சென்னையை சமீபத்தில் தாக்கிய அசுர வெள்ளம், நகரவாசிகளின் மென்னியைப் பிடித்து ஒரேயடியாக இறுக்கிவிட்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் புனரமைப்பதில், அரசுக்கும் மூச்சுத் திணறுகிறது.
சென்னையும் சுற்றுப்புறமும், பல வருடங்களாக வானம் பார்த்துக் காய்ந்துபோயிருந்த பூமி. காலம் தவறிப் பெய்யும் பருவமழை. சமீபகாலங்களில், நகருக்கு நீர் தரும் ஏரிகளில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைந்து, சில சிறு நீர்நிலைகள் காணாமலேகூட போய்விட்டன. அண்டை மாநிலத்துக்காரன் எப்போதடா அவன் அணையைத் திறந்து நமக்குத் தண்ணீர் விடுவான் என, வாயைப் பார்க்கவேண்டிய நிலை வழக்கமாகிவிட்டிருந்தது. பெருமழை இந்த நகரத்துக்கு இனி வரவே வராது என்கிற சிந்தனைப்போக்கை மக்களும், ஆள்பவர்களும் கொள்ளத் துவங்கிவிட்ட நேரம். திடீரென இயற்கை மாற்றி யோசித்தது. 118-வருடங்களாகக் காணாத பெரும் திறப்பு சென்னையின் தலைக்கு மேலே, வானில் ஏற்பட்டது. விளைவு? ஆத்திரம் மிகக்கொண்டு, கொட்டோ கொட்டென்று நாலு வாரங்களாகக் கொட்டித் தீர்த்தது பேய்மழை. நகரை நடுநடுங்கவைத்தது. பெருக்கெடுத்த வெள்ளம், சாதாரணரின் வாழ்வைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது
பல வருடங்களாக நகரமயமாக்கல் என்கிற பேரில் இயற்கையோடு மனிதன் விளையாடிய தப்பாட்டத்தின் கொடும் விளைவுதான், கண் முன்னே கட்டற்ற வெள்ளமாய்ப் பொங்கி ஓடியது. ஏரிகள், கண்மாய்களை நிறைத்து, ஆறுகளில் ஓடி, கடலில் கலக்கவேண்டிய உபரி நீர்வெள்ளம், நகரத்தின் தெருக்களில், சந்துபொந்துகளில் ஓடி, வீடுகளில் புகுந்து மனிதனை அலறி அடித்துக்கொண்டு மொட்டைமாடிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மேல்தளங்களுக்கும் விரட்டிவிட்டது. சென்னைப் பக்கம் இனி தலைவைத்துக்கூடப் படுக்கமாட்டேன் எனச் சிலரை, ஊரைவிட்டே தலைதெறித்து ஓடவைத்தது.
நாளுக்குநாள் பூதாகாரமாக வளர்ந்துவரும் சென்னைப் பெருநகரின் சுற்றுச்சூழல் சீரழிவு இன்று, நேற்று நிகழ்ந்ததல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே, கேட்பாரற்று நடந்து வருகிறது. ஓட்டுவங்கிகளை மட்டும் பிரதானமாக எண்ணத்தில்கொண்டு, இரு கழகங்களும் மாற்றி மாற்றித் தமிழ்நாட்டை ஆண்ட லட்சணம்தான் இது.
நகரின் நீர்வழிப்பாதைகளையும், ஏரி, கண்மாய்க்கரைகளையும் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும், நில ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அரசு தாரை வார்த்ததின் விளைவுகளை, சென்னையின் சாதாரணக் குடிமக்கள் இன்று கண்ணீருடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தென்னகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய அரசர்களும், பல்லவ, நாயக்க, தொண்டமான் மன்னர்களும், சிற்றரசர்களும், மக்களின் பொருளாதார, சமூக, மதத் தேவைகளை ஒருங்கே பாதுகாத்து நல்லாட்சி செய்தார்கள். கோயில்கள் கட்டினார்கள், கூடவே தெப்பக்குளங்களும் கட்டினார்கள். ஏரிகள், கண்மாய்கள், குளங்களைக் கட்டியதோடு, முறைப்படி தூர்வாரிச் செம்மைப்படுத்தினார்கள். மழைநீர் சேமிப்பு, நீர்வளப் பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் என்று அவ்வப்போது மேடையேறி வசனம் பேசிக்கொண்டிருக்காமல், பட்டிமன்றங்கள் நடத்திப் பல்லிளிக்காமல், காரியத்தில் காட்டினார்கள். மக்கள் தொண்டை மனநிறைவாகச் செய்தார்கள். இப்போதுதான் மக்களாட்சியாயிற்றே. எல்லோரும் இன்னாட்டு மன்னர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா! யாருக்கும் தன் ஊர், தன் நகரம், தன் நாடு என்கிற பொறுப்புணர்வு (Civic sense), தேசபக்தி எள்ளளவும் இல்லை. அரசாளும் மக்களின் பிரதிநிதிகள், ஏரி,குளங்களின் தூர் வாருவதற்கு பதிலாக, பொது இடங்களை, மழைகாணா நீர்நிலைப் பரப்புகளைக் கூறுபோட்டு விற்று, மக்களின் காலை வாருகிறார்கள். இயற்கைப்பேரிடர், அது இதுவென்று வம்பில் மாட்டிக்கொண்டால், இவர்கள் அவர்கள் மீதும், அவர்கள் இவர்கள் மீதும் மண்ணை வாரி இறைப்பார்கள். எவரும் தாங்கள் ஆண்டபோது என்ன செய்து கிழித்தோம் என்று வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். தங்கள் கையாலாகாத்தனத்தை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
சென்னை நகரினூடே காலங்காலமாக கூவம், அடையாறு ஆறுகள் ஓடுகின்றன. மேலும் பக்கிங்ஹாம் கால்வாய். ஒரு காலத்தில் உல்லாசப் படகுகள் ஓடிய கால்வாய். விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய்கள், கேப்டன் காட்டன் கால்வாய் போன்ற கால்வாய்களும் உள்ளன. காலக்கிரமப்படி இத்தகைய நீர்நிலைகள், வடிகால்கள் ஆழப்படுத்தப்பட்டு, பெரிதுபடுத்தப்பட்டு, தூர்வாரப்பட்டிருந்தால், தீவிர உணர்வோடு கழிவுகள் அகற்றப்பட்டிருந்தால், இந்தப் பேய்மழையை தந்த வெள்ள உபரிநீரையும் சென்னை நகரம் பெரும் சேதம் இன்றி சமாளித்திருக்கும். ஆனால் நடந்தது என்ன? நகரம் நாளுக்கு நாள் பெரிதாக விஸ்வரூபம் எடுக்க, குப்பை கூளங்கள், ப்ளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள், கந்தல் துணிகள், கட்டடக்கழிவுகள் என அங்கும் இங்குமாய் வீசப்பட்டதால், வடிகால்களும், நீர்முகத்துவாரங்களும் கழிவுகளால் அடைக்கப்பட்டிருந்தன. வெள்ளநீர் ஆறை நோக்கி, கடல் நோக்கிச் சீராகச் செல்ல வழியில்லாமல், முடியாமல் எதிர்த்துத் திரும்பி, நகருக்குள்ளேயே கட்டுக்கடங்காது சீறிப்பாய்ந்தது. எவன் இப்படியெல்லாம் செய்தவன் எனத் தேடிவந்ததுபோல, குடியிருப்புகளை வளைத்துத் தாக்கி அழித்தது, நகரவாழ்வை நொடியில் நிர்மூலமாக்கியது. நாற்றமெடுத்து நகருக்கே ஒரு பெரிய அவமானமாக மாறியிருக்கும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்திப் புனரமைக்கப் போவதாக தமிழக அரசு, பல ஆண்டுகளாக நாடகமாடி வருகிறது. `எங்களாட்சியில் கூவம் மணக்கும்` என்று அப்போது அலட்டிக்கொண்டவர்கள், தங்கள் சொந்த வாழ்வில், பணம் மிகச் சேர்த்து மணம் பரப்பிக்கொண்டார்கள். இப்போதிருக்கும் அரசை குறைகூறிக் கொக்கரிக்கிறார்கள். இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, செய்வதறியாமல் தலைவிதியே என வாழ்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
மத்திய அரசின் அறிவியல் சுற்றுச்சூழல் ஆய்வுக் கழகம், 1980-களில் இருந்த சென்னை நீர்நிலைகளின் நிலையை, தற்போதுள்ள அவலநிலையோடு ஒப்பீடு செய்துள்ளது. நகரிலும் சுற்றுப்புறங்களிலும், அப்போதிருந்த 600-க்கும் மேற்பட்ட சிறு, பெரு நீர்நிலைகளில் பெரும்பாலானவை காணாமற்போயிருந்தது, 2008-ல் நடந்த சர்வேயின்போது தெரிய வந்தது. அப்போதைய கணக்கெடுப்பின்படி, நகரின் 19 பிரதான ஏரிகளின் பரப்பளவு, 2,792 ஏக்கராக இருந்திருக்கிறது. இது வெகுவாகச் சுருங்கி, 2000-ஆவது ஆண்டில், 1,594 ஏக்கராக ஆகிவிட்டது. எங்கே போயிற்று முன்பிருந்த நிலப்பரப்பு? அந்நிய நாடா வந்து ஆக்கிரமித்துவிட்டது? இல்லை. நமது ஆட்சியாளர்கள், மக்கள் நலன்பற்றிக் கவலைகொள்ளாத தர்மவான்கள், மழையின்றி காய்ந்திருந்த பூமியை, நம்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் கட்டடங்கள், தொழிற்சாலைகள் கட்டிப் பணம்பண்ணுவதற்கென, சலுகைவிலையில் விற்றிருக்கிறார்கள். அவ்வப்போது பெரும் கமிஷன் தொகைகள், இந்த பணமுதலைகளிடமிருந்து அரசியல்வாதிகளின் கறுப்புப்பண அக்கவுண்ட்டுகளுக்குப் போயிருக்கும் எனத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. இந்த மூதேவிகள்தான் தேசத்தின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்யவேண்டும் என புத்தி சொல்கிறார்கள். மக்களுக்கு வாழ்வுபற்றியும், வளர்ச்சிபற்றியும், தேர்தல் சமயத்தில் ராத்திரி, பகலாக லெக்ச்சர் அடிக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்று, வளரும் நகரங்களுக்கான புதிய சாலைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்களை உண்டுசெய்தல், ஏற்கனவே இருப்பனவற்றைப் பாதுகாத்தல், காலக்கிரமப்படி நகரக்கழிவு அகற்றல், சுற்றுச்சூழல் கெடாது பாதுகாத்தல் போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் (City planning), நம் நாட்டில் ஒருபோதும் இருந்ததில்லை. அப்படியே திட்டமிட்டிருந்தாலும் அவை பேப்பர், கோப்புகளோடு நின்றுவிட்டன. சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து நமது அரசுகள் ஏதாவது பாடம் கற்றுள்ளனவா? ம்..ஹூம். அடுத்து தேர்தல் வருகிறது. கூட்டணிகள் போடவேண்டும். கூட இருந்தவர்களுக்குக் குழிபறிக்கவேண்டும். தரப்போகும் இலவசங்கள் பற்றி இந்தப் பாவிஜனங்களுக்கு விளக்கவேண்டும். குமித்துவைத்துள்ள கருப்புப்பணத்திலிருந்து வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 2000ரூ. கொடுத்தால் போதுமா? 5000 வரை அழவேண்டியிருக்குமா? இப்படி எத்தனையோ வேலைகள் பாக்கியிருக்கிறது! கவலைவிடுங்கள் ஐயா. அடுத்த வெள்ளம் வர இன்னும் 117 ஆண்டுகள் இருக்கின்றன. அதுவரை விடாது சுருட்டுவோம். எதிர்ப்போரை நாட்டைவிட்டே விரட்டுவோம்.
**