ஜெ. பிரான்சிஸ் கிருபா – சில கவிதைகள்

அழகான படைப்புகளை அருளியிருக்கும் இளங்கவிஞர். காதல் கவிதைகளை எழுதும் கவிஞர்கள் தமிழில் அற்றுப்போய்விட்டனரா என அங்கலாய்க்கும் விக்ரமாதித்யன்,  தன் கட்டுரை நூலொன்றில் பிரான்சிஸ் கிருபாவின் சில ரொமாண்டிக் கவிதைகளை ஸ்லாகித்துச் செல்கிறார்.

கடவுள் செய்த வெட்டி வேலைகளில்

ஒன்றுதானா

காதல் படைத்ததும்!’

-என்று அவர் எழுதியதைப் படித்துவிட்டாரோ! மேலும் கிருபாவை, ‘புனைவின் கொடுமுடியில் நின்று கூத்தாடும் கவிஞன்’ என்கிறார்.

பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு- Dinamani
J Francis Krupa

கிருபாவின் கவிதைத் தொகுப்புகள்: மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், சம்மனசுக்காடு,  மெசியாவின் காயங்கள் (தமிழினி (2002), வலியோடு முறியும் மின்னல் (தமிழினி(2004) மற்றும் ஒரு புதினம்: கன்னி. சுந்தர ராமசாமி விருது, சுஜாதா விருது (கவிதைத் தொகுப்பு: சம்மனசுக்காடு), மீரா விருது, விகடன் விருது (2007) (கன்னி -புதினம்) – என சில விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிக்குழு, குரங்கு பொம்மை, ராட்டினம் போன்ற திரைப்படங்களில் சில பாடல்கள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. பிரான்சிஸ் கிருபாவைக் கொஞ்சம் வாசித்துப்பார்ப்போம்:

வானத்தைத் தோற்றவன்

பறவையொன்றிடம் நான் இன்று

பந்தயம் கட்டி தோற்ற வானத்துக்கு,

வரவில்லை நிலவு.

நூல் பிறையளவு கொடையுமில்லை.

எட்டிக் கூடப் பார்க்கவில்லை

யாதொரு நட்சத்திரமும்.

இப்படிப் பாழடைந்த வானம்

பார்த்ததேயில்லை இதற்கு முன்.

அவமானம் மிகுந்த இரவு

இதுவே கடைசியாக இருக்கட்டும்.

சூதாடக்கூடாது இனி

வானத்தை பூமியில் வைத்து.

**

முரண்பாடு

நேர்மையற்ற வீடுகள்

நிறைய நிறையக்

குறுக்குச் சுவர்களால்

கட்டப்பட்டிருக்கின்றன

ஒவ்வொரு அறைகளுக்கும்

வெவ்வேறு ரகஸியங்களை

ஒதுக்கியிருக்கிறோம்

வரவேற்பறையில் பெரும்பாலும்

மடங்கியே இருக்கின்றன

நாற்காலிகள்.

எல்லா விருந்தாளிகளுமே

தயங்குகிறார்கள்

ஊஞ்சலில் அமர.

அடுத்த வீட்டுக்  கழிவறையில்

அரவமின்றி ப் புழங்குவதிலே பெண்களின்

மொத்த சாமர்த்தியமும் செலவழிகிறது.

பரிமாறப்படும் காபி கோப்பையிலிருந்து

எழுந்து நடனமிடும் ஆவி

விண்ணை நோக்கி நேராய்

ஒரு கோடு கிழிக்க, படும் சிரமத்தை

ருசித்ததில்லை எந்த உதடுகளும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம்

நீ வருகிறாய்

நேர்மை பற்றி பேசவும் விவாதிக்கவும்.

ஒரு ஒற்றையடிப் பாதையைக் கூட

நேராய்க் கிழிக்க வக்கற்றவன்தான்

நானும்.

**

கவிஞன்

தோல்வியின் அறிவிப்பு

தோற்கப் போவது

இருவரில் ஒருவர் தான்

நீ பொய்யனானாலும்

உன் கவிதைகள்

பொய்யறியாதவை

ஒழுங்கான பொய்களாக

உன் வார்த்தைகள்

அமைந்திருப்பினும்

ஒழுக்கமற்ற உண்மைகள்

உன் எழுத்துக்குள்

மின்னி மின்னிச் செல்கின்றன

நம்பிக்கையின் நிறத்தை

நீ நிச்சயிக்கிறாய்

அவநம்பிக்கையின் நிறத்தை

நான்

கிளியிலிருந்து பச்சையெடுத்து

புல்லில் வந்து அமர்ந்ததும்

புல்லின் பச்சை கொத்தி

கிளியை நோக்கி பறந்ததும்

எதுவென்று தெரிந்துவிடும்

**

மாயை

ரத்தநாளங்களில் சுத்தமாக
குருதியின் விறுவிறுப்பு குறைந்து
இமைக்கும் துடிப்போய்ந்த
இதயக்கண் வெறிப்பில்
உயிருக்கு நேர் எதிரே
நகர்த்தி வைக்கப்படுகிறது
தலைவாசல் திறந்திருக்கும்
மரணத்தின் மௌனம்

அவிழ்த்தெடுக்கப்பட்ட திசைகள்
குவிந்து கிடந்த மூலையிலிருந்து
விரியும் கம்பளச் சுருள்
முடிவடைகிறது காலடியில்

அள்ளியணைக்கும் ஆர்வம்
பேரன்பாய் பெருகுகிறது
நிழலின் சிரிப்பில்.

**

பெண்


பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே ..

பெண் யார்?

பெற்றுக்கொண்டால் மகள்.

பெறாத வரையில்

பிரகாசமான இருள்.

வேறொன்றுமில்லை.

**

உதவி

கண்ணைக் கசக்கி அழுதபடி

கரையில் நடந்து வரும்

பேசப்பழகாத குழந்தையை எதிர்கொண்டு

‘அம்மா’ எங்கே என்று

அன்பொழுக வினவுகிறார்கள்.

அது தன் இடது கையை

ஆற்றின் மேல் நீட்டுகிறது.

அந்தக் குழந்தையை தூக்கி

ஓடும் நீரில் வீசிவிட்டு போகிறார்கள்

இடது கை செய்தது

வலது கை அறியாது.

**

சித்திரம்

பாத்திரம் கூட அற்ற

பிச்சைக்காரனாய்

சூரியனை எழுப்பும்

குளிர்காலங்களில்

பனித்துளிகளை

நிதானமாகத் தானமிடும்

ஒற்றை விரலே

யாரின் கையுள் நீயிருக்கிறாய்?

தூரிகையின்றி நீ வரைந்த

மகத்தான ஓவியத்தில்

நானிருக்கக்கூடுமா

வண்ணமாகவேனும்.

எழுதுகோலின்றி எழுதிச் செல்லும்

இம் மகாகாவியத்தில்

நான் பெறுவேனா

துளி பாத்திரமேனும்

**

நீண்ட நெடும்கவிதைபோலவே அமைந்துவிட்ட தன் ‘கன்னி’ நாவலின் ஓரிடத்தில் பிரான்சிஸ் கிருபா:

’’இரண்டே இரண்டு விழிகளால் அழுது,  எப்படி இந்தக் கடலை கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்!

என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது, எப்படி நான் அழாமலிருக்க முடியும்? கண்ணீரின் ஒரு துளியை அவித்த முட்டையைப்போல் இரண்டு துண்டாக அறுத்துவிட முடியவில்லை. அன்பும் இங்குதான் தொலைகிறதோ என்னவோ. நண்பர்களே, தோழிகளே, துரோகிகளே!  ஆறுதலுக்கு பதில் ஓர் ஆயுதம் தாருங்கள்.

கடலைக் கப்பலின் சாலையென்று கற்பித்தவனைக் கொன்று விட்டுப் போகிறேன்..’’

**

என்ன சொன்னேன் ஆரம்பத்தில்.. கிருபாவை இளங்கவிஞனென்றா ? மேலும் சொல்லலாம். சொல்கிறேன்:

கவிஞன் மறைவதில்லை என்றும்.

**

12 thoughts on “ஜெ. பிரான்சிஸ் கிருபா – சில கவிதைகள்

  1. நன்றாக இருக்கிறது. ஒரு சில கவிதைகளை மீண்டும் வாசிக்க வேண்டியிருந்தது புரிந்து கொள்ள!

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா: வருக. பதிவு நீள்கிறதே எனக் குறைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் இன்னமும் சிலதை சேர்த்திருப்பேன்.

      இவரைப்பற்றி முன்பே நான் எழுதியிருக்கவேண்டும். இந்த சமயத்தில்தான் வாய்த்திருக்கிறது.

      Like

  2. அதிர வைக்கும் உதவி போன்ற கவிதைகள்..  புரியாத சில கவிவரிகள்….  அவர் மனம் நினைப்பது அவருக்கு..  நாம் எடுத்துக் கொள்வது நமக்கு!

    Liked by 1 person

    1. @ Sriram :
      கவிதையில் இப்படி நிகழ்வது சகஜம். ஒரு கவிதை சில சமயங்களில் ஒவ்வொருவருக்குமான கவிதையாகி விடுகிறது..

      Like

  3. அவர் மறைந்தாலும் மறக்க முடியா எழுத்துகள்
    நம்மிடம்.
    அதிர வைக்கும் கவிதைகள். அவரவர் புரிதலுக்கு
    ஏற்றபடி.
    முன்னர் நடந்த சம்பவம் மனதில் நிழலாடுகிறது.
    அவரது தோற்றத்தை வைத்து
    தவறாக எடை போட்டவர்கள் அதிகம்.

    மிக நன்றி ஏகாந்தன் ஜி.

    Like

  4. கவிஞன் மறைவதில்லை என்றும்.//

    ஓ இதை வாசித்தேன் அண்ணா ஆனால் இது அப்போது டக்கென்று தோன்றவில்லை.

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா: Typical அஞ்சலிக் கட்டுரையாக இதை நான் எழுதவில்லை. இருந்தும் ஒரு hint கொடுத்தேன்..

      தன் தளத்தில் இறுதியாத்திரையில் கலந்துகொண்டதுபற்றி அருமையாக எழுதியிருக்கிறார் ஜெயமோகன். வாசித்தீர்களா?

      Like

      1. போகன் சங்கரும் கிருபாவின் இறுதி யாத்திரைக்கு சென்றிருந்த நினைவுகளை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.  நான் அதைப் படித்தேன்.

        Liked by 1 person

  5. @ ஸ்ரீராம்: நான் முகநூலில் நுழைவதில்லை. அதனால் அறியவில்லை.
    ’நான் போகிறேன், நீங்களும் வந்துகலந்துகொள்ளுங்கள் என நண்பர்களை அழைத்தேன்… போகன் வருவதாகச் சொன்னார்’ என்கிறார் ஜெமோ. வந்ததாக எழுதவில்லையே. படத்திலும் போகனைக் காணோம்…?

    Like

Leave a comment