வலை எழுத்து

தமிழில் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் அலைஅலையாகக் கிளம்பியிருக்கின்றன கடந்த சில வருடங்களாகவே. எழுதுவோரின் திறமைக்கேற்பவும், எழுதுபொருள் பொருத்தும் அவை ப்ராபல்யத்துடன் வலையில் சலசலக்கின்றன. எல்லாமே வீறுநடை போடுவதில்லை. இங்கும் சார்லஸ் டார்வினின் கோட்பாட்டுப்படிதான் நடக்கும்: Survival of the fittest. மொழித்திறனும், அகச்செறிவும் கொண்ட பதிவுகள் வலைவீதியில் தொடர்ந்து உலா வரும். மற்றவை கால நதியின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும். புலம்பிப் பிரயோஜனமில்லை.

இருக்கிறது இண்டர்நெட்டு என்று எதை எதையோ எழுதி வலையேற்றி வைக்காதீர்கள் அன்பர்களே. எழுதுபொருள், எழுத்துப்பாணி (writing style), மொழி வல்லமை(command of the language) ஆகியவற்றில் முதலில் கவனம் செலுத்துங்கள். இதற்கு நிறையப் புத்தகங்கள் படிக்கவேண்டியிருக்கும். தமிழின் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், பிறமொழியிலிருந்து சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் எனத் தேடிப்பிடித்து வாசிக்க முயலுங்கள். படிப்பின்றிப் பயன்பெறாது தமிழ். வலை எழுத்தாளர்கள் தங்களின் வாசிப்பனுபவத்தில், எழுதுதமிழில் சீரிய கவனம் செலுத்தவேண்டிய காலகட்டம் இது.

வலை எழுத்து தரமான எழுத்தாக மாறினால், படைப்பாளிகளின், இலக்கிய விமரிசகர்களின் கவனத்துக்கு அது தன்னாலே வரும். வலையில் எழுதுவோர் மின்னூலாகவும், அச்சுப்பிரதியாகவும் தங்களது நூல்களை வெளியிட்டு வருகிறார்கள். நல்ல, தரமான படைப்புகள் பெருகினால் வலைத்தமிழ் சிறக்கும். இணைய வாசிப்பு இனிதாக அமையும்.

**

வழி மாறிய வழி

உன்னைப் படித்ததால்
ஒருவாறு சிந்திக்கிறேனா
இல்லாவிடில் வேறுவிதமாய்
சிந்தித்திருப்பேனோ
வழி தவறி, மாற்றுவழி சென்றிருப்பேன்
தடம் மாறிச் சென்றால்
புது இடத்துக்குப் போய்ச் சேரலாமே
வழி தவறாது தொடரும் ஆடுகள்
கடைசியில் போய்ச் சேருமிடம்
கசாப்புக்கடை அல்லவா

**

அசோகமித்திரன்

இந்தியாவின் இணையற்ற சமகால எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன். உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுடன் ஒப்பிடப்படும் தகுதிபடைத்தவர். ஐம்பதாண்டுகளுக்கு மேலாகத் தமிழில் எழுதிவந்தும், பெரும்பாலான தமிழர்களுக்கு சரியாகத் தெரியாதவர். குற்றம் அவருடையதல்ல என்பதை, நண்பர்களே, அறிந்துகொள்வீராக!

மத்தியவர்க்க மனிதரின் அன்றாட வாழ்வுத் தடுமாற்றங்கள், மன உலைச்சல்கள், ஓயாத போராட்டங்கள் – இவையே அவரின் கதைக்கரு. அலங்காரமில்லா வார்த்தைகளில், சொற்சிக்கனத்துடன் மனித வாழ்வின் நீங்காத சோகம், அர்த்தமின்மை ஊடே பயணித்து வாசகனை வேறு தளத்திற்கு நகர்த்தும் சக்திவாய்ந்த படைப்புகள் அவரது நாவல்களாக, சிறுகதைகளாக வெளியாகியிருக்கின்றன. மானசரோவர், பதினெட்டாவது அட்சக்கோடு, ஆகாசத்தாமரை, கரைந்த நிழல்கள், இருவர் போன்ற சிறந்த நாவல்களை எழுதியிருக்கிறார். பல புகழ்பெற்ற சிறுகதைகளில் இவரின், வாழ்விலே ஒரு முறை, எலி, பிரயாணம், அப்பாவின் சினேகிதர், காலமும் ஐந்து குழந்தைகளும் போன்ற சிறுகதைகளும் அடங்கும். கட்டுரைத் தொடர்கள் பல வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் குங்குமம் வார இதழில் தொடராக வெளியான அவரது அந்தக்காலச் சென்னை பற்றிய கட்டுரைகள் – `நடைவெளிப் பயணம்` புத்தகமாக வெளிவந்துள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் ஆங்கிலம் உட்பட்ட பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

`என் எழுத்து என்பது சக மனிதர்க்குச் செய்யும் மரியாதை’ என்கிறார் அசோகமித்திரன். நிறைய எழுதி, குறைவாகப் பேசுபவர். எப்போது எந்தப் பத்திரிக்கையில் எழுதலாம், எந்த டிவி-யில் கூப்பிடுவான் என்று ஒவ்வொருவரும் அலையும் இந்தக் காலத்தில், பேட்டிக்கு அழைத்தாலும் தவிர்க்க முயற்சிப்பவர். ஒரு எழுத்தாளனோட 20-பக்க பேட்டியை வாசிப்பதைவிட, அவனுடைய இரண்டு பக்க கதையை வாசித்தே அந்த வாசகனால் எழுத்தாளனைப் புரிந்துகொள்ளமுடியும் என்பவர் அசோகமித்திரன்.

வழக்கம்போல சிறந்த எழுத்தாளர்களை அடிக்கடி மறந்துவிடும் சாகித்ய அகாடெமி, 1996-ல் திடீரென விழித்துக்கொண்டு, அப்போது 30 ஆண்டுகளாக எழுதிவந்திருந்த அசோகமித்திரனுக்கு விருது அளித்தது. `ஞானபீட விருது` அமைப்புக்கு அவர் இன்னும் கண்ணில் படவில்லை. தமிழ் செய்த பாக்யம்! வேறென்ன சொல்ல.

அசோகமித்திரன் அவர்களுக்கு இன்று (22-09-2015) பிறந்த தினம். நிறைந்த ஆயுளும், நல்லாரோக்யமும் இறைவன் அருளால் அவருக்குக் கிட்டட்டும்.

**

வினை தீர்ப்போனே.. எமை ஆள்வோனே !

வினாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் இறுதிநாளாக நேற்று (20-9-15) கிழக்கு டெல்லி மயூர்விஹார் 3-ஆவது ஃபேஸில், இஷ்ட சித்தி வினாயகர் கோவிலில் உத்சவ மூர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். பக்தர் குழாம் மேள, தாளங்களுடன் உற்சாகமாக வினாயகரை நகர்வலம் அழைத்துச் சென்றனர். சூர்ய அஸ்தமனத்துக்குப்பின் துவங்கிய ஸ்வாமி ஊர்வலம் நெருக்கடியான கடைத்தெரு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் எனப் புகுந்து விளையாடியது. அந்தச் சமயம் பார்த்து கேஜ்ரிவாலின் மின் துறை, மின்சாரத்தை நிறுத்தி இருட்டடிப்பு செய்து, தும்பிக்கையானுக்குத் தன் பக்தியை தெரிவித்துக்கொண்டது. LED விளக்குகள், வினாயகரின் இருபக்கங்களிலும் பேட்டரி back-up-ல் பிரகாசித்துக் கைகொடுக்க, அழகான ஆபரணக்கற்கள், புஷ்ப மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த கணேசமூர்த்தி கவலை ஏதுமின்றி, ஜொலித்துக்கொண்டு வந்தார். சுற்றிலும் இருள். நடுவிலே ஒளிச்சுடராய் அழகு தெய்வம். பாடாவதி அரசாங்கத்தின் மின்வெட்டு. பார்வதி மைந்தனின் மின்னல்வெட்டு ! பக்தர்களின் பரவச மெட்டு. Blessing in disguise.

முக்கிய வீதிகளில், வீடுகளுக்கு முன்னே என பக்தர்களுக்குக் காட்சியளித்து, வினாயகப்பெருமான் கோவிலுக்குத் திரும்புகையில் இரவு 9:15. அவர் வருகையை அறிவிக்கும் வகையில் கோவிலின் முன் மலையாள வாத்தியக்காரர்கள், மிருதங்கம், தவில் எனப் பின்னி எடுத்தனர், ஒரு சிறிய வட இந்திய பக்தர்கூட்டம் மேளகாரர்களைச் சுற்றி ஆட ஆரம்பித்தது. இளைஞர்கள், சிறு பையன்கள். வாத்தியக்காரர் ஒரு rhythm -ல் சூடுபிடிக்க, ஆட்டம் அதற்கேற்றபடி கதியை மாற்றியது; ஏற்றியது. நின்றிருந்த பக்தர் கூட்டம் ரசித்துத் தலையாட்டியது. தோளில் வினாயகரை ஏற்றிவரும் பக்தர் குழாம் மெல்ல கோவில் வளாகத்துக்குள் திரும்பியது. நாதஸ்வரம் இனிமையாய் முழங்கியது. மேளம் தன் பங்குக்கு ஸ்ருதி சேர்த்தது. வாத்தியக்காரருக்கு வினாயகர் பாடல் ஏதும், சட்டென நினைவுக்கு வரவில்லையோ? “பழம் நீயப்பா! ஞானப்பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!“ என்று அவர் நாதஸ்வரத்தில் வினாயகர் தம்பியின் புகழை இசைக்கையில், ஒரிஜனலாக அப்பாடலைப் பாடிய கே.பி.சுந்தராம்பாளின் கணீர் குரல் காற்றில் எங்கோ கேட்டதுபோலிருந்தது.

நகர்வலம் முடித்து, கோவிலின் முன் வந்து நின்ற உத்சவமூர்த்திக்குத் தீபாராதனை காட்டப்பட்டது. மொபைல் கேமராக்கள் சுற்றிலும் மின்மினுத்துத் தங்களின் தொழில்நுட்ப உயர்வைத் தம்பட்டம் அடித்துக்கொண்டன. வினாயகர் மங்களவாத்ய இசையுடன் உள்ளே சென்றமர்ந்தார். மீண்டும் தீபாராதனை. பக்தகோடிகளுக்கு வீபூதிப்பிரசாதம்.

கோவிலுக்கு வெளியே, பிரசாதத்துக்கான கூட்டம் அனுமார் வாலாக நீண்டு பக்கத்திலிருந்த பார்க்கை முட்டியது. எதிரே ஒரு மூலையில் சமைத்துக்கொண்டிருந்தவர், வாணலியில் ஒரே ஈட்டில், 12-15 பூரிகளைப்போட்டு எடுத்துத் தன் கைவித்தையைக் காண்பித்துக்கொண்டிருந்தார். கோதுமைமாவில் செய்யப்பட்ட அழுத்தமான பூரி 4, சோலே, உருளைக்கிழங்கு என பக்தர்களுக்கு நெட்டித்தட்டில் வழங்கினார்கள் கோவில் சேவார்த்திகள். கணேசப்பெருமானைத் தரிசித்துக் காத்திருந்த பக்தர்களுக்கு பசிதணித்தது பிரமாதமான பிரசாதம்.

சிலதினங்களாக தொடர்ந்து டெல்லியில் மாலை-இரவு வேலைகளிலும் ஒரே புழுக்கமாகவே இருந்தது. ஆனால் வினாயகர் நகர்வலத்தின்போது, ஆச்சர்யமாகக் குளிர்ந்த காற்று வீசியது. பொதுவாக, கோவிலின் முன் நிற்கையில் (சுற்றிலும் கட்டடங்கள்), இரவிலும் புழுக்கம் ஆளை நெரிக்கும். ஆனால் நேற்று இதமான காற்று தொடர்ந்து வீசியது. அதில், கோடையில் தென்படாத ஒரு சுகமான குளிர்ச்சி. வினாயகப்பெருமானே, புரிகிறது. உமது கருணைத் துளிகள் பலவடிவங்களில் எம்மை வந்தடைகின்றன, அதற்கான தகுதி எமக்கிருக்கிறதோ, இல்லையோ..

**

ஆ! சிறியர்

கல்வியின் வெவ்வேறு நிலைகளில், வாய்த்த அருமையான ஆசிரியர்கள், பேராசிரியர்களைப்பற்றி நினைத்துப் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. அவர்களில் சிலர் திறமையாக, நேர்த்தியாகப் பாடம் எடுத்ததோடு நில்லாமல், இடையிடையே பாடத்துக்கு வெளியேயும், பல நல்ல விஷயங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டவர்கள். ஒரேயடியாகப் பாடம், பாடம் என ஸ்டீரியோடைப்பாகத் தேள்கொட்டாமல், அரைத்தமாவை அழுதுகொண்டே அரைக்காமல், அவ்வப்போது சற்றே விலகி, கொஞ்சம் நல்லகதை சொல்லி, நகைச்சுவையாகப் பேசி, கிண்டலடித்து மாணவர்களைச் மனதாரச் சிரிக்கவைத்தவர்கள். நல்வழியில் சிந்திக்கவும் தூண்டினார்கள்; கடினமான பாடங்களிலும் மாணவர்களின் ஆர்வம் தணியாது பார்த்துக்கொண்ட புத்திசாலி ஆசிரியர்கள்; இளம் வயதில் மனதில் இடம் பிடித்த நல்லோர்கள். இத்தகைய அக்கறை, திறமை மிகுந்தோரிடம் பாடம் கற்கும் வாய்ப்பு அமைந்தது என் வாழ்வின் பாக்யம். இப்போதும், அந்தப் பள்ளி/கல்லூரி வாழ்க்கை திரும்பிவராதா என மனம் ஏங்குகிறது.

ஆசிரியர் என்கிற வார்த்தை, அது நம் மனதில் ஒருகாலத்தில் ஏற்படுத்திய நேர்மையானவர், நல்ல வழிகாட்டி அல்லது குறைந்தபட்சம், தான் எடுக்கும் பாடத்தில் திறமைசாலி என்கிற ஒழுங்கான பிம்பம், தற்காலத்தில் வெகுவாகச் சிதைந்துபோய்விட்டது. மிகவும் துக்கத்திற்குரிய விஷயமிது. காலையில் தினசரியைத் திறந்தாலோ, டிவியைப் பார்த்தாலோ, வருவதெல்லாம் மங்களகரமான நியூஸ்தான். சகிக்கமுடியவில்லை. வழக்கமாக வரும் க்ரைம் ஸ்டோரிகளோடு, இப்போது ஆசிரியர்-தொடர்பான வன்மங்களும் சேர்ந்துகொண்டுள்ளன. ஆசிரியர் வேலையிலிருந்துகொண்டே சிலர், மாணவ, மாணவியருக்கெதிராக நிகழ்த்திய வன்மங்கள், வக்கிரங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. கேட்பதற்கே அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது.

வட இந்தியாவில் பள்ளிச்சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. அடிபட்டு சிதைபவர்கள் பிஞ்சுகள். பெரும்பாலும் அரசு ஆரம்பப்பள்ளிகளில், இத்தகைய, வன்முறையில் பி..ஹெச்டி வாங்கிய ஆசிரியர்கள் சிலர் தென்படுகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் ஏதோ சிறு தவறுக்காக ஒரு சிறுமியை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை – கவனியுங்கள்- ஆசிரியை, தாறுமாறாகக் குச்சியினால் விளாசுகிறார். அடி தாங்கமுடியாமல் சிறுமி கதறிக்கொண்டே ஓடமுயற்சிக்க, கம்பால் ஓங்கி சிறுமியின் தலையில் தாக்குகிறார். சிறுமி திரும்ப, முகத்தில் அதுவும் ஒரு கண்ணில் அடி விழ, ரத்தம் பீறிட கீழே விழுந்து மயக்கமாகிறாள். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட சிறுமி, கடும்காயம் காரணமாக சிகிச்சைக்குப் பின்னும், ஒரு கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழக்கிறாள். பெற்றொரின் மனநிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

டெல்லியின் புறநகர்ப்பகுதியின் அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர், படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத பள்ளி மாணவன் ஒருவனை தண்டிக்க முயல்கிறார். எப்படி? அவனது மனதில் நிரந்தர அவமான உணர்ச்சி ஏற்படும் வகையில் வன்மம் காட்டுகிறார், இன்னொருவர் மூலமாக. நூதன வழியாகத் தெரிகிறதல்லவா? அந்த வகுப்பின், நன்றாகப் படிக்கும், பார்க்கப் பளிச்சென்றிருக்கும் (உச்சநிலை அதிர்ச்சிக்காக) ஒரு மாணவியை அழைத்து, இந்த மாணவனின் கன்னத்தில் அறையச் சொல்கிறார் வகுப்பின் முன்னே. மாணவி யார், அந்த மாணவனைத் தண்டிக்க? அவள் திடுக்கிடுகிறாள்; தயங்குகிறாள். மறுக்கிறாள். ஆசிரியை நாயாகச் சீறுகிறாள். `சொன்னபடி கேள், இழுத்து ஒரு அறைவிடு இவனை!` என்று சிறுமியின்மீது கொலைவெறியோடு பாய்கிறாள். பையன் குன்றிப்போய் அவமானம் தாங்காது நிற்கிறான். வகுப்பு அதிர்ந்துபோய் பார்க்கிறது. தடுமாற்றத்துடனும், ஒருவித பயத்துடனும், வேறுவழியின்றி மாணவனை அறைகிறாள் அந்த இளம் மாணவி. உடம்பில் அல்ல, மனதில் நீங்கா காயமுற்று சின்னாபின்னமாகிறான் பையன். கொக்கரிக்கிறாள் ஆசிரியை வேஷத்தில் இருக்கும் அரக்கி. எப்படி இருக்கிறது வன்மத்தின் நூதனத் தாக்குதல்? அப்படி என்ன வெறுப்பு அந்தப் பையன் மீது? இத்தகைய வன்முறை அசிங்கத்தை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியையே வகுப்புக்குள் அவிழ்த்துவிட்டால், இளம் மாணவ, மாணவரிடையே நட்பு நிலை எவ்வாறிருக்கும்? ஒற்றுமையோ, பரஸ்பர அன்போ நிலவுமா? பாடம் படிப்பதற்கான, உயர்ந்த விஷயங்களைக் கற்றறிவதற்கான சூழலா இது?

டெல்லியில் ஒரு துவக்கப்பள்ளி. ஒன்றாவது இரண்டாவது வகுப்பெடுக்கும் ஆசிரியர். வகுப்புகளின் இடைவேளையில் 6, 7-வயதுச் சிறுமிகளை அழைத்துத் தன் மொபைலில் ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து பிஞ்சு மனதுகளைக் குழப்புகிறார்; பதறவைக்கிறார். அதில் அவருக்கு ஒரு வருத்தின்பம் (sadistic pleasure). பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தி எப்படியோ தட்டுத்தடுமாறி, தன் தாயிடம் வகுப்பில் ஆசிரியர் காண்பிக்கும் மொபைல் காட்சிகளைப்பற்றிச் சொல்லிவிடுகிறாள். அதிர்ந்த தாய், தன் பெண்ணுடன் படிக்கும் மற்றக் குழந்தைகளிடமும் விஷயத்தை உறுதிசெய்துகொண்டு, போலீசுக்குப் போகிறார். ஹை-டெக் ஆசிரியர் கம்பி எண்ணுகிறார்.

சில நாட்கள் முன்பு பத்திரிக்கை செய்தி: கர்னாடகாவில் மங்களூருக்கு அருகே ஒரு கிராமத்தில், வேதம் கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளியில் 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட ஒரு மாணவனைக் கடந்த 10 நாட்களாகப் பள்ளி வரவில்லை என்பதற்காக ஒரு ஆசிரியப் பெருந்தகை அடித்து நொறுக்குகிறது. அவன் சொன்ன காரணத்தைக் கேட்கும் நியாயம், தர்மம் அங்கு நிகழவில்லை. பையன் என்ன சொன்னான்? தான் கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டதாகவும், அதனால் ஜுரத்துடன் வீட்டில் ஓய்வெடுக்குமாறு ஆனது என்றும் கூறுகிறான். அவனது கையில் பலத்த கட்டுப்போடப்பட்டு இருக்கிறது. இடுப்பில் சிறிய துண்டைக்கட்டிக்கொண்டு கையிலிருந்து தோள்பட்டைவரை ஸ்லிங்குடன் (sling) நடுங்கிக்கொண்டு ஆசிரியர் முன் நிற்கிறான் அந்த மெலிந்த ஏழைச் சிறுவன். உண்மை கூறிய சிறுவனை கம்பினால் சுற்றிச்சுற்றி வந்து அடித்து வதம் செய்கிறார் அவனுடைய குரு மகராஜ். சக மாணவர்கள் பீதியுடன் பார்க்கிறார்கள். காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்துவிட்டார்கள். `வாட்ஸ்-அப்`பில் வலம் வந்த இந்த வன்மம், போலீஸ் கவனத்துக்குப்போனது. ஆசிரியராக வேஷமிட்டிருந்த அந்த அயோக்கியனைப் போலீஸ் கைது செய்தது. ஆசிரியர் வேடத்தில் அலையும் அரக்கர்களிடம், கல்வி கற்ற குழந்தைகளின் மனவளர்ச்சி (psychological growth), பிற்காலத்தில் எப்படி உருவெடுக்கும்? இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? இளம் மாணவர்மீதான வன்மத்தின் தென்னிந்திய சாம்பிள் இது.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் பள்ளிப் பிள்ளைகளுக்கெதிராக ஆசிரியர் எனும் வேஷத்தில் அலையும் கிரிமினல்கள் நடத்திய வன்முறை, வஞ்சக நாடகங்களிலிருந்து ஒரு சில காட்சிகளே இவை.இத்தகைய கொடுமைகள் நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது நாட்டில் என்பதுதான் கவலையை அதிகப்படுத்துகிறது.

Formative years என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பள்ளிக்குழந்தைகளின் ஆரம்ப வருடங்கள் வாழ்வில் முக்கியமானவை. நல்ல பெற்றோரும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் குழந்தைகளை நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்லவேண்டிய பருவம். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போயாகவேண்டும் என்கிற காலச்சூழலில், ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் சீரிய பங்கு, குழந்தைகளின் வளர்ச்சியில் இன்றியமையாததாக ஆகிவிட்டது. குற்றச்சூழலில் வளர்ந்தவர்கள், வக்கரித்த மனம் உள்ளவர்களை இத்தகைய ஆசிரியர் பணியில் அரசு அமர்த்தக்கூடாது. தேர்வுநிலையிலேயே அவர்களை வடிகட்டித் தூக்கி எறிந்துவிடவேண்டும். அரசுப் பணியில் யாரும் வந்து அமர்ந்துகொள்ளலாம் என்கிற நிலை வந்து விட்டால், தகுதியற்றவர்கள் நாற்காலியில் வேகமாக வந்தமர்வார்கள். நாற்காலியை ஒருமுறை பிடித்துக்கொண்டுவிட்டால், தவறுசெய்து பிடிபட்டாலும், தப்பிக்க வழி தேடுவார்கள். சிறு தண்டனைகளுடன் தப்பித்து, வேலையை தக்கவைத்துக்கொள்வார்கள். தங்களின் நாசகார வேலையை வேறிடத்தில், வேறொரு புள்ளியில் தொடர்வார்கள். அப்பாவி ஜீவன்கள் மேலும் மேலும் அல்லறும். அதன் கொடூர விளைவுகள் சமூக வாழ்வை நோயாய்ப் பீடிக்கும்.

சீரிய நற்பணி செய்யும் ஆசிரியர்களை மதிப்பதும், உரியவகையில் கௌரவப்படுத்துவதும், நல்லரசின், நல்ல சமூகத்தின் அடையாளம். அதைப்போலவே, தகுதியில்லாதவர்கள், குற்றவாளிகள் ஆசிரியர் பணியில் அமர்ந்திருப்பது தெரியவந்தால், உறுதியானால், அத்தகையோரை உடனடியாகக் களையெடுத்து நீக்குவதும், சமூகத்தின் சிறப்பான மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.

**

எங்கே நிம்மதி ?

சமீபத்தில் சென்னையில் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் செல்கையில் வழியைத் தவறவிட்டு, அவரையே நான் நிற்கும் இடத்துக்கு அழைக்கும்படி ஆனது. நம்மால் மற்றவருக்குக் கஷ்டத்தைத் தவிர வேறென்ன! நான் அடையாளம் சொன்ன சந்திப்பில் அவர் ஸ்கூட்டரில் வர, அவர் என்னைப் பார்த்து வண்டியை நிறுத்தியதாக நினைத்தேன். என்னை நோக்கிக் கையசைத்துவிட்டு, எதிரே வந்துகொண்டிருந்தவரை நிறுத்திப் பேசலானார். ரொம்பவும் நெருக்கமானவரோ?

விஷயம் வேறுவிதமானது என்று அவர்கள் பேசுகையில் புரிந்தது. எதிரே நடந்துவந்துகொண்டிருந்தவர் என் உறவினரின் உற்ற நண்பர். வயது 80-ஐ நெருங்கிக்கொண்டிருக்கவேண்டும். சோர்ந்த முகம். மெல்லிய தேகம். லேசான தள்ளாடல். கூடவரும் ஒருவருடன் எங்கோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறார். என் உறவினர் அவரிடம் கவலையோடு,

இந்த வெயில்ல எங்க கெளம்பிட்டீர்?

மடிப்பாக்கம் போறேன்..

ஏன், ஏதாவது விசேஷமா?

என்னோட இன்னொரு பிள்ளை வீட்டுக்கு போறேன்

வயசான காலத்துல, ஏன் இப்பிடி அலையறீர்? ஒரு இடத்தில இருந்தா என்ன? சின்னப் பையன் வீட்ல என்ன ப்ராப்ளம் ஒமக்கு?

நிம்மதி இல்ல இங்கே.. நான் அங்கே போறேன்!

ஹ்ம்..! நிம்மதியைத் தேடி இங்கிருந்து அங்கே. அங்கே போனால் கிடைத்துவிடுமா? சொன்னால் புரியாது; போய்ப் பார்த்தால் தெரியலாம். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையாய்த்தான் எப்போதும் தெரியும்.
வாழ்வின் ஒரு இடத்திலிருந்து, ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றுக்கு, நிம்மதியைத் தேடி தீராப்பயணம். இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது இந்தப் பூமியில் மனித வாழ்க்கை. இது மனித இயல்போடு சம்பந்தப்பட்டது. இயல்பு என்பது மனம் சார்ந்ததல்லவா? மனமோ சஞ்சலமானது. சதா சர்வகாலமும் ஆடிக்கொண்டே இருப்பது. எந்த நிலையிலும் ஒரு contentment –நிறைவு, திருப்தி காணாதது. எதிலும் குறைகாணும் இயல்புடையது. இத்தகைய மனதை வைத்துக்கொண்டு காலட்சேபம் செய்யும் மனிதன் வேறு என்ன செய்வான்? அங்கும் இங்குமாய் அல்லாடுவதைத்தவிர ?

வயதானவர்களைக் கொஞ்சம் உற்று நோக்குகையில், அவர்களது நடவடிக்கைகளைக் கவனிக்கையில், மனம் கவலை கொள்கிறது. வயதாகிவிடுவதின் மூலமாய் இவர்களில் பெரும்பாலானோர் அடைந்ததென்ன? தலையிலே நரை. முகத்திலே வாட்டம். உடம்பிலே சோர்வு, தள்ளாடல். இது உடம்புக்கு நிகழும் இயற்கை. அவர்களின் மனதுக்கு? ஏதாவது நிகழ்ந்ததா? உடம்பு முதுமை அடைந்ததைப்போல், மனதும் முதிர்ச்சி அடைந்துள்ளதா? இல்லையே. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் – வயதாகிவிட்ட சின்னப்பிள்ளைகள் ! இறுகிவிட்ட பிடிவாதம். மற்றவரின் கருத்தையோ, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையையோ ஏற்க, தாங்கிக்கொள்ள, அனுசரித்துப்போக இடம்கொடுக்காத மனநிலை கொண்ட சராசரி மனிதர்கள். பெரியவர்கள் என்கிற சமூக அந்தஸ்து இவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதில் குளிர்காய விரும்புகிறார்கள். ஆனால் அதற்கேற்ற மனப்பக்குவம், தகுதி இல்லை. அப்படி இல்லையே என்கிற பிரக்ஞையும் இல்லை.

காலத்தின் தவிர்க்க இயலாத வாழ்வியல் மாற்றங்கள் (lifestyle changes), பெற்றோர்-பிள்ளைகளிடையே நாளுக்குநாள் அதிகமாகிவரும் தலைமுறை இடைவெளி (ever-increasing generation gap) போன்றவைகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடுகின்றன. குடும்ப வாழ்க்கை என்பது தீவிர பரிணாம மாற்றம் கொள்ளும் காலகட்டத்தில், நிலைமையைப் புரிந்துகொள்ளாது, பக்குவமின்றி, கிணற்றுத்தவளைகளாக வாழும் முதியோரின் அந்திமக்காலம், அவர்களுக்கே பெரும் சோதனைக்கட்டமாக ஆகிவிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

“மாறும் உலகில், மாறா இளமை அடைவோம் கண்ணா!“ என்று நாயகி பாடுவதாக வரும், ஒரு பழைய திரைப்படப் பாடலில். மாறா இளமைகொண்ட மார்க்கண்டேயனாக ஒவ்வொருவரும் ஆனால் – ஆஹா, ஜோராகத்தான் இருக்கும். ஆனால் அப்படி எழுதப்படவில்லையே நம் விதி! ஹாலிவுட் லெஜெண்ட்களில் ஒருவரும், அவரின் காலகட்டத்தில் பேரழகி எனக் கருதப்பட்டவருமான மர்லின் மன்ரோ (Marilyn Monroe), தன் இளமையின் உச்சத்தில், வாழ்வின் தவிர்க்கமுடியாத முதுமைநிலை பற்றி யோசித்துப் பார்க்கிறார். சொல்கிறார்: “சில சமயங்களில் நான் இப்படி நினைக்கிறேன்: முதுமையை எளிதாகத் தவிர்த்துவிடலாம்… இளமையிலேயே இறந்துவிட்டால் என்ன! ஆனால் ஒரு சிக்கல். வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவில்லை என்றாகிவிடும். நம்மை நாமே முழுதாகப் புரிந்துகொள்ளமுடியாது போய்விடுமே!“ அந்த இளம் வயதிலும், பக்குவ அறிவின் ஒளிக்கீற்றுகள் – flashes of brilliance at a relatively tender age…

**

ஐந்தும் ஆறும்

அரைவயிறு குறைவயிறாக
அலைந்து திரியும் தெருநாய்களை
மனதினில் எப்போதாவது நிறுத்திச்
சிந்தித்ததுண்டா புத்திசாலி மனிதரே
அவனியில் அவதரித்த
அந்தப் புண்ய தினத்திலிருந்து
அடி உதை வசவுகளைத் தவிர
வேறெதையும் சரியாக உண்டதில்லை
உமது வசவுகளின் கீழ்மையை
ஒருபோதும் அவை அறிந்ததில்லை
ஆறாவது அறிவையோ
அதற்கும் மேலேயோகூட
நீர் கொண்டிருந்தாலும்
அந்த அப்பாவி ஜீவன்களும்
அவ்வப்போது உம்மைத் திருப்பித் திட்டுவதை
நீரும்தான் அறிந்திருக்கமாட்டீர்

**

கிரிக்கெட் தொடர் : இந்தியா ஆக்ரோஷ வெற்றி

தொடரின் ஆரம்பத்திலேயே, “அச்சமற்ற, ஆவேசமான கிரிக்கெட் விளையாடுவோம்“ என்றார் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி. தான் வெறும் வாய்ச்சொல் வீரரல்ல என்று அதை செய்தும் காண்பித்துவிட்டார். இந்தியாவின் பட்டோடி, ஸ்ரீகாந்த், கங்குலி வரிசையில் ஆக்ரோஷமான கேப்டனாகக் காணப்படுகிறார் கோஹ்லி. கிரிக்கெட் ஒரு நவீன விளையாட்டாக மேலும் மேலும் மாற்றம் பெற்றுவரும் நிலையில், போட்டி மனப்பான்மையும், தொழில்நுணுக்கங்களும் வளர்ந்துவரும் வேளையில், இத்தகைய ‘fearless and at the same time, a thinking captain’ இந்திய டெஸ்ட் அணிக்கு கிடைத்திருப்பது நல்லது.

இந்திய-ஸ்ரீலங்க கிரிக்கெட் தொடர் 1-1 என்கிற சமநிலையில், மூன்றாவது டெஸ்ட் கொழும்புவில் சூடாக ஆரம்பித்தது. பிட்ச் வேகப்பந்துவீச்சுக்குத் துணைபோனது. ஆரம்பத்தில் ஆடவந்த இந்தியா, துல்லியமான ஸ்ரீலங்க வேகப்பந்துவீச்சையும், திறமையான ஃபீல்டிங்கையும் எதிர்கொள்வதில் திணறியது. வழக்கம்போல் விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. 6 சதங்கள் அடித்திருந்த நிலையிலும் ஆஸ்திரேலியாவில் சரியாக விளையாடததால், ரிசர்வ் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்த செத்தேஷ்வர் புஜாரா(Chetheshwar Pujara), இந்த மேட்ச்சில் (முரளி விஜய் இல்லாத நிலையில்) ஓப்பனராகக் களம் இறக்கப்பட்டார். திடீரென்று நமது டூர் செலக்டர்களுக்கு, அவர் நின்று விளையாடக்கூடிய திறமை வாய்ந்தவர் என்பது நினைவுக்கு வந்திருக்கும். ஒரு பக்கம் ராஹுல், ரஹானே, கோஹ்லி, ரோஹித், பின்னி என்று ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, புஜாரா தன் அபாரமான திறமையை சரியான சமயத்தில் வெளிக்கொணர்ந்தார். 59 ரன்னெடுத்து அமித் மிஷ்ரா அவருக்குத் துணை. இறுதி வரை ஆட்டமிழக்காத புஜாரா 145 ரன் எடுத்து இந்தியாவின் கௌரவத்தைக் காப்பாற்றினார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 312.

ஸ்ரீலங்காவின் முதல் இன்னிங்ஸும் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. ஒரு கட்டத்தில் 47/6 என்கிற அபாயகர நிலைக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் அது தள்ளப்பட்டது. ஆனால் தன் முதல் டெஸ்ட்டை ஆடிய குசால் பெரேரா, பதற்றமின்றி, சிறப்பாக ஆடி 55 ரன்கள் எடுத்தார். ஹெராத் 49 ரன் சேர்க்க, ஸ்ரீலங்கா 201-ல் ஆல் அவுட்டானது. ஆச்சரியமான வகையில், இஷாந்த் ஷர்மா ரன் அதிகம் கொடுக்காமல் 5 ஸ்ரீலங்கர்களை `பேக்`செய்து அனுப்பினார். ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களையும், லெக் ஸ்பின்னர் மிஷ்ரா 2 விக்கெட்டுகளையும், யாதவ் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், ஸ்ரீலங்காவின் நுவான் ப்ரதீப் ஜோராகப் பந்து வீசினார். ரன் சரியாக எடுக்கவிடாமல், புஜாரா உட்பட முதல் 4 இந்திய வீரர்களை விரைவில் பெவிலியனுக்குத் திருப்பினார்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் இப்படி ஃப்ளாப் ஷோ கொடுத்தபிறகு, மிடில் ஆர்டர் பேட்டிங்க் அதிசயமாக கைகொடுத்தது! இந்திய மிடில் ஆர்டர் வீரர்களின் விளையாட்டைக் கொஞ்சம் கவனியுங்கள்: ரோஹித் ஷர்மா 50, ஸ்டூவர்ட் பின்னி 49, நமன் ஓஜா(முதல் டெஸ்ட்) 35, அமித் மிஷ்ரா 39, அஷ்வின் 58(டாப் ஸ்கோர்). இது எப்படி! 4 விக்கெட்டுக்கு 64 ரன்கள் என்று ஆரம்பத்தில் தடவிய இந்திய அணி, 274-க்கு வேகமாகப் பாய்ந்தது. 386 என இலக்கு வைத்து ஸ்ரீலங்காவின் தூக்கத்தைக் கெடுத்தது.

நான்காவது நாள் இறுதிப்பகுதியில் ஸ்ரீலங்கா இரண்டாவது இன்னிங்ஸ் இலக்கைத் துரத்த முனைந்தது. இஷாந்த் ஷர்மாவுக்கு ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களைக் கண்டாலே ஏனோ, சூடேறிவிடுகிறது. முதல் இன்னிங்ஸிலேயே ஸ்ரீலங்க பேட்ஸ்மென்களை வறுத்தெடுத்த இஷாந்த், பந்து வீச்சில் அனல் பறக்கவிட்டார். ஸ்ரீலங்கர்களும் அவரை அதி கவனமாக ஆட விரும்பியிருக்கவேண்டும். ஆனால் துவக்க ஆட்டக்காரார்களை துவக்கவே விடவில்லை இஷாந்த். தரங்காவை பூஜ்யத்திலேயே விரட்டிவிட்டார். யாதவ்வும் விக்கெட்டெடுக்க, கேப்டன் கோஹ்லி ஒரே குஷி. 4-ஆவது இடத்தில் அதிரடிக்காக அனுப்பப்பட்டிருந்த தினேஷ் சண்டிமாலின் காரியத்தை 18 ரன்களிலேயே இஷாந்த் முடித்துவிட்டார். இந்திய பௌலர்களின் ஆக்ரோஷம், அவசரம் ஸ்ரீலங்க ரசிகர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. போதாக்குறைக்கு கிராமத்து தேவதை முன் சாமியாடிபோல, தன் தலையில் தானே அடித்துக்கொண்டு சண்டிமாலை கேலிசெய்து வழியனுப்பினார் இஷாந்த். Too much aggression. (இஷாந்த் பேட்டிங் செய்தபோது, ஏற்கனவே ஹெராத், பிரசாத், சண்டிமால் ஆகியோருடன் அவருக்கு சூடான வாக்குவாதம் ஏற்பட்டு அம்பயர் குறுக்கிடவேண்டியிருந்தது).

ஐந்தாவது நாள் ஆட்டம் இந்தியாவின் தொடர்வெற்றி வாய்ப்பு, ஸ்ரீலங்காவின் கடுமையான எதிராட்டம் ஆகியவற்றை பூதாகரமாகத் தாங்கி நின்றது. ரசிகர்கள் சீட் நுனியில் இருந்தார்கள். ஸ்ரீலங்காவின் ஸ்கோர் 5 விக்கெட்டிற்கு 107 ரன் என்கிற நிலையிலும், குசால் பெரேரா, மேத்தியூஸ் திறமையாக ஆடி ஸ்ரீலங்க வெற்றி நம்பிக்கைக்கு வலுவூட்டிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீலங்காவின் ரன்விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. கோஹ்லியின் நெற்றியில் கவலைக்கோடுகள். ஸ்கோர் உயர, உயர ஒரு கட்டத்தில் இருவரும் அவுட்டாகிற மாதிரியே தெரியவில்லை. பிரமாதமாக விளையாடிய கேப்டன் மேத்தியூஸ் சதமடித்தார். பெரேரா அந்தப்பக்கம் அவர்பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்.

இஷாந்த், அஷ்வின் இருவரையும் மீண்டும் தாக்குதலில் புகுத்தி, கள வியூகத்தை மாற்றினார் கோஹ்லி. பிட்ச் ஸ்பின் எடுக்காவிட்டாலும், மதியூகமான பந்துவீச்சினால் ஸ்ரீலங்காவைக் குழப்பிக்கொண்டிருந்த அஷ்வின், 70-ரன் அடித்து ஸ்ரீலங்காவின் நம்பிக்கை ஒளியாயிருந்த குசால் பெரேராவின் விக்கெட்டைத் தகர்த்துத் தூக்கி எறிந்தார். திருப்புமுனை. அந்தப்பக்கம் மேத்தியூஸ், இஷாந்தின் இன்ஸ்விங்கருக்கு பலியானார். ஸ்ரீலங்காவின் அரண்மனை தகர்ந்தது. ஆவேசம் காட்டமுயன்ற கடைநிலை ஆட்டக்காரர்கள் அஷ்வினிடம் அடிபணிந்தார்கள். ஸ்ரீலங்காவின் கதைக்கு 268-ல் முற்றுப்புள்ளி வைத்துத் தொடரை வென்றது இந்தியா. கோஹ்லியின் ஆனந்த நாட்டியம் ஆரம்பமானது!

ஆட்ட நாயகனாக செத்தேஷ்வர் புஜாரா அறிவிக்கப்பட்டார். வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையில், ஸ்ரீலங்காவின் பிரசாத், பிரதீப் ஆகியோரின் பிரமாதப் பந்துவீச்சை எதிர்த்து, அபாரமான துவக்கம் தந்தவர் புஜாரா. அவருடையது மறக்கமுடியாத இந்திய இன்னிங்ஸ். அபார சுழல் வீசி, தொடரின் இறுதி இன்னிங்ஸில் 58 ரன் எடுத்து டாப் ஸ்கோர் செய்ததோடு, மொத்தம் 21 ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்கு வெடி வைத்த அஷ்வின் `தொடர் நாயகன்`.

ஸ்ரீலங்காவை லங்க மண்ணிலேயேப் போட்டு நசுக்குவது எந்த ஒரு அணிக்கும் பெரிய சவால்தான். 22 வருடங்களுக்குப் பின், இந்த தொடர் வெற்றி (2-1), இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதற்குமுன் ஸ்ரீலங்காவில், 1993-ல் இந்த நல்ல காரியத்தை செய்தவர் கேப்டன் முகமது அசருதீன். இந்தியா மிகவும் ஆக்ரோஷமாக கிரிக்கெட் ஆடி வென்ற தொடர் இது. பெருமைக்குரியவர் கேப்டன் விராட் கோஹ்லி. அவருடைய தீரா முனைப்பும், அணியினரின் அயராத உழைப்பும் இந்த வெற்றியைக் கொண்டுவந்தது. You and your team deserve all the kudos that are coming up, Virat ! Keep it up. Another big home series against SA is landing shortly !
**