கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி

2021 ஆரம்பித்து 2 மாதங்கள் முழுசாக முடியவில்லை. கிரிக்கெட் உலகை அதகளப்படுத்தியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்பாரா, அதீத வெற்றிகள் – in terms of exceptional quality and perseverance for us and extreme shock for the opponents! நினைத்துப் பார்க்கவும் முடியாத ரகளையான ஆட்டங்கள், முடிவுகள். அப்படி ஒன்றாக நேற்று (25/2/2021) – இரண்டாவது நாளிலேயே ‘கத்தம்’ ஆன அஹமதாபாத் பகலிரவு டெஸ்ட் – சரித்திரப் பக்கங்களில் ஏறி உட்கார்ந்துகொண்டது. இதற்கு முன்னும் சில டெஸ்ட்டுகள் இப்படி 2-ஆவது நாளிலேயே முடிந்திருக்கின்றனதான். (மிகவும் சமீபத்தியது 2018-ல், டெஸ்ட் அனுபவம் போதாத ஆஃப்கானிஸ்தானை இந்தியா எளிதாக வென்றது).

ஆட்டத்தில் வெற்றி என்றால் ஒரு பக்கம் துள்ளலும், இன்னொரு பக்கம் துவண்டுவிழுதலும் நடக்கும்தானே. இரண்டாவதாகச் சொன்னது இங்கிலாந்தின் கதையாயிற்று, 5-நாள் ஆட்டத்தின் இரண்டாவது நாளிலிலேயே. இங்கிலீஷ் வீரர்கள் நேற்று ராத்திரி தூங்கியிருக்க மாட்டார்கள். என்ன நடந்தது என்று காலையிலும் சரியாகப் புரிந்திருக்காது. Hangover of a late-night party is nothing compared to a hangover that envelopes one, after a sound thrashing in the hands of the enemy. சுழலில் சிக்கிச் சிதறியதை தங்கள் மனதில் மீண்டும் மீண்டும் போட்டுப்பார்த்துக் குலைவார்கள். அப்படி ஒரு மரண அடி. அடுத்த வியாழனுக்குள் எழுந்துவிட்டால் சரி..

Axar
Kingpin of Indian attack

அக்‌ஷர் என்பது இந்தியாவின் புதிய அஸ்திரம். இது அஷ்வினைவிடவும் துல்லியமாகப் பாயும். கொல்லும். எதிரி எதிர்பார்க்கவில்லை. தரமான ஸ்பின் பௌலிங்கை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்தின் டாப் பேட்ஸ்மன்கள் வெலவெலத்து அவுட்டானது அகமதாபாதிலும் நடந்தேறியிருக்கிறது. இங்கிலாந்தின் பேட்டிங் கோச்சின் முகத்தில் ஈயாடவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்? பந்துகளைச் சந்திக்கத் திராணியற்று விக்கெட்டுகள் கிடுகிடுவென இரண்டு இன்னிங்ஸிலும் சரிந்தன. முதல் பேட்டிங் செய்கையிலேயே 74-க்கு 2 என்றிருந்த இங்கிலாந்து மேற்கொண்டு ரன் சேர்க்கமுடியாமல், 112-ல் இந்திய ஸ்பின்னர்களிடம் சுருண்டது. அக்‌ஷர் மிரட்ட, 6 விக்கெட்டுகள் அவரது காலடியில்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்? 99-க்கு 3 என்று முதல் நாளிரவு இருந்த இந்தியாவை, இரண்டாவது நாளில் 145 ஆல்-அவுட் ஆக்கியதில் ஏகப்பட்ட குஷி இங்கிலாந்துக்கு. இருக்காதா பின்னே! பார்ட்-டைம் ஸ்பின்னர் எனக் கருதப்படும் ரூட்டிற்கே 8 ரன்களில் 5 விக்கெட் கிடைக்குமளவுக்கு இந்தியாவின் பேட்டிங் சொதப்பல். கொடுமை. ஆனால் இடைவேளைக்கப்புறம் அவர்கள் பேட்டும் கையுமாக இரண்டாவது இன்னிங்ஸிற்காக இறங்குகையில் – 175-180 அடிக்கலாம் என எத்தனித்திருப்பார்கள் – புதுப்பந்தும் கையுமாக வரவேற்றது இஷாந்தோ, பும்ராவோ அல்ல. அக்‌ஷர் பட்டேல்! முதல் 3 பந்துகளில் 2 விக்கெட். 0 / 2. இங்கிலாந்தின் பேண்ட் அப்போதே இடுப்பிலிருந்து நழுவ ஆரம்பித்துவிட்டது. அதற்கப்புறம் நடந்தது பேட்டிங் அல்ல.. பேத்தல். பிட்ச் என்னப்பா செய்யமுடியும், நேராக வரும் பந்தே கண்ணில் படாவிட்டால் ?

’என்னென்னவெல்லாமோ செய்துபார்த்தது: அம்பயரை முறைத்தது, சான்ஸே இல்லாத சமயங்களிலும் DRS ! – என்று அலறியது, பிட்ச்சை வெறித்துப் பார்த்தது, மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டது, அவ்வப்போது பிரார்த்தனையும் செய்திருக்கும்..’ என இங்கிலாந்தின் பரிதாபத்தை வர்ணிக்க முயல்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ். ஒன்றும் ஒப்பேறவில்லை. 81 ஆல்-அவுட். இந்தியாவுக்கெதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர். இந்தியா வெல்ல 49 ரன்களே தேவை என்ற இலக்கு. ரோஹித்தும், Gill-உம் சேர்ந்து 8 ஓவருக்குள் அடித்து நொறுக்கி, விரட்டிவிட்டார்கள் இங்கிலாந்தை.   பிங்க் பந்து, இங்கிலாந்தின் முகத்தைச் சிவக்க வைத்துவிட்டது.

அஷ்வினுக்கு விக்கெட் – கோஹ்லி குதூகலம்!

பிட்ச் படுமோசமாமா? டெஸ்ட் ஆடுவதற்கே லாயக்கில்லையா? இப்படி சிலர் இங்கிலாந்தில் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  அவர்களைப்போல் சில இந்திய பழசுகளும். எதிர்பார்த்ததுதான். ‘It looks undercooked because the batsmen were undercooked..’ எனத் திட்டியிருக்கிறது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழ். விமரிசனம் இரண்டு அணிகளின் பேட்ஸ்மன்களுக்கும் சேர்த்துத்தான் என்பதைக் கவனிக்கவேண்டும் – Rohit Sharma and Zak Crawley (Eng. first innings) being exceptions.

ஸ்டார் சேனல் விமரிசகரான இங்கிலாந்தின் முன்னாள் ஸ்பின்னர் க்ரேம் ஸ்வான் (Graeme Swann) இங்கிலாந்து பேட்ஸ்மன்களைக் கடுமையாக சாடியிருக்கிறார். ‘க்வாலிட்டி ஸ்பின் பௌலிங்கை எதிர்கொண்டு விளையாடுகிற விதமா இது? இந்த மேட்ச்சில் ஸ்பின்னர்களுக்குக் கிடைத்த 28 விக்கெட்டுகளில், 21-ல், பந்து ’ஸ்பின்’ ஆகவே இல்லை! நேராக வந்து pad-ஐயோ, ஸ்டம்ப்பையோ தாக்கியவை. இதிலும் நீங்கள் ’எல்பிடபிள்யூ’ அல்லது ’க்ளீன் -போல்ட்’ ஆகிறீர்கள்!  பிட்ச்சையா குறை சொல்லப்பார்க்கிறீர்கள்?’ எனப் பாய்ந்துள்ளார் ஸ்வான். மேலும், அஷ்வினை விடவும் இதுபோன்ற பிட்ச்சுகளில் ஆபத்தானவர் அக்‌ஷர் என்றிருக்கிறார். இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சனும் விடவில்லை. இரு தரப்பு பேட்ஸ்மன்களின் ஆட்டத்தையும் குறை சொல்லியிருக்கிறார். ’3-ஆவது, 4-ஆவது நாளுக்கு ஆட்டத்தைக் கொண்டு சென்றிருக்கவேண்டும். பந்தை ஒழுங்காகப் பார்த்து ஆடினால்தானே!’ என்று விளாசல்.

’இரண்டே நாட்களில் கதையை முடித்து, இங்கிலாந்தை இந்தியா அவமானப்படுத்திவிட்டது. ஆனால் உண்மை என்ன? மேட்ச் ஆரம்பிக்கும் முன்னரே, இங்கிலாந்து தோற்றுவிட்டது.. அபத்தமான அணித் தேர்வு: ஒரே ஒரு ஸ்பின்னர், 11-ஆம் நம்பர் வீரராக நால்வர் !’ – என இங்கிலாந்தின் சோகத்தைக் கிண்டிக் கிளறிப் பார்த்திருக்கிறது லண்டனிலிருந்து வெளிவரும் The Sun.

2-1 எனத் தொடரில் இந்தியா முன்னிலை. மேட்ச்சில் அக்‌ஷருக்கு 11 விக்கெட்டுகள். Patel is already a find of the tour for India. பட்டேல் போடுகிற போட்டில் ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லை என்பதே மறந்துவிட்டது ரசிகர்களுக்கு! அஷ்வினின் 400 விக்கெட்டுகள். இஷாந்த் ஷர்மாவுக்கு 100-ஆவது டெஸ்ட் மேட்ச் இது – அபார டெஸ்ட் சாதனைகள்.

இதே மைதானத்தில், வேறொரு பிட்ச்சில் கடைசி டெஸ்ட். மார்ச் 4-ல் துவக்கம்.  அதில் இந்தியா தோற்காமல், வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ, உலகக்கோப்பை டெஸ்ட் சேம்பியன்ஷிப் ஃபைனலில் நியூஸிலாந்தை  சந்திக்கும்.  இந்தியா தோற்றால், ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கும் யோகம்! பார்ப்போம்.

**

Cricket: பகலிரவு டெஸ்ட் !

இன்று (24-2-21) அகமதாபாதின் மொடேரா (Motera) மைதானத்தில் ஆரம்பமாகிறது, இந்தியா-இங்கிலாந்து தொடரின் மூன்றாவது டெஸ்ட். உலகக்கோப்பை சேம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதிபெறுமா இல்லை ஏமாற்றம்தானா என்பதை இந்த Pink-ball Day-Night Test சொல்லிவிடும்!

Motera – World’s biggest Cricket Stadium

மொடேரா அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. எல்.ஈ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு, மிகவும் நவீனப்படுத்தப்பட்ட, 110 லட்சம்பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய,  உலகின் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் இது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இதைத் திறந்துவைத்து கிரிக்கெட் உலகிற்கு அர்ப்பணிக்கிறார்! சுமார் 55000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோவிட் பரவல்-தடை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படியொரு காலத்தில் இத்தனைபேரை ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்க்கவைப்பதே ஒரு மாபெரும் சாதனை. இந்திய கிரிக்கெட் போர்டு பாராட்டுக்குரியது.

SG’s Pink Cricket Ball for Day-Night Tests

பிட்ச் எப்படி? பொதுவாக பகலிரவு டெஸ்ட்டில் Pink ball-கொண்டு ஆடுவதால், பிங்க் பந்தின் பளபளப்பு மங்காமலிருக்கவென பிட்ச்சில் பசுமை இருக்குமாறு பார்த்துக்கொள்வதுண்டு. 6 மி.மீ.. உயரப்புல் காட்டும் பிட்ச் பரப்பு. இது  அதிகபட்ச ஸ்விங், மூவ்மெண்ட் தருவதால் வேகப்பந்துவீச்சாளர்களின் மனதில் குஷியைக் கிளப்பும். ஸ்பின்னர்களுக்கோ  வேதனை. அவர்கள் ஜாலம் இதில் எடுபடுவதில்லை என்பது இதுவரையிலான அனுபவம். இதுதான் இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்டான கடந்த வருட கல்கத்தா டெஸ்ட்டிலும் நடந்தது. முக்கிய ஸ்பின்னர்களான அஷ்வினுக்கும், ஜடேஜாவிற்கும் மொத்தமாகவே 7 ஓவர்கள்தான் மேட்ச்சில் தரப்பட்டது!

ஆனால் தொடரின் 3-ஆவது முக்கியமான  டெஸ்ட் ஆடப்படவிருக்கும் மொடேரா மைதானத்தில் அந்தக் கதை திரும்பவராது எனத் தோன்றுகிறது.  புல் கிட்டத்தட்டக் காணப்படாத லெவலுக்கு Curator பிட்ச்சை சிரைத்துவைத்திருப்பதாகத் தெரிகிறது!  குறிப்பாக ஈரப்பதன் காட்டும் ட்வைலைட்/இரவு வேளையில், இந்தப் பிட்ச் எப்படி நடந்துகொள்ளும்? வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் தருமா? சுழல்வீரர்களுக்கு சுருட்டித் தருமா விக்கெட்டுகளை? இரண்டு அணிகளிலும் எதையும் சந்திக்கத் தகுதியான பௌலர்கள்  உண்டு. ஆனால் பேட்ஸ்மன்களின் பாடு ? 

இந்த டெஸ்ட்டில் ’இந்திய 11’ – எப்படி இருக்கும்? ரோஹித் ஷர்மாவிலிருந்து, ரிஷப் பந்த்-வரை – முதல் 6 பேட்ஸ்மன்களில் மாற்றம் இருக்காது. 7-ல் அக்‌ஷர் பட்டேல், 8-ல் அஷ்வினும் மாற்றப்படமாட்டார்கள். 9, 10, 11-க்கான வீரர்கள்  மாறிக் காட்சியளிப்பார்கள். 2 வேகம்,  3 சுழல் ஃபார்முலாவா? 3 வேகம், 2 சுழல் என்கிற சூத்திரமா? கோஹ்லியின் மண்டைக்குள் ஊருவது எது! அதைப்பொறுத்து இறுதி 3 வீரர்கள்.  வேகப்பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவும், இஷாந்த் ஷர்மாவும் கடந்த வருட பகலிரவு கல்கத்தா டெஸ்ட்டில் வித்தை பலகாட்டி, பங்களாதேஷைத் தூர்வாரினார்கள். இப்போது எதிரியோ இங்கிலாந்து. வேகத்தில் விதவிதமாக வைத்திருக்கும் எதிரி. அவர்களது இளம் ஸ்பின்னர்களும் திறமையானவர்கள்.  ஒரு முழுமையான டெஸ்ட் அணி இங்கிலாந்து. ஆதலால் இந்திய அணி  கவனமாக தேர்வுசெய்யப்படவேண்டும்.

வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜின் இடத்தில் வரலாம். சுழல்வீரர் குல்தீப் யாதவின் இடத்தில் உமேஷ் யாதவ் வருவாரா? இல்லை , வாஷிங்டன் சுந்தர் அல்லது ஹர்தீக் பாண்ட்யா – ஆல்ரவுண்டர்களில் ஒருவரை இந்தியா இறக்கக்கூடுமா என்பதே ரசிகர்களின் படபடப்பு.  ஹர்தீக்கின் மைனஸ் – இப்போது அவர் முன்போல் ’மீடியம் பேஸ்’ வீசுவதில்லை. (ஆனால் அவர் மொடேராவில், பிங்க்-பந்தில் பந்துவீசி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தது பத்திரிக்கையாளர் கண்களில் பட்டுள்ளது!) அசத்தலான மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன். புல் மழிக்கப்பட்ட மொடேரா பிட்ச், ஸ்பின் ஜாலம் காட்டும் என கணிக்கப்பட்டால், சுந்தர் நுழையக்கூடும். அவரின் பேட்டிங்கோடு, வேகமாக வந்து விழும் ஆஃப் ஸ்பின்னும் கைகொடுக்கலாம். உமேஷா, சுந்தரா, ஹர்தீக்கா? கஷ்டமான வேலை, இந்த செலக்‌ஷன் வேலை!

**

சென்னைத் திரைப்பட விழா 2021

சினிமாப்பைத்தியங்களுக்குப் பேர்போன நாடு இந்தியா. அதிலும் தமிழ்நாடு.. மேலும் குறிப்பாக சென்னை நகரம். மனதை அயரவைத்த லாக்டவுன் காலத்திற்குப்பின், 2021 தரும் நல்விருந்து வந்துவிட்டது! சென்னை திரைப்படவிழா -Chennai International Film Festival (CIFF)ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கிறது. சர்வதேச சினிமாவும் வித்தியாசமான சில தமிழ்ப்படங்களும் என அணிவகுத்து நிற்கின்றன விழாவுக்கென. 53 நாடுகள், 91 படங்கள். சிறந்த டைரக்டர்களின் படங்கள் அல்லது சினி-விமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட சமீபத்திய திரைப்படங்கள் அல்லது விருதுக்கென சிபாரிசு , வென்றவை எனத் தேர்வுசெய்யப்பட்டவை.  

தரமான உலகப்படங்களை ஆர்வமாகத் தேடும் ரசிகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில அந்நிய நிலத்துப் படங்கள்:   

விழாவின் ஆரம்பப்படமான ஃப்ரான்ஸின் (Locarno திரைவிழாவுக்கு சிபாரிசு செய்யப்பட்ட)  ‘The Girl With a Bracelet’ (Crime வகை ஃப்ரெஞ்ச் மொழிப் படம்.(Dir: Stephane Demoustier). பள்ளி இறுதிவகுப்பு மாணவி லிஸாவின்மீது பழி: தோழியைக் கொன்றுவிட்டாள்! இதோ கேஸ் ஆரம்பிக்கப்போகிறது – உண்மை வெளிவராமலா போய்விடும்? ஆனால்.. அவள் நடந்துகொள்ளும் விதம்..

அர்ஜெண்டினா படமான ‘தூக்கத்தில் நடப்பவர்கள்’ (Los Sonambulos (The Sleepwalkers), கோடையில் பிக்னிக் செல்லும் ஒரு அம்மா, மகள் கதை. ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் எப்படி ஒருவரை ஒருவர் மோதவைக்கின்றன, முறைக்கவைக்கின்றன என மனித ஆசாபாசங்களை மென்மையாகக் கடத்துகிறார் இயக்குனர் பாலா ஹெர்னாந்தஸ் (Paula Hernandez).

போர்ச்சுகலின் திரைப்படம் ‘Listen’ (‘கவனி’). Dir: Ana Rocha): லண்டனில் ஒரு தம்பதியின் மூன்று சிறுகுழந்தைகளை, ஏதோ ப்ரச்னையென சமூகசேவைகளுக்கான அரசுத்துறை கொண்டுபோய்விட்டது. தங்கள் குழந்தைகளை மீட்க தம்பதி படும்பாட்டைச் சொல்லும் கதை.

போலந்திலிருந்து புதுமுக இயக்குனரின் படமொன்று ’I never Cry’. (நான் அழுவதில்லை)    (Dir: Piotr Domalewsky). உருக்கம். நெருக்கம். மொபைலும் கையுமாக இருக்கும் 17 வயது துள்ளல் பெண்ணொருத்திக்கு குடும்பத்தலைமை ஏற்கவேண்டிய இக்கட்டான நிலை. அயர்லாந்தில் பணிபுரிந்த அவளது தந்தை கட்டடப்பணியில் விபத்தொன்றில் இறந்துவிட்டதாக அதிரவைத்த செய்தி. போலந்துக்கு வந்து தன்னை அடிக்கடி பார்க்காத அப்பாவின்மீது, உணர்வுபூர்வ நெருக்கத்தை அவள் என்றும்  கொண்டிருந்ததில்லை. ஆங்கிலம் பேசத்தெரியாத அம்மாவால் அயர்லாந்துபோய் கணவனின் உடலைப் பெறமுடியாத இயலாமை. துக்கம். பதின்மவயது மகளுக்கு ஆங்கிலப் பிரச்னை ஏதுமில்லை. தயங்கினாலும், போகிறாள். அயர்லாந்து போய்ச் சேர்ந்தபின்தான், இறந்துவிட்ட அப்பாவைப்பற்றி ’அறிந்துகொள்ள’ ஆரம்பிக்கிறாள்.. கவனம் மிக ஈர்த்த படம்.  Zofia Stafiej எனும் இளம் புதுமுகம் மகளாக தூள்கிளப்பியிருக்கிறாராம்.

ஆஃப்கானிஸ்தாலிருந்து Ramin Rasouli இயக்கிய ஒரு படம்: ’The Dogs didn’t Sleep Last Night’ (நாய்கள் இரவில் உறங்கவில்லை). நித்ய யுத்தம் சீரழித்துவிட்டிருக்கும்  நாட்டின் சோகக் கதையைச் சொல்கிறது. ஆடுமேய்க்கும் ஒரு பெண், பறவை பிடிக்கும் ஒரு பையன், ஒரு பள்ளி ஆசிரியன் என வேறுபட்ட வாழ்க்கைகொண்டவர்களின் கதைகள் எப்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைகின்றன எனச் சொல்லிச்செல்லும் சுவாரஸ்யம். ஆஃப்கன், ஈரானிய நடிக, நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

Keoni Waxman இயக்கி, ஸ்டீவன் சீகல் நடித்திருக்கும் பெல்ஜியத்தின் ’A Good Man’ (ஒரு நல்ல மனிதன்) அதிரவைக்கும் திரைப்படம்.  இஸ்லாமியத் தீவிரவாதியும், ஆயுத விற்பனையாளனுமான ’சென்’ (Chen)-ஐப் பிடிக்க/ போட்டுத்தள்ளும் ரகசியத் திட்டத்துடன் அலெக்ஸாண்டர் எல்லைப் பகுதிக்குத் தன் வீரர்களுடன் போகிறான். எதிர்கொண்ட பயங்கரத் தாக்குதலில், அவனுடைய அணியினர் கொல்லப்படுகிறார்கள். சென் தப்பியோடிவிடுகிறான். அலெக்ஸாண்டர் ..? -என நகரும் கதை.

விருதுபெற்ற இஸ்ரேல் படமொன்று: ஏஷியா (Asia). அம்மா-மகள் கதை. அம்மாவின் பெயர்தான் ஏஷியா. ரஷ்யாவிலிருந்து இஸ்ரேலுக்கு தன் மகளுடன் குடியேறி நர்ஸாகப் பணிபுரியும் single mother. தன் இஷ்டப்படி, அதேசமயம்,  பிறர் விருப்பு, வெறுப்புகளை மதிக்கும் ஒரு வித்தியாசமான பெண். மகள் ஒரு நாள், தாயான அவளிடம் வந்து சொல்லும் வார்த்தைகள் அவளைத் திடுக்கிடவைக்கின்றன. ஹீப்ரு/ரஷ்ய மொழிப்படம். இயக்கம்: Ruthy Pribar.

இவை தாண்டி பிற இந்தியமொழிப் படங்கள்,  தமிழ்ப்படங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் இல்லாமல் சென்னையில் திரைவிழாவா! சில:

‘Bridge’ (Assamese film Kripal Kalita). மலையாளப் படம் ’Safe’. இயக்கம்: பிரதீப் கலிபுரயத். இன்னொரு மலையாளப் படம் : ‘தி.மி.ராம்’ (இயக்கம்  ஷிவராம் மோனி). ‘Gatham’ எனும் தெலுங்கு படம் (இயக்குனர்: கிரன் கொண்டமடுகுலா).  மராத்தி படம்: ‘ஜூன்’ (இயக்கம்: சுஹ்ருத் கோட்போலே, வைபவ் கிஸ்தி). ஒரு ஒரியப் படம்: காலிரா அதித்தா (இயக்கம்: என்.எம்.பாண்டா).

விழாவில் தமிழ்ப்படங்கள்: 1.அக்கா குருவி (இயக்கம்: சாமி ) 2. ‘KD’ (இயக்கம்: மதுமிதா சுந்தரராமன்). 3. பாஸ்வர்ட் (இயக்கம்: கண்ணன்.) 4. சியான்கள் (இயக்கம்: வைகறை பாலன்). 5. விண்டோ சீட் (இயக்கம்: பரத்ராஜ்) 6. அமலா ( இயக்கம்: நிஷாத் இப்ராஹிம்). 7. கன்னிமாடம் (இயக்கம்: போஸ் வெங்கட்). 8. காட்ஃபாதர் (இயக்கம்: ஜெகன் ராஜசேகர்) 9. என்றாவது ஒரு நாள் (இயக்கம்: வெற்றி துரைசாமி) 10. மழையில் நனைகிறேன் (இயக்கம்: டி.சுரேஷ் குமார்). 11. The Mosquito Philosphy -தமிழ்ப்படந்தான்! (இயக்கம்: ஜே.ராதாகிருஷ்ணன்). 12. கல்தா (இயக்கம்: ஹரி உத்ரா). 13. காளிதாஸ் (இயக்கம்: ஸ்ரீசெந்தில்) 14.லேபர் (இயக்கம்: சத்யபதி). 15. சூரரைப் போற்று (இயக்கம்: சுதா கொங்கரா) 16. மை நேம் இஸ் ஆனந்தன் (இயக்கம்:ஸ்ரீதர் வெங்கடேசன்). 17. பொன்மகள் வந்தாள் (ஜே.ஜே.ஃப்ரடரிக்) 18. க.பெ. ரணசிங்கம் (இயக்கம்: விருமாண்டி).

அப்பாடி! இத்தனைத் தமிழ்ப்படங்களா ஒரு திரைவிழாவில்? ஆச்சரியம்.

பிப்ரவரி 18-லிருந்து 25 வரை செல்லும் திரைவிழா முத்துக்களை சென்னையின் PVR Multiplex (முந்தைய சத்யம் சினிமா),   Anna Cinemas  ஆகியவற்றில் கண்டு மகிழலாம். தமிழ்ப்படங்களாகத் தேடிப்பார்த்துப் போகாமல், பிறமொழி, உலகப் படங்களையும் கண்டு ரசியுங்கள். கலாரசனை மேம்படும். சினிமா தொடர்பான விஷயங்கள் சரியாகப் புலப்பட ஆரம்பிக்கும். படங்களுக்குச் செல்கையில், கோவிட்கால முகக்கவசம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துவிடவேண்டாம்.  கூட்டம் நெரிக்கும். முன்பதிவு செய்துகொண்டு செல்லவும்: http://www.chennaifilmfest.com

**  

IPL 2021 : சென்னையில் வீரர்கள் ஏலம்…!

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்தைப் போட்டுத்தள்ளிவிட்டது இந்தியா. தொடரின் தற்போதைய ஸ்கோர் 1-1. சரி, இப்போது அடுத்த காட்சி !

இன்று  சென்னையில் கோலாகலமாக வருகிறது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம்(18-2-21 மதியம், Star Sports 1 சேனல்). எட்டு IPL அணிகள், கடந்த ஆண்டின் தத்தம் லிஸ்ட்டிலிருந்து முக்கியமான சிலரைத் தக்கவைத்துக்கொண்டு,  நிறையப்பேரைக் கழட்டிவிட்டிருக்கிறார்கள். அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020-இல், கொடுத்த காசுக்கு ஏற்ற, சரியான ஆட்டம் காண்பிக்கவில்லை அவர்கள். சிலருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை! அவர்களில் சிலர்: க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபின்ச், நேதன் கூல்ட்டர்-நைல் (ஆஸ்திரேலியப் புலிகள்), மொயீன் அலி (இங்கிலாந்து) ஜிம்மி நீஷம் (நியூஸிலாந்து). வெளியேற்றப்பட்ட இந்திய சீனியர்களில் சிலரும் இன்றைய  ஏலத்தில் முழித்துக்கொண்டு நிற்கிறார்கள் (ரூவா போச்சே.. இன்னிக்கு என்ன கெடைக்குமோ, கெடைக்காதோ?) : ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், ஷிவம் துபே, முரளி விஜய், உமேஷ் யாதவ். இவர்களில் சிலர் திரும்பவும் வாங்கப்படலாம். ஆனால் முன்பு கிடைத்த ’பணப்பெட்டி’ நிச்சயம் கிடைக்காது! சொற்ப பணத்தில் ஒரு குறிப்பிட்ட அணிக்குள் வரலாம்.

Arjun Tendulkar

ஆரம்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் தங்களை ஐபிஎல் 2021 ஏலத்திற்காகப் பதிவு செய்திருந்தார்கள். அவர்களை ‘ஆராய்ந்த’ இந்திய கிரிக்கெட் போர்டு பலரை, லாயக்கில்லை என நீக்கிவிட்டது. 298 பெயர்களை மட்டுமே ஏலத்தில் இருக்கிறார்கள். இவர்களில்   உள்நாட்டு வீரர்கள், அந்நியநாட்டவர் கலவை. பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபாளம், ஆஃப்கானிஸ்தான் போன்ற குட்டிநாடுகளின் வீரர்களும் உண்டு. இது அல்ல சுவாரஸ்யம். சில இளம் இந்திய வீரர்கள், நாட்டிலேயே அதிகமாக அறியப்படாதவர்கள், சமீபத்திய  ’முஷ்டாக் அலி 20-ஓவர் கோப்பை’யில் சிறப்புப் பங்களிப்பு செய்தவர்கள் – தங்களின்  big break-ற்காகக் காத்திருக்கிறார்கள், ஏல லிஸ்ட்டில். அவர்களில் அதிர்ஷ்டக்காரர்கள் யார், யார்? இன்று மாலை வெளிச்சம் விழும்.

Khrivitso Kense,
Nagaland Spinner

ஐபிஎல்-இல் ’நுழைய முயற்சிக்கும்’ இளம் இந்திய வீரர்கள் : பேட்ஸ்மன்கள் முகமது அஜருத்தீன் (கேரளா), விவேக் சிங் (பெங்கால்), விஷ்ணு சோலங்கி (பரோடா). ஆல்ரவுண்டர்கள் ஷாருக் கான் (தமிழ்நாடு), அர்ஜுன் டெண்டுல்கர் (மும்பை). லெக்-ஸ்பின்னர் க்ரிவிட்ஸோ கென்ஸே (Khrivitso Kense) (நாகாலாந்து). இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சேத்தன் ஸகாரியா (சௌராஷ்ட்ரா),  லுக்மன்  மேரிவாலா (குஜராத்), மிதவேகப் பந்துவீச்சாளர் ஜி.பெரியசாமி (தமிழ்நாடு -கடந்த TNPL-ன் man of the series, நடராஜனின் ஊர்க்காரர், ஊக்குவிக்கப்பட்ட நண்பர்!)  போன்றோர்.

மேலே சொன்னவர்களில் சுவாரஸ்யமானவர்கள் சச்சின் டெண்டுல்கரின் 21-வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இடதுகை வேகப்பந்துவீச்சாளர், பயனுள்ள லோயர்-ஆர்டர் பேட்ஸ்மன். மும்பை அணியின் நெட்-பௌலராக அபுதாபி ஐபிஎல்-இல் இருந்தவர். எந்த அணியாவது இன்று இவரைக் ’கவனிக்குமா’! இன்னொரு sensation : கென்ஸே! 16-வயது நாகாலாந்து லெக்-ஸ்பின்னர். கடந்தமாதம்தான் சென்னையில், நாகாலாந்து அணிக்காக தன் முதல் டி-20 போட்டியை விளையாடினார் – முஷ்டாக் அலி கோப்பையில். நாலே போட்டிகளில் இவர் காண்பித்த ’ஸ்பின்’ சாகஸம்,  ‘மும்பை இண்டியன்ஸ்’ அணியைக் கவர்ந்திருக்கிறது. நாகாலாந்தில் எங்கோ ஒரு மூலைக்கிராமத்தில் சுற்றிக்கொண்டிருந்த இந்த இளைஞனை மும்பை இண்டியன்ஸ் தொடர்புகொண்டு போனமாத இறுதியில் தங்கள் அணிக்கான புதியவர்களின் பயிற்சிகளில் சேர்த்திருக்கிறது. உண்மையில் இவரை ‘ஏலத்தில்’ மும்பை வாங்குமா? அல்லது வேறு ஏதாவது அணியின் கண்ணில் படுவாரா? மாலையில் தெரியலாம்.

இன்னொரு விஷயம்! Kings XI Punjab தன் பெயரை ’பஞ்சாப் கிங்ஸ்’ என்று மாற்றிக்கொண்டுவிட்டது. பெயர் ‘ராசி’ எப்படியோ!

**

சென்னையில் இந்தியா அதகளம் !

Cricket enthralls in Chennai. Fans all over, have suddenly woken up to Rohit’s and Ashwin’s stupendous shows. பக்கவாத்யங்களின் சரியான வாசிப்பும். மூன்று நாட்களாக போதை ரொம்பத்தான் தலைக்கேறியிருக்கிறது ரசிகர்களுக்கு. It was  Brisbane last month. Now, scintillating Chennai !

சென்னை-2 மைதானத்தில் என்னென்னவோ காட்டிவருகிறது. ஸ்பின்னர்களின் கேட்ச்சுகளை நழுவவிடும் ரிஷப் பந்த், இஷாந்த், சிராஜின் வேகத்தில் லபக்கிய stunning catches.. ரிஷப்தான் இது? சென்னை ரசிகர்களின் துள்ளல், ஆர்ப்பரிப்பு, வீரர்களின் ரத்தத்தில் தாறுமாறாக ஏறிக்கொண்டு ஏதேதோ செய்கிறதுபோலும். Kohli the Kalaakaar.. is also on show. அவ்வப்போது கூட்டத்தை விசில் அடிக்கச் சொல்லி, கத்தச்சொல்லி ஏத்திவிட்டுக்கொண்டு.

Ashwin celebrates
century at Chepauk

அக்‌ஷர் பட்டேல் அபாரம் நேற்று மாலை. இன்னும் எதிர்பார்க்கலாம் இவரிடமிருந்து. நல்ல ஃபீல்டரும்கூட. இரண்டாவது இன்னிங்ஸில் 106-க்கு 6 விக்கெட் இழப்பு என்கிற தடுமாற்றத்தினூடே, 8-ஆவது வீரராக உள்ளே அடி எடுத்துவைத்த அஷ்வினின் அசத்தல் பேட்டிங் – a measured attack on the razor-sharp English bowling.  அவர் 77-ல் இருக்கும்போது கடைசி ஆளாக மைதானத்தில் இறங்கிய முகமது சிராஜ் அவ்வப்போது அஷ்வினின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டு, நிலமைக்கேற்றபடி காண்பித்த தடுப்பாட்டம் பிரமாதம். No.11 Siraj is not known for batting, certainly not for displaying defence! வெறும் tainlender-களை அடுத்தபக்கத்தில் வைத்துக்கொண்டு, அபாரமாக வீசிய லீச், மொயின் அலியை சமாளித்து, நம்பமுடியாத சதத்தை விளாசிய அஷ்வின். சதமடித்து சாதித்தவரைவிட, அதிகமாகத் துள்ளிக்குதித்த சிராஜ்.. Another interesting addition to the Indian team! சென்னை கூட்டம் கவனித்தது. ரசித்தது. கொண்டாடியது.

இங்கே, பென் ஃபோக்ஸின் (Ben Foakes) அபார விக்கெட்கீப்பிங் (3 stumpings in a match) திறனை பாராட்டாமல் இருக்கமுடியுமா? தடுமாறும் இங்கிலாந்து ஜாம்பவான்களின் நடுவில், இந்திய சுழலில், சூழலில், மூச்சுத் திணறாமல் சாதுர்யமாக 42 நாட்-அவுட் காண்பித்ததைத்தான் மறக்கமுடியுமா? இங்கிலாந்தின் நம்பர் 2 விக்கெட் கீப்பர் ..from top of the rack.

ரூட்டும்  லாரன்ஸும் இன்று க்ரீஸில் தொடர்வார்கள். அஷ்வினும் பட்டேலும் பாய்வார்கள். குல்தீப் சேர்ந்துகொள்ளக்கூடும். எதிரியின் நிலை? தடுப்பாட்டம் தடுக்கிவிட்டுவிடும். தாக்கினால் கதை கந்தலாகிவிடும்!  Ben Stokes, Ollie Pope, Ben Foakes  என எதிர்த்து ஆட வீரர்கள் இருக்கிறார்கள்தான்.  ஆனால்….

**

சென்னை – 2 ! விழித்துக்கொள்ளுமா இந்தியா ?

நாளை (13/2/21) ஆரம்பிக்கிறது அதே சென்னையில் இரண்டாவது டெஸ்ட். இந்தமுறை கருப்புமண்ணால் நிரப்பப்பட்டிருக்கும் பிட்ச் நம்பர் 5-ல் ஆட்டம். முதல் நாளிலேயே வேலையைக் காண்பிக்க ஆரம்பிக்கும், பந்து திரும்பும்.. என்றெல்லாம் கணிப்புரை தொடங்கிவிட்டது. இங்கிலாந்து அணியில் உற்சாகம். நேர்மாறான மனநிலையில் கோஹ்லியின் அணி. இந்தியா டாஸ் ஜெயிக்க… சரி, இது வேண்டாம். முதல் இன்னிங்ஸில் ரன் சேர்ப்பதே சிரமமாக இருக்கக்கூடும், பிட்ச் பற்றிய கணிப்பு சரியாக இருந்தால். இந்தியாவின் டாப்-5 – ரோஹித், கில் (Gill), புஜாரா, கோஹ்லி, ரஹானே இந்தப் பிட்ச்சில் எப்படி ஆடுவார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ரிசல்ட் அமையும்.

இங்கிலாந்து அணியில் மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேகப்பந்துவீச்சில் அதிரடி மாற்றம். ஜோஃப்ரா ஆர்ச்சருக்குக் காயம். ரிவர்ஸ்-ஸ்விங் காட்டிய ஆண்டர்ட்சனும் ஆடவில்லை. மாற்றாக ஸ்டூவர்ட் ப்ராட் (Stuart Broad) மற்றும் ஓல்லி ஸ்டோன் (Olly Stone) / க்றிஸ் வோக்ஸ் – இருவரில் ஒருவர் வேகப்பந்துவீசக்கூடும். ஏனோ ஸ்பின்னர் டாம் பெஸ்ஸை (Dom Bess) எடுத்துவிட்டார்கள். பதிலாக இந்தியாவில் சிறப்பாக  பேட்டிங் செய்யும் ஸ்பின்னரான மொயீன் அலி உள்ளே. விக்கெட்கீப்பர் பட்லருக்கு ஓய்வாம். ரிசர்வ் விக்கெட்கீப்பர்  பென் ஃபோக்ஸிற்கு (Ben Foakes) வாய்ப்பு.

Axar Patel
Left-arm orthodox Spinner

இந்திய அணி? குழப்பம் தீர்ந்ததா கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்கு? தெரியவில்லை. ஃபிட்டாகிவிட்ட ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல்,( நதீமின் இடத்தில் ) தன் முதல் டெஸ்ட்டை ஆட வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. அது அணிக்கு வலிமை சேர்க்கும். பந்தை உள்ளே திருப்பும் இடது கை ஸ்பின்னர். பேட்டிங் திறமையும் உண்டு. இது மிக முக்கியம் இந்திய அணிக்கு இப்போது. ஆரம்பமே நொறுங்கினால் 7, 8-ஆவது ஆளாவது கவனமாக ஆடி, 30-40 சேர்த்து அணியை கௌரவமான நிலைக்குத் தள்ளவேண்டியிருக்கும். குல்தீப் யாதவும் வரலாம் எனவும் சிலர் யூகம். யாரிடத்தில்? வாஷிங்டன் சுந்தரின் இடத்தில்! குல்தீப் உள்ளே வருவது உபயோகமாக இருக்கும். ஆனால் போன டெஸ்ட்டில் அருமையாக பேட்டிங் செய்த சுந்தரை வெளியே போகச்சொல்வது, அபத்தக் கதையின் அடுத்த அத்தியாயமாக அமையும்.

முகமது சிராஜ் நல்ல ஃபார்மில், துடிப்போடு இருக்கும் வீரர். விக்கெட் வீழ்த்தும் ஆவேசத்தோடு, ஸ்விங் திறனும் காண்பித்தவர். அவர் அணிக்குள் நுழைவது அணிக்கு பலம் கொடுக்கும். யார் வெளியே போகவேண்டியிருக்கும்? பும்ராவின் யார்க்கர்கள்  சரியாக விழுகின்றன. விக்கெட்டுகளும் பரவாயில்லை. அதனால்  இஷாந்தின் இடத்தில், சிராஜ் ஆடினால் நாளைய பிட்ச்சில் எடுபடும் எனத் தோன்றுகிறது.

நமக்குத் தோன்றி என்ன செய்ய! ‘Ko-Sha’-வுக்குத் தோன்றவேண்டுமே..

**

கிரிக்கெட்: சென்னை கொடுத்த அடி!

டெஸ்ட் ரிசல்ட் எதிர்பார்த்தபடி. இரண்டாவது டெஸ்ட்டும் இதே மைதானத்தில்தான், மூன்றே நாட்களில். கோஹ்லி&கோ.வுக்கு அடுத்த போட்டியில் எதைக் கவனிக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று புரிந்ததா? கோஹ்லி டாஸ் வெல்வது என்பது, ஆண்டவனின் கையில்கூட இல்லை என்பதால் அதை விட்டுவிடலாம்.

மேட்ச் முடிந்ததும் முரளி கார்த்திக்கோடு அளவளாவுகையில் கேப்டன் கோஹ்லி என்ன சொன்னார்? சப்போர்ட் ஸ்பின்னர்ஸ் போதுமான அளவுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தியா தன் body language- ஐ முன்னேற்றிக்கொள்ளவேண்டும்! ஓ.. புரிகிறது. கோஹ்லி மாதிரி, முகத்தில் உணர்வு ஜாலங்கள், கைகால்களின் மூலம் சேஷ்டைகள்.. இதை மைதானத்தில் கொண்டுவந்தால் போதும். மேட்ச் நம் கைக்குவந்துவிடும். எதிரி காலி. அடடா.. என்ன ஒரு வியூகம்.

ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சப்போர்ட் ஸ்பின்னர்களின் முயற்சி போதவில்லை என்கிறார் கேப்டன். புது ஸ்பின்னர்கள் – நதீம், சுந்தர் – இவர்களை உடனே ரவீந்திர ஜடேஜாவுடன் ஒப்பிடக்கூடாது. ஜடேஜாவின் திறன், உழைப்பு, அனுபவம் ஒப்பிடமுடியாதது. நதீமும், சுந்தரும் இப்போதுதான் டெஸ்ட் உலகில் நுழைந்திருக்கிறார்கள்.  புதியவர்களைத் தட்டிக்கொடுப்பது, உற்சாகப்படுத்தவேண்டியது கேப்டனின் கடமை. தோல்விக்கு அவர்களைக் குறைசொல்லித் தப்பிக்கப் பார்ப்பது கோமாளித்தனம். நதீமும் சுந்தரும் டெஸ்ட்டின் எந்தெந்த நாட்களில் பந்து வீசினார்கள்? பிட்ச் சாதுவாக இருந்த, எதிரணி பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்த முதல் இரண்டு நாட்களில். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில், அஷ்வினே 51 ஓவர் போட்டுத்தான் 3 விக்கெட்டுகளைத் தூக்கமுடிந்தது. கிட்டத்தட்ட எல்லா பௌலர்களுமே ஓவருக்கு 4 ரன்னுக்குமேல் கொடுத்தார்கள். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பௌன்சர் போடும் தைர்யமே வரவில்லை. பேட்ஸ்மனுக்கு ஒத்துழைத்த பிட்ச்சின் ஆரம்ப நாட்கள், இங்கிலாந்து டாஸ் வென்றதால் அவர்களுக்கு சாதகமானது என்பதுதானே பிரதான உண்மை. இது கோஹ்லியின் தலைக்குள் போகவில்லையோ?

இஷாந்த், பும்ரா, அஷ்வின் ஆகியோர்,  பௌலர்களுக்கு மோசமான பிட்ச்சில் அருமையாக உழைத்தார்கள். சில விக்கெட்டுகள் கிடைத்தன. குறிப்பாக அஷ்வின், 75 டெஸ்ட் விளையாடிய அனுபவமுள்ள ஸ்பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் தூள்கிளப்பினார். சப்போர்ட் ஸ்பின்னர்களைக் குறைசொல்லும் கோஹ்லி, இங்கிலாந்து போட்டுச்சாத்திய முதல் இன்னிங்ஸில், முதல் இரண்டு நாட்கள், ஸ்பின்னர்களுக்கு கொடுத்த ஓவர்கள் எப்படி? இதோ:

அஷ்வின் ; 51.5 ஓவர்கள் : விக்கெட் 3.

நதீம்      : 44 ஓவர்கள். விக்கெட் 2.

சுந்தர்     : 26 ஓவர்கள் விக்கெட் 0.

Nadeem bowls

இப்படி சார்ட் பார்த்தால் போதாது. புரியாது. கொஞ்சம் விளக்குவோம். ஷாபாஸ் நதீம் அணியில் வந்தது அக்‌ஷர் பட்டேல் (genuine allrounder) காயம் காரணமாக இடம்பெற முடியாததால். குல்தீப் யாதவையும் அலட்சியம் செய்து ஷாபாஸ் நதீமைக் கொண்டுவந்தது கோஹ்லிதான்.  அக்‌ஷர், குல்தீப் அளவுக்குத் திறனானவர் இல்லை நதீம். கொஞ்சம் நம்பிக்கை இல்லாதவர்போலவும் பௌலிங் செய்கையில் காணப்பட்டார் என்கிறார் மஞ்ச்ரேகர். அதற்காக அனுபவக் குறைவான வீரரைத் தாக்கமுடியாது.

வாஷிங்டன் சுந்தர், அத்தகைய dead pitch-லும் சுமாராக ஆஃப்ஸ்பின் வீசினார். அவரின் ஓவரில் ஒரு நிச்சய எல்.பி.டபிள்யூ.  தரப்படவில்லை. DRS வாய்ப்புகள் மிச்சமில்லாததால் இந்தியாவால் அப்பீல் செய்யமுடியவில்லை! மேலும் சுந்தரின் இன்னொரு ஓவரில் மிட்-ஆனில் ரோஹித் ஒரு லாலிபாப் கேட்ச்சை நழுவவிட்டு அசடுவழிந்தார். இது சப்போர்ட் ஸ்பின்னரின் குற்றமல்லவே! இவை கிடைத்திருந்தால் சுந்தருக்கும் 2 விக்கெட்டுகள் 26 ஓவர்களிலேயே கிடைத்திருக்கும்தான். இரண்டாவது இன்னிங்ஸில் – அஷ்வினுக்கு 17.3 ஓவர், நதீமுக்கு 14 ஓவர் கொடுக்கப்பட்டன. சுந்தருக்கு கோஹ்லி கொடுத்தது ஒரே ஓவர். அதில் ஒரு ரன் கொடுத்தார் அவர். பேட்டிங்கும் செய்யவேண்டும் என்பதால் அதிக ஓவர்களை சுந்தருக்குக் கொடுக்கவில்லைபோலும். தவறில்லை.

Sundar & Pant

ஆட்டத்தின் இன்னொரு பக்கத்தை கவனிப்போம். முதல் இன்னிங்ஸில் இந்திய ஸ்கோர், இங்கிலாந்தின் ஸ்கோருக்கு (578) அருகிலாவது வந்திருக்கவேண்டும். 500-ஐ நெருங்கமுடியாவிட்டாலும், 450- க்குப் பக்கத்திலாவது வந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு டாப்-ஆர்டர் பேட்டிங் சரியாக இயங்கவேண்டுமே. என்ன நடந்தது? ரோஹித் 6, ஷுப்மன் கில் 29, கோஹ்லி 11, ரஹானே 1. கில் (Gill)-ஐத் தவிர்த்து, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருந்தலைகளின் பேட்டிங் லட்சணம். இந்திய முதல் இன்னிங்ஸ் 73/4 எனத் தத்தளித்தது ஒரு கட்டத்தில். ரிஷப் பந்த்-உம், வாஷிங்டன் சுந்தரும் அடிக்காவிட்டால் ஸ்கோர் 200-ஐத் தாண்டுவதற்கே முக்கியிருக்கும். சென்னை பிட்ச்சில் -கடைசி நாளில்- பேட் செய்வது எளிதல்ல. பௌலர்களுக்கு சாதகமாக மாறிவிட்ட பிட்ச். Anderson’s reverse swing at its best. கில், ரஹானே,  பந்த் எனத் தலைகள் உருண்டன. இரண்டு இன்னிங்ஸிலும் batting flops : ரோஹித் , ரஹானே . (ராஹுல், ஆஹா.. நாம் நுழைந்துவிடவேண்டியதுதான் என எண்ணியிருப்பாரோ?)

கோஹ்லி, இந்தியாவின் கேப்டன், இதையெல்லாம் புரிந்துகொள்கிறாரா? இல்லை, சப்போர்ட் ஸ்பின்னர்களின் சப்போர்ட் கிடைக்காததால்தான் தோல்வி எனச் சொல்லி அடுத்த மேட்சிலும் ஜகா வாங்கப்போகிறாரா? நிபுணர் சாஸ்திரி வாயைத் திறக்கக் காணோமே?

**

பழைய வெஸ்ட் இண்டீஸ் !

மூன்று நாட்களாக இந்தியா-இங்கிலாந்து சென்னை டெஸ்ட்டைப் பார்த்துக்கொண்டு, இன்னொரு பக்கம் தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான், பங்களாதேஷ்-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்டுகளையும் கவனித்துக்கொண்டே வருகிறேன். நேற்று புஜாராவுடன் ஜோடி சேர்ந்து, அவருக்கு நேர்மாறான ஸ்டைலில் ரிஷப் பந்தின் விளாசல் என சென்னையில் அதிக நேரம் இழந்ததால், வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் ஸ்கோரை  பின் மதியத்தில் கவனிக்க அவகாசமில்லை. 200+ ல் 5 விக்கெட் இழந்த நிலையில் கைல் மேயர்ஸ் (Kyle Mayers) எனும் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் 81-ல் ஆடிக்கொண்டிருந்த நினைவு. மாலையில் நிதானமாக ஸ்கோர் போர்டைப் பார்த்தால்… என்ன, வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்துவிட்டதா! பங்களாதேஷின் 430-க்கு எதிராக, முதல் இன்னிங்ஸில் 259 அடிக்கவே முக்கி, முனகிய வெஸ்ட் இண்டீஸ், 395 என்கிற இமாலய இலக்கை, impossible target-ஐத் தட்டித் தூக்கிவிட்டார்களா? கடைசி நாள் பங்களாதேஷ் பிட்ச்சிலா? என்ன நடந்தது என்று complete score card-க்குள் நுழைந்தேன்.

Kyle Mayers
New star on the horizon!

ஆ! உலக அரங்கில் வெஸ்ட் இன்டீஸின் புது நட்சத்திரம்! தன் முதல் டெஸ்ட்டை அட்டகாசமாக ஆடிய கைல் மேயர்ஸ். 210 நாட் அவுட். 20 பௌண்டரி, 7 சிக்ஸர்-chasing an imposing  target. கூடவே ஜோடி சேர்ந்த இங்க்ருமா பான்னர் (Nkrumah Bonner) -இவருக்கும் அது முதல் டெஸ்ட்தான்) அடித்த 86. பங்களாதேஷ் வெலவெலத்து, விழிபிதுங்கி வெளியே ஓடிவிட்டது. 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று டெஸ்ட் வெற்றி. விவ் ரிச்சர்ட்ஸ், வீரேந்திர சேஹ்வாக், ஆந்த்ரே ரஸ்ஸல், மைக்கேல் வான் என்று ஒரே பாராட்டு மழை.. மைக்கேல் வான் ட்வீட்டுகிறார் : Kyle Mayers..Remember the name !

வாப்பா, கைல் மேயர்ஸ்! சுத்து bat-அ.. பழைய வெஸ்ட் இண்டீஸை மீண்டும் பார்க்க ஒரே ஆசை.

டெஸ்ட் கிரிக்கெட் விஸ்வரூபம் எடுத்து தான் யாரெனக் காண்பிக்கும் காலமோ..

**        

கிரிக்கெட்: சென்னை டெஸ்ட்டின் நடுவே..

இந்தியாவின் கடந்த மாத ஆஸ்திரேலிய சாதனைகளைக் கொஞ்சம் மறந்துவிட்டு எதிர் நின்று ஆடும் எதிரியைக் கவனிப்போம். ஜோ ரூட். இங்கிலாந்து கேப்டன். தன் கேரியரின் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். சில வாரங்கள் முன் ஸ்ரீலங்காவிற்கு எதிராக 228, 186  என ஸ்கோர்கள். இந்தியத் தொடரில் முதல் மேட்ச்சிலேயே 218 ! அதகளம். இருந்தும் கோஹ்லியைப்போல் அட்டகாச ஆர்ப்பரிப்புகளையோ, முக விசேஷங்களையோ காண்பிக்காமல் அமெரிக்கையான இரட்டை சதம். இவர் பேட்ஸ்மன்!

எதிர்பார்த்ததைப்போலவே கோஹ்லி டாஸைத் தோற்றாயிற்று. முதலில் ஆடுகின்ற இங்கிலாந்து ரூட்டின் அபார இன்னின்ஸின் துணையோடு 555/8. இஷாந்த், பும்ரா, அஷ்வின் dead pitch-லும் நன்றாக வீசினார்கள். நதீமுக்கும், சுந்தருக்கும் சோதனைக்காலம். ரூட் சொன்னபடி இங்கிலாந்து 600+ வரலாம். அதற்குப்பின் இந்தியா ஆடுகையில், இதுவரை பேட்டிங் பிட்ச் ஆக இருந்த சேப்பாக், நிச்சயமாக பௌலிங் பிட்ச்சாக மாறிவிடும்! இந்தியர்கள் ஆர்ச்சர், ஆண்டர்சனிடம் அடி வாங்கி, இங்கிலாந்தின் கத்துக்குட்டி ஸ்பின்னர்களுக்கெதிராகக் கட்டைபோட முயற்சித்து, திணறித் திக்கி, விக்கெட்டுகளைப் பறிகொடுத்து…  கதைபோகும் போக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. இங்கிலாந்தின் வெற்றி அல்லது, சேப்பாக்கின் 3,4,5 நாள் பிட்ச்சில் இந்தியா சிரத்தையாகத் திறமையாக பேட்செய்ய முடிந்தால், ’டிரா’வுக்கு சான்ஸ்.  

ஒரேயடியாக gloomy picture அல்ல.. இந்திய பேட்டிங்கில் யாராவது ஓரிருவர் ஒழுங்காக ஆடிக் காண்பிப்பார்கள் என நம்புவோம்!

In terms of individual milestone,  Ishant Sharma is approaching 300 test wickets, which is remarkable.

**

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் .. மோதலே வாழ்க்கை!

ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே சிதறடித்துத் திரும்பியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபோதையில் இன்னும் இருக்கக்கூடும். நிறைய குளிர்நீர் பருகி, தலையிலும் கொஞ்சம் ஊற்றிக் குளிர்வித்துக்கொண்டு அவர்கள் சேப்பாக் ஸ்டேடியத்திற்குள் நுழைவது உசிதம். அங்கே வேறொரு எதிரி, பலமானவனே,  முஷ்டியை உயர்த்திக் காத்திருக்கிறான். இந்தியாவில் நடைபெற உள்ள 4 டெஸ்ட்டுகள். உலகக்கோப்பைக்கான போட்டிகள் என்கிற அழுத்தமும் இரு அணிகளின் மீது. அதீத கவனத்துடன் இந்தியா சென்னையில் துவங்கினால்தான்,  முன்னேறலாம்.  தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலியா விலகிவிட்டபடியால் (கொரோனா பயம்), டெஸ்ட் சேம்பியன்ஷிப் ஃபைனலில் நுழைவதற்கான வாய்ப்பு அதற்கு அரிதாகிவிட்டது. ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் ’முதல் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப்’ இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து தகுதி பெற்றுவிட்டது. அதைச் சந்திக்கப்போகும் அணி இந்தியாவா, இங்கிலாந்தா என்பதே இப்போது கேள்வி.

இங்கிலாந்து அணியில்  ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (Jos Butler), டான் லாரன்ஸ் (Dan Lawrence), பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) என சுழல்பந்துவீச்சைச் சரியாக ஆடும் வலிமையான பேட்ஸ்மன்கள். ஜோஃப்ரா ஆர்ச்சர், க்றிஸ் வோக்ஸ் (ஐபிஎல் அனுபவமும்), ஸ்டூவர்ட் ப்ராட் (Stuart Broad) ஆகிய பௌலர்கள் கடைசிவரிசையில் நின்று ரன் சேர்க்கும் திறனும் உடையவர்கள். England’s tail could be long. Going to be quite a headache for Indian bowlers.  இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தால், முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 400+ க்கு கொண்டு செல்ல முயற்சிக்கும். நமது வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்களின் கையில் (கூடவே இந்திய ஃபீல்டர்கள் கையிலும்) இருக்கிறது, இங்கிலாந்து எவ்வளவு தூரம்  சென்னையில் ஆட்டம்போடமுடியும் என்பது.  

Washington Sundar

4 மேட்ச் டெஸ்ட் தொடரில் இந்திய அணி – குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட்டில் (5-9/2/21) இறங்கி ஆடப்போகும் 11-  எப்படி இருக்கும்? காயம் போன்ற ப்ரச்னை ஏதும் குறுக்கிடவில்லையெனில், முதல் 6 பேட்ஸ்மன்கள் ரெடி: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் (Shubman Gill), புஜாரா, கோஹ்லி, ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோர். (ஹர்தீக் பாண்ட்யா ஆடுவாரா, இடமிருக்குமா என்பது சந்தேகம். ஏனெனில், காயத்திலிருந்து விடுபட்டிருக்கும் அவர் இப்போது பௌலிங் போடுவதில்லை).  7-ல் Allrounder/Offspinner அஷ்வின்,  9-ல் இடதுகை ஸ்பின்னர்/chinaman bowler குல்தீப் யாதவ். 10, 11-ல் வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா(Jasprit Bumrah). கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்.

Allrounder Axar Patel

இந்தியாவின் டாப் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாதான் காயம் காரணமாக வெளியே உட்கார்ந்திருக்கிறாரே. என்ன ஒரு கஷ்டம்! அதனால், 8-வதாக இறங்கப்போகும் ஆல்-ரவுண்டர் யார் என்பதே கோஹ்லியின் தலையைப்போட்டு அரிக்கும் கேள்வி.  ’நான் பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன். துணைக் கேப்டனாக பின்னால் நின்றுகொள்வேன்’ என்கிறார் ரஹானே. கோஹ்லி, சாஸ்திரி ஜோடியின் முடிவு என்னவாக இருக்கும்?  ஆஸ்திரேலியாவுக்கெதிராக பேட்டிங்கிலும் நொறுக்கித் தள்ளிய ஆல்ரவுண்டர்கள் ஷர்துல் டாக்குர் (Shardul Thakur), வாஷிங்டன் சுந்தர் -இருவரில் ஒருவர்? அல்லது முதன்முதலாக டெஸ்ட் ஆடவிருக்கும் குஜராத்தின் 27-வயது ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல்?

இங்கிலாந்து அணியில் 3 இடதுகை பேட்ஸ்மன்கள் இருப்பதால், இடதுகை ஸ்பின் பௌலர்களை களத்தில் இறக்கி நெருக்க, இந்தியா எத்தனிக்கும். (சமீபத்தில் ஸ்ரீலங்காவின் இடதுகை ஸ்பின்னர் எம்புல்தேனியாவை (Lasith Embuldenia) சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது கவனத்திற்கு வந்திருக்கிறது). முதல் சாய்ஸ் இடதுகை சுழல்- குல்தீப் யாதவ். இன்னொரு இடதுகை ஸ்பின்னரை கோஹ்லி விரும்பினால்,  அக்‌ஷர் பட்டேல் உள்ளே வருவார்.  அஷ்வின், குல்தீப் என இரு ஸ்பின்னர்கள் போதும். ஐந்தாவது பௌலராக ஒரு மீடியம்-பேஸரே சரி என முடிவெடுத்தால், ஷர்துல் டாக்குர் அணிக்குள் வருவார். ஆஸ்திரேலியாவில் தூள்கிளப்பிய முகமது சிராஜை பெஞ்சில் உட்காரவைப்பதும் சரியில்லைதான். டாக்குர் பௌலிங்கோடு, தன் பேட்டிங் திறனையும் ப்ரிஸ்பேன் டெஸ்ட்டில்  வெளிச்சம்போட்டுக் காண்பித்தவர். அந்த அளவுக்கு  சிராஜால் முடியாது என்பதால், டாக்குரை கோஹ்லி தேர்ந்தெடுக்கலாம்.

நாளை (5 th Feb)காலை 9 மணிக்கு டாஸிற்குப் பிறகுதான் இறுதி 11 தெரியவரும். யார் யார் இந்திய அணிக்குள்ளே வந்தாலும், ஒரு தேர்ந்த அணியாக சேர்ந்து ஒழுங்காக ஆடி இங்கிலாந்தைக் காலிசெய்யவேண்டும். அதற்கு, கோஹ்லியின் கேப்டன்சி ரஹானேயின் பக்கத்திலாவது வரணும். ரசிகர்களில் பலர், அடடா.. ரஹானே கேப்டனாகத் தொடரக்கூடாதா.. என்றும் நினைக்க ஆரம்பித்திருப்பார்கள்!

**