இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: ஜெய் ஹிந்த் !

அனல் பறந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில், ஆயிரக்கணக்கில் ஸ்டேடிய ரசிகர்கள் மூவர்ணத்துடனும், பச்சை-வெள்ளையுடனும் ஆர்ப்பரிக்க, துபாயில் நேற்று இரவு (28-8-22) இந்தியா பாகிஸ்தானைப் பழிதீர்த்தது! ஆல்ரவுண்டர்கள் ஹார்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியின் வெற்றி வியூகங்களில் தங்களின் பங்கு எவ்வளவு கூர்மையானது என மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காண்பித்தார்கள்.  இவர்களின் ஆட்டத்திறனும், மன உறுதியும் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் கைப்பிடியிலிருந்த ஆட்டத்தை அஸால்ட்டாக லாவி  இந்தியாவின் கைக்கு மாற்றியது. கிரிக்கெட் இரவின் அதீத போதை உலகெங்குமுள்ள இந்திய ரசிகர்களைக் கிறுக்கிறுக்கவைத்தது! கடைசி ஓவர் சிக்ஸரில் வெடித்த இந்திய வெற்றி 11:40-க்கு பெங்களூரில் எங்கள் ஏரியாவில் வாணவெடிகளை படார் படாரென  மேலுயர்ந்து சிதறவைத்தன. தூங்காத இளைஞர்கள், சிறுவர்கள் வீதிகளில் வந்து கோஷமிட்டுக்கொண்டிருந்தார்கள். இது சிலபல இந்திய நகரங்களில் நிகழ்ந்திருக்கும்தான்.

துபாய் மேட்ச்சின்போது கொடிகளின் ஆட்டபாட்டம் (Courtesy; DNA, Mumbai)

டாஸை வென்று பாகிஸ்தானை உள்ளே அனுப்பிய இந்தியா, வேகவேகமாக எதிரியின் விக்கெட்டுகளுக்கு வேட்டு வைத்தது. பும்ரா, ஷமி டீமில் இல்லை என்கிற உணர்வே ஏற்படவில்லை. எதிர்பார்க்கப்பட்ட பாக். கேப்டன் பாபர், ஃபகர் ஜமன், குஷ்தில் ஷா போன்றவர்கள் அடிக்கவிடாமல் வெளியேற்றப்பட, விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான்(43) பொறுப்பாக ஆடினார். துணை ஓரளவு கொடுத்தவர் இஃப்தகார்அஹ்மது (28). மற்றவர்கள் சும்மா ’ஆயாராம்.. கயாராம்’ தான்! புவனேஷ்வர் குமார், ஹார்திக் பாண்ட்யா. அர்ஷ்தீப் சிங் என இந்திய வேகப்பந்துவீச்சு விளையாடிக் காண்பித்தது. ஒரு கட்டத்தில் 130-க்கருகில் பாகிஸ்தான் சமாப்தி ஆகிவிடும்போலிருந்தது. 10, 11 எண்வரிசையில் ஆடிய பாக். பௌலர்கள் சிக்ஸர், பௌண்டரி எனக் காட்டியதால் 147 வரை போய்விட்டது. புவனேஷ்வர் குமார் 4, பாண்ட்யா 3, அர்ஷ்தீப் சிங் 2, ஆவேஷ் கான் 1 எனப் பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தார்கள். ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்காதது ஆச்சரியம். கேட்ச்சுகளை நழுவவிட்டதும் காரணம். இந்திய ஃபீல்டிங் மோசமாகத்தான் இருந்தது.

இந்தியா 148-ஐத் துரத்துகையில், முதல் பந்தில் ரோஹித் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் வீட்டுக்கு ஓடிவிட்டார் துணைக் கேப்டன் ராஹுல்! ஃபார்மைத் தேடும் கோஹ்லி அடுத்தாற்போல். இந்த விக்கெட்டும் எந்த நிலையிலும் விழுந்துவிடும் என ரசிகர்கள் சலித்திருக்க, வெகுநாட்களுக்கப்புறம் கோஹ்லி சில நல்ல ஷாட்களை ஆடி ஆச்சர்யப்படுத்தினார். ரன்கள் ஆரம்பத்தில் ஏற அவர்தான் காரணம். ஃபார்மில் வந்துவிட்டார்யா நம்ப பழைய கேப்டன், இன்று மேலும் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாகையில் சிக்ஸர் அடிக்க பிரயத்னப்பட்டு பாக் ஸ்பின்னர் நவாஸிடம் வீழ்ந்தார். சேர்த்த ரன்கள் 35. டீஸண்ட். நாலாவதாக ஆடவந்தார் ரவீந்திர ஜடேஜா. தூக்கி விளாசும் திறனுள்ள ஜடேஜாவால் நிதானமாகவும் ரன் சேர்க்கமுடியும் என்பதே காரணம். அவர் ஏமாற்றவில்லை. முதலில் சூர்யகுமாருடன் சிறிய பார்ட்னர்ஷிப். அப்புறம் பாண்ட்யாவுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவுக்கு வெற்றி வாங்கித்தந்தபின் தான் வெளியேறவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு வந்திருந்தார்போலும். அடுத்த பக்கம் பாண்ட்யா நிலைமை மோசமாகிவிடக்கூடாது என்பதில் கவனம் காட்டி நிதானம், அவ்வப்போது அதிரடி என பாகிஸ்தானுடன் பந்துவிளையாட ஆரம்பித்திருந்தார். ஜெயித்துவிடலாம் என மனப்பால் குடித்திருந்த பாகிஸ்தானுக்கு இப்போது வியர்வை மழை. இவன்களைப் பிரித்தாலொழிய வெற்றி சாத்தியமில்லை என்பதைப் புரிந்தவாறு அபாரமாக பந்துவீசியது, ஃபீல்டிங் செய்தது எதிரி அணி. ஒரு கட்டத்தில் பௌண்டரி வரும் என்றே தோன்றவில்லை. ஜடேஜாவும், பாண்ட்யாவும் சிங்கிள், சிங்கிளாக வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரே காந்தாக காந்திய துபாயின் மோசமான சீதோஷ்ண நிலை மைதானத்தில் அனல் அலைகளைப் பரப்பிவைத்தது.

கால் சுளுக்கை/வலியை வாழ்வில் முதன்முறையாக அனுபவிக்கும் அப்பாவி பாக். வீரர்கள்!

18-ஆவது ஓவர் போடப்படுகையில் இந்தியா ஜெயித்துவிடும்போலிருக்கிறதே என்கிற பதற்றம் பாகிஸ்தானி கேம்ப்பில் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஓவரைப் போட்ட பாக். பொடியன் சர்வதேச டி-20 யில் முதல் மேட்ச் ஆடிய நஸீம் ஷா.  தன்னை  அபார பௌலராக (வந்தவுடனேயே ராஹுலின் விக்கெட்டை எடுத்தாகிவிட்டதல்லவா), நஸீம் காட்ட முயற்சித்ததில் தவறில்லை. ஆனால் தான் ஒரு சிறந்த நடிகனும்கூட எனக் காட்டி விருது பெற முயன்றதுதான் எரிச்சலையும், அதிர்ச்சியையும் ஒருசேர மைதானத்தில் பரப்பியது. ஃபீல்டிங், பௌலிங்கின் போது கால் சுளுக்கு ஏற்படலாம்தான். அதற்காக இப்படியா? ஓடிவந்து பந்துவீசிய பின் கால் நொண்டல், சுளுக்கு.. ஆ… ஓ… என்றுமுகத்தை அஷ்டக்கோணாலாக வைத்துக்கொண்டு, பிட்ச்சில்உட்காந்து, சரிந்து புரண்டது நாடகத்தின் உச்சபட்ச காட்சியானது. பாக்.  டீமின் ஃபிஸியோ (மருத்துவ உதவி) மைதானத்துக்கு ஓடிவந்து அவரை கவனித்துக்கொண்டிருக்கையில், பாக். டீமே அவரைச் சுற்றிக்கொண்டு என்னவோ அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதுபோலான சீன்களை ஏற்படுத்தியதும்,  ஆட்டத்தை அளவுக்கு அதிகமாக நிறுத்தி தாமதத்தை ஏற்படுத்தியதும், நெருக்கடி நேரத்தில்  ரசிகர்கள், கிரிக்கெட் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அம்பயர்களின் நிலையைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. மருத்துவ டீம் வந்து காலைப்பிடித்துவிட்டு, ஸ்ப்ரே அடித்து சரிசெய்துவிட்ட அகன்ற பின்னும், பௌலரின் ஆக்டிங் டிராமா தொடரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு வலி இருந்திருந்தால், ஆடமுடியாத நிலையென்றால்  நஸீம் பெவிலியன் திரும்பியிருக்கவேண்டும். பௌலிங்கைத் தொடர்ந்திருக்கவேண்டிய கட்டாயம் ஏதுமில்லையே. அவருக்கு பதிலாக அந்த ஓவரின் மீதிப் பந்துகளை வேறொரு பௌலரைவைத்துப் போடச்சொல்லி பாக். கேப்டன் ஓவரை முடித்திருக்கவேண்டும். இதுதான் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் உலகெங்கும் நடப்பது. ஆனால் பாகிஸ்தான் சூப்பர் டீமல்லவா? கிரிக்கெட் மட்டும்தானா அவர்களுக்கு தெரியும்! நிற்கமுடியாமல், நடக்கமுடியாமல் சில நிமிடங்களுக்கு முன் வேதனை காண்பித்த நஸீம், அடுத்த பந்திற்காக ஒன்றுமே நடக்காததுபோல் இப்போது தூரத்திலிருந்து பேட்ஸ்மனை நோக்கி வேகமாக – எஸ்.. வேகமாக ஓடிவருகிறார். கவனியுங்கள். காலில் பிரச்னை இல்லைபோலிருக்கிறதே! அதே வேகம். அதேமாதிரி இயல்பான பந்துவீச்சு. ஓடுகையில், பந்தை வீசுகையில் அவர் முகத்தில் எந்த வேதனையும் காணப்படவில்லை. வீசியபின் இந்திய பேட்ஸ்மன் அடித்தோ, தடுத்தோ ஆடி ரன் ஓட முயற்சிக்கையில், உடனே நஸீமின் நாடக மீட்சி: முகக்கோணல், ஒற்றைக்கால் நடனம். கீழே உட்கார்வது.. காலைப்பிடித்துக்கொண்டு ஆ.. ஊ..ஐயோக்களுக்கு நடுவே ஜடேஜாவுக்கு எதிராக எல்பிடபிள்யூ அவுட் கேட்கிறார் அம்பயரைப் பார்த்து! அம்பயரும் குழப்பத்தில் டென்ஷனில் விரல் உயர்த்த, இந்திய அணியில் டென்ஷன். ரிவ்யூ.. ஜடேஜா நாட்-அவுட்! இன்னும் ஒரு பந்து பாக்கி. மீண்டும் காலில் எந்தப் பிரச்னையும் தெரியவில்லை ஓடிவந்து வீசுகிறார் நஸீம். நாடகத்தைத் தொடர்ந்து பார்த்த எரிச்சலில் கடுப்பாகியிருந்த ஜடேஜா, முன்னே வேகமாக நகர்ந்து, பந்தை ஆவேசமாகத் தூக்கினார் பௌலரின் தலைக்குமேலே.. பந்து  சிக்ஸர்..சிக்ஸர் என்று அலறியவாறு ஸ்டேடியத்தில் போய் விழுந்தது.  நஸீமின் சூப்பர் நாடக ஓவர் சிக்ஸரில் முடிந்தது. காலையில் ஹைலைட் பார்க்கையில் இந்த நாடகப் பகுதியை ஸ்டார் சேனல் அகற்றிவிட்டு, ஏதோ அமைதியாக மேட்ச் நடந்ததுபோல் காட்டிக்கொண்டிருந்தது.

வெற்றியை சிக்னல் செய்யும் பாண்ட்யா. வெதும்பிப் பார்க்கும் பாகிஸ்தான்!

19-ஆவது ஓவரை ஹாரிஸ் ராஃப் போட்டபோது, ஃபுல் சார்ஜில் இருந்த பாண்ட்யா விறுவிறுவென  பௌண்டரி பௌண்டரியாக  விளாசிவிட்டார். பாகிஸ்தானின் முகம் பேயறைந்ததுபோலாகிவிட்டது. பச்சை-வெள்ளைகளில் படபடப்பு, கிறுகிறுப்பு. 20-ஆவது ஓவரைபோட்ட ஸ்பின்னர் முகமது நவாஸ் அருமையாக வீசியிருந்தார் ஏற்கனவே. நவாஸின் முதல் பந்தில் ஜடேஜா அவுட் ஆகி இந்திய அணிக்கு/ரசிகர்களுக்கு டென்ஷன் தர, அடுத்துவந்த கார்த்திக் ஒரு ரன் எடுத்து அடுத்தபக்கம் ஓடினார். இப்போது ஈக்வேஷன்: 4 பந்தில் 6 ரன். பாண்ட்யா நவாஸின் அடுத்த பந்தை கவர் பக்கம் அடிக்க, உடனடி ஃபீல்டிங். ரன் எடுக்கவாய்ப்பில்லை. கார்த்திக் டென்ஷனாக, பாண்ட்யா மேலும்கீழுமாகத் தலையாட்டுகிறார்: கவலைப்படாதப்பா. .நான் இருக்கேன்ல.. 3 பந்துகள் பாக்கி, 6 ரன் தேவை இந்திய வெற்றிக்கு. முடியவில்லை என்றால் பச்சை-வெள்ளைப் பரவசம்தான். நவாஸ் ஓடிவந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்திப்போட, சரியாகப் பந்தின் திசை, வேகத்தைக் கணித்திருந்த பாண்ட்யா அனாயாசமாக உயரே தூக்கினார். மைதானமே திடுக்கிட்டு இரவு வானில் வெள்ளைப்பந்தை அன்னாந்து பார்க்க, ஸ்டேடியத்திற்குள் சீறிப் பாய்ந்தது சிக்ஸர்! இந்தியக் கொடிகள் மேலே மேலே ஆடி அசைய, ரசிகர்களின் கொண்டாட்டம் துபாய் இரவுக்குக் கிளுகிளுப்பூட்டியது!

இப்படியாக வந்துசேர்ந்தது இந்தியாவுக்கு வெற்றி 5 விக்கெட் வித்தியாசத்தில். ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பாண்ட்யாவுக்கு. விக்கெட்கீப்பராக உயரத் தவ்விப் பிடித்த ஒரு அபூர்வ கேட்ச்சிற்காக தினேஷ் கார்த்திற்கு பரிசு. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பாண்ட்யாவும், ஜடேஜாவும் தீர்க்கமான திறமையான ஆல்ரவுண்டர்கள் என்பதை இந்த ஹை-டென்ஷன் மேட்ச் உறுதிசெய்திருக்கிறது மீண்டும்.

Scores: Pak :147 all out. India: 148 for 5.

கொசுறு: இந்திய நடிக நடிகைகளும் வண்ணம் சேர்த்தனர் துபாய் ஸ்டேடியத்தில் நேற்று:

இந்தியா பாக் ஆட்டத்தை உற்றுப் பார்க்கும் விஜய் தேவரகொண்டா, (லெஜண்ட் சரவணன் புகழ்(!) ஊர்வசி ரௌத்தேலா !

**    

2 thoughts on “இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: ஜெய் ஹிந்த் !

  1. கஷ்டப்பட்டுதான் ஜெயித்திருக்கிறார்.  சுலப இலக்கை சிரமப்பட்டு அடைந்திருக்கிறார்கள்.  எபப்டியோ ஜெயித்தார்களே..!

    Like

Leave a comment