கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு அப்பால்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாட்களில் அதிரடியாக வென்றுவிட்டது கோஹ்லி தலைமையிலான இந்தியா. மொஹாலி ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு படுசாதகமாக இருந்ததுதான் காரணம். எனினும் தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் (de Villiers), ஆம்லா, டூ ப்ளஸீ(du Plessis) போன்ற ஜாம்பவான்கள் இருக்கையில், போட்டி மூன்று தினங்களுக்குள் முடிந்துவிடும் என யாரும் நினைக்கவில்லை.

என்னதான் நடந்தது? தென்னாப்பிரிக்கா இதனை எதிர்பார்க்கவில்லையா? அதிர்ச்சிகளை நிச்சயமாக எதிர்பார்த்துத்தான் மொஹாலி மைதானத்தில் இறங்கியது. ஆல்ரவுண்டர் டூமினி(Duminy) (ஸ்பின்னரும் கூட) காயத்தினால் ஆடாதது தென்னாப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம். ஆனால், அந்த அணியில் இம்ரான் தாஹிர் தவிர, ஆஃப் ஸ்பின்னர் ஹார்மர், இடதுகை ஸ்பின்னர் டீன் எல்கார் (Dean Elgar) ஆகியவர்கள் இந்திய மைதானத்தின் நிலையைக் கருத்தில்கொண்டே சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் மொத்தம் 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களே வீழ்த்தினார்கள். இது தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களின் குறிப்பிடத்தக்க சாதனை என்பதை மறுக்கமுடியாது.

இந்தியாவின் 201(முதல் இன்னிங்ஸ்), 200(இரண்டாவது இன்னிங்ஸ்) ஒன்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னே, பிரமாதமான, சவாலான ஸ்கோர்கள் இல்லை. ஆனால், முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஆம்லா, டிவில்லியர்ஸ், எல்கார் தவிர வேறு யாரும் தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து இந்திய சுழலைச் சரியாக சமாளித்து விளையாட முடியவில்லை. அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்க்க, தென்னாப்பிரிக்கா 184-ல் மூட்டையைக் கட்டியது. மூன்றாவது நாளன்று தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா 218 என்ற இலக்கை வைத்தது.

டென்ஷனும், எதிர்பார்ப்புகளும் ஏற, பௌலிங்கை ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை வைத்துத் துவக்கியது இந்தியா. மைதானத்தின்மீது கோஹ்லிக்கு அவ்வளவு நம்பிக்கை! தென்னாப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரராக பௌலர் ஃபிலாண்டர்(Philander)-ஐ அனுப்பியது. அஷ்வினையும், ஜடேஜா, மிஷ்ராவையும் கூட மொஹாலியில் தடுத்து ஆடுவது கடினம். ஆகவே, அடித்துத் துரத்த ப்ளான்! ஆனால் சட்டியில் பருப்பு வேகவில்லை. தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் இந்திய ஸ்பின்னர்களின் இடைவிடாத தாக்குதலில் (குறிப்பாக ஜடேஜா-5 விக்கெட்) நிலைகுலைந்தன. ஆம்லாவும், டி வில்லியர்ஸும் போராட முயன்று காலியானார்கள். தென்னாப்பிரிக்கா எதிராட்டம் ஆடமுடியாமல் 109-ல் சுருண்டுவிட்டது. ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்தியாவைச் சாய்த்த தென்னாப்பிரிக்காவுக்கு, முதல் டெஸ்ட்டில் சரியான அடி.

இந்த வெற்றியினால் இந்தியா பெரிய டீம் என விஸ்வரூபம் எடுத்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை. வெற்றியின் ஊடேயும், இந்திய பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இயங்கவில்லை என்கிற நிதர்சனம் கண்முன்னே நின்று கலக்கம் தருகிறது. முரளி விஜய் மற்றும் புஜாரா மட்டுமே நிலைத்து நம்பிக்கையுடன் விளையாடிய வீரர்கள். கேப்டன் கோஹ்லி, ரஹானே, ஷிகர் தவன்(Shikar Dhawan) (இரண்டு இன்னிங்ஸிலும் பூஜ்யம்) – இவர்கள் தந்தது பெரும் ஏமாற்றமே. இந்த ஸ்திரமற்ற இந்திய பேட்டிங் அடுத்த டெஸ்ட்டில் (பெங்களூர்) என்ன செய்யும்? தொடரில் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆதலால், சில மாறுதல்கள் அணியில் தேவைப்படுகின்றன.

இந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் ஃபார்மில் இல்லை என்பது மொஹாலியில் நன்றாகவே தெரிந்தது. அடுத்த டெஸ்ட்டில், அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் ரிசர்வ் துவக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராஹுல் சேர்க்கப்பட்டால் அணிக்கு பலமுண்டாகும். அதேபோல், விக்கெட்கீப்பர் சாஹாவின் விக்கெட் கீப்பிங்கும், பேட்டிங்கும் முதல் டெஸ்ட்டில் சோபிக்கவில்லை. அவருடைய இடத்தில் ரிசர்வ் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா பெங்களூரில் ஆடுவது நல்லது. வேறு எந்த மாறுதலும் தேவையில்லை எனத் தெரிகிறது. அடிபட்ட நாகம் போலிருக்கிறது தென்னாப்பிரிக்கா. போதிய மாற்றங்கள் அவர்கள் அணியிலும் செய்யப்படும். டூமினி அனேகமாக அடுத்த மேட்ச்சில் ஆடுவார். மிகுந்த முனைப்புடன் தென்னாப்பிரிக்கா பெங்களூரில் நுழையும்.

இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய ஆட்டக்காரர்கள், குறிப்பாக பேட்ஸ்மன்கள் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதைப் பொறுத்திருக்கும் நமது வெற்றி வாய்ப்பு. முதல் மேட்ச்சில் வென்றுவிட்டோம் என்கிற இறுமாப்பில் சாய்ந்து உட்கார, அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இன்னும் போகவேண்டிய தூரம் பாக்கியிருக்கிறது.
**

2 thoughts on “கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு அப்பால்

  1. நன்றி. உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    Like

Leave a comment