எதிரிவசம் அபிநந்தன் இருக்கையில்..

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் பாராச்சூட்டில் குதிக்க நேர்ந்து, எதிரிகளிடம் பிடிபட்டிருப்பது ஆரம்பத்தில் இந்திய விமானப்படைக்குத் தெரிந்திருக்கவில்லை. தங்களது மிக்-21 போர்விமானம் ஒன்றை இழந்துவிட்டதாகவும், போர்விமானி பற்றிய தகவல்பெற முயற்சிப்பதாகவும்  இந்தியா அறிவித்துக்கொண்டிருந்த அதேவேளையில், எல்லைக்கப்பால் இருந்து பாகிஸ்தானின் கொக்கரிப்பு கேட்க ஆரம்பித்தது. ’இரண்டு இந்திய விமானங்களை  சுட்டுவீழ்த்திவிட்டோம்.  இந்திய விமானிகள் இருவர் எங்களிடம் பிடிபட்டுவிட்டார்கள். ஒருத்தர் கைதாகி இருக்கிறார். இன்னொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று பாகிஸ்தான் இஷ்டத்துக்கும் அடித்துவிட ஆரம்பித்தது. பாக்.கின் ஒரு எஃப்-16 போர்விமானத்தை வீழ்த்திவிட்டதாக இந்தியா அறிவித்ததற்கு பதிலாக, பாகிஸ்தானிகளைக் குஷிப்படுத்த கொடுக்கப்பட்ட அறிக்கை இது என்பது உலகறிந்த ரகசியம்.
அடுத்த சிலமணிநேரத்தில் பாக். பிரதமர் இம்ரான்கானும், வெளியுறவு மந்திரி குரேஷியும்,  ஏகப்பட்ட குஷியில் இருந்ததாகத் தெரியவந்தது அவர்களது பேச்சுகளிலிருந்து. இந்திய வீரன் நம்மிடம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டான். இனி இந்தியாவால் முண்டமுடியாது. பேச்சுவார்த்தைக்கு வரத்தான் வேண்டும். நாம் சொல்கிறபடியெல்லாம் ஆடவேண்டும்.   நம் வேலையை இனிக் காண்பிக்கலாம் என்கிற பேடித்தனம் – எதிரிநாட்டுக்கு எப்போதுமே கூடிவருவது. அதன் குலம் அப்படி. குரேஷி அதிகாரபூர்வமாகச் சொல்லவும் செய்தார்; ‘ ஓ! உங்கள் விமானியை விடுவிக்கவேண்டுமா.. விடுவிப்போம். ஆனால் முதலில் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். அதற்கப்புறம்தான் மற்ற காரியம் எல்லாம். ஆனால் காஷ்மீரைப்பற்றி நாங்கள் பேசமாட்டோம்!’
இந்தியா புரிந்துகொண்டது. அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் டெல்லியில் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது நரேந்திர மோதி. இந்தியா தன் எதிர்நிலையைத் தெளிவாகக் காண்பித்தது. டெல்லியில் உள்ள பாக். ஹைகமிஷனரை சௌத் ப்லாக்கிற்கு (இந்திய வெளியுறவு அமைச்சகம்) ஓடிவரச் செய்த இந்திய அரசு, பாகிஸ்தானை அதிகாரபூர்வமாகக் கடுமையாக எச்சரித்தது. ’எங்கள் விமானியின் தற்போதைய நிலைபற்றிய அறிக்கை  உடன் வேண்டும். தாமதம் ஏதுமின்றி, அவர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படவேண்டும். இது சம்பந்தமாக எந்தவிதப் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா தயாராகாது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவித இழுத்தடிப்பையும் இந்தியா சகித்துக்கொள்ளாது’ என்பது அதன் சுருக்கம். இது நடந்தது 27 பிப்ரவரி மதியம். விமானத் தாக்குதல் நடந்த சிலமணி நேரங்களில்.
அடுத்த கட்டமாக, எந்தவொரு எமர்ஜென்சிக்கும் தயார் நிலையில் இருக்குமாறு இந்தியா தன் முப்படைகளுக்கும் உத்தரவிட்டது. குறிப்பாக கப்பற்படைத் தளபதிக்கு சில உத்திரவுகள். பதற்றம் விளைவித்த உஷ்ணம் அளவைத் தாண்டி சென்றுகொண்டிருக்கையில், இந்தியா P-5 நாடுகளுக்கு (அதாவது ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் பதவியில் இருக்கும் வல்லரசு நாடுகள்) டெல்லியிலுள்ள அவர்கள் தூதர்கள் மூலமாக அவசரச்செய்திகளை அனுப்பியது. ’ பிடிபட்டிருக்கும் எங்கள் வீரரை வைத்துக்கொண்டு, பாகிஸ்தான் பேரம் பேச முனைகிறது. இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தீவிரவாதத்துக்குத் துணைபோகும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலையில் இந்திய அரசோ, மக்களோ இல்லை. எங்கள் வீரருக்கு ஏதும் நேர்ந்தாலோ, திரும்புவது தாமதிக்கப்பட்டாலோ,  எல்லையின் பதட்டநிலையை வேறொரு தளத்திற்கு நொடியில் நகர்த்துவோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதி உத்திரவுக்காக எங்கள் ராணுவம் அடிநகர்த்திக் காத்திருக்கிறது. பாகிஸ்தானை நாங்கள் ராஜீய ரீதியாக எச்சரித்துவிட்டோம். சர்வதேச வெளியில் நாங்கள் வெளியிடும் முன்னறிவிப்பு இது. பாகிஸ்தானுக்கு இன்னும் 24 மணிநேரமே அவகாசம்’ என்றது இந்திய எச்சரிக்கையின் சாராம்சம்.
இந்நிலையில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) அமெரிக்காவின் தன் இணையோடும், மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ (US Secretary of State Mike Pompeo) வுடனும் ஹாட்-லைனில் தொடர்பிலிருந்தார். இந்தியாவின் கடுமையான, நிர்ணயிக்கப்பட்ட முடிவு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பாம்பியோவினால்  தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -உடனான பேச்சுவார்த்தைக்காக வியட்நாமின் தலைநகர் ஹனோயில் இருந்தார்.  இப்படி பாரிஸ், லண்டன், டோக்யோ, டெல் அவிவ் (இஸ்ரேல்), பீஜிங் என வெவ்வேறு தலைநகரங்களிலிருந்து இந்தியாவின் தலைமைக்கு அவசர அழைப்புகள், ஆலோசனைகள், அதற்கான இந்திய மறுப்புகள், விவரிப்புகள் என அடுத்த சிலமணிநேரங்கள் தீயாய் எரிந்தன. ‘உலகம் வியட்நாமில் வடகொரியா-அமெரிக்கா இடையே என்ன பேச்சு நடக்கிறது என்று கவனிக்கும் வேளையில், தெற்கு ஆசியாவில் (இந்தியத் துணைக்கண்டம்) அணுஆயுதப் போர் வெடித்துவிடுமோ என்கிற பயம் நிஜமாகிவிடும் போலிருக்கிறதே எனப் பதறினர் ஜப்பானியர்கள். ஏற்கனவே அணுஆயுத அழிவினை நேரிடையாக சந்தித்தவர்களாயிற்றே.
இந்த நிலையில், வல்லரசு நாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்த இடையறாத ராஜீயரீதியான அழுத்தம் வேதனையை உச்சத்திற்கு கொண்டு செல்ல, பாகிஸ்தான் நடுக்கம் கொண்டது. இந்தியா உள்ளே புகுந்து அடிக்குமானால், பாகிஸ்தான் தன் மக்களுக்குமுன்னால் மீசையை முறுக்கிப் பிரயோஜனமில்லை. அதனால் நீண்டநாள் போரைத் தாக்குப்பிடிக்கமுடியாது என்பது ராணுவ வல்லுனர்க்ளின் கருத்துமாகவும் இருந்தது. தூங்கமுடியா இரவில் பாக் பிரதமர் இம்ரானிடமிருந்து இந்தியப் பிரதமர் மோதிக்கு ஹாட்லைன் கால். இந்தியப் பிரதமரிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ். மீண்டும் ஒரு முயற்சி. வீணானது. அழுத்தமான மௌனம் காண்பித்த சீனாவும் நிலைமை கட்டுக்கடங்காது போகாதிருக்கவேண்டும் என்கிற கவலையில் பாகிஸ்தானுக்கு ஆலோசனை கூறியிருந்தது. இதற்கிடையில் பாக்.கின் நீண்டநாள் நண்பனான சவூதி அரேபியாவிடமிருந்தும் அதற்கு எச்சரிக்கையே கிடைத்தது.
பிப்ரவரி 28 அன்று அதிகாலை. நிலைமையில் மாற்றம் தோன்றுமா? இம்ரான் கான் இந்தியப் பிரதமரோடு ஹாட்லைனில் பேச இன்னுமொரு முயற்சி. வெற்றியில்லை. பிடிபட்டிருக்கும் விமானப்படைவீரர் திருப்பி அனுப்பப்பட்டாலன்றி பேச்சில்லை என்பது இந்தியாவின் ஸ்திரமான, அதிகாரபூர்வ நிலை. இந்தியா மசிய மறுக்கிறதே எனப் பதறிப்போய், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ப்ரான்ஸ் போன்ற வல்லரசுகளுடன் முறையிட்டுப் பார்த்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடமிருந்து இந்த முறை பாகிஸ்தானுக்கு வந்தது கடும் எச்சரிக்கை. ’இந்தியா உங்களுடன் பேசாது. பிடிபட்டிருக்கும் வீரரை உடன் திருப்பியனுப்பிவிட்டு பிறகு முயற்சிக்கவும். வீரரைத் திருப்பி அனுப்புவதில் இந்தியாவின் இருபத்தி நான்கு மணி காலக்கெடு கடந்தால், இந்திய கப்பற்படை கராச்சியை நோக்கி நகரும்!’ என்பதே அதன் ரத்தினச் சுருக்கம். அப்படியென்றால் என்ன அர்த்தம்?. இந்தியா ராணுவரீதியாக முன்னேறினால், நாங்கள் தலையிடமாட்டோம். வேடிக்கைதான் பார்ப்போம் என்கிற அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலை மண்டைக்குள் சுர்ரென்று இறங்க. வெலவெலத்துப்போனது பாகிஸ்தான். அபிநந்தனை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்கிற விஷமத் திட்டம் வேரோடு பிடுங்கப்பட்டது. வேறு எந்த வழியுமில்லை இனி. அடுத்தநாளே இந்திய வீரரைத் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என முதலில் அமெரிக்க வெளியுறவு மந்திரிக்கு பதில் சொல்லியது பாகிஸ்தான்.(ட்ரம்ப் வந்ததிலிருந்து ஏற்கனவே அமெரிக்காவுடன் ஆயிரம் பிரச்னைகள் பாகிஸ்தானுக்கு). பாகிஸ்தான் பணிந்துபோன விபரம் உடனே இந்தியப் பிரதமருக்கும், வியட்நாமில் இருந்த அதிபர் ட்ரம்ப்பிற்கும் தெரியப்படுத்தப்பட்டது. அந்த நிலையில்தான் ட்ரம்ப் ஹனோயில் இருந்தவாறே ஒரு ஹிண்ட் கொடுத்தார் சர்வதேச மீடியாவுக்கு. இந்தியா-பாக் பிரச்னையில் ’ இறுதியாக ஒரு டீசண்ட் நியூஸ் வந்திருக்கிறது!’ என்றார் பூடகமாக. அந்த மாலையில் மூஞ்சியைத் தொங்கபோட்டுக்கொண்டு இம்ரான் கான், அவர்களது பார்லிமெண்ட்டில் அறிவிக்கும் நிலை வந்தது. ‘ஒரு சமாதான முயற்சியாக எங்கள் வசமிருக்கும் இந்திய வீர்ரை நாளைத் திருப்பி அனுப்புகிறோம்’ என்று அசடுவழியும்படியானது. சீனாவினால் ஏதும் செய்யமுடியவில்லை.  வல்லரசுகள் உட்பட, உலகின் முக்கிய நாடுகளுடன் பிரதமர் மோதி கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்த்திருந்த நல்லுறவுகள் சரியான நேரத்தில் கைகொடுத்தன என்பதை இந்த இந்தியா-பாக். நெருக்கடி வெளிச்சம்போட்டுக் காட்டியது.
அபிநந்தனை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பத்தான் வேண்டும். அதுவும் நாளைக்கே. அதனால் கூடுமானவரை,அவரை அவமானப்படுத்தி அனுப்புவோம் என்பது பாகிஸ்தான் அரசின் முடிவு. ராவல்பிண்டி சிறையிலிருந்த அபிநந்தனை லாகூருக்குக் கொண்டுவந்து, இந்தியாவை  அவர் வாயினாலேயே அவமதிக்கும்படி கடும் டார்ச்சர் கொடுத்துப்பார்த்தனர். உடல்ரீதியான துன்புறுத்தலுக்குப் பின்னும் அபிநந்தன் மசியாதலால் உளரீதியான சித்திரவதைகள். அந்த இரவு அவரைத் தூங்கவிடாமல் குளிர்நீரை அவர் முகத்தில் ஜெட்மூலம் பாய்ச்சித் துன்புறுத்தியது. இறுதியில் அவர் குரலை வைத்து போலியான வார்த்தைகளால் ஜோடிக்கப்பட்ட ஒண்ணரை நிமிட ஏமாற்று வீடியோவை தனது மக்களுக்காகத் தயாரித்தது என, ஒருவழியாக இந்தியாவுக்கு அனுப்புமுன், இந்திய ஹீரோ அபிநந்தனுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் பல. எல்லாம் வெளிவர வாய்ப்பில்லைதான்.
1999 கார்கில் போரின்போது பிடிபட்ட இந்திய போர்விமானி ஃப்ளைட் லெஃப்டினெண்ட் நசிகேத்தாவை (Nachiketa), ஜெனீவா கன்வென்ஷனுக்கெதிராக, ஒருவாரம் ராணுவச் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதைகளால் அவர் உடம்பைச் சிதைத்து அனுப்பிய சர்வதேச நாகரிகம் தெரிந்தவர்கள் அல்லவா பாகிஸ்தானிகள்? இப்போது இந்தியாவுடன் அமைதிக்காக முயற்சிக்கிறோம் என்று சவுண்டு விட்டால் எவன் நம்புவான்?
**

25 thoughts on “எதிரிவசம் அபிநந்தன் இருக்கையில்..

  1. இந்தியாவை அவர் வாயினாலேயே அவமதிக்கும்படி கடும் டார்ச்சர் கொடுத்துப்பார்த்தனர். உடல்ரீதியான துன்புறுத்தலுக்குப் பின்னும் அபிநந்தன் மசியாதலால் உளரீதியான சித்திரவதைகள். அந்த இரவு அவரைத் தூங்கவிடாமல் குளிர்நீரை அவர் முகத்தில் ஜெட்மூலம் பாய்ச்சித் துன்புறுத்தியது. இறுதியில் அவர் குரலை வைத்து போலியான வார்த்தைகளால் ஜோடிக்கப்பட்ட ஒண்ணரை நிமிட ஏமாற்று வீடியோவை தனது மக்களுக்காகத் தயாரித்தது என, ஒருவழியாக இந்தியாவுக்கு அனுப்புமுன், இந்திய ஹீரோ அபிநந்தனுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் பல. எல்லாம் வெளிவர வாய்ப்பில்லைதான்.//

    அடப் பாவிகளா….இப்படி எல்லாம் செய்ததா பாக்? எதுவுமே வெளியில் வரவில்லையே. லாஹூரில் ஏதோ அவரிடமிருந்து எழுதி வாங்கியது என்று மட்டும் சொல்லப்பட்டது..அதாவது அங்கு நடந்தது எதுவும் அபிநந்தன் சொல்லக் கூடாது என்று…..சித்திரவதை செய்யக் கூடாதே…ஜெனீவா கன்வெக்ஷன் படி…

    கார்கில் போரில் பிடிபட்ட வீரரிடம் காட்டிய அதே சர்வதேச அநாகரீகத்தைத்தானே இப்போதும் செய்திருக்கிறார்கள்…கிராமவாசிகள்தான் அவரைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினர் மற்றபடி ராணுவத்தால் .அவர் நல்ல முறையில் நடத்தப்பட்டதாகத்தானே வந்தது ….

    அவர் வந்ததும் தான் அன்று மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது…

    அபிநந்தன் ஹீரோ!!! அவருக்கு நம் ராயல் சல்யூட்…!!

    பாக் சொல்லுவது எல்லாம் டுபாக்கூர்தான்

    கீதா

    Like

    1. @ கீதா:
      //..சித்திரவதை செய்யக் கூடாதே…ஜெனீவா கன்வெக்ஷன் படி…//

      என்ன இது சிறுபிள்ளைபோல் கேட்கிறீர்கள்! கன்வென்ஷன் எல்லாம் அதை ஃபாலோ செய்கிற இந்தியாபோன்ற அசடுகளுக்குத்தான். ஐ.நா. தீர்மானங்களுக்கெதிராக, தீவிரவாதிகளுக்குப் பயிற்சிகொடுத்து அன்னிய நாட்டுக்குள் இஷ்டத்துக்கு ஏவும் பாக். போன்ற நாடுகள் எந்த சட்டதிட்டத்தின் கீழ் வர விரும்புவார்கள்? சட்டதிட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் வம்பிழுப்பது எப்படி?

      Like

      1. // சட்டதிட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் வம்பிழுப்பது எப்படி? //

        ஐயா… ஏகாந்தன் ஐயா… வம்பிழுத்து அதை தேர்தலில் சொல்லி, மீண்டும் நாட்டை நாசமாக்குவது எப்படி…? அதை யோசியுங்கள்… நாடு நலம் பெறும்…

        Like

  2. அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது… அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது… உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது… உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது… காலம் போனால் திரும்புவதில்லை… காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை… ஓஹோ ஓஹோ ஹோ மனிதர்களே… ஓடுவதெங்கே சொல்லுங்கள்… உண்மையை வாங்கி பொய்களை விற்று, உருப்பட வாருங்கள்… அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிக்காது… அழகாய் இருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விக்காது… விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது… விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல் வெளிச்சம் கிடைக்காது…

    // உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது… //

    // விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது…//

    Like

  3. நீங்கள் என்ன சவுண்டு விட்டாலும், தமிழ்நாடு சுடுகாடு ஆகப்போவது உறுதி… அப்போது சவுண்டு விட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை…

    Like

    1. @ திண்டுக்கல் தனபாலன்:

      இதற்கு முந்தைய பதிவிற்கான பின்னூட்டத்தில் நீங்கள் ‘பொய்..பொய்..!’ என ஏதோ எழுதியிருந்தீர்கள். நான் ஏதோ சீண்டல், விளையாட்டு எனவே அதனை நினைத்திருந்தேன்! இப்போது நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தபின் புரிகிறது உங்களது ‘மாற்று’ ‘கருத்து’ ! No problem Sir. சுதந்திரமிகு நன்னாட்டில், நீங்கள் யாரைப்பற்றியும், எத்தகைய கருத்தையும் கொண்டிருக்கலாம்தான். You are most welcome.

      பதிலென ஆரம்பித்து ஒரேயடியாக நீட்டாமல், நண்பரே, கொஞ்சம் சொல்ல முயல்கிறேன். இந்தப் பதிவுகளை நான் எழுத முடிவுசெய்ததின் காரணம் – நமது தேசம், அதைப் பாதுகாக்கும் நமது துடிப்பான, திறன்மிகு ராணுவம், அதனை முறையாக, சரியாக செயல்படுத்த நமக்குக் கிடைத்துள்ள தலைமைப்பண்புள்ள ஒரு தலைவன் – அவன் தலைமுறைச்சொத்து சேர்ப்பவனோ, தாய்நாட்டை சுரண்டித் திரிபவனோ அல்லன், உண்மையான தேசபக்தன், உள்நாட்டிலும், சர்வதேசவெளியிலும் நமது தேசத்தின் நலனையே, கௌரவத்தையே நாடி உழைப்பவன் என்கிற சரியான புரிதலின் தாக்கத்தில்தான். அதனால்தான் பிரதமர் என வெறுமனே எழுதிச் செல்லாமல், வேண்டுமென்றே பெயரைக் குறிப்பிட்டு எழுதினேன். இந்த நாட்டின் பிரதமருக்கெதிராக, சில அரசியல்வாதிகளால், சில இயக்கங்களால் திட்டமிட்டு, அவர் பதவியேற்ற நாளிலிலிருந்து பரப்பப்படும் துஷ்பிரச்சாரம், நாராச வசைகளையும் தாண்டி, எனது மிகச்சிலரான வாசக நண்பர்களில் சிலராவது உண்மையை உள்ளது உள்ளபடி, நடந்தது நடந்தபடி புரிந்துகொண்டால் நன்றாக இருக்குமே -அதுவும் தேசத்தின் பாதுகாப்பு என்கிற விஷயத்தில்- என்கிற நினைப்பில்தான், இக்கட்டுரைகளைத் தொடர்கிறேன். காலங்கடந்த நிலையில், இப்போது இந்த விஷயம் trending -ஆக இல்லை எனத் தெரிந்தபோதும். ஏனெனில், நான் எழுதுவது உண்மை என்கிற மனத்தெளிவு, உற்சாகத்தில்தான் என்னால் எழுதவே முடியும். நீங்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றோ, நம்பவேண்டுமென்றோ எந்த நிர்பந்தமும் இல்லை! உங்கள் கருத்து உங்களுடையது. இங்கே அதனைக் காணக் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி.

      //.. தமிழ்நாடு சுடுகாடு ஆகப்போவது உறுதி… அப்போது சவுண்டு விட யாரும் இருக்க மாட்டார்கள் ..//
      என்னய்யா, இப்படி திடீரென ஒரு குண்டைத் தூக்கிப்போடுகிறீர்க்ள்? பயப்படாதீர்கள். தமிழ்நாட்டின் விதி அவ்வளவு மோசமில்லை. அப்படியெல்லாம் ஆகிவிடாது!

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாட்டு ‘ஓஹோ.. ஓஹோ.. மனிதர்களே!.’ – சுவாரஸ்யம். சூடான கருத்துக்கிடையே ஒரு ஜாலியான பாட்டு! அதற்கொரு நன்றி.

      Like

      1. சங்கிகள் என்று எதோ சொல்கிறார்களே… தங்களின் பதிலும் அப்படியே உள்ளதே…! ஒருவேளை நீங்களும் அப்படித்தானா…?

        வேதனை…

        // உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது… //

        // விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது…//

        மோடி ஞாபகம் வரவில்லை நீங்களும் அப்படித்தான் ஐயா…

        மிக்க நன்றி…

        Like

      2. // அதுவும் தேசத்தின் பாதுகாப்பு என்கிற விஷயத்தில்- என்கிற நினைப்பில்தான் //

        தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற கொடூர எண்ணத்துடன், அதெப்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் தேசத்தின் பாதுகாப்பு என்கிற நினைப்பு வருகிறது…?

        Like

  4. விறுவிறுப்பான காட்சிகளாக இப்போது வேகமாக படித்து விட்டோம். சம்பவங்கள் நிகழ்ந்தபோது திக்திக் நொடிகள்தான்…..

    Like

    1. @ஸ்ரீராம்:

      வெவ்வேறு இந்திய/வெளிநாட்டு மீடியா தளங்களில் படிக்க நேர்ந்ததைக் குறித்துவைத்திருந்தேன். கொஞ்சம் தொகுத்து சிறு கட்டுரையாக வடித்தேன்.

      Like

      1. // சம்பவங்கள் நிகழ்ந்தபோது திக்திக் நொடிகள்தான்…..//

        ஸ்ரீராம் சார்… சம்பவங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன என்பது கூட தெரியாமல்… “கதை கேளு கதை கேளு” பாடல் தான் ஞாபகம் வருகிறது… நன்றி…

        Like

  5. தங்களது பதிவில் ஒவ்வொரு வரியும் பற்றிய அடியேனால் விளக்கம் சொல்ல முடியும்… ஒரே ஒரு எடுத்துக்காட்டு :-

    // இந்தியா புரிந்துகொண்டது. அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் டெல்லியில் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது நரேந்திர மோதி //

    அலட்டிக்கொள்ளாமல் அப்போது பிரதமர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியுமா…? கஜா புயலின் போது என்ன செய்தாரோ அதே அதே… வாழ்க பாரதம்… சீ, கேவலம்…

    இது போதும் என்று நினைக்கறேன் ஐயா…

    நீங்கள் மற்றும் வாசகர்கள் மாற்றுக்கருத்துக்கள் தொடர்ந்தால், தொடரலாம்… நன்றி ஐயா…

    Like

  6. நல்ல ரன்னிங் கமெண்டரி பொதுவெளியில் வராதசெய்திகள்

    Liked by 1 person

  7. இப்படியெல்லாம் திரைக்கதை எழுத ஒருத்தரும் அதை நம்ப நாலு பேரும் இருப்பது மோடியின் அதிஷ்டம்.

    Like

    1. @ raajshree_lk :
      மோதியை அதிர்ஷ்டக்காரர் என்கிறீர்கள்! பலே!

      நேரமிருப்பின், நண்பர் தனபாலனுக்கு நான் மேலே எழுதியிருப்பதைப் படித்துப் பார்க்கவும். நீங்கள் உடன்படவேண்டிய அவசியம் ஏதுமில்லை!
      வருகை, கருத்துக்கு நன்றி.

      Like

      1. // உடன்படவேண்டிய அவசியம் ஏதுமில்லை! //

        அனைத்து அடிமைகளையும் தங்களை போலவே சொல்கிறார்கள் ஐயா… இதற்கு மருந்து என்ன ஐயா…?

        Like

  8. சன் டிவி செய்திகளையே நம்பும் வாக்காளர்களுக்கு இந்தியாவுக்கு வெளியே வரும் அதிகார பூர்வசெய்திகள் காதில் விழுவதில்லையே.
    இந்தியாவுக்கு வெளியில் உலகம் ஒன்று இருப்பதைக்கவனத்தில் எடுக்கவும்.மோடி எதிர்ப்பின் உச்ச கட்டத்தில் இந்திய ஊடகஙகள்
    இருப்பதால் உண்மை பொய் புரியவில்லை.

    Like

    1. @ M. Thevesh :

      தனது தினச்செய்திக்கும், பொது அறிவிற்கும் நமது தமிழ் மீடியா அள்ளித் தெளிக்கும் அபத்தங்களை மட்டும் நம்பி, அல்லது அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் அறிவான, செறிவான கருத்துக்களை அட்சரம் தவறாது அப்படியே சிரமேல் ஏற்றுத் தொடர்ந்து செல்லும் அப்பாவித் தமிழர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. வேறேதும் சொல்வதற்கில்லை.

      வருகை, கருத்துக்கு நன்றி.

      Like

      1. // அப்பாவித் தமிழர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.//

        யார் அப்பாவித் தமிழர்…?

        இரண்டே இரண்டை சொல்கிறேன் :

        சாக்கடை சுத்தம் செய்பவர்…?

        நீங்கள் தின்கிற அனைத்திற்கும் சொந்தக்காரர்…? – விவசாயி என்பதை உங்களுக்கு எல்லாம் சொன்னால் தான் புரியும்…

        // தனது தினச்செய்திக்கும், பொது அறிவிற்கும் நமது தமிழ் மீடியா அள்ளித் தெளிக்கும் அபத்தங்களை மட்டும் நம்பி, அல்லது அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் அறிவான, செறிவான கருத்துக்களை அட்சரம் தவறாது அப்படியே சிரமேல் ஏற்றுத் தொடர்ந்து செல்லும் //

        இதை மேலே சொன்ன இருவரும் அறிவார்களா…?

        உங்களைப் போன்றவர்கள் அல்லது உங்கள் வாரிசுகள் கதறும் நிலை வரும் போது, உண்மை நிலை புரியும் ஐயா…

        நன்றி…

        Like

  9. இனியாவது அபினந்தன் நலம் பெறட்டும்.

    Like

    1. @ Revathi Narasimhan:

      மெடிக்கல் லீவில் இருக்கிறார். போதிய ஓய்வுபெற்று நல் ஆரோக்யத்துடன் பணிக்குத் திரும்பட்டும் அவர்.

      Like

Leave a comment