தோல்விக்கு அடுத்த நாள் . .

பயந்தபடியே, தோல்விப் பிசாசு ஓடிவந்து இந்தியாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டது நேற்று எட்ஜ்பாஸ்டனில். இருந்தும் சிலிர்த்துத் தலைநிமிர்த்தி, கம்பீரமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மீடியா மூஞ்சூறுகளுக்குப் படபடவெனப் பொறிந்து தள்ளிவிட்டு, டின்னர் என எதையோ விழுங்கிவிட்டுப் போய்ப்படுத்திருப்பார்கள் கோஹ்லி & கோ.

இதோ வந்துவிட்டது அடுத்த நாள் காலை. நேத்திக்கி என்னதான் நடந்துச்சு? என்னவோ ஒரு எழவு.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை. அவ்வளவுதான். கொண்டுவா அந்த ப்ளாக் காஃபியை. ப்ரவுன்-ப்ரெட் சாண்ட்விச், டபுள், ட்ரிபிள்-எக் ஆம்லெட், சிக்கன் நக்கிட்ஸ் (chicken nuggets).. கொத்திக்கொத்தி உள்ளே தள்ளு. இந்தமாதிரிக் கொத்திக் கிழித்து சாப்பிட்டிருக்கணும் இந்த இங்கிலீஷ்காரனுங்களை.. ம்ஹூம். தப்பிச்சிட்டானுங்க. இப்போ ஒன்னும் குடிமுழுகிப்போய்விடவில்லை. இன்னும் நாலு இருக்கிறது. பாத்துடுவோம் ஒரு கை. இவனுங்களுக்கு நம்ம கையிலதான் சாவு. அதுல சந்தேகமில்ல..

இப்படி இருக்குமோ இன்றைய இந்திய அணியின் மூடு? நல்ல வேளையாக, துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடும் அணியல்ல இது. கேப்டனும் ஒரு சூப்பர்-எனர்ஜி கில்லி. காலையிலேயே அணியை நெட் ப்ராக்டீஸுக்கு இழுத்துப்போயிருப்பார். கொஞ்சம் ரிஃப்ளெக்ஷன், ரீ-க்ரூப்பிங் தேவைப்படுகிறது. இருக்கிறது இன்னும் மூன்று, நான்கு நாள் இடைவெளி. வந்துவிடலாம் மீண்டு. அடுத்த டெஸ்ட் லண்டனின் லார்ட்ஸில் (Lord’s, London). கவாஸ்கர், வெங்க்சர்க்கார், விஷ்வனாத், அஜருத்தீன், கங்குலி, திராவிட், ரஹானே என இந்தியர்கள் ஏற்கனவே நொறுக்கியிருக்கும் மைதானம்தான். பார்ப்போம் இந்தமுறை என்ன காத்திருக்கிறதென்று. கோஹ்லியைத் தாண்டியும் யாராவது ஒரு இந்திய பேட்ஸ்மன் அடித்து நொறுக்காமலா லார்ட்ஸ் டெஸ்ட் முடிவடையும்?

தோல்வி முடிவிலும் சில வலுவான ப்ளஸ்கள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு இடுப்புவலி கொடுத்த கோஹ்லியின் அபார ஃபார்ம். அஷ்வினின் புதுப்பந்துச் சுழல் தாக்குதல், 7 விக்கெட் அதிரடி. ஏனோதானோ எனப் போட்டுக் குழப்பும் அல்லது ரன்களை எதிரணிக்கு தாரைவார்க்கும் இஷாந்த் ஷர்மா, இந்தமுறை காட்டிய முனைப்பான பந்துவீச்சு. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சாய்த்த 5 விக்கெட்கள். மாறித்தானிருக்கிறார் மனிதர். இங்கிலாந்து கௌண்ட்டியான ஸஸ்ஸெக்ஸில் (Sussex) விளையாடிய அனுபவம் பந்துவீச்சை மெருகேற்றியிருக்கிறது.(பௌலிங் கோச் பாரத் அருணுக்கும் கொஞ்சம் பங்குண்டு). புவனேஷ்வரும், பும்ராவும் (Jasprit Bumrah) காயத்தில் தோய்ந்துகிடக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில், அடுத்த மேட்ச்சிலும் இஷாந்த், உமேஷ், ஷமிதான் இந்தியத் தாக்குதலை வழிநடத்தவேண்டியிருக்கும்.

புஜாராவை பெஞ்சில் உட்காரவைத்தது தவறு என்று பெரும்பான்மையோர் முணுமுணுக்கிறார்கள். நானும்தான். (ச்)செத்தேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) இப்போது நல்லதொரு டச்சில் இல்லை என்றாலும், எதிரணியின் பௌலர்களைக் கட்டைபோட்டு அசரவைக்கும் திறனுள்ள டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். அடுத்த மேட்ச்சுக்குக் கூப்பிடுவார்களா? அழைக்கப்பட்டால், ஷிகர் தவன், அல்லது கே.எல்.ராஹுல்- இருவரில் ஒருவருக்கு உட்கார பெஞ்ச் கிடைக்கும். எப்போதும் நின்று விளையாடும் முரளி விஜய்யும், ரஹானேயும் கூடத்தான் முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை? இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் – யாராவது ஒருவர் உள்ளே வந்தால் பௌலிங் டெபார்ட்மெண்ட் வலுப்பெறும் எனத் தோன்றுகிறது. இவர்களை இஷ்டத்துக்கும் தூக்கி அடிக்க இங்கிலீஷ்காரர்களால் முடியாது. ஆனால் பதிலாக, ஹர்தீக் பாண்ட்யாவை எடுக்கவேண்டிவருமே? ம்ஹூம்..அது சரிப்படாது. யாரைப் போடுவது, யாரைத் தூக்குவது? இந்தியக் கேப்டனாய் இருப்பதைவிட பிஹாரின் முதல்வராக இருந்துவிடலாம் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டதோ கோஹ்லிக்கு ?

*