வளரும் பாரதம்… வந்தே பாரத் !

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்காக சென்னை போகவேண்டியிருந்தது.  நெருங்கிய உறவின் நீண்டநாள் அழைப்பு. முகூர்த்தத்திற்கு சில நாட்கள் முன்பு வரை,  குடும்பத்தில் யார் யாரெல்லாம் போவது, எத்தனை நாட்கள் சென்னை மாநகரில் தங்கலாம் என்றெல்லாம் சிந்தனையும், பேச்சும், காப்பியுமாகவே கழிந்ததால், வழக்கம்போல், நாள் நெருங்கி அழுத்த, திடீர் முடிவானது.  புதுசா ஓட ஆரம்பிச்சிருக்கே அந்த ‘வந்தே பாரத்’தில் போய்ப் பார்க்கலாம் நம்ம  சென்னைக்கு என்று. லேட்டா முடிவுக்கு வந்தா, லேட்டஸ்ட் ட்ரெய்ன் கிடைச்சிடுமா அவ்வளவு ஈஸியா?  ’தத்கால்’ புக்கிங்கில் பயணத்திற்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கே விரட்டிப் பிடித்தோம்!

மைசூரிலிருந்து பெங்களூரு, காட்பாடி வழியாக சென்னை செல்லும், இந்திய ரயில்வேயினால் துவக்கப்பட்டிருக்கும் அதிவேக நவீன மின்சார ரயில் இது. 6 மணி 25 நிமிடம் எடுத்துக்கொள்கிறது இந்தப் பயணத்திற்கு. எங்களுக்கு அதிலும் 1 1/2 மணிநேரம் மிச்சம். நாங்கள் பெங்களூர் வாசிகளாயிற்றே. பெங்களூர் ரயில் நிலையத்துக்கு மதியம் 2.50-க்கு வந்து ஐந்து நிமிடங்களில் வெளியேறுகிறது ஸ்டேஷனைவிட்டு. டபுள் டெக்கர் போன்ற மற்ற எக்ஸ்ப்ரெஸ்கள் நிற்கும் சில பல ஸ்டேஷன்களை அனாயாசமாகப் புறந்தள்ளி, வேகமாக முன்னேறும் அதிவிரைவு ரயில். நாங்கள் வசிக்கும் ப்ரூக்ஃபீல்டிலிருந்து உபர் டாக்ஸி பிடித்து, பெங்களூரு மெயின் ஸ்டேஷனுக்கு (SBC) போய், வ.பா-வைப் பிடித்தோம்.  

முதலில் சொல்லவேண்டியது தோற்றம்பற்றி. அதாவது.. appearance. வடிவேலு லாங்குவேஜில்.. லுக்கு! காலங்காலமாக பெருஞ்சதுரமே முகமாக, கம்பி பிண்ணிய முகப்பு ஜன்னல்களுடன்,  பாடாவதி கலரில், உருண்டை ஹெட்லைட்டுடன் அழுக்காக வந்து நிற்கும் இந்திய ரயிலாக இல்லாமல், பளிச்சென்று வெள்ளையாக, நீலக்கோடுடன், சிறிய அழகான எல் இ டி ஹெட்லாம்ப்புகளுடன், வித்தியாச வடிவேந்தி   ’வந்தே பாரத்’ என முகத்தில் சிறிதாக எழுதிக்கொண்டு, ஒரு ரயில்வண்டி இந்திய ப்ளாட்ஃபார்மில் கம்பீரமாக வந்து நிற்பதே கொஞ்சம் நம்பமுடியாத காட்சிதான்! வேறு வண்டி பிடிப்பவர்கள்கூட, தங்கள் மூட்டை, முடிச்சு அவசரத்தினூடே கொஞ்சம் நின்று,  திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு,  தங்கள் பாடாவதியின் படியில் கால்வைத்து ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

நவம்பர் 2022-ல் பிரதமர் நரேந்திர மோதியால் துவக்கிவைக்கப்பட்டது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்ப்ரெஸ் ரயில். எங்கள் டிக்கட்டை சோதித்ததில், நாங்கள் ஏறவேண்டிய கம்பார்ட்மெண்ட் C-7 என்றது. ஏறி சீட்டுகளில் உட்காருகையில், கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் தெரிந்தன. சுத்தமான பெரிய கண்ணாடி ஜன்னல்கள், தரமான,  மென்மையான ரூஃப் லைட்டிங், எதிரே  தமிழ், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வார்த்தைகளை ஓட்டி, பயணிகளை நிதானமாக வரவேற்கும் எல் இ டி திரை/ தெளிவான பெண்குரல்,  ஃப்ளைட்டுகளில் இருப்பதுபோன்ற, சரியான அளவிலான கைப்பிடிகள், எதிர் சீட்டின் பின்புறத்திலிருந்து எளிதாகத் திறக்கும் சிறு டிஃபன் டேபிள், சுத்தமான ஃப்ளோரிங். சரியாக வடிவமைக்கப்பட்டதோடு, பராமரிக்கவும்படும், நவீன டாய்லெட்டுகள் என்பது இந்திய ரயில்வேயில் இதுவரை நாம் சந்தித்திராதது.  இந்தியப் பயணிகளின் உள்நாட்டு ரயில் பயணத்தை சர்வதேசத் தரத்திற்குக் கொண்டுவர இந்திய ரயில்வேயின் தீவிர முயற்சிகளில் ஒன்று ’வந்தே பாரத்’ தொடர் ரயில்கள்.

பெங்களூரு-சென்னை என 4 ½ மணி நேரம்தான் வந்தே பாரத்தில். மற்ற எக்ஸ்ப்ரெஸ்கள் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டு நம்மைக் குலுக்கோ குலுக்கெனக் குலுக்கி, அயர்த்தி சென்னையில் ஒருவழியாகத் தள்ளிவிட்டுப்போய்விடுகின்றன.  வந்தே பாரத்தில் வேறென்ன சொல்லும்படி இருக்கிறது என்றால்.. இருக்கிறது சில.  பயண ஆரம்பத்தில் உங்களுக்குத் தரப்படுகிறது ஆங்கில அல்லது தமிழ் தினசரி இதழ். ஒரு மணி நேரத்திற்குப்பின் வருகிறது டிஃபன் டைம். ஒரு சின்ன ட்ரேயில் ஒரு குண்டு ஆலு சமோஸா, ஒரு நம்கீன் (அவல், கடலை, ஓமப்பொடி என Bikaner க்ரூப்பின் குஜராத்தி மிக்ஸர்) பாக்கெட், Chayoos-ன் இன்ஸ்டண்ட் டீ மிக்ஸ் அல்லது கொல்கத்தா ப்ராண்ட் ஒன்றின் காப்பி மிக்ஸ் பாக்கெட். வெல்கம் டு வந்தேபாரத் என அழைக்கும் சிறிய பேப்பர் கப்பில் சுத்தமான ஃப்ளாஸ்கிலிருந்து ஊற்றப்படும் வெந்நீர் – காப்பியோ, டீயோ நீங்களே தயாரித்துக்கொள்ள என. கூடவே அது என்ன ட்ரேயில்..சின்ன பேக்கட்? ஆ.. ஸ்வீட். எடுத்து படித்துப்பார்த்தேன் ஒட்டியிருந்த லேபிளை. ஸ்ரீ கஜானந்த் ஸ்வீட்ஸ், பெங்களூர் என்றது. சுத்த நெய்யில் செய்யப்படும் பாப்புலரான ஸ்வீட் ஸ்டால்களை பெங்களூரிலும், சுற்றுவட்டாரத்திலும் கொண்ட குழுமம். உள்ளே மைசூர் பாக். நெய் விரலில் ஒட்ட, வாயில் கரைதது பாக். நாக்கு இன்னும் இருக்கா!-என்றது.  மொத்தத்தில் ருசிக்க, தரமான உணவுப்பொருட்கள். சாப்பிட்டு முடித்து சில நிமிடங்களில் நமது ஜனங்கள் ஆயில்பேப்பர், டிஷ்யூ என மூலைக்கு மூலை எறிந்துவிடும் கொடுங்குணம் கொண்டவர்களாயிற்றே.. அதை உடனே தவிர்க்க, ஃப்ளைட்டில் நடப்பதுபோல, பாலிதீன் பையுடன் குப்பை கலெக்ட் செய்ய என நீலச் சீருடையில் வரும் ரயில்வே அலுவலர்கள். இதுவன்றி மீதமிருக்கும் நேரத்தில் மென்மையாக உங்களை அணுகி, Snickers, KitKat  போன்ற சர்வதேச பாப்புலர் சாக்லட்டுகளை விற்கவும் செய்கிறார்கள் வந்தே பாரத்தில்.

பெங்களூர் திரும்பும் பயணத்தில்,  காலை 6-க்கு சென்னையிலிருந்து புறப்படுகிறது வந்தே பாரத். காலையில் ஆங்கிலம் அல்லது தமிழில் நியூஸ்பேப்பர் கொடுக்கிறார்கள். (மைசூரிலிருந்து புறப்படும் வண்டியில் ஆங்கிலமும், கன்னடமும் சாய்ஸ் ஆக இருக்கும்).அப்புறம் வருகிறது காலைச்சிற்றுண்டி. ம்ருதுவான இட்லி-ஜோடி, ஒரு மெதுவடை. இதமான காரத்தில் தேங்காய் சட்னி. சிறிய பிஸ்கெட் பேக் – Lotte Choco Pie. Coffee or tea- உங்கள் விருப்பம். சரியான சீரான வேகத்தில் (எல் இ டி ஸ்க்ரீன் அவ்வப்போது வண்டியின் வேகத்தை 103 கி.மீ, 110 கி.மீ எனக் காண்பிக்கிறது), சரியான வருகை நேரத்தில், குலுங்காது வந்து நிற்கிறது பெங்களூரு ஸ்டேஷனில். வேறென்ன வேண்டும் ஒரு இந்திய ரயில் பயணத்தில்!

ரயில் பயணமாக லால் பாக் (Lalbagh) எக்ஸ்ப்ரெஸ், சென்னை எக்ஸ்ப்ரெஸ், டபுள் டெக்கர், ஷதாப்தி, என பெங்களூரிலிருந்து சென்னைக்கு சில சமயங்களில் பயணிக்கையில், இடையிடையே ஏகப்பட்ட குட்டி ஸ்டேஷன்களில் வண்டி நிற்கும். அலுப்போடு நகரும். செல்லும். அந்த வேலையே இங்கு நடக்காது, வந்தே பாரத்தைப் பொறுத்தவரை. பெங்களூரிலிருந்து பிற்பகல் 2: 55-க்குப் புறப்பட்ட வண்டி, 3 மணிநேரம் கழித்து காட்பாடி ஜங்ஷனில் 3-4 நிமிடம் நின்றது. பிறகு சென்னையை நோக்கி தண்டவாளத்தில் பறத்தல். இரவு சரியாக 7:29-க்கு சென்னை சென்ட்ரலின் 1-ஆம் எண் நடைமேடையில் வந்து நின்று, தன் பயணிகளை மெல்ல உதிர்த்துவிட்டது. பயணக் களைப்பே தெரியாமல் பயணிகள் ஃப்ரெஷ்ஷாக வந்து இறங்கியது பார்க்க, நன்றாக இருந்தது.

மேலும்: நாடு முழுதும் முக்கிய நகர்களை சர்வதேசத் தரத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நவீன, வேக, மின்சார ரயில்கள் மூலம் இணைக்கக் கருதி மத்திய அரசின் ’மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்’ இந்த ’வந்தே பாரத்’ ரயில்வே ப்ராஜெக்ட் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் பெயர் ’ட்ரெய்ன் 18’ என இருந்திருக்கிறது! முதன் முதலாக வந்தே பாரத் எக்ஸ்ப்ரெஸ் 2019-ல் துவக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. மைசூர்-சென்னை வந்தே பாரத் இந்த வகையில் ஐந்தாவது எக்ஸ்ப்ரெஸ் ரயிலாகும். சென்னை பெரம்பூரிலுள்ள ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைதான் (Integral Coach Factory, Chennai) புதிய தொழில்நுட்பத்துடன், நவீன வந்தே பாரத் ரயில் பெட்டிகள். வந்தே பாரத்தின் எலெக்ட்ரானிக்/ கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்களை வடிவமைத்ததில் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் பங்களிப்பு தந்திருக்கிறார்கள் எனவும் தெரியவருகிறது. சராசரி வேகம் 105-115 என்றாலும், மணிக்கு 180 கி.மீ. வரை வேகம் காட்டக்கூடிய ரயில் வண்டி. நாட்டின் பல்வேறு பகுதிகளில் துவக்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலும் 16 பெட்டிகளைக் கொண்டது.

இன்று (8-4-23) சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிரதமரால் துவக்கப்பட்டிருக்கும் புதிய சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத், சற்றே வித்தியாசமானது. 8 பெட்டிகள். அதில் ஒன்று எக்ஸிக்யூட்டிவ் கம்பார்ட்மெண்ட் என்கிறது செய்தி. இந்த ஏசி எக்ஸ்ப்ரெஸில், சேர்-கார் சீட்டுகள்: 450 (டிக்கட் விலை:ரூ.1215). எக்ஸிகியூட்டிவ் சேர்கார் சீட்டுகள்: 56 (டிக்கட் விலை ரூ. 2310). சென்னை-மைசூர் வந்தே பாரத்தைப்போல, சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் எக்ஸ்ப்ரெஸும் , புதன் தவிர்த்து வாரத்தின் மற்ற நாட்களில் ஓடும். சென்னையிலிருந்து மதியம் 2:25-க்குப்புறப்படும் இது, கோயம்புத்தூருக்கு இரவு 8:15-க்கு வந்து சேரும். இடையில், சேலம், ஈரோடு, திருப்பூர் என மூன்றே ஸ்டாப்புகள். அதேபோல, கோயம்புத்தூரில் காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத், காலை 11:50-க்கு சென்னை வந்து சேருகிறது. சென்னை-கோயம்புத்தூரிடையே செல்லும் ஏனைய இண்டர்-சிட்டி எக்ஸ்ப்ரெஸ்களைவிட, 1 1/2 மணி குறைவான நேரத்தில், ஏசி குளுகுளுப்பில், வந்தே பாரத் உங்களை சொகுசாகக் கொண்டுபோய் சேர்க்கும். இந்தப் புது விரைவு ரயிலில் பயணிப்பதற்கான டிக்கட்டுகள், புக்கிங் ஆரம்பமான சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டன. ஐபிஎல் டிக்கெட் சேல் மாதிரில்ல இருக்கு வந்தே பாரத் சேல்!

பியுஷ் கோயல் (Piyush Goyal) திறனான மந்திரியாகத் தலைமை தாங்கும் மத்திய ரயில்வே அமைச்சகத்திலிருந்து இன்னும் நல்ல பொதுநல முயற்சிகள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது எனத் தோன்றுகிறது.

**

4 thoughts on “வளரும் பாரதம்… வந்தே பாரத் !

  1. நல்ல வர்ணனை/  ஒருமுறை சென்று வர ஆசையாக இருக்கிறது.  இன்று மாலை மெரினா செல்வதாக இருந்தோம்.  அது தடை!  பெசன்ட் நகர் பீச் கூட போகமுடியுமா, தெரியவில்லை!

    Like

    1. வந்தே பாரத் ரயில்ல போய்ப் பார்ப்பாரோன்னு பார்த்தால், மெரீனா பீச் போவது தடைபட்டுவிட்டதேன்னு கவலைப்படறாரே

      Like

  2. வந்தே பாரத் இரயிலில் விரைவில் பயணம் செய்வேன். பார்ப்போம் எந்த வாய்ப்பு வருகிறது என்று. நல்ல வர்ணனை. இரயிலில் பயணம் செய்த அனுபவத்தைத் தந்தது. ஆனால் எந்த இரயிலும் நாம் எப்படி வைத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்.

    Like

  3. @ ஸ்ரீராம், @ நெல்லைத்தமிழன் :

    பயணம் செய்ய, ரசிக்க உகந்ததுதான் இந்த ரயில். டைமிங்கும் சரியாக இருக்கிறது. மைசூர், பெங்களூரில் மதிய சாப்பாடு சாப்பிட்டுப் புறப்படுபவர்கள் சென்னையில் இரவு சாப்பாட்டிற்கு இலை போடச் சொல்லிவிடலாம்!

    நமது ஜனங்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்களா, சுத்தத்தைப் பேணுவார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான்..

    Like

Leave a comment