தொடரத் தயங்கும் நிழல்

சின்னவயது வாழ்க்கையில்
வருடம் முழுக்கக் கோடைதானோ
எனத் திகைக்கவைத்த இயற்கைச்சூழல்
சுட்டெரித்த சூரியன்
அழுத்தமான நிழல்களையும்
எங்கும் பரவவிட்டிருந்தது
வேகாத வெயிலிலும்
மாளாத விளையாட்டுதான்
நிழலைப் பார்த்துக்கொண்டே நடப்பது
மனதுக்கு ஏனோ பிடித்திருந்தது
ஓடுகின்ற நான் மேலும் வேகமெடுக்கக்
கூடவே நிழலும் பக்கவாட்டில்
விரைவதைப் பார்க்கப் பார்க்க
விளையாட்டாய்
வினோதமாயிருந்தது
இப்போதைய வசித்தலின்
இயற்கைச் சூழல் வேறு
வருடத்தின் மூன்று மாதங்களில்
வசதியாக மேகப் போர்வைக்குள்
குளிருக்கிதமாக சுருண்டு கிடக்கும் சூரியன்
மாறுபட்ட சூழலில் என் நடையும்
மந்தகதிக்கு வந்துவிட்டதோ
இப்போதெல்லாம் என் நிழலும்
எனைத் தொடரத் தயங்குகிறது
எனத் தெரிந்துகொண்டதில்
ஆச்சரியம் ஏனோ இல்லை

**

என்றும் யவனம்

இரவின் ஆதிக்கம் பரவிய பின்னும்
தூக்கம் வராமல் போர்வைக்குள்
கிளுகிளுத்து மகிழ்ந்தாடும் குழந்தைகள் போல்
இருண்ட கருங்காற்றோடு ரகசிய உறவாடும்
பச்சை மரங்கள் பரவிக்கிடக்கும் வனாந்திரம்
மாசிலா நிலவும்
மாயாஜால நட்சத்திரங்களும்
ஜொலிஜொலித்து ஒளிசிந்தும்
இரவு வானத்தின் யவனப் பேரழகில்
மயங்கிக் கிறங்கி
சயனித்திருக்கும் பூமி…
————————-
காங்கோவிலிருந்து வெளியாகும் ‘தமிழ்ச்சாரல்’ மின்னிதழ்(டிசம்பர் 14)-இதழில் வெளிவந்துள்ளது. நன்றி:தமிழ்ச்சாரல், கின்ஷாசா.
**

அவனோட சோகங்கள் !

அக்கம்பக்கத்தில்தான் இருந்தான்
அவ்வப்போது எதிர்ப்படுவான்
வேலையில்லாப் பட்டதாரி
வேதனையில் அவன் பேசுவதை
அடிக்கடிக் கேட்க நேர்ந்ததுண்டு
எல்லாம் புரிந்ததைப்போல்
‘ச்சூ’ கொட்டி நகர்ந்ததுண்டு
ஆண்டவன் சன்னிதியில்
அவன் நினைவு வந்துவிட
அவசரமாய் வேலைகொடென்று
அவனுக்காகப் பிரார்த்தித்ததுண்டு
சிலகாலம் கழிந்தது
சிறப்புச் செய்தியாய் அது வந்தது
கிடைத்துவிட்டதாம் வேலை அவனுக்கு
பயல் சொல்லவில்லையே எனக்கு
சந்தோஷமாக இருந்தால் சரி
சமாதானமாகிப்போனேன் நான்
எதிரே வந்தான் ஒரு நாள்
என்னப்பா சுகம்தானே என்றேன்
சோகமாப்போச்சு சார் வாழ்க்கை என்றான்
சொல்லப்பா என்னதான் நடந்தது
பதறிப்போய்க் கவலையோடு கேட்டேன்
துணையாகப் பெண்ணொருத்தி
எனைத்தேடி வரவில்லையே என்றான்
மனையாளுக்காக ஏங்கும் கண்களில்
அணைபோட்டும் நிறுத்தமுடியா
அளவிலா துக்கம்

**

காலங்காலமாய்…

தான் இருக்கும் நிலையில், கிடைத்த வாழ்வில், அடைந்த சுகங்களில் சந்தோஷமடைவதில்லை மனிதமனம். திருப்தி என்பது ஏனோ மனித மனதை நெருங்கவே வெட்கப்படுகிறது; பெரும் தயக்கம் காட்டுகிறது.

மேன்மேலும் உயரவேண்டும், நாலுபேர் அண்ணாந்து பார்க்கும்படி எதையாவது சாதிக்க வேண்டும், பெரிதாக முயன்று ஒன்றை அடையவேண்டும் என்று பரபரக்கும் மனத்தின் துணைகொண்டுதான் இவ்வுலகில் வாழ நேர்ந்திருக்கிறது மனிதனுக்கு. பூலோக வாழ்க்கைப் பல கவர்ச்சிப்பாதைகளைக் காட்டி அவனை மயக்குகிறது. தொட்டுவிடக்கூடிய சிகரங்களைப் படம் போட்டுக் காட்டுகிறது. இவ்வாறாய் தொன்றுதொட்டு மனிதமனம் தனது குறிக்கோள், லட்சியம் என எதெதையோ நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. தன் தளராத உழைப்பிற்கு, உத்வேகத்திற்கு உறுதுணையாக உலகச் சாதனையாளர்களை, மேதைகளை ஏற்று, அவர்களின் சிக்கலான, கரடுமுரடான வாழ்க்கைப்பாதைகளை உற்றுநோக்குகிறது. நிகரற்ற முன்னுதாரணமாய் அவர்களை வரித்துக்கொண்டு இலக்கு நோக்கிய பயணத்தில் தீவிரம் காட்டுகிறது. தன் முயற்சிகளில் எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுமிருக்கிறது.

இருந்தும், யாரையும் எதையும் நினைத்த நேரத்தில் புரட்டி எடுத்துவிடும், கவிழ்த்துப்போட்டுவிடும் காலமெனும் அசுரனைக்கண்டு அது நடுங்கவேண்டியிருக்கிறது. நம் முயற்சிக்கு, உழைப்பிற்குக் காலத்தின் கனிவான பார்வை கிட்டினால் வெற்றி, ஆனந்தம். சந்தேகமில்லை. இல்லையேல், நாம் சந்திப்பது தாங்கவொண்ணா தோல்வி, தடுமாற்றம், தொடரும் துயரம்.

“ காலம் நினைத்தால் கைகூடும் – அது
கனவாய்ப்போனால் மனம் வாடும்..”

– வாழ்க்கையின் சோகத்தில் கரைகிறார் கண்ணதாசன்.

எங்கும் எப்போதும் நிகழும் மாற்றமே இயற்கையின் ரகசியத் தோற்றம். அதன் ஏற்றம். நாம் வாழும் இந்தப்பூமி மட்டுமா, பிரபஞ்சமே நொடிக்கு நொடி எண்ணற்ற மாற்றங்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. மனித மூளைக்கு எட்டாத, சிந்தனைத்தளத்துக்கு அப்பாற்பட்ட பல்வேறு பிரபஞ்ச நிகழ்வுகள். நம் வாழ்வை நேரடியாக பாதிக்கும் சூரிய குடும்பத்துக் (Milkyway Galaxy) கோள்கள் மட்டுமன்றி, பேரண்டத்தின் எண்ணற்ற இதர கிரஹங்களும், நட்சத்திரங்களும் தங்களுக்குள்ளும், தங்களிடையேயும் நிகழ்த்தும் விவரிக்கமுடியா செயல்கள், மாறுதல்கள் மூலம் இந்த பூமியைப் பாடாய்ப்படுத்துகின்றன. இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் இம்மாற்றத்தின் விளைவிற்குட்பட்டு இயங்கவேண்டியிருக்கிறது. மனிதன்மட்டும் விதிவிலக்கா என்ன? அவனுடைய பரிணாம வளர்ச்சியும், சிந்தனைகளும், செயல்பாடுகளும் அவனை அறியாமலே மாறும் காலத்திற்கேற்ப நுண்ணிய மாற்றங்கள் பல கொள்கின்றன. அவை புதிய, புதிய எண்ண அலைகளை, ஆசைகளைத் தோற்றுவித்து, புதிய லட்சியங்களை, இலக்குகளை நோக்கி இடையறாது அவனைப் பயணிக்கவைக்கின்றன. காலங்காலமாய்த் தொடரும் மனிதனின் நெடும் பயணத்தின் ஊடே கிடைக்கவும் செய்கின்றன சில அபூர்வமான, சில முற்றிலும் எதிர்பாராத வெற்றிகள். பல அயரவைக்கும் தோல்விகள், துயரக்கதைகள்.

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ – நெஞ்சில்
நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ…
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ – கொண்ட
குறியும் தவறிப்போனவர்தான் எத்தனையோ…

தத்துவார்த்தமான கவிதை வரிகளில், இப்புவியில் மனித வாழ்வையே ரத்தினச்சுருக்கமாக எழுதிச்செல்கிறார் மாயவநாதன்.

**

இப்படியும் ஒருத்தன் !

எனக்கொரு நண்பனுண்டு
எதற்கெடுத்தாலும் வம்புசெய்வதுண்டு
எடக்குமிடக்காகப் பேசுவதில் இணை
இவ்வுலகில் அவனுக்கு யார்தான் உண்டு
இப்படித்தான் ஒருநாள் பூங்காவில் உட்கார்ந்து
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம
பேச்சுவாக்கில் சிந்தனையின் வீச்சுவாக்கில்
ஏழைகளின் எல்லையில்லா பிரச்சினைகள்
என்னாளும் தீர்வதில்லை என்றேன்
ஏழைகளே ஒரு பிரச்சினைதான் என்றே அவன்
எதிர்த்திசையிலிருந்து புறப்பட்டான்
சுதந்திரம் அடைந்து காலமோடியும் ஒரு
சுகமுண்டா ஜனங்களுக்கு நாட்டினிலே
சுருதி சேர்த்தேன் வார்த்தையிலே
சுதந்திர வாழ்விற்கே இந்த சோமாறிகள்
சுத்தமாக லாயக்கில்லை என வெட்டிவிட்டான்
எத்தகைய தலைவன் வந்தால்தானென்ன
எந்த மாற்றமும் நிகழக் காணோமே என்றேன்
தறிகெட்ட ஒரு தரங்கெட்ட மக்களுக்கு
தலைவன் ஒரு கேடா என முறைத்துப் பார்த்தான்
சரி எழுந்திரு வீட்டுக்காவது திரும்புவோம் நேரத்தில்
பரிவோடு பார்த்தே மெல்லக் கிளப்பினேன் அவனை
வீட்டுக்குப்போனாலும்
வீதியிலே திரிந்தாலும
பாதியிலே நின்ற கதைபோல
பரிதாப வாழ்க்கைதான் மிச்சம்
பொரிந்துதள்ளியே எழுந்து நடந்தான்

**

கவலை ஓட்டும் வாழ்க்கை

சீறி ஓட ஆரம்பித்தது ஆட்டோ
வண்டியையும் ஆட்டோக்காரரையும்
வழக்கமான சந்தேகத்துடன் ஆராய்ந்தேன்
டெல்லியின் காலைநேரச் சடங்கான
சாலை நெரிசலைத் துளையிட்டு ஊடுருவி
குறிப்பிட்ட நேரத்தில்
கொண்டுபோய் சேர்த்துவிடுவாரா
என்கிற கவலையில் ஆழ்ந்தேன்
ஆவேசமாய்க் குறுக்கே விழுந்து திரும்பும்
அசுர வண்டிகளைக் கரித்துக்கொட்டியபடி
சிடுசிடுக்கும் ஓட்டுநரைச் சீர்செய்யவென
எந்த ஊர்க்காரர் நீங்கள்
எத்தனை வருடமாய் டெல்லியில் என
இதமாகப் பேச்சுக்கொடுத்தேன்
பிஹாரி சார் நான். இருபது வருஷமாக்
குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன் இந்த ஊர்ல
என்றார் பெருஞ்சலிப்புடன்
குடும்பம் எல்லாம் எப்படிப் போயிட்டிருக்குது
பொண்ணு பிள்ளைன்னு குட்டிகள் உண்டா
ஒரு பயல் ஒரு பொண்ணு சார் என்றார்
அய்யாவின் குரலில் மென்மை கசிந்தது
அடம்பிடிக்கும் சாலையில் ஆட்டோ சீரானது
பெண்குழந்தை சின்னவளா
பையன்தான் பெரியவனா
படிக்கிறானா தொடர்ந்தேன்
பொண்ணுதான் சின்னது நல்லாப்படிக்குது
பொறுப்பான பொண்ணு
அதப்பத்தி நான் கவலைப்படல்லே
பையன்தான் சார் பெரும் பிரச்சினை
படிக்கிறேன் படிக்கிறேன்னு
பய சுத்தித் திரியறான் ஊரெல்லாம்
எப்பப்பாத்தாலும் ஏதேதோ சொல்லி
எரநூறு முன்னூறு வாங்கிட்டுப்போறான்
மோட்டார்சைக்கிள் வேணுமாம்
முணுமுணுத்து அலையறான்
பயல் தேறமாட்டான் உருப்படமான் சார்
கவலை ஆட்டோக்காரரை ஓட்டிக்கொண்டிருந்தது
அப்படியெல்லாம் சொல்லாதீர்
சின்னப்பையன் தானே
வாழ்க்கையில் கொஞ்சம் அடிபட்டால்
தன்னால் சரியாகிவிடுவான் என்றேன்
வண்டி நின்று பணம் கொடுக்கையில்
உங்களின் கடைசி காலத்தில் மகன்
உறுதுணையா இருப்பான்
பகவான் இருக்கார் பயப்படாதீங்க
பிரியுமுன் தைரியம் சொல்லி
ஆறுதலாய்ப் பார்த்தேன்
ஆட்டோ டிரைவரின் இடத்தில்
அப்பா ஒருத்தர் நின்றிருந்தார்
ஆறாத சோகமாய்
கலங்கிய கண்களுடன்

**

வந்த நாள்

நாளைக்குப் பார்க்கலாம் என்றாய்
சரி என்று நானும்
தலையாட்டிவைத்தேன்
நாளையும் வந்தது
உன்னைத்தான் காணவில்லை
வெட்டவெளியே துணையாக
வெறுமனே நின்றுகொண்டிருக்கிறேன்
பார்ப்பதற்கு ஏதுமில்லை
பகிர்ந்துகொள்ள யாருமில்லை

**
மேற்கண்ட கவிதை காங்கோவிலிருந்து வெளிவரும் ‘தமிழ்ச்சாரல்’ மின்னிதழின் டிசம்பர் 2014 இதழில் வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழ்ச்சாரல், கின்ஷாசா, காங்கோ.

சி. கொண்டய ராஜு – மனங்கவர்ந்த ஓவியன் – 2 (தொடர்ச்சி)

ஸ்ரீலஸ்ரீ சங்கரதாச ஸ்வாமிகளின் நாடகக் கம்பெனி அப்போது மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. புகழ்பெற்ற காவிய நாடகங்களை ஊர் ஊராகச் சென்று நடத்தி வந்தது. நாடகத்திற்கான காட்சிகளை ஓவியமாக வரையும் வாய்ப்பு கொண்டய ராஜுவுக்குக் கிடைத்தது. நாடகக் கம்பெனியில் சேர்ந்த கொண்டய ராஜு, கேரளா, சிலோன் போன்ற இடங்களுக்கும் நாடகக் கம்பெனியுடன் சென்றார். நாடகம் நடந்தேறிய இடங்களில் எல்லாம், நாடகக் காட்சிகளை வெளிப்படுத்தும் அவரது அழகிய திரைச்சீலை ஓவியங்களை மக்கள் மிகவும் ரசித்துப் பாராட்டினர்.

அப்போது கேரளா மாவேலிக்கரையில் ஞானசௌந்தரி நாடகம் நடத்தப்பட்டது. காட்சிகளை தத்ரூபமாக திரைச்சீலையில் வரைந்திருந்தார் கொண்டய ராஜு. அதனைப் பார்வையிட்ட இந்தியாவின் தலைசிறந்த ஓவியரான ராஜா ரவிவர்மாவின் பேரன், கொண்டய ராஜுவை மிகவும் பாராட்டி, அவருக்கு 3 பவுன் தங்கச்சங்கிலி ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட ஸ்ரீகிருஷ்ணலீலா நாடகத்திற்கான காவியக் காட்சிகளை சிறப்பாக வரைந்த கொண்டய ராஜு, திவான் ஸ்ரீ சி.பி. ராமசாமி அய்யரால் மேடைக்கு அழைக்கப்பட்டு சபையின் முன்னே கௌரவிக்கப்பட்டார்.

கொண்டய ராஜுவின் புகழ் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. ஒரு சமயம் சிருங்கேரி சங்கராச்சாரியாரையும் அது எட்டியது. இவரது ஓவியத்திறமை குறித்துக் கேள்விப்பட்ட சங்கராச்சாரியார், கொண்டய ராஜுவை அழைத்து, ஆதிசங்கரர், ஸ்ரீசாரதாதேவியின் படங்களை சங்கரமடத்திற்காக வரைந்து தரும்படிப் பணித்தார்.

கொண்டய ராஜுவுக்கு, டி.சுப்பையா, ராமலிங்கம் போன்று 10-12 சிஷ்யர்கள் இருந்தனர். அவர்களுக்குப் பயிற்சி தருவதற்காக கோவில்பட்டியில் 1942-ல் ஸ்ரீதேவி ஆர்ட் ஸ்டூடியோவை நிறுவினார் கொண்டய ராஜு.

1956-ல் சிவகாசியில் ப்ரிண்டிங் பிரஸ்கள் தொடங்கப்பட்டன. காலண்டர் உற்பத்தி ஆரம்பமாகியது. கொண்டய ராஜு போன்ற கைதேர்ந்த ஓவியர்களால் காலண்டர் ஆர்ட் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்தது. அப்போது பிரபலமாய் இருந்த அம்பாள் காஃபி கம்பெனியின் மீனாக்ஷி கல்யாணம் படக்காலண்டர்தான் கொண்டய ராஜுவுக்குக் கிடைத்த முதல் காலண்டர்பட ஆர்டர். அதற்குப்பின் காலண்டர் ஆர்ட்டில் அவர் ராஜ்யம்தான்! காலண்டர் ஆர்ட்டிற்குப் பெருமையையும், அந்தஸ்தையும் ஒருங்கே கொண்டுவந்து சேர்த்தன அவரது அபூர்வப் படைப்புகள்.

1964-ல் கோவில்பட்டி வந்திருந்த நடிகர் சிவாஜி கணேசன் ஒரு விழாவில் கொண்டய ராஜுவுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். ’கலைமாசெல்வன்’, ’ஓவியமணி’ ஆகிய பட்டங்களைத் தன் வாழ்நாளில் பெற்றார் இந்த ஓவியர். கனடாவின் பல்கலைக்கழகமொன்றில், ’காலண்டர் ஆர்ட்டில் இந்திய தெய்வங்கள்’ என்கிற வகையில் இவரது ஓவியங்கள் ஆவணமாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

கொண்டய ராஜு மிகவும் மென்மையான மனிதர். தன்னிடம் யார் கற்க வந்தாலும் அவருக்கு உதவி வந்தார். அவருக்கு நாய்கள் என்றால் பிரியம். ஒருசமயத்தில் பத்துப்பன்னிரெண்டு வளர்ப்பு நாய்கள் அவரிடம் இருந்தனவாம். அந்தக்காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த சொக்கலால் ராம்சேட் பீடியை விரும்பிப் புகைப்பவராக இருந்தார் இவர்.கோவில்பட்டியை வாசஸ்தலமாகக்கொண்டு கடைசிவரை பிரும்மச்சாரியாக, தன் சிஷ்யர்களுடன் வாழ்ந்த கொண்டய ராஜு, தனது 78-ஆவது வயதில் 1976-ல் காலமானார்.

இந்த வருடம் காலண்டர்படம் வாங்கினால் அல்லது நல்ல சாமிபடக் காலண்டர் உங்கள் கையில் சிக்கினால் அந்தப்படம் சி.கொண்டய ராஜு வரைந்ததா என்று கவனியுங்கள். யாருக்குத்தெரியும் – ஒருவேளை ரீப்ரிண்ட் ஆகி கொண்டய ராஜுவின் காலண்டர் ஓவியங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கலாம். அல்லது சாமிபடக் கடைகளில் கொண்டய ராஜுவின் ஓவியங்கள் ஃப்ரேம் போட்ட படங்களாகவும் கிடைக்கக்கூடும். உங்கள் வீட்டுப் பூஜை அறையையோ, ஹாலையோ அலங்கரிக்கலாம். காலங்காலமாகக் கலைப்பொக்கிஷமாக அவை உங்கள் வீட்டில் உங்களோடு தங்கிவிடவும் கூடும்.

**
படம் இணையத்திலிருந்து. நன்றி.

சி. கொண்டய ராஜு – மனங்கவர்ந்த ஓவியன் – 1


அந்தக்காலக் காலண்டர் படங்கள் நம் இளம்பிராயம், வீடு, வாசல் எனப் பலவகை நினைவுகளாய்ப் பின்னிப் பிணைந்திருப்பவை. ஒரு ரம்யமான கனவுபோல் மனதைவிட்டு அகலாதவை. அப்போதெல்லாம் ஆன்மிக மணம் கமழும் சாமிபடங்கள்போட்டு வரும் காலண்டர்கள் மக்களிடையே வெகுபிரபலமாக இருந்தன. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் வரும்போதே எந்தக் கம்பெனியில் எந்தமாதிரி தெய்வப்படங்கள் காலண்டரில் போடுவார்கள் என்கிற நினைப்பும் அதைத் தவறாது வாங்கிவிட வேண்டும் என்கிற பரபரப்பும் குடும்பங்களில் காணப்படும். புதுவருடம் என்றால் கண்ணுக்குக் குளிர்ச்சியான, வண்ண வண்ணப் படங்கள் தாங்கிய காலண்டரை வீட்டில் தொங்கவிடுவதில் ஒரு மகிழ்ச்சி. நாலுபேர் நம் வீட்டுக்கு வந்துபார்த்து ’ஆஹா, இந்தக் காலண்டர் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது!’ என்று கேட்டுவிட்டால், அப்போது ஏற்படுமே ஒரு அலாதிப் பெருமிதம், ஒரு கிளுகிளுப்பு!

பொதுவாக அவ்வளவு எளிதில், நல்ல கலைஅழகுடன்கூடிய தெய்வப்படங்கள் டெல்லியில் கிடைப்பதில்லை. இங்கே தமிழ்நாடு, தென்னிந்தியாவில் உள்ளது போன்ற காலண்டர்பட கலாச்சாரம் அவ்வளவு பரவலாக இல்லை எனலாம். இரண்டு நாள் முன்பு, அபூர்வமாகக் கிடைத்ததால் வீட்டுக்கு என வாங்கியிருந்த தெய்வப்பட.ங்கள் சிலவற்றைப் பார்த்தேன். ஃப்ரேம் போட்டு மாட்டுவதற்கேற்ற தெய்வீக சாந்தம், அழகு, ஒரு நேர்த்தி அவற்றில் இல்லை என்பது முதல் பார்வையிலேயே எனக்குத் தெளிவானது. அதை மனைவியிடம் சொன்னபோது அவருக்கு ஆச்சரியம்; என்ன இது, எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டாரே என்கிற அதிர்ச்சி. சிறுவயதிலேயே காலண்டர்படங்களை வாங்கும்போது அதிலுள்ள தெய்வ உருவங்களை அதன் கலைஅழகு, ஓவிய நுணுக்கங்கள் போன்றவற்றிற்காக உன்னிப்பாகப் பார்த்துத் தேர்வு செய்வது என் பழக்கம் என்பது அம்மணிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

இந்த நிகழ்வு அந்தப் பொற்காலத்திற்கு என்னை இழுத்துச்சென்றது. உடனே நினைவுக்கு வந்தார் காலண்டர்படக்கலை நிபுணரான கொண்டய ராஜு. அப்போதெல்லாம் நவம்பர்-டிசம்பரில் புதிய காலண்டர்கள் வினாயகர், முருகன், லக்ஷ்மி, விஷ்ணு, சிவன், அம்பாள், ராமர் என்று விதம் விதமான தெய்வ உருவங்களைத் தாங்கி வரும். அவை கையில் கிடைத்தவுடன் நான் என் அப்பாவுடன் உட்கார்ந்து படங்களை ஆராய்வேன். தெய்வ உருவம் எப்படி வரையப்பட்டிருக்கிறது, முகம் சாந்தமாக, சிரித்தமுகமாக இருக்கிறதா, கண்கள், மூக்கு, உதடுகள் பாந்தமாக அமைந்திருக்கின்றனவா, ஆடை ஆபரணங்கள், சித்திரவேலைப்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன, கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணம் பொருத்தமானதா என்றெல்லாம் தீவிர ஆராய்ச்சி எங்கள் வீட்டில் நடக்கும். அதன்பின் ஒரு சில படங்களை மட்டுமே சிறந்தவை எனத் தேர்ந்து வீட்டில் பூஜை அறையில், கூடத்தில் மாட்ட என, ஃப்ரேம் போட அனுப்புவோம். இப்படியாக ’பிரமாதமான படம், பூஜைக்கு மிகவும் உகந்தது’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டதெல்லாம் வரைந்தது யார் எனப் பார்த்தால், சி.கொண்டய ராஜுவின் கையெழுத்து படத்தின் கீழ்மூலையில், மங்கலான வண்ணத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும். ஒரு சில வருடங்களிலேயே புரிந்துவிட்டது காலண்டர்பட ஓவியம் என்றால் கொண்டய ராஜுதான். அவர்தான் இந்த ஃபீல்டில் கில்லாடி. Simply masterclass ! மற்றவர்களெல்லாம் அவருக்கு அப்புறம்தான். கொண்டய ராஜு வரைந்த, எங்கள் வீட்டிலிருந்த சத்யநாராயணர் படம் ஒன்று.. ஆஹா, முகத்தில் என்ன ஒரு தேஜஸ், பேசும்கண்கள். . நேரில் வந்ததுபோல் இன்றும் மனக்கண்முன்னே நிற்கிறது. அந்தக்காலகட்டத்தில் ராஜா, முருகக்கனி போன்ற தென்னிந்திய ஓவியர்களும், எல்.என்.ஷர்மா, எஸ்.எம்.பண்டிட், பி.சர்தார் போன்ற வட இந்திய ஓவியர்களும் காலண்டர் படங்களில் பேரெடுக்கப் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.

கொண்டய ராஜு என்கிற, ’சிவகாசி காலண்டர் உலக’த்தையேக் கலக்கிய இந்த தலைசிறந்த ஓவியர் உண்மையில் யார், எந்த ஊர்? அவரைப்பற்றிய விபரம் ஒன்றும் அந்த பதின்மவயதில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது என்றும் அவருடைய சிஷ்யர்களான டி.சுப்பையா, ராமலிங்கம் போன்றோர் அவருக்கு உதவியாளர்களாகப் பணிசெய்கிறார்கள் என்று மட்டுமே செவிவழிவந்த தகவல். மேலதிகத் தகவல்கள் பிறகுதான் மெல்ல வந்துசேர்ந்தன.

சென்னையில் 1898-ல் பிறந்த கொண்டய ராஜு சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தார். புகைப்படக்கலைஞரும், ஓவியருமான தன் சித்தப்பா கெங்கயா ராஜுவின் பராமரிப்பில் வளர்ந்தார். சென்னை ஓவியக்கல்லூரியில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வு பெற்றார். ஓவியக்கலையில் நல்ல தேர்ச்சி இருந்தும், அந்த இளம் வயதிலேயே அவரது மனம் தனிமையை நாடியது. பிரம்மச்சர்ய வாழ்வை மேற்கொண்டார். திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷியின் சிஷ்யர்களோடு சேர்ந்து பிச்சை எடுத்து உண்டார். அங்கேயே தங்கி வாழ்ந்து வந்தார்.

ஆனால் அதிர்ஷ்ட தேவதையோ அவரை நோட்டம் விட்டது. எங்கேபோய் ஒளிந்திருக்கிறாய் என்றது ! அவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவரக் காட்சி அமைத்தது. ஒரு நாள் ஒரு பக்தர் தான் வரைந்திருந்த ரமணர் படம் ஒன்றை ரமண மகரிஷியிடம் காட்டினார். அதைப் பார்த்த ரமணர் அதில் ஏதோ குறையிருப்பதாகக் கூறினார். எதிரே சிஷ்யர்களோடு சிஷ்யராக அமர்ந்திருந்த கொண்டய ராஜு அதனைத் தான் பார்க்கலாகுமா என்றார். ரமணர் ஆச்சரியத்துடன் ’உனக்கு ஓவியம்பற்றி எல்லாம் தெரியுமா?’ என வினவினார். ‘ஏதோ கொஞ்சம் அடியேனுக்குத் தெரியும்’ என்று பணிவுடன் பதில் சொன்னார். ஓவியத்தைப் பார்த்த கொண்டய ராஜு, ரமண மகரிஷியின் அனுமதிபெற்று அதில் உள்ள குறைகளைத் திருத்திக் கொடுத்தார். திருத்தப்பட்ட ஓவியத்தைப் பார்த்த ரமணர் அசந்துபோனார். ‘ஓவியம் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கும் நீ இங்கு உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறாய்! கிளம்பு.. உன் கலையை உலகம் பார்க்கும் வேளை வந்துவிட்டது!’ என்று ஆசீர்வதித்து வெளிஉலகுக்குக் கொண்டய ராஜுவை அனுப்பிவைத்தார். . .

(தொடரும்)
படம் இணையத்திலிருந்து: நன்றி.

ஆளப்போகிறவர்கள்

பள்ளிக்கூடம் விட்டாயிற்று
திடீரென வெடித்த சந்தோஷத்தில்
புதுவெள்ளம்போல் வெளியே பாயும்
சிறுவர் சிறுமியர் கூட்டம்
முதுகில் அசையும் சுமையும்
வாயில் அரட்டைமணமுமாய்
வீடு நோக்கிச் சீராக
விரையும் பெண்பிள்ளைகள்
கொத்துக்கொத்தாக நின்றுகொண்டு
சைக்கிளின் முதுகில் ஒட்டிக்கொண்டு
வண்டுகளாய் அங்கங்கே வட்டமடித்துக்
கதைத்துக்கொண்டிருக்கும் பசங்களின்
வீடு திரும்பும் படலம்
இரவு வந்து விரட்டுமுன்
ஒருவழியாக ஆரம்பமாகிவிடுமா?

**