ஞானத்தின் ஒரு பொட்டு விதை

19-20 -ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் மெய்யியல் ஞானி, கவிஞர், ஓவியர், சிற்பி என்றெல்லாம் எண்ணற்ற அபிமானிகள்,வாசகர்கள், ரசிகர்களின் வர்ணனைகள். மத்திய கிழக்கில், லெபனானில்  ஒரு மலைக் கிராமத்தில் (அந்தக்காலத்திய சிரியப் பகுதி) பிறந்து வளர்ந்து, அந்தப் பிரதேசத்தின் ஒரு மோசமான அன்னிய ஆதிக்கப் பின்புலத்தில், குடும்பத்துடனும் மற்றவர்களுடனும் லெபனானிலிருந்து புறப்பட்ட கப்பலொன்றில் ஏறி, அதுகொண்டுபோய்விட்ட தேசமான அமெரிக்காவில், புலம்பெயர்ந்து வாழ நேர்ந்தது அவருக்கு. நியூயார்க்கில் இளமைக் காலத்தைக் கழித்தவர். இளமைக்காலமா? உண்மையில், முதுமையின் பக்கமே அவர் வரவில்லை. 47-ஆவது வயதிலேயே ’போதும், வா!’ என்றுசொல்லிவிட்டதுபோலும், அந்த உலகம். அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியவர். ‘தி ப்ராஃபிட் (The Prophet) அவருடைய உலகப்புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு. வசன கவிதையாகப் பொழிந்திருக்கிறார் மனுஷன். ’முறிந்த சிறகுகள்’ (The Broken Wings) – அரேபிய மொழியில் அவரது முதல் நாவல் – பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பெரும்பாலான அவரது படைப்புகள் நண்பர்களுக்கு என எழுதப்பட்ட அரேபிய மற்றும் ஆங்கில மொழி கடிதங்களை ஆதாரமாகக்கொண்டவை.  சிறந்த ஓவியங்கள் பல வரைந்திருக்கிறார் எனினும் அவை லெபனானுக்கு அனுப்பப்பட்டதால், மேலைநாட்டு ரசிகர்கள், விமரிசகர்களின் பார்வையில் வரவில்லை. ஆகவே அதிகம் பேசப்படுவதில்லை.

ஒரு தேவதை போல,  காலமெனும் வெளியைக் கடந்த ஞானியாக, அவரை  மதித்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அதில் சிலர், அவரது வார்த்தைகள் யேசுவையும், பழைய ஏற்பாட்டின் கருத்துக்களையும் எதிரொலிப்பதாகக் கூறுகின்றனர். உலகின் மற்றுமொரு பகுதியில், அவரை ஆபத்தானவராக, இளைஞர்களுக்கு விஷம் ஊட்டும் பாவியாகப் பார்த்து வெறுத்தவர்களும்  இருந்திருக்கிறார்கள். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அவரது அரேபியப் படைப்பான ‘Spirits Rebellious’ (புரட்சி ஆன்மாக்கள்) கட்டுக்கட்டாக  வீதியில் போட்டுக் கொளுத்தப்பட்டது. அவருக்கெதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran).

’ஆன்மாவின் கண்ணாடிகள்’ எனும் அவரது புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கொஞ்சம் சிந்திக்கவைத்தது; கொஞ்சம் ஆழத்தில் அழுத்தி வேடிக்கை பார்த்தது.  லேசாக, பகிர்கிறேன்.

**

இந்த பூமி மூச்சுவிடுகிறது. நாம் வாழ்கிறோம். அது கொஞ்சம் நிறுத்திப்பார்க்கையில், நாம் இறந்துவிடுகிறோம்.

**

அழவைக்காத ஞானம், சிரிக்கவைக்காத தத்துவம், குழந்தைகளின் முன் பணியவைக்காத உயர்வு, புகழ் இவற்றிலிருந்து என்னைத் தள்ளி வை, இறைவா..

**

நம்மிடையே கொலைகாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கொலையையும் செய்ததில்லை. திருடர்கள் இருக்கிறார்கள். எதையும் அவர்கள் திருடியதில்லை. பொய்யர்கள் இருக்கிறார்கள். உண்மையைத் தவிர வேறெதையும் அவர்கள் பேசியதில்லை.

**

அடுத்தவீட்டுக்காரனிடம் உன்னைப் பாதிக்கும் பிரச்னைபற்றி நீ பிரஸ்தாபிக்கையில், உன் இதயத்தின் ஒரு பகுதியை  அவனுக்குக் காண்பிக்கிறாய். அவன் அருமையான ஆத்மாவானால், உனக்கு நன்றி சொல்கிறான். சிறுமனதுக்காரன் எனில், உன்னைக் குறைசொல்லி ஏளனம் செய்கிறான்.

**

எதையும் மறுப்பதென்பதும், எதிலும் வேறுபடுவது என்பதும், மனித அறிவின் (intelligence) கீழ்நிலையே.

**

எவ்வளவு உச்ச ஆனந்தம் அல்லது துக்கத்தில் நீ இருக்கிறாயோ, அதற்கு எதிர்விகிதமாக, உன் கண்களுக்கு இந்த உலகம்  சிறியதாகத் தோன்றும்.

**

வீரம் என்பது ஒரு எரிமலை. குழப்பத்தின் விதை அதற்குள்ளே முளைக்காது.

**

பிரபஞ்சத்தில் ஒளிந்துகொண்டிருக்கும், பிரபஞ்சத்திலேயே, பிரபஞ்சத்திற்காகவே  இருக்கும் ஓ! உயர் ஞான வடிவே! நான் சொல்வதைக் கேட்க உன்னால் முடியும் – ஏனெனில், எனக்குள்ளேயேதானே இருக்கிறாய் நீ. என்னை உன்னால் பார்க்கமுடியும் ; நீதான் அனைத்தையும் பார்ப்பவனாயிற்றே. உனது ஞானத்தின் ஒரு பொட்டு விதையை என் ஆன்மாவுக்குள் விதைத்துவிடு. உன் காட்டில் அது முளைத்து வளர்ந்து, உன் பழமொன்றைத்  தரட்டும்.

**

குறிப்பு: கொஞ்சம் இடைவெளிவிட்டு, ஜிப்ரான் பற்றி மேலும் எழுதுவேன் எனத் தோன்றுகிறது ..

ஐதரேய உபநிஷதம்

 

தொடர்ச்சி…

’ஸ ஏதமேவ புருஷம் ப்ரஹ்ம ததமமபச்யத்.. இதமதர்சமிதீ ||’ – என்று முடியும் மந்திரம் இப்படிச் சொல்கிறது: (இப்படிப் படைக்கப்பட்ட மனிதன்) மற்ற உயிரினங்களைப்பற்றி யோசிக்கலானான். இங்கே சிந்திக்க, (தான் படைக்கப்பட்ட விதத்திலிருந்து வேறுபட்டு, அன்னியமாக யோசிக்க) என்ன இருக்கிறது என்றும் தோன்றியது அவனுக்கு. (தன் உடம்பைப் பார்த்து) இந்த உடம்பில் இருக்கும் பிரும்மமே எல்லா உயிரிலும் இருக்கிறது என்று ஆத்மபூர்வமாக உணர்ந்தவன், எல்லையில்லா ஆச்சரியத்திற்குட்பட்டான். ‘’நான் ’இதனை’ (பிரும்மத்தின் ரகஸ்யத்தை) கண்டுகொண்டேன்..’’ என இனம்புரியா சந்தோஷத்துடன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் மனிதன். (’இந்த மனிதனே’ நம்  ஆதி,  தொல்மூதாதை எனப் புரிந்துகொள்ளல், மனதுக்குப் பரமசுகம் தரும் விஷயம்).

இப்படி பிரும்மத்தை உணர்வுபூர்வமாக அறிந்தவனின் ’அறிதல்’ மேலும் அவனுக்குள் பரவுகிறது. பிரும்மம் (இறை) எப்படி எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறது என அவன் வியந்துபோனான். அடுத்துவரும் மந்திரம் அந்த வியப்பை இப்படிக் காட்டுகிறது: ’தஸ்மாது இதந்த்ரோ நாம இதந்த்ரோ ஹ வை நாம|’ . அதாவது, தஸ்மாது இதந்த்ரோ நாம – எனில் ’அதனால்தான் இதற்கு (பிரும்மம்) ’இதந்திரன்’ எனப் பெயர்போலும்’ என்று அர்த்தம்.  ’ஹ வை.. – நிச்சயமாக’ (இப்படி அருகிலேயே இருக்கும்) இது இதந்திரன் தான். இங்கே கவனிக்கவேண்டியது இது இந்திரன் அல்ல. இதந்திரன்.  இதந்திரன் என்பதற்கு ‘இதோ..இங்கே’ எனக் காணப்படுவதாக அருகில் ‘இது’ (பிரும்மம்) இருக்கிறது’ – எனப் பொருள் வரும். இதனால்தான் இதனை ‘இதந்திரன்’ என ஒரு ரகசியத் தன்மையுடன் பூடகமாக அழைக்கின்றனர்.

மனிதனும் உயிர்களும் வாழ்வதற்காக பிரபஞ்சத்தில் உலகைப் படைத்து அதனைப் பாதுகாக்க தேவ சக்திகளையும் உண்டாக்கிய பிரும்மம், தன்னை எங்கும் நிதர்சனமாக வெளிப்படுத்தவில்லை. மறைந்திருந்து இயங்கும் இயல்பினது அது. ஏனென்றால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாது மறைந்திருந்து செய்யும் செயல்களே உன்னதமான பலன்களைத் தருகின்றன. ’’ பரோக்ஷப்ரியா இவ ஹி தேவா:| பரோக்ஷப்ரியா இவ ஹி தேவா:’’ என்று முடிகிறது இதில் வரும் ஒரு மந்திரம். இதன் பொருள்: தேவ (தெய்வங்கள், தேவர்கள்), பரோக்ஷப்ரியா – மறைந்திருப்பதையே  விரும்புபவர்கள் என இருமுறை சொல்லி உறுதிப்படுத்துகிறது.

இந்த உபநிஷதம் மேலும் சிருஷ்டியின்போது, உடம்பில் புதிய உயிர் உருவாதல் பற்றிய ரகசியங்களைப் பேசுகிறது. ஆணின் (தந்தையின்) உடம்பில் அவனது அனைத்து அங்கங்களின் சக்தியின் சாரமாக விந்து உருவாகிறது. அத்தகைய ஆண் –தந்தையானவன்- தன்னையே தனக்குள் இப்படித் தாங்கியிருக்கிறான். பெண்ணின் (மனைவியின்) உடம்பிற்குள் இந்த சக்தியை  எப்போது செலுத்துகிறானோ, அப்போது அவன் தன்னையே குழந்தையாகப் பிறப்பித்துக்கொள்கிறான். மனைவியின் உடம்புக்குள் புகுந்த விந்து, அவளுடைய அங்கமே போல, அவளுக்குள் இசைந்து ஒன்றிவிடுகிறது. அந்தப் பெண்மணி,  அவ்வாறு தனக்குள் புகுந்த உயிரைத் தன் இயற்கை இயல்பினால், கவனமாகப் பாதுகாக்க ஆரம்பிக்கிறாள் என்கிறது.

அடுத்த ஸ்லோகம் ஒரு உன்னதமான விஷயத்தை சொல்லி ஆரம்பிக்கிறது. ’ஸா பாவயித்ரீ பாவயிதவ்யா பவதி |’ என்கிறது. அப்படியென்றால்? இது அர்த்தம்: ’அப்படித் தன்னுள் வந்துசேர்ந்திருக்கும் (உருவாகியிருக்கும்) உயிரைப் பாதுகாக்கும் பெண், பாதுகாக்கப்படவேண்டியவள்

மனிதனின் முதல் பிறப்பாக, விந்தாக பெண்ணுடலில் சேர்ந்த உயிர் அமைகிறது. அது மெல்ல இனிதே வளர்ந்து குழந்தையாக அவளுக்குப் பிறப்பது அவனது இரண்டாவது பிறப்பு. குழந்தை பிறந்த பிறகு அதனைத் தானாகவே எண்ணித் தந்தை அதனைக் கவனமாகக் காலமெலாம் உணர்கிறான்; பாதுகாக்கிறான். இப்பிறப்பு, அடுத்த பிறவி என மனித உயிர் சங்கிலியாகத் தொடர்வதற்கே அவன் இவ்வாறு செய்யுமாறு இயற்கையாக அமைந்திருக்கிறது. முதுமை அடைந்து காலமாகின்ற அவன், தன் கர்மவினைகளுக்கேற்ப மறுபிறவி எடுக்கிறான். அதுவே அவனது மூன்றாவது பிறப்பு என்கிறது .

கருப்பையின் உள்ளே வளரும் உயிர் காணும் இறைக்காட்சிகளை, அது ரட்சிக்கப்படுவதை பூடகமாக உணர்த்துகிறது இந்த உபநிஷதம். மேற்கோள்போல வாமதேவர் குழந்தையாக தாயின் கருப்பையில் கண்ட காட்சிகளைச் சொல்கிறது. தேவர்களுக்கும் மறுபிறப்பு இருந்திருக்கிறதெனவும் அவற்றைத் தான் கண்டதாகவும் வாமதேவர் கூறுகிறார். நூற்றுக்கணக்கான பிறவிகளாய்த் தான் பிறந்துவருவதை அவர் தாயின் வயிற்றிலிருக்கையிலேயே ‘கண்டு’,  நூறு இரும்புக்கோட்டைகளைப் பிளந்துகொண்டு ஒரு பருந்தைப்போல் அவற்றிலிருந்து ‘வெளிவந்ததாக’  கூறுகிறார். தாயின் கர்ப்பப்பையில் தனக்கு இறை அனுபூதி நிகழ்ந்ததாகக் கூறி, தான் பிறப்பு-இறப்பு வளையத்தை உடைத்துப் பிறந்து, வாமதேவராகத் தன்பிறவி முடிந்தபின் மரணமில்லாப் பெருவாழ்வுபெற்றதாக சொன்னதாய் இந்த உபநிஷதம் சொல்கிறது.

இப்போது ஆன்மா அல்லது பிரும்மத்திற்குத் திரும்புகிறது உபநிஷதம். யாருடைய சக்தியினால் பார்க்கிறோமோ, யாரால் கேட்கிறோமோ, யாரால் நுகர்கிறோமோ, யாரால் நம்மிடமிருந்து வாக்கு வெளிப்படுகிறதோ அவரே, அதுவே பிரும்மம் எனச் சொல்கிறது. பேருணர்வுப்பொருளான பிரும்மம் அனைத்தையும் கடந்ததாக இருப்பினும், அதுவே நமக்கு மனமாகவும், புத்தியாகவும், உணர்ந்தறிதல் (perception), உள்ளுணர்வு (insight), நினைவு (thought/memory), பிராணன் என்றெல்லாமாகவும் வெவ்வேறு பரிமாணம் கொள்கிறது.

‘’ஏஷ ப்ரஹ்மைஷ..’’ என ஆரம்பிக்கும் ஸ்லோகம் இதுவே (பிரும்மம்) –  படைப்புக்கடவுளான பிரும்மா, இந்திரன், பிரஜாபதி, தேவர்கள், ஐந்து ஆதார மூலங்கள் (the five elements), நுண் உயிரினங்கள், முட்டைகளில் தோன்றுபவை, விதைகளில் போன்றவை, கருப்பையில் தோன்றுபவை, வியர்வையில் தோன்றுபவை போன்ற எண்ணற்ற உயிர்களும், ஜடப்பொருட்கள் உட்பட எல்லாமுமே – ‘’ப்ரஜ்ஞா நேத்ரம்.. ப்ரஜ்ஞானே ப்ரதிஷ்ட்டிதம்.. ப்ரஜ்ஞானம் ப்ரும்ஹ|| ’’ என்கிறது –அதாவது  எல்லாமே பிரும்மத்தால் வழிநடத்தப்படுபவை, பிரும்மத்தில் நிலைபெற்றவை; அனைத்திற்கும் ஆதாரம் பேருணர்வுப்பொருளான பிரும்மமே என விவரிக்கிறது.

இத்தகைய ஆன்மாவை –பிரும்மத்தை- உணர்பவன், உயிர் உடம்பிலிருந்து விலகியதும் சொர்கம் செல்கிறான். அங்கே எல்லா ஆசைகளும் பூர்த்திசெய்யப்பட்டு, ’’அம்ருத: ஸமபவத் ஸமபவத் ||’’ என்கிறது. அதாவது – ’மரணமில்லா வாழ்வை அடைகிறான்.. அடைகிறான்’ என்பதாக உறுதிப்படுத்தி ஐதரேய உபநிஷதம் நிறைகிறது.

**

மாண்டூக்ய உபநிஷதம்

வ்வொரு வேதமும் மூன்று முக்கிய பிரிவுகளைக்கொண்டது. ’சம்ஹிதை’ என்பது வெவ்வேறு தேவதைகளிடம் மனிதன் செலுத்தும் பிரார்த்தனைகள்பற்றியது. ’பிராம்மணம்’ என்பது ஒரு குறிக்கோள்கொண்டு செய்யப்படும் யாகங்களின் முறைகள், நியமங்கள் பற்றிச் சொல்வது. மூன்றாவது பகுதியே உபநிஷதங்கள் – சராசரி நிலையிலான பிரார்த்தனைகள், வேண்டுதல்களைத் தாண்டி, மனிதன் ஞானநிலை நோக்கித் திரும்புகையில் இவை வழிநடத்துகின்றன. பிரும்மம் அல்லது இறுதி உண்மை எனும் ஆன்மீகத்தின் உச்சப்புள்ளிபற்றி அவனோடு நின்று ஆய்பவை, அறியாத உன்னதத்தின் பாதையற்ற பாதையில்   அழைத்துச்செல்பவை.. அணுவின் அணுவாக, சூட்சுமத்தின் சூட்சுமமாக, வெளியின் வெளியாக இப்படி ஏதோ ஒரு மர்மம் இந்த பிரபஞ்சமுழுதும் விரவிக்கிடக்கிறது.. அதற்குள் இருக்கிறது எல்லா ரகசியங்களும் . எதனை அறிந்தால் எல்லாவற்றைப்பற்றியும் அறிந்ததாக ஆகிவிடுமோ, அதனை நோக்கி மனிதனை அழைத்துச் செல்வது உபநிஷதம் ‘என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

‘ஓங்காரம்’  என்பது இறைசக்தியின் சாரம் எனச் சொல்கிறது இந்த மாண்டூக்ய உபநிஷதம். அதர்வண வேதத்தின் இறுதியில் வரும் உபநிஷதம்  இது. ஓங்காரம், பிரணவம் என அழைக்கப்படும் ’ஓம்’ எனும் ஒலியே ஆதி ஒலி. ஆதிமந்திரம். அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்று ஒலிநிலைகளை (primordial acoustic forms) தன்னகத்தே கொண்டது. மிகச் சரியாக, உணர்வுபூர்வமாக  உச்சரிக்கப்படவேண்டிய மந்திரம். மேலோட்ட உச்சரிப்பில் பிரயோஜனமில்லை. ‘அ’ எனும் ‘அகரம்’ நாக்கின் அடிப்பகுதியான தொண்டைக்குழியில் ஆரம்பிக்கிறது. அகர சப்தம் பிற சப்தங்களில் இருந்து விலக்கமுடியாமல் ஒன்றியிருப்பதால் அதிமுக்கியமானது, ஆதாரமானது. கீதையில் தன்னைப்பற்றி அர்ஜுனனிடம் சொல்கிறான் கருநீலக்கண்ணன் : ’அக்ஷராணாம் அகாரோஸ்மி’. (அட்சரங்களில் நான் ’அ’  எனும் அகரம்!)  ‘உ’ எனும்  ‘உகரம்’  நாக்கின் மேல் கடக்கிறது. ’ம்’ எனும் ’மகரமாக’ உதட்டு நுனியில் வந்து முடிகிறது ’ஒம்’  எனும்  மந்திரம். அகரத்தில் மென்மையாகத் துவங்கி, உகரத்தில் ஒலி மிகுதியாகி, பின் மென்மையாக   ..ம்.. என முடியும் ஒலிநிலைகள். பிரும்மம், பிரபஞ்சம், மனிதன் என்கிற தத்துவத்தை தன்னுள்ளே கொண்டு,  ’ஓம்’ என ஒலித்து அதிர்வலைகளை உள்ளும் வெளியுமாக  எழுப்பும் உன்னதம்.

யாராலும் எழுப்பப்படாத அனாஹத த்வனி (ஆதியும் அந்தமுமில்லா சப்தம்) ஓங்காரம். இந்தப் பிரபஞ்சத்தில் பூதம் (Bootham) அதாவது கடந்தவை அல்லது மறைந்தவை, பவத் (Bhavath) எனப்படும் இருப்பவை, பவிஷ்யத்  (Bhavishyath) எனப்படும் ‘இனி வரவிருப்பவை’ மற்றும் ஸர்வம்  (அனைத்தும்) ஓங்காரமே  என்கிறது தன் முதலாவது ஸ்லோகத்தில் இந்த உபநிஷதம். பிரபஞ்சத்தில் ஓங்கார சப்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருப்பதாயும், தவயோகிகளால் அதனைக் கேட்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

{சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் ..

–இது திருமூலர். அதாவது கோவிலென இருக்கும்  இந்த நல்லுடம்பில் சிரத்தை, இறையுணர்வோடு இடது வலமாகப் பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) நெடுங்காலம் முறையாகச் செய்துவந்தால், பகலிலும் இறைஒலி கேட்கும்  எனச் சொல்லிச்சென்றார்.}

அடுத்த ஸ்லோகத்தில் ’ஸர்வம் ஹ்யேதத் ப்ரஹ்ம, அயமாத்மா ப்ரும்ஹ, ஸோயமாத்மா சதுஷ்பாத்…’ என விஷயத்தைத் தெளிவாக்க முயல்கிறது. இந்த ஆன்மா ப்ரும்மம், இப்படி (பிரபஞ்சத்தில் காணப்படுகிற) எல்லாமும் ப்ரும்மமே (பரம்பொருளே) எனச் சொல்கிறது.  எந்த மூலத்திலிருந்து ஒன்று உண்டாக்கப்படுகிறதோ அது, அந்த மூலத்தின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். ஆதலால் இந்தப் பிரபஞ்சம் முழுதும் மனிதன் உட்பட எல்லா உயிர்களும், ஜடப்பொருட்களும்கூட அந்த இறையின் குணக்கூறுகளைக்கொண்டுதானிருக்கும். அதனால்தான் அனைத்தும் ப்ரும்மமே எனச் சொல்லப்படுகிறது இங்கே. இறைசக்தி மனிதனில் பிரகாசிக்கையில் அது ’ஆன்மா’ என அழைக்கப்படுகிறது.

(தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

-திருமூலர் இங்கே சிவவாக்கியர் மொழியில் நறுக்குத்தெறித்தார்போல் பேசுகிறார்)

இந்த மாண்டூக்ய உபநிஷதத்தில் வரும் ’அயமாத்மா ப்ரும்ஹ’ ( ’(எனக்குள்ளிருக்கும்) இந்த ஆன்மா ப்ரும்மம்’) என்பது மஹாவாக்கியம் எனக் கொள்ளப்படுகிறது.

அடுத்த ஸ்லோகம் ஆன்மாவின்  நான்குவித பரிமாணங்களைக் குறிப்பிடுகிறது. ‘ப்ரதம: பாத: வைஸ்வானர.. ‘ – அதாவது ஆன்மா தன் முதல் பரிமாணத்தில் ‘வைஸ்வானரன்’ என அழைக்கப்படுகிறது.. வைஸ்வானரன் என்பது விழிப்புநிலையில் உள்ளவன். இரண்டாவது நிலையை ‘தைஜஸன்’ அதாவது ‘கனவுநிலையில் இருப்பவன்’ என்கிறது. மூன்றாவது பரிமாணமாக ப்ராஜ்ஞன் – ஆன்மா ’ஆழ்ந்த உறக்கநிலை’யில் இருப்பவனாகக் கொள்ளப்படுகிறது.

ஆன்மாவின் விழிப்புநிலை உணர்வுபூர்வமாக, புறவயமாக இருக்கிறது.  தான் வாழ நேர்ந்திருக்கிற வெளி உலகை, அதன் சூழ்வெளியான மாபெரும் பிரபஞ்சத்தை ஆன்மா, இந்நிலையில் அனுபவிக்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியுமாகிறது.

இரண்டாவது நிலையான தைஜஸன் (கனவுநிலை), தன் உணர்வுகளை அகமுகமாகத் திருப்பிவிடுகிறது. இங்கே புறவுலகு மறைந்து, மனவுலகு தெரிய,  அதனை அனுபவிக்கிறது ஆன்மா.

மூன்றாவது பரிமாணமாக சொல்லப்படுவது,  ‘ப்ராஜ்ஞன்’ (ஆழ்உறக்கநிலை)- இதனை, புறஅனுபவங்கள் ஒடுங்கி, உணர்வு உட்புறமாகத் திரண்ட நிலை என்கிறது. அனுபவங்கள், உணர்வுகள் ஒடுங்கிய, மறைந்துவிட்ட நிலையில் ஆன்மா ‘ஆனந்தமய:’ –ஆனந்த ரூபமாக, ‘ஆனந்தபுக் ஹி’ – ஆனந்தத்தை அனுபவிப்பதாக இருக்கும் நிலை என்கிறது.

இதன் நான்காவது நிலையாக ஒன்றுள்ளது. ஆழ்ந்த கவனிப்பை, அறிதலை அது வேண்டுகிறது. இதனை இந்த உபநிடதம் இப்படி விளக்குகிறது: நான்காவது நிலை எனப்பட்டாலும், முதல் மூன்று நிலைகளை உள்ளடக்கியதும், அதே சமயம் அவற்றைத் தெளிவாகக் கடந்தநிலையுமாகும். இது புறமுக நிலையல்ல, அகமுகநிலையல்ல, இரண்டும் கலந்த உணர்வுகுவிந்த நிலையுமல்ல. இதனைக் காண இயலாது. புரிந்துகொள்ளமுடியாது. அடையாளங்கள் இல்லாத, விளக்கமுடியாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு உன்னத நிலை. மங்கலமானது, சாந்தமே வடிவானது, ’த்வைதம் இல்லாதது’, அதாவது ‘இரண்டற்றது’. {‘த்வைதம்’ (state of duaity) என்பது : நல்லது, கெட்டது/ பாவம், புண்ணியம்,/ நிலையான, நிலையற்ற/ போன்ற இரண்டிரண்டாக, ஒன்றுக்கெதிராக இன்னொன்றைப் பார்க்கும்/புரிந்துகொள்ளும் மனநிலை}. அத்வைதம் (state of non-duaity) இது . மனிதனின் உண்மையான ‘இயற்கை நிலை’ ஆதி நிலை இதுவே. தனக்குள்ளிருக்கும் ஆன்மாவை இவ்வாறு ‘அறிபவன்’ இந்நிலையில் ஒளிர்கிறான்.. ப்ரும்ஹத்தை உணர்ந்தவனாக ஆகிறான். ..

வர்ணனையை மிஞ்சிய இந்த ஆன்மாவை (ப்ரும்மத்தை) எழுத்துக்களில், சொல்லாகக் குறிப்பிட நேர்ந்தால், அதுவே ’ஓம்’ எனும் அகர, உகர, மகர ஒலி அடுக்குகளைக்கொண்ட ஓங்காரம்.

மேலும் ஓங்காரத்தை விளக்கிச் செல்கிறது:

ஓம் எனும் மந்திரத்தின் முதற்பகுதியாகிய ’அ’ என்கிற அகரம், ஆன்மாவின் முதல்நிலையான விழிப்புநிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அகரம் எல்லா சொற்களிலும் கலந்துள்ளது. அதேபோல, விழிப்புநிலையும் மற்ற இரண்டு நிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. கனவுகளாக வெளிப்படும் ஆழ்மனப்பதிவுகளுக்கு விழிப்புநிலை அனுபவங்களோடு தொடர்புண்டு. ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புநிலை அனுபவங்கள், தனித்தனியாகத் தெரியாமல் உணர்வுத் திரளாக மறைந்திருக்கின்றன. அகரம் ஓங்காரத்தின் ஆரம்பநிலையாக இருப்பதுபோல, விழிப்புநிலை ஆன்மாவின் (பிரும்மத்தின்) ஆரம்பநிலையாக உள்ளது.

ஓங்காரத்தில் இரண்டாவது நிலையாக வரும் ’உ’ எனும் ‘உகரம்’ உரக்க உச்சரிக்கப்படுகிறது. ஆன்மாவின் இரண்டாவது நிலையான கனவுநிலையோடு ஒப்பிடப்பட்டுள்ள இது, உயர்வானதாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில், கனவுநிலையில், உணர்வு மனம் (Conscious mind) ஓய்ந்துவிடுகிறது. ஆழ்மனம் (Subconscious mind) எனும் மனதின் பெரும்பகுதி கனவுநிலையில் பிரதான பங்கு வகிக்கிறது. இதன் எல்லைகள் மிகப் பரந்தவை. இது விழிப்பு நிலையின் வெளிஉலக அனுபவங்களோடும், மனதின் ஆசைகள், லட்சியங்கள், பயங்கள் என்பதோடு, எதிர்காலம், இறைவன் என்றெல்லாம் விஸ்தாரமாக வெவ்வேறுதளங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. இதைப்போலவே ஓங்காரத்தின் நடுவில் வரும் ’உ’ எனும் உகரம், ’அ’ எனும் ஆரம்ப, மற்றும் ‘ம்’ எனும் இறுதிநிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது.

ஓங்காரத்தின் ‘ம்’ என்பது மூன்றாவது பகுதி. இது , ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஆன்மாவின் மூன்றாவது நிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஓம் எனும் மந்திரத்தின் ‘அ’வும், ‘உ’வும்,  ‘ம்’-ல் இணைகின்றன. கலக்கின்றன. அதைப்போலவே, ஆன்மாவின் முதல் இரண்டு நிலைகளான விழிப்புநிலை, கனவுநிலை ஆகியவை, மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒடுங்குகின்றன, நிரம்புகின்றன. ஓம் எனும் மந்திரத்தில் ‘ம்’ –ஆனது,  ‘அ’ –வையும், ‘உ’வையும் தனக்குள் அடக்கிக்கொள்கிறது. அதைப்போலவே,  ஆன்மாவின் ஆழ்ந்த உறக்கநிலை – விழிப்பு மற்றும் கனவு நிலைகளை தன்னகத்தே கிரகித்துக்கொண்டு, தனக்குள் நிரப்பி, திரளாக வைத்திருக்கிறது.

இவற்றைத்தாண்டியும் பிரணவ மந்திரத்தின் நான்காவது பகுதி ஒன்றிருக்கிறது. ஒலி இல்லாததாய்த் தெரிவது. ‘பகுதி’ என மற்றவற்றைப்போல் அளவிட, விளக்கிவிடமுடியாது. சொல், செயல், உணர்வு கடந்தது. பிரபஞ்ச உணர்வையும் கடந்ததாக, மங்கலமானதாக இது அறியப்படுகிறது. ’ஓம்’ என மந்திரத்தை உச்சரித்து முடித்தபின் மீண்டும் ’ஓம்’ என ஆரம்பிக்குமுன் வரும் இடைவெளி இது. சாந்தநிலை. ‘ஓம்’ எனும் ஓங்காரம் ‘அ’, ‘உ’, ‘ம்’ மற்றும் நான்காவதான  ‘சாந்திநிலை’ (அமைதிநிலை)யும் கூடியது. இதனை இவ்வாறு அனுபூதியாக அறிபவன், உணர்பவன் ஆன்மாவை ஆன்மாவால் (ப்ரும்மத்தை ப்ரும்மத்தால்) அடைந்தவனாகிறான் என்கிறது இந்த உபநிஷதம்.

Picture courtesy: Internet/ Google

**

கேன உபநிஷதம்

தனால் இந்தப் பயணம்? – எனக் கேள்வி கேட்டுக்கொண்டே சாமவேதத்தில் வரும் இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது ’தேடுகிறவனை’ ’உள்ளே’ இறக்கிவிட்டுப் பயணிக்கவிடுகிறது.

’ஓம். . கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன:’ என்கிறது ஆரம்பத்திலேயே.’(கேன’ என்பதற்கு ’எதனால்’ (எந்த சக்தியினால்) என்று அர்த்தம். எந்த சக்தியினால் விரும்பப்பட்டு, ஏவப்பட்டு, மனம் இப்படியெல்லாம் செல்கிறது, பயணிக்கிறது? என்கிற ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கிறது. ’இறுதிஉண்மைக்கான தேடுதலில்’ இருப்பவன், தன் மனத்தின் தன்மைகண்டு கூர்மையாகி, தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறான் இப்படி. மேலும் கேள்விகள் வருகின்றன: முக்கியமாக, பிராணன் என்று ஒன்றிருக்கிறதே நமக்குள்.. அதனை இயக்குவது, யாரோ? வாக்கு எனப்படும் சொல், பேச்சு என்பதெல்லாம் நம்மிலிருந்து எப்படிப் புறப்படுகின்றன? புலன்களை செயல்படுத்தும் சக்தி எது? என்கிற ரீதியில் மேலும் மேலும் கேள்விகள் துளைக்கின்றன..

பிராணன் எனப்படும் உயிர்சக்தி சூட்சுமமாக எங்கும் நிறைந்திருக்கிறது. உலகை இயக்குகிற ஆற்றல்படைத்தது. அதன் ஒரு துகள் – துகளினும் துகள் நமக்குள்ளும் இருக்கிறது. அதனாலேயே இயங்குகிறோம். எனச் சிந்திக்கையில், ஜீவனின் (மனிதனின்) ஸ்தூல உடம்பு, மனம் எனும் சூட்சும வடிவம், இவற்றோடு பிராணனும் யாரால் இயங்குகின்றன என்கிற கேள்வியில் வந்து நிற்கிறது. இன்னுமொரு ஸ்லோகம் ’ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரய் மனஸோ மனோ யத்’ என ஆரம்பித்து விஷயத்துக்கு வருகிறது. அதாவது காதின் காதாக.. மனதின் மனமாக.. என்று செல்லும் அது, தெளிவான ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது. காதின் காதாக, கண்ணின் கண்ணாக, வாக்கின் வாக்காக, மனதின் மனதாக, பிராணனின் பிராணனாகவும் இருப்பது ஒன்றே. அதுவே அது (பிரும்மம்) என நிற்கிறது இறுதியாக. தன் கடுமையான தவத்தினால், ஆழ்ந்த அக ஆய்தலில் உச்சம்பெற்று, உணர்வுநிலை திறக்கப்பட்டவன் இதனை உணர்கிறான். அவ்வாறு கண்டடைந்தவன் எவனோ அவன், இந்த புலன்களின் உலகிலிருந்து விடுபட்டுவிடுகிறான். பிறப்பு-இறப்பற்ற மேன் நிலையை எய்துகிறான் – என்கிறது.

மனதின் இயக்கத்தை, செயல்பாடுகளை துரத்திச்சென்று ஒரு பயனும் இல்லை என விழிப்புணர்வுபெற்றவன் புரிந்துகொள்கிறான். ஆதலால் அவன் மனதின்பின்னே இருக்கும் ஆன்மாவை அறிய முற்படுகிறான். மேலும் தொடர்கிறது. உடம்பு-மனம் என்கிற அமைப்பின் ஊடே, அழியாத உண்மைப்பொருளாக இருப்பது ஆன்மா. தானாகவே நிற்கும் அது உண்மையில் எத்தகையது என்கிற கேள்விக்கு குரு பதில் சொல்வதாக வருகிறது இந்த ஸ்லோகம்:

ந தத்ர சக்ஷூர்கச்சதி ந வாக்கச்சதி நோ மன:
ந வித்மோ ந விஜானீமோ யதைத தனுசிஷ்யாத்

அது கண்ணால் நோக்கப்பட முடியாதது; வாக்கும் (பேச்சு, சொற்களும்) மனமும் (சிந்தனைகளும்) அதனை நெருங்கமுடியாது. எனவே, எத்தகைய குணம்கொண்டது அது எனத் தெரியாது.. சொற்களில் சிக்காத ஒன்றை எப்படிப் புரியவைப்பது என எங்களுக்கும் தெரியாது (ஆனால் அவசியம் புரிந்துகொள்ளவேண்டியது) என்று ஆன்ம அனுபூதிபெற்ற குரு (ரிஷி) தன் சீடனுக்கு சொல்லும் வகையில் இது அமைந்துள்ளது. நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐம்புலன்கள் வெளிஉலகை அறிவதற்காக, தொடர்புகொள்வதற்காக மட்டுமே. அவற்றால் அகத்தினுள் உறைகின்ற ஒன்றை அறியமுடியாது. புலன்களால் அறியமுடியாததை, புலனைக்கொண்டு எப்படி சொல்வது? அதனால்தான் அதைப்பற்றி வார்த்தைகளில் தன்னால் சொல்லமுடியவில்லை என சீடர்களுக்குப் புரியுமாறு விளக்குகிறார் வேதகால ரிஷி. மேலும் சொல்கையில், அது மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விட வித்தியாசமானது. எதையெல்லாம் அவன் இன்னும் அறியவில்லையோ அவற்றைவிடவும் மேலானது. ஞானநிலை அடைந்து அதனை ‘அறிந்த’ எங்களது பூர்வாச்சாரியர்களால் (ரிஷிகள்) இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

’யத் வாசானத்யுதிதம் யேன வாகப்யுத்யதே..’ எனத் தொடங்கும் ஸ்லோகம் இப்படி விளக்க முற்படுகிறது: ’எது சொல்லால் (வாக்கினால்) விளக்கப்படமுடியாதோ, ஆனால் எதனால் சொல்லப்படுகின்ற சொல் விளக்கம், ஒளி பெறுகின்றதோ அதுவே பிரும்மம். எதனைக் கண்கள் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் கண்கள் பார்க்கின்றனவோ அதுவே அது. எதனைக் காதுகள் கேட்கமுடியாதோ, ஆனால் எதனால் காதுகள் கேட்கின்றனவோ அதுதான் அது.. மேலும், எதனை மூச்சு தீண்டமுடியாதோ, நுகரமுடியாதோ, ஆனால் எதனால் மூச்சுவிடுதல் (மனிதனுக்கு/உயிர்களுக்கு) சாத்தியமாகிறதோ, அதுவே பிரும்மம்’ என அறிவாயாக என்று சீடனுக்கு உபதேசிக்கிறார் குரு. கூடவே ’..அதுதான் பிரும்மம்’ என விளக்கும் ஒவ்வொரு ஸ்லோகதுக்கு அடியிலும் ஒரு வாக்கியம் வருகிறது. அது: இங்கே வணங்கப்படுவது அது அல்ல!’
இங்கே கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறது. ஆன்மா என சூட்சுமமாக அறியப்படுவது பிரும்மம், பரம்பொருள், பரப்பிரும்மம். ஆனால் சாமான்யன் எதை வணங்குகிறான்? ஒரு உருவத்தை, பிம்பத்தை – அது விக்ரஹ (சிலை) வடிவிலோ, ஓவிய (பட) வடிவிலோ இருக்கிறது. ஏனெனில், சாதாரண மனிதனால் சூட்சும வடிவில் , அதாவது வடிவில்லா வடிவில் இருக்கும் இறையை வணங்க, தியானிக்க முடியவதில்லை. ஆனால் அவனும் இறைவழி செல்லவேண்டுமே – உய்வதற்கு, கடைத்தேறுவதற்கு. அதற்கான ஒரு எளிய முதற்படியாக, வழிபட ஏதுவாக கோவில்களில் இந்த விக்ரஹங்கள், வீடுகளில், ஆசிரமங்களில், மடங்களில் கடவுள்களின் சித்திரங்கள், படங்கள் ஆகியவை. ஆரம்பப் படிநிலைதான் இது. ஸ்தூல வடிவத்தில் அகப்படாத, ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் இறையை, பிரும்மத்தை மனிதன் தன் புற அங்கங்களைக் கொண்டு காண இயலாது. ஆனால் அதற்காக அவன் தன்னை இயக்கும் தெய்வசக்தியை, பரம்பொருளை விட்டுவிடமுடியுமா? புறத்தே சுற்றித் திரிந்தவன், தன் அகத்துக்குள் பார்க்கிறான். பயணிக்க ஆரம்பிக்கிறான். அதற்கான சாதனாக்களை (தீவிர, தொடர்ந்த இறைசிந்தனை, மனம் ஒருநிலைப்படல், தியானம் போன்றவை) அவன் செய்யவேண்டியிருக்கிறது. கடும் சோதனைகள் நிறைந்த அந்தப் பாதையிலோ செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். தேடுபவன் அதற்காக அந்தப்பாதையை விட்டு விலகுவானா? சைவசமய முதன்மை நாயன்மார்களில் ஒருவரான அப்பர், இறுதியில் தான் அடைந்த அனுபூதி நிலையைப்பற்றி ‘தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்’ எனக் குறிப்பிடுகிறார்.

பிரும்மத்தை (இறுதி உண்மை) நோக்கிய கரடுமுரடான பாதையில் மேலும் முன்னேறுகிறது கேன உபநிஷதம். ஆன்மீகத் தேடலின் ஆரம்பநிலைகளில் சீடனுக்குத் தனக்கு அது தெரிந்துவிட்டது என்பதான மயக்கம் உண்டாகிறது. அதனைத் தன் குருவுக்கு சொல்கிறான். அவர் சொல்கிறார்.: ’அதற்குள் பிரும்மத்தைக் கண்டுவிட்டதாக உனக்குத் தோன்றினால், நீ அறிந்தது மிகக்குறைவுதான். மீண்டும் தொடர்ந்து தியானத்தில், உண்மை வழியில், சாதனாவில் இரு. தேடுதல் தீவிரமாகட்டும்’ என்று ஊக்குவிக்கிறார். மேலும் மேலும் சீடன் சிரத்தைகாட்டி, தியானித்து நாட்கள் கடந்தபின் அவனின் சலசலப்புக்கு குரு (வேதரிஷி) தெளிவுபடுத்துகிறார். ‘ என்னை எனக்குத் தெரியும்.. ஆனால் எனக்குள்ளிருக்கும் பிரும்மத்தை (ஆன்மா) தெரியாது . அதே சமயத்தில், தெரியவில்லை என்றும் உறுதியாகச் சொல்லமுடியாதுபோலிருக்கிறதே’ என்கிற நிலைக்கு நீ வந்திருந்தால், இறை அறிதலில் நெருங்குகிறாய் என அர்த்தம். மேலும் ‘யார் நன்றாகத் தெரிவதாகச் சொல்கிறானோ அவன் அறியாதவன். யார் தனக்குச் சரியாகத் தெரியவில்லை எனும் நிலையிலிருக்கிறானோ, அவனே அறிபவன். மேலும் மேலும் சாதனாக்கள் மூலம் தன்னை ஈடுபடுத்தி உணர்வின் படிப்படியான நிலைகளில் எவனொருவன் முன்னேறுகிறானோ, அவன் அந்த ஆன்மாவிலிருந்தே(பிரும்மத்திலிருந்தே) மேன்மேலும் ஆற்றல் பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வடைகிறான் என்கிறது இந்த உபநிஷதம். மேலும் எச்சரிக்கவும் செய்கிறது: ’இங்கேயே, இந்த பிறவியிலே ஒருவன் பிரும்மத்தை இவ்வாறு அறிந்துகொண்டானேயானால், அவன் எல்லா உயிர்களிலும் பிரும்மத்தின் இருத்தலை உணர்கிறான். ஒருவேளை, இந்த பிறப்பில் அப்படி அறியமுடியாதுபோனால், அது அந்த ஜீவனுக்கு மாபெரும் இழப்பு’ என்கிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் பிரும்மமே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது என்பதைக் கதையாக விளக்குகிறது இந்த உபநிஷதம்.

அரக்கர்களுடனான ஒரு யுத்தத்தில் வென்றபின் களித்திருந்தனர் தேவர்கள். தங்களைத் தாங்களே மெச்சி மகிழ்ந்திருந்தனர். கர்வம் தலைக்கேறிவிட்டதை பிரும்மம் அறிந்தது. அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்து, ஒரு யக்ஷனாக உருவெடுத்து அவர்கள் இருக்கும் பகுதியில் உலவியது. தேவர்கள் தங்கள் உள்ளுணர்வினால், ஏதோ ஒரு அதீத சக்தி இங்கு வந்திருக்கிறது என அறிந்தனர். ஆனால் என்ன அது என்று தெரியாது திகைத்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில் தேவேந்திரனான இந்திரன் அக்னிதேவனை அழைத்து ’நீர் போய் அது யார், என்ன எனத் தெரிந்துகொண்டுவாரும்..’ என அனுப்பினான்.

அக்னிதேவன் யக்ஷனின் முன் வந்து நின்றான். யக்ஷ உருவிலிருந்த பிரும்மம் அக்னியைப் பார்த்து ’யார் நீ’ என்றது. ’அக்னியே நான்!’ என்றான் அவன். ’உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்றது பிரும்மம். ’எதனையும் நொடியில் எரித்து சாம்பலாக்கிட என்னால் முடியும்!’ என்றான் அக்னிதேவன். ’ஓ.. அப்படியா!’ என்றது பிரும்மம். ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன்னால் போட்டது. ’எரி இதனை!’ என்றது. அக்னி புல்லைப் பார்த்தான். ப்பூ! என்று நினைத்தான். கடும் தனலாக உலர்ந்தபுல்லின் மீது பாய்ந்தான். புல்லுக்கு ஒன்றும் ஆகவில்லை. நிறம்கூட மாறவில்லை. அக்னியால் புல்லை எரிக்க முடியவில்லை.மீண்டும் முயன்றான். தோற்றான். சோர்ந்தான். என்னால் புல்லைக்கூடவா எரிக்கமுடியவில்லை என்று முணுமுணுத்துக்கொண்டே தேவர்களிடம் வந்து நடந்ததைச் சொன்னான். ’அந்த யக்ஷன் யாரென அறியமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் வாயுவை நோக்கினான். ’நீர் போய் அறிந்து வாரும்!’ என்றான். வாயுதேவன் விரைந்து வந்து யக்ஷன் முன் நின்றான். அதே கேள்வி. ‘நான் வாயு!’ என்றான் இவன். ’என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று யக்ஷன் கேட்டதற்கு, ’இங்குள்ள எதனையும் காற்றாக வீசித் தூக்கி எறியும் சக்தி எனக்குண்டு!’ என்றான் சிரித்துக்கொண்டே. ’ஓ! அப்படியா.. எங்கே இந்தப் புல்லைத் தூக்கி வீசு!’ என்றது யக்ஷனாய் நின்ற பிரும்மம். வாயுதேவன் அற்பப் புல்லைப் பார்த்து மனதில் சிரித்துக்கொண்டான். அலட்சியமாக அதன்மீது வீசினான். அசைந்துகொடுக்கவில்லை அது. ஆச்சரியமுற்று, உக்கிரமாக வீசி, அதனைத் தூக்கிவீசப் பார்த்தான். ம்ஹூம்! ஒன்றும் நடக்கவில்லை. புல் அசைவற்று போட்டது போட்டபடிக் கிடந்தது. யக்ஷனைக் குழப்பத்துடன் பார்த்தவன் திரும்பிச் சென்று தேவர்களிடம் நடந்ததைச் சொன்னவன். ’என்னாலும் அந்த சக்தியைப் புரிந்துகொள்ளமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் ஆச்சரியம் மிகக்கொண்டான். இதில் ஏதோ பெரும் சூட்சுமம் இருக்கிறது. நமக்குப் புரியவில்லை. புரிந்துகொள்ளும் சக்தி நமக்கில்லையோ எனக் கலங்கியவாறு அவனே சென்றான். யக்ஷன் மறைந்துவிட்டிருந்தான். அங்கே வானில், பொன்னொளி எங்கும் ஜொலித்து வீச, பேரழகுடன் ஒரு பெண்சக்தி உருவந்தாங்கி காட்சிதந்தது. உமாதேவி! இந்திரனின் கண்கள் பனித்தன. பணிந்து வணங்கினான். மனதில் அவளை முழுதுமாக நிறுத்திப் பிரார்த்தித்தான். ‘எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. யார், எது இந்த மர்மசக்தி? அன்னையே, அருள்வாய்’ என மனதாரத் தாழ்ந்து இறைஞ்சினான். உமாதேவி முகமலர்ந்தாள். ’தேவேந்திரா! தேவர்களான உங்கள் சக்தியினால் உணரமுடியாது அதை எனக் கண்டுகொண்டாய். பிரும்மாண்டம், சூட்சுமத்தின் சூட்சுமம் அது. பிரும்மம். பிரபஞ்சத்தின் எல்லா செயல்களுக்கும், ஏன், உங்கள் வெற்றிகளுக்கும்கூட அதுவே ஆதாரம். அது தன் சக்தியை பின்னிழுத்துக்கொண்டால், நீங்கள் தளர்ந்து வீழ்வீர்கள். நீங்கள் யாரும் எதுவும் இல்லை என்றாகிவிடும் என அறிவாயாக!’ என்றாள் தேவி. தேவேந்திரன் அவளை நோக்கித் தலைதாழ்த்தினான். புத்தி தெளிவாகி, தேவியை வணங்கி நன்றி சமர்ப்பித்து, அங்கிருந்து அகன்றான்.

மேலும், பிரும்மத்தின், பரம்பொருளின் அதீத சக்தியை, எல்லையில்லா இருப்பை உணரவேண்டும். ’மின்னல் மின்னுவதும், இமை இமைப்பதெல்லாமும் அதனால்தான்’ என்கிற இந்த உபநிஷதம், தொடர்கிறது: மனமானது கற்பனை செய்வதும், வெளிஉலகில் பொருள்களை, உணர்வுகளை நாடிச்செல்வதும், ஆன்மா என அறியப்படும் பிரும்மத்தின் காரணமாகவே. ’அத்தகைய பிரும்மமானது எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதாக உணர்ந்து, எவனொருவன் அதை உண்மையாக தியானிக்கிறானோ, அவனை எல்லா உயிர்களும் நேசிக்கின்றன’ என்கிறது.

ஆழ்ந்த தேடலில் இப்போது முன்னேறியிருக்கும் சீடன், ’குருவே! அத்தகைய ஞானநிலைக்கான ரகசிய அறிவை அருள்வீராக’ எனப் பிரார்த்திக்கிறான். ’இதுவரை நான் உனக்கு சொன்னதெல்லாம் அதுபற்றியதே’ என்கிறார் குரு. இறை உணர்வோடு புலன்களின் கட்டுப்பாடு, உண்மைவழி செல்லுதல், சிரத்தையுடன் கூடிய கடும் தியானம் (தவம்) ஆகியவைதான் அந்த ரகசிய அறிவிற்கான சாதானாக்கள் எனச் சொல்கிறார். வேதங்கள் அந்த ரகசிய அறிவின் அங்கங்களாய் உள்ளன என சீடனுக்கு அவர் தெளிவுபடுத்துவதாய் இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

இந்த இடத்தில் நினைவு கூரவேண்டிய ஒன்று: ’உண்மைவழி நிற்றல் என்பதில், பேச்சு என்பது, விளைவு எதுவாயினும் பிடிவாதமாக உண்மை சொல்லல் என்றாகாது. பிறர் மனதை கலங்கடிக்காத, புண்ணாக்காத உண்மைகளையே ஒருவன் எப்போதும் பேசவேண்டும். அத்தகைய பேச்சு என்பது, வாக்கினால் செய்யப்படுகிற தவம்’ என்கிறது பகவத் கீதை.

(Picture courtesy: Internet)

**