ஸ்ரீதேவி எனும் சினி சகாப்தம்

இவரை எப்படிப் பார்ப்பது? இந்திய சினி இண்டஸ்ட்ரியின் இன்னுமொரு புகழ்பெற்ற நடிகை என்றா? தெற்கிலும், வடக்கிலுமாக சில வருடங்கள் நன்றாக ஓட்டியிருக்கிறார் என்று சொல்லிக் கடந்துவிடலாமா? இவ்வளவுதானா இந்த மனுஷி?

பத்தோடு பதினொன்னாக என்றும் இருந்தவரல்ல ஸ்ரீதேவி. இந்திய சினிமா அல்லது இந்திய எண்டர்டெய்ன்மெண்ட் இண்டஸ்ட்ரி எனும் ஒரு உலகப்புகழ்பெற்ற பெரும் கலை, தொழிலமைப்பில், ஐம்பது வருடகாலம் அயராத தாக்கம் ஏற்படுத்திய ஆர்ட்டிஸ்ட். சீரியஸ் ரோல்களை இயல்பாகச் செய்த திறனுடன், கண்களில் விஷமம் மின்னும் நாசூக்கான காமெடித் திறனும் அவரிடமிருந்து வெளிப்பட்டது பல படங்களில். நடிப்புலகில் ஒரு அபூர்வத் திறனாளர் என்பதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. தன்னிடம் மையம் கொண்டிருந்த கலாதேவியின் கருணையினால், ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், பின்னர் ஹிந்தி என வணிகசினிமாவில் செயல்பட்டபோதிலும், சில அழுத்தமான, நெஞ்சிலிருந்து நீங்காத படைப்புகளைக் கொடுத்த உயரிய பெண் கலைஞர். நாடுமுழுதும் பெருகிப் பரவியது இவரின் ரசிகர் கூட்டம். The only female Super Star என்று ஸ்ரீதேவியைக் குறிப்பிடுகிறது புகழ்பெற்ற நாளேடான இந்தியன் எக்ஸ்ப்ரெஸ். இன்னும் திரையுலகின் எத்தனையோ பிரபலங்கள் எப்படியெல்லாமோ அவரைப் புகழ்ந்திருக்கிறார்கள். இருந்தும் ஒரு தனிமனுஷி என்கிறவகையில் அவரிடம் காணப்பட்ட குணங்கள் – குழந்தைத்தனம், வெளிப்படுத்திய அவையடக்கம், நம்பமுடியா எளிமை. பாலிவுட்டில் பணியாற்றத்துவங்கிய ஆரம்ப வருடங்களில் அவரை ஒரு ’குழந்தைப்பெண்’ என்று பொருள்பட, ‘a child-woman’ என்றே பலர் குறித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக நம்மிடையே இன்று இல்லாத நிலையில், நாம் நினைத்து ஆச்சரியப்பட, உருகிட நிறைய நினைவுகளை, திரைச்சித்திரங்களை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ரீதேவி .

மூன்றரை வயதுக் குழந்தையான ஸ்ரீதேவி ஒரு சோப் விளம்பரத்திற்காக, கிருஷ்ணனாக வேடமிட்டு கேமராவின் முன் நிற்கவைக்கப்படுகிறார். கேமராமேனாக அப்போது எதிர்நின்றவர், பின்னாளில் சிறந்த மலையாள இயக்குனர்களில் ஒருவராக அறியப்படவிருந்த பரதன்.(தமிழில் கமல், சிவாஜி நடித்த தேவர் மகன் படத்தை இயக்கியவர்). 1996-ல் ஸ்ரீதேவி பாலிவுட்டின் டாப் ஸ்டார். அப்போது தேவராகம் என்கிற தன் படத்தில் ஸ்ரீதேவி நடித்தால் நன்றாக இருக்கும், ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பது அரிதாயிற்றே எனக் குழம்பியே ஸ்ரீதேவியை சந்திக்க அவரது இல்லத்துக்கு வருகிறார் இயக்குனர் பரதன். ஸ்ரீதேவி அப்போது அங்கில்லை. அவரது அம்மா ராஜேஸ்வரி பரதனை அடையாளம் கண்டுகொள்கிறார். நீங்கள்தானே என் மகளைக் குழந்தைப்பருவத்தில் விளம்பரத்துக்காக ஃபோட்டோ எடுத்தது எனக் கேட்க, ஆச்சரியப்பட்ட பரதன் ஆம் என்கிறார். என் மகள் உங்கள் படத்தில் நடிப்பாள், கவலைப்படாமல் போய்வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பிவைத்தாராம் ஸ்ரீதேவியின் அம்மா. ஸ்ரீதேவியின் நெருக்கடியான வருடத்தில் அவர் இன்னொரு படத்தில் நடிக்க வாய்ப்பில்லை. இருந்தும் அம்மா வாக்குக் கொடுத்துவிட்டாரே என்பதனால், அதே அம்மாவுக்கு மூளை ஆப்பரேஷன் அமெரிக்காவில் நடக்கையில், அமெரிக்காவில் ஒருகால், தேவராகம் ஷூட்டிங்கிற்காக இந்தியாவில் ஒரு கால் என அலைந்து பரதனுக்குப் படத்தை முடித்துக்கொடுத்தார். ஒருபக்கம் அம்மாவின் உயிரையும், மறுபக்கம் அம்மாவின் வார்த்தையையும் காப்பாற்றிய மென்மனம் கொண்டவர் ஸ்ரீதேவி.

பொதுவாக கேமரா முன்னரேயன்றி, சொந்த வாழ்வில் அதிகம் பேசாத இந்த நடிகை அபூர்வமாக ஒரு நேர்காணலில், கமல், ரஜினி இருவரும் எனது நண்பர்கள் என்று கூறியிருக்கிறார். 2011-ல், ரஜினிகாந்த் உடல்நிலை மோசமாகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவருகையில், அவர் சீக்கிரம் குணமாகவேண்டி ஒரு வாரம் விரதம் இருந்திருக்கிறார். விரதத்தை முடித்து ஷிர்டி பாபா கோவிலுக்கு சென்று, ரஜினிக்காக, ஸ்ரீதேவி பிரார்த்தனை செய்து திரும்பியது சினிமா உலகிலேயே பலருக்குத் தெரியாது.

ஆறாவது வயதில் சின்னப்பத்தேவரின் துணைவன் படத்தில் குழந்தை முருகனாக வெளிப்பட்டு, வெள்ளைப்பேச்சில் நம் மனதை அள்ளியவர். தன் எட்டாவது வயதில், 1971- மலையாளப்படமான ’பூம்பாட்டா’வில் தாய் தந்தையை இழந்து, உறவினர் வீட்டில் வளரும் தாயில்லாப்பிள்ளையாய் பார்த்தோரின் மனதை உருகவைத்த குழந்தை ஸ்ரீதேவி. பலனாக 1971-ல், கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. 13 வயதினில் இயக்குனர் கே.பாலச்சந்தர் இவரைத் தமிழ்ப் படமான மூன்று முடிச்சின் ஹீரோயினாகத் தேர்ந்தெடுக்கிறார். (வேறொரு காலகட்டத்தில் நன்றியுணர்வோடு இதுபற்றிப் பேசியிருக்கிறார் ஸ்ரீதேவி). மூன்று முடிச்சு திரைப்படத்தில் அவர் சந்தித்தது, பின்னாளில் தமிழின் சிறப்புக் கலைஞர்களாக, ஆளுமைகளாக ஒளிரவிருந்த கமல் ஹாசனையும், ரஜினிகாந்தையும். அந்தப் படத்தில் நடிப்பில் இந்த இருவரும், அனுபவமில்லாத கத்துக்குட்டியான ஸ்ரீதேவியுடன் மோதி நிரூபிக்கவேண்டியிருந்தது! ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். பாரதிராஜா தன் ‘பதினாறுவயதினிலே’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது, முதலில் தயங்கிய ஸ்ரீதேவி, பின்னர் ஒப்புக்கொண்டார். மயிலாக வந்து ஒயிலாக ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக அமர்ந்துகொண்டார். ‘என்னோட பேரு குயில் இல்ல… மயில்!’ என்பார் வெகுளியாக ஒரு இடத்தில். (அவர் மறைவுக்குப்பின் கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பறந்துகொண்டிருக்கும் வாட்ஸப் மெசேஜ்களில் இது தெரியும்.) வேறு யாரையும் அப்போது அந்த ரோலில் நினைத்துப் பார்த்திருக்கமுடியுமா? அப்படியே யாருக்காவது கிடைத்திருந்தாலும் ஸ்ரீதேவியைப்போல் அந்த அப்பாவித்தனத்தைத் திரையில் கொண்டுவந்திருக்கத்தான் முடியுமா? இந்தப்படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான ’சோல்வா(ன்) சாவன்’ படத்தில் 1979-ல் நடித்து பாலிவுட்டில் கால்பதித்தார் ஸ்ரீதேவி. (இதற்கு முன் ஹிந்தியில் நடிகை லக்ஷ்மி நடித்த ஜூலி படத்திலும் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்). வடநாட்டு ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். 1983-ல் வெளியான, ரஜினிகாந்த் டபுள்ரோலில் நடித்த ஜானி படத்தில், பாடகி அர்ச்சனாவாக வந்து ’என் வானிலே ஒரு வெண்ணிலா’, ’காற்றில் எந்தன் கீதம்..’ ஆகிய பாடல்களுக்கான காட்சிகளுக்குத் தன் உணர்வினால் உயிரளித்த நடிகை.

தமிழ், தெலுங்கு, ஹிந்திப்படங்கள் என கமல் ஹாசனுடன் 27 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அந்தக் காலகட்டத்தில், பெரிய திரையில் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக இருந்தது இது. தமிழில் பாரதிராஜாவின் 16 வயதினிலே( கமல், ரஜினி, ஸ்ரீதேவி), சிகப்பு ரோஜாக்கள், கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (கமல், ரஜினி, ஸ்ரீதேவி), வறுமையின் நிறம் சிகப்பு (தெலுங்கில் ஆகலி ராஜ்யம்),பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை {ஹிந்தியில் சத்மா (Sadma)} ஆகிய புகழ்பெற்ற படங்களோடு, கல்யாணராமன், மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம் போன்ற படங்களில் சிறப்பாக பங்களித்துள்ளார் ஸ்ரீதேவி. ரஜினிகாந்துடன் மேலும் படங்கள்: காயத்ரி, வணக்கத்துக்குரிய காதலியே, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை போன்றவை. எம்ஜிஆர்-உடன் குழந்தை நட்சத்திரமாக ’நம் நாடு’ என்கிற படத்தில் வருகிறார். சிவாஜி கணேசனின் மகளாக பைலட் ப்ரேம்நாத், கவரிமான் போன்ற படங்களில் பாத்திரமேற்று செய்திருக்கிறார். 2015-ல் வெளிவந்த ’புலி ’ என்கிற படந்தான் தமிழில் ஸ்ரீதேவியின் கடைசிப்படம்.

தெலுங்குப்பட உலகில் கிருஷ்ணாவுடன் அவரது ஜோடி பிரசித்தம். பங்காரு பூமி, பங்காரு கொடுக்கு, கைதி ருத்ரய்யா, ப்ரேம நக்ஷத்திரம், கிருஷ்ணாவதாரம் போன்று 29 படங்களில் இருவரும் இணைந்துள்ளனர். 1992-ல் வெளியான, இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ’க்ஷ்ண க்ஷ்ணம்’ படம் புகழ்பெற்ற தெலுங்குப் படங்களில் ஒன்று. 1993-ல் வெளியிடப்பட்ட ’கோவிந்தா கோவிந்தா’ தெலுங்கு படத்தில் நாகார்ஜுனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீதேவி. இவையன்றி, ஆத்யபாடம், நாலுமணிப்பூக்கள், அங்கீகாரம், ஆ நிமிஷம், ஊஞ்சல் என இருபத்தைந்து மலையாளப் படங்களில் கமல் ஹாசன், மது, சோமன், மம்மூட்டி போன்ற பல்வேறு ஹீரோக்களுடன் ஸ்ரீதேவி பணியாற்றியுள்ளார் . பெரிய இடைவெளிக்குப்பிறகு 1996-ல் நடித்ததுதான், பரதனின் மலையாளப்படமான தேவராகம் (ஹீரோ:அரவிந்த்ஸ்வாமி).

1979-ல் பாலிவுட்டில் நுழைந்திருந்தாலும், ஹிந்திமொழி பிடிபட ஸ்ரீதேவிக்கு சிலவருடங்கள் ஆயின. ஆரம்பத்தில் நடிகை ரேகா உட்பட பலர் அவருக்கு ஹிந்திப்படங்களில் குரல் கொடுத்திருக்கின்றனர். 1989-வாக்கில் அவர் தன் வெற்றிப்படங்களான ச்சால்பாஜ் (Chaalbaaz), சாந்தினி ஆகிய படங்களில் நடிக்கையில் ஹிந்தி மொழி அவரிடம் வசப்பட்டுவிட்டிருந்தது. பாலிவுட்டில் அவரின் ஆரம்பப்படங்களில் ஒன்று ஹிம்மத்வாலா. இந்தப்படத்தின் ஹீரோவான ஜிதேந்திரா அப்போது மங்கிக்கொண்டிருந்த ஒரு ஸ்டார். ஆனால், படங்களின் பாட்டுக்களும் அதற்கேற்ப ஸ்ரீதேவியின் நாட்டிய, நடிப்புத்திறமையின் காரணம் கொண்டே படம் பிரபலமாகி, பணத்தை அள்ளிக் குவித்தது. வடநாட்டில் ஸ்ரீதேவி ரசிகர் வட்டம் உருக்கொண்டது. ’நாகினா’, புகழ்பெற்ற இயக்குனரான சேகர் கபூர் இயக்கிய சையன்ஸ்ஃபிக்ஷன் படமான ’மிஸ்டர் இண்டியா’ என வெற்றிகள் தொடர, இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் அறியப்பட்ட பிரபலமான பாலிவுட் ஸ்டாரானார் ஸ்ரீதேவி. இந்த வகையில் பார்த்தால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய புகழ்பெற்ற நட்சத்திரங்கள் தமிழ் மற்றும் இதர தென்னிந்தியப்படங்களோடு பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தபோதிலும், ஸ்ரீதேவி அளவுக்கு தெற்கு, வடக்கு என ஒருசேர வென்று கோலோச்ச முடியவில்லை அவர்களால். முன்னர் வைஜயந்திமாலா, பிறகு ஹேமமாலினி, ரேகா ஆகிய தமிழ்நாட்டு நடிகைகள் பாலிவுட்டில் புகழ்பெற்றனர். ஆனால் தென்னிந்திய மொழிப்படங்களில் அவர்களால் காலூன்ற முடிந்ததில்லை. ஸ்ரீதேவி மட்டுமே இத்தகு வியத்தகு சாதனையாளர். அதனால்தான் ’இந்தியாவின் ஒரே பெண் சூப்பர்ஸ்டார்’ என்கிற பட்டம் வெகு இயல்பாகப் பொருந்துகிறது அவருக்கு.

2012-ல் பதினைந்து வருட பெரிய இடைவெளிக்குப்பின், அவரது லைட் காமெடிப் படமான, இளம் பெண்இயக்குனர் கௌரி ஷிண்டே இயக்கிய ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ்’ வெளியானது. ஸ்ரீதேவியைத் தவிர படத்தில் தெரிந்த முகமென்று யாருமில்லை. ’மீண்டும் ஸ்ரீதேவி’ எனப் பெரும் உற்சாகத்தை ரசிகர்களிடையே அந்தப்படம் கிளப்பியது. கனடாவின் டொரொண்ட்டோ திரைவிழாவில் திரையிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் திரைவிமரிசகர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இளம்இயக்குனருக்கான பரிசை வென்றதோடு படம் நன்றாக ஓடி, வணிகரீதியிலும் ஹிட்டானது. அவரது 54-ஆவது வயதில், 2017-ல் அவரது கடைசி ஹிந்திப்படமான ‘மாம்’ (அம்மா) வெளியிடப்பட்டது. ரவி உத்யவர் இயக்க, ஸ்ரீதேவியுடன் நவாசுதீன் சித்திக்கி மற்றும் சிலர் நடித்த குறைந்த பட்ஜெட் படம். படம், போட்ட காசை மீட்டதோடு, கொஞ்ச லாபத்தையும் கொடுத்தது.

படம் வெளிவரவிருந்த நிலையில் தமிழ் நாளேடொன்றில் அவரது சிறிய நேர்காணலொன்று வந்தது. அதில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் மாம் என்றால் தமிழில் அம்மா. ஆனால் இது அம்மாபற்றியது மட்டுமல்ல, வளர்ந்துவரும் மகள் பற்றியதுமாகும் என்கிறார். இந்தப்படத்தில் நடித்தபோது, தன்னோடு எப்போதும் ஸ்டூடியோவுக்குக் கூடவந்த தன் அம்மாவின் நினைவு தாக்கியதாகக் குறிப்பிடுகிறார். மா என்றால் அம்மாவைக் குறிக்கும். ஆனால் தமிழில் அம்மா என்றால் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவின் வாழ்க்கைபற்றி படமெடுக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, ’அவரைப் போன்ற ஒரு ஆளுமை கொண்டவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய பொறுப்புமிக்க பணியாகும். அத்தகைய கதாபாத்திரத்துக்கு நான் இவ்வளவு விரைவில் நியாயம் வழங்க முடியாது என்று உணர்கிறேன். ஆனால் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது ஜெயலலிதாவை இறைவியாகவே கருதினேன். அவருடன் உரையாடிய கணங்கள் குறித்த இனிய நினைவுகள், இப்போதும் என்னிடம் அழியாமல் இருக்கிறது’ என்கிறார் ஸ்ரீதேவி.

நடிப்புத்தொழிலில் வெற்றிமேல் வெற்றிபெற்றபோதிலும், தன் பிராபல்யம்பற்றிய செருக்கு அவரிடம் காணப்பட்டதில்லை. அவருடைய பதின்மவயதில் காணப்பட்ட குழந்தைமை, ஒரு அப்பாவித்தனம் அவரில் நீடித்திருந்தது. அதுவே அவரது மாபெரும் சக்தியும், பலவீனமும். தனிமனுஷியாக எந்த நேர்காணலிலும் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தியவரில்லை. மிகவும் குறைவாக, ஜாக்ரதையாகப் பேசுபவர். உள்ளுக்குள்ளே அவர் மிகவும் மென்மையானவராகவும், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் மருண்டுபோய், சந்தேகத்துடன் இந்த உலகை நோக்குபவராகவே இருந்திருக்கிறார். வெளியே சந்தோஷமாக இருப்பதாகத் தெரிந்தாலும், உள்ளே தன் அகத்தின் பாதுகாப்பின்மையை, தன்னுடைய துக்கத்தைக் காட்டிக்கொள்ளாது, தன்னைச் சுற்றிலும் ஒரு உளவியல் கட்டமைப்புடனேயே அவர் எப்போதும் இருந்திருக்கிறார் என்கிறார் அவரது படங்களை இயக்கியவரும் அவரை அருகிருந்து அறிந்தவருமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஸ்ரீதேவி தன் சிறுவயதிலேயே பேரும்புகழும் அடைந்ததனால் தன் வாழ்வை ஸ்திரமாகப் பிடித்துக்கொள்ளவே அவருக்கு வாய்ப்பில்லாது போனதெனவும், தந்தை இருந்தபோதுகூட சொத்துபத்து விஷயங்களில் அவரது உறவினர்களாலேயே வஞ்சிக்கப்பட்டதும், அப்பாவின் மறைவுக்குப்பின் அவர் அம்மாவையே சார்ந்திருக்கவேண்டியிருந்ததும் காரணங்களெனக் கூறுகிறார் ராம் கோபால் வர்மா.

அவரது கல்யாணமும்கூட அவரால் விரும்பி அமைத்துக்கொள்ளப்பட்டதல்ல. அவரது ஒரே துணையான அம்மாவும் இறந்துவிட்ட நிலையில், இவ்வுலகில் தனித்து விடப்பட்டு செய்வதறியாது உள்ளுக்குள்ளே தவித்தபோது, யாரோ ஏதோ சொன்னார், வேறுயாரோ சிபாரிசு செய்தார், இதுதான் சரியோ, வேறுவழியில்லையோ என்கிற குழப்பமான நிலையிலேயே இறுதியில் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார் என்கிறார்கள். அவர்போய்ச்சேர்ந்த குடும்பத்திலும் அவரை மதித்தவரோ, உண்மை அன்பு காட்டியவரோ எவரும் இல்லை என்றுதான் தெரியவருகிறது. போதாக்குறைக்கு, ஸ்ரீதேவி சம்பாதித்த பணத்தைவைத்து, கணவரென வந்தவர் தன் பெருங்கடன்களை அடைத்துக்கொண்டார் என்றும் கேள்வி. ஸ்ரீதேவி சண்டைபோடும் குணத்துக்காரர் இல்லையாதலால், எல்லாவற்றையும் அனுசரித்துப்போவதாக எண்ணி, உண்மையில் எல்லாவற்றையும் இழந்தே வாழ்ந்திருந்ததாகத் தெரிகிறது. குழப்பத்தோடு குழப்பமாக, இரண்டு குழந்தைகள் – அதுவும் பெண் குழந்தைகள், பிறந்துவிட்ட நிலையில் அவர்களின் வளர்ப்பிலேயே தன் மனதை முழுதும் ஈடுபடுத்தி இருபது வருடங்களைக் கடத்தியிருக்கிறார்போலும், தனக்கென எந்த சுகமும் இல்லாமலேயே.

’மாலினி ஐயர்’ என இவர் நடித்த ஒரு காமெடி டிவி சீரியல், சஹாரா சேனலில் 2004-ல் வெளிவந்து, ஜனரஞ்சகமாக அமைந்தது. 2012-ல் பெரியதிரைக்கு ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ் (ஹிந்தி படம்)’ மூலம் திரும்பினார். 2013-ல் ஸ்ரீதேவிக்கு இந்தியாவின் உயர் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ வழங்கப்பட்டது. சிலவருடங்களுக்கு முன், அமிதாப் பச்சனின் ’கோன் பனேகா க்ரோர்பதி?’(Kaun banega crorepati – கோடீஸ்வரர் ஆகப்போவது யார்) டிவி நிகழ்ச்சியில், ஒருமுறை ஸ்பெஷல் கெஸ்ட்டாக ஸ்ரீதேவி வந்தபோது, அமிதாப் மிகவும் வாஞ்சையுடன், மரியாதையுடன் அவரை நடத்தியது நினைவில் இருக்கிறது. உடம்பை அதீதக் கட்டுப்பாட்டில் வைத்து நடித்ததோடு, மாடலிங் வேறு செய்துவந்தார் பிற்காலத்தில். இதையெல்லாம் அவர் விரும்பித்தான் செய்தாரா, செய்யுமாறு, மேலும் சம்பாதித்துக்கொடுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டாரா – அந்த இறைவனுக்கே வெளிச்சம். கடைசியில் துபாயில் எப்படித்தான் அவர் மறைந்தார் என்பதையும் நாம் அந்தப் படைத்தவனிடமே விட்டுவிடலாம். சதிகார உலகில், நம்மைப்போல் அப்பாவிகள் தெரிந்துகொள்ள வேறேதுமில்லை.

**

உண்டோ ?

கிட்டாத பழம்தான்
எத்தனை இனிப்பு
எட்டாத சிகரம்
எவ்வளவு உன்னதம்
தேடித்தேடியும் நாடிஓடியும்
கிடைக்காத கடவுள்தான்
எப்பேர்ப்பட்டவன்
அருகிலில்லாக் காதலிக்கு
இணை யாருமுண்டோ உலகில்?

**

மீண்டும் இந்த நாய்

என்னுடைய முந்தைய டெல்லி வருகைகளின்போது இந்த நாயைக் கவனித்திருக்கிறேன். மென்பழுப்பு நிறம். எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழ் தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். நிழலில் எப்போதாவது படுத்துக்கொண்டிருக்கும். எங்கள் காம்ப்ளெக்சில் வசிக்கும் பெரும்பாலானவர்களை இது கண்டுகொள்வதில்லை என்பதைப் பார்த்திருக்கிறேன். செலக்டிவ்-ஆகத்தான் வாலாட்டும் அல்லது பின்னே வரும். அதிகம் குலைக்காது. ஆனால் விசிட்டர்களில் சிலரைப் பார்த்ததும் ஏதோ புரிந்துகொள்கிறது. அவர்களை குரைத்து விரட்டிவிடப்பார்க்கும். குறைந்தபட்சம் அவர்கள் காரேறி, பைக்கேறி வெளியேறியபின்தான் நிம்மதியாகத் தன் இருப்பிடத்துக்குத் திரும்பும். எதனாலேயோ அவர்களில் ஓரிருவரை இது ப்ளாக்-லிஸ்ட் செய்துவைத்திருக்கிறது. பாஷை தெரியாததால் இதனை இண்டர்வியூ எடுக்கமுடிவதில்லை எனும் வருத்தமுண்டு. நாய்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவிலோ, பகலிலோ மற்ற தெருநாய்களின் கூச்சல், குழப்பங்களை இது சட்டை செய்வதில்லை. சேர்ந்து குரைப்பதில்லை. அதிகாலையில் ஊளையிடுவதில்லை. நாய்களின் சத்தமான பகல் பஞ்சாயத்துகளில் மூக்கை நுழைப்பதேயில்லை. தூரத்திலிருந்து பார்க்கும். சிந்தனை வயப்படும். அவ்வளவுதான். நாய் சமூகத்தின் அறிவுஜீவியோ என்னவோ, யார் கண்டது?

இதற்கு ஏதாவது திங்கக் கொடுக்கலாம் என்று அவ்வபோது தோன்றும். ஆனால் அதுவும் அவ்வளவு எளிதல்ல. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் – கொஞ்சம் தனித்துவமானது இது. பத்தோடு பதினொன்னு என்று நினைத்துவிடமுடியாது. சாப்பாட்டிலும் அப்படித்தான். யார் எதைப்போட்டாலும் சாப்பிட்டுவிடாது. அருவருத்த சாப்பாட்டிற்கு விறுவிறுத்த பட்டினிமேல் எனும் சித்தாந்தம் கொண்டது. கீழ்வீட்டுக்காரி (ஹிமாச்சல் ப்ரதேஷி) ஒருத்தி, ஒரு குளிர்காலக் காலையில், முந்தைய நாளின் மிஞ்சிப்போன ப்ரெட்-ஸ்லைஸை இதன் பக்கத்தில் வீசிவிட்டுப் போவதைப் பார்த்தேன். நாய்தானே.. தின்னுடும் என்கிற மனித மேட்டிமைவாத எண்ணம். ஆனால், நம்ப ஆளென்ன – ஐ மீன் – நாயென்ன, லேசுப்பட்டதா? கீழே கிடந்த ப்ரெட்டைப் பார்த்தது. அவள் உள்ளே போவதையும் நோட்டம்விட்டது. நகன்றுவிட்டது அந்த இடத்திலிருந்து. எனக்கும் வயசு பத்தாகப்போகுது. ஒன்னப்போல எத்தனப்பேரப் பாத்திருப்பேன் என்று நினைத்திருக்குமோ?

கீழ் தளத்திலே இன்னொரு வீட்டில் ஒரு பஞ்சாபிக் குடும்பம். வீட்டுக்காரர் பொதுவாக நாய்களின்மீது ப்ரியமுள்ளவர் என்று தோன்றுகிறது. இரவில் சாப்பாடுபோடுவதோடு (என்ன போடுகிறாரோ), குளிரில் இது நடுங்குமே என்பதற்காக ரப்பர்-மேட்டை, படுப்பதற்காக வாசலில் போட்டுவைப்பார். அதில் சுருண்டு படுத்துக்கொள்ளும். என்னுடைய நேரெதிர் வீட்டில் ஒரு உத்தராகண்ட் உத்தமி. எப்போதாவதுதான் கதவைத் திறந்துகொண்டு அவள் வாசலுக்கு வந்து நிற்பாள். சொல்லிவைத்தாற்போல், அந்தச்சமயம் பார்த்து இது அங்கே நின்றுகொண்டிருக்கும். அவள் அந்தப்பக்கம், இந்தப்பக்கமென வேடிக்கைப் பார்த்திருக்கையில், மெல்ல முன்னேறி வீட்டுக்குள் தலை நீட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இதன் நடவடிக்கையைக் கவனித்தவுடன் அவள் படபடத்து, ‘ச்சல்! ச்சல்! ஜா இதர்ஸே!’ (போ! போ! போய்த்தொலை இங்கிருந்து) என்று வெடிப்பாள். இதனை வெளியே தள்…ளி, வாசலை மறைத்து நின்றுகொள்வாள். இதற்கும் அவளைச் சீண்டுவதில் ஆனந்தமோ? ஒருநாள், நான் இந்த டிராமாவை பார்த்துவிட்டதைக் கவனித்தவள், ‘ஜாத்தாஹி நஹி ஹை Bhaahar.. அந்தர் ஆநா ச்சாத்தா ஹை! (வெளியே போகமாட்டெங்கிறது (சனியன்)..உள்ளே வரணுமாம்!) என்றாள். ‘இதற்கு ஏதாவது சாப்பிடக்குடுத்திருக்கீங்களா? என்னதான் சாப்பிடும் இது?’ என அவளைத் துருவப் பார்த்தேன். ’குச் நஹி!’ என்றாள். ஒன்றுமே சாப்பிடாதா என்றேன் ஆச்சரியமாக. ’கபீ, கபீ.. பிஸ்க்கூட் காத்தா ஹை. Bachchonwaali பிஸ்க்கூட். மேரி-கோல்ட்!’ {சிலசமயம் பிஸ்க்கெட் சாப்பிடும். குழந்தைகளுக்கான பிஸ்க்கெட். மேரி-கோல்ட்(Marie Gold)} என்றுமென்சிரிப்போடு சொன்னவள், கதவை அழுத்திச் சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.(இவனோடு ஜாஸ்தியாகப் பேசுகிறோமோ என்று நினைத்திருக்கலாம். பெண்மனதில் எப்போது, என்ன தோன்றுமோ, யாருக்குத் தெரியும்?)

இரண்டாவது தளத்தில் இன்னுமொரு உத்தராகண்ட். (டெல்லிக்குள் இப்போதெல்லாம் நிறையப் புகுந்துவிட்டது உத்தராகண்ட்). அந்த வீட்டில் இரண்டு கன்னிகைகள். அவர்களில் மூத்தவள் கருணை தேவதை – நாய் விஷயத்தில். நம்ப நாயைப் பார்த்ததும் மெல்லச் சிரித்துக்கொண்டே தலையில் தட்டுவாள், தடவிக்கொடுப்பாள். இது சிலிர்த்துக்கொண்டு நெளியும்.வளையும். ரெண்டுகால்களில் நின்று முன்னங்கால்களை உயர்த்தும். பிஸ்கட்டை உடைத்துப்போடுவாள். இப்படி சில கைங்கரியங்கள். சின்னவள்? பார்த்துக்கொண்டிருப்பாள். இருவரும் காலையில் கீழிறங்கிச் செல்கையில் அவர்கள் பின்னே செல்லும் நம்ப தோஸ்த். அவர்கள் தங்களின் பழைய மாருதி ஜென்னின் கதைத் திறந்து உள்ளே போவதைப் பார்த்து நிற்கும். கதவைச் சரியாகச் சாத்திக்கொண்டார்களா என்று உன்னிப்பாகக் கவனிக்கும். கார் கிளம்பி மறைந்ததும் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிடும்.

சமீபத்தில் டெல்லிக்கு மீண்டும் வந்தபின் ஒரு பிற்பகலில், பக்கத்துக்கடையில் கொஞ்சம் சாமான் வாங்கிக்கொண்டு படியேறினேன், அடுக்குமாடிக்குடியிருப்பின் முதல் தளத்திலிருக்கும் ஃப்ளாட்டை நோக்கி. கீழ்வீட்டு வாசலில் படுத்திருந்த இது மெல்ல எழுந்தது. மெல்ல? ஆம், கொஞ்சம் குண்டு, வயதும் ஆகிறதல்லவா? என்னைத் தொடர்ந்து படியேறி மேலே வந்தது. இரும்புக்கதவு, உள்கதவெனத் திறந்து உள்ளே போகையில், இதுவும் தலையை உள்ளே நுழைத்துக்கொண்டு, தலை உள்ளே, உடம்பு வெளியே என அகமும் புறமுமாக நின்றது. உள்ளே வர ஆசையா? கதவை சாத்தாதே – நான்தான் நிற்கிறேனே காவலுக்கு என்கிறதா? திங்க ஏதாவது வேண்டுமா? அதன் தலையை லேசாகத்தட்டிவிட்டு, மெதுவாக வெளியே தள்ளி இரும்புக்கதவை சாத்தினேன். ஓட்டை வழியே வெளியே பார்க்கையில், கதவைப் பார்த்து நிற்பது தெரிந்தது. சில நொடிகளில் அங்கேயே படுத்துக்கொண்டுவிட்டது. என்னடா இது, காலை வேளையில் தர்னா?

இதற்குப் போடுவதற்காக அவள் சொன்னமாதிரி, குழந்தைகள் பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்கி வந்திருக்கலாம். ஞாபகத்தில் இல்லை. கடைக்காரனோடு கேஜ்ரிவாலைப்பற்றிக் கதைத்துவிட்டு சாமானை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். (கேஜ்ரிவாலை நினைத்த மனதில் அப்போது, நாயைப்போன்ற அப்பாவி ஜீவன் வருவதற்கான சாத்தியம் குறைவுதான்). ஏதாவது இதற்குத் தின்பதற்குப் போட்டால் நல்லது. கிட்ச்சனைத் திறந்து ஆராய்ந்தேன். சப்ஜி கதகதப்பாக இருந்தது. ப்ரயோஜனமில்லை. பக்கத்தில் ஒரு பாத்திரத்தில், ரெஸ்ட்டாரண்ட்டிலிருந்து வாங்கிவந்திருந்த ஃபுல்க்கா ரொட்டி. அதனைக் கொஞ்சம் விண்டு (இதனை நம்பி முழுசாகப்போட்டால், சாப்பிடாது; எறியவும் மனசு வராது. தர்மம் தோய்ந்த சங்கடம்!) வாசலைத் திறந்து அதன் முகமருகே ரொட்டித்துண்டைக் காட்டிவிட்டு (ஏதோ கடவுளுக்குக் காட்டுவதுபோல்), பக்கத்தில் வைத்தேன். குனிந்து பார்த்தது. போனால்போகிறதென்று என்னையும் பார்த்தது. தலையைத் திருப்பிப் பக்கத்துப் பார்க்கைப் பார்க்க ஆரம்பித்தது. வேண்டாமாம். பிடிக்கவில்லையா? பசியில்லையா? பிஸ்க்கெட்டிற்காக இப்போது நான் கடைக்குப்போகப்போவதில்லை.

உள்ளே நுழைந்து நான் சாப்பிடுவதற்காக, ஃபுல்க்காவில் நெய்தடவி, மைக்ரோவேவுக்குள் தள்ளி, முப்பது செகண்ட் கொடுத்தேன். ஃபுல்க்கா சூடாகி, நெய்யால் மினுமினுத்தது. ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு, சப்ஜிக்குப்போகையில், மீண்டும் மனதில் வாசலில் படுத்திருக்கும் நாய். ஒருவேளை, நெய்தடவிய, கதகதப்பான ’ஃபுல்க்கா-வர்ஷன் 2’-ஐ இதற்குப் பிடிக்குமோ? கொஞ்சம் அதிலிருந்து விண்டு எடுத்துக்கொண்டேன். வாசல்கதவைத் திறந்து, அதன்முன்னே வைத்தேன். முகர்ந்தது. ஆராய்ந்தது. வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தது. அட! நெய் தேவைப்படுதா இந்தக் கழுதைக்கு? சே, இந்த நாய்க்கு? உள்ளே சென்று மிச்சமுள்ள விள்ளலை எடுத்துவந்து போட்டேன் ஒரு முழு ஃபுல்க்காவை சண்டித்தனம் செய்யாமல் சாப்பிட்டது. அதற்குமேல் உள்ளே போகாது. தெரியும்.

இப்போது நம்பநாய், நெய்ரொட்டி சாப்பிட்ட கதையைச் சொல்லிவிடவேண்டுமென்று ஆசை. எதிர்த்தவீட்டு எழில், எப்போது திறப்பாளோ கதவை ?

**