தி. ஜானகிராமனின் சிறுகதை ‘பஞ்சத்து ஆண்டி’ பற்றி:

வாழ்க்கையில் விழுந்த ஒரு மரண அடியில் நிலைகுலைந்துபோன ஒரு ஏழையின் கதை. தினமும் தறிபோட்டு நெய்து பிழைத்துவந்த சாதாரணத் தொழிலாளியின் குடும்பம். தொழில் திடீரெனப் படுத்தது. எல்லாம் போயேபோய்விட்டது. நன்னையனுக்கோ பிழைப்பதற்கென வேறெதுவும் செய்யத்தெரியவில்லை. நெசவு ஒன்றுதான் பரம்பரை பரம்பரையாகக் கைகொடுத்துவந்தது. யார் போட்ட சாபமோ அது கைவிட்டதோடு, எழுந்திரிச்சிப்போடா என்று சொல்லிவிட்டது. நேர்மையான, கண்ணியமான மனிதன் நன்னையன். இருந்தது எல்லாவற்றையும் விற்றுச் சாப்பிட்டாகிவிட்டது. இனி விற்க ஏதுமில்லை. கையில் காசில்லை. இருக்க இடமுமில்லை. யாரையும் போய்க்கேட்கும்படியான சூழலோ இல்லவே இல்லை. நல்ல மனைவியும் மூன்று சின்னக்குழந்தைகளும், திடீரென வாழ்வின் பெரும் சுமையாகி எதிரே கண்ணீரோடும் பசியோடும் நிற்கின்றனர். நன்றாக வாழ்ந்துவந்த குடும்பத்தைப் பார்த்து விதி தன் கோரப்பல் காட்டி வெடிச்சிரிப்புச் சிரித்தது. கதியற்றுப்போன குடும்பம், மூட்டை முடிச்சுகளுடன் ஆங்காங்கே, யார்யார்வீட்டுத் திண்ணைகளிலெல்லாமோ தங்கி பசிஇரவு கழித்து இலக்கின்றி அலைகிறது. நன்னையனும் பாவம், என்னதான் செய்வான்? எங்கு போவான் அவன்?

ஒரு திண்ணையிலிருந்து இரவு கழியுமுன் விரட்டப்பட்டு, தெருவின் ஒரு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் திண்ணையில் குடும்பத்தைப் படுக்கவைக்கிறான். பசியோடு சுருண்டுகிடக்கிறார்கள் மனைவியும் குழந்தைகளும். இவனுக்கோ தூக்கம் வரவில்லை. குழந்தைகள் எழுந்தால் பசிக்கிறது என்று அலறுமே! தானம் எங்கோ கிடைக்கிறது என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்டிகளின் கூட்டத்தோடுபோய் ஏதாவது வாங்கிவரச்சொல்கிறாள் மனைவி. தனக்கும் பிள்ளைகளுக்கும் வயிற்றில் காற்றுதான் இருக்கிறதென்றும், மூட்டைமுடிச்சோடு கூடவரத் தெம்பில்லை என்றும் சொல்கிறாள். பதறியவனாகப் போகிறான் நன்னையன். செட்டியாரின் வீட்டு வாசல் வரிசையில் ஆண்டிகளோடு உட்காரக் கூச்சப்பட்டு மனம் தவிக்கிறான்; உடல் சுருங்குகிறான் பிச்சைகேட்டுப் பழக்கமில்லாத இந்தப் பஞ்சத்து ஆண்டி. காவித்துணி ஆண்டிகளில் ஒருவன் இவன் யார், என்ன என்று குடைய ஆரம்பிக்க, ஏதோ சொல்லிவிட்டு, இன்னும் சரியாக விடியாத பொழுதில் தானம் கிடைக்க இன்னும் நேரமிருக்கிறது என உணர்ந்து, அங்கிருந்து கிளம்புகிறான். பிள்ளைகளுக்குப் பசி வயிற்றைக் கவ்வுமே.. சாப்பிட ஏதாவது கொஞ்சம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைத்து நடக்கிறான். ஒரு வீடு தென்படுகிறது. பிச்சைக் கேட்கவும் தெரியாத நம் ஆண்டிக்கு அங்கே கிடைக்கும் வரவேற்பை தி.ஜா.வின் எழுத்தில் பாருங்கள்:

பெரிய வீடு. வாசலில் கொட்டகை. அங்கே சாய்வு நாற்காலியை மேற்கே பார்க்கப் போட்டுச் சாய்ந்திருந்தார் ஒரு பெரியவர்.

“அம்மா!” என்று நன்னையன் கூப்பிட்டான்.

“ஏனையா அம்மாவைக் கூப்பிடறே? ஐயா ஒண்ணும் கொடுக்க மாட்டாருன்னா? கண்ணைப் பிட்டுக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே; விடியட்டுமேன்னு காத்திருந்தியா, முகதரிசனம் கொடுக்க! ஐயா எளுந்தவுடனே நல்ல பண்டமாப் பாத்துக் கண் விளிக்கட்டுமேன்னு வந்தியாக்கும்? எனக்கு ஒண்ணும் புரியலியே. சும்மா நின்னுக்கிட்டே இருந்தா? பதில் சொல்லுய்யா.. விடியக் காலமே எளுந்திருக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே?…. என்ன எண்ணம்னு கேக்கறேன். பேசாம படுக்கையிலேருந்து எளுந்து மூஞ்சியைக் களுவிக்கிட்டு வந்து சாஞ்சிருக்கேன். மூஞ்சியைக் காட்டுறியே. நீ என்ன குத்து விளக்கா? கண்ணாடியா? கட்டின பொஞ்சாதியா? சொல்லு-”

மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் அவர். ’பதில் சொல்லு சொல்லு’ என்று சொன்னாரே தவிர, அது வருவதற்கு இடங்கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு பாக்கு வெட்டு நேரம் கூட சும்மா இருந்தால், அவன் ஆரம்பிக்கலாம். அவர் நிற்கவில்லை.

“ஏனையா, கோளி கத்தறத்துக்குள்ளாற இந்தத் தாடி, மீசை, களிசல், கையிலை ஒரு இளிக்கிற சொம்பு – இப்படி வந்து நிக்கிறியே…. உடனே போட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா? இல்லை சொல்லேன்? பேசாமடந்தையா நிக்கிறியே.”

நன்னையனுக்கு, “நீங்க பேசாம இருந்தா போதும். நான் போயிடறேன். சும்மா அலட்டிக்காதீங்க” என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்போல் இருந்தது.

தெருவில் விளையாட்டுக் காண்பிக்கும் ஒரு குரங்காட்டியை பார்க்க நேர்கிறது. பேச்சுக்கொடுத்த குரங்காட்டி, நன்னையனது போதாத காலமறிகிறான். அவன் குடும்பத்தோடு உழல்வதைக்கண்டு உதவி செய்ய நினைத்து அவனைக் கூட்டிச்செல்கிறான் சேரிப்பக்கம். பிழைக்க வழிசெய்யவென ஒரு குரங்குக்குட்டியை அவனுக்குக் கிடைக்குமாறு செய்கிறான். ஐயஹோ! நமக்கும் இனி இதுதானா வாழ்க்கை எனக் கூனிக்குறுகி சேரியில் நிற்கிறான் நன்னையன். அவனுக்குத் தைரியம் சொல்லி பழக்கப்பட்ட அந்தக் குரங்குக்குட்டியை கூட்டிப்போய் பிழைத்துக்கொள்ளச் சொல்கிறான் அந்த நல்லமனசுக் குரங்காட்டி.

வாழ்ந்து கெட்ட தனக்கும், தன் குடும்பத்துக்கும் இந்தக் குரங்குக்குட்டியா புதுவாழ்வு தரும் என நம்ப முடியாதவனாகக் குழப்பத்துடன், ஒரு கையில் கம்பும், இன்னொரு கையில் கயிறுமுனைக் குரங்குமாக நகல்கிறான் நன்னையன். என்ன நடந்தது? அவனது பிச்சை வாழ்க்கை சீரானதா?

தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே. தி.ஜானகிராமனின் பஞ்சத்து ஆண்டி.

லிங்க்: https://azhiyasudargal.wordpress.com/2013/12/06/பஞ்சத்து-ஆண்டி-தி-ஜானகிர/

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்.

**

4 thoughts on “தி. ஜானகிராமனின் சிறுகதை ‘பஞ்சத்து ஆண்டி’ பற்றி:

  1. அப்புறம் நன்னையன் என்னதான் செய்தானோ… கவலை அரிக்கிறது.

    நன்னையன் என்னும் பெயர் என் மனதில் மணி அடிக்கிறது. என்னுடன் படித்த நண்பன் ஒருவன் பெயர் நல்லய்யன்.

    Liked by 1 person

  2. வளர்த்தவர்களைப் பிரிந்து.. புதிய எஜமானிடம் அன்பும் கிடைக்காமல் பரிச்சயமும் இல்லாமல், உணவுக்கு கிடைக்காமல்… பாவம் வைத்திலிங்கம்.

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம் :
      நல்லைய்யா நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நன்னையன் என்கிற பெயரை திஜா மூலமே அறிகிறேன்.

      Like

Leave a comment