நேற்று கொழும்பு மைதானத்தில் ஆசியகோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 போட்டியில், டாஸ் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்யச்சொன்னார் பாக் கேப்டன் பாபர் ஆஸம். அவ்வளவுதான். ஏன் அப்படிச் சொல்லித் தொலைத்தேன் என்று சில நிமிஷங்களுக்குள்ளேயே அவர் தலையில் அடித்துக்கொண்டிருப்பார்.. ஜாடிக்குள்ளிருந்து பூதம் புறப்பட்டதுமாதிரி கிளம்பி, பாகிஸ்தானின் ஆகச்சிறந்த பௌலர்களை துவம்சம் செய்துவிட்டார்கள் இந்திய முன்னணி பேட்ஸ்மன்கள். விளைவு இந்தியாவின் ஹிமாலய ஸ்கோரான 356 / 2. வெறும் 2 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தமுடிந்தது பாகிஸ்தானால். அதுவும் ஆட்டத்தை ஆரம்பித்த ரோஹித், கில் (Gill) இருவரும் தலா அரைசதம் சாத்தியபின்.
KL Rahul – Back with a bang !
3,4 பேட்டிங் வரிசைக் கிரமத்தில் இறங்கிய கோஹ்லியும், கே.எல். ராஹுலும் அசடுகள் போல்தான் மெதுவாக ஆரம்பித்தார்கள். பின்னால் சூடேறி, பாக் வேகப்பந்துவீச்சாளர்களையும், ஸ்பின்னர்களையும் ஓட, ஓட விரட்டிவிட்டார்கள். ஒருகட்டத்தில் ஷஹின் ஷா அஃப்ரீதி, ஹாரிஸ் ராஃப், நஸீம் ஷா என்று பாகிஸ்தானின் டாப் பௌலர்கள் கையில் அடி, காலில் அடி என்று பெவிலியனுக்கு ஓடவே விரும்பியது செம தமாஷாக இருந்தது!
இந்த ஆபரேஷன் மர்டரில், விராட் கோஹ்லியும், காயத்திலிருந்து நீண்டநாள் விலக்கத்தின் பின் திரும்பியிருந்த ராஹுலும் ஆளுக்கொரு சதம் அடித்து இந்திய ரசிகர்களுக்கு போதையேற்றினார்கள். (கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட்டில் 13000 ரன்களை வேகமாகக் கடந்து சாதனை) இந்தியாவின் முதல் இரண்டு பேட்ஸ்மன்கள் தலா அரைசதம், அடுத்து வந்த இருவர் ஆளுக்கொரு சதம். ஆஹா.. இப்படி இதற்கு முன் பாகிஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா காண்பித்திருக்கிறதா!
357 என்கிற இலக்கு எந்த ஒரு அணிக்கும் வயித்துக்கடுப்பைத்தான் வரவழைத்திருக்கும். வெகுநாள் இடைவெளிக்குபின் அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவின் துல்லிய ஸ்விங்கர்களில் தலைசுற்ற ஆரம்பித்தது பாகிஸ்தானுக்கு. எப்படியோ க்ரீஸில் நின்றாலே போதும் என்கிற நிலை. சிராஜும் நன்றாகவே வீசினார். பாகிஸ்தானின் டாப் பேட்ஸ்மன்கள் சிக்கிக்கொண்டு விழிக்க, இடது கை சுழல்வீரரான குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. நீ உன் வேலயக் காட்டு ! சக்ரவியூகம்தான். குல்தீப்பின் சுழலில் சிதறி, கதறி ஒவ்வொருத்தராக பெவிலியனுக்கு ஓடிவிட்டார்கள் பாகிஸ்தானிகள். சூப்பர் லெக்-ஸ்பின் 5 விக்கெட்டுகளை அவருக்குக் கொடுத்தது. (அடுத்த மாதம் இந்தியாவில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பையில் குல்தீப் கவனத்திற்கு வருவார்.)
அடிபட்ட மரவட்டைபோல சுருண்டு விழுந்தது பாகிஸ்தான். முக்கி, முனகி 128 தான் அவர்களால் முடிந்தது. காயம் காரணமாக இரண்டு பௌலர்கள் பேட்டிங் செய்யமுடியவில்லை என்றார்கள். இந்தியாவின் 258 வித்தியாசத்தில் அபார வெற்றி, பாகிஸ்தானை நொந்துபோக வைத்திருக்கும்.
இதை எழுதுகையில் இந்தியாவுக்கு எதிராக இன்றைய போட்டியில் இளம் ஸ்ரீலங்கா இடதுகை ஸ்பின்னர் துனித் வெல்லாலகே (Dunith Wellalage) பின்னிப் பெடலெடுத்துவிட்டார். இந்தியாவின் டாப் 5 வீரர்களை சுருட்டி எறிந்துவிட்டார். திணறுகிறது இந்தியா! இன்று ஸ்க்ரிப்ட் மாறுகிறதோ என்னவோ. கிரிக்கெட் ..ஹ்ம்… a magical game of uncertainties…
**