சூப்பர்கிங்ஸின் சூப்பர் வெற்றி, மற்றும்..

ஏகப்பட்ட சாலைமறியல்கள், அடிதடிகள், காவல் நெருக்கடிகளைத்தாண்டியும், நேற்று(10-4-18) சேப்பாக் மைதானம் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது என்றே தோன்றியது. மங்களகர மஞ்சள், ப்ரகாசம் காட்டியிருந்தது எங்கும். இப்படி ஒரு ரசிகர்கூட்டம் ஆவேசமாகக் குஷிப்படுத்துகையில், பெரும் உத்வேகத்துடன்தானே மைதானத்தில் இறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்? கேதார் ஜாதவ் இல்லாததால் சாம் பில்லிங்ஸை (Sam Billings) மிடில் ஆர்டரில் இறக்கியது சென்னை. இருந்தும், இப்படி ஒரு பயங்கர மாஸ் காட்டும் இந்த அணி என நான் நினைக்கவில்லைதான். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிரமாத ஸ்கோரான 202-க்குப் பின்.

முதலில் ஆடிய தினேஷ் கார்த்திக்கின் கல்கத்தா அணியும், தன் சொந்த மைதானத்தில் இரண்டு வருடங்களுக்குப்பின் இறங்கும் சிஎஸ்கே கடுமையாக விளையாடும் என எதிர்பார்த்தே இறங்கியிருந்தது. மஞ்சள் சட்டைகள் மடக்கிவிடுவார்கள் என்பதால், ஆரம்ப விக்கெட்டுகளுக்குப்பின் உஷாராக விளையாடியது கல்கத்தா. மிடில் ஆர்டரில் உத்தப்பா, கார்த்திக் மற்றும் நேற்றைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல். தோனியின் பந்துவீச்சாளர்கள், ஆரம்பத்திலிருந்தே கல்கத்தா வீரர்களை செட்டில் ஆக விடவில்லை. கொத்து கொத்தென்று கொத்தி விக்கெட்டுகளைத் தூரப்போட்டார்கள். திடீரென்று 89/5 என்று அலறியது கல்கத்தா ஸ்கோர். கல்கத்தா ரசிகர்களின் முகம் வாடிப்போய்விட்டது. மிஞ்சி மிஞ்சிப்போனால் 150-155-ஐ நெருங்கலாம். ஊதித்தள்ளிவிடலாம் மேட்ச்சை என தோனி&கோ நினைத்திருந்த நேரம். 7-ஆம் ஆளாக கல்கத்தாவுக்கு வந்திறங்கினார் ஆந்த்ரே ரஸ்ஸல். ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடையிலிருந்து ஒருவழியாக மீண்டு வந்திருந்த ரஸ்ஸல், சில விஷயங்களை நிரூபிக்கக் காத்திருந்தார் போலும். சேப்பாக் அதற்கான வாய்ப்பை அவருக்குக் கொடுத்தது. என்ன ஒரு ஆட்டம்! முதல் மேட்ச்சில் ப்ராவோ, அப்புறம் கே.எல்.ராஹுல், பின்னர் சுனில் நாராய்ண், இப்போது இந்த ரஸ்ஸல்! அவர் விளாசிய 11 சிக்ஸர்களில் ஒன்று மைதானக் கூரைக்கு மேலே பறந்து ரசிகர்களை அண்ணாந்து பார்க்கவைத்தது. 102 மீட்டர்ஸ். காணாமற்போனது பந்து. இப்படி அதகளமாக ஆடி கொல்கத்தாவை 202-க்குத் தூக்கி நிறுத்தினார் கல்கத்தாவின் ஹீரோ. மைதானத்தில் ஒரே மஞ்சளாகப் பூத்திருந்தாலும், ஒருபகுதியில் கல்கத்தாவின் வயலட் கூட்டமுமிருந்தது. அதில் விஐபி பகுதியில் தன் பரிவாரத்துடன் அமர்ந்திருந்த கல்கத்தா அணி உரிமையாளருமான நடிகர் ஷா ருக் கான், ரஸ்ஸலை ஏதோ தேவதூதனை பார்ப்பதுபோல் பார்த்துக் கையசைத்தார். சென்னை காலி என்று அவரும் நினைத்திருப்பார் !

203 என்பது இலக்கு. தோனியின் சென்னைக்கு இது ஒரு வாழ்வா சாவா போட்டியாகத் தெரிந்திருக்கவேண்டும். செய் அல்லது செத்து மடி! இப்படியான மனநிலையில் சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் ஆரம்பத்திலேயே தூள்கிளப்பினார்கள். ஆறே ஒவர்களில் ஸ்கோர் 75. என்ன ஆச்சு சென்னைக்கு? ஏதாவது பூதம் கீதம் புகுந்துகொண்டதா! ஒன்றிரண்டு விக்கெட்டுகள் சரிந்தாலும், ரன் –ரேட்டை உயர்த்தியே வைத்திருந்தது சென்னை. தினேஷ் கார்த்திக் கல்கத்தா பௌலர்களை வேகவேகமாக சுழற்றிப்பார்த்தார். அவர்களும் அவ்வப்போது நன்றாக வீசியும் சென்னையிடம் பாச்சா பலிக்கவில்லை. இந்த சமயத்தில் வந்து சேர்ந்தார் சாம் பில்லிங்ஸ். முன்பு டெல்லி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர். ரஸ்ஸல் போட்ட ஆட்டத்திற்கு சென்னையிலிருந்து யாராவது ஒருவர் பதில் சொல்லியாக வேண்டுமே! அந்த வேலையை இவர் தன் கையிலெடுத்துக்கொண்டார். எதிரே தோனி நிதானம் காட்டுகையில், காட்டடியில் இறங்கினார் பில்லிங்ஸ். 23 பந்துகளில் 56 (5 சிக்ஸர்கள்) எனத் தூள்கிளப்பியது அவருடைய பேட். மைதானத்தின் மஞ்சள்சட்டைகள் எழுந்தாடின. ஆர்ப்பரித்தன. 19-ஆவது ஓவரில், டாம் கர்ரனிடம் பில்லிங்ஸ் விழுந்துவிட்டாலும், சென்னையில் உயிர் இன்னுமிருந்தது. கடைசி ஓவர் சிக்ஸரைக் காண்பித்து ’சுபம்’ போட்டுவைத்தார் ரவீந்திர ஜடேஜா. இன்னுமொரு மகத்தான சிஎஸ்கே வெற்றி, மஞ்சள் கொண்டாட்டம்.

குழப்பம் ஏற்படுத்தவேண்டுமென்றே சில தரப்பினர்களால் கிளப்பப்பட்ட சர்ச்சைகள், மறியல்கள், பேடித்தனமான மிரட்டல்களுக்கு மத்தியில், க்ரிக்கெட் எனும் அபாரமான விளையாட்டின் வெற்றி. உன்னத க்ரிக்கெட் ரசனைக்குப் பேர்போன சென்னையின் வெற்றி.

** .

4 thoughts on “சூப்பர்கிங்ஸின் சூப்பர் வெற்றி, மற்றும்..

  1. இந்த ஸ்கோரை சென்னை எட்டுவது கடினம் என்றே நினைத்தருந்தேன். காலையில் எழுந்து பார்த்தபோது ஜெயித்திருந்தது!

    Liked by 1 person

    1. டி-20-யில் இப்படி ஏதாவது நடக்கும்! சென்னை ரசிகர்களுக்கு இந்த வெற்றி அவசியந்தான். போலீஸ் பாதுகாப்பு மறுத்ததனால் , போட்டிகளை பூனேவுக்கு மாற்றிவிட்டதே ஐபிஎல் நிர்வாகம்? சென்னைக்காரர்கள் இதற்காகப் பூனேயா போகமுடியும்? தமிழ்நாடு க்ரிக்கெட் அசோசியேஷனை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

      Like

  2. ஆவிரி மேலாண்மை வாரியத்துக்கும் ஐ பி எல் லுக்கும் என்ன சம்பந்தம் மாநில அரசு நினைத்திருந்தால் சென்னையிலே யே மாட்சுகளை நடத்தலாம்

    Liked by 1 person

  3. @Balasubramaniam G.M :

    தமிழ்நாடு அரசு குறுக்கிட்டு ஒரு ப்ரெஸ்டிஜ் இஷ்யூவாக (சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம்ம அணி) எடுத்துக்கொண்டு சென்னையிலேயே பாதுகாப்பு கொடுத்து சென்னை மேட்ச்சுகளைத் தொடர்ந்து நடத்தியிருக்கவேண்டும். அவ்வளவு தூரத்துக்கு யார் சிந்திக்கிறார்கள். தேசிய உணர்வும் இல்லை, மாநில பக்தியும் இல்லை. தெண்டச்சோத்து ராமன்கள்.

    Like

Leave a comment