலேயப் போலீசாரின் அடிதடிப் பிரயோகத்தில் பலமாகக் காயமுற்றார். சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தார். அங்கும் அடக்குமுறை, அடிதடி தொடர்ந்தது.

ஆங்கிலப்புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் ஆங்கிலேயப் பிரபுக்கள் இந்திய மக்களைச் சந்திப்பதாக அப்போது ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஆவேசமாக இருந்த முருகதாஸுக்கு, இந்த ஏற்பாட்டைக் குலைத்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. அதே சமயத்தில் மருதமலை, திருத்தணி, பழனி போன்ற திருத்தலங்களில் திருப்படித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தார். நினைத்தபடியே மக்களின் கவனம் திரும்பியது. திருப்படித் திருவிழாவும் புகழ்பெற்றது.

தன் இளம் வயதில் நாடுபூராவும் அலைந்து திரிந்தார் முருகதாஸ். இப்படி ஒருமுறை வடநாட்டில், சரஸ்வதி நதிக்கரையில் உட்கார்ந்து தியானித்திருந்தபோது இறை அனுபவம் கிட்டியது. உள்ளிருந்து எழுந்த தீர்க்கமான குரல் `தென்னாட்டுக்குத் திரும்பிப் போ. அங்கேதான் உனக்கு வேலை இருக்கிறது!` என்றது.

தென்னாடு திரும்பியவர், நெடுங்காலம் பழனிமலையிலேயே தங்கியிருந்தார். 30-ஆவது வயதிலேயே சிறந்த பக்திப்பாடல் பாடுபவர் என்கிற புகழ் பரவ ஆரம்பித்தது. பக்திப்பாடல் கச்சேரிகளுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இவருடைய பஜனைக் கச்சேரிகளில் ஒரு தனி பாணி, இவருக்கே உரித்தான ஸ்டைல் பளிச்செனத் தென்படும். பிரகாசமான காவித் தலைப்பாகை, வஸ்திரம், கருப்புக்கண்ணாடி, ஹார்மோனியம் சகிதம் வந்து மேடையில் உட்காருவார். விரல் நகங்களில் மின்னும் சிவப்புவண்ணம்! தம்புரா, மிருதங்க வித்வான்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போதே, கண்மூடி ஒரு சிலைபோல் அமர்ந்திருப்பார். `ஓம்!` என்று இதமான அதிர்வலைகளை எழுப்பியவாறு இருப்பார். பிறகு, தனக்கே உரித்தான கம்பீரக் குரலில் ஸோலோவாகப் பாட ஆரம்பிப்பார். மெதுவாகத் தொடங்கி மெல்லிய இசை அதிர்வுகளை எழுப்பி, உச்ச ஸ்தாயிக்கு அவர் கொண்டு செல்கையில் ரசிகர்கள் அவரோடு பயணித்து வந்திருப்பர். பின்னணி இசை தொடர்ந்து முழங்கிக்கொண்டிருக்கையில் திடீரென்று அமைதி ஆவார். தாழ்ந்த குரலில், புராணக்கதைகளிலிருந்து, பாட்டிற்குத் தொடர்பான சம்பவங்களை லேசாகச் சொல்லி ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வைப்பார். ரசிகர்களின் கவனம் தீவிரமாகுகையில், திடீரென உச்ச ஸ்தாயிக்குக் குரலை உயர்த்திப் பாடிச் செல்வார். ரசிகர்கள் முதலில் அதிர்ந்து, பின் ஆரவாரிப்பார்கள். கச்சேரி முடியுமுன், எல்லோரும் எழுந்து ஆடும்படியாக `பச்சைமயில் வாகனனே!` போன்ற ஒரு ஹிட் ஐட்டத்தை எடுத்து விடுவார். ரசிகர்கள் உற்சாகமாகி, உடன் சேர்ந்து பாடுவார்கள். தனக்கு வாய்த்த இசை எனும் மந்திரத்தால், ஒரு 3-மணி நேரம் ரசிகர்களை இப்படிக் கட்டிவைத்திருப்பார் பித்துக்குளி முருகதாஸ். வார்த்தைகளில் விளக்கமுடியாத இந்தக் கவர்ச்சியே அவருக்கு வெளிநாடுகளில் ‘Singing Saint’ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. ….(தொடரும்)

சினிமாவே உன்னை

வாழ்க்கை வண்டியை எப்படியோ ஒரு
வழியாக ஓட்டிச் செல்லவேண்டி
வகைவகையான தொழில் செய்து
வியர்வையில் சோர்ந்துபோன அவன்
சம்சாரியோ சன்னியாசிபோல் திரிபவனோ
ஒரு வடிகாலாய் பொழுதுபோக்காய்
ஒளிர்கிறாய் அவனுக்காக
வெள்ளித்திரையில் சினிமா என்று
வேலையில்லா வெட்டிகளும்
வம்புதும்புக்காரன்களும்கூட
விளையாட்டாய்ப் போய்
வசதியாக இருக்கையில் சாய்ந்து உன்
வாயைத்தான் பார்க்கவைக்கிறாய்
அரங்கினில் நீ ஓடாவிட்டால்
பெரும்பாலோர்க்குப் பொழுது போகுமா
உனை நம்பி அரங்கிற்கு வெளியே நின்று
டீ ஆத்தும், கடலை முறுக்கு விற்கும் மனிதனுக்கு
பிழைப்புதான் நடக்குமா அவன்
பிள்ளை குட்டி பள்ளிக்கூடம் போகுமா
சாதாரணனின் வாழ்க்கையில்
சளைக்காமல் பங்குவகித்து
புதுசுபுதுசாய்க் கதைகள் சொல்லி
புளகாங்கிதம் தருகிறாய்
சினிமாவே என் செய்வேன் உனை
சிரித்துக்கொண்டே வாழ்த்துகிறேன் !

— ஏகாந்தன்
(மேற்கண்ட கவிதை தினமணியில் (09-11-2015) வெளியானது. நன்றி: தினமணி)

கிரிக்கெட் ப்ரேமி

அலைபேசியில் வந்த மகளிடம்
ஆவலாய்க் கேட்டேன்
பெங்களூரில் இன்னுமா
பெய்கிறது மழை
அவளைப்பற்றிய அக்கறை
உண்டுதானெனினும்
அடுத்த நாள் மேட்ச்
நடக்குமா நடக்காதா

**

That bluish night

On a strangely seductive night
Everything shone subtly bright
The breeze teasingly thin and exciting
Fragrance simply captivating
From the vastness of the night’s blue
There was no evidence nor any clue
The bullish moon cast a sharp glance
On the virgin earth who had no chance
Nor any desire to safely escape
The celestial affair caught on a landscape
With little me as a secret witness
What more to say, oh, my Goodness!

**

கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு அப்பால்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாட்களில் அதிரடியாக வென்றுவிட்டது கோஹ்லி தலைமையிலான இந்தியா. மொஹாலி ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு படுசாதகமாக இருந்ததுதான் காரணம். எனினும் தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் (de Villiers), ஆம்லா, டூ ப்ளஸீ(du Plessis) போன்ற ஜாம்பவான்கள் இருக்கையில், போட்டி மூன்று தினங்களுக்குள் முடிந்துவிடும் என யாரும் நினைக்கவில்லை.

என்னதான் நடந்தது? தென்னாப்பிரிக்கா இதனை எதிர்பார்க்கவில்லையா? அதிர்ச்சிகளை நிச்சயமாக எதிர்பார்த்துத்தான் மொஹாலி மைதானத்தில் இறங்கியது. ஆல்ரவுண்டர் டூமினி(Duminy) (ஸ்பின்னரும் கூட) காயத்தினால் ஆடாதது தென்னாப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம். ஆனால், அந்த அணியில் இம்ரான் தாஹிர் தவிர, ஆஃப் ஸ்பின்னர் ஹார்மர், இடதுகை ஸ்பின்னர் டீன் எல்கார் (Dean Elgar) ஆகியவர்கள் இந்திய மைதானத்தின் நிலையைக் கருத்தில்கொண்டே சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் மொத்தம் 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களே வீழ்த்தினார்கள். இது தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களின் குறிப்பிடத்தக்க சாதனை என்பதை மறுக்கமுடியாது.

இந்தியாவின் 201(முதல் இன்னிங்ஸ்), 200(இரண்டாவது இன்னிங்ஸ்) ஒன்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னே, பிரமாதமான, சவாலான ஸ்கோர்கள் இல்லை. ஆனால், முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஆம்லா, டிவில்லியர்ஸ், எல்கார் தவிர வேறு யாரும் தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து இந்திய சுழலைச் சரியாக சமாளித்து விளையாட முடியவில்லை. அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்க்க, தென்னாப்பிரிக்கா 184-ல் மூட்டையைக் கட்டியது. மூன்றாவது நாளன்று தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா 218 என்ற இலக்கை வைத்தது.

டென்ஷனும், எதிர்பார்ப்புகளும் ஏற, பௌலிங்கை ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை வைத்துத் துவக்கியது இந்தியா. மைதானத்தின்மீது கோஹ்லிக்கு அவ்வளவு நம்பிக்கை! தென்னாப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரராக பௌலர் ஃபிலாண்டர்(Philander)-ஐ அனுப்பியது. அஷ்வினையும், ஜடேஜா, மிஷ்ராவையும் கூட மொஹாலியில் தடுத்து ஆடுவது கடினம். ஆகவே, அடித்துத் துரத்த ப்ளான்! ஆனால் சட்டியில் பருப்பு வேகவில்லை. தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் இந்திய ஸ்பின்னர்களின் இடைவிடாத தாக்குதலில் (குறிப்பாக ஜடேஜா-5 விக்கெட்) நிலைகுலைந்தன. ஆம்லாவும், டி வில்லியர்ஸும் போராட முயன்று காலியானார்கள். தென்னாப்பிரிக்கா எதிராட்டம் ஆடமுடியாமல் 109-ல் சுருண்டுவிட்டது. ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்தியாவைச் சாய்த்த தென்னாப்பிரிக்காவுக்கு, முதல் டெஸ்ட்டில் சரியான அடி.

இந்த வெற்றியினால் இந்தியா பெரிய டீம் என விஸ்வரூபம் எடுத்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை. வெற்றியின் ஊடேயும், இந்திய பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இயங்கவில்லை என்கிற நிதர்சனம் கண்முன்னே நின்று கலக்கம் தருகிறது. முரளி விஜய் மற்றும் புஜாரா மட்டுமே நிலைத்து நம்பிக்கையுடன் விளையாடிய வீரர்கள். கேப்டன் கோஹ்லி, ரஹானே, ஷிகர் தவன்(Shikar Dhawan) (இரண்டு இன்னிங்ஸிலும் பூஜ்யம்) – இவர்கள் தந்தது பெரும் ஏமாற்றமே. இந்த ஸ்திரமற்ற இந்திய பேட்டிங் அடுத்த டெஸ்ட்டில் (பெங்களூர்) என்ன செய்யும்? தொடரில் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆதலால், சில மாறுதல்கள் அணியில் தேவைப்படுகின்றன.

இந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் ஃபார்மில் இல்லை என்பது மொஹாலியில் நன்றாகவே தெரிந்தது. அடுத்த டெஸ்ட்டில், அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் ரிசர்வ் துவக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராஹுல் சேர்க்கப்பட்டால் அணிக்கு பலமுண்டாகும். அதேபோல், விக்கெட்கீப்பர் சாஹாவின் விக்கெட் கீப்பிங்கும், பேட்டிங்கும் முதல் டெஸ்ட்டில் சோபிக்கவில்லை. அவருடைய இடத்தில் ரிசர்வ் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா பெங்களூரில் ஆடுவது நல்லது. வேறு எந்த மாறுதலும் தேவையில்லை எனத் தெரிகிறது. அடிபட்ட நாகம் போலிருக்கிறது தென்னாப்பிரிக்கா. போதிய மாற்றங்கள் அவர்கள் அணியிலும் செய்யப்படும். டூமினி அனேகமாக அடுத்த மேட்ச்சில் ஆடுவார். மிகுந்த முனைப்புடன் தென்னாப்பிரிக்கா பெங்களூரில் நுழையும்.

இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய ஆட்டக்காரர்கள், குறிப்பாக பேட்ஸ்மன்கள் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதைப் பொறுத்திருக்கும் நமது வெற்றி வாய்ப்பு. முதல் மேட்ச்சில் வென்றுவிட்டோம் என்கிற இறுமாப்பில் சாய்ந்து உட்கார, அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இன்னும் போகவேண்டிய தூரம் பாக்கியிருக்கிறது.
**

மழை

வாராது நீ இருந்துவிட்டால்
வாடி வதங்கி நிற்பார்
வறட்சி என அரற்றிடுவார்
அடித்துப் பெய்தாலோ
இப்படியா ஒரேயடியா
பெய்து தொலைக்கணும்
எப்போது நிற்குமோ இந்த சனியன்
எள்ளளவும் இரக்கமின்றி
ஏடாகூடமாய்ப் பேசிடுவார்
அடிக்கடிப் பார்த்திடுவார் விண்ணை
விடாது நொந்துகொள்வார் உன்னை
புத்தி இவர்களுக்குக் கொஞ்சம் மொண்ணை !

-ஏகாந்தன்
(மேற்கண்ட கவிதை, 12-10-15-ஆம் தேதியிட்ட தினமணி இதழில் வெளிவந்தது. நன்றி: தினமணி)